campantar tEvAram 1 part II
(verses 722 -1469)
(in tamil script, unicode format)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (722 - 1469)




Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - இரண்டாம் பகுதி


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை -இரண்டாம் பகுதி

1.67 திருப்பழனம்

பண் - தக்கேசி

722 வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.
1.67.1
723 கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால்
எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே.
1.67.2
724 பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்
அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே.
1.67.3
725 உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில்
இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலைப்
பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே.
1.67.4
726 குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.
1.67.5
727 வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார்
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே.
1.67.6
728 பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்
கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும்
பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே.
1.67.7
729 மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்
அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே.
1.67.8
730 கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத
படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே.
1.67.9
731 கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே.
1.67.10
732 வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்
நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை
வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே.
1.67.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.68 திருக்கயிலாயம்

பண் - தக்கேசி

733 பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.
1.68.1
734 புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.
1.68.2
735 மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.
1.68.3
736 முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே.
1.68.4
737 ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந்
தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக்
கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.
1.68.5
738 தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.
1.68.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.68.7
734 தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.
1.68.8
740 ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.
1.68.9
741 விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.
1.68.10
742 போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.
1.68.11

சுவாமிபெயர் - கயிலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.69 திரு அண்ணாமலை

பண் - தக்கேசி

743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.1
744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.
1.69.2
745 ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.3
746 இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.4
747 உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.5
748 எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.6
749 வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.7
750 மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.
1.69.8
751 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.9
752 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.
1.69.10
753 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.
1.69.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.70 திரு ஈங்கோய்மலை

பண் - தக்கேசி

754 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.1
755 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.
1.70.2
756 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.3
757 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.4
758 நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.5
759 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
1.70.6
760 வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
1.70.7
761 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
1.70.8
762 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.
1.70.9
763 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.
1.70.10
764 விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.
1.70.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்

பண் - தக்கேசி

765 765
பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.1
766 பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.
1.71.2
767 முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக்
கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.3
768 பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.4
769 நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.5
770 நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந்
தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந்
தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.6
771 குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.
1.71.7
772 கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.8
773 நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.9
774 நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச்
சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.10
775 குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.
1.71.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.72 திருக்குடந்தைக்காரோணம்

பண் - தக்கேசி

776 வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.
1.72.1
777 முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.
1.72.2
778 மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.
1.72.3
779 போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே.
1.72.4
780 பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்
தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே.
1.72.5
781 மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக்
காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.
1.72.6
782 ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற்
கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.
1.72.7
783 வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.
1.72.8
784 கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற்
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.
1.72.9
785 நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.
1.72.10
786 கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்
திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்
உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.
1.72.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.73 திருக்கானூர்

பண் - தக்கேசி

787 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே.
1.73.1
788 நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே.
1.73.2
789 சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே.
1.73.3
790 விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித்
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே.
1.73.4
791 தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே.
1.73.5
792 முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே.
1.73.6
793 மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே.
1.73.7
794 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.
1.73.8
795 அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே.
1.73.9
796 ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே.
1.73.10
797 கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப்
பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.
1.73.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.74 திருப்புறவம்

பண் - தக்கேசி

798 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.1
799 உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக
இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.2
800 பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.3
801 நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.4
802 செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.5
803 பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.6
804 உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.7
805 விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.8
806 நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.9
807 ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.10
808 பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக
மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.
1.74.11

திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.75 திருவெங்குரு

பண் - குறிஞ்சி

809 காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
ஓலம திடமுன் உயிரொடு மாள
உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.1
810 பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி
மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.2
811 ஓரியல் பில்லா உருவம தாகி
ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்
கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று
நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.3
812 வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்
பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.4
813 சடையினர் மேனி நீறது பூசித்
தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
கடைதொறும் வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி
உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.5
814 கரைபொரு கடலில் திரையது மோதக்
கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி
ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.6
815 வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
மறுகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.7
816 பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.8
817 ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.9
818 பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.10
819 விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
பாடியு மாடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானங் கொடுவர வேறி
வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.
1.75.11

இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.76 திரு இலம்பையங்கோட்டூர்

பண் - குறிஞ்சி

820 மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.1
821 திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமல னெனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.2
822 பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
காலனாம் எனதுரை தனதுரை யாகக்
கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.
1.76.3
823 உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
விளம்புவா னெனதுரை தனதுரை யாக
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.4
824 தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக
வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங்
கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.5
825 மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற
வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலா னெனதுரை தனதுரை யாகத்
தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.6
826 நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல றாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.7
827 வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலா மெனதுரை தனதுரை யாக
ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
வாரண முழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.8
828 கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.9
829 உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்
களிமுக வண்டொடு தேனின முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.10
830 கந்தனை மலிகனை கடலொலி யோதங்
கானலங் கழிவளர் கழுமல மென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.
1.76.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரர், தேவியார் - கோடேந்துமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.77 திருஅச்சிறுபாக்கம்

பண் - குறிஞ்சி

831 பொன்றிரண் டன்ன புரிசடை புரள
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.1
832 தேனினு மினியர் பாலன நீற்றர்
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.2
833 காரிரு ளுருவ மால்வரை புரையக்
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியில் சேரார்
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.3
834 மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்
மலைமக ளவளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத்
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.4
835 விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும்
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.5
836 நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங்
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.6
837 ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.7
838 கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்
பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.
1.77.8
839 நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.9
840 வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.10
841 மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே.
1.77.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.78 திரு இடைச்சுரம்

பண் - குறிஞ்சி

842 வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.1
843 ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.2
844 கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.3
845 கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.4
844 கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.5
845 தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.6
846 கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.7
847 தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.8
850 பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.9
851 பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.10
852 மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.
1.78.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இடைச்சுரநாதர், தேவியார் - இமயமடக்கொடியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.79 திருக்கழுமலம்

பண் - குறிஞ்சி

853 அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.1
854 கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.792
855 எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.3
856 எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.4
857 ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்
நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.5
858 முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
சாந்தமு மேந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.6
859 கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.7
860 புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
பயம்பல படவடர்த் தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.8
861 விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்
மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.9
862 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.10
863 கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.
1.79.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.80 கோயில்

பண் - குறிஞ்சி

864 கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
1.80.1
865 பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.
1.80.2
866 மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.
1.80.3
867 நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.
1.80.4
868 செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
1.80.5
869 வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.
1.80.6
870 அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.
1.80.7
871 கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.
1.80.8
872 கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.
1.80.9
873 பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.
1.80.10
874 ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.
1.80.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் - சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.81 சீர்காழி

பண் - குறிஞ்சி

875 நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.
1.81.1
876 துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.
1.81.2
877 ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
1.81.3
(*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின. 1.81.4-7
878 இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.
1.81.8
879 மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.
1.81.9
880 தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
1.81.10
881 வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.
1.81.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.82 திருவீழிமிழலை

பண் - குறிஞ்சி

882 இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.
1.82.1
883 வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மிழலையே.
1.82.2
884 பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.
1.82.3
885 இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.
1.82.4
886 கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.
1.82.5
887 மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.
1.82.6
888 மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.
1.82.7
889 எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.
1.82.8
890 கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.
1.82.9
891 சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.
1.82.10
892 மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.
1.82.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.83 திரு அம்பர்மாகாளம்

பண் - குறிஞ்சி

893 அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.
1.83.1
894 தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.
1.83.2
895 திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே.
1.83.3
896 கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.
1.83.4
897 அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.
1.83.5
898 பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.
1.83.6
899 மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.
1.83.7
900 கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.
1.83.8
901 சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே.
1.83.9
902 மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே.
1.83.10
903 வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே.
1.83.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர், தேவியார் - பட்சநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.84 திருக்கடனாகைக்காரோணம்

பண் - குறிஞ்சி

904 புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.1
905 பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.2
906 பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.3
907 மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப்
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.4
908 ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.5
909 ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.6
910 அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும்வங்கங்கள்
கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.7
911 வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள்
இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.8
912 திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.9
913 நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
1.84.10
914 கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்
கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.
1.84.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.85 திருநல்லம்

பண் - குறிஞ்சி

915 கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே.
1.85.1
916 தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே.
1.85.2
917 அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே.
1.85.3
918 குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.
1.85.4
919 மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே.
1.85.5
920 வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே.
1.85.6
921 அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே.
1.85.7
922 பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே.
1.85.8
923 நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே.
1.85.9
924 குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே.
1.85.10
925 நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.
1.85.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.86 திருநல்லூர்

பண் - குறிஞ்சி

926 கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.
1.86.1
927 ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறு மடியார்கட் கடையா குற்றமே.
1.86.2
928 சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட் கடையா பாவமே.
1.86.3
929 நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு
தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.
1.86.4
930 ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.
1.86.5
931 கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே.
1.86.6
932 எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா
தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.
1.86.7
933 காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.
1.86.8
934 வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.
1.86.9
935 பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே.
1.86.10
936 தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.
1.86.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.87 திருவடுகூர்

பண் - குறிஞ்சி

937 சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.
1.87.1
938 பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.2
939 சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.3
940 துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.4
941 துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.5
942 தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.6
943 நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.7
944 பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.8
945 சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.9
946 திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.
1.87.10
947 படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.
1.87.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வடுகேசுவரர், தேவியார் - வடுவகிர்க்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.88 திரு ஆப்பனூர்

பண் - குறிஞ்சி

948 முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.1
949 குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.2
950 முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.3
951 பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.4
952 தகர மணியருவித் தடமால்வரை சிலையா
நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.5
953 ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.6
954 இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.7
955 கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1.88.8
956 கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.
1.88.9
957 செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.
1.88.10
958 அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.
1.88.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆப்பனூரீசுவரர், தேவியார் - அம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.89 திரு எருக்கத்தம்புலியூர்

பண் - குறிஞ்சி

959 படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.
1.89.1
960 இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.
1.89.2
961 விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.
1.89.3
962 அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.
1.89.4
963 வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.
1.89.5
964 நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.
1.89.6
(*) இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.89.7
965 ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.
1.89.8
966 மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.
1.89.9
967 புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே.
1.89.10
968 ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.
1.89.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுரர், தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

969 அரனை உள்குவீர், பிரம னூருளெம்
பரனை யேமனம், பரவி உய்ம்மினே.
1.90.1
970 காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணுவின் கழல், பேணி உய்ம்மினே.
1.90.2
971 நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.
1.90.3
972 அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
வெங்கு ருமன்னும், எங்க ளீசனே.
1.90.4
973 வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே.
1.90.5
974 பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.
1.90.6
975 கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.
1.90.6
976 நறவ மார்பொழிற், புறவம் நற்பதி
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.
1.90.8
977 தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே.
1.90.9
978 அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே.
1.90.10
979 தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.
1.90.11
980 தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.
1.90.12

பிரம்மபுரமென்பது சீகாழி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

981 சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
1.91.1
982 பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே.
1.91.2
983 துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.
1.91.3
984 உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே.
1.91.4
985 பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே.
1.915
986 பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே.
1.91.6
987 வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே.
1.91.7
988 அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே.
1.91.8
989 துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.
1.91.9
990 கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.
1.91.10
991 சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே.
1.91.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

992 வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
1.92.1
993 இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
1.92.2
994 செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
1.92.3
995 நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
1.92.4
996 காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.
1.92.5
997 பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
1.92.6
998 மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
1.92.7
999 அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
1.92.8
1000 அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
1.92.9
1001 பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.
1.92.10
1002 காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
1.92.11

இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

1003 நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.
1.93.1
1004 அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.
1.93.2
1005 ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே.
1.93.3
1006 ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே.
1.93.4
1007 மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.
1.93.5
1008 மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.
1.93.6
1009 விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே.
1.93.7
1010 பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.
1.93.8
1011 இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.
1.93.9
1012 தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.
1.93.10
1013 நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.
1.93.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

1014 நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.
1.94.1
1015 ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே.
1.94.2
1015 ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.
1.94.3
1017 அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.
1.94.4
1018 ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே.
1.94.5
1019 அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.
1.94.6
1020 அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.
1.94.7
1021 அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.
1.94.8
1022 அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.
1.94.9
1023 ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.
1.94.10
1024 அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.
1.94.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி, தேவியார் - மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

1025 தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே.
1.95.1
1026 கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.
1.95.2
1027 எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.
1.95.3
1028 விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.
1.95.4
1029 பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.
1.95.5
1030 கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.
1.95.6
1031 பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.
1.95.7
1032 எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.
1.95.8
1033 இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.
1.95.9
1034 நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.
1.95.10
1035 கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.
1.95.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

1036 மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே.
1.96.1
1037 பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.
1.96.2
1038 நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.
1.96.3
1039 பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.
1.96.4
1040 நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.
1.96.5
1041 இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.
1.96.6
1042 அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.
1.96.7
1043 தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.
1.96.8
1044 இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே.
1.96.9
1045 குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.
1.96.10
1046 பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.
1.96.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.97 திருப்புறவம்

பண் - குறிஞ்சி

1047 எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே.
1.97.1
1048 மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.
1.97.2
1049 வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.
1.97.3
1050 துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.
1.97.4
1051 தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.
1.97.5
1052 கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.
1.97.6
1053 எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.
1.97.7
1054 பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும்
அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.
1.97.8
1055 மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங்
கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.
1.97.9
1056 வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.
1.97.10
1057 பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.
1.97.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.98 திருச்சிராப்பள்ளி

பண் - குறிஞ்சி

1058 நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.
1.98.1
1059 கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.
1.98.2
1060 மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே.
1.98.3
1061 துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.
1.98.4
1062 கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.
1.98.5
1063 வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே.
1.98.6
1064 வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.
1.98.7
1065 மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.
1.98.8
1066 அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே.
1.98.9
1067 நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.
1.98.10
1068 தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.
1.98.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.99 திருக்குற்றாலம்

பண் - குறிஞ்சி

1069 வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1.99.1
1070 பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.
1.99.2
1071 செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.
1.99.3
1072 பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்
நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1.99.4
1073 மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
1.99.5
1074 மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
1.99.6
1075 நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்
சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.
1.99.7
1076 போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1.99.8
1077 அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.
1.99.9
1078 பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.
1.99.10
1079 மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
1.99.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர், தேவியார் - குழல்வாய்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.100 திருப்பரங்குன்றம்

பண் - குறிஞ்சி

1080 நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச்
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
1.100.1
1081 அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
1.100.2
1082 நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச்
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.
1.100.3
1083 வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.
1.100.4
1084 பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.
1.100.5
1085 கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.
1.100.6
1086 அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.
1.100.7
1087 மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.
1.100.8
1088 முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.
1.100.9
1089 குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.
1.100.10
1090 தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே.
1.100.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.101 திருக்கண்ணார்கோயில்

பண் - குறிஞ்சி

1091 தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே.
1.101.1
1092 கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக்
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.
1.101.2
1093 பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.
1.101.3
1094 தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்
மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க்
குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.
1.101.4
1095 மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.
1.101.5
1096 விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.
1.101.6
1097 முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.
1.101.7
1098 பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.
1.101.8
1099 செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத்
தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே.
1.101.9
1100 தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்
சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.
1.101.10
1101 காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்
பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே.
1.101.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர், தேவியார் - முருகுவளர்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.102 சீகாழி

பண் - குறிஞ்சி

1102 உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.
1.102.1
1103 மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே.
1.102.2
1104 இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.
1.102.3
1105 எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.
1.102.4
1106 மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.
1.102.5
1107 குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.
1.102.6
* இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.102.7
1108 உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.
1.102.8
1109 ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.
1.102.9
1110 மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே.
1.102.10
1111 வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.
1.102.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.103 திருக்கழுக்குன்றம்

பண் - குறிஞ்சி

1112 தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.1
1113 கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.2
1114 தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.3
1115 துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.4
1116 பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.5
1117 வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.6
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.103.7
1118 ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.8
1119 இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.9
1120 தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1.103.10
1121 கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.
1.103.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.104 திருப்புகலி

பண் - வியாழக்குறிஞ்சி

1122 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.
1.104.1
1123 ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.
1.104.2
1124 ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.
1.104.3
1125 வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.
1.104.4
1126 சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.
1.104.5
1127 மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.
1.104.6
1128 மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.
1.104.7
1129 வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.
1.104.8
1130 தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.
1.104.9
1131 வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.
1.104.10
1132 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.
1.104.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.105 திருஆரூர்

பண் - வியாழக்குறிஞ்சி

1133 பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.
1.105.1
1134 சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே.
1.105.2
1135 உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.
1.105.6
1136 வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே.
1.105.7
1137 வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.
1.105.8
1138 கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்
தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே.
1.105.6
1138 நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே.
1.105.7
(*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.105.8
1140 வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.
1.105.9
1141 செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே.
1.105.10
1142 நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.
1.105.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.106 திருஊறல்

பண் - வியாழக்குறிஞ்சி

1143 மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
1.106.1
1144 மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.
1.106.2
1145 ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.
1.106.3
1146 நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே.
1.106.4
1147 எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே.
1.106.5
1148 (*) இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.1.106.6
1149 கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.
1.106.7
1150 நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.
1.106.8
1151 பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே.
1.106.9
1152 கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே.
1.106.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
சுவாமிபெயர் - உமாபதீசுவரர், தேவியார் - உமையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்

பண் - வியாழக்குறிஞ்சி

1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
1.107.1
1153 அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
1.107.2
1154 பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.
1.107.3
1155 வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.
1.107.4
1156 பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.
1.107.5
1157 ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.
1.107.6
1158 நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.
1.107.7
1159 மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
1.107.8
1160 செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.
1.107.9
1161 போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.
1.107.10
1162 அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.
1.107.11

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர், தேவியார் - அர்த்தநாரீசுவரி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.108 திருப்பாதாளீச்சரம்

பண் - வியாழக்குறிஞ்சி

1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.
1.108.1
1164 நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.
1.108.2
1165 நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.
1.108.3
1166 அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.
1.108.4
1167 பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே.
1.108.5
1168 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.
1.108.6
1169 விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.
1.108.7
1170 மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.
1.108.8
1171 தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே.
1.108.9
1172 காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.
1.108.10
1173 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.
1.108.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.109 திருச்சிரபுரம்

பண் - வியாழக்குறிஞ்சி

1174 வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே.
1.109.1
1175 அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.
1.109.2
1176 பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.
1.109.3
1177 நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயல் சிரபுரமே.
1.109.4
1178 அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.
1.109.5
1179 கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.
1.109.6
1180 வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே.
1.109.7
1181 மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.
1.109.8
1182 வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே.
1.109.9
1183 வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.
1.109.10
1184 அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.
1.109.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.110 திருவிடைமருதூர்

பண் - வியாழக்குறிஞ்சி

1185 மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.
1.110.1
1186 தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.
1.110.2
1187 படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.
1.110.3
1188 பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.
1.110.4
1189 பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.
1.110.5
1190 நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.
1.110.6
1191 நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.
1.110.7
1192 தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.
1.110.8
1193 பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.
1.110.9
1194 சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.

(*) ஓத்து என்பது வேதம்.
1.110.10
1195 இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே.
1.110.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.111 திருக்கடைமுடி

பண் - வியாழக்குறிஞ்சி

1196 அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.
1.111.1
1197 திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியதள் அடிகளிடந்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.
1.111.2
1198 ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழுங்
காலன வளநகர் கடைமுடியே.
1.111.3
1199 கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே.
1.111.4
1200 மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் எனவுல கேத்துங்கண்டங்
கறையவன் வளநகர் கடைமுடியே.
1.111.5
1201 படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.
1.111.6
1202 பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.
1.111.7
1203 நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும்
ஆதர வருள்செய்த அடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே.
1.111.8
1204 அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்
கடைமுடி யதனயல் காவிரியே.
1.111.9
1205 மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.
1.111.10
1206 பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல இன்பமாமே.
1.111.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர், தேவியார் - அபிராமியம்பிகை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.112 திருச்சிவபுரம்

பண் - வியாழக்குறிஞ்சி

1207 இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.
1.112.1
1208 அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.
1.112.2
1209 மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.
(*) அரிசில் என்பது ஒரு நதி.
1.112.3
1210 மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.
1.112.4
1211 வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே.
1.112.5
1212 மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே.
1.112.6
1213 ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.
1.112.7
1214 எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.
1.112.8
1215 சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.
1.112.9
1216 மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.
1.112.10
1217 சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.
1.112.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.113 திருவல்லம்

பண் - வியாழக்குறிஞ்சி

1218 எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.1
1219 தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் தூமதி சூடியெல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்
சேயவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.2
1220 பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று
சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.3
1221 கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.4
1222 சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.5
1223 பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.113.7
1224 இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.8
1225 பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை யங்கமானான்
கரியவன் நான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.9
1226 அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
சென்றவன் உறைவிடந் திருவல்லமே.
1.113.10
1227 கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.
1.113.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வல்லநாதர், தேவியார் - வல்லாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.114 திருமாற்பேறு

பண் - வியாழக்குறிஞ்சி

1228 குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.
1.114.1
1229 பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.
1.114.2
1230 கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.
1.114.3
1231 தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.
1.114.4
1232 துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.
1.114.3
1233 பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.
1.114.4
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.114.5
1234 தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.
1.114.8
1235 செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.
1.114.9
1236 குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.
1.114.10
1237 அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே.
1.114.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.115 திரு இராமனதீச்சரம்

பண் - வியாழக்குறிஞ்சி

1238 சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சுரமே.
1.115.1
1239 சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் தாதையோதான்
அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
எந்தவன் இராமன தீச்சுரமே.
1.115.2
1240 தழைமயி லேறவன் தாதையோதான்
மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமன தீச்சுரமே.
1.115.3
1241 சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சுரமே.
1.115.4
1242 தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே.
1.115.5
1243 சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
எரியவன் இராமன தீச்சுரமே.
1.115.6
1244 மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது ஆடலோன் நீள்சடைமேல்
ஆறது சூடுவான் அழகன்விடை
ஏறவன் இராமன தீச்சுரமே.
1.115.7
1245 தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
நடமது வாடலான் நான்மறைக்கும்
இடமவன் இராமன தீச்சுரமே.
1.115.8
1246 தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி அயன்அணி முடியுங்காணான்
பனமணி அரவரி பாதங்காணான்
இனமணி இராமன தீச்சுரமே.
1.115.9
1247 தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சுரமே.
1.115.10
1248 தேன் மலர்க் கொன்றை யோன்........
........ முந்தமக்கூனமன்றே.
1.115.11*
(*) இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர், தேவியார் - சரிவார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.116 திரு நீலகண்டம்

பண் - வியாழக்குறிஞ்சி

1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.1
1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.2
1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.3
1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.4
1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.5
1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.8
1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.9
1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.10
1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
1.116.11

இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று

பண் - வியாழக்குறிஞ்சி

1259 காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்
தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே.
1.117.1
1260 கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.
1.117.2
1261 கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.
1.117.3
1262 உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே.
1.117.4
1263 கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.
1.117.5
1264 சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.
1.117.6
1265 காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே.
1.117.7
1266 நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.
1.117.8
1267 இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.
1.117.9
1268 அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே.
1.117.10
1269 கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.
1.117.11
1270 கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்
செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே.
1.117.12

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.118 திருப்பருப்பதம்

பண் - வியாழக்குறிஞ்சி

1271 சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
1.118.1
1272 நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.
1.118.2
1273 துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.
1.118.3
1274 கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.
1.118.4
1275 துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.
1.118.5
1276 சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.
1.118.6
1277 புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.
1.118.7
1278 நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.
1.118.8
1279 மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்
திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.
1.118.10
1279 சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.
1.118.11
1280 வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல
ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.
1.118.12

இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்
மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - பருப்பதமங்கையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.119 திருக்கள்ளில்

பண் - வியாழக்குறிஞ்சி

1282 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.
1.119.1
1283 ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
காடலாற் கருதாத கள்ளில் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.
1.119.2
1284 எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.
1.119.3
1285 பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.
1.119.4
1286 விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.
1.119.5
1287 நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.
1.119.6
1288 பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.
1.119.7
1289 திருநீல மலரொண்கண் தேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.
1.119.8
1290 வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
கரியானும் அறியாத கள்ளில் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.
1.119.9
1291 ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.
1.119.10
1292 திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.
1.119.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர், தேவியார் - ஆனந்தவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.120 திருவையாறு - திருவிராகம்

பண் - வியாழக்குறிஞ்சி

1293 பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.1
1294 கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.2
1295 வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.3
1296 வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.4
1297 வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.5
1298 முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.6
1299 வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.7
1300 விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.8
1301 விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.
1.120.9
1302 மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.
1.120.10
1303 நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.
1.120.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்

பண் - வியாழக்குறிஞ்சி

1304 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.
1.121.1
1305 மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடமிடை மருதே.
1.121.2
1306 அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையும் உடையணல் இடமிடை மருதே.
1.121.3
1307 பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடமிடை மருதே.
1.121.4
1308 வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.
1.121.5
1309 கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடமிடை மருதே.
1.121.6
1310 வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.
1.121.7
1311 மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடமிடை மருதே.
1.121.8
1312 மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.
1.121.9
1313 துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.
1.121.10
1314 தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.
1.121.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.122 திருவிடைமருதூர் - திருவிராகம்

பண் - வியாழக்குறிஞ்சி

1315 விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.
1.122.1
1316 மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.
1.122.2
1317 சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே.
1.122.3
1318 விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே.
1.122.4
1319 உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.
1.122.5
1320 ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.
1.122.6
1321 கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே.
1.122.7
1322 செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.
1.122.8
1323 அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.
1.122.9
1324 குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.
1.122.10
1325 பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.
1.122.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.123 திருவலிவலம் - திருவிராகம்

பண் - வியாழக்குறிஞ்சி

1326 பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.
1.123.1
1327 இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.
1.123.2
1328 உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.
1.123.3
1329 அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.
1.123.4
1330 பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
1.123.5
1331 தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.
1.123.6
1332 நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.
1.123.7
1333 இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.
1.123.8
1334 தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.
1.123.9
1335 இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.
1.123.10
1336 மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.
1.123.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.124 திருவீழிமிழலை - திருவிராகம்

பண் - வியாழக்குறிஞ்சி

1337 அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே.
1.124.1
1338 இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே.
1.124.2
1339 கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே.
1.124.3
1340 மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே.
1.124.4
1341 புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.
1.124.5
1342 1342
அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.
1.124.6
1343 கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.
1.124.7
1344 ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.
1.124.8
1345 அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே.
1.124.9
1346 மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.
1.124.10
1347 நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே.
1.124.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்

பண் - வியாழக்குறிஞ்சி

1348 கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.
1.125.1
1349 படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.
1.125.2
1350 வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.
1.125.3
1351 துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே.
1.125.4
1352 மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமையுடை யவனே.
1.125.5
1353 முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.
1.125.6
1354 வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை யிலரே.
1.125.7
1355 கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.
1.125.8
1356 அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.
1.125.9
1357 புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
1.125.10
1358 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
1.125.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி

பண் - வியாழக்குறிஞ்சி

1359 பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
1.126.1
1360 பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே
றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.
1.126.2
1361 திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
1.126.3
1362 அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
1.126.4
1363 திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.
1.126.5
1364 செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.
1.126.6
1365 பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
1.126.7
1366 செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்
டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.
1.126.8
1367 பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
1.126.9
1368 தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
1.126.10
1369 கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்
டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.
1.126.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.127 சீகாழி - திருஏகபாதம்

பண் - வியாழக்குறிஞ்சி

1370 பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.
1.127.1
1371 விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.
1.127.2
1372 புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.
1.127.3
1373 விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
1.127.4
1374 சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.
1.127.5
1375 பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.
1.127.6
1376 செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.
1.127.7
1377 பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.
1.127.8
1378 தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்.
1.127.9
1379 காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே.
1.127.10
1380 கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.
1.127.11
1381 கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.
1.127.12

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.128 திருவெழுகூற்றிருக்கை

பண் - வியாழக்குறிஞ்சி

1382 ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை
05
ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்
10
நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்
15
கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்
முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து
20
நான்மறை யோதி ஐவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
25
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
30
வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை
35
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறை முதல் நான்கும்
40
மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
45
அனைய தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.129 திருக்கழுமலம்

பண் - மேகராகக்குறிஞ்சி

1383 சேவுயருந் திண்கொடியான் திருவடியே
சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டுங் கழுமலமே.
1.129.1
1384 பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
பாட்டயருங் கழுமலமே.
1.129.2
1385 அலங்கல்மலி வானவருந் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்
கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே.
1.129.3
1386 பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே.
1.129.4
1387 ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே.
1.129.5
1388 தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து
தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயுங் கழுமலமே.
1.129.6
1389 புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
புள்ளிரியுங் கழுமலமே.
1.129.7
1390 அடல்வந்த வானவரை யழித்துலகு
தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா
வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்குங் கழுமலமே.
1.129.8
1391 பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
நின்றேத்துங் கழுமலமே.
1.129.9
1392 குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
மேல்படுக்குங் கழுமலமே.
1.129.10
1393 கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.
1.129.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.130 திருவையாறு

பண் - மேகராகக்குறிஞ்சி

1394 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மே஧லுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே.
1.130.1
1395 விடலேறு படநாகம் அரைக்கசைத்து
வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
கீன்றலைக்குந் திருவையாறே.
1.130.2
1396 கங்காளர் கயிலாய மலையாளர்
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
இரைதேருந் திருவையாறே.
1.130.3
1397 ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல
மொட்டலருந் திருவையாறே.
1.130.4
1398 நீரோடு கூவிளமும் நிலாமதியும்
வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த
தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
நடம்பயிலுந் திருவையாறே.
1.130.5
1399 வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே.
1.130.6
1400 நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
கண்வளருந் திருவையாறே.
1.130.7
1401 அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
வயல்படியுந் திருவையாறே.
1.130.8
1402 மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே.
1.130.9
1403 குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே
யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
வந்தலைக்குந் திருவையாறே.
1.130.10
1404 அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
றெய்துவார் தாழாதன்றே.
1.130.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.131 திருமுதுகுன்றம்

பண் - மேகராகக்குறிஞ்சி

1405 மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
எண்குணங்களும் விரும்பும்நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.
1.131.1
1406 வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
புகுந்துலவு முதுகுன்றமே.
1.131.2
1407 தக்கனது பெருவேள்வி சந்திரனிந்
திரனெச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வயல்சூழ் முதுகுன்றமே.
1.131.3
1408 வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிடம் முதுகுன்றமே.
1.131.4
1409 இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்
பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே.
1.131.5
1410 நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதி
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகள் முகம்மலர
வயல்தழுவு முதுகுன்றமே.
1.131.6
1411 அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே.
1.131.7
1411 கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
வாய்ந்தபதி முதுகுன்றமே.
1.131.8
1413 பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே.
1.131.9
1414 மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்
டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரியும் முதுகுன்றமே.
1.131.10
1415 முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
நீடுலகம் ஆள்வர்தாமே.
1.131.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.132 திருவீழிமிழலை

பண் - மேகராகக்குறிஞ்சி

1416 ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும்
பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருள்சொல்லும் மிழலையாமே.
1.132.1
1417 பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
வீற்றிருக்கும் மிழலையாமே.
1.132.2
1418 எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டும் மிழலையாமே.
1.132.3
1419 உரைசேரும் எண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
கையேற்கும் மிழலையாமே.
1.132.4
1420 காணுமா றரியபெரு மானாகிக்
காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை
உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
போலோங்கு மிழலையாமே.
1.132.5
1421 அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
மணஞ்செய்யும் மிழலையாமே.
1.132.6
1422 ஆறாடு சடைமுடியன் அனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநற்
பண்பாடும் மிழலையாமே.
1.132.7
1423 கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்
கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
விமானஞ்சேர் மிழலையாமே.
1.132.8
1424 செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த
வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
சேருமூர் மிழலையாமே.
1.132.9
1425 எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
டும்மிழியும் மிழலையாமே.
1.132.10
1426 மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
ஈசனெனும் இயல்பினோரே.
1.132.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.133 திருவேகம்பம்

பண் - மேகராகக்குறிஞ்சி

1427 வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.
1.133.1
1428 வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.
1.133.2
1429 வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
1.133.3
1430 தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.
1.133.4
1431 தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
1.133.5
1432 சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.
1.133.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.133.7
1433 வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
1.133.8
1434 பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.
1.133.9
1435 குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
1.133.10
1436 ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.
1.133.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம்

பண் - மேகராகக்குறிஞ்சி

1437 கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
1.134.1
1438 மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.
1.134.2
1439 குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
1.134.3
1440 பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.
1.134.4
1441 கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
1.134.5
1442 அரவுற்ற நாணா அனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.
1.134.6
1443 நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையா ரரவம் அழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
1.134.7
1444 வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.
1.134.8
1445 வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.
1.134.9
1446 சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.
1.134.10
1447 நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.
1.134.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.135 திருப்பராய்த்துறை

பண் - மேகராகக்குறிஞ்சி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை.
1448 நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.
1.135.1
1449 கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.
1.135.2
1450 வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே.
1.135.3
1451 தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே.
1.135.4
1452 விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே.
1.135.5
1453 மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே.
1.135.6
1454 விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.
1.135.7
1455 தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே.
1.135.8
1456 நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.
1.135.9
1457 திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.
1.135.10
1458 செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.
1.135.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.136 திருத்தருமபுரம்

பண் - யாழ்மூரி

1459 மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
1.136.1
1460 பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
1.136.2
1461 விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.
1.136.3
1462 வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
1.136.4
1463 நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
1.136.5
1464 கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.
1.136.6
1465 தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.
1.136.7
1466 தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
1.136.8
1467 வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
1.136.9
1468 புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.
1.136.10
1469 பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.
1.136.11

திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை முற்றும்.


This file was last revised on 7 May 2002
Click here to go to webpage on tEvAram I, part 1.
Please send your comments to the webmasters of this website.