pm logo

பண்டிதர் சங்கர குமரேசையா எழுதிய
ஊரெழு மீனாட்சி திரு ஊஞ்சல்


Oorezu mInATci tiruoonjcal by
paNTita cangkara kumarEcaiyA
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Noolaham.org for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for assistance in the preparation of the soft copy of this work for Project Madurai.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பண்டிதர் சங்கர குமரேசையா எழுதிய
ஊரெழு மீனாட்சி திரு ஊஞ்சல்

Source:
ஊரெழு மீனாட்சி திரு ஊஞ்சல்
இயற்றியவர்: பண்டிதர் சங்கர குமரேசையா
வெளியீடு : "கதிரமலை", 19-9-1992
பிரிண்டிங், புத்தக வடிவமைத்தல் : தாய்க்குலம் பிரிண்டிங் யூனிட்,
21. தகதின் கான் பகதூர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 3.
--------------------------------------------

சிவமயம்
பதிப்புரை

குழந்தைப் பருவம் அழகியது; இனியது; விரும்பப் படுவது - கடவுளைக் குழந்தையாகக் கற்பித்து, ஊஞ்சல் ஆட்டுவது தமிழர் மரபு. பிள்ளைத் தமிழில் ஊஞ்சல் பருவம் மிக இனியது.

அருள்மிகு மீனாட்சித் தாயை ஊஞ்சலில் இட்டுத் தாலாட்டிப் பார்க்க விரும்பினோம். அவளே திருவருள் புரிந்தாள். இயற்கையாகவும் சர்வ சக்தியாகவும் நின்று அருள் பாலிக்கக் கூடிய தாயாள் எமக்கு முன் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். மனித வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட - ஜீவாத்துமாவைப் பரமாத்துமாவாக வளர்த் தெடுக்க, இறை தத்துவம் எமக்குப் பெருந்துணையாகிறது.

மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி என்று பல்லாயிரம் திருநாமங்களில் அழைக்கக் கூடிய தாயை எமதுகிராமமாகிய ஊரெழுவில் மீனாட்சியாகக் கண்டு - பாடிப் பணிந்து பரவத் திருவருள் பாலித்துள்ளாள். அவள் திருவருள் நோக்கின் ஒரு துளியே இச் சிறு நூல்.

அன்னை பெருமையைப் பாடி, எம்மைப்படிக்க வைத்துப் பக்தி வழிப்படுத்திய புலவர், யாழ். கரம்பன் ‘சாத்வீகம்' பண்டிதர் சங்கர குமரேசையா அவர்களாவார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முந்திரிகைப்பருப்பாக முன்னே காட்டாதவர். இலைமறைகாய், கலை மாச்செல்வர் மாபெரும் மனிதப் பண்பாளர். அவர்கள் நாவால் தாய் பற்றிய சில அடிகள் சொல்லக்கிடைத்தமை நாம் செய்த தவம்.

இச்சிறு நூலை, கதிரமலை வெளியீடாக வெளிக் கொணர மீனாட்சித்தாய் அடியேனுக்கு அருள் புரிந்தாளே என்று எண்ண உள்ளம் பெருமகிழ்ச்சி அடைகிறது. நூலாசிரியர், அச்சாளர், உதவியோர் பாடிப்பரவுவார் பாவரூக்கும் அன்னை அருள் பாலிப்பாளாக.

"கதிரமலை'       ச. கதிரவேலு
ஊரெழு பாழ்ப்பாணம், 19.9.92
----------------------------

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த
ஊரெழு மேற்கு அந்திரானைப் பதி
ஸ்ரீமீனாட்சி அம்பாள் ஊஞ்சல்

காப்பு
மாணிக்கக் கூத்தன்செம் பாதிஅம்மை
      மரகதமா மணிக்கொழுந்து மலையான்மஞ்ஞை
பேணிக்கொல் பெருஞ்சக்தி ஊரெழுச்சேர்
      போற்றுபதி அந்திரானை புகுந்துகற்பின்
மாணிக்கண் ணகையென்ன மாற்றங்கூறி
      மன்னுமருள் மீனாட்சி ஊஞ்சல்பாட
ஆணிப்பொன் ஆனைமுகன் ஐங்கரச்சேய்
      அமலபதம் அஞ்சலித்தோம் அருள்வான்காப்பு

ஓங்காரி திரிசூலி உணர்வார்உள்ளம்
      ஊறுந்தேன் மாரிபெரும் உவகைவெள்ளம்!
ஆங்காரந் தீர்மருந்தே அமிழ்தநீத்தம்
      அபிராமி ஊரெழுவாழ் அஞ்சுகத்தாய்
தேங்கான வேதவொலி ரீங்காரத்தாள்
      தேவிதெய்வ மீனாட்சி ஊஞ்சல்பாடப்
பாங்கான பாமணிவெண் பங்கயத்தாள்
      பாரதிநா வரசிபதம் பணிவோம்காப்பு

திருவூஞ்சல்
மாமறைகள் நான்குமணிக் கால்களாக
      மன்னுமருள் ஆகமம்பொன் விட்டமாகப்
பாமலர்ந்த திருமுறைகள் கலைபுராணம்
      பயிலுநவ ரத்னமணிக் கயிறதாகத்
தேமருவு கற்பகத்தின் திருப்பைம்பூவும்
      திகழுமன்பர் உளச்செந்தா மரையும்கிட்ட
ஓமெனுஞ்சீர்ப் பிரணவமாம் பீடம்வீற்றே
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

எண்ணரிய உடுமணிகள் ஓவியங்கள்
      ஒளிர் நிலவு சேர்விசும்பாம் விதானம்ஓச்சிக்
கண்ணரிய காட்சிகொளக் கமலச்சேய்மால்
      கவின்நிறைந்த அமிழ்தநிழற் குடைகள்தாங்கத்
தண்ணளிய சாமரைபூங் காற்றின்வேந்து
      தானிரட்டக் கங்கையணி தலைவன்சேர்ந்தே
ஒண்ணலமார் நீலமணி உலகமாதா
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

பல்கதிர்ச்செம் பரிதிமிகப் பரந்தஞானப்
      பரிசொளிரும் மணித்தீபம் பரவத்தேவர்
மல்குகதிர்ப் பொன்னுலக மன்னன்கீர்த்தி
      மலர்சுகந்த விரைசாலுந் தூபம்தூக்கர்
தொல்நிதியத் திருவளகைத் துரையாம்வேந்து
      துளும்புசுவைத் திரவியஞ்சேர் அடப்பைஏந்த
ஒல்லைவிரைந் தெமக்கருளும் உமையோம்சக்தி
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

தெய்வமலர்த் தண்ணளிபெய் திருப்பூம்பன்னீர்
      திரைகுலவும் புனலரசு தொழுதேதூவத்
துய்யமணி உரகம்பொன் ஆலவட்டம்
      தூக்கியுவந் தேபோற்ற நாதவிந்தெம்
அய்யைதிரு வாழ்கெனவா லாத்தியோம்ப
      அந்திரனைப் பதித்தேவி அஞ்சனத்தாய்
உய்யவந்தெம் இருள்போக்கும் ஒளிவிளக்கே
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

வெண்கமலக் கலையரசி வித்தகத்தி
      விமலைச்செங் கமலைதிரு விழுச்சீர்தேங்கும்
தண்ணியசெந் தமிழாலே வாழ்த்திநிற்கத்
      தாவுமதி வெண்சங்கந் தலைக்கூட்டப்பேர்
தண்ணியதோர் கானமழை நல்லியாழால்
      நாரதரே கூட்டிநிற்க, ஞாலந்துய்த்தே
உண்ணியமால் மகிழ்தங்கை உதயஞானம்
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

ஆவிருழைந் தள்ளூற அபரஞான
      அமரவிசை கந்தருவர் இசைக்கநீலக்
காவிவிழி குழைபொருதிக் கருத்தைநல்கும்
      களிநடனம் அரம்பையர்கள் கனிவாய்ஆட
மேவிவளர் தூரியங்கள் கணங்கள்கூட்ட
      மேன்மையுயர் பொதியமுனி மதங்கம்சேர்க்க
ஓவியமே கண் நுதலோன் உள்ளத்துள்ளீர்
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

கண்ணகையாய்த் திருநாமங் காட்டிவந்து
      கற்றளியில் மீனாட்சி யென்னக்காட்சி
கொண்ணகையார் புரந்தரியைக் கூப்பிமந்த்ரம்
      கூறிமறை யோர் தவத்தோர் ஞானியோர்கள்
தண்ணலமென் தவிசிருத்தி வேள்விநல்கத்
      தாண்மலர்கள் மூவுலகும் தாழ்ந்தேபோற்ற
     ஒண்டொடியாய்! உயர்சிலம்பாய்! எம்மைக்காக்கும்
ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

வரந்தருஞ்சீர்ச் சிவகங்கை வான்சுகந்த
      வகைப்பன்னீர் மஞ்சனநீர் வனப்பாய்ஆட்டித்
தரமுயர்ந்த நவமணிகள் குயிற்றித்தந்த
      தங்கநிறப் பட்டணிந்து தகவார்பூண்கள்
விரவுமழ காயணிந்து நீறுசாந்தம்
      வியனார்குங் குமந்தெரியல் விளங்கச்சாத்தி
புரகமணி சிவன்கூடி ஆடீர்ஊஞ்சல்!
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

முழுவுலகும் போற்றுமணி மௌலிஆட
      முளரியொளிர் திருவதனம் ஆடஆட
எழுமபய வரதகரம் எழிலாய்ஆட
      இலங்குகரத் திரிசூல எழுச்சிஆட
செழும்பொலனார் சிவனாடச் சேய்கள்ஆட
      சேருமரி யோடிடபக் கொடியும்ஆட
ஒழுகுமழ கார்தேவீ ஆடீர்ஊஞ்சல்!
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்!

ஆதிசக்தி ஆரணியே அறிவேபோற்றி
      அரன்துணையே அருட்செல்வ அறமேபோற்றி
சோதிவிளக் கேகலையாள் சுகமேபோற்றி
      சித்தத்தின் உள்ளுறையுந் தேவீபோற்றி
வீதியெழுந் தருளியெங்கள் விக்கினங்கள்
      வேரறுக்கும் மாதேவி போற்றிபோற்றி
ஓதியெழும் ஊர்க்கெல்லாம் உதவுந்தெய்வம்
      ஊரெழுமீ னாட்சியம்மை ஆடீர்ஊஞ்சல்

வாழி
ஆரணங்கள் வாழ்கமறை யோர்கள்வாழ்க
      ஆனினங்கள் வாழ்கதர்மம் அகிலம்வாழ்க
காரணமாம் மாரிவளங் கனிந்தேவாழ்க
      கலைதிருசெங் கோலரசக் களிப்பேவாழ்க
பூரணமாம் அரன்வாழ்க புதல்வர்வாழ்க
      போற்றுமரி அயன்வாழ்கப் புனிதர்வாழ்க
ஓரணங்காந் தெய்வத்தாய் உமையேவாழ்க
      ஊரெழு மீனாட்சியம்மை வாழ்க!வாழ்க!

எச்சரீக்கை
முடியேர்மணித் திருவாலயர் முகில்வான் நிறைந்தொழுக
அடியார்தொழு தருளால் மலிஅம்பா ளெச்சரீக்கை
உருவேர்மயில் உணர்வேயுமை உனதின்னருள் பெறவே
வருவார்துயர்ச் கருவேரற வாழ்வா யெச்சரீக்கை
அருளேர்வடி வறிவேயொளி ரழகேயந்தி ரானைத்
திருவேதவத் திறமாய்வருந் தேவீஎச்ச ரீக்கை
துணையாய்ப்பகல் இரவாயெமைத் தொடரும் மீனாட்சி
புணையாய் வருந்திருமா லினிப்புவனீ எச்சரீக்கை

பராக்கு
செங்குமுதத் தங்கவிதழ்த் திருவேபராக்கு
துங்கமுகப் பங்கயச்சீர்த் துணையேபராக்கு
தங்கிமிக இங்கிதங்கள் தருவாய்பராக்கு
திங்களணிந் தோன்மனையாந் தேவீபராக்கு

செந்தூரப் பொற்றிலகத் திகழ்வேபராக்கு
வந்தூரெம் பதித்தெய்வ வளமேபராக்கு
தந்தாரும் செந்தமிழின் தகவேபராக்கு
எந்தாயே மீனாட்சி எழிலேபராக்கு

லாலி
தூண்டா மணிவிளக்கே தூமதியே லாலி - எம்மை
ஆண்டாள் மனோன்மணியாய் ஆனவளே லாலி
மலையேர் அரசாட்சி மாமகளே லாலி - தெய்வச்
சிலையே அலைமகளே சித்திரமே லாலி
பாரெழுந்த சக்திமலர்ப் பால்மதியே லாலி - எங்கள்
ஊரெழுவாழ் மீனாட்சி உற்பவமே லாலி

மங்களம்
சீர்பூத்த சுந்தரிக்கு சுபமங்களம் - எங்கள்
சிந்தைகுடி கொண்டவட்குச் சுபமங்களம்
மூவுலகும் ஆள்பவட்குச் சுபமங்களம் - தெய்வ
முத்தமென வந்தவட்குச் சுபமங்களம்
ஞானப்பால் தருந்தாய்க்குச் சுபமங்களம் - துய்ய
நாயகியாம் அம்பிகைக்குச் சுபமங்களம்
ஊரெழுமீ னாட்சிக்குச் சுபமங்களம் - எங்கள்
உடன் வாழும் தேவிக்குச் சுபமங்களம்

மங்களம்! மங்களம்!! சுபமங்களம்
சுபம்

--------------------------------
கதிரமலை வெளியீடு - 6
வெளிவந்தவை:
1. வீரகத்தி விநாயகர் கீர்த்தனைகள் (கவிஞர் ந. வீரமணி)
2. வீரகத்தி விநாயகர் போற்றி மணிமாலை (கதிரமலையான்)
3. மீனாட்சி திருவிருத்தம் (கதிரமலையான்)
4. மனோன்மணி அந்தாதி (கதிரமலையான்)
5. மதுரை மீனாட்சி திரு ஊஞ்சல் (கதிரமலையான்)
6. ஊரெழு மீனாட்சி ஊஞ்சல் (பண்டிதர் சங்கர குமரேசையா)
வர இருப்பவை:
1. உலகெலாம் முருகன்
2. கனகி
3. அன்பே சிவம்
4. ஆசா நிகளம்
5. வேங்கையும் வேலும்
6. தாமரை பூத்த தடாகத்திலே
7. கதிரமலையான் கவிதைக் கனிகள்
--------

This file was last updated on 12 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)