irangkEca veNpA
(in tamil script, unicode/utf-8 format)

இரங்கேச வெண்பா




Acknowledgements:
Etext preparation: Dr. N. Ganesan, Houston, Texas, USA
Proof-reading: Mr. Sriram, Indianapolis, IN, USA
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5, FireFox Mozilla,..) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.

In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

&169; Project Madurai, 1998-2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


இரங்கேச வெண்பா

1. அறத்துப்பால்

பாயிர இயல்
கடவுள் வாழ்த்து

சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு
இன்னமுத மாகும் இரங்கேசா - மன்னுமளத்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு.
1
வான் சிறப்பு

கெண்டலுறை யூர்க்கச்சிக் கோநகரின் செய்குணத்தால்
எண்டிசையும் போற்றும் இரங்கேசா - மண்டிக்
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
2
கொண்டல் - மேகம், சார்வாய் - அநுகூலமாய்.

நீத்தார் பெருமை

மன்னன்மக முங்காதி மைந்தன் தனையடைந்தோன்
இன்னுயிருங் காத்தான் இரங்கேசா - சொன்னால்
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.
3
மகம் - யாகம், காதிமைந்தன் - விசுவாமித்திரன்.

அறன்வலி யுரைத்தல்

கானக் குரங்கெழலாற் கங்கை சுதன் முதலோர்
ஈனப் படலால் இரங்கேசா - ஆன
அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை யதனை
மறத்திலின் ஊங்கில்லை கேடு.
4
எழலால் - வினங்கினதாலும், கங்கைசுதன் - கங்காதேவியின் புத்திரன், க்கம்
- நன்மை

இல்லற இயல்

இல்வாழ்க்கை

பத்துடனான் கில்லம் பரகதிகொண் டேகினான்
இத்தலமேல் ஆள்வான் இரங்கேசா - நித்தம்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை.
53
இத்தலமேலாள்வான் - கஞ்சனூர் ழ்வார், இயல்பினான் - முறைப்படி.

வாழ்க்கைத் துணைநலம்

மாண்டவியார் சாபத்தை வல்லிளுளால் மாற்றினான்
ஈண்டோர் மடந்தை இரங்கேசா - நீண்டபுகழ்ப்
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மை யுண்டாகப் பெறின்.
6
திண்மை - கலங்காநிலைமை.

புதல்வரைப் பெறுதல்

வேதம் புகழ்நதியை மேதினியில் தந்துகுலந்து
ஏதுங் கெடுத்தான் இரங்கேசா - ஓதும்
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
7
வேதம்புகழ் நதி - காயகங்கை, பழிபிறங்கா - பழிக்கு ஆளாகாத.

அன்புடைமை

வெற்பின் சிறகரிய செந்நென் பளித்துமுனி
இப்புவியைக் காத்தான் இரங்கேசா - நற்புகழாம்
அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
8
முனி - ததீசிமுனிவர்.

விருந்தோம்பல்

தேசுபெறு மாறன் தெளித்த முளையமுதிட்டு
ஈசனுடன் போந்தான் இரங்கேசா - பேசுங்கால்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
9
மாறன் - இளையான்குடிமாற நாயனார், முளை - அன்றுவிதைத்த நென்முளை

இனியவை கூறல்

வன்சமர்நட் பால்வென்று மாநிறமா ளத்தருமன்
இன்சொல்லாற் பெற்றான் இரங்கேசா - பொன்செய்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்.
10
வான்சமர் - பாரதப்போர், பண்பின் தலைப்பிரியாத - அறத்தினின்று வழுவாத,
நயன் - இலாபம்

செய்ந்நன்றி அறிதல்

நாடிச் சிறைக்கருடன் நாகக் கொடுங்கணையை
ஈடழித்தான் அன்றோ இரங்கேசா - நடுங்கால்
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
11
சிறைக்கருடன் - சிறகுகளையுடைய கருடன், ஈடழித்தான் -
சின்னாபின்னப்படுத்தினான்

நடுவு நிலைமை

வேதவிதி வீமா விலங்கிற்கு உடற்பாதி
ஈதல்அழ கென்றான் இரங்கேசா - ஒதுங்கால்
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
12
விலங்கு - புருஷாமிருகம், நடுவிகந்தாம் க்கம் - நீதிதவறியதால் வரும்
செல்வம்.

அடக்க முடைமை

ஆன்ற சபையில் அடங்காச் சிசுபாலன்
ஏன்றிரந்தான் அன்றோ இரங்கேசா - சான்றோர்கள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை யுயிர்க்கு.
13
ஆன்றசபை - பெரியோர்கள் சபை, ஏன்று - தண்டனையடைந்து,
ஊங்கில்லை - சிறந்ததில்லை.

ஒழுக்கமுடைமை

வேடவான் மீகர்பின்பு வேதியரின் மேலானார்
ஏடவிழ்தார் சூடும் இரங்கேசா - நாடில்
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
14
ஏடவிழ் - இதழ் விரிந்த, குடிமை - உயர்குடிப் பிறப்பு.

பிறனில் விழையாமை

அம்பிகையை நோக்கி யளகேசன் கண்ணிழந்தான்
இம்பர் பரவும் இரங்கேசா - நம்பிப்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனென்றோ ஆன்ற வொழுக்கு.
15
அம்பிகை - பார்வதி, அளகேசன் - குபேரன், இம்பர் - இவ்வுலகோர்.

பொறையுடைமை

முந்து மரந்தரித்த மூர்க்கன்சொற் கேட்டுமவன்
எந்தைபிரான் என்றான் இரங்கேசா - கொந்தி
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
16
முந்தும் - எதிரிலுள்ள, அகழ்வார் - தோண்டுகின்றவர்.

அழுக்காறாமை

வெள்ளி கொடுத்தல் விலக்கிவிழி தோற்றுலகில்
எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா - உள்ளத்து
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.
17
வெள்ளி - சுக்கிரன், ஒன்னார் - பகைவர், ஈன்பது - தருவது.

வெ•காமை

முன்னோனைப் போரின் முடுக்கி விமானத்தை
என்னோகைக் கொண்டான் இரங்கேசா - அன்னோ
நடுவின்றி நன்பொருள் வெ·கிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
18
முன்னோன் - குபேரன், முடுக்கி - வென்று, பொன்றல் - கெடுதல்.

புறங்கூறாமை

தக்கதுரி யோதனன்பாற் சார்ந்த சகுனியைப்போல்
இக்கு வலயத்தில் இரங்கேசா - மிக்குப்
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
19
பகச்சொல்லி - புறங்கூறி, தேற்றாதவர் - அறியாதவர்.

பயனில சொல்லாமை

வேந்தை வதிட்டன் வியத்தல்பழு தென்றமுனி
ஏந்துதவந் தோற்றான் இரங்கேசா - ஆய்ந்தக்கால்
சீ£ர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
20
வேந்து - அரிச்சந்திரன், முனி - விசுவாமித்திரன், ஏந்துதவம் - நோற்ற நோன்மை,
நீர்மை - பெருந்தன்மை.

தீவினை அச்சம்

காளமுனி பாண்டவர்மேல் ஏவுங் கடிவிழுங்க
ஏளிதம் ஆனான் இரங்கேசா - நாளுந்தான்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
21
கடி - பூதம், பயத்தல் - விளைவித்தல்.

ஒப்புரவறிதல்

அந்தணர் மேன்மை அறியாமற் சர்ப்பவென்ற
இந்திரன்பாம் பானான் இரங்கேசா - முந்தவே
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அ·தொருவன்
விற்றுக் கோட்டக்க துடைத்து.
22
சர்ப்ப - விரைந்துசொல்லுங்கள் என்னும் பொருளைத்தரும் சொல்,
இந்திரன் - நகுஷமகாராஜன், ஒப்புரவு - உலகநடையறிந்து செய்யுங் காரியம்.

ஈகை

அங்கியுங் குண்டலமும் ஆகண் டலர்க்களித்தான்
இங்கிதமாக் கன்னன் இரங்கேசா - மங்கியே
சாதலின் இன்னாத தில்லை இனிதாதூஉம்
ஈதல் இயையாக் கடை.
23
கண்டலன் - தேவேந்திரன், இயையாக்கடை - இசையாத போது.

புகழ்

மும்மை யுலகும் முசுகுந் தனுத்துதிக்கும்
எம்மையாட் கொண்ட இரங்கேசா - செம்மையாத்
தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
24
தோன்றல் - பிறத்தல்.

துறவற இயல்

அருளுடைமை

வஞ்சப் புறவினுடன் வான்துலையில் ஏறினான்
இன்சொற் சிவிமுன் இரங்கேசா - எஞ்சாமல்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
25
வான்துலை - நீண்ட தராசு, சிவி - சிபிச்சக்கரவர்த்தி

புலான் மறுத்தல்

அந்தணணைக் கன்மாட பாதன் அருந்தினான்
இந்த வுலகத்து இரங்கேசா - வந்த
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஸ்ரீங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
26
கன்மாடபாதன்- கன்மாடபாதன் என்னும் அரசன், போற்றாதார் - காப்பாற்றாதவர்.

தவம்

வேந்தந் தணர்குலத்து மேலா கியதகைமை
ஏந்துவத் தேய்ந்தான் இரங்கேசா - மாந்தர்க்கு
வேண்டிய வேண்டியாங்கு எய்தலாற் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
27
ஈண்டு - இந்நிலவுலகில்


கூடா வொழுக்கம்

சந்யாசி யாய்விஜயன் தார்குழலைக் கொண்டகன்றான்
இந்நா னிலம்போற்றும் இரங்கேசா - சொன்னால்
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியிந்தோல் போர்த்துமேய்ந் தற்று.
28
தார்குழல் - சுபத்திரை, வல்லுருவம் - பொய்வேடம்.

கள்ளாமை

உத்தங்கன் ஓலை யளித்தநா கக்குலங்கள்
இற்ற புகையால் இரங்கேசா - மற்றுலகில்
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.
29
ஓலை - காதோலை, நாகக்குலங்கள் - தஷகனென்னும் நாகக்
கூட்டங்கள், இற்ற - மடிந்தன, கள்வேம் - திருடுவோம்.

வாய்மை

மூவாரிச் சந்திரற்கு முன்னின்ற காட்சிபோல்
ஏவர்பெற் றார்மேனாள் இரங்கேசா - பூவில்
மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ் செய்வாரிற் றலை.
30
மனத்தொடு - திரிகரணசுத்தியாக.

வெகுளாமை

தாக்கி நிமிவதிட்டர் சாபத்தால் தம்முடல்விட்டு
ஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா - நோக்கினால்
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனில் தீய பிற.
31
நிமிவதிட்டர் - நிமிச்சக்கரவர்த்தியும் வசிட்டமுனிவரும்.

இன்னா செய்யாமை

பாந்தாள் முனிமேற் படுத்தபரிச் சித்தன்றான்
ஏந்துதுன்பம் உற்றன் இரங்கேசா - மாந்தர்
பிறர்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
32
பாந்தள் - பாம்பு, படுத்த - போட்டதனால்.

சொல்லாமை

சொல்லார் முனிக்கிறுதி சூழ்கார்த்த வீரன்குலம்
எல்லாம் இறந்தது இரங்கேசா - கொல்லவே
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
33
சொல்லார்முனி - புகழ்பெற்ற ஜமதக்கினிமுனிவர்.

நிலையாமை

அட்டகோ ணத்தனுடல் அத்திரமென் றான்திசைகள்
எட்டும் பரவும் இரங்கேசா - மட்டினால்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
34
அட்டகோணத்தன் - அட்டகோண மகரிஷி,
அத்திரம் - நிலையற்றது, கடை - இழிவு.

துறவு

பீடுபெறு பட்டினத்தப் பிள்ளையைப்போ லேதுறவார்க்கு
ஈடு தருமோ இரங்கேசா - நீடுலகில்
யானெனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த வுலகம் புகும்.
35
ஈடு - பலன், செருக்கு - அகங்காரம்.

மெய்யுணர்தல்

கர்ப்பத்தி லேசுகனார் கேடில்பொரு ளைக்குறித்தார்
இப்புதுமைக் கன்பாம் இரங்கேசா - உற்பத்தி
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயனின்றே
மெய்யுணர் வில்லாதவர்க்கு.
36
கேடில்பொருள் - அழியாப்பொருள், மெய்யுணர்வு - உண்மையறிவு.

அவா அறுத்தல்

தேசஞ்சொல் பத்ரகிரி சிந்தையின்மூ வாசைவிட்டான்
ஈசன் பரவும் இரங்கேசா - பாச
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ற்றான் வரும்.
37
தேசஞ்சொல் - தேயத்தார்புகழும், ஆற்ற - முற்றும்,
தவாவினை - நல்வினை.

ஊழ்

சிந்துபதி தந்தையடு தேர்சிசய னாலிறந்தான்
இந்துதவழ் இஞ்சி இரங்கேசா - முந்திவரும்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
38
சிந்துபதி - சயிந்தவன், தேர்விசயன் - அருச்சுனன்,
இஞ்சி - மதில், ஊழ் - விதி.

பொருட்பால்

அரசியல்

இறைமாட்சி

ஒன்றி மறித்தான் உரோணிசக டைச்செளரி
என்றும் புகாமல் இரங்கேசா - நன்று
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்.
39
ஒன்றி - சென்று, செளரி - சனிபகவான், முறை - செங்கோல், இறை - கடவுள்

கல்வி

மல்லல் வியாகரண மாருதிகற் கக்கருதி
எல்லவன்பின் போந்தான் இரங்கேசா - நல்ல
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
40
மல்லல் - பெரிய, எல்லவன் - சூரியன், ஒருமை - ஒரே பிறப்பு

கல்லாமை

ஞானசம் பந்தருடன் நன்றாய்ச் சமணரெதிர்த்து
ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா - ஆன
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
41
கோட்டிக்கொளல் - சபையிற்பேசுதல், ன அரங்கு - தகுதியான வகுப்பிடம்

கேள்வி

பாகவதங் கேட்டுப் பதிச்சித்தன் முத்திபெற்றான்
ஏக வுருவாம் இரங்கேசா - சோக
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
42
இழுக்கல் - வழுக்குதல்.

அறிவுடைமை

சீதரனைப் பார்த்தனன்று சேர்ந்தான் அரவுயர்த்தோன்
யாதவரைச் சேர்ந்தான் இரங்கேசா - ஒதில்
அறியுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அ·தறி கல்லா தவர்.
43
சீதரன் - கண்ணன், அரவுயர்ந்தோன் - துரியோதனன்
அறிகல்லாதவர் - அறியமாட்டாதவர்.

குற்றங் கடிதல்

கையரிந்தான் மாறன் கதடிவித்த குற்றத்தால்
எய்யுஞ் சிலைக்கை இரங்கேசா - பையத்
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
44
மாறன் - பாண்டியன்

பெரியாரைத் துணைக்கோடல்

யோகமுனி ராகவனை யுற்றரக்கர் போர்களைந்தே
யாகம் முடித்தான் இரங்கேசா - ஆகையால்
தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
45
யோகமுனி - விசுவாமித்திரர், தக்கார் - மேலோர், செற்றார் - பகைவர்.

சிற்றினஞ் சேராமை

துன்னு சகுனிகன்னன் சொற்கேட்டு அரவுயர்த்தோன்
என்னபயன் பெற்றான் இரங்கேசா - மன்னிய
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
46
சிற்றினம் - அற்பர் உறவு

தெரிந்து செயல்வகை

விடமணன் வன்மம் விளம்ப இலங்கைநகர்
ஈடழிந்த தன்றோ இரங்கேசா - கூடத்
தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வவார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
47
வீடணன் - விபீடணன், ஈடு - பெருமை, அரும்பொருள் - செய்வதற்கரிய பொருள்.

வலி அறிதல்

பைதல் எனக்கருதிப் பார்க்கவரா மன்சிலையடு
எய்துவந் தோற்றான் இரங்கேசா - வையத்து
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்.
48
பைதல் - சிறுபையன், ஊக்கி - போர்செய்து,
இடைக்கண் முறிந்தார் - இடையில் தோற்றார்.

காலம் அறிதல்

ஆண்டு பதின்மூன்று அரவுயர்த்தோன் செய்தவெல்லாம்
ஈண்டுபொறுத் தாண்டான் இரங்கேசா - வேண்டிய
காலங்கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.
49
கலங்காது - தவறாது, ஈண்டு - இவ்வுலகம்.

இடனறிதல்

சார்ந்துபறை கீறிச் சாரசந்தன் தன்னுடலை
ஈர்ந்துவென்றான் வீமன் இரங்கேசா - தேர்ந்தக்கால்
எண்ணியார் எண்ணம் இழப்பார் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
50
சார்ந்து - சென்று, பறை - பேரிகை, இடன் - தகுதி

தெரிந்து தெளிதல்

கன்னன் தெளிந்தாசான் காதலனை ஐயமுற்றான்
இன்னாற் பொலிந்தான் இரங்கேசா - முன்னமே
தேரான் தெளிபுந் தெளிந்தான்கண் ஐயுறவுந்
தீரா இடும்பை தரும்.
51
சான்காதலன் - அசுவத்தாமன், இடும்பை - துன்பம்.

தெரிந்து விளையாடல்

சல்லியனைத் தேருக்குச் சாரதியாய்க் கொண்டதனால்
எல்லாவன்சேய் தோற்றான் இரங்கேசா - சொல்லில்
இதனை யிதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
52
எல்லவன் - கன்னன்.

சுற்றந்தழால்

வில்லுக் கதிபன் விரகினால் ஐவரர்க்கு
இல்லுற்று உய்ந்தார் இரங்கேசா - நல்ல
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.
53
வில்லுக்கதிபன் - விதுரன், விரகு - முன்புத்தி.

பொச்சாவாமை

தண்ணார் சடைமுடியைத் தக்கனிழந் தானரனை
எண்ணாமல் அன்றோ இரங்கேசா - மண்ணோர்
இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
54
தண்ணார் - குளிர்ச்சி பொருந்திய, மைந்துறுதல் - இறுமாந்திருத்தல்.

செங்கோன்மை

கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை
எண்கொண்ட சோழன் இரங்கேசா - மண்கொண்ட
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
55
வாரானை - வாராத பிரதாபருத்திரனை, பொன்னிக்கரை - கங்கைக்கரை.

கொடுங்கோன்மை

தன்று புவிக்கிடும்பை சூழ்ந்து புரவேந்தர்
இன்றி யெறிந்தார் இரங்கேசா - கன்றியே
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
56
தேய்க்கும்படை - குறைக்கும்வாள், கன்றி - மன்நொந்து.

வெருவந்த செய்யாமை

தாடகைதன் மைந்தர் தவமுனியை அச்சுறுத்தி
ஈடரக்க ரானார் இரங்கேசா - நாடி
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
57
வெருவந்த - அஞ்சும்படியான, ஒருவந்தம் - நிச்சயமாக.

கண்ணோட்டம்

சொல்லுகவென் றங்கதனைத் தூதேவி மாதைவிடல்
இல்லையவன் என்றான் இரங்கேசா - மெல்ல
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
58
ஒறுத்தாற்றல் - தண்டஞ் செய்தல்.

ஒற்றாடல்

மேகநா தன்செய்த வேள்விதனை ஒற்றினால்
ஏகியழித் துய்ந்தார் இரங்கேசா - சேகரித்த
ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.
59
மேகநாதன் - இந்திரஜித்தன், ஒற்றினால் - ஏவலால்.

ஊக்கமுடைமை

வீசு புகழ்விசயன் விற்றமும்பு சென்னியின் மேல்
ஈசன் தரித்தான் இரங்கேசா - ஆசையால்
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையான் உழை.
60
அதர்வினாய் - வழிகேட்டுக்கொண்டு, உடையானுழை - உடையானிடம்.

மடியின்மை

துஞ்சுவிழிக் கும்பகன்னன் துண்டஞ் செவியிழந்தும்
எஞ்சுதலை யுற்றான் இரங்கேசா - விஞ்சும்
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
61
துண்டம் - மூக்கு, மடிமை - சோம்பல்

ஆள்வினை யுடைமை

செய்துசிவ பூசை சிரஞ்சீவி ஆமபயம்
எய்தினன்மார்க் கண்டன் இரங்கேசா - நொய்தாக
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
62
நொய்தாக - அற்பமாக, உஞற்றுபவர் - முயற்சிசெய்வபர்.

இடுக்கண் அழியாமை

விற்று மனையாளை வெட்டுதலும் உற்றதுயர்
இற்றது மன்னற்கு இரங்கேசா - அற்றுலகில்
இன்னாமை இன்பம் எனக்கொளின் குந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
63
இற்றது - நீங்கிற்று, ஒன்னார் - பகைவர்.

அமைச்சியல்

அமைச்சு

மானவன்மால் தேவர் வனசரராம் மாதைவிடாய்
ஈனமுறும் என்றான் இரங்கேசா - ஞானத்து
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
64
மானவன் - இராமன், அறிகொன்று - சொன்ன நன்மையையும் அழித்து

சொல்வன்மை

சோழன் சிவாற்பரச்சொல் தோற்றமைதான் இந்தவுலகு
எழும் அறிந்த இரங்கேசா - தாழாமல்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
65
சோழன் - கிருமிகண்ட சோழன்.

வினைத் தூய்மை

தன்மகிணன் தோற்றாள் தாணிமுழு தூங்கைகை
என்மகற்கு நல்கொன்று இரங்கேசா - நன்மை
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
66
மகிணன் - கணவன், ஒருவுதல் - நீக்குதல், பீழை - துன்பம்.

வினைத்திட்பம்

ஆர்க்குங் கடல்நீர் அருந்த வொருகரத்தில்
ஏற்க அடங்கிற்று இரங்கேசா - பார்க்கும்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி யன்னார் உடைத்து.
67
ஆர்க்கும் - ஒலிக்கின்ற, எள்ளாமை - இகழாமை.

வினை செயல்வகை

தொட்ட தெரிப்போன் சுடர்முடிமேல் அங்கைவைப்பித்
திட்டவனைச் செற்றாய் இரங்கேசா - முட்ட
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
68
தூது

அக்கன் முதலரக்கர் ஆவிதனை வாங்கியூர்
எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா - மிக்க
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாந் தூது.
69
அக்கன் - அஷகுமாரன்.

மன்னரைச் சேர்ந்தொழுகல்

அஷன் நிதியோற்கு அபசாரஞ் செய்ததனால்
எஷன் பிரிந்தான் இரங்கேசா - பஷம்
பழையம் எனக்கருதி பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.
70
அஷன் - இயக்கன்.

குறிப்பறிதல்

பார்வைகண் டிராமன் பரன்வில் ஒடித்தணங்கை
ஏர்வையாக் கொண்டான் இரங்கேசா - நீர்மைபொடும்
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
71
பரன் - சிவன், ஏர்வை - மனைவி.

அவை அறிதல்

தேவர் குழாத்தினிடைத் தென்பால் அகத்தியனை
ஏவினிகர் என்றான் இரங்கேசா - பூவில்
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
72
தொகை - பொருள்.

அவை அஞ்சாமை

ஆன்றசங்கர் போற்றவொன்றை ஐயிரண்டா மானிலத்தார்க்கு
ஈன்றவரிற் சொன்னார் இரங்கேசா - தோன்றவே
சுற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார் முன்
கற்ற செலச்சொல்லுவார்.
73
செலச்சொல்லுவார் - எளிதில் அறியும் வண்ணம் சொல்லுவார்.

அங்க இயல்

நாடு

சீரிதாம் எண்ணமுற்ற தேசத்தில் தென்திருக்கா
வேரிசூழ் சோணாடு இரங்கேசா - ஆரப்பெரும்
பொருளாற் பெட்டக்கதாகி யருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
74
ஆர - நிறைந்திருப்பதனால், பெட்டக்கது - விரும்பத்தக்கது, ஆற்ற - மிக.

அரண்

சிந்துவிடை யேழுமதில் சேர்ந்த இலங்கைநகர்
எந்தவகை போயது இரங்கேசா - முந்தும்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க்கண் நில்லா தரண்.
75
சிந்து - சமுத்திரம்.

பொருள் செயல்வகை

நட்டுவனாம் பற்குணன்றான் நாடாளக் கண்டுதிசை
எட்டும் பணிந்தது இரங்கேசா - கிட்டுபொருள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு.
76
படை மாட்சி

மொய்கொள் கடல்போலும் மூல பலமடிய
எய்துவென்ற தோர்வில் இரங்கேசா - வையத்து
ஒலித்தக்கால் என்னாம் உவரி யெலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
77
மொய்கொள் - நெருங்கிய, உவரி - திரண்டு.

படைச் செருக்கு

மார்பத்து அழுந்துகணை வாங்கிவிடுத் தான்கரங்கள்
சர்பத்தன் மைந்தன் இரங்கேசா - ஆர்வத்தால்
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
78
மெய்வேல் - மார்பில் தைத்திருந்த வேலாயுதம்

நட்பு

வாசவன் தஷன் மகம்புகா வாறுற்றான்
ஈசன் அயன்போற்றும் இரங்கேசா - நேசன்
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
79
மகம் - யாகம், ஆறு - நன்னெறி

நட்பாராய்தல்

தேசுபெறு மார்த்தாண்டன் செல்வன்முடி சூடியிலங்
கேசனை வென்றான் இரங்கேசா - மாசில்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு.
80
மார்த்தாண்டன் - சூரியன்.

பழைமை

தானவர் வேந்தைச் சடாயு பொருதிறந்தான்
என உருவாம் இரங்கேசா - மாநிலத்தில்
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்துந்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
81
தானவர் - அரக்கர், எல்லைக்கண் - நட்பின் வரம்பு.

நட்பு

மாயமா ரீசன் மடிந்தோன் கவுசிகன்றான்
ஏயதவ முற்றான் இரங்கேசா - யதனால்
பேதை பெருங்கெழீ நட்பின் அறிவுடையார்
எதின்மை கோடி யுறும்.
82
ஏதின்மை - பகைமை, கெநீஇ - நெருங்கிய.

கூடாநட்பு

சார்ந்துதிதி கர்ப்பஞ் சதகிருதேழ் கண்டமா
ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா - சேர்ந்தார்போல்
சொல் வணக்கம் ஒன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
தீங்கு குறித்தமை யான்.
83
ஒன்னார் - பகைவர், சதகிருது - தேவேந்திரன்

பேதைமை

மாதாபி தாவை மதியாத லேசிறையில்
ஏதாக வைத்தான் இரங்கேசா - மேதினியில்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
84
ஆர - அனுபவிக்க, தமர் - சுற்றத்தார்.

புல்லறிவாண்மை

தாதை சிலையடிப்பத் தான்மொழிந்தான் தீதாக
ஈதடையார் செய்யார் இரங்கேசா - ஒதில்
அறிவிலார் தாந் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்தல் அரிது.
85
பீழை - வருத்தம்.

இகல்

சென்ன நிறத்தான் சுதனே அரும்பகையாய்
இன்னுயிரைக் கொன்றான் இரங்கேசா - மன்னும்
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணுங் கேடு தரற்கு.
86
சொன்ன நிறத்தான் - இரணியன், இகல் - பகைமை.

பகைமாட்சி

சித்திரசே னன்கையிற் சிக்கினான் மன்னவர்மன்
இத்தரணி போற்றும் இரங்கேசா - சுத்த
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.
87
மன்னவர்மன் - துரியோதனன், பண்பு - குணம்.

பகைத்திறந் தெரிதல்

தெவ்வை இளந்தையென்று செப்பியே விக்கிரமன்
எவ்வமிக வுற்றான் இரங்கேசா - வவ்வி
இளைதாக முண்மரங் கொல்க களையுர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.
88
தெவ்வை - பகைவனாகிய சாலிவாகனனை, காழ்த்தல் - முதிர்தல்.

உட்பகை

இவ்வுலகை ஆளாது இராமனைக்கான் போக்கினான்
எவ்வமனக் கூனி இரங்கேசா - அவ்வியஞ்சேர்
எட்பகவு அன்ன சிறுமைத்தே யினும்
உட்பகை யுள்ளதாங் கேடு.
89
எவ்வம் - குற்றம், எட்பகவு - எள்ளின் பிளவு.

பெரியாரைப் பிழையாமை

சொல்வல் லகத்தியார்க்குச் சூழ்ச்சிசெய்த வாதாவி
இல்லவனும் மாய்ந்தார் இரங்கேசா - மல்வல்ல
கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்.
90
மல்வல்ல - வருத்தவல்ல.

பெண்வழிச் சேரல்

சந்தநுவேந் தேழு தனையர் உயிரிழந்தான்
இந்துநுதற் கங்கை இரங்கேசா - அந்தோ
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
91
இந்து - சந்திரன்.

வரைவின் மகளிர்

தொண்ட ரடிப்பொடியைத் தோளிறுக வீக்குதலால்
எண்டிசையும் போற்றும் இரங்கேசா - கண்டிருந்தும்
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
92
வீக்குதல் - கட்டுதல், தகை செருக்கி - ஆடல் பாடல் என்பவைகளால் இறுமாந்து.

கள்ளுண்ணாமை

தக்கரு மைந்தனென்பு சார்ந்தமது வுண்டசுங்கன்
எக்கருமஞ் செய்தான் இரங்கேசா - மிக்க
கனித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
93
சுங்கன் - சுக்கிரபகவான்.

சூது

தன்மர் துரியோ தன்னுடன் சூதாடி
இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா - நன்மைப்
பொருள்கொடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கொடுத்து
அல்லல் உழப்பிக்குஞ் சூது.
94
தன்மர் - தருமராஜர், உழப்பிக்கும் - விளைவிக்கும்.

மருந்து

அம்பருடன் வேள்விநுகர்ந் தக்கினிக்கு மந்தமுற்ற
தென்ப தறிந்தும் இரங்கேசா - தன்பசியின்
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
95
படும் - உண்டாகும்.

ஒழிபியல்

குடிமை

தூடணமாம் ஐவருடன் துன்னுதலென் றேகன்னன்
ஈடனையை நீத்தான் இரங்கேசா - நீட
அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
96
மானம்

ஆகங் குறைந்துருவே றானான்இல் லாளைவிடுத்
தேகிநள வேந்தன் இரங்கேசா - கையினால்
குன்றின் அனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
97
பெருமை

மண்பரவு சக்கரத்தை மாலெடுப்ப வீட்டுமனார்
எண்புகழாக் கொண்டார் இரங்கேசா - பண்பாற்
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்.
98
மண்பரவு - உலகம் புகழும்.

சான்றாண்மை

புத்தனெறி கற்கும் புராரி பதமளித்தான்
இத்தரணி போற்றும் இரங்கேசா - மெத்தவே
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
99
சால்பு - சான்றாண்மை

பண்புடைமை

துன்பமுறுந் தங்கையெனச் சொல்லி யுதிட்டிரனார்
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா - அன்பின்
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
100
பாடறிதல் - பிறரியல்பு அறிந்து நடத்தல்.

நன்றியில் செல்வம்

செப்பும் இருநிதிகள் சேர்ந்துங் குபேரனுக்கு
எப்பொருளால் என்னாம் இரங்கேசா - கைப்பொருள்
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
101
ஆற்றாதான் - கொடாதவன், தமியன் - தனியன்.

நாணுடைமை

வாவி புகுந்த மகிபன் தனதுயிரை
ஈவதற்குப் போந்தான் இரங்கேசா - ஆவதனால்
நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
102
குடிசெயல் வகை

அன்னை அடிமைக்கு அமுதுகொணர்ந் தெள்ளலுடன்
இன்னல் துடைத்தான் இரங்கேசா - உன்னுங்கால்
நல்லாண்மை யென்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்.
103
அமுது - தேவாமிர்தம்

உழவு

வன்பா ரதத்தலங்கை வைத்தார்க் கெதிரில்லை
என்பார் அதனால் இரங்கேசா - முன்பார்
உழுவார் உலகத்தார்க் காணி ய·தாற்றாது
எழுவாரை யெல்லாம் பொறுத்து.
104
அலம் - கலப்பை, எழுவார் - வேறு தொழில் செய்பவர்.

நல்குரவு

காவலனாம் பாஞ்சாலன் கண்டு துரோணரைநீர்
ஏவரென்றான் அன்றோ இரங்கேசா - தாவில்
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதாயானும்
பிறன்போல நோக்கப் படும்.
105
அறஞ்சாரா - அறம் பொருந்தாத.

இரவு

அங்கியும்பர் கோன்பா வருந்தநினைந் தர்ச்சுனன்பால்
இங்கிதமாப் பெற்றான் இரங்கேசா - மங்காது
இரத்தலும் ஈதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு.
106
அங்கி - அக்கினிபகவான், கரத்தல் - மறைத்தல், தோற்றாதார் - நினையாதவர்.

இரவச்சம்

சென்று பலிபக்கல் செங்கைவிரித் தேற்றல்பழு
தென்றுகுன்றி நின்றாய் இரங்கேசா - நன்றிதரும்
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு
இரவி னிளிவந்த தில்.
107
இளிவு - இழிவான செய்கை.

கயமை

தேனிருந்த சொல்லாளைத் தேர்வேந்தர் காணவுடை
ஏனுரிந்தான் மேனாள் இரங்கேசா - ஆனதனால்
நன்றிறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இவர்.
108
கயவர் - இழிந்தவர், அவலம் - கவலை.

---------

காமத்துப் பால்


களவியல்
(ண்பாற் கிளவிகள்)

தகையணங் குறுத்தல்

சுந்தர மாமகலி தோள்தோய்ந்து பத்துநூ
றிந்திரன்கண் பெற்றான் இரங்கேசா - இந்துமுறி
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
109
ஞாட்பு - போர்.


குறிப்பறிதல்

மேதை விலோசனமும் மேவும் இணைநோக்கும்
ஏது கலவிக்கும் இரங்கேசா - ஆதலால்
கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்னு பயனு மில.
110
மேதை விலோசனம் - குறிப்பறிவுள்ள கண்கள்.

புணர்ச்சி மகிழ்தல்.

உம்பரிற் றுன்முகனார் உள்ளகங்கை தோள்தோய
இம்பர்வந்தார் அன்றோ இரங்கேசா - அன்பாகத்
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
111
இம்பர் - இவ்வுலகம், வீழ்வார் - விரும்பும் மகளிர்.

நலம்புனைந் துரைத்தல்

ஒண்கயற்கண் பாரதியை ஓது மறைநாவில்
எண்கண்ணன் வைத்தான் இரங்கேசா - பண்பில்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
112
காதர் சிறப்புரைத்தல்

சேர்ந்து திருமகளைத் தெள்ளமுதை யும்பருக்கே
ஈந்த வுதாரம் இரங்கேசா - தேர்ந்தக்கால்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.
113
தெள்ளமுது - தேவர்மிர்தம், வால் வயிறு - மெண்மையான பற்கள்.

நாணுத் துறவுரைத்தல்

சீசகன்பாஞ் சாலியின்மேல் கேவலமால் கொண்டுயிர்தோற்
றேசுதலை யுற்றான் இரங்கேசா - ஆசையெனும்
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புணை.
114
அலரறிவுறுத்தல்

நீந்துகடன் மூழ்கி நெடுநாட் கெள தமனார்
ஏந்த கலி தோய்ந்தார், இரங்கேசா -மாந்தி
களித்தொறுந் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
115
தோய்ந்தார் - மணஞ்செய்து கொண்டார், களித்தொறும் - களிக்குந்தோறும்.

கற்பியல்
(பெண்பாற் கிளவிகள்)

பிரிவாற்றாமை

தன்பதியின் செல்வகையினால் தாவில்நதி யாயினாள்
என்பர் கவுசி இரங்கேசா - அன்பினாற்
செல்லாமை யுண்டேல எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
116
செல்கை - பிரிவாற்றாமை, தாவில் - அழிவில்லாத.

படர்மெலிந் திரங்கல்

குன்றெடுத்தான் மார்புகுடி கொண்டிருந்தாள் செங்கமலை
என்றும் பிரியாது இரங்கேசா - நன்றிகூர்
இன்பங் கடன்மற்றுக் காமம் அ·தடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
117
செங்கமலை - திருமகள்.

சண்விதுப் பழிதல்

காதல் அருச்சுனனைக் கண்டூர் வசியடைந்த
தேதமன்றோ மேனாள் இரங்கேசா - ஒதில்
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
118
கலுழ்தல் - அழுதல்.

பசப்புறு பருவரல்

மன்னு மகலிகல் லாய் மாநிலத்தி லேகிடந்தாள்
என்னுமொழி கேட்டாய் இரங்கேசா - துன்னப்
பசந்தாள் இரளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பா ரில்.
119
தனிப்படர் மிகுதி

தக்கசுவா காவைத் தருமன் விழுங்கவவள்
எக்கியனை யுண்டாள் இரங்கேசா - மிக்க
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது.
120
சுவாகா - சுவாகா வென்னுங் கன்னிகை, எக்கியன் - அக்கினி பகவான்,
கா - காவடி.

நினைந்தவர் புலம்பல்

சுந்தோப சுந்தரிகல் சூழ்ந்து பொருதிறந்த
தெந்தவகை மேனாள் இரங்கேசா - சிந்தையால்
உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காமம் இனிது.
121
கனவுநிலை யுரைததல்

செய்தவஞ்சேர் வாணனது செல்வி கனாநிலையில்
எய்தினான் அன்றோ இரங்கேசா - பைய
நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் னுயிர்.
122
நல்காதவர் - இன்பந் தராதவர்.

பொழுதுகண் டிரங்கல்

காக்கும் பதியகலக் காட்டிற் சலர்க்காரி
ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா - நோக்கில்
பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
123
உறுப்பு நலனழிதல்

மங்கையுமை யோர்பங்கு வாங்கி மகிணன் பால்
இங்கித முற்றாள் இரங்கேசா - செங்கை
முயக்கிடைத் தண்வளி போழப் பயப்புற்ற
பேதை பெருமழைக் கண்
124
முயக்கிடை - தன்னைத் தழுவியபோது.

நெஞ்சொடு கிளத்தல்

முன்னமிர திக்கு மொழிந்த பதிதந்த
தின்னலம் அன்றோ இரங்கேசா - துன்ன
நினைந்தொன்று சொல்வாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
125
நிறை அழிதல்

பின்னைக் கினியமொழி பேசிவென்ற மாயவன்போல்
என்னைத் தொண்டாளும் இரங்கேசா - முன்னின்ற
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.
126
பின்னை - நப்பின்னைப் பிராட்டியாகிய சத்தியபாமை,
பெண்மை - பெண்புத்தி, படை - ஆயுதம்.

அவர்வயின் விதும்பல்

வஞ்சி உருகுமணி மாமால் வருவழிபார்த்
தெஞ்சுமுளம் போலும் இரங்கேசா - பஞ்சணையிற்
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறுமென் னெஞ்சு.
127
மாமால் - ஸ்ரீகிருஷ்ணன், கோடுகோடு - வழிகள் தோறும்.

அன்பியல்

குறிப்பறிவுறுத்தல்

செட்டிவள்ளி யம்மைச் சிறுமுறுவல் கண்டுளத்தின்
இட்டம் அறிந்தான் இரங்கேசா - மட்டார்
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
128
மட்டு - தேன், நகைமொக்குள் - புன்முறுவல்.


This page was last updated on 28 Feb. 2006.
Please send your corrections, suggestions to the Webmaster.