ponniyin celvan
of kalki
(in tamil script, TSCII format)
அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
நூலடக்கம் 
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழர்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை
Acknowledgements:
Etext preparation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University,  Chennai,
India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,
Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,
Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth
Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA
This Etext file has the verses in tamil script in TSCII-encoding
(version 1.7). So you need to have a TSCII-conformant tamil font to
view the Tamil part properly. Several TSCII conformant fonts are available
free for use on Macintosh, Unix and Windows (95/98/2000/XP/ME) platforms
at the following websites:
http://www.tamil.net/tscii/
http://www.geocities.com/Athens/5180/tsctools.html
In case of difficulties send an email request to kalyan@geocities.com
or kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to distribute
them free on the Internet. Details of Project Madurai are available at
the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact.
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம் 
முப்பத்தொன்றாம் அத்தியாயம் - "வேளை வந்து விட்டது!"
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - இறுதிக் கட்டம்
முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - "ஐயோ! பிசாசு!"
முப்பத்து நன்காம் அத்தியாயம் - "போய் விடுங்கள்!"
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - குரங்குப் பிடி
முப்பத்தாறாம் அத்தியாயம் - பாண்டிமாதேவி
முப்பத்தேழாம் அத்தியாயம் - இரும்பு நெஞ்சு இளகியது!
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நடித்தது நாடகமா?
முப்பதென்பதாம் அத்தியாயம் - காரிருள் சூழ்ந்தது!
நாற்பதாம் அத்தியாயம் - "நான் கொன்றேன்!"
முப்பத்தொன்றாம்  அத்தியாயம் 
"வேளை  வந்து  விட்டது!" 
சென்ற அத்தியாதில் கூறிய நிகழ்ச்சிகளோடு இந்தக் கதையை முடித்துவிடக்
கூடுமானால், எவ்வளவோ நன்றாயிருக்கும்.  நேயர்களில் சிலர் ஒருவேளை அவ்விதம் 
எதிர்பார்க்கவுங்கூடும்.  ஆனால் அது இயலாத காரியமாயிருக்கிறது. அதே தினத்தில் 
ஏறக்குறைய அதே நேரத்தில் கடம்பூர் சம்புவரையரின் மாளிகையில் நடந்த பயங்கர 
நிகழ்ச்சியைப் பற்றி நாம் இனிச் சொல்ல வேண்டியிருக்கிறது.  
***
நந்தினி அவளுடைய அந்தப்புர அறையில் தனியாக அங்குமிங்கும் நடந்து 
கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த பரபரப்பை அவளுடைய 
முகத்தோற்றம் காட்டியது.  அவளுடைய கண்ணில் ஓர் அபூர்வமான மின்னொளி சுடர்விட்டுத் 
தோன்றி மறைந்தது.  அந்த அறைக்குள்ளே வருவதற்கு அமைந்திருந்த பல வழிகளையும் அவள்
அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்.  அந்த வழிகளில் ஏதாவது காலடிச் சத்தம் கேட்கிறதா 
என்று அவளுடைய செவிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன.  "வேளை நெருங்கி 
விட்டது!" என்று அவளுடைய உதடுகள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தன.  சில 
சமயம் அவ்விதம் முணுமுணுத்த அவளுடைய உதடுகள் துடித்தன.  இன்னும் சில சமயம் 
அவளுடைய கண்ணிமைகளும், புருவங்களும் துடித்தன.  ஒவ்வொரு தடவை அவள் உடம்பு 
முழுவதுமே ஆவேசக்காரனுடைய தேகம் துடிப்பதுபோல் பதறித் துடிதுடித்தது.  
நந்தினி படுப்பதற்காக அமைந்திருந்த பஞ்சணை மெத்தை விரித்த கட்டிலில் நாலு 
பக்கமும் திரைச்சீலைகள் தொங்கின. அவை கட்டிலை அடியோடு மறைத்துக் கொண்டிருந்தன.
நந்தினி ஒரு பக்கத்துத் திரைச் சீலையை மெதுவாகத் தூக்கினாள்.  படுக்கையில் நீளவாட்டில் 
வைத்திருந்த கொலை வாளைப் பார்த்தாள் கொல்லன் உலைக்களத்தில் ஜொலிக்கும் 
தீயினாலேயே செய்த வாளைப் போல் அது மின்னிட்டுத் திகழ்ந்தது.  அத்தீயினால் மெத்தையும் 
கட்டிலும் திரைச் சீலைகளும் எரிந்து போகவில்லை என்பது ஆச்சரியத்துக் கிடமாயிருந்தது.
இதை நினைத்துப் பார்த்துத்தான், அது செந்தழலினால் செய்த வாள் அல்லவென்றும், 
இரும்பினால் செய்த வாள்தான் என்றும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.  
நந்தினி அந்த வாளைக் கையில் எடுத்தாள். தூக்கிப் பிடித்தாள்.தீபத்தின் ஒளியில்
அதை இன்னும் நன்றாக மின்னிடும்படி செய்து பார்த்து உவந்தாள்.  பிறகு, அதைத் தன் 
மார்புடன் அணைத்துக் கொண்டாள் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு முத்தமிட்டாள்.  
அந்த வாளுடன் உறையாடவும் செய்தாள். "தெய்வ வாளே! நீ உன்னுடைய வேலையைச் 
செய்யவேண்டிய வேளை நெருங்கிவிட்டது! என்னை நீ கைவிடமாட்டாய் அல்லவா? இல்லை, 
நீ என்னைக் கைவிட மாட்டாய்! என்னுடைய கைகளேதான் என்னைக் கைவிட்டால் விடும்!" 
என்று கூறினாள்.  
பிறகு, தன் கரங்களைப் பார்த்து, "கரங்களே! நீங்கள் உறுதியாக இருப்பீர்களா? 
சீச்சீ! இப்போதே இப்படி நடுங்குகிறீர்களே? சமயம் வரும்போது என்ன செய்வீர்கள்? ஆம், 
ஆம்! உங்களை நம்புவதில் பயனில்லை.  வேறு இரண்டு கரங்களைத்தான் இன்றைக்கு நான் 
சம்பாதித்துக் கொள்ள வேண்டும்!" என்றாள்.  
திடீரென்று நந்தினியின் உடம்பு முழுவதும் ஒரு தடவை சிலிர்த்தது.  வெறிக்கனல் 
பாய்ந்த கண்களினால் மேல் நோக்காகப் பார்த்தாள்."ஆகா! நீ வந்துவிட்டாயா? வா! வா! 
சரியான சமயத்திலேதான் வந்தாய்! என் அன்பே! என் அரசே! வா! வீர பாண்டியன் தலையே! 
ஏன் கூரை ஓரத்திலேயே இருக்கிறாய்? இறங்கி வா! இங்கே யாரும் இல்லை! உன் அடியாளைத்
தவிர வேறு யாரும் இல்லை! ஏன் இப்படி விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? வாயைத் 
திறந்து ஒரு வார்த்தை சொல்!  இந்தக் கண்டத்துக்குத் தப்பி உயிர் பிழைத்தால் உன்னைப் 
பாண்டிய சிங்காசனத்தில் ஏற்றி வைப்பேன் என்று சொன்னாயே! அதை நான் மறக்கவில்லை.
உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறக்கவில்லை. அதை நினைவேற்றும் வேளை
நெருங்கிவிட்டது.  அதற்காக நான் எத்தனைக் காலம் பொறுமையாகக் காத்திருந்தேன்! 
என்னென்ன வேஷங்கள் போட்டேன்? - எல்லாம் நீ பார்த்துக் கொண்டுதானிருந்தாய்! இப்போது 
பார்த்துக் கொண்டிரு! கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிரு.  நீதான் கண் கொட்டுவதே 
கிடையாதே! நானும் கண்ணை மூடித் தூங்க முடியாமல் செய்து வருகிறாய்! இன்று இரவு 
உனக்குப் பழி வாங்கி விட்டேனானால், அப்புறமாவது என்னை விட்டுப் போவாய் அல்லவா?
அப்புறமாவது என்னைத் தூங்கவிடுவாய் அல்லவா? மாட்டாயா? பாண்டிய சிங்காசனத்தில் 
நான் ஏறி அமர்வதைப் பார்த்த பிறகுதான் போவாயா? என்னுடைய வாக்குறுதியை நான் 
நிறைவேற்றினால், உன்னுடைய வாக்குறுதியை நீ நிறைவேற்றுவதாகச் சொல்கிறாயா?  
இல்லை, இல்லை! எனக்கு சிங்காதனமும் வேண்டாம், மணி மகுடமும் வேண்டாம்.  உன் மகன்
என்று யாரோ ஒரு சிறுவனை கொண்டு வந்தார்கள்.  அவனைச் சிங்காதனத்தில் ஏற்றி மணி 
மகுடம் சூட்டியாயிற்று.  உனக்குப் பழிக்குப் பழி வாங்கி விட்டேனானால், அதைக் கொண்டு நீ
திருப்தியடைவாய்! பின்னராவது என்னை விட்டுச் செல்வாய்! போரில் இறந்தவர்கள் எல்லாரும் 
எந்த வீர சொர்க்கத்துக்குப் போகிறார்களோ, அந்த வீர சொர்க்கத்துக்கு நீயும் போவாய்! 
அங்கே என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை... 
என்ன? மாட்டேன் என்கிறாயா?  சரி, சரி! அதைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்வோம்! என்
அன்பே! யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது.  நீ மறைந்துவிடு!...நானும் இந்தப் பழிவாங்கும் 
வாளை மறைத்து வைக்கிறேன்..." 
அச்சமயம் வாசற்படிக்கு அருகில் உண்மையாகவே காலடிச் சத்தம் கேட்டது.  
நந்தினி வாளைக் கட்டிலில் வைத்துக் கொண்டிருக்கும்போதே மணிமேகலை உள்ளே வந்தாள். 
சற்று முன் வெறி பிடித்துப் புலம்பிய நந்தினி ஒரு கணநேரத்தில் முற்றும் மாறுதல் 
அடைந்தவளாய், "நீதானா, மணிமேகலை? வா! வா!" என்றாள். அவள் குரலில் அமைதி 
நிலவியது.
"அக்கா! இது என்ன? எப்போதும் வாளும் கையுமாகவே இருக்கிறீர்களே?" என்றாள் 
மணிமேகலை. 
"பின், என்ன செய்வது? ஆண் பிள்ளைகள் இவ்வளவு தூர்த்தர்களாயிருந்தால், 
நாம் வாளைத் துணைகொள்ள வேண்டியது தானே?" 
"தேவி! நான் ஒருத்தி துணை இருக்கிறேனே? என்னிடம் தங்களுக்கு நம்பிக்கை 
இல்லையா?" 
"உன்னிடம் நம்பிக்கை இல்லாமலா என்னுடைய அந்தரங்கத்தையெல்லாம் 
உன்னிடம் சொன்னேன், மணிமேகலை! இந்த உலகிலேயே நான் நம்பிக்கை வைத்திருப்பவள் 
நீ ஒருத்திதான்.  ஆனாலும், உன் கூடப்பிறந்த சகோதரனுக்கு எதிராக உன்னால் ஒன்றும் 
செய்ய முடியாதல்லவா?" 
"அக்கா! எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இல்லை  என்று முடிவு செய்து 
கொண்டு விட்டேன்..." 
"ஏன் அவ்விதம் சொல்கிறாய்? எப்படியும் அவன் உன் சகோதரன்..." 
"சகோதரனாவது? சகோதரியாவது? அந்த உறவெல்லாம் வெறும் பிரமை என்று 
தெரிந்து கொண்டேன். கந்தமாறன் என்னுடைய விருப்பத்துக்கு எதிராக, - தன்னுடைய 
சௌகரியத்துக்காக, - என்னை வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கப் பார்க்கிறான்! உண்மையான 
சகோதர பாசம் இருந்தால், இப்படிச் செய்வானா?..."
"தங்காய்! உன்னுடைய நன்மைக்காகவே அவன் உன்னை இளவரசருக்கு மணம் 
செய்து கொடுக்க விரும்பலாம் அல்லவா?" 
"ஆமாம்; என்னுடைய நன்மை தீமையை இவன் கண்டுவிட்டானாக்கும்! உண்மையில்,
என்னுடைய நன்மையை அவன் கருதவேயில்லை, அக்கா!"
 
"ஈழம் முதலாவது வட பெண்ணை வரையில் பரந்த சோழ ராஜ்யத்தின் சிங்காதனத்தில் நீ 
பட்டமகிஷியாக வீற்றிருக்க வேண்டும் என்று உன் தமையன் விரும்புவது உன்னுடைய 
நன்மைக்கு அல்லவா?" 
"இல்லவே இல்லை! நான் தஞ்சாவூர் ராணியானால், இவன் முதன் மந்திரியாகலாம்;
அல்லது பெரிய பழுவேட்டரையரைப்போல் தனாதிகாரியாகலாம் என்ற ஆசைதான் காரணம்! 
அக்கா! அக்கா...!" என்று மணிமேகலை மேலே சொல்லத் தயங்கினாள்.  
"சொல், மணிமேகலை! உன் மனதில் உள்ளது எதுவானாலும் தாராளமாய்ச் 
சொல்லலாம். என்னிடம் உனக்குள்ள அன்பைக் குறித்து நீ சொன்னதெல்லாம் உண்மைதானே!" 
"அக்கா! அதைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டாம்.  இந்த உலகத்திலேயே நான் 
அன்பு வைத்திருப்பது இரண்டு பேரிடந்தான்.  ஒருவர் தாங்கள்..." 
"இன்னொருவர் யார்?" 
"உங்கள் மனதுக்கு அது தெரியும்.  என்னை ஏன் கேட்கிறீர்கள்...?" 
"தங்காய்! உனக்கு அது சந்தோஷமாயிருக்கும் என்று நினைத்தேன்.  கதைகளும் 
காவியங்களும் நீ கேட்டதில்லையா? ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உதயமானால் அதைப்
பற்றி அவள் யாரிடமாவது பேச விரும்புவது இயல்பு அல்லவா? அந்தரங்கத்தோழி என்பது பின் 
எதற்காக...?" 
"அது உண்மைதான், அக்கா! என் அந்தரங்கத்தையும் தங்களிடம் தெரியப்படுத்தி
யிருக்கிறேன். ஆனால் இப்போது நான் தங்களிடம் அவசரமாக வந்தது வேறு ஒரு செய்தி 
சொல்வதற்காக.  மிக்க கவலைதரும் செய்தி, அக்கா!" 
நந்தினி திடுக்கிட்டு, "என்ன? என்ன?" என்று கேட்டாள்.  எத்தனையோ காலமாகத்
திட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று நிறைவேறலாம் என்று எண்ணியிருந்த காரியத்துக்கு 
ஏதாவது தடங்கல் ஏற்படுமோ என்ற பீதி அவள் மனத்தில் குடி கொண்டது.அதன் அறிகுறி 
அவள் முகத்திலும் தோன்றியது. 
"அக்கா! தனாதிகாரி பழுவேட்டரையர் இன்னும் தஞ்சாவூருக்குப் போய்ச் சேர
வில்லையாம். வழியில்..." 
"வழியில் என்ன நேர்ந்தது? ஒரு வேளை மனத்தை மாற்றிக் கொண்டு திரும்பி 
விட்டாரா?" என்று நந்தினி கேட்ட கேள்வியில் பீதி குறைந்திருக்கவில்லை.  
"அப்படி அவர் திரும்பியிருந்தால் நன்றாயிருக்கும், அக்கா! அன்றைக்கு நாம் ஏரித் 
தீவில் இருந்தபோது புயல் அடித்ததல்லவா? அந்தப் புயல் கொள்ளிடத்திலும் அப்பாலும் 
ரொம்பக் கடுமையாக அடித்ததாம். பழுவேட்டரையர் கொள்ளிடத்தில் படகில் சென்றபோது 
புயல் பலமாக இருந்ததாம்..." 
"அப்புறம்" என்று நந்தினி பரபரப்புடனேதான் கேட்டாள்.  ஆயினும் கவலைத் தொனி
சிறிது குறைந்திருந்தது.  
"அக்கரை சேரும் சமயத்தில் படகு கவிழ்ந்து விட்டதாம்!" 
"ஐயோ!" 
"தப்பிக் கரை ஏறியவர்கள் கொள்ளிடக் கரையில் எங்கும் தேடிப் பார்த்தார்கள்.  
தங்கள் கணவர் மட்டும் அகப்படவில்லை!" என்றாள் மணிமேகலை.  
இந்தச் செய்தியைக் கேட்டதும் நந்தினி விம்மி அழுவாள் என்று மணிமேகலை 
எதிர்பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லத் தயாராயிருந்தாள்.  ஆனால் நந்தினியோ 
அப்படியொன்றும் செய்யவில்லை. சிறிதும் படபடப்புக் காட்டாமல், அவநம்பிக்கை தொனித்த 
குரலில், "இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள்.  
"பழுவேட்டரையரோடு போன ஆட்களில் ஒருவன் திரும்பி வந்திருக்கிறான்.  அவன் 
என் தமையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.  நானே என் காதினால் கேட்டேன், அக்கா! 
தங்களிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்று என் தமையன் தயங்கி, 
இளவரசரிடம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தான்.நான் எப்படியாவது தங்களிடம் சொல்லி 
விடுவது என்று ஓடி வந்தேன்..." 
இவ்விதம் கூறிய மணிமேகலை துயரம் தாங்காமல் விம்மத் தொடங்கினாள்.  நந்தினி 
அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு, "என் கண்ணே! என்னிடம் நீ எவ்வளவு அன்பு 
வைத்திருக்கிறாய் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், நீ வருத்தப்பட வேண்டாம்!" என்றாள். 
மணிமேகலை சிறிது வியப்புடனேயே நந்தினியை நிமிர்ந்து பார்த்தாள். 'இவளுடைய
நெஞ்சு எவ்வளவு கல் நெஞ்சு?' என்று அவள் மனத்தில் தோன்றிய எண்ணத்தை நந்தினி 
தெரிந்து கொண்டாள். 
"தங்காய்! துக்கச் செய்தியைக் கூறி எனக்கு ஆறுதல் சொல்லுவதற்காக நீ 
ஓடிவந்தாய்.  ஆனால் உனக்கு நான் தேறுதல் கூற வேண்டியிருக்கிறது. நீ வருத்தப்பட 
வேண்டாம்.  என் கணவருடைய உயிருக்கு ஆபத்து ஒன்றும் வரவில்லை என்பது நிச்சயம்.  
அப்படி ஏதாவது நேர்ந்திருந்தால் என் நெஞ்சே எனக்கு உணர்த்தியிருக்கும். அதனாலேதான் 
நான் கவலைப்படவில்லை.  ஆனால் நீ கேள்விப்பட்டதை இன்னும் விவரமாய்ச் சொல்! என்
மனத்தில் வேறொரு சந்தேகம் உதித்திருக்கிறது..." 
"என்ன சந்தேகம், அக்கா?" 
"உன் தமையனும் அந்தப் பல்லவ பார்த்திபேந்திரனும் சேர்ந்து என் கணவருக்கு 
ஏதேனும் கெடுதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன்.  அதற்கு, முன்
ஜாக்கிரதையாக இம்மாதிரி ஒரு செய்தியை அவர்களே தயாரித்திருக்கலாமல்லவா?" 
"எனக்கு விளங்கவில்லை, அக்கா! அவர்கள் ஏன் பழுவேட்டரையருக்குத் தீங்கு 
செய்ய வேண்டும்?" 
"நீ பச்சைக் குழந்தையாகவே இருக்கிறாய், மணி மேகலை! உன் தமையனும் 
பார்த்திபேந்திரனும் என் மீது துர் எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்ல
வில்லையா? அதற்காகத்தான் இந்த வாளை எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டி
ருக்கிறேன் என்றும் சொல்லவில்லையா?..." 
"சொன்னீர்கள்; அதனால் கந்தமாறனை இனிமேல் என் தமையன் என்று சொல்ல
வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன்.  அந்தப் பாதகனை என் உடன் பிறந்தவனாக நான் 
இனிக் கருதமாட்டேன்.  இருந்தாலும்...  அவர்கள் பழுவேட்டரையருக்கு ஏன் தீங்கு செய்ய 
வேண்டும்?" 
"தங்காய்! இதுகூடவா நீ தெரிந்து கொள்ள முடியவில்லை? கிழவரைக் கலியாணம் 
செய்துகொண்டு தவிக்கும் நான், அவர் போய்விட்டால் மனத்திற்குள் சந்தோஷப்படுவேன், பிறகு
அவர்களுடைய துர்நோக்கத்துக்கும் இணங்குவேன் என்றுதான்.  உன் தமையன் இப்படிப்
பட்டவன் என்று தெரிந்திருந்தால் அவனை என் வீட்டில் வைத்திருந்து சகோதரனைப் போல் 
கருதி பணிவிடை செய்திருக்க மாட்டேன்.  யமலோகத்தின் வாசல் வரை சென்றவனைக் 
காப்பாற்றியிருக்க மாட்டேன்..." 
"அக்கா! இனி நான் தங்களை விட்டு ஒரு கணமும் பிரிய மாட்டேன்.  அந்த 
இருவரில் ஒருவர் இங்கு வந்தால், என்னுடைய கையாலேயே அவர்களைக் கொன்று விடுவேன்!"
"மணிமேகலை? அந்தக் கவலை உனக்கு வேண்டாம்.  என்னை நானே காப்பாற்றிக்
கொள்வேன்.  கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் என் அருகில் நெருங்கினால், என்றும் 
மறக்காதபடி அவர்களுக்குப் புத்தி கற்பித்து அனுப்புவேன். அவர்களிடம் எனக்குச் சிறிதும் 
பயமில்லை.  முரட்டு இளவரசரைப் பற்றி மட்டுந்தான் கொஞ்சம் பயம் இருந்தது.  நல்ல
வேளையாக அந்த அபாயத்தினின்று என்னை நீயே காப்பாற்றிவிட்டாய்!" 
"நான் தங்களைக் காப்பாற்றினேனா? அது எப்படி?" 
"இளவரசரின் உள்ளத்தை நீ கவர்ந்துவிட்டாய் என்பதை அறியவில்லையா, 
மணிமேகலை! வாணர் குலத்து வீரரைக் கையைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளிவிட்டு 
உன்னை அவர் ஏரித் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றியதன் காரணம் என்ன? அதற்குப் 
பிறகும் அவரை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்.  உன் மனதிற்கு அது தெரிய
வில்லையா, மணிமேகலை?" 
"தெரியாமல் என்ன? தெரிந்துதானிருக்கிறது.  இளவரசரை நினைத்தாலே எனக்குப்
பயமாயிருக்கிறது.  அவர் அருகில் வந்தால் என் உடம்பு நடுங்குகிறது.  என் தமையன் என்று 
சொல்லிக் கொள்ளும் கிராதகன் இருக்கிறான் அல்லவா? அவன் வேறு ஓயாமல் என் 
பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.." 
"இளவரசரை நீ மணந்து கொள்ளவேண்டும் என்று தானே?" 
"ஆம்; தனியாக என்னை ஒரு கணம் பார்த்தால் போதும்! உடனே எனக்கு அவன் 
உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறான்.  அவனுடைய தொந்தரவுக்காகவே..." 
"அவனுடைய தொந்தரவுக்காக இளவரசரை மணந்து கொண்டு விடலாம் என்று 
முடிவு செய்து விட்டாயா?" 
"தாங்கள்கூட இவ்விதம் சொல்லுகிறீர்களே?" என்று மணிமேகலை விம்மி அழத்
தொடங்கினாள்.  அவளுடைய கண்களில் கண்ணீர் அருவி பெருகிற்று.
நந்தினி அவளை சமாதானப்படுத்தினாள்.  "ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னேன். 
அதற்காக இப்படி அழ ஆரம்பித்துவிட்டாயே?" என்று சொல்லிக் கண்ணீரைத் துடைத்தாள்.  
மணிமேகலை சிறிது சமாதனம் அடைந்ததும் "என் கண்ணே! உன் மனத்தை 
நன்றாகச் சோதித்துப் பார்த்துப் பதில் சொல்.  உண்மையாகவே நீ இளவரசர் கரிகாலரை 
விரும்பவில்லையா? அவரை மணந்துகொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷியாக இருக்க 
ஆசைப்படவில்லையா?" என்றாள் நந்தினி.  
"ஒரு தடவை கேட்டாலும் நூறு தடவை கேட்டாலும் என் பதில் ஒன்றுதான்.  அக்கா! 
அந்த ஆசை எனக்குக் கிடையவே கிடையாது." 
"வாணர் குலத்து வந்தியத்தேவரிடம் உன் மனத்தைப் பறிக்கொடுத்திருக்கிறாய் 
என்பதும் உண்மைதானே?" 
"ஆம், அக்கா! ஆனால் அவருடைய மனது எப்படியிருக்கிறதோ?" 
"அவருடைய மனம் எப்படியிருந்தால் என்ன? அவர் உயிரோடிருந்தால் அல்லவா 
அவர் மனத்தைப் பற்றிக் கேட்க வேண்டும்?" 
மணிமேகலை திடுக்கிட்டு, "என்ன சொல்கிறீர்கள், அக்கா!" என்றாள்.  
"மணிமேகலை! நீ இன்னும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லை.  உன்னுடைய 
நிலைமையையும், உன் அன்புக்குரியவனுடைய நிலைமையையும் உணரவில்லை.  என்னைப் 
பற்றி நீ கவலைப்படுகிறாய்; என் கணவரைப் பற்றிக் கவலைப்படுகிறாய்.  எங்களைப் பற்றி 
உண்மையில் கவலைப்படவேண்டியதேயில்லை.  என் கணவர் எப்பேர்ப்பட்டவர் என்பது 
உனக்குத் தெரியும்.  அவர் வாயசைந்தால் இந்த நாடே அசையும்.  சுந்தரச்சோழ சக்கரவர்த்தி
அவர் இட்ட கோட்டைத் தாண்ட மாட்டார்.  என் கணவர் வார்த்தைக்கு மாறாக முதன் மந்திரி
வார்த்தையையும் கேட்க மாட்டார். அவருடைய சொந்தப் பெண்டு பிள்ளைகளின் பேச்சுக்கும் 
செவி கொடுக்கமாட்டார்.  பழுவேட்டரையரை வயதான கிழவர் என்று உன் தமையனைப் 
போன்ற மூடர்கள் எண்ணிப் பரிகாசமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அவர் ஒரு 
மூச்சு விட்டால், உன் தமையனையும், பார்த்திபேந்திரனையும் போன்ற நூறு வாலிபர்கள் 
மல்லாந்து விழுவார்கள்.  ஆகையால் பழுவேட்டரையருக்கு யாரும் தீங்கு செய்துவிட முடியாது.
என் கண்ணே! என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் எனக்குத் தெரியும். இதைக் காட்டிலும் 
எத்தனையோ இக்கட்டான நிலைமைகளில் என்னை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். 
உண்மையாகவே இப்போது நான் கவலைப்படுவதெல்லாம் உன்னைப் பற்றித்தான்.  'இந்தப் 
பெண் நம்மிடம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே? இவளுக்கு ஒன்றும் நேராமலிருக்க 
வேண்டுமே?' என்று கவலைப்படுகிறேன்.  நீ இந்த அறைக்குள் சற்றுமுன் வந்தபோது கூட 
உன்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்..." 
"தாங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை, அக்கா! எனக்கு அப்படி என்ன அபாயம் 
வந்து விடும்?"
"பேதைப் பெண்ணே! வேண்டாத புருஷனுக்கு வாழ்க்கைப்படுவதைக் காட்டிலும் 
பெண்களுக்கு நேரக்கூடிய அபாயம் வேறு என்ன இருக்க முடியும்?" 
"அது ஒரு நாளும் நடவாத காரியம்." 
"உன் தமையன் உன்னை இளவரசருக்கு மணம் செய்விப்பது என்று தீர்மானம் 
செய்து விட்டான்; உன் தந்தையும் சம்மதித்து விட்டார்." 
"அவர்களுடைய தீர்மானமும் சம்மதமும் என்னை என்ன செய்யும்? நான் 
சம்மதித்தால்தானே?" 
"இப்படிக் குழந்தைபோல் பேசுகிறாய்! சிற்றரசர் குலத்துப் பெண்களைக் கலியாணம்
செய்து கொடுப்பது, அந்தப் பெண்களின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் உலகத்தில் 
நடைபெறுகிறதா? அதிலும், மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியின் மூத்தகுமாரர், - பட்டத்து
இளவரசர், - உன்னை மணந்து கொள்ள விரும்பினால், அதற்கு யார் தடை சொல்ல முடியும்?" 
"ஏன்? என்னால் முடியும்.  இளவரசரிடம் நேரே சொல்லி விடுவேன்." 
"என்ன சொல்லுவாய்?" 
"அவரை மணந்துகொள்ள எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்வேன்..."  
"காரணம் கேட்டால்?"
 "உண்மையான காரணத்தைத்தான் சொல்வேன். என் மனம் அவருடைய சிநேகிதர் 
வல்லவரையரிடம் ஈடுபட்டு விட்டது என்று சொல்வேன்." 
"பேதைப் பெண்ணே! இதை நீ சொல்லவே வேண்டாம்.  அவர்களுக்கு ஏற்கனவே 
தெரிந்திருக்கிறது." 
"தெரிந்திருந்தால் என்னை ஏன் வற்புறுத்துகிறார்கள்? அப்படி அதிகமாக 
வற்புறுத்தினால் இதோ நானும் ஒரு கத்தி வைத்திருக்கிறேன்.  அக்கா!" என்று சொல்லி 
மணிமேகலை தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்துக் காட்டினாள்.
"என் அருமைத் தங்கையே! உன் அறியாமையைக் கண்டு ஒரு பக்கம் எனக்கு 
அழுகை வருகிறது; இன்னொரு பக்கம் சிரிப்பும் வருகிறது." 
"அப்படி என்ன நான் உளறி விட்டேன்,  அக்கா!" 
"உன்னை யாரோ வற்புறுத்தப் போவதாக எண்ணியிருக்கிறாய். உன்னுடைய 
சம்மதத்தைக் கேட்பார்கள் என்றும் நினைத்திருக்கிறாய்.  அவ்விதம் ஒன்றும் அவர்கள் செய்யப்
போவதில்லை.  நீ இளவரசரை மணந்து கொள்ளத் தடையாயிருக்கிற காரணத்தை நீக்கிவிடப் 
போகிறார்கள்!" 
"என்ன சொல்லுகிறீர்கள், அக்கா?" 
"நீ யாரிடம் உன் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறாயோ, அவருடைய உயிருக்கு 
அபாயம் நெருங்கியிருக்கிறது என்று சொல்லுகிறேன்...!" 
"ஐயையோ" 
"உன் தமையன் ஏற்கெனவே அவருடைய பழைய சிநேகிதன் மீது துவேஷம் 
கொண்டிருக்கிறான்.  இந்த அரண்மனையில் சில மாதங்களுக்கு முன்னால் சிற்றரசர்கள் கூடிச்
செய்த சதியாலோசனையைப் பற்றி இளவரசரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டான் என்று 
அவனுக்குக் கோபம்.  தன் முதுகிலே குத்திக் கொல்ல முயற்சித்ததாக வேறு குற்றம்சாட்டிக் 
கொண்டிருக்கிறான்.  வேறொரு காரணத்தினால் பார்த்திபேந்திரனுக்கும் உன் காதலன் பேரில்
அளவில்லாத கோபம்..." 
"இவர்களுடைய கோபம் அவரை என்ன செய்துவிடும்.  அக்கா! அவர் சுத்த வீரர் 
அல்லவா!" 
"சுத்த வீரராயிருந்தால் என்ன? திடீரென்று சூழ்ந்து கொள்ளும் பல கொலைகாரர்
களுக்கு மத்தியில் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லாத ஒரு சுத்த வீரன் என்ன செய்ய முடியும்?.." 
"ஐயோ! அவரைக் கொன்று விடுவார்கள் என்றா சொல்லுகிறீர்கள்?" 
"கொல்லமாட்டார்கள்; கண்டதுண்டமாக வெட்டி நரிகளுக்கும் நாய்களுக்கும் 
போட்டு விடுவார்கள்..."
"ஐயோ! என்ன கர்ண கடூரம்!" 
"கேட்பதற்கே உனக்குக் கடூரமாயிருக்கிறதே? உண்மையில் நடந்து விட்டால்,
என்ன பாடுபடுவாய்?" 
"அக்கா! இப்போதே என் உயிரும் உள்ளமும் துடிக்கின்றன. நிஜமாக, அப்படியும் 
செய்து விடுவார்களா? அவர் இளவரசருடைய அத்தியந்த சிநேகிதராயிற்றே?" 
"அத்தியந்த சிநேகிதர்கள் கொடிய பகைவர்களாக மாறுவதைப் பற்றி நீ கேட்ட
தில்லையா, தங்காய்! உன் தமையனும் பார்த்திபேந்திரனும் அப்படியெல்லாம் இளவரசரிடம் 
தூபம் போட்டு விட்டிருக்கிறார்கள்..." 
"சண்டாளர்கள்! இதெல்லாம் தங்களுக்கு..." 
"எனக்கு எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்கிறாய்? இன்று பகலில் பார்த்தி
பேந்திரன் என்னிடம் விடைபெற்று செல்லும் வியாஜயத்தை வைத்துக்கொண்டு வந்திருந்தான்..." 
"அந்தப் பாதகன் எங்கே போகிறான்?" 
"அதிக தூரம் போகவில்லை.  திருக்கோவலூர்க் கிழவன் மலையமான் ஒரு பெரிய 
சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு இந்த ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்று நீ 
கேள்விப்பட்டாய் அல்லவா?"
"கேள்விப்பட்டேன்.  அது என்னத்திற்காக என்று ஆச்சரியப்பட்டேன்." 
"அதுவும் உன் நிமித்தமாகத்தானாம்! இன்று மத்தியானம் இளவரசர் அதைப் பற்றிப்
பிரஸ்தாபித்தாராம். 'மணிமேலையை எனக்கு மணம் செய்து கொடுக்காவிட்டால், மலையமான் 
சைன்யம் வந்தவுடன் இந்தக் கோட்டை - அரண்மனை எல்லாவற்றையும் தகர்த்துத் தரை
மட்டமாக்கி விடப் போகிறேன்!' என்றாராம்.  
அப்போதுதான் உன் தமையன் 'அதற்குத் தடையாயிருப்பது நாங்கள் அல்ல; உங்கள் 
சிநேகிதன் வந்தியத்தேவன்தான்' என்றானாம். 'அந்தத் தடையை நீக்க உங்களால் முடியாதா?' 
என்று இளவரசர் கேட்டாராம். 'கட்டளை அளித்தால் முடியும்' என்றானாம் உன் அண்ணன்.  
என் அருமைச் சகோதரி! பார்த்திபேந்திரனிடம் மேலும் பேச்சுக் கொடுத்துச் சில விவரங்களை 
அறிந்தேன்.  உன் ஆருயிர்க் காதலனுடைய உயிருக்கு ஆபத்து நெருங்கியிருப்பது நிச்சயம்.  
நீ உடனே முயற்சி எடுக்காவிட்டால், கலியாணம் ஆவதற்கு முன்பே கணவனை இழந்து 
விடுவாய்!" என்றாள் நந்தினி.  
இதைக் கேட்ட மணிமேகலையின் உடலும் உள்ளமும் துடிதுடித்ததில் வியப்பு 
ஒன்றும் இல்லை அல்லவா?
"ஐயோ! அவருக்கு எப்படியாவது உடனே எச்சரிக்கை செய்ய வேண்டுமே!" என்று 
தட்டுத் தடுமாறிக் கொண்டே கூறினாள்.  
"எச்சரிக்கை செய்யலாம்.  ஆனால், உன் காதலன் சுத்த வீரன் என்று நீ தானே 
சற்றுமுன் கூறினாய்? அவனுடைய உயிருக்கு அபாயம் என்று கேட்டுப் பயந்து ஓடி விடுவானா? 
மாட்டான்! இன்னும் அவனுடைய பிடிவாதம் அதிகமாகும்" என்றாள் நந்தினி.  
"தாங்கள் தான் யோசனை சொல்லவேண்டும்.  என் தலை சுற்றுகிறது.  என்ன 
செய்கிறது என்று தெரியவில்லை" என்றாள் மணிமேகலை.  
"நீ இங்கே வரும்போது அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  
எனக்கும் ஒன்றும் புரியவில்லை.  நல்ல வேளையாக நீ ஒரு செய்தி கொண்டு வந்தாய். 
அதிலிருந்து, வல்லவரையரைக் காப்பாற்ற ஒரு யோசனை தோன்றியது." 
"நான் கொண்டு வந்த செய்தியிலிருந்தா? அது என்ன செய்தி?" 
"பழுவேட்டரையருடைய படகவிழ்ந்ததென்றும் பிறகு அவரைப் பற்றித் தகவல் 
தெரியவில்லை என்றும் சொன்னாய் அல்லவா?" 
"ஆமாம்!"
"வந்தியத்தேவரிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.  எனக்காக அவர் 
போய் என் கணவரைப் பற்றிய உண்மை தெரிந்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
நீயும் எனக்காகப் பரிந்து பேசு.  இரண்டு பேதைப் பெண்களின் வேண்டுகோளை அந்த வீரர் 
புறக்கணிக்க மாட்டார்.  அவரை உடனே இந்த இடத்திலிருந்து வெளியே அனுப்புவதுதான் 
அவர் உயிரைக் காப்பாற்றும் வழி.  வேறு உபாயம் ஒன்றுமில்லை. அவர் போன பிறகு நீ உன் 
தமையனாரிடமும் தந்தையிடமும் இளவரசரிடமும் தைரியமாக உன் மனத்தை வெளியிட்டுப்
பேசலாம்.  நானும் உனக்காகப் பேசுகிறேன்.  'இஷ்டமில்லாத பெண்ணை வற்புறுத்துவது சோழ
குலத்தில் பிறந்தவர்களுக்கு அழகு அல்ல' என்று சொல்லுகிறேன்." 
"தங்கள் பேச்சையும் அவர்கள் கேட்காவிட்டால், என் கையில் கத்தி இருக்கிறது!" 
"சரி, சரி! இப்போது முதலில் உன் காதலரை வெளியேற்றிக் காப்பாற்ற முயல்வோம்.
 அவர் இருக்குமிடம் உனக்குத் தெரியும் அல்லவா? நீ நேரில் அவரைப் பார்க்க முடியா
விட்டால், உன் தோழி சந்திரமதியை அனுப்பு. இல்லாவிடில், இடும்பன் காரியை அனுப்பு. 
எப்படியாவது அவரை இங்கே அழைத்துக்கொண்டு வா!" 
"அவர் போகச் சம்மதித்தாலும் இங்கேயிருந்து எப்படி வெளியில் போவார், அக்கா! 
என் அண்ணன் தடுத்து நிறுத்தி விட்டால்...?" 
"உன் அண்ணனுக்கு ஏன் தெரிய வேண்டும், மணிமேகலை! முதன் முதலில் அவர்
இந்த அறைக்குள் வந்து உன்னைத் திடுக்கிடச் செய்தாரே? அந்தச் சுரங்க வழியிலேயே 
அனுப்பி விட்டால் போகிறது! சீக்கிரம் போ, தங்காய்! வந்தியத்தேவர் இனி இந்தக் 
கோட்டையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய உயிருக்கு அபாயம் அதிகமாகும். 
உன் தமையன் ஏவும் கொலைகாரர்கள் எப்போது அவரைத் தாக்குவார்கள் என்று நமக்கு 
என்ன தெரியும்?" 
"இதோ போகிறேன், அக்கா! எப்படியவாது அவரை அழைத்துக் கொண்டுதான் 
திரும்பி வருவேன்" என்று சொல்லி விட்டு மணிமேகலை சென்றாள்.  
அவளுடைய காலடிச் சத்தம் மறைந்ததும், பக்கத்திலிருந்த வேட்டை மண்டபத்தின் 
இரகசியக் கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.  
நந்தினி இரகசியக் கதவின் அருகில் சென்று, அதன் உட்கதவைத் திறந்தாள். 
இருட்டில் ஒரு கோரமான முகம் இலேசாகத் தெரிந்தது.  
"மந்திரவாதி! வந்துவிட்டாயா?" என்றாள் நந்தினி.  
"வந்துவிட்டேன், ராணி! வேளையும் வந்துவிட்டது" என்றான் ரவிதாஸன்.  
பக்க தலைப்பு
முப்பத்திரண்டாம்  அத்தியாயம் 
இறுதிக்  கட்டம் 
நந்தினி திரும்பிச் சென்று தனது அறைக்குள் வருவதற்காக ஏற்பட்ட பிரதான 
வாசலின் கதவைச் சாத்தித் தாளிட்டு வந்தாள்.  பின்னர், கையில் தீபத்துடன் வேட்டை 
மண்டபத்தின் இரகசியக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே பிரவேசித்தாள்.  
மந்திரவாதி ரவிதாஸன் முன்னமே கோரமான முகமுடையவன். முகத்திலும் 
தலையிலும் புதிதாக ஏற்பட்டிருந்த காயங்களினால் அவனுடைய தோற்றம் மேலும் 
கோரமடைந்திருந்தது.  
நந்தினி அதைப் பார்த்துவிட்டு, "மந்திரவாதி! இது என்ன, உன் உடம்பெல்லாம் 
புதுக் காயங்கள்?" என்றாள்.
"ராணி! இதிலே தங்களுக்கு வியப்பு என்ன? தங்களைப் போல் நாங்கள் அறுசுவை 
உண்டி அருந்தி பஞ்சணை மெத்தையில் சொகுசாய்ப் படுத்துக் காலங் கழிப்பதாக எண்ணிக் 
கொண்டிருக்கிறீர்களா? நானும் பரமேசுவரனும் இன்று பிழைத்து வந்திருப்பதே பெரிய காரியம்,
இறந்துபோன பாண்டிய சக்கரவர்த்தியின் ஆவிதான் எங்களை இன்று உயிரோடிருக்கும்படி 
காப்பாற்றியது..." 
"இல்லை, ரவிதாஸா! இல்லை! அவருடைய ஆவி என்னுடனேயே சதா சர்வ காலமும்
இருக்கிறது. ஒரு நாழிகைக்கு முந்திக் கூட என் முன்னால் தோன்றிச் சபதத்தை நிறைவேற்றப்
போகிறாயா, இல்லையா?" என்று கேட்டது. 
"ராணி! அதற்குத் தாங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?" 
"சபதத்தை இன்று நிறைவேற்றுவேன்; இல்லாவிடில் உயிரை மாய்த்துக் கொள்வேன்" 
என்று சொன்னேன். 
"அப்படியானால் நாங்கள் ஓடோடியும் வந்ததே நல்லதாய்ப் போயிற்று.  இத்தனை 
காலங்கழித்து நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுவதில் யாருக்கு என்ன லாபம்? எடுத்த 
காரியம் அல்லவோ முடிவு பெற வேண்டும்? தங்களால் முடியாது என்றால்..." 
"முடியாது என்று யார் சொன்னார்கள்? சபதத்தை நிறைவேற்றுவேன்; அதற்குப் பிறகு
என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன்..." 
"வேண்டாம், வேண்டாம்.  சபதத்தை நிறைவேற்றிய பிறகு தாங்கள் செய்யக்கூடிய 
காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன.  மதுரையில் வீரபாண்டியனுடைய திருக்குமாரனுக்கு 
உலகமறியப் பட்டாபிஷேகம் செய்தாக வேண்டும்..." 
"அதையெல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.  இன்று இரவு என் வேலை 
முடிந்துவிடும்; என் வாழ்வும் முடிந்துவிடும்..." 
"ராணி! பழுவேட்டரையருடைய பொக்கிஷத்தில் உள்ள திரவியங்கள் எல்லாம் மலை
நாட்டுக்குப் போய்ச் சேர வேண்டும்.  அதற்குத் தங்கள் உதவி தேவையாயிருக்கிறது!" 
"சபதம் முடிந்த பின்னரும் என் கணவரை ஏமாற்றிக் கொண்டு உயிர் வாழச் 
சொல்கிறாயா, மந்திரவாதி!" 
"அம்மணி! தங்கள் கணவர் யார்?" 
"உலகறிய என்னை மணந்து, நாடு நகரங்களில் உள்ளவர்களின் பரிகாசங்களை
யெல்லாம் பொருட்படுத்தாமல், என் ஒவ்வொரு சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிற
உத்தமரைத்தான் சொல்கிறேன்.  
"ராணி! பழுவேட்டரையர் தங்கள் கணவர் அல்ல.  ஒவ்வொரு நாள் இரவும் 
வீரபாண்டியர் என் கனவில் வந்து தங்களை அவருடைய பட்டமகிஷியாக நடத்தும்படி 
கட்டளையிடுகிறார்..." 
"மந்திரவாதி! அவர் பேச்சு வேண்டாம்.  இந்தக் காயங்களெல்லாம் உனக்கு எப்படி 
ஏற்பட்டன என்று சொல்லவில்லையே?" 
"நேற்றிரவு கொள்ளிடக் கரைக் காட்டில் எங்களை ஒரு கிழப் புலி தாக்கியது. 
கிழப்புலியானாலும் பற்களும் நகங்களும் மிக்க கூராயிருந்தன..." 
"எப்படித் தப்பி வந்தீர்கள்?" 
"பாண்டிய குமாரருக்குப் பட்டாபிஷேகம் நடத்தினோமே? அந்தப் பள்ளிப்படை 
கோபுரத்தில் இடிந்திருந்த பகுதியை அந்தப் புலியின் பேரில் தள்ளிவிட்டுத் தப்புவித்து
வந்தோம்..." 
"ஐயோ! பாவம்! கிழப்புலியைக் கூட நீங்கள் நேர் நின்று சண்டையிட்டு ஜயிக்க
முடியவில்லை...!" 
"ஆம், ராணி! ஒப்புக்கொள்கிறோம்.  அப்படியிருக்கும் போது இளம் புலியாகிய 
ஆதித்த கரிகாலனை நேருக்கு நேர் எதிர்ப்பது எப்படி? அதனாலேதான் தந்திர 
மந்திரங்களைக் கையாளவேண்டியிருக்கிறது.  தேவி!  இன்றிரவு தப்பினால் அப்புறம் நமக்குச் 
சந்தர்ப்பம் கிட்டப் போவதில்லை. சுந்தர சோழனையும் அருள்மொழிவர்மனையும் பற்றிச் 
செய்தி வந்துவிட்டால், பிறகு ஆதித்த கரிகாலன் நம்மிடம் அகப்படப் போவதில்லை..." 
என்றான் ரவிதாஸன்.  
"மந்திரவாதி! அவர்களைப் பற்றி என்ன? ஏதாவது நிச்சயமாகத் தெரியுமா?" என்று 
கேட்டாள் நந்தினி.  
"இத்தனை நேரம் அவர்களுடைய ஆயுள் முடிந்திருக்கும், சந்தேகமில்லை." 
"நீயும் தேவராளனும் ஈழத்துக்குப் போனபோது இப்படிச் சொல்லிவிட்டுத்தான் 
போனீர்கள்." 
"அங்கே அந்த ஊமைப் பைத்தியம் ஓயாமல் எங்களைப் பின் தொடர்ந்து வந்து 
தொல்லை கொடுத்தது. அதனால்தான் முடியவில்லை..." 
"வாணர் குலத்து வீரன் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகச் சொன்னீர்கள். அவனும் 
தப்பிப் பிழைத்து வந்து விட்டான்..." 
"பள்ளிப்படைக் காட்டில் அவனை வேலை தீர்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தாங்கள்
தடுத்துவிட்டீர்கள்." 
"அதற்கு முக்கிய காரணம் இருப்பதாகச் சொன்னேன்..." 
"அது என்ன முக்கிய காரணமோ தெரியாது. அவன் இங்கே வந்து ஆதித்த 
கரிகாலனை இரும்புக் கவசம்போல் பாதுகாத்து வருகிறான்."
"அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம்." 
"கவலைப்பட்டே தீரவேண்டியிருக்கிறது.  இன்று இல்லாவிட்டால் என்றைக்கும் 
இல்லை.  தேவி! என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" 
"இந்தச் சமயத்தில் நீங்கள் ஒருவரும் இங்கு வராதிருந்தாலே எனக்குப் பெரிய
உதவியாயிருக்கும்..." 
"அது ஒருநாளும் முடியாத காரியம்." 
"என்னிடம் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை..." 
"நம்பிக்கை இருப்பதினால்தான் வந்திருக்கிறோம்.  சபதம் முடிந்த பிறகு தங்களைப் 
பத்திரமாக அழைத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறோம்.  எதிர்பாராத தடங்கல் 
ஏதாவது ஏற்பட்டால் அதற்கும் தயாராயிருப்போம். எந்த நிமிஷமும் தாங்கள் எங்களை 
உதவிக்கு அழைக்கலாம்." 
"நான் போட்டிருக்கும் திட்டத்தில் தடங்கல் எதுவும் ஏற்படாது. சபதம் முடிந்த பிறகு
நான் உயிரோடிருக்கவும் விரும்பவில்லை.  
"கூடவே கூடாது! தாங்கள் எங்களுடன் வந்தே தீர வேண்டும். இல்லையென்றால்..." 
"மந்திரவாதி! சபதம் முடிந்த பிறகு ஒரு நிமிஷமும் நான் பெரிய பழுவேட்டரையர்
வீட்டில் இருக்க மாட்டேன்." 
"அப்படியானால் நீங்கள் எங்களுடன் வந்து விடுங்கள்!" 
"என்னை எப்படி அழைத்துக் கொண்டு போவீர்கள்?" 
"இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் ஐயனார் கோவில் இருக்கிறது.  அதன் 
அருகில் உள்ள காட்டில் பழுவூர் ராணியின் பல்லக்கைத் தயாராக வைத்திருக்கிறோம். 
இடும்பன்காரி பல்லக்கைச் செப்பனிடுவதற்கென்று முன்னமே வெளியிலே கொண்டு வந்து
விட்டான்.  வீர பாண்டியனின் தலையைக் கொய்தவனைப் பழிவாங்கிய தேவியை நாங்களே 
பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்வோம்.பொழுது விடிவதற்குள் கொல்லிமலைக்குப் 
போய்விடுவோம்."
"நீங்கள் எத்தனை பேர் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்?" 
"இங்கே நாலு பேர் இருக்கிறோம்!" என்று கூறிவிட்டு ரவிதாஸன் மெதுவாகக் 
கையைத் தட்டினான்.  
அந்த மண்டபத்தில் இருந்த பயங்கரமான செத்த மிருகங்களுக்குப் பின்னால் 
ஒளிந்திருந்தவர்கள் சிறிது வெளிப்பட்டு முகத்தைக் காட்டினார்கள்.  
"பரமேசுவரன் எங்கே?" என்று நந்தினி கேட்டாள். 
"அவனை வெளியில் நிறுத்தியிருக்கிறேன்.ஐயனார் கோவிலில் காளாமுகன் ஒருவன்
நிஷ்டை செய்து கொண்டிருந்தான்.  அவனை அங்கிருந்து போகச் சொல்வது பெரிய 
தொல்லையாய்ப் போய் விட்டது.  மறுபடியும் அவன் அங்கு வந்து விடாமல் பார்த்துக் 
கொள்ளும்படி தேவராளனைக் கோவில் வாசலில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன்..." 
"காளாமுகனைப் பற்றி நமக்கு என்ன கவலை? மந்திரவாதி! பெரிய 
பழுவேட்டரையரைப் பற்றிய செய்தி தெரியுமா?" என்று நந்தினி கேட்டாள்.  
ரவிதாஸன் சிறிது திடுக்கிட்டு, "என்ன செய்தி?" என்றான்.
"அவர் தஞ்சாவூருக்குப் பிரயாணப்பட்டுப் போனார் அல்லவா? வழியில் 
கொள்ளிடத்தைப் படகில் கடக்கும்போது புயல் அடித்துப் படகு கவிழ்ந்துவிட்டதாம்.
பழுவேட்டரையர் கரையேறவில்லையென்றும், தண்ணீரில் மூழ்கிப் போய்விட்டதாகவும் 
சம்புவரையனுக்கு இன்று சாயங்காலம் செய்தி வந்திருக்கிறதாம்!" 
"தெய்வமே? அவர் கதி அப்படியா ஆயிற்று? இத்தனை நேரம் தாங்கள் இந்த 
முக்கிய விவரத்தைப் பற்றிச் சொல்லவில்லையே?" 
"அதை நான் நம்பவில்லை, மந்திரவாதி! பழுவேட்டரையர் கொள்ளிடத்தில் முழுகி 
இறந்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை."
"எனக்கும் அந்தச் செய்தியில் நம்பிக்கை இல்லை, ராணி!" 
"அவர் கொள்ளிடத்தின் இக்கரைக்கு நீந்தி வந்திருந்தால் என்ன செய்கிறது? 
ஒருவேளை இன்றிரவு இங்கு வந்து விட்டால்?...  இதைப் பற்றித்தான் சிறிது கவலைப்
படுகிறேன்..." 
"ராணி! அதைப் பற்றித் தங்களுக்குக் கவலை வேண்டாம். இப்போதுதான் எனக்கும்
நினைவு வருகிறது.  கொள்ளிடத்துக்கு அக்கரையில் தஞ்சாவூர்ச் சாலையில் ஆஜானுபாகுவான
மனிதர் ஒருவரை நேற்றிரவு பார்த்தேன்.  ஆடை ஆபரணம் ஒன்றும் அவர் அணிந்திருக்க
வில்லை.  இருட்டாகவும் இருந்தபடியால் அடையாளம் தெரியவில்லை.  இப்போது யோசித்தால்,
அந்த வழிப்போக்கர் ஒருவேளை பெரிய பழுவேட்டரையராகத்தான் இருக்கவேண்டும் என்று 
தோன்றுகிறது!" 
"அப்படியானால், நிச்சயமாக இன்றிரவு அவர் இங்கே வந்து விடமாட்டார் 
அல்லவா?"
 "மாட்டவே மாட்டார்! அதைப் பற்றித் தாங்கள் தைரியமாக இருக்கலாம்.  
இப்பொழுது எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?" 
"மந்திரவாதி! நீங்கள் இங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். 
என்னுடைய அறையில் என்ன நடப்பதாகத் தோன்றினாலும், எத்தனை பேருடைய பேச்சுக் 
குரல் கேட்டாலும் அவசரப்பட்டு உள்ளே வரவேண்டாம்.  வந்தால் காரியம் கெட்டுப் போகும்.  
நான் குரல் கொடுத்த பிறகு நீங்கள் வந்து சேருங்கள்!" 
"ராணி! தாங்கள் எப்படிக் குரல் கொடுப்பீர்கள்?" 
"மந்திரவாதி! நான் கலகலவென்று சிரித்துப் பல வருஷங்கள் ஆயிற்று என்று 
தெரியும் அல்லவா? நான் சிரித்து நீ கேட்டேயிருக்க மாட்டாய்!" 
"தேவி! ஒரே ஒரு சமயம் அந்தத் துஷ்ட வாலிபன் வந்தியத்தேவனுடன் பேசிக் 
கொண்டிருந்தபோது நீங்கள் சிரிக்கக் கேட்டேன்..." 
"ஆகா! அதைக்கூட ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறாயா? நல்லது! இன்றைக்கு 
நான் கலகலவென்று உரத்துச் சிரிக்கும் சத்தம் கேட்டால் நீங்கள் இரகசியக் கதவைத் 
திறந்து கொண்டு உள்ளே வாருங்கள்.  காரியம் முடிந்துவிட்டதற்கு அது அடையாளம். 
இப்போதும் வந்தியத்தேவனைப் பார்த்தே நான் சிரித்துக் கொண்டிருந்தாலும் இருப்பேன்.
அதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்..."
"தேவி! தங்களுடைய உத்தேசம் என்னவென்பது ஒருவாறு இப்போது எனக்குத் 
துலங்குகிறது..."
"கொஞ்சம் பொறுத்திருந்தால், எல்லாம் துலாம்பரமாகிவிடும்.  எதிர்பாராத தடங்கல் 
ஏதாவது ஏற்பட்டுவிட்டால், அப்போது என் அழுகைக் குரல் கேட்கும்.  உடனே வந்து 
சேருங்கள்..." 
"அப்படியே செய்வோம், ராணி! ஆனால் தங்கள் அழுகைக் குரலைக் கேட்க நான் 
விரும்பவில்லை.  சிரிப்புக் குரலைக் கேட்கத்தான் விரும்புகிறேன்" என்றான் மந்திரவாதி
ரவிதாஸன்.  
பக்க தலைப்பு
முப்பத்துமூன்றாம்  அத்தியாயம் 
"ஐயோ!பிசாசு!" 
அதே சமயத்தில் வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வுடன் மாளிகையைச் சேர்ந்த 
நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான்.  அந்த நந்தவனம் மாளிகையில் வெளி மதில் சுவர் 
ஓரமாக அமைந்திருந்தது. இரவில் மலரும் புஷ்பங்கள் அப்போதுதான் மடல் அவிழ்ந்து 
கொண்டிருந்தன.  பன்னீர், பாரிஜாதம், மல்லிகை, முல்லை முதலிய மலர்களின் நறுமணத்தை 
ஐப்பசி மாதத்தின் வாடைக் காற்று அவன் பக்கமாகக் கொண்டு வந்து வீசியது.  "ஆகா! இந்த 
நேரத்தில் பழையாறை அரண்மனை நந்தவனத்தில் நாம் இருக்கக்கூடாதா? அப்படியிருக்கும்
போது திடீரென்று குந்தவை தேவியின் பாதச் சிலம்பு ஒலிக்கக் கூடாதா?" என்று அவன் மனம் 
எண்ணமிட்டது.  "இங்கே வந்து கடம்பூர் அரண்மனையில் அகப்பட்டுக் கிடக்கிறோமே? வெறி
பிடித்த இளவரசரிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறோமே?" என்று நினைத்தான்.  ஆதித்த 
கரிகாலர் என்றுமில்லாத வண்ணம் அன்று மாலை அவன்மீது சீறி எரிந்து விழுந்ததும், "இனி 
என்றைக்கும் என் முகத்தில் விழிக்காதே! நாளைப்பொழுது விடிந்தபிறகு உன்னைப் பற்றி என் 
முடிவைத் தெரிவிக்கிறேன்" என்று கூறியதும் அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தன.  ஒரு 
நாளுமில்லாத விதமாக அவர் இன்று கோபித்துக் கொண்டு விட்டார்.  பாவம்! அவர்மீது 
குறைப்பட்டு என்ன பயன்? அவர் உள்ளம் அவ்விதமாக குழம்பிவிட்டிருக்கிறது. அவர் நிலையை
நினைத்துப் பார்க்கும் போது வந்தியத்தேவனுக்கு அவர் மீது பரிதாபமே உண்டாயிற்று.  
அன்றெல்லாம் ஆதித்த கரிகாலரின் உன்மத்தம் உச்ச நிலையை அடைந்திருந்தது.
உற்சாகமும் சோர்வும், கோபமும் குதூகலமும், சிநேகப் பான்மையும் கொடூரப் பகைமையும் 
மாறிமாறி அவரைப் பிடித்து ஆட்டி வைத்தன.  அவரும் தம்மைச் சுற்றியிருந்தவர்களை 
அம்மாதிரி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார். அடுத்த நிமிஷம் அவருடைய போக்கு 
எப்படியிருக்குமோ, என்ன செய்வாரோ என்று அருகிலிருந்தவர்கள் கதிகலங்கிக் 
கொண்டிருந்தார்கள்.  
அன்றைக்குச் சூரியன் உதயமானதிலிருந்து வந்து கொண்டிருந்த செய்திகள் 
அவருடைய உன்மத்தத்தை அதிகமாக்க உதவி செய்து கொண்டிருந்தன.  சம்புவரையர் முதன் 
முதலாக அவரிடம் வந்து, திருக்கோவலூர் மலையமான் படை திரட்டிக் கொண்டு வருகிற 
செய்தியைத் தெரிவித்தார்.  அதைப்பற்றித் தமது ஆட்சேபத்தையும் கண்டனத்தையும் 
தெரிவித்துக் கொண்டார்.  
"மலையமான் தொண்டு கிழவர்; வயது எண்பதுக்கு மேலாகிறது. அவர் வருவதைக் 
குறித்து உங்களுக்கு என்ன பயம்?" என்றார் இளவரசர்.  
"ஐயா! கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரியின் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள்.
பயம் என்றால் இன்னதென்று அறியாதவர்கள்.  தாங்கள் இங்கு விஜயம் செய்திருப்பதை 
முன்னிட்டே தயங்குகிறேன்.  தாங்கள் மட்டும்  அநுமதி கொடுத்தால்..." 
"கிழவரோடு போர் புரிவதற்கு உடனே புறப்பட ஆயத்தமாயிருக்கிறீர்கள்.  
அவ்வளவுதானே! சம்புவரையரே! என் பாட்டனைப் படையுடன் புறப்பட்டு வரும்படி நான்தான் 
செய்தி அனுப்பினேன்!" 
"எதற்காக, இளவரசே?" 
"நான் இங்கே உங்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அல்லவா? 
இங்கே இருக்கும்போது எனக்கு ஏதாவது நேர்ந்தால்..." 
"கோமகனே! அப்படிப்பட்ட சந்தேகம் அணுவளவும் தங்கள் மனத்தில் இருந்தால், 
இந்தக் கணமே..." 
"இங்கிருந்து என்னைக் கிளம்பிவிடச் சொல்கிறீர்களாக்கும்!" 
"ஐயா! இது தங்களுடைய இராஜ்யம்; இது தங்களுடைய அரண்மனை.  இதன் 
உச்சியில் புலிக்கொடி பறக்கிறது.  இங்கிருந்து தங்களைப் போகச் சொல்வதற்கு நான் யார்? 
தாங்கள்  அநுமதி கொடுத்தால் நானும் என் குடும்பத்தாரும் இங்கிருந்து போய் விடுகிறோம்.  
மிலாடுடையார் மலையமானை வரவழைத்து வைத்துக் கொண்டு தாங்கள் நிர்ப்பயமாக இங்கே 
இருக்கலாம்.  
"ஓகோ! வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த நீங்கள் பயமறியாதவர்கள் என்றும் 
விஜயாலய சோழரின் குலத்தில் பிறந்த நான் பயங்கொள்ளி என்றும் சொல்லிக் காட்டுகிறீரா?" 
"இளவரசரின் வைர நெஞ்சமும், வீர தீரமும் உலகம் அறிந்தவை.  பன்னிரண்டாம் 
பிராயத்தில் தாங்கள் சேவூர்ப்போர்க்களத்தில் புகுந்து பகைவர்களைச் சின்னா பின்னம் செய்து
வீராதி வீரன் என்று பெயர் பெற்றீர்கள். பதினெட்டாம் பிராயத்தில் மறுபடி போருக்கு வந்த 
வீரபாண்டியனைத் தொடர்ந்து துரத்திச் சென்று ஒளிந்திருந்த இடத்தில் அவனைக் 
கண்டுபிடித்து அவன் சிரத்தைத் துண்டித்துக் கொண்டு வந்தீர்கள்..." 
இதைக்கேட்ட ஆதித்த கரிகாலன், "தெரியும், ஐயா! தெரியும்! ஓடியவனைத் துரத்திய
வீரப்புலி நான் என்றும், செத்துப் போன வீர பாண்டியனுடைய தலையை வெட்டிக் கொண்டு 
வந்தவனென்றும் நீங்கள் எல்லோரும் என்னைப் பரிகசித்துப் பேசுவது எனக்குத் தெரியும்; 
அந்தப் பழுவூர் மோகினிப் பேய் அத்தகைய வதந்திகளைக் கிளப்பி விட்டிருக்கிறாள் என்பதும் 
எனக்குத் தெரியும்!" என்று கூறிவிட்டுப் பயங்கரத் தொனியில் சிரித்தார்.  
சம்புரவரையருக்கு ஏன் இந்த வெறிகொண்ட இளவரசரிடம் பேச்சுக் கொடுத்தோம் 
என்று ஆகிவிட்டது.  
"கோமகனே! நான் எது சொன்னாலும் தவறாகப் போய் விடுகிறது. தங்கள் உசிதம் 
எப்படியோ அப்படிச் செய்யுங்கள்.  நான் போய் வருகிறேன்." 
"போய் வருவது சரிதான்; அனால் இந்தக் கோட்டையை விட்டுப் போகும் 
எண்ணத்தை மட்டும் விட்டு விடுங்கள்.  இந்த அரண்மனையில் நான்கு மாதங்களுக்கு முன்னால்
நடந்த சதியாலோசனையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளும் வரையில் நானும் இந்த 
இடத்தை விட்டுப் போகப் போவதில்லை; நீங்கள் போவதற்கும் விடப்போவதில்லை!" என்றார் 
ஆதித்த கரிகாலர்.  
சம்புவரையரின் உதடுகள் துடித்தன.  உடம்பு நடுங்கியது.  அவருடைய கண்களில் 
கண்ணீர் ததும்பியது.
இந்த நிலையைப் பக்கத்தில் இருந்த பார்த்திபேந்திரன் பார்த்தான்.  
"கோமகனே! சோழக்குலத்தவர் வீரத்திற்குப் புகழ் பெற்றது போலவே நீதிக்கும் 
பெயர் பெற்றவர்கள்.  இந்தப் பெரியவருக்குத் தாங்கள் நீதி செய்யவில்லை.  தங்கள் 
வார்த்தைகளினால் அவருடைய மனத்தைப் புண்படுத்துகிறீர்கள்.  இங்கு நடந்த சிற்றரசர் 
கூட்டத்தைப் பற்றிச் சம்புவரையர் முன்னமே தக்க சமாதனம் சொல்லித் தாங்களும் ஒப்புக்
கொண்டிருக்கிறீர்கள்.  தாங்கள் இராஜயம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாலும், 
தஞ்சாவூருக்குப் போகவே மறுப்பதாலும், சிற்றரசர்கள் சோழ ராஜ்யத்தின் நன்மையைக் கருதி
அடுத்த பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசித்தார்கள்.  தாங்கள் ராஜ்ய பாரத்தை வகிக்க
இசைந்தால், அவர்கள் ஏன் வேறு யோசனை செய்ய வேண்டும்? உலகமெல்லாம் வீரப் புகழ் 
பரப்பிய ஆதித்த கரிகாலர் இருக்கும்போது,போர்க்களத்தையே பார்த்தறியாத மதுராந்தகத்
தேவனைப் பற்றி இவர்கள் கனவிலும் கருதுவார்களா?..." 
ஆதித்த கரிகாலர் குறுக்கிட்டு, "ஆமாம், ஆமாம்! நான் உயிரோடிருக்கும்போது 
இன்னொருவன் சோழ சிங்காதனம் ஏறுவது இயலாத காரியந்தான்.  அதற்காகத்தான் என்னை 
வேலை தீர்த்துவிடப் பார்க்கிறார்கள்!" என்று கூறிவிட்டு மறுபடியும் ஹா ஹா ஹாவென்று 
உரத்துச் சிரித்தார். 
"பார்த்திபேந்திரா! நீயும் இவர்களுடன் சேர்ந்து கொண்டதை நான் அறியவில்லை
யென்றா நினைத்தாய்? கந்தமாறனும் நீயும் அன்று நாம் வேட்டைக்குப் போனபோது என் 
பின்னாலேயே வேலைக் குறி பார்த்துக்கொண்டு வந்தது எனக்குத் தெரியாது என்றா
நினைத்தாய்? என் உண்மை நண்பனாகிய இந்த வந்தியத்தேவன் மட்டும் தெய்வாதீனமாக 
இங்கு வந்து சேர்ந்திராவிட்டால் இதற்குள் என்னை யமனுலகத்துக்கு அனுப்பியிருக்க
மாட்டீர்களா?" என்று சொன்னார்.  
பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் கண்ணாலேயே கொன்று விடுகிறவனைப்போல்
பார்த்துவிட்டு, "ஐயா! இந்தப் பாதகன் ஏதேதோ சொல்லித் தங்கள் மனத்தைக் கெடுத்து 
விட்டான். தங்களுக்கு நான் மனத்தினாலும் துரோகம் எண்ணியதாக இவன் நிரூபித்துவிட்டால்,
இந்தக் கணமே..." என்றான்.  
"அப்பனே! உன் மனத்தில் எண்ணிய துரோகத்தை யார் எப்படி நிரூபிக்க முடியும்?
நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்! நீயும் கந்தமாறனும் பழுவூர் இளைய ராணியின் 
பேச்சைக் கேட்டு மயங்கித்தானே என்னை இங்கே அழைத்து வர இவ்வளவு பிரயத்தனம் 
செய்தீர்கள்? இதை இல்லையென்று நீ மறுக்க முடியுமா? 
"அதை மறுக்கவில்லை, இளவரசே! மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை.  பழுவூர்
ராணி மிக நல்ல நோக்கத்துடனே இந்தக் காரியத்தில் தலையிட்டிருக்கிறார் என்பதை நான் 
நிச்சயமாய் அறிவேன்.  தங்களை இங்கு தருவித்துக் கந்தமாறனுடைய சகோதரியைத் 
தங்களுக்கு மணம் புரிவித்துச் சோழ நாட்டில் எவ்வித உட்கலகமும் ஏற்படாமல் பார்த்துக் 
கொள்வதே அவருடைய நோக்கம்.  தங்களுடைய சிரஸில் சோழகுலத்து மணிமகுடத்தை 
அணிந்து பார்ப்பதைக் காட்டிலும் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது வேறு 
ஒன்றுமில்லை. என்னை யாராவது குறை கூறினாலும் பொறுத்துக்கொள்வேன்; பழுவூர் 
ராணியைப் பற்றி நிந்தை சொன்னால், அவனை அக்கணமே இந்த வாளுக்கிரை யாக்குவேன்!" 
என்று பார்த்திபேந்திரன் வந்தியதேவனைப் பார்த்துக்கொண்டே கூறி, அதே சமயத்தில் 
வாளையும் உறையிலிருந்து உருவினான்.  
"ஆகா! என் வீர நண்பா! வாளை உறையிலே போட்டு வை! நல்ல சமயம் வரும்போது
சொல்கிறேன்.  அப்போது வெளியில் எடுக்கலாம்.  வந்தியத்தேவன் பழுவூர் ராணியைப் பற்றி 
ஒன்றும் குறை கூறவில்லை.  அவனும் உங்களைப் போலத்தான் மதி மயங்கி நிற்கிறான்.  
உண்மையில், பழுவூர் இளையராணி என் உடன்பிறந்த சகோதரி என்று சத்தியம் செய்து 
கொண்டிருக்கிறான்.  அதைச் சொல்வதற்காகவே ஓடோடியும் வந்தான். உன் பேரில் அவன் 
வேறு குற்றம் சாட்டுகிறான்.  என் சகோதரனை நீ ஈழ நாட்டிலிருந்து உன் கப்பலில் 
அழைத்துக் கொண்டு வந்து வழியில் கடலில் தள்ளி மூழ்க அடித்துவிட்டாய் என்று அவன் 
சொல்கிறானே? அதற்கு உன் பதில் என்ன?" என்றார் ஆதித்த கரிகாலர்.  
அந்தச் சமயத்தில், "நான் அதற்குப் பதில் சொல்கிறேன்!" என்று கூறிக் கொண்டே 
கந்தமாறன் அங்கு வந்தான்.  
"கோமகனே! மிகச் சந்தோஷமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன்.  சின்ன 
இளவரசர் கடலில் முழுகிச் சாகவில்லை.  பொன்னியின் செல்வர் நாகைப்பட்டினம் சூடாமணி 
விஹாரத்தில் இத்தனை நாளும் மறைந்து இருந்து வந்தாராம்.  புயல் அடித்துக் கடல் பொங்கி
நாகைப்பட்டினம் நகரில் புகுந்த போது அவர் வெளிப்பட நேர்ந்ததாம்.  லட்சக்கணக்கான 
ஜனங்கள் புடை சூழ இப்போது தஞ்சாவூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாராம்!" என்று 
கந்தமாறன் குதூகலத்துடன் கூறினான்.  
இந்தச் செய்தினால் கரிகாலர் உற்சாகமடைவார் என்று எதிர்பார்த்ததில் அவன் 
பெரும் ஏமாற்றமடைந்தான்.  கரிகாலருடைய குரோதம் இப்போது வேறு திசையில் திரும்பியது. 
"என்ன? என்ன? அருள்மொழி தஞ்சாவூரை நோக்கிப் போகிறானா? லட்சக்
கணக்கான ஜனங்கள் புடை சூழப் போகிறானா? எதற்காக? வல்லவரையா! நீ என்ன 
சொன்னாய்? இப்போது நடப்பதென்ன? என்னுடைய கருத்தை அறிந்து கொள்ளும் வரையில் 
அருள்மொழி நாகைப்பட்டினத்திலேயே இருப்பான் என்று சொன்னாய் அல்லவா? இப்போது ஏன்
தஞ்சாவூரை நோக்கிப் போகிறான்?..." 
வந்தியத்தேவன் குறுக்கிட்டுப் பேசினான்: "ஐயா! இளைய பிராட்டி அவ்வாறுதான் 
உறுதியாகக் கூறினார்.  அதற்குப் பின்னர் என்ன காரணம் நேர்ந்ததோ தெரியவில்லை.  நான் 
வேணுமானால் போய்..." 
"ஆகா! நீயும் போய்விடுகிறேன் என்கிறாயே? நல்லது, நல்லது! எல்லாருமே என் 
விரோதிகள் ஆகிவிட்டீர்கள்.  உங்கள் சூழ்ச்சியெல்லாம் எனக்குத் தெரிகிறது.  அருள்மொழி 
ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான் என்று எனக்குத் தெரியும்.  அது அந்தக் 
கொடும்பாளூர்ப் பெரிய வேளானின் சூழ்ச்சி.  அவனுடைய தம்பி மகளை என் சகோதரன் 
கழுத்தில் கட்டி அவர்களைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்க வேண்டுமென்பது 
அக்கிழவனுடைய விருப்பம்.  கொடும்பாளூர் வேளானும் தென்திசைப் படையுடன் தஞ்சையை
நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டேன்.  என் சகோதரி இளையபிராட்டியும் இந்தச் சூழ்ச்சியில்
ஈடுபட்டிருக்கிறாள்.  ஆமாம்; நீயுங்கூடத்தான்..." 
வந்தியத்தேவன், "இளவரசே! மன்னியுங்கள்! பொன்னியின் செல்வருக்காவது,
இளையபிராட்டிக்காவது அத்தகைய எண்ணம் சிறிதும் கிடையாது.  இது சத்தியம், நான் 
வேணுமானால், போய் உண்மையை அறிந்து வருகிறேன்!" என்றான்.  
"ஆமாம், நீயும் போய் அவர்களுடைய சூழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்கிறாய்!
கந்தமாறா! இவனை உடனே பிடித்து..  இந்த அரண்மனையில் சுரங்கச் சிறை ஏதாவது 
இருந்தால் அதில் அடைத்துவிடு!" என்றதும் கந்தமாறன் வெகு குதூகலத்துடன் வந்தியத்
தேவனை அணுகினான்.  
உடனே கரிகாலர் தமது கட்டளையை மாற்றிக்கொண்டு, "வேண்டாம்! வேண்டாம்! 
சோழர்குலத்தவர்கள் நீதி தவறாதவர்கள்.  குற்றம் நிச்சயமாகிறவரையில் தண்டிக்க 
மாட்டார்கள்.  வல்லவரையா! இனிமேல் இன்று முழுவதும் என் முகத்தில் விழிக்காதே! 
அதுதான் உனக்குத் தண்டனை! உன்னைத் தஞ்சைக்கு அனுப்புகிறேனா, சிறைக்கு 
அனுப்புகிறேனா என்பதைப் பற்றி நாளைக்குச் சொல்கிறேன்! போ! போ! இனி ஒரு கணமும் 
இங்கே நில்லாதே! போய்விடு" என்றார்.  
கரிகாலருடைய முகத்தை அப்போது வந்தியத்தேவன் பார்த்தான்.  அவருடைய 
கடைக் கண்ணின் சமிக்ஞை "இதெல்லாம் விளையாட்டு!" என்று குறிப்பிடுவதுபோல் 
தோன்றியது. ஆயினும் உன்மத்தம் கொண்டிருந்த இளவரசர் பக்கத்தில் இல்லாமலிருப்பதே 
நல்லது என்று ஒரு நொடியில் தீர்மானித்துக்கொண்டு வந்தியத்தேவன், "ஐயா, தங்கள் சித்தம் 
என் பாக்கியம்!" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.  
பின்னர் அன்று பிற்பகலில் இளவரசரின் கட்டளையின் பேரில் சம்புவரையரும்,
பார்த்திபேந்திரனும் திருக்கோவலூர்க் கிழாரை எதிர்கொண்டு அழைத்து வருவதற்காகப் 
போனார்கள் என்று வல்லவரையன் வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். 
இளவரசரும் கந்தமாறனும் நெடுநேரம் அந்தரங்கமாக வார்த்தையாடிக் 
கொண்டிருந்ததையும் அறிந்தான்.  இந்தச் சம்பவங்களெல்லாம் வந்தியத்தேவனுக்கு மிக்க
மனச்சோர்வை உண்டாக்கியிருந்தன.  மறுநாள் காலையில் இளவரசர் தனக்கு என்ன 
கட்டளை பிறப்பிப்பார்? தஞ்சாவூருக்குப் போகும்படி பணிப்பாரா? வழியில் பழையாறைக்குப் 
போகும்படியும் சொல்வாரா? சொன்னால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இந்தக் கடம்பூர் மாளிகை
வாழ்வு அவனுக்குப் பிடிக்கவே இல்லை.  இங்கே யாரும் உற்சாகமாக இருப்பதில்லை.  இங்கே
உள்ளவர்கள் எல்லாரும் எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்களைப் போலிருக்கிறார்கள்.  
அஸ்தமித்து விட்டால் இந்த மாளிகை, மனிதர்கள் வாழும் மாளிகையாகவே தோன்றவில்லை.  
பேய் பிசாசுகள் குடி கொண்டிருக்கும் பாழடைந்த மாளிகையாகத் தோன்றுகிறது.  
இங்கேயிருந்து எப்போது எப்படிக் கிளம்பப் போகிறோம்?
 இப்படி வந்தியத்தேவன் எண்ணமிட்டபோது ஒரு பெண்ணின் குரல் "ஐயோ பிசாசு!" 
என்று அலறியது அவன் காதில் விழுந்தது.  
பக்க தலைப்பு
முப்பத்து  நான்காம்  அத்தியாயம் 
"போய்  விடுங்கள்!" 
"ஐயோ!பிசாசு!" என்ற பீதி நிறைந்த குரல் வந்த திசையை நோக்கி வந்தியத்தேவன்
விரைந்து ஓடினான்.  ஓடும்போதே அவன் உள்ளத்தில், "இது மணிமேகலையின் குரல் 
அல்லவா? இவள் எதற்காக இந்நேரத்தில் இங்கு வந்தாள்? எதைப் பார்த்துவிட்டு இப்படி 
அலறினாள்? பிசாசு என்பது ஒன்று இருக்க முடியாது.பின் என்னவாயிருக்கும்? குரலில் 
உண்மையான பயம் தொனித்ததே? அவளை இப்போது நாம் அணுகிச் செல்வதிலிருந்து 
ஏதாவது தொல்லை ஏற்படுமோ? அவளுடைய தமையனோ நம்மைக் கடித்துத் தின்று விட
வேண்டுமென்றிருக்கிறான்.  ஆதித்த கரிகாலர் வெறி கொண்டிருக்கிறார்.  பழுவூர் ராணி 
மனத்தில் என்ன வஞ்சம் வைத்திருக்கிறாளோ, ஒன்றும் தெரியவில்லை!..."  என்ற எண்ணங்கள் 
துரிதமாகத் தோன்றி மறைந்தன.  இப்படி உள்ளத்தில் கலக்கம் இருந்தபடியால் அவன் 
கவனக்குறைவு அடைந்திருந்தான்.  திடீரென்று ஒரு பன்னீர் மரத்தின் வேர் தடுக்கித் தரையில்
விழுந்தான்.  மேல் துணியின் தலைப்பு பக்கத்திலிருந்த பூம்புதரில் சிக்கிக் கொண்டது.
விழுந்தவன் சமாளித்து எழுந்து உட்கார்ந்து அங்கவஸ்திரத்தை மெள்ள எடுக்க முயன்றான்.  
எத்தனையோ பகைவர்களும் சதிகாரர்களும் செய்ய முடியாத காரியத்தை இந்தச் சிறிய 
மரத்தின் வேர் செய்துவிட்டதே, நம்மைக் கீழே தள்ளி விட்டதே, இது ஏதேனும் 
அபசகுனத்துக்கு அறிகுறியோ, அல்லது நம்மை ஆபத்துக்கு உள்ளாக்காமல் இந்த மரவேர் 
தடுத்து ஆட்கொள்கிறதோ என்று எண்ணி வந்தியத்தேவன் தனக்குத்தானே புன்னகை புரிந்து 
கொண்டான்.
அச்சமயம், "அம்மா! அம்மா! எங்கே இருக்கிறீர்கள்?" என்ற குரல் கேட்டது.  அது
சந்திரமதியின் குரல்.  
"இங்கேதானடி இருக்கிறேன்.  அல்லிக் குளத்தின் அருகில் இருக்கிறேன்! சீக்கிரம்
வா!" என்றது மணிமேகலையின் குரல்.  
காலடிச் சத்தங்கள் கேட்டன;  காலில் அணியும் நூபுரங்களின் இனிய ஒலிகளும் 
கேட்டன.  
அல்லிக் குளம் என்று மணிமேகலை கூறியது அந்தப் பூங்காவனத்தின் மத்தியில் 
செய்குன்றத்தின் அருகில் இருந்த சிறிய பளிங்குக்கல் தடாகத்தைத்தான்.அந்தக் குளம் 
அல்லிப் பூவின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது.அதில் சில அல்லிக் கொடிகளும் 
செங்கழுநீர்க் கொடிகளும் இருந்தன.  அச்சமயம் சில மலர்களும் இருந்தன.  இந்த அல்லிக் 
குளத்தை முன்னமே வந்தியத்தேவன் பார்த்திருந்தான்.  அதன் அருகிலே தான் அவனும் 
விழுந்திருக்க வேண்டும்! நல்லவேளையாக, அப்பெண்கள் இருவரும் அவனைக் கவனிக்க
வில்லை.  பகல்வேளையாக இருந்து அவர்கள் அவன் விழுந்ததைப் பார்த்திருந்தால் 
கலகலவென்று சிரித்து அவனுடைய மானம் போகும்படி செய்திருப்பார்கள்.  இப்போது 
மணிமேகலையின் துணைக்குச் சந்திரமதி வந்து விட்டபடியால், அந்தப் பெண்களுக்குத் 
தெரியாமலேயே அவன் அங்கிருந்து நழுவிப் போய் விடலாம்.  
இதற்கிடையில் அந்தப் பெண்களின் பேச்சு அவன் காதில் விழுந்தது.
"அம்மா! எதைக் கண்டு பயந்தீர்கள்? ஏன் அப்படிக் கூச்சலிட்டீர்கள்?" என்றாள் 
சந்திரமதி.  
"அடியே! அந்த மதில் சுவரைப் பாரடி! அதன் மேலே ஏதோ தெரிந்தது.  தலையில் 
சடையும், முகத்தில் தாடியும் மீசையுமாக ஓர் உருவம் தெரிந்தது.  அதன் கழுத்தில் - சொல்லப்
பயமாயிருக்கிறதடி!- மண்டை ஓட்டு மாலை ஒன்று அணிந்திருந்தது! நான் கூச்சலிட்டதும் அது
மறைந்து விட்டது!" என்றாள் மணிமேகலை.
"நன்றாயிருக்கிறது, இளவரசி! தங்களுடைய மனப் பிராந்திதான் அது! பேயும் 
இல்லை, பிசாசும் இல்லை! இவ்வளவு உயரமான மதில் சுவரின் மேல் யாரும் வந்து 
உட்கார்ந்திருக்கவும் முடியாது" என்றாள் சந்திரமதி.  
"இல்லையடி! என் மனப் பிராந்தியில் அப்படிப் பேய் பிசாசு ஒன்றும் தோன்றுவது 
வழக்கமில்லை..." 
"ஆமாம்! மன்மதனையொத்த வடிவழகரின் முகந்தான் உங்கள் கனவிலும் நனவிலும்
தோன்றுவது வழக்கம்!" 
"சீச்சீ! இப்போதுகூட உனக்கு விளையாட்டா?" 
"பின் எப்போது விளையாடுவது? முன்மாலை நேரத்தில் பூங்காவனத்தில் அல்லிக் 
குளத்தினருகே வந்து காத்திருக்கிறீர்கள்!  முல்லை மலர்களின் மணம் கம்மென்று வீசுகிறது...
ஆனால், பாவம், என்ன செய்வது? தாங்கள் வல்லத்து இளவரசரை எதிர்பார்த்துக் 
கொண்டிருக்க, மீசையும் தாடியும் உள்ள பிசாசு வந்து சேருகிறது!" 
"போதும் போதாதற்கு நீயும் வந்து சேருகிறாய்!" 
"என்னைப் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பிசாசு பயந்து ஓடிவிட்டதோ, என்னமோ? 
கடம்பூர் அரண்மனைப் பணிப் பெண் சந்திரமதியைக் கண்டால் பேய் பிசாசுகள், பூதங்கள், 
வேதாளங்கள் எல்லாம் பயந்து ஓடும் என்பது உலகப் பிரசித்தியாயிற்றே!" 
"சந்திரமதி! உன் வேடிக்கைப் பேச்செல்லாம் இப்போது வேண்டாம்.  
உண்மையாகவே நான் மதில் சுவரின் மேல் கோரமான ஓர் உருவத்தைப் பார்த்தேன்.  நீ 
நம்பாவிட்டால் வேண்டாம்! நீ போன காரியம் என்ன ஆயிற்று என்று சொல்லு!" 
"போன காரியம் பலிக்கவில்லை, இளவரசி!" 
"ஏன்? ஏன்?" 
"காஞ்சி இளவரசரும் கடம்பூர் இளவரசருந்தான் அங்கே கூடிக் கூடிப் பேசிக் 
கொண்டிருக்கிறார்கள். வல்லத்து இளவரசரைக் காணவே காணோம்..." 
"ஒரு வேளை அவரையும் எங்கேயாவது அனுப்பி வைத்து விட்டார்களா, என்ன?" 
"அப்படியும் தெரியவில்லை.  தங்கள் தந்தையும் பல்லவருந்தான் மலையமான் 
அரசரை எதிர்கொள்ளப் போயிருக்கிறார்கள்.  இடும்பன்காரியைக் கேட்டேன்.  இன்று 
சாயங்காலம் கரிகாலர் வல்லத்தரசர் மீது ஏதோ எரிந்து விழுந்தாராம்!...  "
"அவருக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது. எல்லார் பேரிலும் எரிந்து விழுகிறார்.
பிறகு?..." 
" 'இன்றைக்கு இனிமேல் என் முகத்தில் விழிக்காதே! நாளைப் பொழுது விடிந்த 
பிறகு வா!' என்று சொல்லி அனுப்பி விட்டாராம்!" 
"பின்னர் அவர் எங்கே போயிருப்பார்?" என்றாள் மணிமேகலை.  
"இந்த மாளிகை மதில் சுவருக்குள்ளேதான் எங்கேயாவது அலைந்து கொண்டிருக்க 
வேண்டும்.  அதனால்தான் சொன்னேன்; ஒருவேளை அவரே பிசாசு போல் வேஷம் போட்டுக் 
கொண்டு தங்களைப் பயமுறுத்தினாரோ என்று." 
"இல்லை; இந்த அரண்மனையில் வேஷக்காரர்கள் பலர் இருப்பது எனக்குத் 
தெரியும்.  ஆனால் அவர் வேஷம் போட்டு ஏமாற்றுகிறவர் அல்ல..." 
"இப்படித்தான் நம்மைப் போன்ற அபலைப் பெண்கள் புருஷர்களை நம்பி ஏமாந்து 
போவது வழக்கம்."
"அப்படியேயிருக்கட்டும்.  நீ மறுபடியும் போய்த் தேடிப் பார்! அரண்மனை 
மதிளுக்குள்ளேதானே எங்கேயாவது இருக்க வேண்டும்? இடும்பன் காரியையும் தேடிப் 
பார்க்கச் சொல்லு!" 
"இளவரசி! அந்த இடும்பன் காரியைக் கண்டால் எனக்குப் பிடிக்கவேயில்லை.  
விழித்து விழித்துப் பார்க்கிறான்.  அவனிடம் எனக்குப் பயமாகக்கூட இருக்கிறது..." 
"பேய் பிசாசுக்குப் பயப்படாதவள் இடும்பன்காரிக்குப் பயப்படுகிறாயே? போனால் 
போகட்டும்.  அவனிடம் ஒன்றும் சொல்லமலிருப்பதே நல்லது.  நீயே இன்னொரு தடவை 
போய்த் தேடிப் பார்த்துவிட்டு வா!"
"அதுவரையில்..." 
"நான் இங்கேயே இருக்கிறேன்..."
 "மறுபடியும் அந்தப் பிசாசு இங்கு வந்தால்?..." 
"உன் பெயரைச் சொல்லி விரட்டியடித்து விடுகிறேன்!" 
சந்திரமதி அங்கிருந்து போவதற்கு அறிகுறியான நூபுரத்தின் மெல்லிய ஒலி 
கேட்டது.  
மேற்கூறிய சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனுடைய 
மனத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றின.  சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்த 'பிசாசு' 
யாராயிருக்கும் என்று யோசித்தான்.  ஆழ்வார்க்கடியான் காளாமுகனுடைய வேடம் தரித்து 
வந்து தன்னைக் காப்பாற்றியது அவன் நினைவுக்கு வந்தது.  ஒரு வேளை அந்த வீர 
வைஷ்ணவனாகவே இருக்குமோ? தஞ்சாவூரிலிருந்து தனக்கு ஏதேனும் முக்கியமான 
செய்தியுடன் வந்திருக்கிறானோ? இங்குள்ளவர்களுக்கு அடையாளம் தெரியாமலிருக்க அப்படி
வேஷம் தரித்து வந்திருக்கிறானோ? 
மணிமேகலை தன்னைப் பார்க்க இவ்வளவு ஆவல் கொண்டிருப்பதின் காரணம் 
என்ன? எதற்காகத் தோழியை அனுப்பித் தேடி அழைத்துக்கொண்டு வரச் சொல்கிறாள்? அவன்
விஷயத்தில் மணிமேகலையின் மனோநிலை அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. 
அதனாலேயே அவள் அருகில் அதிகமாக நெருங்காமலிருந்து வந்தான். கந்தமாறனுடைய 
பகைமையை இன்னும் தூண்டிவிடாமலிருக்கவும் விரும்பினான்.  ஆயினும், இப்போது 
நந்தவனத்தில் வந்து தனிமையாக உட்கார்ந்துகொண்டு அவனை அழைத்து வரச் 
சொல்லியிருக்கிறாள்.  ஏதோ முக்கியமான காரியம் இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலான 
காரியத்தில் இறங்கியிருக்க மாட்டாள்.  பாவம்! அவளுக்கும் ஏதாவது சங்கடம் 
நேர்ந்திருக்கிறதோ, என்னமோ? அல்லது நந்தினி அவளிடம் ஏதாவது செய்தி சொல்லி 
அனுப்பியிருக்கலாம்.  கடவுளே! இங்கே, இந்தக் கடம்பூர் அரண்மனையில் உள்ளவர்கள்
ஒவ்வொருவரும் மனத்தில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.சற்று 
முன்னால் மணிமேகலை கூறியது ரொம்ப உண்மை.  எல்லாருமே வஞ்சக வேஷதாரிகள்.  
இவர்களுக்கு மத்தியில் இந்தப் பேதைப் பெண் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறாள்.  
பழுவூர் ராணி இந்தப் பெண்ணை எந்தத் தீய காரியத்துக்குப் பயன்படுத்தத் 
திட்டமிட்டிருக்கிறார்களோ, தெரியவில்லை.  ஆம்; மணிமேகலையின் மனத்தில் ஏதோ 
சந்தேகம் தோன்றியிருக்கவேண்டும்.  ஏதோ ஓர் அபாயத்தை அவள் எதிர்பார்த்திருக்க
வேண்டும்.  ஆகையினாலேயே அவள் தன்னுடைய உதவியை நாடுகிறாள்.  
அந்தக் கள்ளங் கபடமற்ற பேதைப் பெண் முன்னொரு சமயம் தனக்குச் செய்த 
உதவியை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்துக்கொண்டான். அவளுக்கு உண்மையாகவே 
ஏதேனும் துன்பம் நேர்ந்திருந்து தன்னுடைய உதவியைக் கோருவதாயிருந்தால், அதை மறுப்பது
நன்றி கொன்ற பாதகம்.  எப்படியிருந்தாலும் உண்மையைத் தெரிந்து கொள்ளுவதற்கு இது ஒரு
நல்ல சந்தர்ப்பம்.  சந்திரமதி போய்விட்டாள்; மணிமேகலை தனியாக இருக்கிறாள்.  யார் 
கண்டது? அவளுடைய உதவி அவனுக்கு மறுபடியும் தேவையாயிருக்கக் கூடும்.  அவளுடைய
சகாயத்தினால் இந்தச் சூழ்ச்சி குடிகொண்ட அரண்மனையை விட்டுப்போக முடிந்தால்கூட நல்லதுதான்.  எதற்கும்
அவளிடம் இச்சமயம் போய்க் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்....
அல்லிக் குளத்தின் கரையிலிருந்த பளிங்குக்கல் மேடையில் மணிமேகலை 
உட்கார்ந்திருந்தாள்.  மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தில் ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் 
சுடர் விட்டு ஒளிர்ந்தது போல் அல்லிக்குளத்திலும் அடர்த்தியாகப் படர்ந்திருந்த 
இலைகளுக்கு மத்தியில் மலர்கள் தலை தூக்கி நின்றன.  சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளில், 
இரவில் பூக்கும் அம்மலர்களின் வெண்மை நிறம் நன்கு எடுத்துக் காட்டப்பட்டது.  அல்லிக்
குளத்துக்கு அப்பால் முல்லைப் புதர்களில் பாதி மலர்ந்த பூக்களும் மொட்டுக்களும் நீல நிற 
விதானத்தில் முத்துக்களைப் பதித்ததுபோல் காட்சி தந்தன.   
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை தனக்குப் பின்னால் காலடிச் சத்தம் 
கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.  மிகச் சமீபத்தில் வந்திருந்த உருவத்தைக் கண்டு
அவசரமாக எழுந்தபோது கால் தடுமாறிப் பின்னாலிருந்த குளத்தில் விழப் போனாள்.  
"ராஜகுமாரி! நான்தான்!" என்று கூறிக் கொண்டே வந்தியத்தேவன் 
மணிமேகலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.  
மணிமேகலையின் உடல் சிலிர்த்தது.  இயற்கையாக ஏற்பட்ட கூச்சத்தினால் 
அவனுடைய கரங்களைப் பற்றி அப்பால் தள்ளிவிட்டுத் தன்னை விடுவித்துக் கொள்ளப் 
பார்த்தாள்.  ஆனால் அதற்கு வேண்டிய பலம் அப்போது அவளுடைய கரங்களில் இல்லை! 
அந்த முயற்சியில் மறுபடியும் பின்னாலேதான் சாயும்படி நேர்ந்தது.  
வந்தியத்தேவன் இன்னும் கெட்டியாக அவளைப் பிடித்துத் தாங்கி முன் பக்கமாகக் 
கொண்டு வந்தான். 
மணிமேகலை ஒரு பெருமுயற்சி செய்து தன்னைச் சுதாரித்துக் கொண்டு, "விடுங்கள்!
என்னைத் தொடாதீர்கள்!" என்று கோபக்குரலில் கூறினாள்.
வந்தியத்தேவன் அவளைவிட்டு விட்டு, "ராஜகுமாரி!" மன்னிக்க வேண்டும்!" என்றான்.
மணிமேகலை இன்னமும் பட படப்பு நீங்காத தழுதழுத்த குரலில், "தங்களை நான்
எதற்காக மன்னிக்க வேண்டும்?" என்று கேட்டாள்.  
"திடீரென்று வந்து தங்களைத் திடுக்கிடச்செய்ததற்காகத்தான்!" 
"வந்ததுதான் வந்தீர்கள்! எதற்காக என்னைத் தொட்டுப் பிடித்துக்கொள்ள
வேண்டும்?" என்று மணிமேகலை கேட்ட குரலில், அவள் தன்னை நன்றாகச் சுதாரித்துக் 
கொண்டு விட்டாள் என்பது வெளியாயிற்று.
"தாங்கள் குளத்தில் விழாமல் பிடித்துக் கொண்டேன்!" 
"அழகாயிருக்கிறது! அன்று ஏரியில் விழுந்து நான் முழுகித் தத்தளித்தபோது 
இவ்வளவு பரிவு காட்டவில்லையே? இந்த முழங்கால் அளவு தண்ணீர் உள்ள குளத்தில் நான் 
விழாமல் காப்பாற்றுவதற்கு வந்து விட்டீர்களே?" 
"அது என் குற்றந்தான்!" 
"நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. குற்றமெல்லாம் என்னுடையதுதான்." 
"அது எப்படி? தாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை.  என் பேரில் ஏதோ 
கோபத்தினால் இவ்விதமாகச் சொல்லுகிறீர்கள்!" 
"முன்னொரு நாள் தாங்கள் வேட்டை மண்டபத்துக்குள்ளிருந்து திடீரென்று நான் 
இருந்த அறையில் புகுந்தீர்கள்.  அன்றைக்கும் என்னைத் திடுக்கிட வைத்தீர்கள்.  அப்போதே 
நான் கூக்குரலிட்டுத் தங்களை என் தந்தையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும்!" 
"அன்றைக்கு என்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினீர்கள். அதை 
என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்."  
"அதற்குப் பதில் தாங்கள் நன்றி செலுத்திய விதத்தை நானும் மறக்கமாட்டேன். 
நன்றிகெட்டவர்களிலே தங்களைப் போல நான் பார்த்ததே இல்லை..." 
"இளவரசி! இது பெரிய அபாண்டம்! எந்த விதத்தில் நான் நன்றி கெட்டவன்? 
சொல்லுங்கள்!" 
"தங்களை யாரோ கொலைகாரர்கள் துரத்தி வருவதாகப் பொய் சொன்னீர்கள். நான் 
வேட்டை மண்டபத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வருவதற்குள் என்னிடம் சொல்லிக் 
கொள்ளாமலே திருடனைப் போல் ஓடிவிட்டீர்கள்!" 
"திருடனைப் போல் ஓடி விட்டேன் என்றா சொன்னீர்கள்?" 
"திருடனைப் போல் என்று கூறியது தவறு; திருடனே தான்!" 
"இளவரசி அன்று நான் எவ்வளவு இக்கட்டான நிலைமையிலிருந்தேன் என்பது 
தங்களுக்குத் தெரியாது..." 
"தெரியாதவர்களுக்குத் தாங்கள் தெரியப்படுத்தியிருக்கலாமே? யார் வேண்டாம் என்று
தடுத்தார்கள்?" 
"தங்கள் தோழி சந்திரமதிதான்.  தாங்கள் வேட்டை மண்டபத்துக்குள் சென்றதும் 
சந்திரமதி இன்னொரு வாசல் வழியாக வந்துவிட்டாள். அவள் கண்களில் படாமல் இருப்பதற்காக
யாழ்க் களஞ்சியத்தில் மறைந்து கொண்டேன்."
"பிறகு அங்கிருந்து மாயமாய் மறைந்து போய் விட்டீர்கள்!" 
"இல்லை; மச்சுப்படி ஏறி மாடங்களை யெல்லாம் தாண்டி மதில் சுவர் மேலும் ஏறிக்
குதித்துத்தான் போனேன்.  இளவரசி! அன்று என்னை யாராவது கண்டுபிடித்திருந்தால், நான் 
ஏற்றுக் கொண்டிருந்த காரியமும் கெட்டிருக்கும்; தங்களுக்கும் வசைச் சொல் 
ஏற்பட்டிருக்கும்..." 
"இந்தப் பேதைப் பெண்ணைப் பற்றித் தங்களுக்கு எவ்வளவு கவலை?" 
"உண்மையாகவே கவலைதான்!" 
"அப்படியானால், இங்கே தாங்கள் திரும்பி வந்து இத்தனை நாள் ஆயிற்றே? 
சொல்லாமல் ஓடிப்போன காரணத்தைச் சொல்லியிருக்கலாமே?..." 
"அதற்குச் சந்தர்ப்பத்தைதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..." 
"ஏன், ஐயா, வெறும் வார்த்தை? நான் இருக்கும் திக்கையே தாங்கள் திரும்பிப் 
பார்ப்பது கிடையாதே?" 
"சகோதரி!..." 
"நான் தங்கள் சகோதரி அல்ல!" 
"தாங்கள் என் சிநேகிதன் கந்தமாறனுடைய சகோதரி; ஆகையால் எனக்கும் 
சகோதரி." 
"கந்தமாறன் என்னுடைய சகோதரன் அல்ல; தங்களுக்கு அவன் சிநேகிதனும் அல்ல.
நம் இருவருக்கும் அவன் கொடிய பகைவன்..." 
"இளவரசி! அதுதான் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! சிலநாள் முன் வரையில் 
கந்தமாறன் என் உயிருக்குயிரான நண்பனாக இருந்தான்.  இப்போது அடியோடு மாறிப் 
போயிருக்கிறான். பார்த்திபேந்திரன் எப்போது என் தலைக்கு உலை வைக்கலாம் என்று 
பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஆதித்த கரிகாலரோ நிமிஷதுக்கு நிமிஷம் மாறுகிறார்.  இந்த 
நிமிஷம் அன்பாகப் பேசுகிறார்; அடுத்த நிமிஷம் எரிந்து விழுகிறார். எப்போது என்ன ஆபத்து 
வருமோ என்று எதிர்பார்த்துக் காலங்கழிக்கிறேன்.  இந்த நிலைமையில் என்னுடைய 
நன்றியைச் செலுத்துவற்காகத் தங்களை நான் தேடிவந்தால்.." 
"ஐயா! தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் தாங்கள் இவ்வளவு ஊக்கமாயிருப்பது 
பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...!" 
"இளவரசி என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை.  என் உயிரைப் பற்றியும் 
கவலைப்படவில்லை.  தங்களுக்கு என்னால் தீங்கு எதுவும் நேராமலிருக்க வேண்டும் என்று 
தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்." 
"கவலைப்பட்டு உருகிக் கொண்டே இருக்கிறீர்கள்.  ஆண் மக்கள் எல்லாருமே 
வஞ்சகர்கள் என்று சந்திரமதி சொல்லுவாள்.  அது உண்மை என்று இப்போதுதான் 
நிச்சயமாகிறது." 
"யார் என்ன சொன்னாலும் சரிதான்;  என் உயிர் உள்ள வரையில் தங்களை நான் 
மறக்கமாட்டேன்! தாங்கள் எனக்குச் செய்த உதவியையும் மறக்கமாட்டேன்!" 
மணிமேகலை சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, "ஐயா! இப்போது தாங்கள் 
சொன்னதை இன்னொரு தடவை சொல்லுங்கள்!" என்றாள்.  
"ஆயிரம் தடவை வேண்டுமானாலும் சொல்கிறேன்.  என் உயிர் உள்ளவரையில் 
தாங்கள் செய்த உதவியை மறக்கமாட்டேன்!" என்று வந்தியத்தேவன் உறுதியுடன் கூறினான். 
"ஆயிரம் தடவை சொன்னால் மட்டும் என்ன பயன்? அதை நிறைவேற்ற முயற்சி 
எடுக்க வேண்டும் அல்லவா?" 
"எந்த விதத்தில் முயற்சி எடுப்பது? சொல்லுங்கள், இளவரசி!" 
"தங்கள் உயிர் உள்ளவரையிலேதான் எனக்கு நன்றி செலுத்துவீர்கள்? ஆகையால்,
தங்கள் உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், தங்களுக்காக இல்லாவிட்டாலும், 
எனக்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!" 
"இளவரசி! இது என்ன?..." 
"ஐயா! உண்மையைச் சொல்லுங்கள்! சற்று முன்னால் நானும் என் தோழியும் பேசிக் 
கொண்டிருந்ததைத் தாங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?" 
"மன்னிக்க வேண்டும், இளவரசி! 'ஐயோ பிசாசு!' என்று தாங்கள் கூவியதைக் கேட்டு 
ஓடிவந்தேன்.  அதற்குள் தங்கள் தோழி சந்திரமதி வந்துவிட்டாள்.  உங்களுடைய பேச்சைக்
கேட்கும்படி நேர்ந்துவிட்டது..." 
"தங்களை எப்படியாவது தேடிப்பிடித்து அழைத்து வரும் படி அவளை நான் அனுப்பியது 
தெரியும் அல்லவா?" 
"காதில் விழுந்து; அதனாலேதான் தங்களை அணுகி வந்தேன்..." 
"இல்லாவிடில் என் அருகிலும் வந்திருக்க மாட்டீர்கள்.  அடடா! என்ன கரிசனம்? 
போனால் போகட்டும்.  தாங்கள் எவ்வளவு கல்நெஞ்சராயிருந்தாலும் என் மனம் கேட்கவில்லை.  
தங்களுக்கு ஆபத்து என்றால், நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை." 
"இளவரசி! என்னுடைய ஆபத்தான நிலைமை எனக்குத் தெரிந்தேயிருக்கிறது.  
எனக்குத் தெரியாத புதிய ஆபத்து ஏதேனும் வரப்போகிறதா?" 
"ஐயா! இந்த அரண்மனையை விட்டுத் தாங்கள் உடனே போய்விடுங்கள்!" 
"என்னைப் புறங்காட்டி ஓடச் சொல்கிறீர்களா?" 
"போர்க்களத்தில் புறங்காட்டி ஓடக் கூடாது. சதிகாரர்களிடமிருந்து தப்பிச் 
செல்வதில் குற்றம் என்ன?" 
"யார் சதிகாரர்கள்?" 
"வேறு யார்? கந்தமாறனும் பார்த்திபேந்திரனுந்தான்." 
"அவர்களுக்குப் பயந்து நான் இந்த அரண்மனையை விட்டு ஓட முடியாது." 
"என் தமையனால் தங்களுக்குத் தீங்கு நேர்வதை அறிந்து, நான் அதைச் சகித்துக் 
கொண்டிருக்க முடியாது." 
"இளவரசி! கந்தமாறனுடைய காரியங்களுக்குத் தாங்கள் எப்படிப் பொறுப்பு 
ஆவீர்கள்?" 
"என் காரணமாகவே அவனும் பார்த்திபேந்திரனும் தங்களுக்குத் தீங்கு இழைக்கப் 
பார்க்கிறார்கள்...." 
"தங்களுக்காக நான் துன்பம் அடைந்தால் அது என் பாக்கியம்.  தாங்கள் செய்த 
உதவிக்குப் பிரதி செய்ததாக எண்ணிக் கொள்வேன்..." 
"நந்தனி தேவி கூறியது சரிதான்!"
"ஆகா! பழுவூர் ராணி தங்களிடம் என்ன கூறினாள்?"
"உங்களிடம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்படிச் சொன்னால், கேட்கமாட்டீர்கள்;
- வேறு யுக்தி செய்ய வேண்டும் என்றார்.  ஐயா! தயவுசெய்து தாங்கள் என்னுடன் வாருங்கள்.
பழுவூர் ராணி தங்களை ஏதோ ஓர் அவசர காரியமாகப் பார்க்க வேண்டுமாம்." 
"அந்த அவசரமான காரியம் என்னவென்பது தங்களுக்குத் தெரியும் அல்லவா?" 
"தெரியும்; பழுவேட்டரையர் கொள்ளிடத்தைத் தாண்டும் போது படகு கவிழ்ந்து 
போய்விட்டதாக ஒருசெய்தி வந்திருக்கிறது..." 
"நானும் கேள்விப்பட்டேன்!" 
"தாங்கள் உடனே போய் அதைப்பற்றியே உண்மையைத் தெரிந்துகொண்டு 
வரவேண்டுமாம். அவ்விதம் தங்களிடம் பழுவூர் ராணி நேரில் கேட்டுக் கொள்ளப்போகிறார்." 
வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "இதையெல்லாம் என்னிடம் முன்னால் கூற 
வேண்டாம் என்று பழுவூர் ராணி எச்சரிக்கவில்லையா?" என்றான்.  
"ஆமாம்!" 
"பின் ஏன் இதைப்பற்றி என்னிடம் சொன்னீர்கள்?" 
"என் மனம் குழம்பியிருப்பதுதான் காரணம்.  ஐயா! சில நாளைக்கு முன்னால் வரையில்
நான் கள்ளங் கபடமறியாத பெண்ணாயிருந்தேன்.  யாரைப் பற்றியும் எந்தவிதமான சந்தேகமும் 
கொண்டதில்லை.  யாரைப் பற்றியேனும் என் தோழிகள் குறை சொன்னாலும் நம்புவதில்லை. 
இப்போது எல்லாரையும் சந்தேகிக்கிறேன்; எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன்." 
"என் முகத்தில் விழித்த நேரத்தினால் ஏற்பட்ட விபரீதம் போலிருக்கிறது."
"ஒரு விதத்தில் அது உண்மைதான். பழுவூர் இளையராணி தங்களை அழைத்து 
வரும்படி எனக்குச் சொல்லி அனுப்பினார்.  அவருடன் பேசும்போது ஒரு சந்தேகமும் 
தோன்றவில்லை.  எல்லாம் சரியென்று தோன்றியது....  இப்பால் வந்ததும் அவர் பேரிலேயே 
சந்தேகம் ஏற்படுகிறது." 
"என்ன சந்தேகம், இளவரசி? நந்தினிதேவியின் பேரில் தங்களுக்கு என்ன 
சந்தேகம்?" 
"அவரும் சேர்ந்து தங்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுகிறாரோ என்றுதான்." 
"இந்தச் சந்தேகம் ஏன் வந்தது? அவர் எனக்கு என்ன தீங்கு செய்யமுடியும்?" 
"அதுவும் என்னால் சொல்ல முடியாது.  ஆனால் அவருடைய பேச்சும் 
நடவடிக்கைகளும் யோசித்துப் பார்த்தால் சந்தேகம் உண்டாக்குகின்றன.  அடிக்கடி ஒரு நீண்ட
வாளைக் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்..." 
"ஒரு பெண்ணின் கையில் உள்ள வாளைக் கண்டு நான் அஞ்சுவதில்லை.  
அதைக்காட்டிலும்..."
"முகத்திலுள்ள கண்களாகிற வாள்களுக்கு அஞ்சுவீர்கள்.  எல்லாரும் சொல்லும் 
கதைதான் இது. ஐயா! நந்தினி தேவியின் வாளுக்கு மட்டும் தங்களை நான் பயப்படச் 
சொல்லவில்லை.  முதன் முதலில் தாங்கள் வேட்டை மண்டபத்திலிருந்து நான் இருந்த 
அறைக்குள் வந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்..." 
"நன்றாக ஞாபகம் இருக்கிறது..." 
"கொலைகாரர்கள் சிலர் தங்களைத் தொடர்ந்து வந்ததாகச் சொன்னீர்கள்.  முதலில் 
அதை நான் நம்பவில்லை.  பிறகு வேட்டை மண்டபத்துக்குள் போய்ப் பார்த்தேன். அங்குள்ள 
மிருகங்களுக்குப் பின்னால் சிலர் மறைந்திருப்பதாகத் தோன்றியது.  அவர்கள் தங்களைக் 
கொல்ல வந்தவர்களா, அல்லது தங்களுடனேயே வந்தவர்களா என்று அப்போது என்னால் 
நிச்சயிக்க முடியவில்லை.  அவர்களைப் பற்றிச் சொன்னால், தங்களைப் பற்றியும் சொல்ல 
வேண்டியதாகும் அல்லவா?" 
"எனக்குத் தாங்கள் செய்த பேருதவி எவ்வளவு என்பதை இப்போதுதான் நன்கு 
உணர்ந்துகொள்கிறேன்."
"அதற்காக நான் அந்த விஷயத்தை இப்போது சொல்லவில்லை.  சற்று முன்னால் 
நந்தினி தேவி தங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்.  உடனே, ஏதோ அவரிடம் 
கேட்பதற்காகத் திரும்பிப் போனேன்.  கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தார்.  உள்ளே, வேட்டை
மண்டபத்திலிருந்து பேச்சுக் குரல்கள் இலேசாகக் கேட்டன. ஐயா! என் சந்தேகத்தைத் 
தங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன்.  வேட்டை மண்டபத்தில் யாரோ ஆள்கள் வந்து 
ஒளிந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.  அவர்களுக்கும் பழுவூர் ராணிக்கும் ஏதோ 
சம்பந்தம் இருக்கவேண்டும் என்றும் சந்தேகிக்கிறேன்." 
வந்தியத்தேவன் இப்போதுதான் நிலைமையின் முக்கியத்தை நன்கு உணர்ந்தான்.  
இன்று ஏதோ விபரீத சம்பவம் நிகழப்போகிறது என்பதாக அவன் உள்ளுணர்ச்சி அவனுக்குச் 
சொல்லிக் கொண்டேயிருந்தது. மணிமேகலை கூறிய செய்திகள் அவன் உள்ளுணர்ச்சியை 
உறுதிப்படுத்தின.  
"இளவரசி! எனக்குத் தாங்கள் ஓர் உதவி அவசியம் செய்யவேண்டும்!" 
"என்னவென்று சொல்லுங்கள்!" 
"வேட்டை மண்டபத்துக்கு, வெளியிலிருந்து சுரங்கப் பாதை மூலமாக வரும் வழி 
ஒன்றிருக்கிறது.  இப்போது நந்தினி தேவி இருக்கும் அறை வழியாகப் போவதற்கும் ஒரு வாசல்
இருக்கிறது. இவற்றைத் தவிர மூன்றாவது வழி ஒன்று இருக்கிறதல்லவா?" 
"ஆமாம்; வேலைக்காரர்கள் போவதற்கென்று ஒரு வழி இருக்கிறது.  
அரண்மனைக்குப் புதிதாக வரும் விருந்தாளிகளை அந்த வழியாகத்தான் என் தந்தை அழைத்துப்
போவது வழக்கம்..." 
"இளவரசி! அந்த வழியாக என்னை இப்போதே வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் 
போங்கள்!" 
"எதற்காக?" 
"அங்கே வந்து ஒளிந்திருப்பவர்கள் யார், அவர்கள் என்ன நோக்கத்துடனே 
 வந்திிருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்குத் தான்..." 
"தாங்களை அபாயத்திலிருந்து தப்புவிக்க வந்தேன்.  அபாயத்துக்கே இட்டுச் 
செல்லும்படி கேட்கிறீர்கள்...." 
"என் இடையில் எப்போதும் கத்தி இருக்கிறது,  இளவரசி! தெரியாமல் வரும்
அபாயத்தைக் காட்டிலும் தெரிந்த அபாயத்தை எதிர்ப்பது எளிது.  அபாயத்தை நாமே எதிர் 
கொண்டு போவது இன்னும் மேலானது." 
"ஒரு நிபந்தனைக்குச் சம்மதித்தால் தங்களை வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் 
போவேன்."
"அது என்ன?" 
"நானும் தங்களுடன் வருவேன்; என் இடையிலும் ஒரு சிறிய கத்தி வைத்துக் 
கொண்டிருக்கிறேன்!" என்று மணிமேகலை தன்னுடைய கத்தியை எடுத்துக் காட்டினாள்.  
வந்தியத்தேவன் அதற்குச் சம்மதம் கொடுத்தான்.  
"அப்படியானால் சீக்கிரம் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்.  சந்திரமதி இங்கே
என்னைத் தேடி வருவதற்குள் போய்விட வேண்டும்" என்றாள்.  
நந்தவனத்தைக் கடந்து வந்தியத்தேவனை மணிமேகலை அழைத்துச் சென்றாள்.  
பிறகு, மாளிகையின் ஓரமாகச் சுவர்களின் கரிய நிழல் அடர்ந்திருந்த இடங்களின் வழியாக 
அழைத்துச் சென்றாள்.  பிறகு மாளிகையில் புகுந்து ஜன சஞ்சாரம் இல்லாத தாழ்வாரங்கள், 
நடைபாதைகள் வழியாக அழைத்துச் சென்றாள்.  பின்னர், கதவு சாத்தப்பட்டிருந்த ஒரு 
வாசற்படியின் அருகில் வந்தாள்.  அங்கேயே வந்தியத்தேவனை நிற்கச் செய்துவிட்டு விரைந்து 
சென்று ஒரு கை விளக்கை எடுத்து வந்தாள்.  கதவைத் திறந்து உள்ளே விளக்கைத் தூக்கிக் 
காட்டியபோது வரிசையாகப் படிக்கட்டுக்கள் அமைந்த குறுகிய நடைபாதை காணப்பட்டது. 
இருவரும் அப்படிகளில் இறங்கிச் சென்றார்கள்.  சிறிது நேரம் சென்ற பிறகு, முன்னால் சென்ற 
மணிமேகலை சட்டென்று நின்று, மெல்லிய குரலில், "நில்லுங்கள்! ஏதோ காலடிச் சத்தம் 
போலிருக்கிறது.  தங்களுக்குக் கேட்கிறதா?" என்றாள்.  
பக்க தலைப்பு
முப்பத்தைந்தாம்  அத்தியாயம் 
குரங்குப்  பிடி 
வந்தியத்தேவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். ஒரு நிமிட நேரம் காலடிச் 
சத்தம் கேட்பது போலிருந்தது.  சட்டென்று அது நின்றது.  மறுபடியும் கேட்டது.  இப்போது 
அந்தச் சத்தம் பின்னோக்கிச் செல்வதுபோல் வரவரக் குறைந்தது.  
"ஐயா! மேலே போகத்தான் வேண்டுமா? திரும்பிவிடுவது நல்லதல்லவா?" என்றாள் 
மணிமேகலை.  
"இளவரசி! முன் வைத்த காலைப் பின் வைப்பது எனக்கு வழக்கமில்லை!" என்றான் 
வல்லவரையன். 
"பிடித்தால், குரங்குப் பிடிதான் என்று சொல்லுங்கள்!" 
"முன்னொரு தடவை தங்கள் தோழி சந்திரமதி என்னைக் 'குரங்கு மூஞ்சி' என்று 
வர்ணித்தாள் அல்லவா? முகத்திற்கேற்பத்தானே பிடியும் இருக்கும்?" 
இவ்விதம் சொல்லிக்கொண்டே வந்தியத்தேவன், இது காறும் மணிமேகலையின் 
பின்னால் வந்து கொண்டிருந்தவன், அவளைத் தாண்டிக்கொண்டு முன்னால் போக முயற்சித்தான். 
அதை மணிமேகலை தடுக்கப் பார்த்தாள்.  
இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டார்கள்.  மணிமேகலையின் 
கையிலிருந்த விளக்கு தடால் என்று விழுந்தது.  இரண்டு மூன்று படிகள் தடதடவென்று உருண்டு 
சென்று அணைந்துவிட்டது. பின்னர் அந்த மேடு பள்ளமான நடைபாதையில் காரிருள் சூழ்ந்தது.  
"இளவரசி! இது என்ன இப்படிச் செய்தீர்கள்?" என்றான் வல்லவரையன்.  
"தாங்கள் ஏன் என்னைத் தாண்டிக்கொண்டு முன்னால் போகப் பார்த்தீர்கள்?" என்றாள் 
மணிமேகலை.  
"அபாயம் நேரும்போது முன்னால் பெண்களை விட்டுக் கொண்டு போகும் வழக்கம் 
எனக்கு இல்லை!" என்றான் வந்தியத்தேவன்.  
"தங்களுக்கு எது எது வழக்கம், எது எது வழக்கமில்லை என்று ஒருமிக்க எனக்குத்
தெரிவித்துவிட்டால் நலமாயிருக்கும்.  அதற்குத் தகுந்தபடி நானும் நடந்து கொள்வேன்."
"ஆகட்டும், அம்மணி! அவகாசம் கிடைக்கும்போது சொல்கிறேன்." 
"இப்போது அவகாசம் இல்லாமல் என்ன? வாருங்கள், திரும்பி நந்தவனத்துக்குப் 
போகலாம்.  அங்கே சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு சொல்லுங்கள்." 
"இருட்டில் வருவதற்குத் தங்களுக்குப் பயமாயிருந்தால் திரும்பிச் செல்லுங்கள்!..." 
"தங்களைப் போன்ற வீரர் அருகில் இருக்கும்போது எனக்கு என்ன பயம்?" 
"பின்னே வாருங்கள், போகலாம்! வழியில் நிற்பதில் என்ன பயன்?" 
இவ்வாறு சொல்லிக் கொண்டே முன்னால் போகப் பார்த்த வந்தியத்தேவன் கால் 
தடுக்கி விழப் பார்த்தான்.  மணிமேகலை அவன் விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். 
"ஐயா! இந்த வழியில் மேடு பள்ளங்கள் அதிகம்.  படிகள் எங்கே, சமபாதை எங்கே 
என்று இருட்டில் கண்டுபிடிக்க முடியாது.  நான் இந்த வழியில் எத்தனையோ தடவை 
போயிருக்கிறேன். படிகள், திருப்பங்கள் உள்ள இடமெல்லாம் நன்றாய்த் தெரியும்.  ஆகையால்,
தாங்கள் எவ்வளவு சூராதி சூரராக இருந்தபோதிலும், என் கையைப் பிடித்துக்கொண்டு பின்னால்
வருவது நல்லது.  இல்லாவிட்டால் வேட்டை மண்டபம் போய்ச் சேர மாட்டீர்கள்.  வழியில் கால்
ஓடிந்து விழுந்து கிடப்பீர்கள்!" என்றாள் மணிமேகலை.
"இளவரசி! தங்கள் கட்டளைப்படியே நடந்து கொள்கிறேன்.  வந்தனம்!" என்றான் 
வந்தியத்தேவன். 
இருட்டில் மணிமேகலை வல்லவரையனுடைய ஒரு கரத்தைப் பற்றிக்கொண்டாள். 
வந்தியத்தேவனுடைய கரம் ஜில்லிட்டிருந்ததைத் தெரிந்துகொண்டாள்.  'இவர் பகைவர்களுக்கு 
அஞ்சாதவர்; சதிகாரர்களுக்கும் பயப்படாதவர்; இந்தப் பேதைப் பெண்ணின் கையைப் 
பிடிப்பதற்கு இவ்விதம் ஏன் பயப்படுகிறார்?' என்று அவள் உள்ளம் எண்ணமிட்டது.
சிறிது தூரம் இருவரும் மௌனமாகச் சென்றார்கள்.  வந்தியத்தேவன் அடிக்கடி தடுமாறி
விழப் பார்த்தான்.  ஒவ்வொரு தடவையும் அவன் விழுந்துவிடாமலிருக்கும் பொருட்டு மணிமேகலை
அவனுடைய கையை இறுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டி நேர்ந்தது.  
"நரகத்துக்குப்போகும் வழி இப்படித்தான் இருள் அடர்ந்திருக்கும்!" என்று சொன்னான்
வந்தியத்தேவன்.  
"ஓகோ! தாங்கள் நரகத்துக்குப் போய்விட்டு வந்திருக்கிறீர்கள?" என்று மணிமேகலை 
கேட்டாள்.  
"நான் நரகத்துக்கும் போனதில்லை; சொர்க்கத்துக்கும் போனதில்லை.  பெரியோர்கள்
சொல்லியிருக்கிறார்கள்!" 
"அவர்களுக்கு அவர்களுடைய பெரியோர்கள் சொல்லியிருப்பார்கள்!" 
சில காலத்துக்கு முன்பு வரையில் நாலு பேருக்கு முன்னால் வருவதற்குக் கூடக் 
கூச்சப் பட்டுக்கொண்டிருந்த இந்தப் பெண், இவ்வளவு வாசாலகமுள்ளவள் ஆனது எப்படி என்று 
வந்தியத்தேவன் சிந்தித்துப் பார்த்தான்.  
"நரகத்துப் போகும் வழிதான் இருட்டாயிருக்கும்; சொர்க்கத்துக்குப் போகும் வழி 
எப்படியிருக்குமாம்?" என்றாள் மணிமேகலை.
"ஒரே ஜோதி மயமாயிருக்குமாம்! கோடி சூரியப் பிரகாசமாயிருக்குமாம்!" 
"அப்படியானால் நரகத்துக்குப் போகும் வழிதான் எனக்குப் பிடிக்கும்! ஒரு சூரியனே
கண்ணைக் கூசப் பண்ணுகிறது!  கோடி சூரியனுடைய வெளிச்சம் கண்ணைக் குருடாக்கி 
விடுமே!" என்றாள் மணிமேகலை.  
"நரகத்துக்குப் போகும் வழியாகப் போனால் முடிவில் நரகத்துக்குத்தானே போய்ச்
சேரும்படியிருக்கும்?" என்றான் வல்லவரையன்.
"தங்களைப்போன்ற வீர புருஷரைத் தொடர்ந்து போனால், நரகப்பாதை வழியாகச் 
சொர்க்கத்துக்குப் போனாலும் போகலாம்!" என்றாள் மணிமேகலை. 
"தங்களைப்போன்ற இளவரசியின் கையைப் பிடித்துக் கொண்டு போனால், நரகமே 
சொர்க்கம் ஆகிவிடும்!" என்றான் வந்தியத்தேவன்.  
உடனே உதட்டைக் கடித்துக்கொண்டு 'இப்படிச் சொல்லி விட்டோமே? இந்தப் 
பெண் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறாளே?' என்று கவலை கொண்டான்.  
"தங்களுடைய கரம் ஜில்லிட்டிருப்பதைப் பார்த்தால், தாங்கள் சொர்க்கத்துக்குப் 
போகிறவராக எண்ண இடமில்லை.  கொலைக் களத்துக்குப் போகிறவரைப்போல் தங்கள் 
உடம்பு நடுங்குகிறது!" என்றாள் மணிமேகலை.  
"இளவரசி! இந்த பிரயாணத்தின் முடிவில் எனக்குக் கொலைக்களந்தான் 
காத்திருக்கிறதோ, என்னமோ?" 
"தாங்கள் தானே முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்று பிடிவாதம் 
பிடிக்கிறீர்கள்? வேட்டை மண்டபத்தில் எத்தனை கொலைக்காரர்கள் இருக்கிறார்களோ,
என்னமோ?" 
"அவர்கள் எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கட்டும்; அவர்களுக்கு நான் 
பயப்படவில்லை.  தாங்களும் நானும் இப்படிக் கை கோத்துக்கொண்டு இருட்டில் போவதைக் 
கந்தமாறன் பார்த்துவிட்டால்... அதைப்பற்றித்தான் யோசனை செய்கிறேன்." 
"ஐயா! நான் உயிரோடிருக்கும் வரையில் என் தமையனால் தங்களுக்கு ஒரு 
கெடுதியும் நேராது.  நான் காணும் கனவில் பாதி இப்போது உண்மையாக நடந்திருக்கிறது; 
இன்னும் பாதியும் ஒரு வேளை உண்மையானாலும் ஆகலாம்.  யார் கண்டது?" என்றாள் 
மணிமேகலை.  
இந்தச் சமயத்தில் ஏதோ ஒரு கதவு பூட்டப்படும் சத்தத்தைக் கேட்டு இருவரும் 
திடுக்கிட்டுப் போய் நின்றார்கள்.  
"வேட்டை மண்டபத்துக்குச் சமீபத்தில் வந்து விட்டோம்!" என்று மணிமேகலை 
மெல்லிய குரலில் கூறினாள்.  
இதற்குள் சற்றுத் தூரத்தில் சிறிது வெளிச்சம் தெரிந்தது.  வரவர அவ்வெளிச்சம்
அதிகமானதுடன் அவர்களை நெருங்கி வந்ததாகத் தோன்றியது.  மணிமேகலை வந்தியத்
தேவனுடைய கரத்தை விட்டு விட்டுச் சற்று விலகி நின்றாள்.  
அடுத்த நிமிஷத்தில், ஒரு கையில் தூக்கிப் பிடித்த விளக்குடன் இன்னொரு கையில் 
முறுக்கித் திருகிய வேலைப்பாடு அமைந்த கூரிய கத்தியுடன் இடும்பன்காரி அவர்களுக்கு எதிரே
தோன்றினான். 
இவர்களைப் பார்த்ததும் அவன் அதிசயத்தினால் திகைத்துப் போனவனைப்போல் 
நின்றான்.  ஆனால் அவன் அவ்வாறு வேஷம் போடுகிறான் என்பது இருவருக்கும் தெரிந்து 
போயிற்று.   
"அம்மா! ஐயா! இது என்ன? இந்த இருட்டில் இவ்விதம் தனியாகக் கிளம்பினீர்கள்? 
அடிமையிடம் சொன்னால் விளக்குப் பிடித்துக் கொண்டு வரமாட்டேனா? எங்கே புறப்பட்டீர்கள்?"
என்று கேட்டான்.  
"இடும்பன்காரி! மலையமான் படை எடுத்து வருவதாகச் செய்தி வந்திருக்கிறது 
அல்லவா? ஆகையால் மதில் வாசல்கள் சுரங்க வாசல்கள் எல்லாம் பத்திரமாய்ப் பூட்டி
யிருக்கிறதா என்று பார்ப்பதற்காக வல்லத்து இளவரசரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்!" 
என்றாள் மணிமேகலை.  
"அதிசயமாயிருக்கிறது, தாயே! நானும் அதைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்!" 
என்றான் இடும்பன்காரி.  
"அப்படித்தான் நினைத்தேன்.  நாங்கள் வரும்போது கொண்டு வந்த விளக்கு வழியில் 
விழுந்து அணைந்து விட்டது.  இங்கே கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது.  நீயாய்த்தான் இருக்க 
வேண்டும் என்று எண்ணி மேலே வந்தோம்." 
"சின்ன எஜமான் பார்க்கச் சொன்னார்கள்; அதனால் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன்.  
சுரங்கப் பாதையெல்லாம் சரிவர அடைத்துத் தாளிட்டிருக்கிறது.  திரும்பிப் போகலாமா தாயே!" 
"உன் கையில் உள்ள விளக்கைக் கொடுத்துவிட்டு நீ போ! இந்த இளவரசருக்கு 
வேட்டை மண்டபத்திலிருந்து ஒரு வேலாயுதம் பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.  
இவருடைய வேல் கொள்ளிடத்தில் போய்விட்டதாம்.  ஒரு வேளை யுத்தம் வந்தாலும் வரலாம் 
அல்லவா...?" 
"ஆம், அம்மணி! யுத்தம் வந்தாலும் வரலாம்.ஆகையால் வேற்று மனிதர்களை வேட்டை
மண்டபத்துக்குள் அழைத்துப் போகாமலிருப்பதே நல்லது. தங்களுக்குத் தெரியாததற்கு நான் 
ஒன்றும் சொல்லத் தேவையில்லை." 
"அது உண்மைதான், காரி! ஆனால் இவர் வேற்று மனிதர் அல்ல.  சின்ன எஜமானுக்கு 
உயிருக்கு உயிரான சிநேகிதர் ஆயிற்றே! இன்னும் ஏதேனும் புதிய உறவு ஏற்பட்டாலும் ஏற்படும். 
நீ விளக்கைக் கொடுத்துவிட்டுப் போ!" என்றாள் மணிமேகலை.  
இடும்பன்காரி வேண்டா வெறுப்பாக விளக்கை இளவரசியிடம் கொடுத்துவிட்டுப் 
போனான். 
வந்தியத்தேவனும் மணிமேகலையும் மேலே நடந்து வேட்டை மண்டபத்தை அணுகிச் 
சென்றார்கள். எங்கிருந்தோ ஓர் ஆந்தையின் குரல் கேட்டது.  
"இது என்ன? அரண்மனைக்குள்ளே ஆந்தை எப்படி வந்தது?" என்று மணிமேகலை
வியப்புடன் கூறினாள்.  
"ஒரு வேளை வேட்டை மண்டபத்துக்குள் இருக்கும் செத்த ஆந்தைக்கு உயிர் 
வந்துவிட்டதோ, என்னமோ? முன்னொரு சமயம் இளவரசியைப் பார்த்ததும் செத்த குரங்கு உயிர் 
பெறவில்லையா?" என்றான் வந்தியத்தேவன்.
வேட்டை மண்டபத்தின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.  
மணிமேகலை தான் கொண்டுவந்திருந்த சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தாள்.  
பிறகு, கதவையும் இலேசாகத் திறந்தாள்.  
இருவரும் உள்ளே பிரவேசித்தார்கள்.  
முதலில் சிறிது நேரம் அவர்களைச் சுற்றிலும் செத்த யானைகள், கரடிகள், புலிகள், 
மான்கள், முதலைகள், பருந்துகள், ஆந்தைகள் - இவற்றின் பயங்கரமான உடல்கள் தான் 
தெரிந்தன.  
விளக்கைத் தூக்கிப் பிடித்து நன்றாக உற்றுப் பார்த்தபோது, அந்தப் பிராணிகளுக்குப் 
பின்னால் பாதி மறைந்ததும் பாதி மறையாமலும் சில மனித உருவங்கள் உட்கார்ந்திருப்பது
தெரிந்தது.  
அப்போது அவர்கள் திறந்துகொண்டு வந்த வேட்டை மண்டபத்தின் கதவு படாரென்று 
சாத்தப்பட்டுவிட்டது.
யார் அவ்வளவு பலமாகக் கதவைத் சாத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள 
வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான்.  
அதே கணத்தில் அவன் பின்னாலிருந்து பலமாகப் பிடித்துத் தள்ளப்பட்டான். முன்னொரு
சமயம் அவன் எந்த வாலில்லாக் குரங்கின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தானோ, அந்தக் 
குரங்கின் முன் புறத்தில் போய் மோதிக் கொண்டான்.
இரண்டு கரங்கள் அவனைப் பலமாகப் பற்றிக் கொண்டன.  'குரங்குப் பிடி' எவ்வளவு 
வலிவுள்ளது என்பதை அப்போது தான் அவன் நன்றாக, அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொண்டான்.
அவனுடைய அரையிலிருந்த கத்தியை எடுக்கச் செய்த முயற்சி சிறிதும் பலிக்க
வில்லை.அப்பால் இப்பால் அவனால் திரும்பவே முடியவில்லை.  
குரங்கின் கைகள், - அல்லது குரங்கின் கைகளோடு சேர்ந்து வந்த இரண்டு மனித 
கைகள், - அவனை அவ்வளவு பலமாகப் பிடித்துக் கொண்டன.  
இன்னும் இரண்டு கைகள் அவனுடைய அரையிலிருந்த கத்தியை அவிழ்த்து எடுத்துக்
கொண்டன.  
"ஐயோ!" என்று பயங்கரமாக அலறிக்கொண்டு அவனருகில் ஓடி வந்த மணிமேகலையின்
மார்பை நோக்கி அந்தக் கத்தி நீட்டப்பட்டது.  
"சத்தம் போட வேண்டாம். சிறிது நேரம் சும்மா இருந்தால்,- நாங்கள் சொல்கிறபடி
கேட்டால்,- உங்கள் இருவருடைய உயிருக்கும் அபாயம் இல்லை. சத்தம் போட்டீர்களானால் 
இருவரும் உயிர் இழக்க நேரிடும்.  முதலில், இந்த அதிகப்பிரசங்கி இளைஞன் இறந்து 
விழுவான்!" என்றது ஒரு குரல்.  
அது ரவிதாஸனுடைய குரல் என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.  
"இளவரசி! சற்றுச் சும்மா இருங்கள்! இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள், 
என்னதான் சொல்லுகிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்!" என்று சொன்னான் 
வந்தியத்தேவன்.  
பக்க தலைப்பு
முப்பத்தாறாம்  அத்தியாயம் 
பாண்டிமாதேவி 
வந்தியத்தேவனை வாலில்லாக் குரங்கோடு சேர்த்துக் கட்டியவர்கள், அவனுக்கு  அருகில் 
சுவரில் மாட்டியிருந்த கலைமானின் கொம்புகளோடு மணிமேகலையைச் சேர்த்துக் கட்டினார்கள்.  
"மந்திரவாதி! நான் தான் உங்கள் எதிரி! கடம்பூர் இளவரசியை ஏன் கட்டுகிறீர்கள்? விட்டு 
விடுங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.  
ரவிதாஸன் அவனைப் பார்த்து, "பொறு, தம்பி, பொறு! பல தடவை நீ எங்கள்  காரியத்தில் 
குறுக்கிட்டிருக்கிறாய்! ஒவ்வொரு தடவையும் உன்னை நாங்கள் உயிரோடு விட்டு வந்தோம்.  ஆனாலும்
 நீ எங்களைப் பின் தொடர்ந்து வருவதை நிறுத்தவில்லை!" என்றான்.  
வந்தியத்தேவன் சிரித்தான்.
"என்னப்பா, சிரிக்கிறாய்? வாலில்லாக் குரங்கின் ஆலிங்கனம் அவ்வளவு 
குதூகலமாயிருக்கிறதா?" என்று கேட்டான் ரவிதாஸன்.  
"இல்லை! நீ சொன்னதை எண்ணிப் பார்த்துத்தான் சிரித்தேன்!" என்றான் வல்லவரையன்.
"நான் சொன்னவற்றில் எதைக் குறித்து இப்படிச் சிரிக்கிறாய்?" 
"உங்களை நான் தொடர்ந்து வருவதாகச் சொன்னாயே? நீங்கள் என்னை விடாமல் 
தொடர்ந்து வருவதாகவும் சொல்லலாம் அல்லவா? என் காரியத்தில் நீங்கள் குறுக்கிடுவதாகவும் 
சொல்லலாம் அல்லவா? இப்போது பார்! நான் கடம்பூர் இராஜகுமாரியை அழைத்துக்கொண்டு ஒரு
முக்கியமான காரிய நிமித்தமாகப் புறப்பட்டேன்.  நீ குறுக்கிட்டு என்னை இந்தக் குரங்கோடு 
சேர்த்துக் கட்டிப் போட்டிருக்கிறாய்!" 
"ஓகோ! அப்படியா சமாசாரம்? உன் காரியத்தில் நாங்கள் குறுக்கிடுவதாகவே வைத்துக்
கொள்.  ஆனால் அவ்விதம் நேர்வது இதுதான் கடைசி முறை.  இன்று நீ உயிரோடு பிழைத்து 
விட்டாயானால், பிறகு எங்களைக் காணவே மாட்டாய்!"
"அப்படியானால், நான் உயிரோடிருக்கப் பிரயத்தனப்பட வேண்டியதுதான்! மந்திரவாதி! 
நான் உயிரோடு தப்புவதற்கு நீயே ஒரு தந்திரம் சொல்லிக் கொடு!" என்றான் வந்தியத்தேவன்.  
"பேஷாகச் சொல்லித் தருகிறேன்.  இந்த மண்டபத்திலும் இதற்கு அடுத்த அறையிலும் 
என்ன நடந்தாலும் நீ அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இரு! பதட்டமாக ஒன்றும் செய்யாதே! உன்
உயிருக்கு ஆபத்து நேராது." 
"ஏன் என்பேரில் உங்களுக்கு அவ்வளவு அபிமானம்? ஏன் என்னைக் கொல்லாமல் 
விடுகிறீர்கள்?"
"அப்படிக் கேள்! அது பெரிய முட்டாள்தனந்தான்! ஆனால் எங்கள் தேவியின் கட்டளை!" 
"யார் உங்கள் தேவி?" 
"இன்னுமா உனக்குத் தெரியவில்லை? பாண்டிமாதேவிதான்.  பெரிய பழுவேட்டரையரின்
வீட்டில் வந்திருக்கும் வீர பாண்டிய சக்கரவர்த்தியின் வீரபத்தினி நந்தினி தேவிதான்!" 
"நல்ல வீரபத்தினி!"
"சீ! துஷ்டச் சிறுவனே! எங்கள் தேவியைப் பற்றி ஏதேனும் சொன்னால் உயிரை 
இழப்பாய்! ஜாக்கிரதை!"
"நீங்கள் அல்லவா பழுவூர் ராணியின் மீது அவதூறு சொல்கிறீர்கள்? இன்னொரு புருஷன்
வீட்டில் வந்திருப்பவளை வீரபாண்டியனுடைய தேவி என்று சொல்கிறீர்களே?"
"அதனால் என்ன? இராமனுடைய பத்தினி சீதை, இராவணுடைய வீட்டில் சிலகாலம் 
இருக்கவில்லையா?" 
"இராமர் போய்ச் சீதா தேவியை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரே?" 
"நாங்களும் எங்கள் பாண்டிமா தேவியை அழைத்துக்கொண்டு போகத்தான் வந்திருக்கிறோம்.
 அவர் பழுவூர் அரண்மனையில் தாமாகவே எந்தக் காரியத்துக்காகச் சிறைப்பட்டிருந்தாரோ அது 
இன்றைக்கு முடியப் போகிறது..." 
"ஆகா! அது என்ன காரியம்?" 
"சற்று நேரம் பொறுமையாயிரு! நீயே தெரிந்து கொள்வாய்? உன் துஷ்டத்தனத்தைக்
காட்டினாயானால், நீ மட்டுமல்ல, - இந்தப் பெண்ணும் துர்க்கதிக்கு உள்ளாக நேரிட்டு விடும்!" 
இவ்விதம் கூறிவிட்டு ரவிதாஸன் எதிர்ப் பக்கத்துச் சுவரண்டை போவதற்கு யத்தனித்தான்.
"மந்திரவாதி! இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லி விட்டுப் போ!" என்றான் வந்தியத்தேவன். 
 ரவிதாஸன் திரும்பிப் பார்த்து, "தம்பி! என்னை 'மந்திரவாதி' என்று இனி அழையாதே!" 
என்றான்.  
"பின்னே, தங்களை என்னவென்று அழைக்க வேண்டும்?" 
"முதன் மந்திரி என்று மரியாதையுடன் அழைக்க வேண்டும்!" 
"ஐயா! தாங்கள் எந்த மகா ராஜ்யத்தின் முதன் மந்திரியோ?" 
"தெரியவில்லையா, உனக்கு? பாண்டிய மகாசாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி! பள்ளிப்படைக்கு 
அருகில் நடந்த பட்டாபிஷேக வைபவத்தை நீ பார்த்துக் கொண்டிருந்தாயே?" 
"பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது ஏதோ என் மனப்பிரமை என்று  நினைத்தேன்..."
"அதனாலேதான் அதைப்பற்றி யாரிடமும் நீ சொல்ல வில்லையாக்கும்?" 
"இரண்டொருவரிடம் சொன்னேன். அவர்கள் என்னைப் பைத்தியக்காரன் என்றார்கள்.  நான்
ஏதோ துர்சொப்பனம் கண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள்..." 
"ஆகா! அவர்கள் அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டும். நீ வெளியில் சொன்னால் யாரும்
நம்ப மாட்டார்கள் என்று நம்பித்தான் உன்னை நாங்களும் உயிரோடு விட்டோம்!..." 
"மந்திரவாதி! நீங்கள் என்னை உயிரோடு விட்டதற்கு அது ஒன்று மட்டும்தான் காரணமா?" 
"வேறு என்ன?" 
"உங்கள் ராணி எனக்காகச் சிபாரிசு செய்யவில்லையா?" 
"அதனால் என்ன?" 
"இப்போதும் அவருடைய சிபாரிசு எனக்குக் கிடைக்கும்."
"கிடைக்கும் வரையில் பொறுத்திரு!" 
"மந்திரவாதி, உங்கள் ராணி என்னை அவசரமாக அழைத்து வரும்படி இந்தக் கடம்பூர் 
இளவரசியை அனுப்பி வைத்தார்.  அதனாலேதான் நாங்கள் இருவரும் ஒன்றாக வந்தோம்..." 
"அப்பனே! இராணியின் அறைக்கு வருவதற்கு வேறு வழி இருக்கிறதே! இந்த வழியில் 
வருவானேன்?" 
"அதைப்பற்றி உன்னிடம் நான் சொல்ல வேண்டியதில்லை.  ராணி கேட்டால் சொல்லிக் 
கொள்கிறேன்..." 
"ராணி வந்து கேட்கும் வரையில் பொறுத்துக் கொண்டிரு!" 
"மந்திரவாதி! என்னையும் சம்புவரையர் குமாரியையும் உடனே கட்டவிழ்த்து விடச் சொல்!
இல்லாவிட்டால்..." 
"என்ன செய்வாய்?" 
"இந்த மண்டபம் அதிரும்படி கூச்சல் போடுவேன்!" 
"நீ அப்படிக் கூச்சல் போட்ட உடனே உன் மேல் மூன்று வேல்கள் ஒரே சமயத்தில் பாயும், 
ஜாக்கிரதை!" 
வந்தியத்தேவன் ஒரு முறை சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்தான்.  
ஆம்; மூன்று சதிகாரர்கள் கையில் வேலுடன் தயாராகக் காத்திருந்தார்கள்.  
"தம்பி! நீ ரொம்பக் கெட்டிக்காரப் பிள்ளை.  உன்னை எங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம் 
என்ற ஆசைகூட எனக்கு ஒரு சமயம் இருந்தது.  ஆனால் அந்தப் பழையாறை மோகினியின் 
பாசவலையில் நீ விழுந்து விட்டாய்.  அது போனால் போகட்டும்.  இப்போது புத்திசாலித்தனமாகப் 
பிழை! சத்தம் மட்டும் போட்டால் நீ சாவது நிச்சயம்!" 
இவ்வாறு ரவிதாஸன் எச்சரித்துவிட்டு எதிர்ப் பக்கத்துச் சுவரில் பொருந்தியிருந்த யானை
முகத்தை நோக்கிப் போனான்.  சிறிது நேரம் சுவரண்டை காது கொடுத்துக் கேட்டான்.  பின்னர் அந்த
யானையின் நீண்ட தந்தங்களைப் பிடித்துத் திருகினான்.
அங்கே ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டது.  உள் அறையில் பிரகாசமாக ஜொலித்துக் 
கொண்டிருந்த தீபங்களின் ஒளி, வட்ட வடிவமான பூரண சந்திரனுடைய வெள்ளிக் கிரணங்களைப் 
போல வேட்டை மண்டபத்துக்குள்ளும் வந்து சிறிது பிரகாசப் படுத்தியது. 
வந்தியத்தேவன் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.  இளவரசி மணிமேகலை தன் இடுப்பில் 
செருகியிருந்த சிறு கத்தியை எடுத்து அவளைக் கட்டியிருந்த கட்டுக்களை அறுத்துவிட்டதைத் தெரிந்து 
கொண்டான்.  
மணிமேகலை இடும்பன்காரியிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்த சிறிய விளக்கு, வேட்டை
மண்டபத்தின் ஒரு மூலையில் 'முணுக்கு' 'முணுக்கு' என்று எரிந்து கொண்டிருந்தது.  அதன் வெளிச்சம்
மணிமேகலையின் மீது படவே இல்லை.  மேலும் சதிகாரர்கள் வந்தியத்தேவனையே கவனித்துக்
கொண்டிருந்தபடியால், கடம்பூர் இளவரசி மணிமேகலையைக் கவனிக்கவும் இல்லை.
மணிமேகலை கட்டை அவிழ்த்து விடுதலை அடைந்து விட்டதை வந்தியத்தேவன் கவனித்துக்
கொண்டான்.  
உடனே வாயைக் குவித்துக் கொண்டு ஆந்தை கத்துவது போல் கத்தினான்.  முதலில் 
சதிகாரர்கள் மூவரும் சிறிது பிரமித்து நின்றார்கள்.  திறந்த துவாரத்தின் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துக்
கொண்டிருந்த ரவிதாஸனும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.  
"ஆகா! உன் வேலையா?" என்று சொல்லிக் கொண்டு வந்தியத்தேவனை நோக்கி விரைந்து
வந்தான்.
அவன் யானைத் தந்தங்களிலிருந்து கையை எடுத்ததும், சுவரிலிருந்து துவாரம் மறைந்தது.  
மறுபடியும் வேட்டை மண்டபத்தில் இருள் சூழ்ந்தது.  
சதிகாரர்கள் மூவரும் கையில் வேல்களுடன் வந்தியத்தேவனை நோக்கி விரைந்து ஓடி 
வந்தார்கள்.  
அவர்களில் ஒருவனை முறுக்கிய நீண்ட கொம்புகளை உடைய மான் தாக்கியது, 
இன்னொருவன் மீது பிரம்மாண்டமான கரடி ஒன்று விழுந்து அவனைக் கீழே தள்ளியது,  மற்றொருவன் 
மீது திறந்த வாயையும் பயங்கரமான பற்களையும் உடைய முதலை பாய்ந்தது.  ரவிதாஸன் தலைமீது 
ஒரு பெரிய ராட்சத வௌவால் தடாலென்று விழுந்தது.  
இவ்விதம் திடீரென்று ஏற்பட்ட தாக்குதல்களினால் அவர்கள் ஒரு நிமிடம் செயலற்று 
நின்றபோது, மணிமேகலை வந்தியத்தேவனை அணுகி அவனுடைய கட்டுக்களை அறுத்து விட்டாள்.  
வந்தியத்தேவன் இதுகாறும் தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த வாலில்லாக் குரங்கைத் தூக்கி 
அந்தச் சதிகாரர்கள் மேல் வீசி எறிந்தான். 
நால்வரும் தங்கள் மீது விழுந்த செத்த விலங்குகளின் உடல்களைத் தள்ளிவிட்டு மெதுவாகச் 
சமாளித்து எழுந்தார்கள்.  இதற்குள் வந்தியத்தேவன் கையில் வேலொன்றை எடுத்துக் கொண்டிருந்தான்.
தாக்க வருகிறவர்களைத் திருப்பித் தாக்குவதற்குத் தயாராயிருந்தான்.  
அச்சமயம் நந்தினி தேவியின் படுக்கை அறைக்கதவு நன்றாகத் திறந்தது.
வேட்டை மண்டபத்துக்குள் வெளிச்சம் புகுந்து பிரகாசப் படுத்தியது. 
மறுகணம் நந்தினி தேவியும் வேட்டை மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தாள். 
"மந்திரவாதி! இது என்ன மூடத்தனம்? இங்கே என்ன தடபுடல் செய்கிறீர்கள்?" என்று 
கேட்டுக்கொண்டே மேலே வந்தாள்.  
பக்க தலைப்பு
முப்பத்தேழாம்  அத்தியாயம் 
இரும்பு  நெஞ்சு  இளகியது! 
வேட்டை மண்டபத்துக்குள் வந்தியத்தேவனையும் மணிமேகலையையும் பார்த்துவிட்டு நந்தினியும் சிறிது
திகைத்துப் போனாள்.  
"ஓஹோ! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டாள்.  
"தேவி! தங்கள் கட்டளை என்று தங்கள் தோழி கூறியபடியால் வந்தேன்.  பெண் புத்தியைக் 
கேட்டிருக்கக்கூடாது என்று இங்கு வந்த பிறகு தெரிந்துகொண்டேன்" என்றான் வந்தியத்தேவன்.  
"அக்கா! நான் இவருக்குப் புத்தி கூறவில்லை; என்னுடன் தங்களைப் பார்க்க வரும்படி 
வேண்டிக் கொண்டேன்!" என்றாள் மணிமேகலை.  
நந்தினி தனக்கு முதலில் உண்டான திகைப்பைச் சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்தாள்.
"என் அருமைத் தோழி! பெண்களாகிய நாம், புருஷர்களை வேண்டிக்கொண்டால் அது புத்தி
கூறுவது போலத்தான்!" என்றாள்.
"புத்தி கூறுவது போல மட்டுமா? கட்டளையிடுவது போல என்று சொல்லுங்கள் தேவி! 
தாங்கள் என்னை அழைப்பதாகச் சொல்லி இளவரசி என்னைக் கைப்பிடியாகப் பிடித்து இழுத்துக் 
கொண்டு வந்தாள்.  அதன் பலன் நான் இந்தக் கொலைக்காரர்களிடம் சிக்கிக் கொள்ள 
வேண்டியதாயிற்று!" என்றான் வந்தியத்தேவன்.  
"ஐயா! இங்கே நடந்திருப்பதைப் பார்த்தால், இவர்கள் கொலைகாரர்கள் என்று 
தோன்றவில்லையே? நான் இப்போது இங்கு வந்திராவிட்டால், தாங்கள் அல்லவோ இவர்களையெல்லாம்
கொன்று தீர்த்திருப்பீர்கள் போலிருக்கிறது!" 
"அக்கா! இவர்கள் கொலைகாரர்கள்தான்! சற்று முன் இவர்கள் இவரை வாலில்லாக் 
குரங்குடனே சேர்த்துக் கட்டிவிட்டார்கள்!..." 
நந்தினி இலேசாகச் சிரித்த வண்ணம், "மணிமேகலை! முன்னொரு சமயம் இவர் இந்த 
வாலில்லாக் குரங்கின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தார் என்று சொன்னாய் அல்லவா? அது 
இவர்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது!" என்றாள்.
"எப்படியோ இல்லை, அக்கா! நீங்கள் வருவதற்கு முதலாவது நாள் இந்த வேட்டை மண்டபத்தில்
நான் பார்த்ததாகச் சொன்னேனே, அந்த மனிதர்கள்தான் இவர்கள்! அன்றைக்கே இவரைத் துரத்திக்
கொண்டு வந்தார்கள். நல்ல வேளையாக இவர் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டார்!..." 
"மறுபடியும் இன்றைக்கு இவரை நீயே இவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தது ஏன், 
மணிமேகலை? இந்த வழியில் எதற்காக இவரை அழைத்துக் கொண்டு வந்தாய்?" 
"அக்கா! சற்று முன் என் தமையன் கந்தமாறன் தங்களைப் பார்க்கப் போகிறேன் என்று 
சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கண்ணில் படவேண்டாம் என்பதற்காக இந்த வழியில் அழைத்து 
வந்தேன்.  அதுவே நல்லதாய்ப்போயிற்று.  இல்லாவிட்டால், இந்தக் கொலைகாரர்கள்..." 
"தங்காய்! இவர்கள் கொலைக்காரர்கள் அல்ல. இவர்கள் இவரைக் கொல்லவும் வரவில்லை. 
இரண்டு மூன்று தடவை இவர் இவர்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்.  ஆனாலும் 
உயிரோடு விட்டிருக்கிறார்கள்.இதன் உண்மையை நீ இவரைக் கேட்டே தெரிந்து கொள்ளலாம்." 
"அப்படியானால், இவர்கள் யார், அக்கா! சற்று முன்னால் இவர்கள் கூறியதுதான் 
உண்மையா? இவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களா? தங்களை அழைத்துக்கொண்டு போவதற்காக 
வந்தவர்களா?" என்று மணிமேகலை வியப்புடன் கேட்டாள்.  
"ஆம், தோழி! என்னைக் காப்பாற்றி அழைத்துப் போக வந்தார்கள். எல்லாம் விவரமாகச்
சொல்கிறேன்.  நீங்கள் இருவரும் என்னுடன் அடுத்த அறைக்கு வாருங்கள்! இவர்கள் இருக்கட்டும்!" 
என்றாள் நந்தினி.  
பிறகு ரவிதாஸனைப் பார்த்து, "மந்திரவாதி! இந்த இருவரில் ஒருவருக்கு நீங்கள் ஏதேனும்
தீங்கு செய்தால், அதை எனக்குச் செய்த தீங்காகவே கருதுவேன்.  இவர்களை நீங்கள் இனி எந்த
நிலைமையில் எங்கு சந்திக்க நேர்ந்தாலும் மிக்க மரியாதையுடன் நடத்த வேண்டும்!" என்றாள்.  
ரவிதாஸன், "தேவி! மன்னிக்க வேண்டும்.  இந்த வாலிபனுக்கு நம்முடைய சங்கேதக் குரல் 
தெரிந்திருக்கிறது.  சற்று முன் ஆந்தைக் குரல் கொடுத்தது இவனேதான்!" என்றான்.  
"அதிலிருந்தே இந்த வீரன் நம்மைச் சேர்ந்தவன் என்று தெரியவில்லையா? மந்திரவாதி!
உன்னுடைய புத்தி கூர்மை எங்கே போயிற்று? போனது போகட்டும்.  இனி, நான் மறுபடியும் 
தெரியப்படுத்தும் வரையில் இங்கே சத்தம் எதுவும் கேட்கக் கூடாது! ஜாக்கிரதை!" என்றாள் நந்தினி.  
பிறகு, நந்தினியும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் யானைமுக வாசல் வழியாக 
நந்தினியின் அறைக்குள்ளே பிரவேசித்தார்கள். கதவும் உடனே அடைத்துக் கொண்டது.  
"தங்காய்! நீ மிக்க புத்திசாலி! இவரை வேட்டை மண்டப வழியாக அழைத்து வந்தது 
நல்லதாய்ப் போயிற்று உன் தமையன் இப்போதுதான் இங்கிருந்து போகிறான்.  ஆதித்த கரிகாலரை 
அழைத்து வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறான்.  அதற்குள் உங்களை நான் அனுப்பிவிட வேண்டும்.
உங்களிடம் விடை பெற்றுக் கொள்ளவும் வேண்டும்!" என்றாள் நந்தினி.  
"அக்கா! இது என்ன? தங்கள் கணவரைப் பற்றி உண்மையை அறிந்து வர இவரை அனுப்பப்
போவதாகவல்லவோ சொன்னீர்கள்? தாங்கள் விடை பெற்றுக் கொள்வதாகச் சொல்கிறீர்களே?" 
என்றாள் மணிமேகலை.  
"உன் தமையனிடம் பேசிய பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன், தங்காய்!
பழுவேட்டரையர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் இனி இங்கே தங்க முடியாது.  இந்த
வீரரும் இனி இங்கே இருப்பது அபாயந்தான் ஐயா! தாங்கள் உடனே இங்கிருந்து கிளம்பிச் செல்லுங்கள்.
தங்கள் உயிரின் மேல் தங்களுக்கு ஆசை இல்லாவிட்டாலும், இந்தப் பெண்ணை உத்தேசித்தாவது 
உடனே போய்விடுங்கள்!" என்றாள் நந்தினி.  
"அக்கா! அவர் போகிறதாயிருந்தால், என்னையும் கூட அழைத்துப் போகச் சொல்லுங்கள். 
நீங்களும் இவரும் போன பிறகு இந்த அரண்மனைச் சிறையில் அடைந்து கிடக்க என்னால் முடியாது!" என்றாள்
மணிமேகலை.  
"இளவரசி! பழுவூர் ராணியின் கருத்தைத் தாங்கள் அறிந்து கொள்ளவில்லை.  நான் 
இங்கிருந்து போய்விட்டால், தாங்கள் ஆதித்த கரிகாலரை மணந்து தஞ்சை சாம்ராஜ்யத்தின் பட்ட 
மகிஷியாக விளங்கலாம் என்று சொல்கிறார்கள்!" என்றான் வல்லவரையன்.  
"இல்லை, நான் அவ்விதம் சொல்லவில்லை.  ஆதித்த கரிகாலரை மணக்கும் துர்ப்பாக்கியம்
எந்தப் பெண்ணுக்கும் ஏற்படுவதை நான் விரும்ப மாட்டேன்.  அதிலும், என் உயிருக்குயிராகிவிட்ட 
மணிமேகலைக்கு அந்தக் கதி நேர வேண்டுமா? ஐயா! தாங்கள் வேண்டுமென்று என் கருத்தைத் திரித்துக்
கூறுகிறீர்கள்.  தாங்கள் இப்போது தப்பித்துச் சென்றால், பிறிதொரு காலத்தில் இந்தப் பெண்ணைக் 
கைப்பிடித்து மணந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெறக்கூடும்! மணிமேகலை! உனக்கு இவர் மீதுள்ள 
அன்பு உண்மையான அன்பு என்றால், உடனே இவரை இங்கிருந்து போகச் சொல்லு!" என்றாள் நந்தினி.
"ராணி! நான் போகச் சித்தமாயிருக்கிறேன்.  தங்களிடம் உள்ள ஒரு பொருளை யாசிக்கிறேன்.
அதைக் கொடுத்தால், உடனே போய்விடுகிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.  
"ஐயா! என்னிடம் தாங்கள் கோரிப் பெறக்கூடிய அத்தகைய பொருள் என்ன இருக்கிறது? 
சொல்லுங்கள்!"  
"மீன் அடையாளம் பொறிந்த வாள் ஒன்று தங்களிடம் இருக்கிறது.  அதைக் கொடுத்தால்
போய்விடுகிறேன்.  என்னுடைய வாளைக் கொள்ளிடத்து வெள்ளத்தில் விட்டு விட்டேன் என்பதுதான் 
தங்களுக்குத் தெரியுமே?" என்றான் வந்தியத்தேவன்.  
"ஐயா! வேட்டை மண்டபத்தில் எத்தனையோ வாள்களும், வேல்களும் இருக்கின்றன.
வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு தங்கள் இந்தக் கணமே புறப்படலாமே? பெண்பாலாகிய நான் என் 
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வைத்திருக்கும் அந்த ஒரே ஆயுதத்தை ஏன் கேட்க வேண்டும்?" 
"தேவி தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுந்தானா அந்த வாளை வைத்துப் 
பூஜை செய்து வருகிறீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள்!" 
"என் உயிருக்கும் மேலன கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவுந்தான் அந்தக் கத்தியை 
வைத்திருக்கிறேன்." 
"தேவி! வேறு நோக்கம் ஒன்றுமில்லையா?" 
"வேறு நோக்கம் எனக்கு என்ன இருக்கக்கூடும்?" 
"வீர பாண்டியருடைய மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகவும் இருக்கலாம் 
அல்லவா?" 
"மணிமேகலை இருக்கும்போது நீர் அந்தப் பேச்சை எடுக்கமாட்டீர் என்று நினைத்தேன்.  
நானும் இனி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.  தங்காய்! நீயும் தெரிந்துகொள்.  நான் இந்தக் 
கடம்பூர் அரண்மனைக்கு வந்ததின் நோக்கம் என்னவென்று தெரிந்துகொள்!"
இவ்வாறு சொல்லிய வண்ணம் நந்தினி தேவி பக்கத்தில் கட்டிலின் மீது வைத்திருந்த மீன் 
அடையாளமிட்ட வாளைக் கையில் எடுத்துக் கொண்டாள்.  
"சோழ சாம்ராஜ்யத்தின் உட் கலகத்தைத் தீர்த்து வைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. 
மதுராந்தகத் தேவருக்கும், ஆதிக் கரிகாலருக்கும் இராஜ்யப் பிரிவினை செய்து வைப்பதற்காகவும் நான்
இங்கே வரவில்லை.  கடம்பூர் அரண்மனையில் விருந்துண்டு களிப்பதற்காகவும் வரவில்லை! தங்காய்! 
உனக்குத் திருமணம் முடித்து வைப்பதற்காகவும் வரவில்லை.  வீரபாண்டியரின் தலையைக் கொய்த 
பாதகனைப் பழிக்குப்பழி வாங்கவே வந்தேன்.  இது பாண்டிய குலத்து வாள்! இதன் மேல் ஆணையிட்டு 
நான் சபதம் செய்திருக்கிறேன்.  அந்தச் சபதத்தை முடிக்கவே வந்தேன்.  இன்றிரவு ஒன்று என் 
சபதத்தை முடிப்பேன்; அல்லது என் உயிரை முடிப்பேன்!" என்று நந்தினி ஆவேசம் வந்தவள் போல் 
பேசி நிறுத்தினாள்.  
"அதற்கு நான் தடையாக இருப்பேன் என்றுதானே என்னைப் போகச் சொல்லுகிறீர்கள்? என்
உயிருக்கு ஆபத்து வரும் என்று பயமுறுத்தப் பார்க்கிறீர்கள்?" என்றான் வந்தியத்தேவன்.  
"ஆகா! என் பழியை முடிப்பதற்கு நீர் தடை செய்யப்போகிறீரா? நல்ல காரியம்! யார் 
வேண்டாம் என்றார்கள்? உம்முடைய நண்பரிடம் சென்று இதையெல்லாம் சொல்லி இங்கே அவரை 
வராமல் தடுத்து விடுவதுதானே?" 
"தேவி அவரிடம் சொல்லித் தடை செய்ய முடியாது என்றுதான் தங்களிடம் வந்தேன்.  
தங்களுடைய காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாவது தங்களை இந்தப் பாவ காரியம் 
செய்யாமல் தடுப்பதற்கு வந்தேன்..." 
"ஆகா! பாவ காரியமா? எது பாவ காரியம்? என் தோழியிடம் கேட்டுப் பார்க்கலாம். 
மணிமேகலை! நீ சொல்! நீ உன் நெஞ்சை ஒருவருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறாய்.  அவர் காயம்பட்டு
நிராதரவாயிருக்கும்போது அவருடைய பகைவன் அவரைக் கொல்ல வருகிறான்.  நீ அப்பகைவன் காலில்
விழுந்து உன் காதலரைக் கொல்ல வேண்டாமென்று வேண்டிக்கொள்கிறாய்.  அவன் அப்படியும் கேட்காமல்
கொன்றுவிட்டுப் போகிறான்.  அப்படிப்பட்ட கிராதகனைப் பழி வாங்குவது பாவம் என்று நீ சொல்லுவாயா,
என் கண்ணே!" 
"ஒரு நாளும் சொல்ல மாட்டேன், அக்கா! ஆனால் உங்களைப் போல் நான் அவன் காலில் 
விழுந்து கெஞ்சியிருக்கவும் மாட்டேன்.  நானே கத்தி எடுத்து அவனை முன்னாலேயே கொன்றிருப்பேன்!" 
என்று சொன்னாள் மணிமேகலை.  
வந்தியத்தேவன் மணிமேகலையை நோக்கி, "இளவரசி! அந்தப் பகைவன் ஒருவேளை 
தங்களுடைய சொந்தச் சகோதரர் என்று ஏற்பட்டு விட்டால்...?" என்று கேட்டான்.  
"சகோதரனாயிருந்தாலும், யாராயிருந்தாலும் எனக்கு ஒன்றுதான்!" என்றாள் மணிமேகலை.  
"அப்படிச் சொல்லடி, என் கண்ணே!" என்றாள் நந்தினி.  
"இளவரசி தாம் சொல்லுவது இன்னதென்று யோசியாமல் சொல்லுகிறார்.  இவருடைய தமையன்
கந்தமாறன் என்னதான் இவருக்கு விரோதமாகக் காரியம் செய்தாலும், அவனைக் கொல்ல இவருக்கு 
மனம் வருமா?" என்று வல்லவரையன் கேட்டான்.  
நந்தினியும் மணிமேகலையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  
பின்னர் நந்தினி வந்தியத்தேவனைப் பார்த்து, "இது என்ன வீண் கேள்வி? நான் என் கூடப்
பிறந்த சகோதரனைக் கொல்லப் போவதில்லை.  முதன் முதலில் நீர் என்னைச் சந்தித்தபோது என் 
தமையன் திருமலையின் பெயரைச் சொன்னீர்.  அதனாலேதான் உம்மிடம் எனக்கு அபிமானம் 
உண்டாயிற்று.  ஆழ்வார்க்கடியானுடைய நண்பர் என்பதற்காகவே நீர் பல முறை அபாயத்திலிருந்து 
தப்பிச் செல்வதற்கு உதவி செய்தேன்.  ஐயா! இன்று நான் என் சபதத்தை முடிக்காமல் என் உயிரை 
விடும்படி நேர்ந்தால், திருமலையிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்க 
வேண்டும்.அவனுடைய சொற்படி நான் நடக்காவிட்டாலும், அவனை அடியோடு மறந்து விடவில்லை 
என்பதாகச் சொல்ல வேண்டும்!" என்றாள்.  
"அம்மணி! இந்தக் கபட நாடகம் இன்னும் ஏன்? ஆழ்வார்க்கடியான் தங்கள் தமையன் அல்ல; 
தாங்கள் அந்த வீர வைஷ்ணவனுடைய சகோதரியும் அல்ல..." 
"பின் யார் என் தமையன்? யாருடைய சகோதரி நான்?" 
"தங்கள் தமையனார் ஆதித்த கரிகாலர்தான்.  ஆகையினாலேயே தாங்கள் சகோதர ஹத்தி
தோஷத்துக்கு ஆளாக வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.  வீரபாண்டிய குலத்துக் கொலை 
வாளை தயவு கூர்ந்து என்னிடம் கொடுத்து விடும்படி மன்றாடுகிறேன்!" 
"கரிகாலரும் நானும் உடன் பிறந்தவர்கள் என்ற அபூர்வ கற்பனையைத் தாங்கள் 
இளவரசரிடம் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதை அவர் நம்பினாரா?" என்று நந்தினி ஏளனப் 
புன்னகையுடன் கேட்டாள்.  
"நம்பியதாகத்தான் தோன்றியது.  ஆனால் அவர் மனத்தில் உள்ளதை நான் ஒன்றும் அறியேன்..."
"அவர் மனத்தில் உள்ளதை நான் அறிவேன்.  அந்தப் பழையாறை மோகினியின் கற்பனா
சக்தியைப் பற்றி அவர் பெரிதும் வியக்கிறார்..." 
"அம்மணி! நான் கூறியது கற்பனையல்ல.  பழையாறை இளையபிராட்டியின் கற்பனை 
அல்லவே அல்ல. ஈழ நாட்டில் நான் என் கண்ணால் பார்த்தேன்..." 
"என்னத்தைப் பார்த்தீர்?" 
"வாயினால் பேசும் சக்தி அற்ற ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தேன்.  என்னையும்,
ஆழ்வார்க்கடியனையும், அருள் மொழி வர்மரையும் அந்தத் தெய்வ மகள் பேரபாயத்திலிருந்து 
காப்பாற்றினார். அநுராதபுரத்தின் வீதிகளில் நள்ளிரவில் நாங்கள் ஒரு பழைய மாளிகையின் ஓரமாகப் 
போய்க் கொண்டிருந்தபோது அவர் வீதியின் எதிர்பக்கத்தில் நின்று எங்களைச் சமிக்ஞையினால் 
அழைத்தார். அருள்மொழி வர்மரும் நாங்களும் அவரை நோக்கி நகர்ந்ததும் நாங்கள் சற்றுமுன் 
நின்றிருந்த வீட்டின் முகப்பு இடிந்து விழுந்தது.  பொன்னியின் செல்வர் அந்தப் பெண்ணரசியைத் தம் 
குல தெய்வம் என்று போற்றி வணங்கினார்." 
"ஐயா! இந்தக் கதைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அருள்மொழிவர்மரை சோழ 
சிங்காதனத்தில் அமர்த்த விரும்பும் இளைய பிராட்டியிடம் இதையெல்லாம் நீங்கள் கூறியிருக்கலாம்; 
அவரும் வியந்து மகிழ்ந்திருப்பாள்.  என்னிடம் ஏன் சொல்கிறீர்?...." 
"அதற்குக் காரணம் இருக்கிறது. அநுராதபுரத்து வீதிகளில் மங்கலான நிலவு வெளிச்சத்தில்
அந்தப் பெண்ணரசியை நான் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தபோது, 'தஞ்சாவூரில் நாம் விட்டுப் பிரிந்து 
வந்த பழுவூர் இளைய ராணி இங்கே எப்படி வந்து சேர்ந்தார்?' வியப்படைந்தேன். அம்மணி! தங்களுக்கும்
அவருக்கும் உருவத்தோற்றத்தில் அணுவளவும் வித்தியாசம் இல்லை. தாங்கள் ஆபரண அலங்காரங்களை
நீக்கிவிட்டுக் கூந்தலைப் பிரித்துப் போட்டுக் கொண்டால் தத்ரூபமாக அவரைப் போலவே இருப்பீர்கள்..." 
"நீ சொல்லுவதை நான் ஏன் நம்பவேண்டும்? தாங்கள் கற்பனா சக்தி அதிகமுடையவர் 
என்பதை நான் அறிவேன்.  இதுவும் ஏன் உமது அபூர்வ கற்பனைகளில் ஒன்றாயிருக்கக் கூடாது?" 
"தேவி! சத்தியமாகச் சொல்கிறேன்." 
"நீர் எவ்வளவுதான் ஆணையிட்டுச் சொன்னாலும் என்னால் நம்ப முடியாது!" 
"ராணி! 'நம்ப முடியாது' என்று தாங்கள் சொல்வது பொய்! நான் சொல்வது உண்மை என்பது
தங்களுக்கே தெரியும்.  அந்த உண்மையைத் தங்கள் காரியத்துக்கு உபயோகப்படுத்திக் 
கொண்டிருக்கிறீர்கள்.  முதன் முதலில் தங்களைத் தஞ்சை அரண்மனையில் நான் சந்தித்துப் பேசிக் 
கொண்டிருந்தபோது இந்த மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்திக்கொண்டு வந்தான்.  என்னை அப்பால்
போய் இருக்கச் சொன்னீர்கள். தற்செயலாகத் திறந்திருந்த பொக்கிஷ நிலவறைக்குள் நான் போய் 
ஒளிந்து கொண்டிருந்தேன்.  அப்போது சில விந்தையான காட்சிகளை நான் பார்க்கும்படி நேர்ந்தது..." 
"ஆகா! அவை என்ன அபூர்வ காட்சிகள்?" 
"கந்தமாறன் மதுராந்தகத் தேவரோடு அந்த நிலவறைப் பாதை வழியாகப் போவதைப் 
பார்த்தேன்..." 
"அதனால் என்ன?" 
"சிறிது நேரத்துக்கெல்லாம் அதே நிலவறையில் தாங்களும் பெரிய பழுவேட்டரையரும் 
போவதைப் பார்த்தேன்.  அப்போது நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது தெரிந்திருக்கவில்லை.  பிறகு
தான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன்.  தங்கள் அன்னையின் ஆவி வடிவத்தைப்போல் நடித்துச் 
சக்கரவர்த்தியைத் துன்புறுத்துவதற்காகப் போகிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன்..." 
இத்தனை நேரம் திடமாக நின்று பேசிக்கொண்டிருந்த நந்தினி இப்போது திடீரென்று
சோர்வடைந்து அங்கே கிடந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்தாள்.  
"ஐயா! இன்னும் என்ன தெரிந்துகொண்டீர்கள்?"
"தாங்களும் பெரிய பழுவேட்டரையரும் நிலவறைப் பாதையில் போய்க் கொண்டிருந்தபோது 
மதுராந்தகரை அழைத்துச் சென்ற கந்தமாறன் திரும்பி வந்துகொண்டிருந்தான்.  பழுவேட்டரையரிடம்
அவன் ஏதோ கூறினான்.  அவர் அவனுடன் தீவர்த்தி பிடித்துக்கொண்டு வந்த காவலனிடம் ஒரு 
சமிக்ஞை செய்தார்..." 
"அது என்ன சமிக்ஞை?" 
"தங்களுக்கு அது தெரிந்தேயிருக்க வேண்டும்.  கந்தமாறனை முதுகில் குத்திக் 
கொன்றுவிடும்படி பழுவேட்டரையர் கட்டளையிட்டார்.  அதை நான் தடுத்துக் கந்தமாறன் உயிரைக்
காப்பாற்றினேன்.  அதன் பயனாக, அவனுடைய முதுகில் கத்தியால் குத்திய பழி என் பேரில் விழுந்தது..."
நந்தினி மணிமேகலையைத் திரும்பிப் பார்த்துவிட்டு "ஐயா! ஏதேதோ சொல்லி இந்தப் 
பெண்ணின் மனத்தை ஏன் கலக்குகிறீர்கள்?" என்றாள்.  
"தேவி! இத்தனை காலமும் இதையெல்லாம் பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை.  உங்கள்
கையில் வைத்திருக்கும் வாளை என்னிடம் தாங்கள் கொடுத்துவிட்டால், இனியும் யாரிடமும் 
சொல்லவில்லை..." 
"வாளைக் கொடுக்க முடியாது, ஐயா! எதற்காகக் கொடுக்க வேண்டும்? யாரிடம் 
வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.  இன்னும் ஏதாவது கற்பனை சேர்த்து வேணுமானாலும் 
சொல்லிக் கொள்ளுங்கள்.  ஏன்? இப்போதே கரிகாலரிடம் சென்று, அவர் இங்கு வருவதை நிறுத்தி 
விடுங்கள்! என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? போங்கள்!" என்று நந்தினி கூறிய போது, அவளுடைய
கண்களில் நீர் ததும்பியது.  
"அம்மணி! இளவரசருடைய சுபாவம் எனக்கு நன்றாய்த் தெரியும்.  அவரைத் தடுக்க என்னால்
முடியாது.தடுக்க முயன்றால் அவருடைய பிடிவாதம் அதிகமாகும்.  ஆகையினால்தான் தங்களை 
வேண்டிக்கொள்ள வந்தேன்..." 
"என்னை வேண்டிக்கொள்ள உமக்கு என்ன உரிமை? நீர் கூறியதெல்லாம் உண்மையாகவே 
இருக்கட்டும்.  ஈழ் நாட்டில் என்னைப் பெற்றெடுத்த அன்னையை நீர் பார்த்ததாகவே இருக்கட்டும். 
அதற்காக நான் ஏன் என் சபதத்தைக் கைவிட வேண்டும்? என் அன்னைக்குச் சக்கரவர்த்தி பெரிய 
துரோகம் செய்திருக்கிறார்.  அவர் மேலும் அவருடைய மக்கள் மேலும் நான் ஏன் இரக்கம் காட்ட 
வேண்டும்? பழி வாங்குவதற்கு வேண்டிய காரணம் இன்னும் அதிகமாகவல்லவோ ஆகிறது?" 
"இல்லை, அரசி! இல்லை! தங்களுடைய பழி வாங்கும் எண்ணத்தைத் தங்கள் அன்னை 
சரியென்று ஒப்புக்கொள்வாரா என்று யோசித்துப் பாருங்கள்.  சக்கரவர்த்தியின் மக்களை அந்த 
மூதாட்டி தம் உயிருக்கு உயிராகக் கருதியிருக்கிறார். அவர்களில் ஒருவரைத் தாங்கள் தங்கள் 
கையினால் கொல்லுவதை அவர் விரும்புவாரா என்று யோசித்துப் பாருங்கள்? ஒருநாளும் விரும்ப
மாட்டார்.  தங்களுடைய செயலை அறிந்தால் அவர் தங்களை வெறுப்பார்.  அவர் உயிரோடிருக்கும் 
வரையில் தங்களைச் சுற்றி வருத்திக் கொண்டிருப்பார்.  வாயினால் அவர் பேச முடியாது. ஆனால் 
அவருடைய கண் பார்வையே தங்களை என்றைக்கும் நரகத்திலும் கொடிய வேதனையில் ஆழ்த்திக் 
கொண்டிருக்கும்..." 
நந்தினியின் கண்களில் இப்போது கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.  கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு மேல் நோக்காகப் பார்த்தாள்.  அங்கே ஏதோ துயர மயமான காட்சியைப் 
பார்த்தவள்போல் அவள் முகம் வேதனை அடைந்து காட்டியது.  "அம்மா! அம்மா! வீரபாண்டியருடைய 
தலையும் உடலும் தனித்தனியே வந்து என் பிராணனை வதைத்து எடுப்பது போதாதா? நீ வேறே வந்து 
என்னைச் சுற்ற வேண்டுமா?" என்று சொல்லிக் கொண்டே, அந்தக் காட்சியைப் பார்க்கச் 
சகிக்காதவள்போல் கண்களைக் கையினால் மூடிக் கொண்டாள்.  சிறிது நேரம் அந்த அறையில் 
நந்தினியின் விம்மல் சத்தம் மட்டுமே கேட்டது.   
மணிமேகலை வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! தாங்கள் இவ்வளவு குரூரமானவர் என்று 
எனக்குத் தெரியாமல் போயிற்று!" என்றாள்.  
இதைக் கேட்ட நந்தினி உடனே தன் கண்களைப் பொத்தியிருந்த கரங்களை எடுத்துவிட்டு,
 "அவர் பேரில் குற்றம் ஒன்றுமில்லை, தங்காய்! என்னுடைய நன்மைக்காகத்தான் சொல்கிறார். 
என்னைப் பெரும் பாதகத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் சொல்லுகிறார்! ஆனாலும் அது என்னை
இப்படித் துன்புறுத்துகிறது!" என்றாள்.
பின்னர், கண்ணீர் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை நோக்கி, "ஐயா! இதுவரையில்
யாரும் சாதிக்க முடியாத காரியத்தை நீர் சாதித்துவிட்டீர்.  இதோ உமது விருப்பத்தின்படி இந்த வாளை
உம்மிடமே கொடுத்து விடுகிறேன்.  பெற்றுக் கொள்ளும்!" என்று வாளை நீட்டினாள். 
வந்தியத்தேவன் அதைப் பெற்றுக் கொள்ளக் கையை நீட்டியபோது நந்தினி மறுபடியும் பின் 
வாங்கினாள்:
"கொஞ்சம், பொறுங்கள்! வாளை எடுத்து கொள்வதற்கு முன் எனக்கு ஓர் உதவி செய்ய 
முடியுமா என்று சொல்லுங்கள் என் சபதத்தை நிறைவேற்றாமல் நான் இங்கிருந்து கிளம்பினால் 
வேட்டை மண்டபத்தில் உள்ளவர்கள் என்னைச் சும்மா விடமாட்டார்கள்.  உயிரோடு சிதையில் வைத்து
நெருப்பு மூட்டிக் கொளுத்தி விடுவார்கள்.  அதற்குக்கூட நான் அஞ்சவில்லை.  ஆனால் நான் சாவதற்கு
முன்னால் என் தாயை ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்...  வாணர் குல வீரரே! நீர் கூறியதையெல்லாம்
நான் நம்பவில்லை யென்று சொன்னேன். அது தவறு! ஈழநாட்டுக் காடுகளில் தலைவிரி கோலமாகத் 
திரிந்து கொண்டிருக்கும் என் அன்னையைப் பற்றி நீர் சொல்லியதையெல்லாம் நான் நம்புகிறேன்.  
ஒவ்வொரு வார்த்தையையும் நம்புகிறேன்.நானே அவரைப் பார்த்ததும் உண்டு..." 
"எப்போது? எப்படி?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.
"குழந்தைப் பிராயத்தில் நான் படுத்துத் தூங்கும்போது சில சமயம் திடுக்கிட்டுக் கண் விழித்துக்
கொள்வேன்.  அப்போது ஒரு பெண்ணுருவம் என் முகத்தினருகில் குனிந்து என்னைக் கண் கொட்டாமல்
 பார்த்து கொண்டிருக்கக் காண்பேன்.  நான் கண் விழித்ததும் அந்த உருவம் மறைந்து விடும்.  எனக்கு 
இது அதிசயத்தையும், அச்சத்தையும் அளித்து வந்தது.  கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக் 
கொள்வதில் எனக்கு அப்போதிருந்து ஆசை நிரம்ப உண்டு.  ஆகையால் என் முகத்தோற்றம் என் 
மனத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. நான் தூங்கும்போது என்னைக் குனிந்து உற்றுப்பார்த்த உருவம் 
என்னைப் போலவே இருப்பது பற்றி வியந்திருக்கிறேன். என் முகமும் ஒரேமாதிரி இருக்கும்.  
கூடுவிட்டுக் கூடு பாய்வது பற்றிய கதைகளை நான் கேட்டிருந்தேன்.  என் உயிரே என் உடம்பை 
விட்டுப் பிரிந்து தனியாக மேலே நின்று என் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்று 
சந்தேகப்படுவேன்.  சில சமயம், நான் இறந்துபோய் விட்டேனோ, படுத்திருப்பது என் உயிரற்ற உடம்போ
என்று எண்ணித் திடுக்குறுவேன்.  இதெல்லாம் உண்மையாக நடப்பதா, கனவில் நடப்பதா, அல்லது 
என் மனப்பிரமையா, எனக்குச் சித்தக் கோளாறு ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் எண்ணி 
வேதனைப்படுவேன்.  எனக்குப் பிராயம் வந்த பிறகு, அப்படி நான் கண்டதெல்லாம் உண்மையான 
தோற்றமேதான் என்று பல காரணங்களினால் எனக்கு நிச்சயமாயிற்று.  முக்கியமாக சுந்தர சோழர் 
என்னைப் பார்த்து அடைந்த குழப்பத்தைக் கவனித்து அந்த நிச்சயம் அடைந்தேன்.  வேறு பல 
அறிகுறிகளிலும், ஆழ்வார்க்கடியான் சில சமயம் தவறிக் கூறிய வார்த்தைகளினாலும், என்னைப் 
போன்ற உருவம் படைத்த என் அன்னை ஒருத்தி இருக்கவேண்டும் என்று நிச்சயம் அடைந்தேன்.  
அவரை ஒரு தடவை பார்க்கவேண்டும், அவருடைய மடியிலே படுத்து விம்மி அழவேண்டும் என்று என் 
உள்ளத்தில் தாபம் குடி கொண்டது.  ஐயா! இன்று தாங்கள் கூறிய வார்த்தைகளினால் அந்தத் தாபம் 
பன் மடங்கு அதிகமாகிவிட்டது.  என்னை என் தாயாரிடம் நீர் அழைத்துப் போவதாயிருந்தால், என் 
பழிவாங்கும் நோக்கத்தை விட்டு விடுகிறேன்.  இந்தப் பாண்டிய குலத்து வாளை உம்மிடம் இப்போதே 
தொடுத்து விடுகிறேன்!" என்று விம்மிக்கொண்டே கூறினாள் நந்தினி.  
வந்தியத்தேவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.  "இது என்ன வம்பு? கிணறு வெட்டப் பூதம்
புறப்பட்டுவிட்டதே?" என்று எண்ணினான்.  
மணிமேகலை, "ஐயா! நானும் தங்களை வேண்டிக் கொள்கிறேன். அக்காவின் விருப்பத்தை 
நிறைவேற்றி வைப்பதாக வாக்குக் கொடுங்கள்" என்றாள்.  
வந்தியத்தேவன் மிக்க தயக்கத்துடன், "என்னால் முடிந்தால் பார்க்கிறேன்!" என்று சொன்னான். 
"அப்படியானால், உடனே நாம் கிளம்ப வேண்டும்.  ஆதித்த கரிகாலர் இங்கு வருவதற்குள் 
கிளம்பிவிட வேண்டும். இங்கிருந்து எப்படிப் புறப்பட்டுச் செல்வது? வாசல் வழி அபாயகரமானது, எதிரே
கந்தமாறனும், கரிகாலனும் வந்தாலும் வருவார்கள்!" என்றாள் நந்தினி.  
"வேட்டை மண்டபத்துக்குள்ளிருக்கும் சுரங்கப்பாதை வழியாக அழைத்துப் போகிறேன், 
வாருங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.  
"அக்கா! நானும் வந்துவிடுகிறேன். என்னையும் அழைத்துப் போங்கள்!" என்றாள் மணிமேகலை.
நந்தினி அதைக் கவனிக்காமலே, "வேட்டை மண்டபத்துக்குள் போக நான் விரும்பவில்லை. 
ரவிதாஸனும் அவனுடைய ஆட்களும் நம்மை உயிரோடு விடமாட்டார்கள்..." என்றாள்.  
"அம்மணி! தங்கள் கையில் உள்ள வாளை மட்டும் என்னிடம் கொடுங்கள்.  அவர்கள் நாலு 
பேரையும் நான் சமாளித்துக்கொள்கிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.  
"வேண்டாம்! அதனால் பல சங்கடங்கள் உண்டாகும். மணிமேகலை! இங்கிருந்து 
வெளியேறுவதற்கு வேறு வழி ஒன்றும் இல்லையா?" என்று கேட்டாள் நந்தினி தேவி.
மணிமேகலை புருவத்தை நெறித்துக்கொண்டு சிறிது யோசித்தாள்.  "அக்கா! எனக்கு வேறு 
வழி இருப்பதாகத் தெரியவில்லை.  ஆனால் இவரையே கேளுங்கள்.  முன்னொரு சமயம் இவர் இந்த 
அறையிலிருந்து மாயமாக மறைந்து போனார்.  எப்படிப் போனார் என்று கேளுங்கள்!" என்றாள்.
நந்தினி வந்தியத்தேவன் முகத்தைப் பார்த்தாள்.  
வந்தியத்தேவன், "ஆம், அம்மணி! வேறு ஒரு வழி இருக்கிறது.  தற்செயலாக அதை நான்
கண்டுபிடித்தேன்.  ஆனால் அதன் வழியாகப் போவது எளிதன்று.  மச்சுக்கு மச்சு, மாடத்துக்கு மாடம் 
தாவிக் குதிக்க வேண்டும். அப்புறம் மதில் ஏறியும் குதிக்க வேண்டும்.  தங்களால் முடியுமா என்று 
சந்தேகிக்கிறேன். அதைக் காட்டிலும் மந்திரவாதியையும் அவனுடைய ஆட்களையும் ஒரு கை 
பார்த்துவிட்டுச் சுரங்க வழி போவது எளிது!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.
அப்போது மணிமேகலை, "ஐயோ, அவர்கள் வருகிறார்கள் போலிருக்கிறதே!" என்று 
திடுக்கிட்டுக் கூறினாள்.  
இருவரும் உற்றுக் கேட்டார்கள்.  
ஆம்; அப்போது அரண்மனை முன்கட்டிலிருந்து அந்த அறைக்குள் யாரோ வரும் காலடிச் 
சத்தம் கேட்டது.  
"ஐயா! சீக்கிரம் வேட்டை மண்டபத்துக்குள் போய் விடுங்கள்!" என்றாள் நந்தினி.  
"மறைந்துகொள்ள எனக்கு வேறு ஒரு நல்ல இடம் இருக்கிறது.  தேவி! அந்த வாளை இப்படிக்
கொடுங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.  
நந்தினி அவனிடம் வாளைக் கொடுப்பதற்காக அதை முன்னால் நீட்டினாள்.  அப்போது 
அவளுடைய கைதவறி, வாள் தரையில் விழுந்து ஜணஜண கண கணவென்னும் ஒலியை எழுப்பியது.  
பக்க தலைப்பு
முப்பத்தெட்டாம்  அத்தியாயம் 
நடித்தது  நாடகமா? 
வாள் தவறித் தரையில் விழுந்தபோது எழுந்த ஒலியுடன் நந்தினியின் சோகம் ததும்பிய
மெல்லிய சிரிப்பின் ஒலியும் கலந்தது.  அவள் பரபரப்புடன், "ஐயா! தெய்வத்தின் சித்தம் வேறு
விதமாயிருக்கிறது.வாள் இங்கேயே கிடக்கட்டும்.  தாங்கள் உடனே போய் மறைந்து கொள்ளுங்கள்!"
என்றாள்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் குனிந்து வாளை எடுக்கப் போனான்.
அதன் கூரிய நுனிப் பகுதியைப் பிடித்துத் தூக்க முயன்றான்.  அதே சமயத்தில் அந்த வாளின் பிடியை 
ஒரு காலினால் மிதித்துக் கொண்டாள் நந்தினி.  
"வேண்டாம்! இளவரசர் காதில் வாள் விழுந்த சத்தம் கேட்டிருக்கும். இங்கே வாள் 
இல்லாவிட்டால்  அவர் மனத்தில் சந்தேகம் உண்டாகும்.  ஏற்கெனவே, தங்கள் மீது அவருக்குச் 
சந்தேகம்.  போய் விடுங்கள்! முன்னொரு தடவை மாயமாய் இங்கிருந்து மறைந்ததுபோல் இந்தத் 
தடவையும் மறைந்து போய் விடுங்கள்!" என்றாள்.
வந்தியத்தேவன் வாளின் முனையைப் பிடித்து எடுக்க முயன்றதில் அவன் கையில் சிறு காயம்
உண்டாயிற்று.  அவன் வாளை விட்டுவிட்டு நிமிர்ந்தான்.  அவன் உள்ளங் கையில் இலேசாக இரத்தம்
கசிந்ததை நந்தினி பார்த்தாள்.  
"நான் உமக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்.  என் கையால் என் 
உடன்பிறந்தானைக் கொல்ல மாட்டேன்.  நீர் தப்பித்துக் கொள்ளும்.  உம்மை இங்கே அவர் 
கண்டுவிட்டால்...!" 
"போய்விடுங்கள்! உடனே போய்விடுங்கள்!" என்று மணிமேகலையும் சேர்ந்து கெஞ்சினாள்.
 
காலடிச் சத்தம் மேலும் நெருங்கிக் கேட்டது. வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக 
யாழ்க்கருவிகளின் களஞ்சியத்தை நோக்கி விரைந்து சென்றான்.  களஞ்சியத்தின் கதவைத் 
திறந்துகொண்டு உள்ளே சென்று மறைந்தான்.  
காலடிச் சத்தம் வெகு சமீபத்தில், வாசற்படிக்கருகில் கேட்டது.  
வந்தியத்தேவன் மறைந்த இடத்தை வியப்புடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த 
மணிமேகலையைப் பார்த்து, "தங்காய்! நீயும் மறைந்து கொள், கட்டிலின் திரைகளுக்குப் பின்னால் 
மறைந்து கொள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்குத் தெரியாமல் இங்கிருந்து 
போய்விடு!" என்றாள் நந்தினி.  
மணிமேகலை கட்டிலின் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்த மறுகணத்தில் ஆதித்த 
கரிகாலனும் கந்தமாறனும் உள்ளே வந்தார்கள். கரிகாலன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே 
நந்தினியை நெருங்கினான்.  கட்டிலின் திரைச்சீலை அசைந்ததை அவன் கவனித்தான். ஆனால், 
கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.  
நந்தினிக்கு அருகில் வந்ததும் தரையிலே கிடந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்த வாளைப் 
பார்த்தான். பின்னர், நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தான்.  
நந்தினியின் நெஞ்சை ஊடுருவிய அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைப் பொறுக்க மாட்டாமல்
வாளை எடுக்கும் பாவனையாக அவள் குனிந்தாள்.  
நந்தினியின் நோக்கத்தை அறிந்து அவளை முந்திக்கொண்டு கரிகாலன் வாளைக் கையில் 
எடுத்துக் கொண்டான்.  அதன் அடிப்பிடியிலிருந்து கூரிய நுனி வரையில் கூர்ந்து பார்த்தான்.  நுனியில் 
புதிய இரத்தக் கறை இருப்பதையும் பார்த்துக் கொண்டான்.  
பின்னர் நந்தினியை நோக்கி, "தேவி! நாங்கள் வரும்போது கேட்ட சத்தம் இந்த வாளின்
சத்தந்தான் போலிருக்கிறது.  தங்கள் கையிலிருந்து நழுவிக்கீழே விழுந்திருக்கிறது! எங்களை
வரவேற்பதற்குக் கையில் வாளேந்தி ஆயத்தமானது போலத் தோன்றுகிறது" என்றான்.  
"வீரம் மிக்க இளம் புலிகளையும் தீரத்திற் சிறந்த வாலிப சிங்கங்களையும் வரவேற்பதற்குரிய
முறை அதுவேயல்லவா?" என்றாள் நந்தினி.  
"மூர்க்கப் புலிகளுக்கும், சிங்கங்களுக்கும் கூரிய நகங்களும் பற்களும் வேண்டும்.  ஆனால்
துள்ளித் திரியும் புள்ளிமானுக்கு அவை தேவையில்லையென்றுதானே கடவுள் தரவில்லை?" என்றான் 
ஆதித்த கரிகாலன்.
"மானும் தன் கொம்புகளை உபயோகிக்க வேண்டிய தேவை நேரிடலாம் அல்லவா? தனக்குக்
கொம்புகளை அளித்த கடவுளிடம் கலைமான் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமும் நேரிடலாம் அல்லவா? 
கருணை கூர்ந்து அந்த வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள்!" என்று மன்றாடினாள் நந்தினி.  
"இல்லை; இல்லை! தங்கள் கைகளுக்கு இது ஏற்றதன்று.  மலர் கொய்யவும், மாலை 
புனையவும் பிரம்மதேவன் படைத்த தளிர்க்கரங்களினால் வாளை எப்படிப் பிடிக்க முடியும்?" என்றான் 
கரிகாலன். 
"கோப்பெருமகனே! இந்த ஏழையின் கைகள் ஆர்வத்துடன் மலர் கொய்து ஆசையுடன் 
மாலை புனைந்த காலம் உண்டு. அந்த மாலையைச் சூடுவதற்குரியவர் எப்போது வருவார் என்று 
காத்திருந்து காத்திருந்து ஏமாந்த காலமும் உண்டு.  அவ்விதம் பகற்கனவு கண்டுவந்த காலம் போய் 
எத்தனையோ யுகங்கள் ஆகிவிட்டன.  இப்போது இந்தத் திக்கற்ற அநாதையின் கரங்கள் வாளைத் 
துணை கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது.  ஐயா! அந்தத் துணையையும் தாங்கள் 
என்னிடமிருந்து பறித்துக் கொள்ளாதீர்கள்!" என்றாள் நந்தினி.  
"தேவி! இது என்ன பேச்சு? தங்களையா திக்கற்ற அநாதையென்று சொல்லிக்
கொள்ளுகிறீர்கள்? தங்கள் காலால் இட்ட பணியைத் தலையால் வகித்து நிறைவேற்றுவதற்கு எத்தனை
வாலிப வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? இது தங்களுக்குத் தெரியாதா?" என்றான் கரிகாலன்.
"தப்பித் தவறி என் கால் அத்தகைய துர்த்தர்களுடைய தலையிலே பட்டுவிட்டால் அந்தக் 
காலை வெட்டிக்கொள்ள வேண்டியதாயிருக்கும், ஐயா! அதற்கேனும் வாள் அவசியம் அல்லவா?" 
"ஐயோ! இது என்ன கர்ண கடூரமான பேச்சு? பாதச் சிலம்பு கலீர் கலீர் என்று ஒலிக்க 
அரண்மனை மாடக்கூடங்களில் அன்னமும் நாணும் நன்னடை பயில வேண்டிய கால்களை வெட்டுவதா?
இந்த வார்த்தைகள் பெரிய பழுவேட்டரையரின் காதில் விழுந்தால் அவர் உள்ளம் என்ன பாடு படும்?" 
"ஐயா! அவரைப்பற்றி கவலைப்படுவோர் யார்? அந்தக் கிழச்சிங்கம் ஒரு கர்ஜனை செய்தால்
அதைக் கேட்டு நடுங்கி ஓடிப் பதுங்கிய வாலிபப் புலிகள் இப்போது எவ்வளவு தைரியமாக வெளிவந்து
நடமாடுகின்றன? அவர் கொள்ளிடத்து வெள்ளத்தில் போய் விட்டார் என்ற செய்தியைக் கேட்ட பின்னர்
அல்லவா வாலிபப் புலிகளுக்கு இவ்வளவு துணிச்சல் வந்துவிட்டது? அந்தப் புலிகள் என்னிடம் ரொம்பவும்
நெருங்கி விடாமல் பார்த்துக்கொள்வதற்காக இந்த ஆயுதத்தை வைத்திருந்தேன்.  குப்பையில் கிடந்த 
என்னை உலகமறிய அழைத்து வந்து அரண்மனை வாழ்வும் அரசபோகமும் அளித்த மகாபுருஷரின் 
கௌரவத்தைக் காப்பதற்காக இந்த வாளின் உதவியைக் கோரினேன்.  தாங்கள் சற்று முன்னால் 
சொன்னதுபோல், மலர் கொய்யவேண்டிய கரங்களினால் வாள் சுழற்றப் பயின்றேன்..." 
"தேவி! உண்மையில் அதற்காகத்தானா? இந்த வாளைத் தாங்கள் பெட்டியில் வைத்துப் பூஜை
செய்து வந்ததும், இதைத் தங்கள் மலரினும் மென்மையான கன்னங்களோடு சேர்த்துக் கொஞ்சிக் 
குலாவி வந்ததும், பெரிய பழுவேட்டரையரின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத்தானா? அல்லது 
தங்களைப் பார்த்து அசட்டு சிரிப்புச் சிரித்துக் கொண்டு நெருங்கும் நிர்மூடர்களை நெருங்க 
வொட்டாமல் தடுப்பதற்குத் தானா? வேறு நோக்கம் ஒன்றுமில்லையா?" 
"வேறு என்ன விதமான நோக்கம் இருக்க முடியும், ஐயா?" 
"ஏன்? வேறு எத்தனையோ நோக்கம் இருக்க முடியும்! பழி வாங்கும் நோக்கம் இருக்கலாம். 
தாங்கள் அடிபணிந்து கைகூப்பிக் கேட்டுக் கொண்ட வேண்டுகோளைப் புறக்கணித்துத் தங்கள் 
உள்ளத்தில் அழியாத புண்ணை உண்டாக்கிய பாதகனைக் கொன்று சபதம் முடிக்கும் நோக்கம் 
இருக்கலாம்!" 
நந்தினி தலையைக் குனிந்துகொண்டு ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.  பின்னர், 
இளவரசனை நிமிர்ந்து நோக்கி, "கோமகனே! அம்மாதிரி எண்ணமும் ஒரு சமயம் எனக்கு இருந்தது
உண்மைதான்.  அதற்காகவே இந்த வீரவாளைப் பூஜை செய்து வந்தேன்.  எப்போது அந்த வேளை வரும்
என்று காத்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் வேளை வந்தபோது என் கரங்களில் வலிவு இல்லாமல் போய்
விட்டது; நெஞ்சில் உறுதியில்லாமலும் போய்விட்டது.இனி இந்த வாளை என் கற்பையும் என் 
கணவரின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே உபயோகப்படுத்துவேன்.  கருணை செய்து 
அதை இப்படிக் கொடுங்கள்!" என்றாள்.
"தேவி அந்தப் பொறுப்பை நான் வகிக்கக் கூடாதா? தங்களுக்கோ, தங்கள் கணவருக்கோ 
தீங்கு எண்ணிய பாதகனைத் தண்டிக்கும் கடமையை நான் நிறைவேற்றக் கூடாதா?" என்றான் ஆதித்த
கரிகாலன். 
"தங்கள் இது இயலாத காரியம்.இந்தத் திக்கற்ற அநாதை ஸ்திரீயின் நிமித்தம் தங்கள் 
ஆரூயிர் நண்பர்களைத் தண்டிக்க முடியுமா?" 
"ஏன் முடியாது? நிச்சயமாய் முடியும்! நந்தினி! நீ அன்றைக்கு ஏரித் தீவில் வந்தியத்தேவனைப்
பற்றிக் கூறியதையெல்லாம் அப்போது நான் பூரணமாக நம்பவில்லை. பின்னால், கந்தமாறன் 
சொல்லியதிலிருந்து அவ்வளவும் உண்மைதான் என்று அறிந்தேன்.  அந்தப் பாதகனை நீ மன்னித்தாலும்
நான் மன்னிக்கச் சித்தமாயில்லை.  அவன் எங்கே என்று சொல்!...சொல்லமாட்டாயா!...  வேண்டாம்! என்
கண்கள் குருடாகி விடவில்லை!...  இதோ பார்!" என்று ஆத்திரத்துடன் ஆதித்த கரிகாலன் கர்ஜனை 
செய்து கொண்டே கட்டிலை மூடியிருந்த திரைச் சீலையை நோக்கி அடி எடுத்து வைத்தான்.  
நந்தினி அவன் காலைத் தொட்டு எழுந்து மண்டியிட்டுக் கரங்களைக் குவித்துக்கொண்டு,
"கோமகனே! வேண்டாம்! வேண்டாம்! என்றாள்.
"நந்தினி! உன் கருணையை வேறு காரியங்களுக்கு வைத்துக் கொள்! என் நண்பனைப்போல்
நடித்துச் சதி செய்யும் சண்டாளனிடம் கருணை காட்ட வேண்டாம்!"என்று சொல்லிய வண்ணம் ஆதித்த
கரிகாலன் நந்தினியை மீறிக் கொண்டு மேலே நடந்தான்.
நந்தினி பிரமித்துத் திகைத்தவள்போல் நாலாபுறமும் பார்த்து விழித்தாள். இத்தனை நேரமும்
வாசற்படிக்கு அருகில் சிலையைப்போல் நின்றுகொண்டிருந்த கந்தமாறனைப் பார்த்து, "ஐயோ! 
அவரைத் தடுங்கள்!" என்று அலறினாள்.  
கந்தமாறனாகிய சிலைக்கு உயிர் வந்தது.  ஆனால் அவன் இருந்த இடத்தை விட்டு 
அசையவில்லை.  இலேசாக ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு மீண்டும் சிலையாக மாறிவிட்டான்.  
கரிகாலன் ஒரு கையினால் வாளை ஓங்கிய வண்ணம் கட்டில் திரைச் சீலையின் அருகில் 
சென்று, இன்னொரு கையினால் திரையை விலக்கினான்.  
உள்ளே, கையில் சிறிய கூரிய கத்தியுடன் தோன்றிய மணிமேகலை, 'கிறீச்' என்று 
சத்தமிட்டாள்.  
ஆதித்த கரிகாலன் ஓங்கிய வாளுடன் சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டுப் பின்னர் அந்த
வாளினால் கட்டில் திரைச் சீலையைக் கிழித்தெறிந்தான். 
"ஆகா! இந்தப் பெண் புலியா இங்கே நிற்கிறது? அப்பப்பா! இதன் நகங்கள் மிகக் 
கூர்மையாயிற்றே?" என்று கூறி 'ஹா ஹா ஹா' வென்று சிரித்தான்.  
பின்னர் கந்தமாறனைப் பார்த்து, "நண்பா! உன் தங்கையை அழைத்துப் போய் அவள் 
தாயாரிடம் ஒப்புவித்து விட்டு வா! இவள் வயிற்றில் எத்தனை புலிக் குட்டிகள் பிறக்குமோ தெரியாது! 
இவள் இந்த வீர பாண்டியனுடைய வாளுக்கு இத்தனை நேரம் இரையாகிச் செத்திருந்தால் சோழ நாடு 
எத்தனை வீரப் புதல்வர் புதல்விகளை இழக்கும்படி நேர்ந்திருக்கும்?" என்றான்.  
சற்று முன் உண்மையிலேயே பெண் புலிபோல் சீறிய மணிமேகலை ஆதித்த கரிகாலனின்
வார்த்தைகளைக் கேட்டு நாணம் அடைந்தாள்.  கந்தமாறன் அவளை அணுகி அழைப்பதற்குள் 
அவளாகவே அந்த அறையிலிருந்து செல்ல ஆயத்தமாகி விட்டாள்.  
அண்ணனும் தங்கையும் அங்கிருந்து போனதும், கரிகாலன் நந்தினியைப் பார்த்து, "தேவி! 
ஒரு நாடகம் நடித்து அவர்கள் இருவரையும் போகச் செய்துவிட்டேன்.  இனிமேலாவது நம் உள்ளத்தைத்
திறந்து உண்மையைப் பேசலாம் அல்லவா?" என்றான்.  
நந்தினி உண்மையான வியப்புடன் கரிகாலனை நோக்கி, "ஐயா! தாங்கள் நடித்தது நாடகமா?
அப்படியானால், அது ஆச்சரியமான நடிப்புத்தான்! நானும் அதை உண்மையென்றே நம்பி ஏமாந்து 
போனேன்!" என்றாள்.
"நந்தினி! நடிப்பிலே உனக்கு இணை இந்த உலகிலேயே இல்லை என்பது என் எண்ணம். 
நீயே ஏமாந்திருந்தால், என் நடிப்புத் திறமையை அவசியம் மெச்சிக்கொள்ள வேண்டியது தான்! 
ஆனாலும், நான் வாளை ஓங்கிக்கொண்டு மணிமேகலை மறைந்திருந்த இடத்தை நோக்கிப் போனபோது,
நீ என்னைத் தடுக்கவில்லையே? அது ஏன்? என் மீது சுமந்துள்ள பல குற்றங்களுடன் ஸ்திரீ
ஹத்திதோஷமும் சேரட்டும் என்று எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாயா?" என்று கேட்டான் கரிகாலன்.  
"சிவ, சிவா! இந்த உலகத்திலேயே இன்றைக்கு அந்தப் பெண் ஒருத்தியிடந்தான் நான் 
உண்மையான அன்பு கொண்டிருக்கிறேன்.  அவளும் சாகட்டும் என்று சும்மாப் பார்த்துக் 
கொண்டிருப்பேனா? திரையை நீக்கியதும் தாங்களே தெரிந்து கொள்வீர்கள் என்று எண்ணினேன்..." 
கரிகாலன் சிரித்தான்.  
"இந்தச் சிரிப்பின் பொருள் விளங்கவில்லை!" என்றாள் நந்தினி.  
"மணிமேகலையை நான் கொல்லுவதற்கு நீ சொன்ன காரணமே போதும்!" என்றான் கரிகாலன்.
"இன்னும் விளங்கவில்லை!" 
"நீ யாரிடமாவது அன்பு கொண்டாய் என்றால் அவனோ, அவளோ என்னுடைய பரம 
விரோதியாகி விடுவார்கள்.  இது உனக்குத் தெரியாதா?" 
"தெரியும்; அத்தகைய துரதிர்ஷடசாலி நான் என்று தெரியும்.  ஆனாலும் தங்கள் குரோதம்
கள்ளங்கபடமறியாத இந்த இளம் பெண் வரையில் செல்லும் என்று நான் கருதவில்லை!" 
"அல்லது உன் நோக்கம் வேறு விதமாகவும் இருக்கலாம்.  நான் மணிமேகலையைக் 
கொன்றுவிட்டால், அதற்காகக் கந்தமாறன் என்னைப் பழி வாங்குவான் என்று எண்ணியிருக்கலாம்.  
அல்லது நான் அவளைக் கொல்லுவதற்குள் அவள் கையிலிருந்த சிறிய கத்தியை எறிந்து என்னைக் 
கொன்றுவிடுவாள் என்றும் கருதியிருக்கலாம்..." 
"ஐயையோ! இது என்ன? எப்படிப்பட்ட பயங்கரமான கற்பனைகள்!" 
"கற்பனைகளா? என்னுடைய பயங்கரமான கற்பனைகளைக் காட்டிலும் பயங்கரமான 
நோக்கத்தை நீ உன் மனத்தில் வைத்திருக்கிறாய்.  உண்மையைச் சொல்! என் உள்ளத்தில் கொழுந்து 
விட்டெரியும் தீயை மேலும் வளர்க்க வேண்டாம்! என்னை எதற்காக இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு 
வரச் சொன்னாய்? எதற்காகப் பழுவேட்டரையரைத் தஞ்சைக்குப் போகும்படி செய்தாய்? சோழ 
சாம்ராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து வைப்பதற்காகவோ, எனக்கும் 
மணிமேகலைக்கும் திருமணம் செய்வித்துக் கண்டு களிப்பதற்காகவோ இத்தனை முயற்சியும் 
செய்ததாகச் சொல்லாதே! அந்தக் கதைகளையெல்லாம் நான் நம்பமாட்டேன்.  நம்பியிருந்தால், இங்கு 
வந்திருக்கவும் மாட்டேன்..." 
"பின் எதற்காக இங்கு வந்தீர்கள், கோமகனே! என்ன நம்பிக்கையுடன் இந்த இடத்துக்கு
வந்தீர்கள்?" 
"நம்பிக்கையா? எனக்கு ஒருவித நம்பிக்கையும் கிடையாது.  என் உள்ளத்தில் நிரம்பி
யிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையுந்தான்.  இந்த நாட்டை விட்டும் இந்த உலகத்தை
விட்டுமே, நான் போய்விட விரும்புகிறேன்.  அதற்கு முன்னால் உன்னை ஒரு தடவை பார்த்து விடை 
பெற்றுப் போகலாம் என்று தான் வந்தேன்.ஒரு சமயம் என்னிடம் நீ ஒரு வரம் கோரினாய்.  காலில் 
விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டாய்.  கையெடுத்துக் கும்பிட்டு இரந்தாய். என் ஆத்திரத்தினாலும் 
மூர்க்கத் தனத்தினாலும் நீ கோரியதை நான் கொடுக்கவில்லை.பிறகு ஒவ்வொரு கணமும் அதை 
நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டானால் அதைச் 
செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.  நந்தினி! சொல்! எந்த விதத்திலாவது அதற்கு நான் பரிகாரம்
செய்யமுடியும் என்றால், சொல்!" 
இவ்வாறு இரக்கம் ததும்பும் குரலில் கூறிய கரிகாலனைப் பார்த்து நந்தினி, "கோமகனே!
அதற்குப் பரிகாரம் ஒன்றும் கிடையாது.  இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்! இறந்தவர்களைப் 
பிழைக்கச் செய்யும் சக்தி இந்த உலகில் யார்க்கும் கிடையாது.கதைகளிலே காவியங்களிலே 
சொல்கிறார்கள்.  நாம் பார்த்ததில்லை" என்றாள்.  
"இறந்தவர்களைப் பிழைக்கச் செய்ய முடியாது.  அது உண்மைதான்! ஆனால் உயிருக்கு 
உயிர் கொடுத்துப் பரிகாரம் தேடலாம் அல்லவா?...  இதோபார்! என்னிடம் இனியும் மறைக்க 
வேண்டாம்.  இங்கு நீ எதற்காக வந்தாய், என்னை எதற்காக வரச் சொன்னாய், என்னத்திற்காகப் 
பழுவேட்டரையரைத் தஞ்சைக்கு அனுப்பினாய் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்று எண்ணாதே!
நீயும் நானும் சின்னஞ்சிறுவர்களாயிருந்த நாளிலிருந்து உன் மனத்தில் எழும் எண்ணங்களை அறியும்
சக்தி எனக்கு உண்டு.  எனக்கு ஆத்திரம் ஊட்டி நீசத்தனமான செயல் புரியும்படி செய்வதற்காகவே 
வீர பாண்டியனுடைய உயிருக்காக நீ மன்றாடினாய்.என் பக்கத்திலிருந்து என்னை வதைத்துக் 
கொண்டிருப்பதற்காகவே பெரிய பழுவேட்டரையரை நீ மணந்து தஞ்சைக்கு வந்தாய்.நான் காஞ்சியில்
நிம்மதியுடன் இருப்பது உனக்குப் பொறுக்கவில்லை.  அதனாலேயே இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு
வரச் செய்தாய்.  வீர பாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழி முடிக்கும் நோக்கத்துடனேயே
நீ இவ்விடத்துக்கு வந்திருக்கிறாய். அந்த உன்னுடைய நோக்கத்தை தடையின்றி நிறைவேற்றிக்கொள்!
அதற்காகவே கந்தமாறனையும் அவன் தங்கையையும் அப்புறப்படுத்தினேன்.  இதோ! இந்த வாளைப் 
பெற்றுக் கொள்!" என்று கூறிக் கரிகாலன் வாளை நீட்டினான்.  
நந்தினி வாளை வாங்கிக் கொண்டாள்.  வாளைப் பிடித்த அவளுடைய கைகள் நடுங்கின.  
பின்னர் அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. கண்களில் கண்ணீர் ததும்பியது. இதயத்தைப் பிளக்கும் 
சோகக் குரலில் விம்மலும் தேம்பலும் கலந்து வந்தன.  
"நந்தினி! இது என்ன அதைரியம்? இந்த மனத் தளர்ச்சி ஏன்? நீ பட்டர் குடும்பத்தில்
வளர்ந்தவள்; ஆனால் வீர மறக்குலத்தில் பிறந்தவள் அல்லவா? ஆட்டு மந்தையில் வளர்ந்தபடியால் 
சிங்கக்குட்டி தன் இயல்பை இழந்துவிடுமா? இதோ பார்! உன் அந்தரங்கத்தை நான் அறிவேன்.
உன் பழியை முடிப்பதற்குக் கந்தமாறனையோ, பார்த்திபேந்திரனையோ, வந்தியத்தேவனையோ நீ 
ஏவிவிட வேண்டாம்.  அவர்கள் மீது எனக்குக் கோபத்தை உண்டாக்கவும் வேண்டாம்.உன் சபதத்தை
நீயே நிறைவேற்றிக் கொள்! உன் பழியை உன் கையினாலேயே முடித்துக்கொள்! யாராவது இங்கே 
மறுபடியும் வந்து தொலைந்து விடலாம்.  கந்தமாறன் தன் தங்கையை அன்னையிடம் சேர்ப்பித்து விட்டுத்
திரும்பி வருவான்.  பார்த்திபேந்திரனும் சம்புவரையரும் திரும்பி வரும் நேரமும் ஆகிவிட்டது.  
அவர்களுடனே என் பாட்டன் மலையமானும் வந்தாலும் வரலாம்.  பழுவேட்டரையர் கொள்ளிடத்து 
வெள்ளத்தில் போயிருப்பார் என்று நான் நம்பவில்லை.  அவரும் திடீரென்று வந்தாலும் வரக்கூடும். உன் 
பழியை முடித்துச் சபதத்தை நிறைவேற்றிக்கொள்ள இதைக் காட்டிலும் நல்ல சந்தர்ப்பம் வரப் 
போவதில்லை. என்னைக் கொல்லுவதினால் எனக்கு நீ எவ்விதத் தீங்கும் செய்தவளாக மாட்டாய்! 
பேருதவி செய்தவளாவாய்!" என்றான்.  
நந்தினி பொங்கிவந்த விம்மலை அடக்கிக்கொண்டு, "கோமகனே! தங்களிடம் நான் எதையும்
மறைக்கவும் இல்லை;  மறைக்க விரும்பவும் இல்லை.  நான் இங்கு வந்ததின் நோக்கம் பற்றித் தாங்கள்
கூறியதெல்லாம் உண்மைதான்.  தங்களை இங்கு வரச் சொன்னதின் நோக்கமும் அதுதான்.  ஆனால் 
சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் என் கைகளில் வலிவு இல்லை; என் நெஞ்சிலும் தைரியம் 
இல்லை.  தாங்கள் என்னைத் தேடிவரும் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே என் கையிலிருந்த வாள் 
நழுவிக் கீழே விழுந்துவிட்டது.  இதோ பாருங்கள்! வாளைப் பிடித்திருக்கும் என் கரங்கள் 
நடுங்குவதை!" என்றாள்.  
"ஆம், ஆம்! அதைப் பார்த்துக்கொண்டு தானிருக்கிறேன். ஆனால் அதன் காரணந்தான் 
எனக்குத் தெரியவில்லை.  உன் நெஞ்சம் ஒரு சமயம் எவ்வளவு உறுதியடைந்திருந்தது என்பதை நான்
அறிவேன். தேவேந்திரனுக்காக வஜ்ராயுதத்தைச் செய்து கொடுத்த பிறகு அதில் மீதமான 
உலோகத்தைக் கொண்டு பிரம்மதேவன் உன் இருதயத்தைப் படைத்திருக்க வேண்டும் என்று நான் 
எண்ணுவதுண்டு. அப்படிப்பட்ட உன் நெஞ்சு இவ்விதம் இளகிவிட்டதன் காரணம் என்ன!..." 
"தங்கள் தோழர் வந்தியத்தேவர் சொன்ன செய்திதான் காரணம்." 
"ஆகா! நீயும் நானும் உடன் பிறந்தவர்கள் என்று அவன் கண்டு பிடித்துக் கொண்டுவந்த
செய்தியைத்தானே சொல்லுகிறாய்? அன்றைக்கு ஏரிக் கரைத் தீவில் நாம் பேசிக் கொண்டிருந்த போது நீ
அதை நம்பவில்லையென்று சொன்னாயே? நம்மை மறுபடியும் பிரித்து வைப்பதற்காக யாரோ 
செய்திருக்கும் சூழ்ச்சி என்று கூறினாயே?" 
"நான் அதை நம்பக்கூடாது என்றுதான் பார்த்தேன்.  அதற்காக எவ்வளவோ பிரயத்தனம் 
செய்தேன்.  ஆனால் இன்று அவர் கூறிய வேறொரு செய்தி என் நெஞ்சுறுதியை அடியோடு 
குலைத்துவிட்டது." 
"ஆகா! அது என்ன? இன்னும் ஏதாவது புதிய கற்பனையா? புதியதாக வேறு என்ன கூறினான்?" 
"என்னைப்பெற்ற அன்னையைப்பற்றிச் சொன்னார்.  அவரை இலங்கைத் தீவில் பார்த்ததாகக்
கூறினார்.  அதை நான் நம்ப மறுப்பதற்குக் காரணம் எதுவும் இல்லை. கோமகனே! முன்னொரு தடவை 
நான் ஒரு வரம் கேட்டேன்.  அதைத் தாங்கள் கொடுக்கவில்லை.  அதற்காக இன்று வரை 
வருத்தப்படுவதாகச் சொன்னீர்கள்.  இன்று மறுபடியும் ஒரு வரம் கேட்கிறேன்.  இதையாவது 
கொடுப்பீர்களா?" 
"வரம் இன்னது என்று குறிப்பிட்டுக் கேட்டால், கொடுக்க முடியும் முடியாது என்று 
சொல்கிறேன்." 
"கோமகனே! வீரபாண்டியனுடைய மரணத்துக்குப் பழி வாங்குவதாக நான் சபதம் செய்தது
உண்மைதான்.  மீன் சின்னம் பொறித்த இந்தப் பாண்டிய குலத்து வாளினால் ஒன்று தங்களை 
கொல்லுவேன், அல்லது என்னை நானே கொன்று கொண்டு மாய்வேன் என்று சபதம் எடுத்துக் 
கொண்டேன்.  தங்களைக் கொல்வதற்கு என் நெஞ்சிலும் துணிவு இல்லை; என் கைகளிலும் வலிவு 
இல்லை.  என்னை நானே கொன்றுகொண்டு, தங்கள் முன்னாலேயே மடியலாம் என்று எண்ணினால், 
அதற்குப் போதிய பலம் என் கையில் இல்லை.  அரைகுறையாக முயன்று, என் உயிர் போகாவிட்டால் 
என்ன செய்வது என்று பயமாயிருக்கிறது.  ஐயா! என் சபதத்தை நிறைவேற்றுவதற்கு உதவி 
செய்யுங்கள்! இந்த வாளைத் தாங்களே வாங்கிக்கொண்டு, தங்கள் கையினால் என்னை வெட்டிக் 
கொன்றுவிடுங்கள்! அப்போது என் சபதம் முடிந்துவிடும்.  இந்த ஜன்மத்தில் மட்டுமின்றி இனிவரும்
பிறவிகளிலும் தங்களிடம் நன்றியுள்ளவளாவேன்!" 
இவ்விதம் கூறிக்கொண்டே நந்தினி நீட்டிய வாளை, மறுபடியும் ஆதித்த கரிகாலன் வாங்கிக்
கொண்டான்.  
"ஹா ஹா ஹா" என்று அந்த அரண்மனை முழுதும் எதிரொலி செய்யும்படி பயங்கரமாகச் 
சிரித்தான்.  
பக்க தலைப்பு
முப்பதென்பதாம்  அத்தியாயம் 
காரிருள்சூழ்ந்தது! 
ஆதித்த கரிகாலனுடைய பயங்கரமான வெறிகொண்ட சிரிப்பு, யாழ்க்களஞ்சியத்தில்
ஒளிந்திருந்த வந்தியதேவனுடைய காதில் விழுந்து அவனுக்கு ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது.  
விரைவில் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று அவனுடைய உள்ளுணர்ச்சி கூறியது.  நிழல் 
வடிவங்கொண்ட யமதர்மராஜன், கையில் பாசக்கயிறுடன் அந்த அறையில் பிரசன்னமாகியிருந்தான்.  
பாசக்கயிற்றை வீசுவதற்குச் சமயம் நோக்கிக் கொண்டிருந்தான்.  ஆனால் யார்மீது எறியப் போகிறான்?
யாருடைய உயிரைக் கொண்டு போகப் போகிறான்? கரிகாலன் உயிரையா? அல்லது நந்தினி தேவியின்
உயிரையா? ஒருவேளை அவர்கள் இருவரையுமே மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறதா? சகோதரன் 
சகோதரியைக் கொல்லப் போகிறானா? சகோதரி சகோதரனைக் கொல்லப் போகிறாளா? அல்லது 
இருவரும் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாகப் போகிறார்களா? இம்மாதி ஏதும் நடவாதபடி 
தடுப்பதற்காகத்தான் இளையபிராட்டி தன்னை விரைந்து போகும்படி அனுப்பி வைத்தாள்.  தன்னால் 
இயன்றதைச் செய்தாகி விட்டது.  இருவரிடமும் அவர்களுக்குள்ள உறவைப் பற்றிச் சொல்லியாகி
விட்டது.இருவருடைய உள்ளமும் இளகும்படியும் செய்தாகிவிட்டது.  ஆனாலும், பலன் ஏற்படுமா? 
வெறிகொண்ட கரிகாலரையோ, பிரமை பிடித்த நந்தினியையோ, கொடூரச் செயல் எதுவும் செய்யாமல் 
தடுக்க முடியுமா? இந்தச் சமயத்தில் தான் நடுவில் குறுக்கிடுவதால் ஏதேனும் நன்மை விளையுமா? 
ஒரு வேளை இருவருக்கும் மத்தியில் தன்னுடைய உயிரைப் பலி கொடுப்பதினால், அவர்களுடைய 
குரோதம் தணியுமா? -  இவ்வாறெல்லாம் எண்ணி வந்தியத்தேவனுடைய உள்ளக் கடல் கொந்தளித்துக்
கொண்டிருந்தது.  இன்னும் சிறிது பொறுத்துப் பார்க்கலாம், - தான் அவசரப்பட்டுக் குறுக்கிடுவதினால்
காரியம் கெட்டுப் போக வேண்டாம் என்று பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்.  
கரிகாலருடைய வெறி கொண்ட சிரிப்பு அடங்கிய பிறகு, அவர்களுடைய சம்பாஷணை
மேலும் தொடர்ந்தது.  "ஐயா! என் வாழ்நாளில் தங்களுக்கு மகிழ்ச்சி தரும்படியான காரியம் எதுவும் 
நான் செய்ததில்லை.  சாகும் சமயத்திலாவது தாங்கள் சிரித்து மகிழுவதற்குக் காரணமானது பற்றிச் 
சந்தோஷம்" என்றாள் நந்தினி.  
"ஆம், நந்தினி! இன்றைக்கு எனக்கு மிகச் சந்தோஷமான தினந்தான்.  இத்தனை வருஷமாக
நீ என்னைப் படுத்திவைத்த பாட்டுக்கெல்லாம் இன்றைக்கு முடிவு ஏற்படப் போகிறது.  இந்தத் தடவை 
நான் காஞ்சியிலிருந்து புறப்பட்டபோது ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டுதான் வந்தேன்.  
உன்னை நேரில் பார்த்த பிறகு ஒருவேளை என் மனம் சலித்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன்.
அதற்கிடமில்லாமல், நீயே வாளை என் கையில் கொடுத்து விட்டாய்!" என்று கூறிக் கரிகாலன் மீண்டும்
சிரித்தான்.  
"கோமகனே! எனக்கும் இன்று சுதினந்தான்.  தங்கள் கையினால் வெட்டுண்டு இறப்பதைப் 
போன்ற இனிமையான மரணம் எனக்குக் கிட்டப் போவதில்லை.  ஒரு காலத்தில் தாங்கள் என் 
கழுத்தில் பூமாலை சூட்டப் போகிறீர்கள் என்று ஆசைக் கனவு கண்டுகொண்டிருந்தேன். அது 
நிறைவேற முடியாமற் போயிற்று.  தங்கள் கையிலுள்ள வாளை என் கழுத்தில் சூட்டிக் கொள்ளும் 
பேறாவது எனக்குக் கிடைக்கட்டும்.  ஐயா! நேரம் ஆகிறது. ஏன் தாமதிக்கிறீர்கள்?" என்றாள் நந்தினி.
"பல வருஷம் தாமதித்தாகிவிட்டது.  இன்னும் சில நிமிஷம் தாமதிப்பதினால் நஷ்டம்
ஒன்றுமில்லை.  நந்தினி! சற்று என்னைப் பார்! கடைசி முறையாக என்னைப் பார்த்து என் கேள்விக்கு
மறுமொழி சொல்! பூமாலை சூட்ட வேண்டிய கையினால், நான் ஏன் உனக்கு வாள்மாலை சூட்ட 
வேண்டும்? நீ ஒரு காலத்தில் ஆசைக் கனவு கண்டது உண்மையாக இருந்தால், இப்போது ஏன் அதை 
நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது? அதற்குக் தடையாக நிற்பவர்கள் யார் என்று சொல்லு! உன்னைக் 
கொல்லுவதற்குப் பதிலாக அவர்களைக் கொன்று விட்டு மறுகாரியம் பார்க்கிறேன்!" என்றான் கரிகாலன்.
"வேண்டாம், ஐயா! வேண்டாம்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. என் காரணமாக, 
இனி வேறு யாரும் சாக வேண்டாம்! யாரும் தடையாக நிற்கவும் இல்லை. என்னுடைய தலைவிதிதான் 
தடையாக இருக்கிறது! "
"அந்த தடையை ஒரு நொடியில் நான் தவிடுபொடி செய்து விடுகிறேன். தலைவிதியின் பேரில்
பாரத்தைப் போடாதே! பிரம்மா எழுதிய எழுத்தை நான் மாற்றி எழுதுகிறேன், பார்!..." 
நந்தினி குறுக்கிட்டு, "பிரம்மா எழுதிய எழுத்தை மாற்றி எழுதலாம்.  ஆனால் ஒருவருடைய 
பிறப்பை மாற்றி அமைக்க முடியுமா?" என்று கேட்டாள்.  
"எதைப்பற்றிக் கேட்கிறாய், நந்தினி! நமது சிறு பிராயத்தில் உன்னைப் பட்டர் குலத்துப் 
பெண் என்றும், அதனால் உன்னுடன் சிநேகம் செய்யக்கூடாதென்றும் என் குடும்பத்தினர் 
சொன்னார்களே, அதைப்பற்றியா? இல்லை! நீ பட்டர் குலத்தில் வளர்ந்தவளேயன்றி அந்தக் குலத்தில்
பிறந்தவள் அல்ல என்பதை நீயும், நானும் முன்பே அறிந்திருந்தோம்." 
"அதைப்பற்றி இப்போது சொல்லவில்லை, ஐயா! தங்கள் அருமை நண்பர் - வாணர் குலத்து 
வீரர் - கொண்டு வந்த செய்தியைப் பற்றியே சொல்லுகிறேன்.  பழையாறை இளைய பிராட்டி அவசரமாகச்
சொல்லியனுப்பிய செய்தியைப் பற்றியே கூறுகிறேன்.நான் தங்கள் சகோதரி என்பதை இதற்குள்ளாகவே
மறந்து விட்டீர்களா?" 
"நந்தினி! அன்றைக்கு நான் உன்னிடம் அதைப்பற்றிச் சொன்னபோது, நீ அதை நம்பவில்லை. 
உன்னையும் என்னையும் பிரித்து வைப்பதற்குச் செய்யும் இன்னொரு சூழ்ச்சி என்றாய்.  பிறகு நானும் யோசித்து
அதே முடிவுக்கு வந்தேன்.  அதை நிச்சயம் செய்து கொள்ள வேண்டுமானால்..." 
"வேண்டாம்! வேண்டாம்! எனக்கு அதைப்பற்றிச் சந்தேகமே இல்லை.  கோமகனே! தங்களுக்கும்
எனக்கும் இரத்த சம்பந்தம் ஏதுமில்லை..." 
"பின், என்ன தடை நந்தினி?" 
"நான் தங்களுக்குப் பாட்டனார் முறையிலுள்ள பழுவேட்டரையரை மணந்தவள்.  தங்களுக்கு பாட்டி 
முறையில் உள்ளவள்.  இது போதாதா?" 
"நந்தினி! அந்தக் கதையைச் சொல்லி மறுபடியும் என்னை ஏமாற்றப் பார்க்க வேண்டாம். 
உலகத்தின் முன்னிலையில் நீ பழுவேட்டரையரின் இளைய ராணியாக இருக்கலாம்.  ஆனால் உண்மையில் நீ
அவரை மணந்து கொள்ளவில்லை.  ஏதோ காரணார்த்தமாகவே அவருடைய அரண்மனையில் வந்திருக்கிறாய். 
முன்னொரு தடவை, தஞ்சையில் நான் கேட்ட போது, இவ்வாறுதான் கூறினாய்.  அப்போது நான் நமது ஆசைக்
கனவை உனக்கு நினைவூட்டினேன்.  அதை நிறைவேற்றுவதற்கு நீ பயங்கரமான நிபந்தனைகளை விதித்தாய்!
பழுவேட்டரையரைக் கொன்று, என் தந்தையையும், சகோதரியையும் சிறையிலடைத்துவிட்டு, உன்னைச் சோழ
சிங்காதனத்தில் ஏற்றி வைக்க வேண்டும் என்றாய்.  வெறி கொண்ட ராட்சஷி நீ என்று தீர்மானித்துக்
கொண்டு, நான் காஞ்சிக்குப் போனேன்.  அப்புறம் நீ என்னை விட்டுவிட்டாயா? இல்லை! ஓயாமல் ஒழியாமல்
கனவிலும் நினைவிலும் வந்து என்னை வதைத்துக் கொண்டிருந்தாய்.  சில சமயம் அழுது புலம்பி என்னைத்
துன்புறுத்தினாய்; சில சமயம் மோகனப் புன்சிரிப்புச் சிரித்து என் உயிரை வதைத்தாய்! சில சமயம்
பிச்சியைப்போல் சிரித்து என்னையும் பித்தனாக்கினாய்!...." 
"கோமகனே! தங்களுடைய மனப்பிரமைக்கு என் பேரில் ஏன் குற்றம் சுமத்துக்கிறீர்கள்? தாங்கள்
எனக்குச் செய்த அநீதிக்கும் கொடுமைக்கும் பலனை அநுபவித்தீர்கள்.  அதற்கு நான் என்ன செய்வேன்? நான்
மட்டும் கஷ்டப்படவில்லையென்று எண்ணுகிறீர்களா? பழுவேட்டரையரின் மாளிகையின் சுக போகங்களில் ஆழ்ந்து
குதூகலமாயிருந்தேன் என்று நம்புகிறீர்களா?" என நந்தினி கேட்ட குரலில் மீண்டும் பழையபடி ஆத்திரமும்,
கொடூரமும் பொங்கித் ததும்பின.  
இதைக் கேட்டு வந்தியத்தேவன் பீதி கொண்டான்.  அவனுடைய உடம்பு படபடத்தது.  
ஆதித்த கரிகாலரின் ஸ்வரமும் ஏறத் தொடங்கியது.  
"நீயும் கஷ்டப்பட்டதாகவா சொல்கிறாய்?  அப்படியானால், இப்போது ஏன் நாம் ஏதேதோ 
பேசிக்கொண்டு வீண்பொழுது போக்க வேண்டும்?  என்னுடன் புறப்பட்டு வருவதற்கு உன்னுடைய 
சம்மதத்தைத் தெரியப்படுத்து, உடனே புறப்பட்டு செல்வோம்.  உனக்காக நான் இந்தப் பெரிய சோழ 
இராஜ்யத்தைத் தியாகம் செய்துவிட்டு வரச் சித்தமாயிருக்கிறேன்.  பிறந்த நாட்டையும் தாய் 
தந்தையரையும் உற்றார் உறவினரையும் துறந்துவிட்டு வருகிறேன்.  கப்பல் ஏறிக் கடல் கடந்து 
செல்வோம்.  கடல்களுக்கு அப்பால் எத்தனை எத்தனையோ அற்புதமான தீவ தீவாந்தரங்கள் 
இருக்கின்றன.  அவற்றில் ஒன்றை அடைவோம்.  உன்னைக் காட்டிலும் இந்த இராஜ்யம் எனக்குப் 
பெரியதன்று." 
"கோமகனே! தாங்கள் இராஜ்யத்தைத் துறந்தாலும் துறப்பீர்கள்! ஆனால் இந்தக் கீழ்க்குல 
மகள் புராதனமான சோழ சிங்காதனத்தில் ஏறுவதற்குச் சம்மதிக்க மாட்டீர்கள், இல்லையா?" என்று 
கூறிவிட்டு நந்தினி நகைத்த நகைப்பில் தீப்பொறி பறந்தது.  
"பெண்ணே! இதை வேறு விதமாகப் பார்! உனக்கு என்னைக் காட்டிலும் சோழ சிங்காதனம் 
உயர்வானதா? என்னிடம் நீ அந்த நாளிலிருந்து காட்டிய பிரியம் எல்லாம் சிங்காதனம் ஏறி மணிமகுடம்
சூடும் ஆசையினால் நடித்த நடிப்புத்தானா?" என்றான் கரிகாலன்.  
"ஆகா! அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.  எனக்கு அரண்மனை வாழ்வும், அரசபோகமும்
அரியாசனமும்தான் வேண்டும்.  இவற்றுக்காகவே, பழுவேட்டரையரை நான் மணந்தேன்.  இவற்றுக்காகவே,
வீரபாண்டியரைக் காப்பாற்றுவதற்கு முயன்றேன்.." 
"அடி! பாதகி! அவன் பெயரை எதற்காக இப்போது சொல்லுகிறாய்?" என்று கர்ஜனை செய்தான்
கரிகாலன்.  நந்தினி மறுமொழி கூறுவதற்கு முன்னால் அவன் தொடர்ந்து மேலும் கூறினான்: 
"ஆகா எனக்குத் தெரிகிறது.  உன்னுடைய சூழ்ச்சியெல்லாம் எனக்கு இப்போது நன்றாகத் 
தெரிகிறது.  வீரபாண்டியனுடைய பெயரைச் சொன்னால் எனக்கு ஆத்திரம் வரும்.  நான் உன்னை 
உண்மையாகவே கொல்ல வருவேன்.  உடனே இங்கு நீ காலால் இட்டதைத் தலையால் செய்யக் 
காத்திருக்கும் வாலிப சிங்கங்களில் ஒருவன் வந்து என்னைக் கொன்றுவிடுவான் என்பது உன் 
அந்தரங்க நோக்கம்.  அடி சண்டாளி! அந்த வந்தியத்தேவன் எங்கே இருக்கிறான்? எங்கே அவனை 
மறைத்து வைத்திருக்கிறாய், சொல்! இங்கேதான் அவன் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். நீ என்னோடு
வர மறுப்பதற்குக் காரணமும் இப்போது நன்றாய்த் தெரிகிறது.  ஆமாம்; அவன்தான் காரணம்! அவனோடு
நீ ஓடிப்போக எண்ணியிருப்பது தான் காரணம்! பழுவேட்டரையரை நீ இவ்விடம் விட்டு அனுப்பியதற்கும் 
அவன்தான் காரணம்.  நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேசிக்கொண்டுதான் இப்படியெல்லாம் சூழ்ச்சி 
செய்திருக்கிறீர்கள்...  ஆகா! எப்படி நான் ஏமாந்து போனேன்? எங்கே அந்த பாதகன் வந்தியத்தேவன்? 
எங்கே உன்னுடைய புதிய காதலன்...? 
இவ்வாறு ஆதித்த கரிகாலர் வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டே கத்தியைச் சுழற்றிகொண்டு
அங்குமிங்கும் அந்த அறையில் ஓடத் தொடங்கினார்.  ஒரு சமயம் யாழ்க்களஞ்சியத்தை நெருங்கிவந்தார். 
அப்போது நந்தினி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று அவர் காலடியில் விழுந்து "கோமகனே! இதைக்
கேளுங்கள்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு.  நான் சொல்லுவதைக் கேட்டுவிட்டுப் பிறகு எது 
வேணுமானாலும் செய்யுங்கள்.  வாணர்குல வீரரைப் பற்றித் தாங்கள் கூறுவது அபாண்டம்.  பூமாதேவி 
பொறுக்க மாட்டாள்.  அவருக்கு ஏதேனும் தாங்கள் தீங்கு செய்தால், என் அருமைத் தோழி மணிமேகலை
உயிரையே விட்டுவிடுவாள்! தங்களுக்கு மகத்தான பாவம் சம்பவிக்கும். வேண்டாம்! இதோ என் நெஞ்சைப்
பிளந்து பாருங்கள் வீர பாண்டியருடைய வாளினாலேயே என் நெஞ்சைக் கீறிப் பாருங்கள்.  அதற்குள்ளே 
தங்களுடைய திருவுருவத்தைத் தவிர வேறு எதுவும் இராது.  இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!" என்று 
கூறிவிட்டு நந்தினி விம்மினாள்.  
ஆதித்த கரிகாலனின் வெறி மீண்டும் சிறிது தணிந்தது போல் காணப்பட்டது.
"அப்படியானால், என்னுடன் வருவதற்கு நீ ஏன் மறுக்கிறாய்? அதையாவது சொல்லிவிடு! ஏன் 
என் கையினால் உன்னை வெட்டிக் கொல்லும்படி தூண்டுகிறாய்? உண்மையைச் சொல்லிவிடு!" என்று 
அலறினான் கரிகாலன்.  
"ஆகட்டும்; இதோ சொல்லுகிறேன், என்னுடைய நெஞ்சில் தங்களைத் தவிர வேறு யாருக்கும் இடம்
கிடையாது.  இது சத்தியமான போதிலும், நான் தங்களுடன் வர முடியாது.  தங்களை மணந்து கொள்ளவும்
இயலாது.அதற்குத் தடையாயுள்ள ஒரு பெரிய காரணம் இருக்கிறது. ஆம், கோமகனே! உண்மையில் அதை
சொல்லுவதற்காகவே நான் இங்கே வந்தேன்; தங்களையும் வரச் செய்தேன்.  அதைச் சொல்லி விட்டு என்னை
மன்னிக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக வந்தேன்.  இந்தத் துர்பாக்கியசாலியை மறந்து விட்டுத் தங்கள்
குலத்துக்கும், பதவிக்கும் உகந்த பெண்ணை மணந்து வாழும் படி கெஞ்சிக் கேட்டுக் கொள்வதற்காக வந்தேன். 
ஆனாலும் அதைச் சொல்லத் தயங்கினேன்.  அதைச் சொல்லலாம் என்று நினைக்கும்போதே பயமாயிருக்கிறது. 
தங்களுடைய கோபத்தைக் கொழுந்து விட்டெரியச் செய்வோமோ, அதனால் இன்னும் என்ன தீங்கு நேரிடுமோ
என்று அச்சமாயிருக்கிறது.  தாங்கள் அமைதியுடனிருப்பதாக வாக்குக் கொடுத்தால்...." 
"சொல், நந்தினி சொல்! எவ்வளவு கசப்பான விஷயமாயிருந்தாலும் கேட்டுப் பொறுத்துக்
கொள்வேன்.  சற்றுமுன், உன்னை மறந்துவிட்டு வேறு பெண்ணை மணந்து சந்தோஷமாயிருக்கும்படி 
புத்திமதி கூறினாய்! அதற்கே நான் கோபித்துக் கொள்ளவில்லையே? வேறு என்ன கூறினால்தான் 
கோபித்துக் கொள்ள போகிறேன்? ஆனால் மறுபடியும் ஏதாவது கற்பனை செய்யாதே!..." 
"கோமகனே! என் வாழ்க்கையே ஒரு கற்பனை.  என் பிறப்பே ஒரு புனைகதை.  என் வாழ்க்கையைச்
சிறிது காலம் நீடிப்பதற்காகவும், நான் கொண்ட கருமத்தை முடிப்பதற்காகவும் நான் பலமுறை கற்பனைக் கதை
புனைய வேண்டியதாயிருந்தது.  இனி அதற்கு அவசியம் ஒன்றும் இல்லை.  இன்றுடன் என் பொய் வாழ்க்கையை
முடித்துக் கொள்ளப் போகிறேன். தங்களுடைய மனத் துன்பத்தை அதிகமாக்கக் கூடாது என்பதற்காகவே சில
உண்மைகளை நான் அறிந்த பிறகும், தங்களுக்குச் சொல்லவில்லை.  தாங்கள் என்னை வெறுத்துவிடவேண்டும்
என்பதற்காகவே பல கற்பனைகளைப் புனைந்தேன்.  பல பயங்கரமான காரியங்களைப் புனைந்தேன்.  பல
பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி கூறினேன்.  என் உள்ளத்தில் ஓயாத போராட்டம் நடந்து
கொண்டிருந்தது.  என் கடமையும், நான் எடுத்துக் கொண்ட சபதமும், தங்கள் பேரில் கொண்ட காதலும் ஓயாமல்
போராடிக் கொண்டிருந்தன.  இவற்றினால் நான் அடைந்த துயரத்தைச் சொல்லி முடியாது.  கடைசியாக, இன்று
அந்தப் போராட்டமெல்லாம் முடியும் தருணம் நெருங்கியிருக்கிறது.  என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி
விடுகிறேன்.  அதைக்கேட்ட பிறகு என்னைத் தங்கள் கையினாலேயே கொன்றுவிடுங்கள்! ஆனால் வேறு யாருக்கும்
தாங்கள் தீங்கு செய்ய வேண்டாம்! வீண் பாவத்துக்கும் பழிக்கும் ஆளாக வேண்டாம்!..." 
"பாவம்! பழி! இனிப் புதிதாக நான் அடையக் கூடிய பாவம் - பழி என்ன இருக்கிறது? ஆயினும்
சொல், நந்தினி! என்னுடன் வருவதற்கு, - நம் இளம் பிராயத்து ஆசைக் கனவு நிறைவேறுவதற்கு -
தடையாயிருக்கும் உண்மையான காரணம் என்னவென்று சொல்! அது எவ்வளவு பயங்கரமான உண்மையாக இருந்தாலும்
சொல்! அதோ அந்தத் திரைச் சீலைக்குப் பின்னால் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்று நான் எண்ணிக்
கொண்டிருந்த வரையில், ஒளிந்திருப்பது யார் என்று தெரியாதிருந்த வரையில், என் மனம் அமைதி
இழந்திருந்தது.  உன்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என் உள்ளம் அதைப் பற்றியே எண்ணமிட்டுக்
கொண்டிருந்தது.  ஒளிந்திருந்தவள் மணிமேகலை என்று தெரிந்தபிறகு என் குழப்பமும் நீங்கியது.  உண்மை
தெரியாதிருக்கும் வரையிலேதான் பயம், கோபம், குழப்பம் எல்லாம்! எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மை
தெரிந்து போய்விட்டால் மனம் அமைதி அடைந்துவிடும் அல்லவா?" 
"கோமகனே! நான் சொல்லப்போகும் செய்தியினால் தங்கள் மனம் உண்மையிலேயே அமைதி
அடையட்டும்.  அதுதான் என் பிரார்த்தனை.  ஆனால் அந்தச் செய்தி நான் தங்களுடன் வருவதோ, தங்களை
மணப்பதோ முடியாத காரியம் என்பதையும் நிரூபிக்கும். என் வாழ்க்கையின் முடிவு, என் துன்பங்களுக்கு
விமோசனம், - மரணம் ஒன்றுதான் என்பதையும் தெரியப்படுத்தும்.  வாணர்குலத்து வீரர் என்னுடைய 
அன்னையைப் பற்றிய செய்தி கொண்டு வந்தார்.  அது உண்மை என்று நான் அறிவேன்.  ஈழநாட்டில் 
வெறி கொண்டு அலைந்து திரிந்துகொண்டிருந்த மாதரசியைப் பற்றி நான் அறிவேன்.  அவள் என் அன்னை 
என்று அறிவேன்.  இது மற்றும் பலருக்கும் தெரிந்திருந்தது.  ஏனெனில் அந்தப் பெண்ணரசிக்கும் 
எனக்கும் உருவத்தோற்றத்தில் அமைந்திருந்த ஒற்றுமையைப் பலரும் காணக்கூடியதாயிருந்தது.
என்னை, என் தாயார் என்று சிலர் சந்தேகிக்கும்படி யிருந்தது. ஆனால் என் அன்னையை அத்தகைய 
வெறியளாக்கிய காரணம் இன்னதென்பதையும் சில காலத்துக்கு முன்பு நான் அறிந்துகொண்டேன்.  
அது என்னைத் தவிர வேறு யாருக்காவது தெரியுமா என்பதை நான் அறியேன்.  யாரிடமும் இதுவரையில்
நான் சொன்னதில்லை.  இப்போதுதான் தங்களிடம் முதன் முதலாகச் சொல்லப் போகிறேன்.  ஐயா! என் 
தந்தை யார் என்பதைத் தங்களுக்குச் சொல்லப் போகிறேன்.  கருணை கூர்ந்து எனக்குச் சற்று முன் 
கொடுத்த வாக்குறுதியை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.  ஆத்திரத்துக்கும், குரோதத்துக்கும் 
இடங்கொடாதீர்கள்".  
இவ்விதம் பலமான பூர்வ பீடிகை போட்டுக்கொண்டு நந்தினி ஆதித்த காரிகாலரை மிக
நெருங்கி அவர் காதண்டை மிக மெல்லிய நடுங்கிய குரலில் "என்னைப் பெற்ற தந்தை...  தான்!" என்று
கூறினாள்.  கூறிவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.  
ஆதித்த கரிகாலன் ஆயிரம் தேள் கொட்டியவனைப் போல் ஒரு கணம் துடிதுடித்துத் துள்ளினான்.
 "இல்லை, இல்லை, இல்லை! ஒரு நாளும் இல்லை! நீ சொல்லுவது பொய், பொய் பெரும் பொய்!" 
என்று உரக்கக் கத்தினான்.  
மறுகணமே அவனுடைய ஆவேசம் அடங்கியது.  வேதனை மிகுந்த குரலில், "ஆம், நந்தினி, 
ஆம், நீ கூறியது உண்மையாகவே இருக்க வேண்டும்.இப்போது எல்லாம் எனக்குத் தெரிகிறது.  உன் 
மனத்திலே நிகழ்ந்திருக்கக் கூடிய போராட்டத்தைப் பற்றிய உண்மையும் தெரிகிறது.  நீ எவ்வளவு 
துன்பப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.  உன் குழப்பத்துக்கும், தயக்கத்துக்கும் உன் பயங்கரமான
வேண்டுகோளுக்கும் காரணம் தெரிகிறது.  அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடியபோது,
நான் உன் வேண்டுகோளை மறுத்தது எவ்வளவு பெரிய கொடுமை என்று தெரிகிறது! நந்தினி! உலகில் 
வேறு எத்தனையோ தீங்குகளுக்குப் பிராயச்சித்தம் உண்டு.  ஆனால் நான் செய்ததற்குப் பிராயச்சித்தம் 
கிடையாது.  நம் இருவருக்கும் நடுவில் உள்ள தடை நீங்க வழியே கிடையாது.  ஐயோ! இந்தப் பெரும் 
பாரத்தை இத்தனை நாள் எப்படி உன் மனத்தில் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தாய்? எப்படி இந்தப் 
பாதகன் இப்பூமியில் உயிர் வாழ்வதைச் சகித்துக் கொண்டிருந்தாய்? நல்லது! நம் இருவருடைய 
வாழ்க்கைக்கும் பரிகாரம் ஒன்று தான்! விமோசனம் ஒன்றுதான்.  இதோ, நந்தினி! என் பிராயச்சித்தம்!.." 
யாழ்க் களஞ்சியத்திலேயிருந்து வந்தியத்தேவன் மேற்கூறிய சம்பாஷணைகளையெல்லாம் 
கேட்டுக் கொண்டிருந்தான்.  இடையிடையே கரிகாலரின் வெறி மூர்த்தண்யமாகிக் கொண்டிருந்த போது 
அவன் அவர்களுக்கிடையே போக எண்ணினான்.  பிறகு அதனால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று 
தயங்கினான்.  அவர்களுடைய உணர்ச்சி மயமான பேச்சு அவனை ஒருபுறத்தில் செயலற்றவனாகச் செய்து 
கொண்டிருந்தது.  நந்தினி தன்னுடைய தந்தை இன்னார் என்று கூறியது மட்டும் அவன் காதில் நன்றாக 
விழவில்லை.  ஆனால் அவள் என்ன சொல்லியிருக்ககூடும் என்று அவன் மனதில் ஓர் ஊகம் 
உண்டாயிற்று.  அது அவனைத் 'திடுக்கிடச் செய்தது' என்றாலும், வேறு எந்தவிதமாகக் கூறினாலும், 
அது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும்.  அம்மாதிரி ஒரு பெரும் அதிர்ச்சியை அவனுடைய 
அதிர்ச்சிகள் நிறைந்த வாழ்க்கையில் அவன் அநுபவித்ததேயில்லை.  
கடைசியாக ஆதித்த கரிகாலர் அடங்கிய மெல்லிய தழதழத்த குரலில், நந்தினி கூறியதை
ஒப்புக் கொள்ளும் முறையில் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவனுடைய ஆர்வமும் கட்டுக் 
காவலைக் கடந்தது.அவர் உரக்கச் சத்தமிட்டுக் கொண்டிருந்த வரையில் அவன் அவ்வளவாகப் 
பயப்படவில்லை; இப்போதுதான் அதிகமாக அஞ்சினான்.  என்ன செய்யப் போகிறாரோ என்ற பெருங் 
கவலையினால், யாழ்க் களஞ்சியத்திலிருந்து சிறிது தலையை நீட்டிப் பார்த்தான்.  பார்வைக்கு இலக்கான
இடத்தில் நந்தினியும் கரிகாலரும் இல்லை. ஆனால் வேறொரு காட்சியைக் கண்டான்.  சுவரில் பதிந்திருந்த
நிலைக் கண்ணாடியில் அந்தக்காட்சி தெரிந்தது.  வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு துவாரத்தின்
வழியாக ஒரு கோரமான முகம் தெரிந்தது.  மந்திரவாதி ரவிதாஷனுடைய முகந்தான்! அடுத்த கணத்தில் 
வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு மெதுவாகத் திறப்பதை வந்தியத்தேவன் கண்டான்.  திறந்த கதவின் 
வழியாக முதலில் ஒரு புலியின் தலையும், பிறகு அதன் உடலும் வெளி வருவதையும் பார்த்தான்.  உடனே, 
அவனுக்கு உடம்பில் உயிர் வந்தது; உள்ளத்தில் ஊக்கம் பிறந்தது;  கால் கைகள் செயல் திறன் 
பெற்றன.  யாழ்க் களஞ்சியத்தின் மறைவிலிருந்து தாவி வெளியில் பாய்ந்து செல்ல முயன்றான்.  
அச்சமயம் பின்னாலிருந்து அவனுடைய கழுத்தில் வஜ்ராயுதத்தை யொத்த ஒரு கை சுற்றி
வளைத்துக்கொண்டது.  அண்ணாந்து நோக்கினான்.  காளாமுகக் கோலங்கொண்ட ஓர் ஆஜானுபாகுவான 
உருவம் கண் முன்னே தெரிந்தது.  ஆகா! இவன் யார்? இங்கு எப்படி வந்தான்! இது என்ன இரும்புப் 
பிடி? கழுத்து நெரிகிறதே! மூச்சுத்திணறுகிறதே! விழி பிதுங்குகிறதே! இன்னும் சில கண நேரம் 
போனால், உயிரே போய்விடுமே...! வந்தியத்தேவன் ஒரு பெரு முயற்சி செய்து அந்த இரும்புக் கையின் 
பிடியைத் திமிறித் தளர்த்திக்கொண்டு வெளியில் பாய்ந்தான்.  பாய்ந்த வேகத்தில் தரையில் விழுந்தான். 
தலையிலே ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டதுபோல் இருந்தது.  ஒருகணம் அவன் கண்களின் முன் கோடி சூரியர்கள்
கோடானுகோடி கிரணங்களைப் பரப்பிக் கொண்டு பிரகாசித்தார்கள்.  அடுத்த கணத்தில் அவ்வளவு
சூரியர்களும் மறைந்தார்கள்.  நாலா புறமும் இருண்டு வந்தது.  வந்தியத்தேவன் அக்கணமே நினைவை இழந்தான்.
***
யாழ்க் களஞ்சியத்திலிருந்து, அதன் வாசலில் கிடந்த வந்தியத்தேவனுடைய உடலை மிதித்துத்
தாண்டிக்கொண்டு, ஒரு கோர பயங்கரமான காளாமுக உருவம் வெளிப்பட்டது.  யாழ்க் களஞ்சியத்தின் அருகில்
தடால் என்ற சத்தத்தைக் கேட்டு நந்தினி திரும்பிப் பார்த்தாள்.  காளாமுக உருவம் கையில் கத்தியை
உருவிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டாள்.  விழிகள் பிதுங்கும்படியாக வியப்புடன் அந்த
உருவத்தை நோக்கினாள்.  அவள் வயிற்றிலிருந்த குடல்கள் மேலே ஏறி மார்பையும், தொண்டையையும்
அடைத்துக்கொண்டதாகத் தோன்றியது.  கண்களைத் துடைத்துக் கொண்டு, எதிரே பார்த்தாள்.கரிகாலன்
கீழே விழுந்து கிடக்கக் கண்டாள்.  அவன் உடலில் வீர பாண்டியனுடைய வாள் பாய்ந்திருந்ததையும் கண்டாள். 
அப்போது அவளுடைய தொண்டையிலிருந்து விம்மலும், சிரிப்பும் கலந்த ஒரு பயங்கரமான தொனி
எழுந்தது.அது அந்த அறையிலிருந்த கட்டில் முதலிய அசேதனப் பொருள்களைக் கூட நடுங்கும்படி செய்தது. 
"அடி பாதகி! சண்டாளி! உன் பழியை நிறைவேற்றி விட்டயா?" என்று கூறிக்கொண்டே காளாமுக உருவம்
அவளை மேலும் நெருங்கி வந்தது.
அதே சமயத்தில் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவின் வழியாக உள்ளே நுழைந்த புலி
உருவத்தின் மறைவில் ரவிதாஸனும் பிரவேசித்தான். காளாமுகனைப் பார்த்தவுடனே புலியைத் தூக்கி வீசி
எறிந்தான்.  அந்த அறைக்கு இலேசாக வெளிச்சம் தந்து கொண்டிருந்த விளக்கை அந்தச் செத்த புலியின் உடல்
தாக்கியது.  
விளக்கு அறுந்து விழுந்தது.  
அது அணைவதற்கு முன்னால் ஒரு கண நேரம் மணிமேகலையின் பயப் பிராந்தி கொண்ட 
முகத்தைக் காட்டியது.  
'கிறீச்' சென்று கூவிக் கொண்டே மணிமேகலை அங்கிருந்து ஓடினாள்.
அறையில் காரிருள் சூழ்ந்தது.  அந்தக் காரிருளில் சோகந் ததும்பிய விம்மல் குரலும், வெறி
கொண்ட சிரிப்பின் ஒலியும், மரணத் தறுவாயில் கேட்கும் முனகல் ஓசையும் மனிதர்கள் விரைந்து 
அங்குமிங்கும் ஓடும் காலடிச் சத்தமும் கலந்து கேட்டன.  
பக்க தலைப்பு
நாற்பதாம்  அத்தியாயம் 
"நான்  கொன்றேன்!" 
திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சோழ வம்சாவளியை விவரிக்கும்போது, "வானுலகைப்
பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான்.  உலகில் கலி என்னும் காரிருள் 
சூழ்ந்தது!" என்று கூறப்பட்டிருக்கிறது.  வீர பாண்டியன் தலை கொண்ட வீராதி வீரனாகிய சோழ 
சாம்ராஜ்யத்துப் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் அகால மரணமடைந்தது பற்றித்தான் 
அவ்வாறு திருவாலங் காட்டுச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.  
ஆதித்த கரிகாலன் மரணமுற்றுக் கிடந்த கடம்பூர் அரண்மனையின் அறையில் அப்போது 
உண்மையாகவே காரிருள் சூழ்ந்திருந்தது.  
காளாமுகத் தோற்றங் கொண்டவனால் கழுத்து நெறிபட்டுத் தரையில் தடாலென்று தள்ளப்பட்ட 
வல்லவரையனுடைய உள்ளத்திலும் அவ்வாறே சிறிது நேரம் இருள்  குடிகொண்டிருந்தது.  கொஞ்சம் 
கொஞ்சமாக அந்த உள்ளத்தில் ஒளி தோன்றியபோது, நினைவு வரத்  தொடங்கியபோது, அவன் கண்களும் 
விழித்தன.  ஆனால் அவனைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளின்  காரணத்தினால் அவனுடைய கண்ணுக்கு 
எதுவும் கோசரம் ஆகவில்லை.  ஆதலின், அவன் எங்கே  இருக்கிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் 
என்பதும் அவன் உள்ளத்தில் புலப்படவில்லை.  
மண்டையை வலித்துக் கொண்டிருந்த உணர்ச்சி முதலில் ஏற்பட்டது.  கழுத்து நெறிப்பட்ட இடத்திலும்
வலி தோன்றியது.  மூச்சுவிடுவதற்குத் திணற வேண்டியிருந்ததை அறிந்தான்.  அந்த மண்டை வலி எப்படி
வந்தது? இந்தக் கழுத்து வலி எதனால் ஏற்பட்டது? மூச்சு விடுவதற்கு ஏன் கஷ்டமாயிருக்கிறது? ஆகா! அந்தக்
காளாமுகன்! அவனைத் தான் கண்டது உண்மையா? அவன் தன் கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றது உண்மையா?
எதற்காகக் கழுத்தை நெறித்தான்? தான் சத்தம் போடுவதைத் தடுப்பதற்காகவா? தன்னை அப்பால்
நகரவொட்டாமல் தடுப்பதற்காகவா? ஏன்? ஏன்? அவனுடைய இரும்புப் பிடியை மீறிக்கொண்டு தான் போக
விரும்பியது எங்கே? ஆகா! நினைவு வருகிறது! ஆதித்த கரிகாலரிடம் போவதற்காக! ஐயோ! அவர் கதி
என்ன ஆயிற்று? நந்தினி என்ன ஆனாள்? ரவிதாஸன் என்ன செய்தான்? தன்னைத் தடுக்கப் பார்த்துத் தரையில்
தள்ளிய காளாமுகன் பிறகு என்ன செய்திருப்பான்?...  தான் இப்போது இருப்பது எங்கே? பாதாளச்
சிறையிலா? சுரங்கப் பாதையிலா? கண் விழிகள் பிதுங்கும் படியாக வந்தியத்தேவன் சுற்று முற்றும் உற்றுப்
பார்த்தான்.  ஒன்றுமே தெரியவில்லை! கடவுளே இப்படியும் ஓர் அந்தகாரம் உண்டா?...  தான் விழுந்த இடம்
நந்தினியின் அந்தப்புர அறையில், யாழ்க்களஞ்சியத்தின் அருகில் என்பது நினைவு வந்தது. அங்கேயே அவன்
கிடக்கிறானா? அல்லது வேறு எங்கேயாவது தூக்கிக் கொண்டு போய்ப் போட்டு விட்டிருக்கிறார்களா? இதை
எப்படி தெரிந்து கொள்வது? 
இரண்டு கைகளையும் நீட்டித் துழாவிப் பார்த்தான்.  ஒரு பொருள் கைக்குத் தட்டுப்பட்டது.  அது
என்ன? கத்திபோல் அல்லவா இருக்கிறது? ஆம்; கத்திதான்! திருகுமடல் உள்ள கத்தி! சாதாரணக் கத்திகளைவிட, 
மிகச் சக்தி வாய்ந்தது! எவன் பேரிலாவது பாய்ந்தால், அவன் செத்தான்! இம்மாதிரி விசித்திரமான கத்தியை 
எங்கேயோ 
பார்த்தோமே? அது எங்கே? யார் கையில் பார்த்தோம்!... ஆம்! இடும்பன்காரியின் கையில் அல்லவா 
பார்த்தோம்! அன்று
முன்னிரவில் நடந்தவையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன! இந்தக் கத்தி இங்கே எப்படி வந்தது? ஓ!
இதன் மடல் ஈரமாயிருக்கிறதே! ஈரம் எப்படி வந்தது? தண்ணீரா இல்லை! எண்ணெயா? அதுவும் இல்லை!
இரத்தமாகத்தான் இருக்க வேண்டும்! ஐயோ! யாருடைய இரத்தம்? ஒருவேளை தன்னுடைய இரத்தமே தானோ?
வந்தியத்தேவன் தன் பின் மண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.  கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
அங்கேயெல்லாம் வலித்ததே தவிர, இரத்தம் வந்ததாகத் தெரியவில்லை.  உடம்பில் வேறு எங்கும் கத்திக் 
காயத்தின் வலி 
இல்லை!...  பின், இந்த 'முறுகுக் கத்தியின் மடல் யாருடைய இரத்தத்தைக் குடித்துவிட்டு இங்கே நம் அருகில் 
கிடக்கிறது?
 இதனால் அவன் யாரையும் காயப்படுத்தவில்லை.  இதற்கு முன் அவன் கையினால் அதை எடுத்ததும் இல்லை! பின்னே 
யார் அதை உபயோகித்திருப்பார்கள்! இடும்பன்காரியாயிருக்குமா? அவன் யார்மேல் இதைப் 
பிரயோகித்திருப்பான்? 
ஒருவேளை இடும்பன் காரிதான் அந்தப் பயங்கரத் தோற்றங் கொண்ட காளாமுகனின் வேடத்தில் வந்தானா? இல்லை! 
இல்லை! அப்படியிருக்க முடியாது! இடும்பன்காரி அவ்வளவு நெடிதுயர்ந்த உருவம் கொண்டவன் அல்ல...  
இது என்ன? காலடிச் சத்தமா? யாராவது வருகிறார்களா? பேசாமல் இருக்கலாமா? குரல்
கொடுக்கலாமா? வருகிறவர்கள் கையில் விளக்குடன் வரக்கூடாதோ? எங்கே இருக்கிறோம் என்றாவது தெரிந்து
கொள்ளலாம் அல்லவா? இருட்டில் தெரியாமல் தன்னை மிதித்துவிடப் போகிறார்களே?...
இந்த எண்ணம் தோன்றியது வந்தியத்தேவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.  கையில் அந்தச்
சிறிய கத்தியை ஆயத்தமாக வைத்துக்கொண்டு "யார் அங்கே?" என்று கேட்டான்.  
அவனுடைய குரல் ஒலி அவனுக்கு அளவில்லாத வியப்பை அளித்தது.  அதை அவனாலேயே அடையாளங் 
கண்டுகொள்ள முடியவில்லை. 
அவனுடைய குரலாகவே தோன்றவில்லை.  அந்தக் காளாமுகன் பிடித்த பிடியினால் அவனுடைய தொண்டைக்கு
இந்தக் கேடு நேர்ந்திருக்கிறது. சத்தம் வெளியில் வருவதே கஷ்டமாயிருக்கிறது.   
மறுபடியும் ஒரு தடவை "யார் அங்கே?" என்று உரக்கச் சத்தமிட்டுக் கேட்க முயன்றான்.  ஏதோ
அதுவும் ஓர் உறுமல் சத்தமாக வந்ததே தவிர, குரல் ஒலியாகவே தோன்றவில்லை.  
மீண்டும் காலடிச் சத்தம் விரைவாகக் கேட்டு நின்றது.  வந்தவர் அவனுடைய குரலைக் கேட்டுப் பேயோ 
பிசாசோ என்று பயந்து வந்த வழியே திரும்பிப் போய்விட்டார் போலும்.  
இதை எண்ணி வந்தியத்தேவன் சிரிக்க முயன்றான்.  சிரிப்புக் குரலும் அம்மாதிரி உருத் 
தெரியாமலேதான் 
ஒலித்தது.
சரி; இனி உட்கார்ந்திருப்பதிலோ காத்திருப்பதிலோ பயனில்லை.  எழுந்து நடந்து எங்கே 
இருக்கிறோம் என்று 
சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்.  
எழுந்து நின்றான்; கால்கள் தள்ளாடின.  ஆயினும் சமாளித்துக் கொண்டு நடந்தான்.கைகளை 
எவ்வளவு 
நீட்டினாலும் ஒன்றும் தட்டுப்படவில்லை.
தூரத்தில் ஏதோ சிறிது பளபளவென்று தெரிந்தது.  ஆகா! அது நிலைக்கண்ணாடி போல் அல்லவா 
இருக்கிறது? 
அதில் எங்கிருந்தோ மிக மெல்லிய ஒளிக்கிரணம் ஒன்று பட்டதினால் அது பளபளக்கிறது.  ரவிதாஸன் கையில் 
புலியின் 
உடலை எடுத்துக் கொண்டு நுழைந்த தோற்றம் அந்தக் கண்ணாடியிலேயே பிரதிபலித்தது வந்தியத்தேவனின் நினைவுக்கு 
வந்தது.சரி, சரி! நந்தினியின் அந்தப்புர அறைக்குள்ளேதான் இன்னும் இருக்கிறோம்.  ஆனால் ஏன் இங்கே 
இப்படி 
இருள் சூழ்ந்திருக்கிறது? ஏன் நிசப்தம் குடி கொண்டிருக்கிறது? இந்த அறையில் சற்று முன்னால் இருந்தவர்கள் 
அத்தனைபேரும் என்ன ஆனார்கள்? 
இவ்விதம் எண்ணமிட்டுக்கொண்டே வந்தியத்தேவன் இருட்டில் தடுமாறிக்கொண்டு நடந்தான். 
வாசற்படிக்கருகில் போனால் ஒருவேளை வெளிச்சம் இருக்கலாம்,- அல்லது அங்கிருந்து வெளியேறி யாரையாவது
கேட்டு நடந்ததைத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு சென்றான்.  ஏதோ காலில் தடுக்கவே
மறுபடியும் தடால் என்று விழுந்தான்.  ஆனால் இம்முறை ஏதோ மிருதுவான பொருளின் மீது விழுந்தபடியால்
பலமாக அடிபடவில்லை.  அந்த மிருதுவான பொருள் புலியின் தோல் என்று தெரிந்தது.  ரவிதாஸன் கையில்
எடுத்துக்கொண்டு வந்து எறிந்த புலித்தோல் மீது அவன் விழுந்திருக்க வேண்டும்...  
தடுமாறி விழுந்தபோது கையிலிருந்த கத்தி நழுவி விட்டது;  அதைக் கண்டுபிடித்து எடுத்துக் 
கொள்வதற்காகக் 
கையை நீட்டித் துழாவினான்.  கையில் மிருதுவாக ஏதோ தட்டுப்பட்டது.  வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் 
நடுங்கியது.
ரோமங்கள் குத்திட்டு நின்றன; நெஞ்சில் பீதி குடி கொண்டது.  
அப்படியும் இருக்க முடியுமா? என்று எண்ணிக் கொண்டே மறுபடியும் தடவிப் பார்த்தான்.  
ஆம்; அது ஒரு மனித உடல்தான்! அவன் கையில் தட்டுப்பட்டது அந்த மனிதனின் உள்ளங் கை ! 
புலித்தோலை 
உடனே அகற்றித் தூர எறிந்தான்.  பிறகு உற்றுப் பாத்தான்.  கண்ணாடியில் விழுந்த இலேசான ஒளி 
பிரதிபலித்துக் கீழே 
கிடந்த உடலையும் சிறிது புலப்படுத்தியது.  ஐயோ! 
இளவரசர் ஆதித்த கரிகாலர் அல்லவா கிடக்கிறார்? அவர் அல்ல! அவருடைய உயிர் அற்ற உடல்தான் 
கிடக்கிறது! 
வந்தியத்தேவனுடைய நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்துக் கொண்டது.  கண்களில் அவனை அறியாமல் 
கண்ணீர் ததும்பியது! 
நடு நடுங்கிய கைகளினால் கரிகாலருடைய உடம்பின் பல பகுதிகளையும் தொட்டுப் பார்த்தான்.  
சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லை.  உயிர் சென்றுவிட்ட வெறுங்கூடுதான்! 
அந்த உயிரற்ற உடம்பின் விலாப் பக்கத்திலிருந்து பெருகிப் பக்கத்தில் வழிந்திருந்த இரத்தம்
அவனுடைய கைகளை நனைத்தது.  
அச்சமயம் அவனுக்குக் குந்தவைப் பிராட்டியின் நினைவு உண்டாயிற்று.  அந்த மாதரசி அவனை எதற்காக 
அனுப்பி வைத்தாளோ, அந்தக் காரியத்தில் அவன் வெற்றி அடையவில்லை. முழுத்தோல்வி அடைந்தான்! இனி அவள் 
முகத்தில் விழிப்பது எங்ஙனம்?  
அவனால் எவ்வளவு பிரயத்தனம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்தாகிவிட்டது.ஆனாலும் 
பயன்படவில்லை. 
விதி வென்றுவிட்டது! 
இளவரசரின் உயிரற்ற உடலை எடுத்து தன்னுடைய மடியிலே போட்டுக்கொண்டான்.  மேலே என்ன செய்வது 
என்று, தெரியவில்லை.  சிந்திக்கும் சக்தியையே இழந்துவிட்டான். சத்தம்போட்டு அலறுவதற்குத் தொண்டையிலும் 
சக்தி 
இல்லாமற் போய்விட்டது.  
"இளவரசர் இறந்துவிட்டார்; ஒப்புக்கொண்ட காரியத்தில் நாம் வெற்றி பெறவில்லை; குந்தவையின் 
முகத்தில் இனி
 விழிக்க முடியாது!" என்னும் இந்த எண்ணங்களே திரும்பத் திரும்ப அவன் மனத்தில் வந்து கொண்டிருந்தன.
இவ்வாறு எண்ணிக் கொண்டு அவன் எத்தனை நேரம் அங்கே உட்கார்ந்ழூதிருந்தான் என்பது அவனுக்கே 
தெரியாது.
தீவர்த்தி வெளிச்சத்துடன் மனிதர்கள் சிலர் அந்த அறையை நெருங்கி வருகிறார்கள் என்பதைக் கண்ட 
பிறகுதான் அவனுக்கு ஓரளவு சுய நினைவு வந்தது.  
கரிகாலருடைய உடலைத் தன்னுடைய மடியிலிருந்து எடுத்துக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றான். 
பத்துப் பன்னிரண்டு ஆள்கள் முன்வாசற் பக்கமிருந்து வந்தார்கள்.  அவர்களில் இருவர் தீவர்த்தி பிடித்துக்
கொண்டிருந்தார்கள்.  மற்றும் சிலர் வேல் ஏந்திக்கொண்டு வந்தார்கள்.
எல்லாருக்கும் முன்னால் கந்தமாறனும், அவனுக்கு அடுத்தாற் போல் பெரிய சம்புவரையரும் வந்தார்கள்.
வந்தவர்கள் எல்லாருடைய முகங்களும் பயப்பிராந்தியைக் காட்டின.  தீவர்த்தி வெளிச்சத்தில்
பேயடித்தவர்களைப் போல் காணப்பட்டார்கள்.
கந்தமாறனுடைய முகத்தில் மட்டும் கோபமும் ஆத்திரமும் கொந்தளித்துக் கொண்டிருந்தன.  
அவன் வந்தியத்தேவனைப் பார்த்தும் "அடே, பாதகா! கொலைகாரா! சிநேகத் துரோகி! இராஜத் 
துரோகி! நீ
தப்பித்துக் கொண்டு ஓடவில்லையா! போய்விட்டாய் என்றல்லவா நினைத்தேன்?" என்று கர்ஜனை செய்தான். 
பின்னர் பெரிய சம்புவரையரை நோக்கி, "தந்தையே! அதோ பாருங்கள், கொலைகாரனை! சிநேகிதன்
போல் நடித்துப் பாதகம் செய்த பழிகாரனைப் பாருங்கள்! நம்முடைய வம்சத்துக்கு அழியாத களங்கத்தை உண்டு
பண்ணிய சண்டாளனைப் பாருங்கள்! அவன் முகத்தோற்றத்தைப் பாருங்கள்! அவன் செய்த பயங்கரக் குற்றம் அவன்
முகத்திலேயே எழுதியுள்ளதைப் போல் பிரதிபலிப்பதைப் பாருங்கள்!" என்றான்.  
சம்புவரையர் அதற்கெல்லாம் மறுமொழி ஒன்றும் சொல்லாமல் கீழே கிடந்த ஆதித்த கரிகாலனுடைய 
உடலை 
அணுகினார்.  அதன் தலைமாட்டில் உட்கார்ந்து, சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "ஐயோ! 
விதியே! 
இது என் வீட்டிலா நேர வேண்டும்? விருந்துக்கு என்று அழைத்து வேந்தனைக் கொன்ற பழி என் தலையிலா விடிய 
வேண்டும்?"என்று புலம்பிக் கொண்டே தமது தலையில் படார், படார் என்று அடித்துக்கொண்டு புலம்பினார்.  
கந்தமாறன் "தந்தையே! நம் குலத்துக்கு அந்தப் பழி ஒரு நாளும் வராது! இதோ கொலைக்காரனைக்
கையும் மெய்யுமாகப் பிடித்திருக்கிறோம்! இவன் இளவரசரைக் கொல்வதற்கு உபயோகித்த கத்தி அதோ
கிடப்பதைப் பாருங்கள்! அதில் இரத்தம் தோய்ந்திருப்பதைப் பாருங்கள்! முன்னால் நான் வந்து பார்த்தபோது
இவன் இல்லை, கத்தியும் இல்லை. ஓடப்பார்த்து, முடியாமல் திரும்பி விட்டான்! ஒரு வேளை இளவரசர்
உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று பார்க்க வந்தான் போலும்! கத்தியால் குத்தியது போதாது
என்று தொண்டையைத் திருகிவிட்டுப் போக வந்தான் போலும்! தந்தையே! இப்பேர்ப்பட்ட மகா பாதகனுக்கு, -
சதிகாரத் துரோகிக்கு, - என்ன தண்டனை கொடுப்பது? எது கொடுத்தாலும் போதாதே?" என்று கந்தமாறன்
பேசிக் கொண்டே போனான்.  
வந்தியத்தேவன் ஏற்கெனவே தொண்டை நெறித்து பேச முடியாதவனாயிருந்தான்.  கந்தமாறனுடைய
வார்த்தைகள் அவனைத் திக்பிரமை கொள்ளச் செய்தன.  தன்னைப் பிறர் கொலைகாரனாகக் கருதக் கூடிய
நிலையில்தான் இருப்பது அப்போதுதான் அவனுக்குத் தெரிய வந்தது.  இளவரசனைக் குத்திக் கொன்ற
குற்றத்தையல்லவா இந்தக் கந்தமாறன் தன்மீது சுமத்துகிறான்? முன்னே இவன் முதுகில் நான் கத்தியால்
குத்தியதாகச் சொன்னான்.  இப்போது இளவரசரை நான் கொன்றுவிட்டதாகவே சொல்கிறான்! நம் நிலை
அப்படி இருக்கிறது! ஆகா! அந்தப் பழுவூர் மோகினி, - அழகே வடிவான விஷப்பாம்பு, - இதற்காகவே
திட்டமிட்டிருந்தாள் போலும்! இதற்காகவே தன்னைச் சில முறை காப்பாற்றினாள் போலும்! குந்தவைப்
பிராட்டியின் பேரில் இவளுக்கு உள்ள குரோதத்தை இவ்விதம் தீர்த்துக் கொண்டாள்! ஆகா! அந்தச்
சௌந்தரிய வடிவங்கொண்ட பெண் பேய் எங்கே? எப்படித் தப்பித்தாள்? காரியம் முடிந்ததும் மந்திரவாதி
ரவிதாஸன் முதலியவர்களோடு சுரங்க வழியில் தப்பி ஓடிவிட்டாள் போலும்!...  
இவ்வாறு எண்ணமிட்ட வந்தியத்தேவன் சிந்தனை சட்டென்று இன்னொரு பக்கம் திரும்பியது! ஆதித்த
கரிகாலரைத் தான் கொல்லவில்லையென்பது நிச்சயம்.  ஆனால் வேறு யார் கொன்றிருப்பார்கள்?
நந்தினியா? அல்லது ரவிதாஸனா? அல்லது காளாமுகனா? - ஒரு வேளை தான் நினைவு மறக்கும் தறுவாயில்
ஒரு கணம் தோன்றி மறைந்த மணிமேகலையாகத்தான் இருக்குமோ? அல்லது இந்த முறுக்குக் கத்தியை எடுத்து
வந்தவனான இரும்பன் காரியாக இருக்குமோ? ஒருகால் கந்தமாறனே தான் நந்தினி மேல் கொண்ட
மோகத்தினால் இந்தப் படுபாதகத்தைச் செய்து விட்டு நம் பேரில் பழியைப் போடுகிறானா? அல்லது
நந்தினி சொல்லிய அதிசயமான இரகசியத்தைக் கேட்டு விட்டுத் தன்னைத்தானே நொந்துகொண்ட ஆதித்த
கரிகாலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா? 
கந்தமாறன், தன் பக்கத்தில் நின்ற ஆட்களைப் பார்த்து, "தடியர்களே! ஏன் சும்மா
நிற்கிறீர்கள்? இந்தக் கொலைகாரனைப் பிடித்துக் கட்டுங்கள்!" என்று கத்தியதுந்தான் வந்தியத்தேவனுக்குத்
தனது இக்கட்டான நிலைமை மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தது.  கந்தமாறனை அவன் இரக்கமும், துயரமும் ததும்பிய
கண்களினால் பார்த்தான்.  ஒரு பெரு முயற்சி செய்து தொண்டையில் ஜீவனைத் தருவித்துக்கொண்டு,
"கந்தாமாறா! இது என்ன? நான் இத்தகைய கொடுஞ் செயலைச் செய்திருப்பேன் என்று நீ நம்புகிறாயா?
எதற்காக நான் செய்ய வேண்டும்? எனக்கு என்ன லாபம் இதனால்? நண்பா!..." என்பதற்குள் கந்தமாறன்,
"சீச்சீ! நான் உன் நண்பன் அல்ல.  அவ்விதம் கூறிய உன் நாவை அறுக்க வேண்டும்.  உனக்கு என்ன லாபம்
என்றா கேட்கிறாய்? ஏன் லாபம் இல்லை? நந்தினியின் கடைக்கண் கடாட்சத்தைப் பெறலாம் என்ற ஆசைதான்!
அடே! அந்தப் பழுவூர் மோகினி இப்போது எங்கே?' என்றான்.  
"கந்தமாறா! உண்மையில் எனக்குத் தெரியாது.  நான் இங்கே நினைவிழந்து கிடந்தேன். நீங்கள் 
வருவதற்குச் 
சற்று முன்புதான் நினைவு பெற்றேன். நந்தினி என்ன ஆனாள் என்று எனக்குத் தெரியாது.  ஒருவேளை சுரங்கப்பாதை 
வழியாக வெளியேறியிருக்கலாம்.  வேட்டை மண்டபத்தில் அவளுடைய ஆட்கள், - வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகள்,
 - நாலு பேர் காத்திருக்கிறார்கள்.  அவர்களுடன் நந்தினி போயிருக்கலாம்!" 
கந்தமாறன், "ஓகோ! உன்னையும் ஏமாற்றிவிட்டு போய் விட்டாளாக்கும்.  ஆனால் உனக்கு ஒன்றும்
தெரியாது என்று சாதிக்க வேண்டாம்.  அதை யார் நம்புவார்கள்? நீ அவளுடைய மோகவலையில்
விழுந்திருந்தாய், காலால் இட்ட காரியத்தைத் தலையினாலே முடிப்பதற்குத் தயாராய் இருந்தாய் என்பது
எனக்குத் தெரியாதா? ஆதித்த கரிகாலரே சொல்லியிருக்கிறார்.  நந்தினியும் அவரிடத்தில் உன்னைப்
பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கிறாள். அவள் தூண்டியோ, அவளுக்குத் திருப்தி தரும் என்று நினைத்தோ,
நீ இந்தக் கொலை பாதகத்தைச் செய்துவிட்டாய்! உன்னுடைய முகத்தில் விழித்தாலும் பாவம்!" என்றான்.  
"கந்தமாறா! சத்தியமாகச் சொல்லுகிறேன்.  நான் இளவரசரைக் கொல்லவில்லை.  அவர்
உயிரைக் காப்பாற்றும் பொறுப்பைப் பழையாறை இளைய பிராட்டியிடம் நான் ஏற்றுக்கொண்டு வந்தேன்..."
"இவ்விதம் சொல்லித்தான் இளவரசரை ஏமாற்றினாய்! பிறகு வஞ்சகம் செய்து குத்திக் கொன்றாய்!
இல்லாவிட்டால், இந்த அறைக்குள் எப்படி வந்து சேர்ந்தாய்? எதற்காக வந்தாய்?" 
"கந்தமாறா! இளவரசருக்கு ஆபத்து வரப்போவதையறிந்து அவரைப் பாதுகாக்க வந்தேன்.  அந்த
முயற்சியில் தோற்றுப் போனேன்.  ஆனால் அது என் குற்றம் இல்லை.உன் தங்கை மணிமேகலையை வேணுமானால்
கேட்டுப் பார் அவள்தான் என்னை..." 
"சீச்சீ! என் தங்கையைப் பற்றிப் பேசாதே! அவள் பெயரையே சொல்லாதே. ஜாக்கிரதை!
இனி அவள் பேச்சை எடுத்தால் தெரியுமா? உன் கழுத்தைப் பிடித்து நெறித்து இப்பொழுதே கொன்று
விடுவேன்!" 
இவ்விதம் கூறிவிட்டுக் கந்தமாறன் வந்தியத்தேவன் மீது பாய்ந்து அவன் மார்பையும் தோள்களையும்
சேர்த்துப் பிணைத்திருந்த கயிறுகளைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினான்.  பின்னர், கீழே ஆதித்த
கரிகாலன் உடலுக்கருகில் உட்கார்ந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சம்புவரையரைப் பார்த்து, "தந்தையே! இவனை
என்ன செய்கிறது என்று சொல்லுங்கள்! நம் குலத்துக்கு அழியா அபகீர்த்தியை உண்டு பண்ணிய இந்தக்
கொலைபாதகனை என்ன செய்கிறது என்று சொல்லுங்கள்! தாங்கள் அநுமதி கொடுத்தால் இவனை இந்த நிமிடமே
கண்ட துண்டமாக்கிப் போடுகிறேன்! தந்தையே! சொல்லுங்கள்!" என்று கத்தினான்.  
கரிகாலனுடைய உடலைத் தடவிப் பார்த்துக்கொண்டு பிரமை பிடித்தவர்போல் உட்கார்ந்திருந்த
சம்புவரையர், கந்தமாறனுடைய கூச்சலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தார்.  அவருடைய பார்வை கந்தமாறனுக்கு
அப்பால் சென்றது.  அந்த அறையிலேயிருந்த கட்டில் திரைச் சீலை அசைந்ததைக் கண்டார்.மறுகணம்
அத்திரைச்சீலையை விலக்கிக்கொண்டு ஓர் உருவம் வெளிப்படுவதைப் பார்த்தார்.  கண்களில் நீர்
ததும்பியிருந்த காரணத்தினால் திரைச்சீலையிலிருந்து வெளிப்பட்டு வந்தது யார் என்பதை அவர் உடனே
தெரிந்து கொள்ளவில்லை.  இன்னும் சிறிது அருகில் அந்த உருவம் வந்ததைக் கண்டதும் அவள் தனது
செல்வக்குமாரி மணிமேகலை என்பதை அறிந்து கொண்டார்.  அதனால் அவருக்கு ஏற்பட்ட வியப்பும், அருவருப்பும்
வேதனையுடன் கலந்து முகத்தில் தோன்றின.  
"மணிமேகலை! நீ எப்படி இங்கே வந்தாய்?" என்று அவர் கேட்ட வார்த்தைகள், கந்தமாறனையும்
திரும்பிப் பார்க்கும்படி செய்தன.  "அப்பா! நான் இங்கேயேதான் இருந்தேன்.  அவரை ஒன்றும் செய்ய
வேண்டாம் என்று அண்ணனுக்குச் சொல்லுங்கள்.  அவர் பேரில் குற்றம் ஒன்றுமில்லை!" என்றாள்.
கந்தமாறன், "அப்பா! பார்த்தீர்களா? இந்தப் பாதகன் எப்படி என் தங்கையின் மனத்தைக்
கெடுத்திருக்கிறான்.பார்த்தீர்களா? இவன் பேரில் குற்றம் ஒன்றும் இல்லையாமே!" என்று சீறிக்கொண்டே
சிரித்தான்.  
"ஆம், அண்ணா! நிச்சயமாக இவர் பேரில் குற்றம் ஒன்றுமில்லை!" என்று மணிமேகலை
உறுதியாகக் கூறினாள்.  
கந்தமாறனை ஒரு பக்கம் ஆத்திரமும், இன்னொரு பக்கம் வெட்கமும் சேர்ந்து பிடுங்கித் தின்றன.
"தங்காய்! வாயை மூடிக்கொள்! உன்னை யார் இங்கே அழைத்தார்கள்? நீ இங்கே வந்திருக்கவே
கூடாது.  உன் புத்தி சுவாதீனத்தில் இல்லை.  உடனே முன் கட்டுக்குப் போ! மற்றப் பெண்கள் உள்ள இடத்துக்குப்
போ!" என்று கத்தினான் கந்தமாறன்.  
"இல்லை, அண்ணா! என் புத்தி சுவாதீனத்திலேதான் இருக்கிறது.  உன் புத்திதான் கலங்கிப்
போயிருக்கிறது.  இல்லாவிட்டால் இவர் இளவரசரைக் கொன்றதாக நீ குற்றம் சாட்டியிருக்க மாட்டாய்!"
என்றாள் மணிமேகலை.  
கந்தமாறன், "அறிவு கெட்டவளே! இந்தக் கொலை பாதகனுக்கு நீ ஏன் பரிந்து பேசுகிறாய்?" 
என்றான்.  
"அவர் கொலைபாதகர் அல்ல, அதனால்தான்!" என்றாள் மணிமேகலை.  
கந்தமாறன் ஆத்திரச் சிரிப்புடன், "இவன் கொலைபாதகன் இல்லை என்றால், பின்னே யார்? 
இளவரசரைக் 
கொன்றது யார்? நீ கொன்றாயா?" என்றான்.  
"ஆம்! நான்தான் கொன்றேன்! இந்த வாளினால் கொன்றேன்!" என்றாள் மணிமேகலை.  
இந்த வார்த்தைகளைக் கேட்டு அங்கேயிருந்தவர்கள் அவ்வளவு பேரும் திகைத்துப் போனார்கள். 
அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.  
ஒரு கண நேரத் திகைப்புக்குப் பிறகு கந்தமாறன் வந்தியத்தேவனை விட்டுவிட்டு மணிமேகலையண்டை 
பாய்ந்து ஓடினான்.  அதன் நுனியை உற்றுப் பார்த்தான்.  
"அப்பா! இதைக் கேளுங்கள்.  இவளால் இந்த வாளைத் தூக்கவே முடியவில்லை.  இவள் இதனால்
இளவரசரைக் கொன்றதாகச் சொல்லுகிறாள். இது இளவரசர் உடம்பில் பாய்ந்திருந்தால், திரும்ப இவளால்
எடுத்திருக்க முடியுமா? இதன் நுனியில் பாருங்கள்! சுத்தமாய்த் துடைத்தது போலிருக்கிறது! வல்லவரையனைக்
காப்பாற்றுவதற்காக இப்படிச் சொல்லுகிறாள்! இவன் பேரில் இவளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? அவ்வளவு தூரம்
இவளுடைய மனதை இந்தப் பாதகன் கெடுத்துவிட்டிருக்கிறான்.  மாய மந்திரம் போட்டு
மயக்கிவிட்டிருக்கிறான்! அவனுடைய முகத்தைப் பாருங்கள்! அவன் செய்த குற்றம் அவன் முகத்திலேயே
எழுதியிருப்பதைப் பாருங்கள்!" என்றான்.  
உண்மையிலேயே வந்தியத்தேவன் முகத்தில் வியப்பும், திகைப்பும் வேதனையும் குடிகொண்டிருந்தன. 
இத்தனை நேரம் மௌனமாயிருந்தவன் இப்போது வாய் திறந்து, "கந்தமாறா! நீ சொல்லுவது உண்மைதான்!
நான்தான் குற்றவாளி.  உன் சகோதரி என்னைக் காப்பாற்றுவதற்காகவே இப்படிக் கற்பனை செய்து
சொல்லுகிறாள்! இளவரசி! தங்களுக்கு நன்றி! என் உடலிலிருந்து உயிர் பிரிந்த பிறகும் தாங்கள்
என்னிடம் வைத்த சகோதர பாசத்தை மறக்க மாட்டேன்.ஆனால், தங்கள் தமையன் சொல்வதை இப்போது
கேளுங்கள்! அந்தப்புரத்துக்குப் போய்விடுங்கள்!" என்றான்.  
இதைக் கேட்ட கந்தமாறனுடைய குரோதம் சிகரத்தை அடைந்தது.  முன்னமே சிவந்திருக்க அவன்
கண்கள் இப்போது அனலைக் கக்கின.  "அடே! எனக்காக நீ சிபாரிசு செய்யும் நிலைமைக்கு வந்து
விட்டதா? நான் சொல்லிக் கேட்காதவள் நீ சொல்லித் தான் கேட்பாளா? இவள் உன்னிடம் அவ்வளவு
சகோதர வாஞ்சை வைத்திருக்கிறாளா? இவள் என்னுடன் பிறந்தவளா? உன்னோடு பிறந்தவளா? என்னைக்
காட்டிலும் உன்னிடம் இவளுக்கு மரியாதை அதிகமா? அது ஏன்? என்ன மாயமந்திரம் செய்து இவள் மனத்தை
அவ்விதம் கெடுத்துவிட்டிருக்கிறாய்? உன்னை நான் கொல்லுவதற்கு இதுவே போதுமே! இதோ உன்னை யமனுலகம்
அனுப்பிவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்! உன் அருமைச் சகோதரி கையில் வைத்திருந்த வாளினாலேயே
உன்னைக் கொல்லுகிறேன்.  அது உனக்கு மகிழ்ச்சி தரும் அல்லவா?" இவ்வாறு கத்திக்கொண்டே கந்தமாறன்
வாளை ஓங்கிக் கொண்டு வந்தியத்தேவன் மீது பாய்ந்தான்.  
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters
of this website.