Twentieth Century Ceylon Tamil Literature
by C. Maunaguru, Mau. Chitralega & M. A. Nuhman
(in Tamil Script, unicode format)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்
சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்




Etext Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany and Mr. Padmanabha Iyer, London, UK
Proof-reading: Ms. Anshiya Seyed Ahamed, New Orleans, LA, USA
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source acknowledgement: "Twentieth Century Ceylon Tamil Literature" by C. Maunaguru, M. A. Dip.in.Ed., Mau. Chitralega, B. A. (Hons), B.Phil.,& M. A. Nuhman, B. A. (Hons), B. Phil.; First Edition: March 1979, Published by: Readers' Association, 'Noori Manzil', Kalmunai-6; Printed at: Chitra Achchakam, 310, Clock Tower, Jaffna
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்
சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

முதற்பதிப்பு: மார்ச் 1979, உரிமை: ஆசிரியர்களுக்கு
வௌியீடு: வாசகர் சங்கம், 'நூறி மன்ஸில்', கல்முனை-6
அச்சு: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
வாசகர் சங்க வௌியீடு -9

உள்ளடக்கம்


1. முன்னுரை

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகப் பரீட்சைகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

'ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது' என்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் இன்று நிலவுகின்றது. தமிழகத்தில் ஈழத்து இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆயினும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றையும், வளர்ச்சி நிலைகளையும் முழுமையாகக் கூறும் நூல் எதுவும் இன்று வரை தோன்றவில்லை. எனினும் அத்தகைய முழுமையான நூல் ஒன்று எழுதப்படுவதற்கான சான்றுகளையும், தகவல்களையும் திரட்டிக் கூறும் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இங்கே வௌிவந்துள்ளன.பொதுவாக இவற்றை நாம் மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

1. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் எழுதிய நூல்கள் பற்றிய குறிப்புகளையும் தருவன. 1856ல் வௌிவந்த சைமன் காசிச் செட்டியின் 'தமிழ் புளூட்டாக்' முதல் 1967ல் வௌிவந்த மு.கணபதிப்பிள்ளையின் 'ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்' வரை இப்பிரிவில் அடங்கும்.

2. ஈழத்தவரின் தமிழ்தொண்டு பற்றியன. தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஈழத்தவரின் பங்கு, பதிப்புப் பணியில் ஈழத்தவரின் இடம், முஸ்லீம்களின் தமிழ்த்தொண்டு போன்ற விசயங்களை மதிப்பிடும் முயற்சிகள் இவற்றுள் அடங்கும். பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், கலாநிதி பொ. பூலோகசிங்கம், எம்.எம்.உவைஸ், எஸ்.எம். கமால்தீன் முதலியோர் இத்துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். பொ. பூலோகசிங்கத்தின் 'தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள்' இவ்வகையில் முக்கியத்துவம் உடைய நூலாகும்.

3. வரலாற்று நோக்கில் வெவ்வேறு கால கட்டங்களுக்குரிய ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி இலக்கியவடிவ ரீதியாகவும் பொதுவாகவும் தொகுத்துக் கூறுவன. பேராசிரியர். ஆ.சதாசிவம் தொகுத்த 'ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் '(1966) முதல், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழ் இலக்கியம் வரை இப்பிரிவில் அடங்கும். பேராசிரியர் க. கைலாசபதியும் இவ்வகையில் அநேக கட்டுரைகள்எழுதியுள்ளார்.

இவ்வாறு, ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வௌிவந்த நூல்கள், முக்கியமான கட்டுரைகள் பல இடம்பெற்ற சிறப்பிதழ்கள் பற்றிய விபரங்களை இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளோம். மேற்குறிப்பிட்ட வகையான ஆய்வு நூல்கள் இன்னும் பல வௌிவர வேண்டும். இவ்வாறு பல்வேறு ஆய்வுகளூம் வௌிவந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஐயப்பாடுகள் தௌிவான நிலையில்தான் ஈழத்து இலக்கியம் பற்றிய முழுமையான வரலாற்று நூல் எழுதப்படுதல் சாத்தியமாகும். இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி நெறிகளைத் தொகுத்துக் கூறும் இந்நூல் அத்தகைய ஒரு முழுமையான வரலாற்று நூல் உருவாகுவதற்குப் பயன்படக்கூடிய முக்கியமான நூல்களுள் ஒன்றாக அமையும் என நம்புகிறோம்.

இந்நூல் ஆறு அத்தியாயங்களாக அமைந்துள்ளது. முதல் அத்தியாயம் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அறிமுகமாக அமைவதோடு, இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் விசேடமான சில பொதுப் பண்புகளையும் திரட்டிக் கூறுகிறது. அடுத்துவரும் அத்தியாங்களில் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் காணப்படும் வளர்ச்சிப் போக்குகள் தனித்தனியாக ஆராயப்படுகின்றன. நாடகம் முற்றிலும் இலக்கிய வடிவம் அல்ல; அது ஓர் அரங்கக் கலையும் ஆகும். ஆகவே நாடக வளர்ச்சி பற்றிய கட்டுரையில் நாடக அரங்க அபிவிருத்திகளும் இணைத்து நோக்கப்பட்டுள்ளன.

இலக்கியம் சமுதாய நடைமுறையின் ஓர் வௌிப்பாடு ஆகும். சமுதாய வளர்ச்சிப் போக்குகளே இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை இறுதியாக நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் இந்த நூற்றாண்டின் ஈழத்து சமூக, அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் பின்னணியிலேயே இந்நூலின் ஈழத்து இலக்கியம் நோக்கப்பட்டுள்ளது. இலக்கிய வளர்ச்சி தனித்தனி வடிவங்களின் அடிப்படையில் நோக்கப்பட்டதால் சமுதாயப் பின்னணி பற்றிய குறிப்புக்கள் திரும்பத் திரும்ப இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. ஓரு வகையில் இலக்கியத்தின் சமுதாய அடிப்படையை அது மேலும் வலியுறுத்துவதாகவும் அமையும்.

சமகால ஈழத்து இலக்கியத்தில் ஏதோ ஒரு துறையிலேனும் ஈடுபாடு கொண்டுள்ள படைப்பாளிகள் அநேகர் உள்ளனர். குறிப்பாக கவிதை, சிறுகதைத் துறைகளில் இவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. இவர்கள் எல்லோருடைய பெயர்களும் இந்நூலில் இடம் பெறுவது சாத்தியமல்ல;அது அவசியமுமல்ல. ஆயினும் பெயர்களை முடிந்த அளவு குறைத்து பொதுப்பண்புகளை மட்டும் சுட்டிச் செல்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எழுத்தாளர்கள் இல்லாமல் இலக்கியப் பண்புகளும் இல்லை. ஆகவே ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்கள் என்று கருதக்கூடியவர்களின் பெயர்கள் இந்நூலில் சற்று கூடுதலாகவே இடம் பெற்றுள்ளன. இடம் பெறாதவர்கள் இடம் பெறத்தகாதவர்கள் என்று பொருளாகாது. இந்நூலில் குறைபாடுகள் இருக்கலாம். அவை சுட்டப்படும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுவோம். ஆயினும் இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை இது நிறைவேற்றும் என்றே நம்புகின்றோம்.

இந்நூலாக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே ஊக்கப்படுத்தி உதவிகள் புரிந்த நண்பர் மு. நித்தியானந்தன், ஏ.ஜே. கனகரத்தினா ஆகியோருக்கும் அட்டை அமைப்பை வழங்கிய உ.சேரனுக்கும் அழகிய முறையில் இந்நூலை அச்சிட்டு உதவிய சித்திரா அச்சக உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எமது நன்றிகள்.

ஆசிரியர்கள்.

2. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம்

ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றாண்டு காலத் தொடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக்கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்குதல் அவைபற்றிய தௌிந்த விளக்கத்துக்கு உதவும். இக்காலத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய கலாசார நிலைமைகள், அவற்றை ஊக்குவித்த அரசியல் பொருளாதார காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின் வரலாறானது தயக்க மயக்கங்கட்கு இடமளிப்பதாகவே உள்ளது. இக்காலப் பகுதியில் மன்னர்களின் வரன்முறைபற்றிய தகவல்கள் கிடைத்தபோதிலும் சமூக முழுமைக்குமான வரலாற்றைத் தொகுத்துக் காண்பதற்கு உதவும் சான்றுகளும் அரிதாகவே காணப்படுகின்றன. வரலாற்றியலில் காணப்படும் இக்குறைபாடு இலக்கிய வரலாற்று மாணவனையும் பாதிக்கவே செய்கிறது.

இத்தகைய பிரச்சினைகள் இருப்பினும் தற்போது கிடைக்கின்ற தகவல்களை அடிப்படையாக வைத்து ஈழத்து இலக்கியப் பரப்பினை இலக்கியப்பண்பு, இலக்கிய நெறி ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கி தொடாச்சியான இலக்கியவரலாற்றை அமைத்துக் கொள்ளுதல்கூடும். இப்பணியைச் செய்யவே இக்கட்டுரை முயல்கிறது.

16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழிலக்கிய முயற்சிகள் தொடச்சியாக நடைபெற்றிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் எழுந்தனவாகச் சரசோதிமாலை என்னும் சோதிட நூலும், ஈழத்துப் பூதந்தேவனார் என்பாரியற்றிய சில தனிப்பாடல்களும் காணப்படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனாருடனேயே ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது எனக்கூறுவது இன்று மரபாகிவிட்டது. எனினும் ஈழத்துப்பூதந்தேவனார் ஈழத்தவர்தானா என்பது பற்றிய சந்தேகம் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. சங்கத்தொகை நூல்களான அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்பவற்றில் இப்புலவர் பெயரால் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 68, 231இ 307 ; குறுந்தொகை 34, 189, 360; நற்றிணை 366 ஆகிய பாடல்கள் ஈழத்துப் பூதந்தேவனாருடையவை. ஈழம் என்ற சொல்லே இப்புலவரை ஈழத்தவராகக் கொள்ள இடமளிக்கிறது. எனினும் ஈழம் என்ற சொல் இலங்கையை மட்டுமே குறித்ததா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும். ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொண்டால், சங்ககால நூல்களின் பின்னெல்லையான கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுந்தனவாகவே இப்பாடல்கள் அமையும். இதற்குப் பின்னர் நீண்டகாலமாகத் 'தமிழிலக்கிய நூல்கள்ரு ஈழத்தில் எழுந்ததற்கு இதுவரை சான்றுகள் எதுவுமில்லை. தம்பதேனியா மன்னர் 3-ஆம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு போசராச பண்டிதர் என்பவர் சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை அரங்கேற்றினார். ஈழத்துப் பூதந்தேவனாருக்குப்பின் சரசோதிமாலை இயற்றப்பட்டது வரை எமது இலக்கிய வரலாறு இருண்டதாகவே உள்ளது. இதற்குப் பின்னர் கிடைக்கின்ற இலக்கியங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவையே. இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர் வதியும்போதிலும் 17-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எதுவும் அப்பகுதிகளிலிருந்து எழுந்ததாகத் தெரியவில்லை. ஈழத்து இலக்கியவரலாற்றைக் கற்போர்இந்த அம்சத்தையும் மனங்கொள்ளுதல் வேண்டும்.

13-ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதி தனிராச்சியமாக விளங்கியதென்பதும் தமிழ் மன்னர்கள் அப்பகுதியை அரசுபுரிந்தனர் என்பதும் வரலாற்றுண்மை. இக்காலத்திலிருந்துதான் தமிழிலக்கியங்கள் பலவும் தோன்றியுள்ளன. இக்காலத்திலே இயற்றப் பட்டவையாக கிடைக்கும் நூல்களை சிங்கைச் செகராசசேகரன் காலத்தவை (1380 - 1414) எனவும் நல்லூர்ப் பரராசசேகரன் காலத்தவை (1478-1519) எனவும் இவற்றுக்குப் பிந்தியவை எனவும் பேராசிரியர் ஆ. சதாசிவம் தான் தொகுத்த ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் வகுத்துள்ளார். இந்லூல்களைப்பற்றி இங்கு குறிப்பிடுதல் இக்கால இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள உதவும்.

செகராசசேகரம் (இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை இயற்றுவித்தவர் செகராசசேகர மன்னன் என அறியப்படுகிறது) சோமசன்மாவின் செகராசசேகரமாலை, பரராச சேகரம் (பரராச சேகர மன்னன் பன்னிரு வைத்தியர்களைக் கொண்டு இந்லூலை இயற்றுவித்தான என்பர்), பண்டிதராசர் இயற்றிய தக்கிணகைலாச புராணம், சகவீரர் இயற்றிய கண்ணகி வழக்குரை, கரசைப்புலவர் இயற்றிய திருக்கரசைப் புராணம், கதிரைமலைப்பள்ளு (இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை). அரசகேசரியின் இரகுவம்சம், வையாபுரி ஐயர் இயற்றிய வையாபாடல், வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரபாத புராணம், முத்துராச கவிராயரின் கைலாய மாலை முதலியவை 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும். இந்நூல்களை, சமய சம்பந்தமான நூல்கள், யாழ்பாணத்தரசர்களின் வரலாற்று வரன்முறை கூறும் இலக்கியங்கள், சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் என வகைப்படுத்தலாம். முதலாவது பிரிவில் தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை என்பன அடங்கும். இரண்டாம் பிரிவில் வையா பாடல், கைலாய மாலை என்பன அடங்கும். இவற்றுடன் பரராச சேகரன் உலா என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாழ்ப்பாண வைபவம் என்ற நூல் பரராசசேகரன் உலாவைத் தனது முதனூலாகக் குறிப்பிடுகிறது. இந்நூல் தற்போது கிடைக்கவில்லையாயினும் பரராசசேகரன் பேரில் எழுந்ததாகையால் அம்மன்னன்காலத்ததாய் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. மூன்றாவது பிரிவில் செகராசசேகரமாலை, செகராசசேகரம், பரராசசேகரம் ஆகியவை அடங்குகின்றன. இவற்றில் செகராசசேகர மாலை சோதிட நூல்; ஏனையன இரண்டும் வைத்திய சம்பந்தமான நூல்களாகும்.

மேற்கண்டவாறு பல நூல்கள் எழுந்திருப்பினும் சமய சம்பந்தமான இலக்கியங்களே அவற்றுள் பெரும்பான்மையன. நிலவுடமைச் சமூகங்களிற் சமயம் பெறும் முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது. இந்நிலைமை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எமது இலக்கியங்களில் தொடர்ந்து காணப்படுகிறது.

2

யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வௌித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வௌித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த பகுதிகளில் ஸ்திரம் பெற்றிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போத்துக்கேயர் இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தமது ஆட்சியை நிறுவினரெனினும் 1620ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பாணத்துத் தலைநகரான நல்லூரை அவர்கள் கைப்பற்றினர். அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்த பகுதிகளில் தமது நிலைமையைப் பலப்படுத்திக்கொள்ள மதமாற்றத்தையும் முக்கிய சாதனமாகக் கொண்டனர். கத்தோலிக்க மதகுருமாரின் மதம்பரப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் போத்துக்கேயர் மேற்கொண்டனர். கத்தோலிக்க மதத்தைத் தழுவியோருக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. கத்தோலிக்கரான சுதேசிகள் சிற்சில வரிகள் இறுப்பதிலிருந்து விலக்கபட்டனர். கத்தோலிக்கரானோருக்கு நீதி வழங்கும் விடயத்தில் கூட சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றைவிட சைவர்கள் பொது இடங்களில் வணங்குவதும் தடைசெய்யப்பட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் சலுகைகளுக்கிணங்கியும், நிர்ப்பந்தத்தினாலும் சைவர்கள் பலர் கிறித்தவராயினர். மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நீண்டகாலம் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவாகிய பிரான்சிஸ்சேவியர் இப்பகுதிகளிலே கத்தோலிக்க மதம் நிலைபெற முயன்று உழைத்தார். போத்துக்கேயரின் பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சியைக் கைப்பறிய ஒல்லாந்தரும் தமது மதப் பிரிவாகிய புரொட்டஸ்தாந்து கிறித்தவத்தைப் பரப்ப பல்வேறு முயற்சிகளையுமெடுத்தனர். எவ்வாறாயினும் இவ்விரு இனத்தவரின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் சமயம் சார்ந்ததாகவேயமைந்தது. 16ஆம் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் போத்துக்கேயர் காலம் (1505 - 1658) ஒல்லாந்தர் காலம் (1658-1798) என இரு பிரிவுகளாக அமையினும் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இவை ஒருகாலகட்டமாகவே நோக்குதற்குரியன. இரு வேறு இனங்களின் ஆட்சி என்பதைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏற்படவில்லை. இவ்விரு நூற்றாண்டுகளிலும் கிறித்தவ சமயப் பொருளடக்கம் கொண்ட நூல்கள் தோன்றத் தொடங்கியதைத் தவிர இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க புதிய போக்குகள் எவையும் காணப்படவில்லை. இக்காரணங்களினால் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் ஒரு காலகட்டமாகவே அமையத்தக்கவை.

இக்காலப் பிரிவில் கிறித்தவ சமயத்தாக்கத்தினால் எழுந்த நூல்களை முதலில் நோக்குவது பொருத்தமாகும். ஞானப்பள்ளு கத்தோலிக்க மதத்தின் பெருமையை விளக்கும் நூல். இதை இயற்யிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. இது இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. இப் பள்ளு நூலில் இடம் பெறும் புனிதத் தலங்கள் செரு சேலமும் உரோமாபுரியுமாகும். இக்காலக் கிறித்தவ இலக்கியங்கள் பற்றி பேராசிரியர் ஆ. சதாசிவம் கூறுவது இந்நூலுக்கும் பொருந்துவதாகும்.

"அக்கால இலக்கியங்களெல்லாம் கத்தோலிக்க மத நூல்களாகையின் அவற்றிற் கூறப்படும் நாட்டு நகர வருணனைகளெல்லாம் உரோமாபுரி செருசேலம் முதலிய மேல் நாட்டுக் கத்தோலிக்க புனித தலங்களைப் பற்றியனவாய் அமைந்துள்ளன. தேசியக் கருத்துக்கள் அந் நூல்களிற் பொருந்தப்பெறவில்லை. ஞானப்பள்ளிலே நாட்டு வளம் கூறும் பள்ளியர் ஈழத்தைப் பற்றிச் சிந்திக்காது உரோமாபுரியைப் பற்றியும் செருசேலமைப் பற்றியும் சிந்திக்கின்றனர்.

ஞானப்பள்ளினைவிட வேறு சில நூல்களும் குறிப்பிடத்தக்கன. பேதுருப்புலவர் இயற்றிய அர்ச்யாகப்பர் அம்மானை, தொன்பிலிப்பு இயற்றிய ஞானானந்தபுராணம், பூலோக சிங்க முதலியாரியற்றிய திருச்செல்வர் காவியம் என்பன இவற்றுட் சில. இவற்றுடன் சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை,மருதப்பக்குறவஞ்சி ஆகியவையும் அடங்கும். இக் கிறித்தவ மத இலக்கியங்கள் பெரும்பாலன சமூகத்தின் கீழ்மட்ட மக்கள் தொடர்புடைய சிற்றிலக்கிய வடிவங்களிலே அமைந்துள்ளன என்பதும் சுவையான அவதானிப்பாகும். 19ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதம் பரப்பியோர் பரவலான மக்களை எட்டக்கூடியதாக வசன நடயைப் பயன்படுத்தியதற்கும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் அதே தேவைக்கு இச் சிற்றிலக்கியவடிவங்கள் பயன்படுத்தப்பட்டவைக்கும் உள்ளார்ந்த தொடர்பு உண்டு போலும்.

மேற்கண்டவாறு கிறித்தவ சமயப் பிரசாரநோக்குடன் இலக்கியங்களியற்றப் பெறுதல் புதிய பண்பாகக் காணப்படினும் தொடர்ந்து சைவசமயச்சார்பான நூல்களும் பெரு வாரியாக எழுந்துள்ளன. இந் நூல்கள் அனைத்தையும் இங்கு குறிப்பிடுதல் சாத்தியமன்று. இவற்றை அவதானிக்கும் போது தலபிரபந்தங்கள், விரதமகிமை,கிரியை விளக்கம் ஆகியவை பற்றியெழுந்த நூல்கள், சமயத் தெடர்பான வடமொழி இலக்கியங்களின் தழுவல்/ மொழிபெயர்ப்புகள் என வகைப்படுத்தலாம். சின்னத்தம்பிப் புலவரின் கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, பறாளைவிநாயகர் பள்ளு, கூழங்கைத் தம்பிரானின் நல்லைக்கலிவெண்பா வீரக்கோன் முதலியாரின் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதலியன முதலாம் பிரிவுக்கு உதாரணங்காயமையும். வரத பண்டிதரின் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் முதலியன இரண்டாம் பிரிவுக்கும் இராமலிங்க முனிவரின் சந்தானதீபிகை போன்றவை மூன்றாம் பிரிவுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். இவற்றை நோக்கும் போது தொடர்ந்து சைவசமய இலக்கியங்களே தமிழிலக்கிய மரபில் கோலோச்சி வந்தமை புலப்படுகின்றது.

3

ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது. வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பலமுக்கியமான நிகழ்ச்சிகள் இந்நூற்றாண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை, சுதேசிகள் இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம் தபால் தந்திச் சேவைகளும் பெருந் தெருக்களும் புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டமை முதலியன இலங்கை வரலாற்றுக்குப் புதிய தோற்றத்தையளித்தன. சமூக வகுப்புகளிடையேயும் புதிய அம்சங்கள் தோன்றின. புதிதாக ஆங்கிலக் கல்வி கற்க அரசாங்க சேவையில் ஈடுபட்ட மத்தியதர வர்க்கமொன்று தோன்றியது. இவ்வர்க்கத்தினரிடையே கிறித்தவ மத மாற்றம் அதிக அளவில் நடைபெற்றது, இது மட்டுமன்றி இவ்வகுப் பினரிடையிலேயே மேனாட்டு மயப்படுத்தலும் (Westernization) நிகழ்ந்தது.

இத்தகைய புதிய நிலைமைகளின் தாக்கம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கவே செய்தது. 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் நடந்தது போலவே 19ம் நூற்றாண்டிலும் கிறித்தவ மிசனரிமாரின்மதமாற்றமுயற்சிகள் மிகத் தீவிரமாக நடந்தன. கத்தோலிக்க, புரொட்டஸ்தாந்து மிசனரிடமாருடன் கூட அமெரிக்க, வெசிலியன் மிசனரிமாரும் ஆங்கிலேயரது ஆட்சிகாலத்தில் மதப் பிரசாரப்பணியில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ மதம், ஆங்கிலக் கல்வி, உயர்பதவி வாய்ப்பு ஆகியன ஒன்றுடனொன்று இணைந்திருந்தன. இதனால் ஆங்கிலக்கல்வியையோ உயர் உத்தியோகத்தையோ நாடுவோர் கிறித்தவர்களாவதும் இயல்பாயிற்று. பல்வேறு சலுகைகளை கருதிக் கிறித்தவரானோர் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு அந்நியப்படும் நிலைமையும் ஏற்பட்டது. முத்துக்குமாரகவிராசரின் (1780-1851) பாடலொன்று இந்நிலையை நன்கு பிரதிபலிக்கிறது.

இத்தகையதொரு நிலையில் பாரம்பரிய நிலவுடமைச் சமூக அமைப்பின் மதிப்பீடுகள் மாறத் தொடங்கிய சூழலே 19ம் நூற்றாண்டு இலக்கியத்தின் சமூக அடித்தளமாக அமைந்தது எனில் மிகையாகாது.

19-ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தொகையான இலக்கியங்கள் சமய உள்ளடக்கம் கொண்டனவாகவே அமைந்தன. தெய்வங்கள் மீதும் திருத்தலங்கள் மீதும் பாடப்பெற்ற இலக்கியங்களே இவற்றிற் பெரும்பான்மையன. இவற்றைவிட கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்குடன் எழுதப்பட்டவையும், கிறிஸ்தவ சமயத்தை மறுத்து சைவ மதத்தை நிலைநிறுத்தும் நோக்குடன் எழுதப்பட்டவையும் 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாய் அமைந்தன. கிறிஸ்தவ மதப்பிரசாரமும் அதற்கு எதிரான முயற்சிகளும் தீவிரமாகவும் பரவலாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கல்வி கற்றோரை மட்டுமன்றி மற்றோரையும் எட்டும்படி அவை சம்பந்தமான ஆக்கங்கள் அமையவேண்டிதாயிற்று. இத்தகைய நிலை 19ஆம் நூற்றாண்டு இலக்கிய வசன நடை பிரதானம் பெறவும் வளர்ச்சியடையவும் வழியமைத்தது. உரைநடையைச் சமயப் பிரசாரத் தேவைகளுக்குப் பயன்படுத்தியோரில் கிறிஸ்தவரே முன்னின்றனர். மிசனரிமாரே முதலில் யாழ்ப்பாணத்தில் அச்சுக் கூடங்களை நிறுவினர். சமயத் தேவைக்காகப் பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் முதலிய தகவற் தொடர்புச் சாதனங்களை அவர்கள் பயன்படுத்தினர். 1923ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத் துண்டுப் பிரசுர சங்கம் (Jaffna Tract Society) நிறுவப்பட்டது, இதன் மூலம் கிறிஸ்தவ மத சம்பந்தமான பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் வௌியிடப்பட்டன. சமய உண்மைகளின் விளக்கங்கள், சமய கண்டனங்கள் ஆகிய பலவும் இத்துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றன. கிறிஸ்தவரின் இதே வழியினைச் சைவரும் கைக்கொண்டனர். ஆறுமுகநாவலரும் அவரைத் தொடர்ந்து சங்கரபண்டிதர், செந்திநாதையர், தாமோதரம் பிள்ளை, கைலாயபிள்ளை போன்ற சைவப் பெரியார்களும் சிறு பிரசுரங்கள் பலவற்றை வௌியிட்டுள்ளனர்.

19ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பகுதிகளில் உருவாகிய பத்திரிகைச் சூழல் சமய அடித்தளம் கொண்டது. கிறிஸ்தவ மிசனரிமாரே மதம் பரப்புவதற்கெனப் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841இல் அமெரிக்க மிசனரி சார்பில் வௌிவந்தது. கத்தோலிக்கபாதுகாவலன், இலங்காபிமானி ஆகியனவும் 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் கிறிஸ்தவ சமயச்சார்புடன் வௌிவந்த பத்திரிகைகளாகும். எனினும் இப்பத்திரிகைகள் சமய எல்லையுள் மட்டும் நின்றுவிடாது பல்வேறு விடயங்கள்பற்றியும் எழுதின. உதயதாரகை தனது முதலாம் இதழ் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தது.

".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவானகல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சிமாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்".

சமயசம்பந்தமாகத் தோன்றிய பத்திரிகைகளாயினும் இவை தமது கோட்பாட்டெல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டமை குறிப்பிடத் தக்கது. கிறிஸ்தவர் பத்திரிகைகளை ஆரம்பித்தது போன்று சைவர்களும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கைநேசன், சைவாபிமானி, சைவ உதயபானு, இந்துசாதனம் ஆகியவை சைவர்களால் வௌியிடப்பட்டவை. இவற்றுடன் இஸ்லாமிய மறுமலர்ச்சி நோக்கில் முஸ்லிம் நேசன், சைபுல் இஸ்லாம் ஆகிய பத்திரிகைகளும் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வௌியிடப்பட்டன. பொதுத் தகவற் சாதனமாகிய பத்திரிகையின் பரவலான தோற்றம் தமிழ் வசன நடையின் துரிதமான பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு வழிகோலிற்று. இலக்கண இலக்கிய தத்துவ நூல்களில் உரை வடிவங்களிலே கட்டுண்டு கிடந்த தமிழ் வசனநடை தனது பண்பாட்டெல்லைகளை விரிவுபடுத்தி, புதிய வனப்பும் வளர்ச்சியும் பெற்றமைக்குரிய பிரதான காரணிகளுள் பத்திரிகைத் துறையும் ஒன்றாய் அமைந்தது. அச்சுரூபத்தில் பல நூற்றுக் கணக்கான பிரதிகள் வௌியிடப்படும் போது இலக்கியம். தவிர்க்க முடியாதபடி பரந்துபட்ட மக்களை எட்டவேண்டி ஏற்படுகிறது. இது நவீனயுகத்தில் அச்சில் வௌிவரும் இலக்கியங்களின் நிலை பேற்றுக்குரிய விதியாகும். பத்திரிகைகளின் தோற்றத்துடன் தமிழிலக்கியம் பொதுத்தகவற் தொடர்புச் சாதனப் பண்பைப் பெற்றதை இவ்வகையிலேயே விளக்கலாம்.

அச்சுவசதி, வசன நடை வளர்ச்சி, பத்திரிகையின் தோற்றம் என்பவற்றுடன் கூட இக்காலத்தில் பரவலாகிய கல்வித் துறையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை குறிப்பிடக் கூடியதாகும். குறிப்பாக ஆங்கிலக் கல்வியின் மூலம் மேல்நாட்டு இலக்கியத்துடன் தொடர்பு எற்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நாவல்,சிறுகதை ஆகியவை தோன்றி வளர்வதற்குரிய சூழல் ஏற்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவும் இதற்கு உதவின. 1856-ல் Parley the Porter என்ற ஆங்கில நூல் காவலப்பன் கதை என்ற பெயரில் தமிழாக்கப்பட்டது. Orson and valantine என்ற போத்துக்கேய நூல் ஊசோன்பாலந்தை கதை என நெடுங்கதையாய் வௌிவந்தது. இவற்றைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டு நாவலிலக்கியத்துக்கு முன்னோடிகளாயமையக் கூடிய அஸன்பேயுடைய கதை (1885) , மோகனாங்கி (1895) முதலிய நெடுங்கதைகளும் வௌியிடப்பட்டன.

இதுவரை 19ஆம் நூற்றாண்டுக்குரியனவாக மேலே பார்த்த புதிய வளர்ச்சிகள் வசன இலக்கிய வழியமைந்தவையே. செய்யுள் மரபுரீதியான போக்கிலேயே சென்றது. தலபிரபந்தங்களையும், சமயக்கிரியை விளக்க நூல்களையும் வடமொழி இலக்கியங்களின் தழுவல்களையுமே செய்யுட்துறையில் தொடர்ந்து காணலாம். பொருளடக்கம் மட்டுமல்லாது இலக்கிய உத்தி, மொழி நடை ஆகியவை கூட மரபு நெறிப்பட்டதாகவே அமைந்தன. வசன நடையில் புதுமையைப் புகுத்திய ஆறுமுகநாவலர் கூடச் செய்யுளை மரபுவழி நின்று 'புனிதப் பொருளாகவே' நோக்கினார். யுநீண்ட பாரம்பரியத்தையுடைய செய்யுளில் புதுமைசெய்ய இலக்கிய ஆசிரியர் தயங்கினர். ஆனால் தமது கண் முன்னே வளர்ந்த வசன நடையுடன் அதிக சொந்தம் பாராட்டி மாற்றங்கள் செய்ய அவர்கள் தயங்கவில்லை'. இந்நிலைமை ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பொதுப்பண்பாகும்.

19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் பத்திரிகைகள் போன்ற பொதுத் தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியும் இலக்கியத்தைப் பரந்த மக்கள் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தின. இதனால் இலக்கியம் உயர்நிலை மக்களைப் பாத்திரங்களாகவும் வாசகர்களாகவும் கொள்ளும் நிலையிலிருந்து விடுபடத் தொடங்கியது. இன்னொரு வகையில் கூறினால் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் காணப்படும் நவீன பண்புகள் பல பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது எனலாம். இத்தகைய காரணங்களால் இக்கால இலக்கியம் தனியொரு பிரிவாகவும் விரிவான ஆய்வுக்கு உட்பட வேண்டியதாகவும் அமைகிறது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டையடுத்து இருபதாம் நூற்றாண்டு தனிக் காலகட்டமாயமைகிறது. இதுவே இந்நூலின் அடுத்துவரும் அதிகாரங்களில் இலக்கிய வடிவங்களின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுகின்றது.

4

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேய ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்துத் தமிழரின் சமய கலாசார தனித்துவத்தைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடுபட்ட ஆறுமுகநாவலர் ஈழத்து இலக்கியப் பற்றுக் கொண்டிருந்தவர். 1856ஆம் ஆண்டு இவர் வௌியிட்ட நல்லறிவுச் சுடர் கொழுத்தல் என்ற பிரசுரத்தில் இதனை அவதானிக்கலாம். சி.வை. தமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ்நாட்டைச்சேர்ந்த வீராசாமி முதலியார் வௌியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே நல்லறிவுச் சுடர் கொழுத்தலில் ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.

இருப்பினும் 1950ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டைப் பரவலாக்கியதுடன்தான் எழுத்தாளர், வாசகர், விமரிசகர் ஆகிய மூன்று மட்டங்களிலும் இவ்வுணர்வு செறிந்து பிரபலம் பெற்றது. இக்கால கட்டத்தில் இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இக்கோட்பாட்டின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவின. தேசிய நலனை அபிவிருத்தி பண்ணும் வகையிலேயே சகல நடவடிக்கைகளும் அமையவேண்டும் என்ற அரசின் கொள்கை கலாசாரத் துறையில் தேசியக்கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவிற்று, ஈழத்து இலக்கியத்தில் வெறும் பற்று மட்டும் அன்றி இலக்கியம் தேசியப் பிரச்சினைகளை எடுத்தாளவேண்டும் என்றும்; குறிப்பாக அடிநிலை மக்களின் வாழ்க்கை இலக்கியப் பொருளாக வேண்டும் என்றும் இத்தேசிய இலக்கியக் கோட்பாடு வற்புறுத்திற்று. இக்கருத்தைப் பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. எனினும் தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு பெற்ற இம்முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஈழத்துத்தமிழிலக்கியப் போக்கைக் குறிப்பிடத்தக்களவு வழிநடத்தியுள்ளது.

5

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் அதற்கு முற்பட்ட இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட சில பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் நிகழ்ந்தேறிய பாரிய சமூக மாற்றங்களே இதற்குக் காரணமாக அமைந்தன. பிரித்தானியரின் வருகையினாலும் அவர்கள் இங்கு புகுத்திய வர்த்தகப் பொருளாதார முறையினாலும் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு சிதைவடைய, அதன் சிதைவில் இருந்து தோன்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூக முறையும், அதன் விளைவான நவீன மயமாதலும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களுமே இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இயக்கு சக்தியாக அமைந்தன.

19ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ சமூக கலாசாரத்தின் அடிப்படை அம்சமான சமயமே இலக்கியத்தின் உள்ளடக்கமாக அமைந்தது. சாதாரண மனிதனும் அவனது அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் இலக்கியத்துக்குப் புறம்பாகவே இருந்தன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் சாதாரண மனிதன் பொது வாழ்வில் முக்கியத்துவம் பெறத் தொடங்க 20ஆம் நூற்றாண்டு இலக்கியம் சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வைப் பொருளாகக் கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதாவது தெய்வங்களும், திருத்தலங்களும், சமயானுஷ்டானங்களும் பெற்ற இடத்தை பொதுமனிதனும், நடைமுறைவாழ்வும் பெற்றன. சுருக்கமாகச் சொல்வதானால் இலக்கியம் சமய நெறியில் இருந்து சமூகநெறிக்கு மாறியது. இது 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய பண்பாகும்.

இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இதனாலேயே 19ஆம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்துவந்த உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி போன்ற பிரபந்த வடிவங்களும் புராணங்களும் வழக்கிறக்க நவீன ஆக்க இலக்கிய வடிவங்களான நாவல்,சிறுகதை, நாடகம், (நவீன) கவிதை போன்றன தோன்றின. இவை ஈழத்தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்த வளர்ச்சி பெற்றன. ஆரம்பத்தில் இவற்றை இலக்கியங்களாக அங்கீகரிக்காத பண்டித மரபினர்கூட இன்று இவற்றின் இலக்கிய அந்தஸ்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈழத்து மொழிவழக்குகளும் ஈழத்துப் பண்பாட்டு அம்சங்களும் 20ஆம் நூற்றாண்டிலேயே இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. முந்திய நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களில் மிக அரிதாகக் காணப்பட்ட இத்தனித்துவக்கூறுகள், இந்த நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் மிகப்பிரதான அம்சமாக மாறின. இவை தமிழக இலக்கியத்திலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை வேறுபடுத்தி அதற்கு ஒரு தேசியத் தன்மையை வழங்கின.

இந்த நூற்றாண்டின் பின்பகுதியில் அதாவது 1950-க்குப் பிறகு இந்நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சமூக அரசியல் பிரக்ஞையை அளித்தன. இக்காலப்பகுதியில், பொருளாதார விடுதலையும், சம உடைமைச் சமூக அமைப்பும் கோரிய அடிநிலை மக்களின் அரசியல் விளிப்புணர்வு, மார்க்ஸீயக் கட்சிகளை மட்டுமன்றி எல்லா அரசியல் கட்சிகளையும் தவிர்க்கமுடியாதவாறு சோசலிசக் கோட்பாட்டை கொள்கையளவிலேனும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தது. இலக்கியமும் சமூக அரசியல் பிரக்ஞையில் இருந்து பிரிந்து ஒதுங்கமுடியாது போயிற்று. இந்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர்களின் பிரச்சினைகளையே தங்கள் படைப்புக்களின் பொருளாகக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தே சில எழுத்தாளர்களும் தோன்றினர். இவ்வகையில் முற்போக்கு இலக்கியம் இந்நாட்டின் பிரதான இலக்கிய நெறியாக மாறியது. முற்போக்கு இலக்கியக்கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத எழுத்தாளர் பலர் இங்க இருப்பினும் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதான போக்காக இருப்பது முற்போக்கு நெறியே என்பதை அழுத்திக் கூறலாம். இடதுசாரி இயக்கத்தில் அரசியல் பிளவுகள் ஏற்பட்ட போதிலும் கூட இது இலக்கியு நெறியை அதிகம் பாதிக்கவில்லை.மறுவகையில் இலக்கியத்தின் சமூகப்பெறுமானத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம் சிலவேளை அதன் கலைப் பெறுமானத்தைப் பாதித்துள்ள நிலையையும் இங்கு அவதானிக்க முடிகின்றது. சமீபகாலத்தில் இது பற்றிய சர்ச்சைகள் ஈழத்து இலக்கிய உலகில் அதிகம் நடை பெற்றுள்ளன. இலக்கியத்தின் சமூகப் பெறுமானமும் கலைப்பெறுமானமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை இன்று, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அதிகம் உணர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள இம்முற்போக்கு இலக்கிய நெறி தமிழக இலக்கியத்தைப் பொறுத்தவரை மிகப் பிற்பட்ட வளர்ச்சியே என்பதும் மனங் கொள்ளத்தக்கது.

20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத் தக்க பிறிதொரு அம்சம் வர்த்தக மயமாகாமை எனலாம். தமிழ்நாட்டைவிட ஈழத்தில் எழுத்தறிவு விகிதம் மிக அதிகம் எனினும் இங்கு வர்த்தகரீதியான பெரும் சஞ்சிகைகள் வளர்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்திய வர்த்தக சஞ்சிகைகளின் சந்தையாக ஈழம் தொடர்ந்தும் இருந்து வருவதே இதன் காரணம் எனலாம். மலிவான ரசனைக்குத் தீனிபோடும் பொழுது போக்கு ரகக் கதைகள் தமிழகத்தில் மலிவாக உற்பத்தி செய்யப்பட்டு இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. நூல்வௌியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தல் முறையும் விருத்தி அடையாத நிலையில் அவற்றோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு இங்கு வர்த்தக இலக்கியம் வளர்ச்சி அடைய முடியவில்லை. சிங்கள மொழியில் வர்த்தக இலக்கியங்கள் பெருகியதைப் போன்று இலங்கைத் தமிழில் பெருகாமைக்கும் இதுவே காரணம் எனலாம். இவ்வாறு கூறுவதனால் ஈழத்துத் தமிழில் வர்த்தக ரீதியான இலக்கியேமா, சஞ்சிகைகளோ இல்லையென்று பொருள்படாது. 1970 க்குப் பின்னர் சுமார் ஏழு ஆண்டுகாலம் இந்தியப் புத்தகங்கள், சஞ்சிகைகள் இறக்குமதிக்கு இருந்த தடையைப் பயன்படுத்தி, வீரகேசரி, ஜனமித்திரன் போன்ற வர்த்தக ரீதியான வௌியீட்டு நிறுவனங்கள் தோன்றி ஈழத்துத் தமிழ் இலக்கியம் வர்த்தக மயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் காணப்படுவது போல் வர்த்தக இலக்கியத்துக்கும் உயர் இலக்கியத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவௌி ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்வௌியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தும் முறையும் வளர்ச்சியடையாமையால் வர்த்தக இலக்கியத்தின் எழுச்சி தடைப்பட்டிருப்பது மட்டுமன்றி காத்திரமான இலக்கிய முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் மனம் கொள்ளத்தக்கது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் காணப்படும் பொதுவான மந்தநிலைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்களின் சிறந்த படைப்புகள் பல இன்னும் வௌியிடப்படாமலேயே உள்ளன. பிரசுர வசதிக் குறைவினால் எழுத்தார்வம் மறைமுகமாகத் தடை செய்யப்படுகின்றது. எனினும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், வாசகர் சங்கம், முத்தமிழ் வௌியீட்டுக் கழகம், யாழ். இலக்கிய வட்டம் போன்ற எழுத்தாளர் கூட்டுப் பதிப்பு முயற்சிகள் நம்பிக்கை தருவதாக உள்ளன.


3. கவிதை


இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீன தமிழ்க் கவிதையையே நாம் பிரதானமாகக் கருதுகின்றோம். 'நவீன தமிழ்க்கவிதைரு அல்லது 'தற்காலத் தமிழ்க்கவிதை' என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீன கவிதை என்ற தொடர் குறிக்கின்றது. நவீன உள்ளடக்கத்துக்கு ஏற்ப அதன் வடிவ அமைப்பிலும் -சொற்கள், சொற் சேர்க்கைகள், ஓசை ஒழுங்கு, வௌிப்பாட்டு முறை போன்றவற்றிலும் - இக் கவிதை முறை பழைய செய்யுள் இலக்கியங்களிலிருந்து எவ்வளவோ மாறியுள்ளது என்பதையும் நாம் காண்கின்றோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இப்புதிய கவிதை மரபு, சுமார் முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய கவிதை மரபை அங்கு தோற்றுவித்து வலுப்படுத்தியவன் பாரதியே என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மை.

'தற்காலத் தமிழ்க்கவிதை' என்று இனங் காணப்படுகின்ற இக்கவிதை மரபு தமிழ்நாட்டில் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப தோன்றி வளர்ச்சி அடைந்ததைப் போன்றே, ஈழத்திலும் நமது நாட்டுக்கு உரிய சில தனிப் பண்புகளையும், பாதிப்புகளையும் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம் இப்போது தௌிவாக இனம் கண்டு கொள்கின்றோம். ஈழத்தைப் பொறுத்தவரை இக்கவிதை மரபு சுமார் நாற்பது ஆண்டு கால வரலாற்றையே கொண்டுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் 'மறுமலர்ச்சிக் காலம்' என்று சொல்லப்படுகின்ற 1940 ஆம் ஆண்டுகளிலேயே இங்கு இப்புதிய கவிதை மரபு தோன்றி வளர்ச்சியடையத் தொடங்கியது.

19ஆம் நூற்றாண்டின் மரபு வழிப்புலவர்கள் சிலர் இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாழ்ந்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், க. மயில்வாகனப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, நவநீதகிருஷ்ணபாரதியார், அருள்வாக்கி அப்துல்காதிறுப் புலவர் முதலியோர் இவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியவர்கள். ஆயினும் இவர்கள் அனைவரையும் சென்ற யுகத்தின் பிரதிநிதிகளாகவே கருதவேண்டும். இந்த நூற்றாண்டின் கவிதை மரபுடன் இவர்களைத் தொடர்புறுத்த முடியாது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த, பாரதியின் சம காலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளை,சோம சுந்தரப்புலவர், விபுலானந்த அடிகள் ஆகியோரும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அநேக கவிதைகளைப் படைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சிந்தனைப் போக்குகள் சில இவர்களது கவிதைகளில் காணப்படினும் இன்றைய அர்த்தத்தில் இவர்கள் ஈழத்து நவீன கவிதையின் முன்னோடிகள் என்று கருதப்படுபவர்கள் அல்லர். பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

1940 ஆம் ஆண்டுக்குப்பின் குறிப்பாக 1942ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சில இலக்கிய ஆர்வம் உடைய இளைஞர்கள் சேர்ந்து 'மறுமலர்ச்சிச் சங்கம்' என்ற ஒரு இலக்கிய ஸ்தாபனத்தை அமைத்ததைத் தொடர்ந்து பாரதிதாஸன், கலைவாணன் போன்ற அக்காலத்து தமிழ் நாட்டு முன்னணிக் கவிஞர்களின் செல்வாக்கினால் தூண்டப்பட்ட சில இளம் கவிஞர்களின் முயற்சியினாலேயே இங்கு நவீன கவிதைப் பாணி உருவாகி வளர்ச்சி அடையத் தொடங்கியது. நாவற் குழியூர் நடராசன், சோ. நடராசன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, சாரதா, செ. கதிரேசபிள்ளை, யாழ்ப்பாணன் முதலியோர், இக்காலப் பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களுள் நாவற்குழியூர் நடராசன், அ.ந. கந்தசாமி, மஹாகவி ஆகிய மூவரும் இக்காலப்பிரிவில் தோன்றிய முக்கியமான கவிஞர்களாவர்.

நாவற்குழியூர் நடராசன் மனோரதியப் பாங்கான கவிதைகளையே அதிகம் எழுதினார். பொருளைவிட ஒசைநயத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது கவிதைகள் சில 'சிலம்பொலி' என்ற பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் கவிதையில் இடதுசாரிச் சிந்தனை போக்கை முதலில் பிரதிபலித்தவர் அ.ந. கந்தசாமியே ஆவர். 'கவீந்திரன்' என்ற புனைபெயரிலும் இவர் கவிதைகள் எழுதிவந்தார். ஏராளமாக எழுதாவிட்டாலும் வில்லூன்றி மயானம், துறவியும் குஸ்டரோகியும் போன்ற இவரது சில கவிதைகள் குறிப்பிடத்தக்கன.

இம்மூவருள்ளும் இலங்கைத் தமிழ்க் கவிதையில் அதிக பாதிப்பையும் பங்களிப்பையும் செய்தவர் மஹாகவியே ஆவர். 1971 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும்வரை சுமார் முப்பது ஆண்டு காலம் கவிதை எழுதி வந்தார். பல நூற்றுக் கணக்கான கவிதைகளும் சேனாபதி, பொய்மை, சிற்பி ஈன்ற முத்து, கோலம், திருவிழா, அடிக்கரும்பு முதலிய வானொலிப் பா நாடகங்களும், கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று முதலிய மேடைப் பா நாடகங்களும், கல்லழகி, சடங்கு, கந்தப்பசபதம், கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் முதலிய காவியங்களும் மானிலத்துப் பெரு வாழ்வு எனும் தலைப்பில் அமைந்த இசைப்பாடல்களும் பொருள்நூறு என்னும் சிறு கவிதைகளும் பிஞ்சுப் பாடல்கள் என்னும் சிறுவர் கவிதைகளும் அவரது படைப்புக்களாக உள்ளன. வள்ளி, குறும்பா, கோடை, கண்மணியாள்காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வௌியும், இருகாவியங்கள் ஆகிய அவரது ஏழு நூல்கள் இதுவரை வௌிவந்துள்ளன. நூல்வடிவம் பெறாதவை பல.

மஹாகவி, யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வையே தனது கவிதைப் பொருளாகக் கொண்டார். யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். பழைய யாப்பு வடிவங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப்படுத்தினார். கிராமிய வழக்குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகப் பயன்படுத்தினார். மனித வாழ்க்கையில் ஒரு ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர்தன் கவிதைகளில் பிரதிபலித்தார். தனக்குப்பின் வந்த பல கவிஞர்களில் அவர் கணிசமான பாதிப்பைச் செலுத்தினார். இக்காரணங்களால் ஈழத்து நவீன கவிதையில் ஒரு பெரிய ஆழுமையாக பல விமர்சகர்களால் மஹாகவி கருதப்படுகின்றார்.

1950 ஆம் ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் முக்கியமான காலப் பிரிவாகும். கிடைத்த சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் இக்காலப் பிரிவிலேயே தொடங்கின. தேசியம் பற்றிய பிரக்ஞை பொதுமக்கள் மயமாகத் தொடங்கிய காலப்பிரிவும் இதுவே. தேசிய இனப் பிரச்சினை பெரிய அரசியல் பிரச்சினையாக மாறிய காலமும் இதுவே.

இக்காலப் பகுதியில் இலங்கைத் தமிழ்க் கவிதையில் பல புதியவர்களையும் சில புதிய போக்குகளையும் நாம் காண்கின்றோம். உண்மையில் இக்காலப் பகுதியிலேயே இலங்கையின் நவீன தமிழ்க் கவிதை வீறுடன் எழுச்சி பெற்றது எனலாம். நாம் முன்னர் குறிப்பிட்ட கவிஞர்களும் இக்காலப் பகுதியிலேயே முதிர்ச்சி பெற்றனர். முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், ராஜபராதி, புரட்சிக்கமால், அண்ணல் முதலியோர் இக்காலப் பகுதியில் அதிகம் எழுதிப் பிரபலம் பெற்றவர்கள். ஆயினும் தங்கள் நோக்கிலும் போக்கிலும் இவர்கள் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தனர்.

விஞ்ஞானப் பட்டதாரியான முருகையனின் கவிதைகளில் சிந்தனைக் கனதியே பிரதான அம்சமாகும். விஞ்ஞான அறிவின் செல்வாக்கை இவரது பல கவிதைகளில் காணலாம். கவிதைகளாகவும் பா நாடகங்களாகவும் காவியங்களாகவும் இவரது படைப்புக்கள் அதிகம் உள்ளன. நெடும்பகல் இவரது காவியமும் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு நூலாகும். வந்து சேர்ந்தன-தரிசனம், கோபுரவாசல் ஆகியன பாநாடக நூல்களாகும். ஆதிபகவன் என்ற காவிய நூல் அண்மையில் வௌிவந்துள்ளது. கடூழியம் என்னும் குறியீட்டுப் பாங்கான இவரது பாநாடகம் சமீபகாலத்தில் இலங்கையில் மேடையேற்றப்பட்ட முக்கியமான நாடகங்களுள் ஒன்றாகும். மஹாகவியுடன் இவர் சேர்ந்து எழுதிய 'தகனம்' குறிப்பிடத்தக்க ஒரு பரிசோதனைக் காவியமாகும். ஒருவரம் இவர் மொழி பெயர்த்து வௌியிட்ட ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு.

50 களில் எழுதத் தொடங்கிய நீலாவணன் 1975 ஜனவரியில் மரணித்தார். அதுவரை அவர் ஏராளமான கவிதைகளையும் சில பா நாடகங்களையும் வேளாண்மை என்ற முடிவுறாத ஒரு காவியத்தையும் படைத்துள்ளார். ஆரம்பத்தில் அழகிய காதல் கவிதைகள் பலவற்றை எழுதிய நீலாவணன் 1960 களில் கிழக்கிலங்கைக் கிராமங்களின் வாழ்க்கை முரண்பாடுகளைத் தனது கவிதைகள் பலவற்றில் சித்திரமாக்கினார். ஆயினும் இவரது பிற்காலக் கவிதைகள் பலவற்றில் ஆன்மீக உணர்வே வௌிப்பாடு பெற்றுள்ளது. 'வழி' இவரது முக்கியமான கவிதைகள் சிலவற்றை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பாகும்.

சில்லையூர் செல்வராசன் (தான்தோன்றிக் கவிராயர்) அங்கதப் பாணியிலான கவிதைகள் எழுதுவதில் வல்லவராக விளங்கினார். பிரதானமாக இவர் ஒரு மேடைக்கவிஞரே எனலாம். கவியரங்குகளில் இவரது கவிதைகள் அதிகம் வரவேற்பைப் பெற்றன. பிற்காலத்திலே இவர் சிலேடை போன்ற மொழி வித்தைகளிலும் அக்கறை காட்டியுள்ளார். இவரது கவிதை நூல்கள் எதுவும் வௌிவரவில்லை.

இராஜ பாரதி, அண்ணல் ஆகியோர் பிரதானமாகக் காதல் கவிஞர்களே. ஓசைநயமும் உவமைச் சிறப்புமிக்க பல காதல் கவிதைகளை இவர்கள் எழுதியுள்ளனர். தீயுண்ட வீரமுனை என்ற இராஜ பாரதியின் சிறு கவிதை நூல் இனக்கலவரம் ஒன்றில் பாதிக்கப்பட்ட வீரமுனை என்ற கிராமத்தைப் பற்றியது. அண்ணலின் 'அண்ணல்' கவிதைகள் என்ற தொகுப்பும் வௌிவந்துள்ளது. ஐம்பதுகளில் வளர்ச்சியடைந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவரான புரட்சிக்கமால் பிற்காலத்தில் முற்றிலும் இஸ்லாமிய மரபுணர்ச்சிக் கவிஞராக மாறினார். 'புரட்சிக்கமால் கவிதைகள்' தொகுப்பாக வந்துள்ளது.

1950 களில், பரமஹம்சதாசன், பார்வதிநாதசிவம், திமிலைத்துமிலன், அம்பி, சக்தி அ.பாலையா, எம்.சி.எம். சுபைர், யுவன், போன்ற இன்னும்பல குறிப்பிடத்தகுந்த கவிஞர்களும் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும் மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகிய மூவருமே 50 களிலும் 60 களிலும் கூட ஈழத்தின் பிரதான மூத்த கவிஞர்களாக விளங்கினர்.

1950 ஆம் ஆண்டுகளின் 'பின்பகுதி' அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழ்க்கவிதையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்திய காலப்பிரிவாகும். இக்காலப் பகுதியே அரசியல் கவிதையின் தொடக்க காலமும் ஆகும். தென் இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற அரசியல் கோசத்தின் எதிரொலியாக தமிழ் மக்கள் மத்தியில் மொழி உணர்வும் இனரீதியான அரசியல் எழுச்சியும் தீவிரம் அடைந்தன. இயல்பாகவே மொழி உணர்வுடைய, ஆனால் அரசியல் ரீதியாக வெறுமையாக இருந்த பெரும்பாலான தமிழ்க் கவிஞர்கள் 'தமிழ் அரசு' இயக்கத்தால் எளிதில் ஈர்க்கப்பட்டார்கள். இன, மொழி உணர்வை உள்ளடக்கமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கவிதைகள் இக்காலப் பகுதியில் எழுந்தன. தமிழரசுக்கட்சி சார்பான சுதந்திரன் பத்திரிகை இத்தகைய கவிதைகளின் பிரதான வௌியீட்டுக் களமாக அமைந்தது. செந்தமிழ்ச் செல்வம், உயிர்தமிழுக்கு, தமிழ் எங்கள் ஆயுதம் முதலிய தொகுப்பு நூல்களாகவும் தமிழ் இயக்கக் கவிதைகள் வௌிவந்தன. இந்த அரசியல் அலையில் இருந்து ஒதுங்கி நின்ற கவிஞர்கள் மிகச்சிலரே.

எனினும் 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இக்கவிதைப் போக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. இனரீதியான அரசியல் எழுச்சியின் விளைவுகளை மனிதாபிமானமிக்க இக்கவிஞர்கள் நேரடியாகக் கண்டனர். பலர் அதில் இருந்து விடுபட்டனர். சிலர் புதியதொரு அரசியல் போக்குக்கான தேடலில் ஈடுபட்டனர். எனினும் தீர்த்து வைக்கப்படாத தேசிய இனப் பிரச்சினை, பெரும்பான்மை இன ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க வேட்கை ஆகியவற்றின் விளைவாக இன்றுவரை இக்கவிதைப் போக்கு சிறுபான்மையாக நீடித்து நிலவக் காணலாம். கவிஞர் காசி ஆனந்தன் இப்போக்கின் சிறந்த பிரதிநிதியாக இருந்து வருகின்றார். அவரது உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் முதலியன இப்போக்கில் அமைந்த கவிதை நூல்களாகும்.

1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முக்கியமான காலப் பிரிவாகும், சமூகப் பிரக்ஞையும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் பிரதான போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து நாவல், சிறுகதை, விமர்சனத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை பிரதான இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னரே முற்போக்குச் சிந்தனை முதன்மைபெறத் தொடங்கியது. எல்லோரும் இல்லை எனினும் ஒரு கணிசமான தொகைக் கவிஞர்கள் முற்போக்குச் சிந்தனையால் பாதிக்கப்பட்டனர். இவர்களுள் பலர் அரசியல் இயக்கங்களிலும் நேரடியாக ஈடுபட்டனர்.

பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை போன்றோர் நேரடியான பிரச்சாரப் பாங்கான அரசியல் கவிதைகள் எழுதினர். எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிப்பதன் ஊடாக கலாபூர்வமாக அரசியல் உணர்வை வௌிப்படுத்த முனைந்தனர். மௌனகுரு, ஈழவாணன், இ. சிவானந்தன், மருதூர்க்கனி, பண்ணாமத்துக்கவிராயர், கலைவாதி கலீல் போன்றோரும் தம் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகளைப் பிரதிபலித்தனர். மேற்காட்டியவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் முற்போக்கு அரசியல் சித்தாந்தங்களுடன் உறவு உடையவர்களாவர்.

இக்காலப் பிரிவில் முற்போக்குச் சித்தாந்தங்களுடன் தம்மை இனம் காட்டிக்கொள்ளாத சீர்திருத்தவாதப் போக்குடைய அல்லது ஆன்மீக நோக்குடைய பல கவிஞர்களும் உள்ளனர். 60ஆம் ஆண்டுகளின் கவிதை முயற்சியில் இவர்களின் பங்களிப்பும் கணிசமானதாகும். ஜீவா.ஜீவரத்தினம், வி.கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, பாண்டியூரன், மு.சடாட்சரன், பஸீல் காரியப்பர், ஏ.இக்பால், அன்பு முகையதீன், சா.வெ. பஞ்சாட்சரம், பா. சத்தியசீலன், மு.பொன்னம்பலம், குமாரசாமி போன்றோர் இப்போக்குகளின் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகளாவர். இவர்களுள் சிலரின் பிற்காலக்கவிதைகளிலே முற்போக்குச் சிந்தனையின் தாக்கத்தையும் காணலாம். இவர்களுள் சிலர் 60க்கு முன்னரே கவிதை உலகில் பிரவேசித்தவர்கள் எனினும் 60 ஆம் ஆண்டின் பின்னரே முதிர்ச்சியும் பிரபலமும் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்காலப் பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர்கள் சிலரின் கவிதை நூல்கள் சில வௌிவந்துள்ளன.பசுபதியின் 'பசுபதி கவிதைகள்', சுபத்திரனின் 'இரத்தக்கடன்', இரத்தினதுரையின் 'காலம் சிவக்கிறது', 'ஒரு தோழனின் காதல் கடிதம்', எம்.ஏ. நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்', ஈழவாணனின் 'அக்கினிப்பூக்கள்', இ. சிவானந்தனின் 'கண்டறியாதது', ஜீவா ஜீவரத்தினத்தின் 'வாழும் கவிதை', வி. கந்தவனத்தின் 'ஏனிந்தப் பெருமூச்சு', 'இலக்கிய உலகம்', 'கவியரங்கில் கந்தவனம்', காரை சுந்தரம்பிள்ளையின் 'தேனாறு', 'சங்கிலியம்', சா.வே. பஞ்சாட்சரத்தின் 'எழிலி, பா.சத்தியசீலனின் 'பா', மு.பொன்னம்பலத்தின் யுஅது'. அன்புமுகையதீனின் 'நபிகள் வாழ்வில் நடந்த கதை' ஆகியன 60, 70 களில் வௌிவந்தன.

1960 ஆம் ஆண்டுகளில் ஈழத்துக் கவிதைகளின் உருவ அமைப்பில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.

60 ஆம் ஆண்டுகள் வரை யாப்போசையும், சந்தலயமும் கவிதையின் பிரதான அம்சங்களாகக் கருதப்பட்டு வந்தன. 'யாப்புக்குள் இருந்து யாழ்மீட்டுபவள்' என மஹாகவி ஒரு கவிதை எழுதினார். ஓசைநயம் மிக்க பல்வேறு வகையான யாப்பு வடிவங்களிலும், சந்த விகற்பங்களிலும், ஈழத்துக் கவிஞர்கள் அக்கறை காட்டினார். ஆனால் 60 ஆம் ஆண்டுகளில் இறுக்கமான யாப்போசை விருப்பு தளர்ச்சியடைந்தது. பேச்சோசைப் பாங்கான கவிதைகள் பெரிதும் எழுதப்பட்டன. அதற்கேற்ப செய்யுளின் அமைப்பு முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றாட வழக்குச் சொற்கள் இயல்பான சொற் சேர்க்கை, சிறு வாக்கிய அமைப்பு என்பன கையாளப்பட்டன. செய்யுளின் அடி அமைப்புக்கு ஏற்ப அன்றி, பொருள் அமைப்புக்கு ஏற்ப சீர்பிரித்து வரிகள் அமைக்கப்பட்டன. ஓசை நிறுத்தத்துக்காக நிறுத்தக் குறிகளும் இடைவௌி (Space) களும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு செய்யுளின் யாப்போசை குறைக்கப்பட்டு பொருள் புலப்பாட்டுக்கு ஏற்ப பேச்சோசை நிலை நிறுத்தப்பட்டது. ஒரு செய்யுளுக்குரிய எதுகைமோனை, சீர்தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசையின் சகல பண்புகளையும் ஈழத்துக்கவிதை பெற்றது.

மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங்களிலும் குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற வரையறுப்புக்கள் மிகுந்த வடிவங்களிலும் கூட ஈழத்து நவீன கவிஞர்கள் பேச்சு ஓசைப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றார்கள். மஹாகவி, முருகையன், நீலாவணன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரே இதில் முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர் எனலாம். முருகையனின் 'பேச்சோசையும் பாட்டோசையும்' என்ற கட்டுரையும் எம்.ஏ.நுஃமானின் 'பேச்சுமொழியும் கவிதையும்' 'மஹாகவியும் வழக்குத் தமிழும்' என்ற கட்டுரைகளும் ஈழத்து நவீன கவிதையின் இப்பண்பை எடுத்துக் காட்டுவனவாய் அமைந்தன. புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய கவிதைத் தேவைகளுக்கு ஏற்ப மரபுவழிச் செய்யுள் நவீனமயமாக்கப் பட்டதன் விளைவே இப்பேச்சோசைப்பண்பு எனலாம். இது தமிழகத்துக் கவிதையில் காணப்படாத ஓர் அம்சம் ஆகும்.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைத் தமிழ்க் கவிதையில் ஒரு புதிய அலை தோன்றியது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணர்வும், தென் இந்தியப் புதுக்கவிதைகளின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கவிதை உலகுள் இழுத்துவிட்டன. புதிய சமுதாய மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் புரட்சிகரச் சிந்தனை உடையோரே இவர்களுள் அதிகமாகக் காணப்பட்டனர். இவர்கள் யாவரும் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வௌியிடுவதற்குப் புதுக்கவிதை ஒரு இலகுவான சாதனம் எனக் கண்டனர். 1970க்கு முன்பும் ஈழத்துக் கவிதை உலகில் புதுக்கவிதை அல்லது வசன கவிதைப் போக்கு இருந்தது. இன்று தென்னிந்திய இலக்கியத்துடன் தன்னை முற்றிலும் இணைத்துக்கொண்ட புதுக்கவிதையாளர் தருமு சிவராமு ஈழத்தவரே. 60 க்களில் மு. பொன்னம்பலம், கே.எஸ். சிவகுமாரன், தா. ராமலிங்கம் முதலியோரும் புதுக்கவிதைகள் எழுதினர். தா. ராமலிங்கம் முக்கிய கவனத்துக்குரிய தனித்துவமான புதுக்கவிதைக்காரராவர். இவரது புதுமெய்க்கவிதைகள், காணிக்கை ஆகிய இரு நல்ல புதுக்கவிதைத் தொகுதிகள் வௌிவந்தன. எனினும் 70க்கு முன்னர் இலங்கையில் புதுக்கவிதை சிறுபான்மையினருக்கு உரியதாகவும் இலக்கிய அங்கீகாரம் பெறாததாகவுமே இருந்தது. ஆனல் 70க்குப் பின்னர் ஈழத்துக்கவிதை பெரும்பாலும் புதுக்கவிதையாகவே மாறிவிட்டது. எல்லா சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் புதுக்கவிதைக்கு இடம் கொடுக்கின்றன. ஏராளமான புதுக்கவிதைப் பிரசுரங்களும் வௌிவந்துள்ளன. முற்போக்கான கருத்துக்களே இன்றைய புதுக் கவிதையின் பலம் என்று சொல்ல வேண்டும். கவித்துவமும் கலைப்பெறுமானமும் உடைய படைப்புக்கள் இவற்றுள்மிகக் சொற்பமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான கவிதைகள் துணுக்குகளாகவும், சிறு சிறு கூற்றுக்களாகவுமே உள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் பெரும்பாலான தமிழ்நாட்டுப் புதுக்கவிதைகளில் காணப்படுவது போன்ற ஓர் இலக்கிய முதிர்ச்சியின்மை பெரும்பாலான ஈழத்துப் புதுக்கவிதைகளின் பொதுப் பண்பாகவும் உள்ளது எனலாம். புதுக்கவிதை உலகில் சில தனி ஆளுமைகள் வளர்ச்சியடையும் வரை நிலைமை இவ்வாறே இருக்கக்கூடும். இத்தகைய தனி ஆளுமையின் வளர்ச்சிக்கான அறிகுறிகளும் சமீபகாலத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. இவ்வகையில் சொந்த அனுபவ வௌிப்பாட்டுக்கு முதன்மை கொடுக்கும் அ. யேசுராசா, சமூக அரசியல் உணர்வுகளுக்கு முதன்மை கொடுக்கும் வ.ஐ.ச. ஜெயபாலன், சிவசேகரம் ஆகியோர் கலை உணர்வுடன் எழுதும் குறிப்பிடத் தகுந்த புதுக்கவிதையாளர்கள் ஆவர்.

மு. கனகராசனின் 'முட்கள்', அன்பு ஜவகர்ஷாவின் 'காவிகளும் ஓட்டுண்ணிகளும்', திக்வல்லைக்காமலின் 'எலிக்கூடு', மேமன் கவியின் 'யுகராகங்கள்', சௌமினி சிவம் ஆகியோரின் 'கனவுப்பூக்கள்', பேனா மனோகரனின் 'சுமைகள்', மூதூர் முகையதீனின் 'முத்து', லோகேந்திரலிங்கத்தின் 'போலிகள்', செந்தீரனின் 'விடிவு',பூநகர் மரியதாஸின் 'அறுவடை' முதலிய புதுக்கவிதைத் தொகுப்புக்கள் 1970க்குப் பின்னர் வௌிவந்துள்ளன.தொகுப்புகள் எதுவும் வௌியிடாதபோதிலும் சபா-ஜெயராசா, சாருமதி, ஜவாத் மரைக்கார் முதலிய அனேகர் இங்கு புதுக்கவிதை எழுதிவருகின்றனர். அன்பு ஜாவகர்ஷா தொகுத்த பொறிகள், சரவணையூர் சுகந்தன் தொகுத்த 'சுவடுகள்' ஆகிய புதுக்கவிதைத் தொகுப்புக்களில் ஐம்பதுக்கும் அதிகமான கவிஞர்களின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக, உயர் இலக்கியமட்டத்தில் புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றிய முரண்பாடு அருகி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விருநிலை முரண்பாட்டின் சமூக வரலாற்றுப் பின்னணி எவ்வாறு இருப்பினும், நடைமுறையில் செய்யுள் அமைப்பில் எழுவது மரபுக்கவிதை, செய்யுள் அமைப்பை ராகரிப்பது புதுக்கவிதை என்ற கருத்தே நிலவிவருகின்றது. புதுக்கவிதை என்பதற்கு நவீன கவிதை (Modern Poetry) என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டால் (அதுவே சரியானதும் ஆகும்) பாரதியே தமிழின் முதலாவது புதுக் கவிஞனாவான். ஆனால் பாரதிக்குப் பின்னர் தமிழகத்தில் நவீன வாழ்க்கை உள்ளடக்கத்தை, நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிப்பதற்கு செய்யுள் நடையைக் கையாளும் ஆற்றல் உள்ள கவிஞர்கள் தோன்றாததால், செய்யுளை நிராகரித்து பிச்சமூர்த்தி வழியில் புதுக்கவிதை மரபு உருவாகிற்று. நவீன சிந்தனை செய்யுள் நடையில் வௌிப்பாடு பெற முடியாது என்றும் கூறப்பட்டது. ஆனால், ஈழத்திலே நிலைமை வேறு வகையாக இருந்தது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நவீன சிந்தனையுடன் இயைபுறும் வண்ணம் செய்யுள் நடையும் அதன் அச்சமைப்பும் இங்கு மாற்றியமைக்கப்பட்டது. எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் செய்யுளையே கவிதைக்குப் பயன்படுத்தியபோதிலும் அவர்களது படைப்புக்களை மரபுக் கவிதைக்குப் புறம்பான புதுக்கவிதை என்றே ஈழத்தின் பல புதுக்கவிஞர்களும் சில விமர்சகர்களும் கருதி வந்துள்ளனர் என்பது இதை நன்கு விளக்கும். தமிழகத்திலே பாரதிக்குப் பின்னர் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளை நிராகரிக்கும் பிச்சமூர்த்தி வழிவந்த புதுக்கவிஞர்களாகவே இருப்பதுபோல் ஈழத்தில் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளைப் பயன்படுத்திய, மஹாகவி, வழிவந்த நவீன கவிஞர்களேயாவர் என்பது முக்கிய கவனத்திற்கு உரியது. இலக்கிய முதிர்ச்சியுள்ள சிறந்த கவிதைகள் படைப்பதற்குச் செய்யுளைப் பயன்படுத்துவதோ அல்லது செய்யுளை நிராகரிப்பதோ அடிப்படைக் காரணியல்ல என்பதையே இது காட்டுகின்றது. நவீனத்துவம் பற்றிய பிரக்ஞையே அதன் அடிப்படையாகும். சமீப காலமாக கவிஞர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் இந்தத் தௌிவு ஏற்பட்டு வருவதனாலேயே புதுக்கவிதை மரபுக் கவிதை பற்றிய இருநிலை முரண்பாட்டு மோதல் தளர்ச்சியடைந்து வருகின்றது எனலாம்.

இதுவரை இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து நவீன கவிதையின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிக் கவனித்தோம். இதே காலப் பகுதிகளில் பழைய தலைமுறையைச் சேர்ந்த சிலரும் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர். இவர்கள் சமய மரபை இறுக்கமாகப் பேணுபவர்கள்; கவிதையைச் சமயச்சார்பான சிந்தனைகளுடன் இணைப்பவர்கள். செந்நெறிப்பாங்கான செய்யுள் நடையை இவர்கள் கையாண்டனர். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் 'பகவத்கீதை வெண்பாரு இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கது, புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் எழுதிய 'நபிமொழி நாற்பது', இ. இரத்தினத்தின் 'முருகு', சிவன் கருணாலய பாண்டியனாரின் 'அழகியது' ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கன.

கவிஞர் அப்துல்காதர் லெவ்வை, பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் முற்றிலும் இவர்கள் வரிசையைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனினும் நவீன கவிஞர்களாகக் கருதப்படுபவர்களும் அல்லர். மொழிபெயர்ப்பாகவும் சொந்த ஆக்கமாகவும் அப்துல்காதர் லெவ்வையின் பல நூல்கள் வௌிவந்துள்ளன. அவரது 'செயினம்பு நாச்சியார் சதகம்' ஒரு வகையில் தேசிகவிநாயகம்பிள்ளையின் மருமக்கள்வழி மான்மியத்துருடன் ஒப்புநோக்கத்தக்கது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் 'தூவுதூஉம் மலரே', 'காதலி ஆற்றுப்படை' ஆகிய நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவ்வகையில் வித்துவான் வேந்தனாரின் 'கவிதைப் பூம்பொழில்' பண்டிதர் வீரகத்தியின் 'செழுங்கமலச் சிலம்பொலி' ஆகியனவும் குறிப்பிடத்தக்கன.

2


இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம்.

1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டுகளிலும் ஓரளவு இப்போக்கு நீடித்தது எனலாம். இத்தகைய முயற்சிகளில் சுவாமி விபுலானந்தர் ஒரு முன்னோடியாக அமைகின்றார். சேக்ஸ்பியரின் நாடகப் பகுதிகள் பலவற்றை கம்பீரமான, செந்நெறிப் பாங்கான மொழிநடையில் (Classical Style) அவர் பெயர்த்துள்ளார். காளிதாசனின் 'மேகதூதம்' என்ற நூலும், சிங்களப்பிரபந்தமான 'செலஹினி சந்தேசய' என்பது 'பூவைவிடுதூது' என்ற பெயரிலும் திரு.சோ. நடராசாவினால் மொழி பெயர்க்கப்பட்டு நூல் உருப்பெற்றுள்ளன. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை 'இக்பாலின் கவிதைகள்' சிலவற்றை மொழிபெயர்த்து 'இக்பால் இதயம்' என்ற பெயரில் தொகுப்பாக வௌியிட்டார். அவரே பின்னர் உமர்கையாமின் 'ருபாய்யாத்' தையும் மொழி பெயர்த்தார். இதே நூல் சி. கதிரவேலுப்பிள்ளையாலும் இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிஞரான மௌலானா றூமியின் சில கவிதைப் பகுதிகளை 'மஸ்னவி மலர்கள்' என்ற தலைப்பில் எம்.ஏ. நுஃமான் தமிழ்ப்படுத்தினார். 'மௌலானா றூமியின் சிந்தனைகள்' என்ற பெயரில் ஏ.இக்பால் ஒரு கவிதை நூலை வௌியிட்டார். 'வேட்ஸ்வேர்த், ஜோன்டன், கீற்ஸ் போன்ற ஆங்கில மனோரதியக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை 'ஒருவரம்' என்ற பெயரில் முருகையன் வௌியிட்டார். 'தேன்மொழி' 'நோக்கு' ஆகிய கவிதைப் பத்திரிகைகளிலும் இலக்கியச்சுவையின் அடிப்படையில் பல பிறமொழிக்கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. நோக்கின் ஓர் இதழ் முழுவதும் சேக்ஸ்பியரின் மொழிபெயர்ப்புகளக்காக ஒதுக்கப்பட்டது. ஆன்மீக நோக்கின் அடிப்படையில் பரமஹம்சதாசன், கவி தாகூரின் 'கனிகொய்தல்' என்ற நூலை 'தீங்கனிச்சோலை' என்ற பெயரில் மொழிபெயர்த்து வௌியிட்டார்.

1965 ஆம் ஆண்டின் பின்னர் மொழிபெயர்ப்புக் கவிதைகளிலும் இலக்கியச் சுவைக்குப் பதிலாக அரசியல் நோக்கு முதன்மை பெறத் தொடங்கியதைக் காணலாம். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, சமூக, தேசிய விடுதலைப் போராட்டக் கவிதைகள் பல இக் காலப்பகுதியில் மொழி பெயர்க்கப்பட்டன. நமது தேசிய அபிலாஷைகளுடன் அவை ஒத்தியங்குவதே இதற்குக் காரணம் எனலாம். இவ்வகையில், வியட்நாமிய, சீன, ரஷ்ஷிய, இந்திய, பாலஸ்தீன, ஆபீரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் பல மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை பத்திரிகைகளிலேயே பிரசுரிக்கப்பட்டன. ஆயினும் கே. கணேஷ் மொழிபெயர்த்த ஹோஷிமின் கவிதைகளும் சிவசேகரம் மொழிபெயர்த்த மாஓவின் கவிதைகளும் நூல் உருவில் வௌிவந்துள்ளன. பண்ணாமத்துக் கவிராயர் நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகள் சிலவற்றையும் பலஸ்தீனக்கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். பலஸ்தீன, வியட்நாமிய, சீனக் கவிதைகள் சில எம்.ஏ.நுஃமானால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரஷ்ஷிய, சீன, அமெரிக்கக் கவிதைகள் சிலவற்றை சண்முகம் சிவலிங்கம் மொழி பெயர்த்துள்ளார். அக்னி சஞ்சிகையின் ஒரு இதழ் முழுவதும் அமெரிக்க கறுப்புக்கவிதைகளுக்காக ஒதுக்கப்பட்டது. பாப்லோ நெருடாவின் கவிதைகள் சிலவும் சிங்கள மொழிக் கவிதைகள் பலவும் தமிழாகி உள்ளன.

3


சிறுவர்களுக்கான கவிதை முயற்சி பற்றியும் இங்கு சிறிது குறிப்பிட வேண்டும். சோமசுந்தரப் புலவரே இங்கு முதன்முதல் சிறுவர்க்கான பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவரது பாடல்கள் பல சிறுவர் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவருடன் மு. நல்லதம்பி, யாழ்ப்பாணன் ஆகியோரும் இத்துறையில் குறிப்பிடற்குரியர். ஆயினும் 60 ஆம் ஆண்டுகள் வரை சிறுவர்க்கான கவிதை முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடையவில்லை.

60 ஆம் ஆண்டுகளில் இத்துறையில் பலர் முயன்றார்கள். வித்துவான் வேந்தனாரின் பல பாடல்கள் சிறுவர் பாடநூல்களில் இடம் பெற்றன. மஹாகவி பிஞ்சுப்பாடல்கள் என்ற பெயரில் சில சிறுவர் பாடல்களை எழுதினார். அம்பி, அம்பிப் பாடல்கள் என்ற பெயரில் ஒரு நூலை வௌியிட்டுள்ளார். எம்.சி.எம். சுபைரின் மலரும் உள்ளம், பா.சத்தியசீலனின் பாட்டு, மழலைத் தமிழ் அமுதம், புத்தியால் வென்ற நத்தையார் ஆகிய நூல்களும் வௌிவந்துள்ளன. சாரணாகையூம், சி. மௌனகுரு ஆகியோரும் இத்துறையில் முயன்றுள்ளனர். ஆயினும் சிறுவர்களின் வயது, மனோவளர்ச்சி, மொழியாற்றல் ஆகியவற்றுக்கேற்ப படிமுறையாக சிறுவர் பாடல்கள் எழுதப்படுகின்றன என்று சொல்வதற்கில்லை. அம்பி, சத்தியசீலன் ஆகியோரிடம் இப்பிரக்ஞை இருப்பதாகத் தெரிகின்றது. எமது சிறுவர் கவிதை இன்னும் அதிக தூரம் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது.

4

கவிதை வளர்ச்சிப் போக்கின் ஓர் அம்சமாக கவிதைக்காக மட்டும் நடத்தப்பட்ட சிறு சஞ்சிகைகளும் இங்கு தோன்றின. அதுபற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும். 1955 ஆம் ஆண்டு 'தேன்மொழி' என்னும் ஈழத்தின் முதலாவது கவிதைச் சஞ்சிகையை மஹாகவியும் வரதரும் சேர்ந்து வௌியிட்டார்கள். தேன்மொழி பதினாறு பக்கங்கள் கொண்ட சிறு சஞ்சிகையாக மாதம் தோறும் வௌிவந்தது. ஆறு இதழ்களே வௌிவந்தன எனினும் இருபது வருடங்களுக்கு முந்திய இலங்கைத் தமிழ்க் கவிதைப் போக்குகளை இனம் காட்டும் ஒரு சிறந்த பிரதிநிதியாக அது அமைந்தது.

தேன்மொழியை அடுத்து எட்டு ஆண்டுகளின் பின் 1964 முதல் 'நோக்கு' என்ற சஞ்சிகையை முருகையன், இ.இரத்தினம் ஆகிய இருவரும் சேர்ந்து காலாண்டுக்கு ஒருமுறை வௌியிட்டடனர். தாய்மொழிக் கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு, கவிதை விமர்சனம் ஆகிய மூன்றையும் வளர்ப்பது நோக்கின் நோக்கமாக இருந்தது. மொழி பெயர்ப்புக்கு நோக்கில் அதிக இடம் கொடுக்கப்பட்டது. புதுமைக்கும் பழமைக்கும் ஒரே காலத்தில் அது தளமாக அமைந்தது. நோக்கும் மொத்தம் ஆறு இதழ்களே வௌிவந்தன.

1969 முதல் எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து 'கவிஞன்' காலாண்டு இதழை வௌியிட்டனர். கவிதையின் சமூகப் பெறுமானம், கலைத்தரம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கவிஞன் முக்கியமாக வலியுறுத்தியது. முன்னைய இரு கவிதை இதழ்களையும் போலவே கவிதை மொழிபெயர்ப்பின் அவசியத்தை கவிஞனும் உணர்ந்திருந்தது. கவிதை விமர்சனத்துக்கும் முக்கிய இடம் கொடுத்தது. கவிஞன் மொத்தம் நான்கு இதழ்களே வௌிவந்தன.

70க்குப் பின்னர் தோன்றிய புதுக் கவிதைப் போக்கின் வௌியீட்டுக் களமாக இக்காலப் பகுதியில் சில புதுக்கவிதை இதழ்களும் தோன்றின. 1973 ஆம் ஆண்டில் நீள்கரைநம்பி, அப்துல் சத்தார் ஆகிய இருவரும் க-வி-தை என்ற புதுக் கவிதை ஏடு ஒன்றை வௌியிட்டனர். அது தொடர்ந்து வௌிவரவில்லை. 1975இல் கவிஞர் ஈழவாணன் 'அக்னி' என்ற புதுக் கவிதை ஏட்டை வௌியிட்டார். ஐந்து இதழ்களுடன் அதுவும் நின்றுவிட்டது. முன்னைய கவிதை இதழ்களைப் போல் சுய ஆக்கம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகியன அக்னியிலும் இடம் பெற்றன. இவை தவிர புதுக் கவிதைக்கு முதன்மை கொடுத்து பொன்மடல், நவயுகம் ஆகிய இரு சஞ்சிகைகள் வௌிவந்தன. அவையும் இரண்டொரு இதழ்களுடன் நின்றுவிட்டன. அச்சகச் செலவு அதிகரிப்பும் - வாசகர் குறைவும் கவிதை இதழ்களின் அற்ப ஆயுளுக்குக் காரணமாக அமைந்தன.

5

கவிதை ஏடுகளைப் போல் கவிதையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சாதனமாக கவிதை அரங்குகள் அமைந்தன. 60ஆம் ஆண்டுகள் கவிதை அரங்கின் எழுச்சிக் காலம் எனலாம். எல்லாக் கூட்டங்களிலும் விழாக்களிலும் கவிதை அரங்கும் ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது. முக்கிய விழாக்களின் போதெல்லாம் வானொலியிலும் கவிதை அரங்குகள் இடம்பெற்றன. கவியரங்குகள் மூலம் கவிஞர்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார்கள். கவிதையை வாசிக்கும் பழக்கம் அற்றவர்களுக்கும் அதை அறிமுகப் படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். மஹாகவி, முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன். எம்.ஏ.நுஃமான், பா. சத்தியசீலன், கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, சி. மௌனகுரு முதலியோர் 60 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளிலும் கவிதை அரங்குகளில் அடிக்கடி பங்குபற்றினர். இவர்கள் அலாதியாகக் கவிதையைச் சொல்லும் முறை கவிதை மீது மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்தது. மேடையில் கவிதையைச் சொல்வதற்குப் பதிலாக பாடும் முறையையும் சிலர் கையாண்டனர். மண்டூர் சோமசுந்தரம்பிள்ளை, அரியாலையூர் ஐயாத்துரை ஆகியோர் தங்கள் குரல் வளத்தினால் சபையினரைக் கவர்ந்தனர். முருகையன், செல்வராசன், பஸீஸ் காரியப்பர் முதலியோரும் சிலவேளைகளில் இவ்வுத்தியைப் பயன்படுத்தினர். ஆயினும் கவிதையை எடுத்துரைக்கும் முறையே கவியரங்குகளில் பாதிப்பு உடையதாக அமைந்தது.

கவியரங்குகளில் கவிதை நேரடியாகக் கேட்பதற்காகவே எழுதப்படுவதால் அது கவிதையின் அமைப்பையும் பாதித்தது. இவ்வகையில் கவியரங்கக் கவிதையில் மூன்று வகையான போக்குகள் காணப்பட்டன. முதலாவது காத்திரமான எளிதில் பொருள் விளங்கக்கூடிய அதேவேளை கலையம்சம் ஊறுபடாத கவிதைகள். இரண்டாவது மேடைப் பிரசங்கம்போல் செய்யுட் சொற்பொழிவாக எழுதப்பட்ட கலையம்சம் அற்றவை. மூன்றாவது உடனடியான கைதட்டல்களையும் ஆரவாரங்களையும் பெறக்கூடிய மலிவான பகடிகள் நிறைந்தவை. இரண்டாம் மூன்றாம் போக்குடையவையே கவியரங்குகளில் அதிகம் இடம்பெற்றதால் காலப்போக்கில் கவிதையரங்கு தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கிற்று.


4. நாவல்

பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவை தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. நாவல், சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற நாவலிலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு சுமார் ஒரு நூற்றாண்டு கால வரலாறுண்டு. சித்திலெப்பையினால் எழுதப்பட்டு 1885-ம் ஆண்டு வௌியிடப்பட்ட அஸன்பேயுடைய கதையே ஈழத்தின் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. ஈழத்தவரால் எழுதப்பட்டதாயினும் இந்நூல் சென்னையிலேயே வௌயிடப்பட்டது. மிஸர் தேசத்து அரசகுமாரனான அஸன்பேயின் வாழ்க்கை நிகழ்ச்சிகளினூடாக இஸ்லாமிய கலாசாரத்தின் பெருமையை நிலைநாட்ட ஆசிரியர் முனைந்திருக்கிறார் எனலாம். அஸன்பேயுடைய கதை வௌிவந்து பத்து ஆண்டுகளின் பின்ன திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்ற நூல் வௌியாயிற்று. இந்நூல் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும் ஒரு சிறு சம்பவத்தைக் கருவாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டதாகும்.

இவ்வாறு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தவர் புதியதொரு இலக்கிய வடிவத்தைப் படைப்பதில் ஈடுபட்டனர். எனினும் வசனத்திலமைந்த நீண்ட கதைகளாக இவை அமைந்தனவே தவிர நாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தின் பண்புகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. சமகால வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொள்ளாமல் இதிகாச அல்லது கற்பனைக் கதைகளையே வசனத்தில் இந்நூல்கள் கூற முனைந்தன. இந்நிலைமைக்கு இன்னோர் சிறந்த உதாரணமாக சி.வை. சின்னப்பபிள்ளையின் விஜய சீலத்தை (1916) குறிப்பிடலாம். விஜயன் இலங்கைக்கு வந்தமை, குவேனியை மணந்தமை ஆகிய இதிகாச நிகழ்ச்சிகளை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டது. சி.வை.சின்னப்ப பிள்ளையின் வேறும் இரு நூல்கள் 20 ஆம் நூற்றாண்டின் சன்மார்க்க ஜெயம் (1905) உதிரபாசம் அல்லது இரத்தினபவானி (1915) ஆகிய அவரது நூல்கள் சமகாலப் பாத்திரங்களைக் கொண்டவைபோன்று அமைந்திருப்பினும் கற்பனையான கதைகளே. இக்கற்பனைக் கதைகளில் அக்காலத் தன்மைகள் சில இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. வன்னி, உதாரணமாக வீரசிங்கன்கதையில் அதன் கதைத் தலைவன் அனுரதபுரம், திருகோணமலை முதலிய பல இடங்களுக்கும் போவதாகக் கூறப்படுகிறது. ஆயினும் அவ்வவ்விடங்களுக்குரிய இயல்பு, அங்குள்ள வாழ்க்கை யதார்த்தம், அதற்கும் கதைத் தலைவனின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அக்குறிப்பிட்ட சூழலில் பிறக்கும் மனித குணாம்சங்கள் ஆகியவை நாவலில் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்திலிருப்போர் உத்தியோகத்துக்காகவும் பிற தொழில்களுக்காகவும் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லுதல் 20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட ஒரு புதிய நிலைமையாகும். இநிலைமையை வெறும் நிகழ்ச்சியாக இவ்வாசிரியர்கள் கண்டனரே தவிர அந் நிலைமைகள் தனிமனித, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்திய புதிய பரிமாணங்களைத் தமது எழுத்தில் சிறைப்பிடிக்க முனைந்தாரல்லர். இதனாலேயே இந் 'நாவல்கள்' யதார்த்தத்தை இழந்த கற்பனைக் கதைகளாகின. இந்லையில் கதை கொழும்பில் நிகழ்ந்தாலும் கோலாலம்பூரில் நிகழ்ந்தாலும் ஒன்றாகவேஅமையும் விபரீதத்திற்குள்ளாகிறது. இந்நிலைமை இந் நூற்றாண்டின் பிற்பாதி வரை தொடர்ந்து எமது நாவலுலகில் நிலவி வந்துள்ளது. கதைகளினூடு நல்வழி உபதேசம் செய்யும் பண்பே இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அரசோச்சி வந்துள்ளது எனலாம். சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள், ஒழுக்கப் பிறழ்வுகள் அனைத்தையும் அறக்கண் கொண்டே நாவலாசிரியர் நோக்கினர். ஏனையோருடன் ஒப்பிடும்போது அதிகளவு சமூக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு நாவலெழுதியவர் என்று போற்றப்படும் ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை பின்வருமாறு கூறியுள்ளார்.

"செந்தமிழ்ப் பயிற்சி குன்றி ஆங்கிலக் கல்வியே அதிகரித்து வரும் இக் காலத்தில் நமது தமிழ் மக்கள் பத்திய ரூபமாகவுள்ள புராணேதிகாசங்களையும் மற்றும் நீதி நூல்களையும் இலகுவிற் பயின்று அவைகளிற் சொல்லப்பட்ட நீதிகளையும் பிறவற்றையும் அறிந்து நல்வழியடைய முடியாதவர்களாயிருக்கிறார்கள். இக் காரணம் பற்றியே இராமாயணம், பாரதம், முதலிய இதிகாசங்களும், கந்தபுராணம், பெரியபுராணம் , திருவிளையாடற் புராணம் முதலிய புராணங்களும் அறிஞரால் வசன நடையில் எழுதி வௌியிடப்படலாயின. மேலைத்தேசக் கொள்கையைப் பின்பற்றிப் பல நவீன கதைகள் தமிழ்ப் பாஷையில் எழுதப்படுவதும் இக் காரணம் பற்றியேயாம்.".

இப் பண்பு இந்நூற்றாண்டின் பிற்பாதி வரை எழுந்த கதைகளில் காணப்படும் பொது நிலைமையாயினும் அவற்றுள் காணப்படும் சில சாயை வேறுபாடுகளையும் வேறு பண்புகளின் தோற்றத்தையும் கருதி அவற்றை மூன்று உட்பிரிவுகளாக நோக்குதல் இக் காலப் பகுதி நாவல் இலக்கிய வரலாற்றைத் தௌிவாக்க உதவும்.

1) 1915 ஆம் ஆண்டு வரை நீண்டதும் வசன ரூபத்தில் அமைந்தனவுமான கற்பனைக் கதைகளே முதன்மை பெறுகின்றன. அஸன்பேயுடைய கதை, மோகனாங்கி, உதிரபாசம், விஜயசீலம், வீரசிங்கன்கதை ஆகிய மேலேபார்த்த நூல்கள் இக் காலத்தில் வௌிவந்தவையாகும். இவற்றின் பொதுப் பண்புகளை மேலே பார்த்தோம். இவற்றை நாவல்கள் என அழைப்பதை விட ரோமான்ஸ் எனக் கூறுவதே பொருத்தமானது.

2) 1915-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிகளவு சமுக நிலைமைகளைக் கவனத்திற் கொள்ளும் போக்கு நாவல் உலகில் அரும்பத் தொடங்குகிறது. பாத்திர உருவாக்கம், பாத்திர உரையாடல் ஆகியவற்றிலோ, கதைப் பின்னலிலோ ஆசிாியர்கள் அதிக கவனம் செலுத்தாவிடினும் அக்காலத்துச் சமூக நிலைமைகள் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்கள் ஆகியவற்றைச் சிறிதளவாவது தமது நாவல்களில் பிரதிபலித்துள்ளனர். வெறும் கதை கூறும் போக்கிலிருந்து விடுபட்டு சமூக உணர்வுடன் நாவல்கள் எழுதப்பட்டமைக்கும் அக்காலச் சமூக நிலைமைகட்கும் தொடர்பிருந்தது. ஆங்கிலேயர் இலங்கையில் ஏற்படுத்திய பொருந்தோட்டப் பயிர்ச் செய்கை, விருத்தி செய்த வர்த்தகம், அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, அதுசார்ந்த பதவிகள் ஆகியவை நாட்டில் புதிய நிலைமையைத் தோற்றுவித்தன. பணம் சம்பாதிப்பதில் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். அத்துடன் கிறிஸ்தவ மிசனாிமாாின் தீவிரமான மதமாற்ற முயற்சிகளும் இடம்பெற்றன. சுருங்கக் கூறின் பாரம்பாிய சமூக அமைப்பினுள் ஏற்பட்ட சலனங்கள் மக்கள் நடைமுறைகளையும் கருத்துக்களையும் பாதித்தன எனலாம். இக்காலப் பகுதியில் மக்களின் மனோபாவங்களிலும் நடைமுறைகளிலும் ஏற்பட்ட மாறுதல்களைக் கூர்ந்து அவதானித்திருந்த பாவலர் துரையப்பாபிள்ளை Ceylon National Review என்ற பத்திாிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

"கவனத்தை ஈர்க்கும் மாறுதல் இப்போது நம் மக்களிடை ஏற்படத் தொடங்கியுள்ளது. மக்கள் நடை முறையில் அக்கறையுடையோராகவும் பணம் உழைப்பதில் கவனம் செலுத்துவோராகவும் காணப்படுகின்றனர். அவர்கள் சமூக விழாக்கள், விளையாட்டுகள், பொழுது போக்குகள் என்பவற்றைச் சிறுபிள்ளைத்தனமாகக் கணிக்கின்றனர்."

இப் புதிய நிலைமைகளில் காணப்பட்ட மனித ஒழுக்கலாறுகள் இலக்கிய கர்த்தாக்களின் சிந்தையைக் கிளறும் விஷயங்களாயமைந்தன. மக்களிடையே காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள், சீர்கேடுகள் ஆகியவற்றுக்கு பாிகாரம் கூறும் நோக்குடன் அறவியல் சமய அடிப்படையில் இவர்கள் எழுதினர். மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914) தேம்பாமலர் (1929) தம்பிமுத்துப்பிள்ளையின் சுந்தரன் செய்த தந்திரம் (1918) ம.வே. திருஞானசம்பந்த பிள்ளையின் காசிநாதன் நேசமலர் (1924) கோபாலநேசரத்தினம் (1927) துரைரத்தினம் நேசமணி(1927) இடைக்காடாின் நீலகண்டன் அல்லது ஒரு சாதி வேளாளன் (1925) ஆகியவை இப் பண்புக்கு உதாரண விளக்கங்களாகும்.

சுந்தரன் செய்த தந்திரம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம் நேசமணி, நீலகண்டன் ஆகிய நூல்களில் அக்கால யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் நிலவிய சீர்கேடுகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றன. சாதி காரணமாக மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள், உயர்சாதியினாிடை காணப்படும் ஊழல்கள், சீதன வழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், மதுபானப் பழக்கத்தால் ஏற்படும் கேடு ஆகியவை இவற்றுள் பிரதானம் பெற்றன. மக்கள் நல்லாசாரங்களைக் கைக்கொள்வதன் மூலம் சமூகத்தில் இவற்றைக் களைந்துவிடலாம் என்பது இந் நாவல்களை எழுதியோாின் கருத்தாகவிருந்தது. சமூகக் குறைபாடுகளைத் தனிமனிதக் குறைபாடுகளாகக் கண்டதின் விளைவே இதுவெனலாம். இக் குறைபாடுகளுக்குாிய சமூகவியல் காரணிகளை இந் நாவலாசிாியர்கள் கருத்தில் கொள்ளவில்லை. கடவுள் நம்பிக்கை, தர்ம விருப்பு, கல்வி அறிவினால் உண்டாகும் மன விசாலிப்பு ஆகியவை ஏற்பட முழுச் சமூகமுமே மேற்கூறிய குறைபாடுகளிலிருந்து நீங்கும் என இவர்கள் எண்ணினர்.

மேற்கூறிய நாவல்கள் சிலவற்றில் இன்னோர் பண்பும் முதன்மை பெற்றது. 19ஆம் நூற்றாண்டிலிருந்தே இலங்கையில் இடம்பெற்ற கிறிஸ்தவ மதமாக்கல் முயற்சியும் அதற்கு எதிராக சுதேசிகளிடம் தோன்றிய சுதேச மதப் பற்றும் 20 ஆம் நூற்றாண்டிலும் முக்கிய அம்சங்களாகக் காணப்பட்டன. இவற்றின் பிரதிபலிப்பும் மேற்கூறிய சில நாவல்களில் இடம் பெற்றன. மங்கள நாயகம் தம்மையாவின் நொறுங்குண்ட இருதயம் கிறிஸ்தவ சமய நெறியில் சன்மார்க்க சீவியம் நடத்த மக்களுக்கு வழிகாட்டும் முயற்சியாகவே எழுதப்பட்டதெனலாம். சைவசமய பாிபாலன சபையினர் வௌியிட்ட இந்துசாதனப் பத்திாிகையின் ஆசிாியராகப் பணிபுாிந்த ம.வே. திருஞானசம்பந்தபிள்ளையின் கோபாலநேசரத்தினம் சுதேச மத விழிப்புணர்வைப் பிரதிபலிப்பதாகும். "சைவசமயச் சிறுமியரை அந்நிய மதத்தினர் வைத்து நடத்தும் வித்தியாசாலைகளில் கல்வி பயிலவிடவொண்ணாவென்பதை இந்நூல் எடுத்துக் காட்டும் இயல்பினது" என ஆசிாியரே அந் நூல்முகத்தில் கூறுகிறார்.

சமூக நிலைமைகளையும், சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்களையும் பிரதிபலிப்பனவாக மேலே பார்த்த, 1915-30க்கிடைப்பட்ட நாவல்கள் அமைகின்றன. அதே வேளையிலேயே அவை மரபு வழிப்பட்ட அறவியல் அடிப்படையிலேயே பிரச்சினைகளை அணுகின என்பதும் வற்புறுத்தப்பட வேண்டியதாகும்.

3) 1930 ஆம் ஆண்டையடுத்து மீண்டும் எண்ணிக்கையில் அதிகமாகக் கற்பனைக் கதைகள் நாவல் என்ற பெயாில் வௌிவரத் தொடங்கின. சமூக நிலைமைகள் எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் வெறும் கற்பனாாீதியில் அமைந்த இவை குறிப்பிடத்தக்க நீளமும் உடையனவாயிருந்தன. மக்களிடையே விருத்தியடைந்த வாசிப்புப் பழக்கமும், தினசாிப் பத்திாிகையின் தோற்றமும் இத்தகைய நூல்கள் தோன்ற வழிவகுத்தன எனலாம். இது தொடர்பாக 1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரகேசாி பத்திாிகை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அதன் ஆசிாியராகவிருந்த எச். நெல்லையா இப் பத்திாிகையில் தொடர்ந்து கதைகளை எழுதினார். இவரது நூல்களாக சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி (1934), இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி (1938), காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமணி (1938) (1938), பிரதாபன் அல்லது மகாராஷ்டிர நாட்டு மங்கை (1941), சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1940) ஆகியவை வௌிவந்துள்ளன. நெல்லையாவுக்குப் பின்னர் வீரகேசாி ஆசிாியராகவிருந்த கே.வி.எஸ் வாஸும் இவ்வகை நாவல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ரஜனி என்ற புனைபெயாில் குந்தளப் பிரேமா, நந்தினி, பத்மினி, தாாிணி, மலைக்கன்னி, உதய கன்னி ஆகியவற்றை இவர் வீரகேசாியில் எழுதினார். 1949-55 காலப் பகுதியில் இவை வீரகேசாியில் தொடராக வௌிவந்தன. இவற்றை விட வேறும் பல நூல்களும் வௌிவந்துள்ளன. இராசம்மாள் எழுதிய சரஸ்வதி அல்லது காணாமல் போன பெண்மணி (1929), ஏ.சி. இராசையாவின் அருணோதயம் அல்லது சிம்மக்கொடி (1933), பவளகாந்தன் அல்லது கேசாி விஜயம் (1932),சிவராமலிங்கம் பிள்ளையின் பூங்காவனம் (1930), சி.வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936), வே.க. நவரத்தினத்தின் செல்வரத்தினம் (1935), எம். செல்லாப்பாவின் சந்திரவதனா அல்லது இன்பக் காதலர் (1937) முதலியன இவற்றுட் சில.

இந்நாவல்களில் பாத்திரங்களின் வீரசாகசச் செயல்களும், மர்ம நிகழ்ச்சிகளும் நிறைந்திருக்கும். கொலை, கொள்ளை ஆகியவை தாராளமாக இடம்பெறும் எனினும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கருத்து வற்புறுத்தப்படும்.

"மக்கள் செய்யும் நல்வினைத் தீவினைப் பயன்கள் அவர்களைத் தொடர்ந்து சென்று இறுதியில் அதன் பலாபலனை அனுபவிக்கச் செய்கிறது என்ற உண்மையை இச் சாிதை தௌிவாயெடுத்து விளக்குகிறது. ஒவ்வொருவரையும் மக்களின் ஈடேற்றத்திற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் உழைத்து வரும்படி இது தூண்டி விடுகிறது. நல்லொழுக்கங்களிலிருந்து தவறி நடப்போரை இந்நாவல் இரக்கமின்றித் தண்டிக்கிறது."

மேற்கண்டவாறு அருணோதயம் அல்லது சிம்மக்கொடி என்ற நாவலின் ஆசிாியர் வரணியூர் ஏ.சி. இராசையா குறிப்பிடுவது மேற்கூறிய அறவியற் பண்புக்கு ஒரு உதாரணமாகும்.

இவ்வாறு அறவியல் நோக்கும், கதைச் சுவைக்காக திடுக்கிடும் சம்பவங்களும் கொண்ட நாவல்கள் தோன்றுவது முக்கிய போக்காக இருந்த அதே சமயம் அதற்குச் சமாந்தரமாக இன்னோர் போக்கும் காணப்பட்டது. குடும்ப உறவுகளையும் அவற்றில் தோன்றும் உணர்ச்சிப் போராட்டங்களையும் முக்கிய பொருளாகக் கொண்டு நாவல்கள் எழுதும் இப்போக்கு நாற்பதாம் ஆண்டுகளில் காணப்பட்டது. க.தி. சம்பந்தனின் பாசம், 1947 ஆம் ஆண்டு ஈழகேசாிப் பத்திாிகையில் தொடராக வௌிவந்தது. க. சச்சிதானந்தனின் அன்னபூரணி ஈழகேசாியில் 1942ல் தொடராக வந்தது. சு. வேலுப்பிள்ளையின் மன நிழல் என்ற நாவல் 1948ம் ஆண்டு வௌிவந்தது. க. சிவகுருநாதனும் கசின் என்ற புனைபெயாில் ஈழகேசாியில் தொடராக நாவல்களையும் குறுநாவல்களையும் எழுதினார். சகட யோகம் (1949), இதய ஊற்று, (1951), குமாாி இரஞ்சிதம் (1952) முதலியன இவற்றுட் சில. அ.செ. முருகானந்தம் பத்திாிகைத் தொடராக யாத்திரை என்ற நாவலையும் எழுதினார். கனக செந்திநாதனின் விதியின் கை (1953), வெறும் பானை (1956) ஆகியவையும் ஈழகேசாியில் தொடராக வௌிவந்தது. இவற்றுள் விதியின்கை 1977-ல் வீரகேசாிப் பிரசுரமாக, நூல்வடிவம் பெற்றது. வ.அ. இராசரத்தினத்தின் கொழுகொம்பு நாவலும் ஈழகேசாிப் பத்திாிகைத் தொடராக (55-56) வௌிவந்தது பின்னர் 1959-ல் நூலுருவம் பெற்றதாகும்.

மேற்கூறிய நாவல்களின் பண்புகளை ஒன்று திரட்டி நோக்கும் போது அவை தனிமனித உறவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கூறுவனவாக இருப்பதைக் காணலாம். காதல், நட்பு, பாசம் என்ற உறவு நிலைகளையும் அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளையும் இவை எடுத்துக்காட்டுகின்றன. எனினும் இவ்வுறவுகளையும் உணர்ச்சிகளையும் காட்டும் பாத்திரங்கள் யதார்த்தமான சமூக நிலையிற் காலூன்றாத "மனவௌி மனிதர்களா" கவேயமைந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். விதியின் கை, கொழு கொம்பு போன்ற சிலவே இந்நிலைக்கு விதிவிலக்காயமைந்து சற்றேனும் ஈழநாட்டுப் பின்னணியைக் கொண்டிருந்தன. விதியின் கை யாழ்ப்பாணக் கிராமமொன்றினையும், கொழுகொம்பு கிழக்கிலங்கையையும் மலைநாட்டையும் பின்னணியாகக் கொண்டவையாகும்.

மர்மப் பண்பு கொண்ட நாவல்களும் குடும்ப உறவுகளைப் பொருளாகக் கொண்ட நாவல்களும் முப்பதுகளிலிருந்து ஐம்பதுகளின் பிற்பகுதி வரை ஈழத்து நாவலுலகில் முதன்மை பெற்றன என்பது மேலே எடுத்துக்காட்டப்பட்டது. இவை ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் பொருளிலோ வடிவிலோ பாாிய மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லையாயினும் புனைகதை வாசகர் தொகை அதிகாிக்க உதவின. பத்திாிகைத் தொடராகவும், நூல்களாகவும் பிரசுரம் செய்யப்பட்ட இந் நாவல்கள் எமது இலக்கிய உலகில் நாவல் வடிவம் உறுதியாகக் காலூன்றியமையைக் குறிக்கின்றன.

2

1950 களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்து நாவல்களின் புதியதொரு சகாப்தம் அரும்புகிறது எனலாம். நாவல் இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட இம் மாற்றத்துக்கும், நாட்டு நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் முக்கிய காரணமாயமைந்தது 1956-ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியமை தேசிய முதலாளித்துவம் அதிகார முதன்மை பெற்றதைக் குறிப்பதாகும். இக் காலத்திலேயே தேசியம் என்ற கோட்பாடும் வலுப்பெற்றது. தேசிய மரபுகளும் பண்பாட்டம்சங்களும் பேணப்பட்டன. ஈழத்துத் தமிழரைப் பொறுத்தும் இது ஒரு முக்கியமான காலகட்டமே. நாட்டின் பொதுவான தேசிய எழுச்சியால் அவர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி இக் காலத்தில் தோன்றிய தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டனர். தமிழர் ஈழத்தின் தேசிய இனம் என்ற கருத்தும், ஈழத்தவர் என்ற முறையில் அவர்களுக்கெனத் தனிப் பிரச்சினைகள் உண்டென்ற உணர்வும் எற்பட்டன. இவை மட்டுமன்றி இக்காலப் பகுதியை அடுத்து ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் முதன்மை பெற்ற ஸ்தாபனமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற்பட்டது. இடதுசாாி அரசியல் சித்தாந்தத்தைப் பொதுவாகச் சார்ந்திருந்த இச் சங்கம் இலக்கியத்தில் தேசியப் பிரச்சினைகள் இடம்பெறவேண்டும் என்பதை வற்புறுத்தியது. அறுபதுகளில் எமது இலக்கிய உலகில் பிரதானம் பெறும் எழுத்தாளர்களிற் பெரும்பாலோர் இச் சங்கத்தைச் சார்ந்திருந்தோரே. இளங்கீரன், டானியல், நீர்வை பொன்னையன், காவலூர் இராசதுரை, செ. கணேசலிங்கன், க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, டொமினிக் ஜீவா முதலியோரை உதாரணங்களாகக் கூறலாம்.

மேலே பார்த்த தேசியம் என்ற கோட்பாட்டின் வளர்ச்சி இடதுசாாி அரசியல் சித்தாந்த செல்வாக்கு ஆகியவை ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்து உலகில் ஏற்பட்ட பொருள்மாற்றத்துக்குாிய பிரதான காரணிகளாகின. சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் அன்றாட அனுபவங்களும் இலக்கியத்தில் தயக்கமின்றி இடம் பெற்றன. நாவலுக்கு மட்டுமின்றிச் சிறுகதை இலக்கியத்திற்கும் இது பொதுப் பண்பாயிற்று. ஆரம்பத்தில் அறவியல் நோக்குடன் சமூகப் பிரச்சினைகளை நோக்கிய நாவல்களைப் போலல்லாது அப் பிரச்சினைகளைச் சமூகவியல் நோக்கில் இக்கால நாவல்கள் அணுகின. இலக்கியத்தில் யதார்த்தம் பற்றிய உணர்வு இக்கால நாவல்களில் தலைகாட்டத் தொடங்கியது. யதார்த்த வாதத்தை எழுத்தாளர் சித்தாந்த ாீதியாக ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி செயலிலும் பாிசீலிக்கத் தொடங்கியிருந்த இக் காலத்திலேயே நாவல் நவீன இலக்கிய வடிம் என்பதன் அர்த்தம் தௌிவாக தொடங்கியது.

1959-ம் ஆண்டு நூலுருவில் வௌிவந்த இளங்கீரனின் நீதியே நீ கேள் என்ற நாவல் மேற்கூறிய புதிய பண்பின் தொடக்கத்தைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து நகரமொன்றின் கடைச் சிப்பந்தியை பிரதான பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலில் சமூக வர்க்கங்களுகிடையேயுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், அவ்வேற்றத்தாழ்வுகளால் மனித உறவுகள் பாதிக்கப்படுதலும் காட்டப்படுகின்றன. இளங்கீரனது நாவல்கள் பலவும் பத்திாிகைத் தொடர்கதைகளாக வந்தவையே. தென்றலும் புயலும், சொர்க்கம் எங்கே, மண்ணில் விளைந்தவர்கள், இங்கிருந்து எங்கே, அவளுக்கு ஒரு வேலை வேண்டும் முதலியன இவரது குறிப்பிடத்தக்க படைப்புக்கள் எனலாம்.

ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் மூத்தவராக மதிக்கப்படும் இளங்கீரன் சரளமாகக் கதை கூறும் வல்லமை கொண்டவர். சமூகப்பிரச்சினைகளுக்கு முதன்மை கொடுப்பவர். சம்பவப் பின்னல்களும் கருத்து வௌிப்பாடும் இவரது நாவல்களில் முதன்மை பெறுகின்றன. அவ்வகையில் தொடர் கதைகளுக்குாிய பல பலஹீனங்களை இவரது நாவல்கள் பலவற்றில் காணலாம். ஆயினும் 'அவளுக்கு ஒரு வேலை வேண்டும்ரு என்ற தொடர்கதைக் குறைபாடுகளை மீறிய இவரது சிறந்த படைப்பு எனலாம்.

மார்க்ஸீய சமூகவியல் நோக்கில் சமூக நிலைமைகளை அவதானித்து அவற்றை நாவல்களின் பொருளாகக் கொண்டோாில் செ. கணேசலிங்கம் முக்கியம் பெறுகிறார். அறுபதாம் ஆண்டின் பிற்பகுதியில் இவரது நாவல்கள் தொடர்ச்சியாக வௌிவந்தன. நீண்ட பயணம் (1965), சடங்கு (1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968) , போர்க்கோலம் (1969), மண்ணும் மக்களும் (1970) ஆகியவை இவரது நாவல்களாகும். நீண்ட பயணம் யாழ்ப்பாணத்துச் சாதியடக்குமுறைக்கு இலக்காகும் தாழ்த்தப்பட்ட மக்களனின் போராட்டத்தைச் சித்திாிக்கிறது. போர்க்கோலமும் இதே கருவைக் கொண்டதாகும். சாதி வேறுபாடுகளை வர்க்க வேறுபாடுகளின் வௌிப்பாடாகவே காணும் ஆசிாியர் அவற்றில் யாழ்ப்பாணத்துச் சமூக வர்க்க அமைப்பில் ஏற்படும் மாறுதல்களும், அங்கு பரவிய அரசியற் கருத்துகளும் ஏற்படுத்திய தாக்கத்தையும் காட்ட முனைகிறார். செவ்வானம் 63-64ம் ஆண்டு அரசியலைப் பின்னணியாகக் கொண்டதாகும். அக்காலப் பிரச்சினைகள் சமூக வர்க்கங்களைப் பாதிக்குமாற்றையும் அதில் மனிதர்களின் இயக்கப்பாட்டையும் இந்நாவலில் தௌிவுபடுத்த முயன்றார் கணேசலிங்கன். தரையும் தாரகையும் மத்தியதர வர்க்க மாந்தாின் திாிசங்கு நிலையைச் சித்தாிப்பதாகும். இந்நாவலின் மூலம் உயர் வர்க்கத்தினைப் பார்த்து ஏங்கு மத்தியதரவர்க்க மாந்தர் அவ்வர்க்கத்தினர் போல உயர முடியாதென்பதையும் தொழிலாள வர்க்கத்தினருடன் இணைந்து போராடுவதே வழி என்பதையும் ஆசிாியர் காட்டுகிறார்.

தமிழ் நாட்டு நாவல்களை விட ஈழத்துத் தமிழ் நாவல்கள் கூடியளவு சமூகப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டன என்று கூறுவோர் கணேசலிங்கனின் நாவல்களைத் தவறாமல் உதாரணம் காட்டுவர். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியவராகிய கணேசலிங்கன், தனது படைப்புக்கள் அனைத்தையும் தொடர்கதைகளாக அன்றி முழுநாவல்களாகவே எழுதினார். இளங்கீரன் போல் இவரும் கருத்துக்களுக்கே முதன்மை கொடுப்பர். அதனால் இவரது கதாபாத்திரங்கள் பல அனுபவச் செழுமை குறைந்த, கருத்துக்களின் பிரதிநிதிகளாகவே காட்சியளிக்கின்றனர். தத்துவத் தௌிவு இருக்கும் அளவு அதனை வாழ்க்கை அனுபவமாக வௌிப்படுத்துவதற்குாிய அனுபவ வளம் இல்லாமலிருப்பது இதற்குக் காரணமாகலாம். இவரது கடைசிப்படைப்பான 'மண்ணும் மக்களும் ' நாவலாக அன்றி கருத்துப் பிரசாரமாகவே அமைந்து விட்டதற்கும் இதுவே காரணம் எனலாம். ஆயினும் அவரது சடங்கு, தரையும் தாரகையும் ஆகியவை இக் குறைபாட்டுக்குள் அடங்காத நல்ல நாவல்கள் ஆகும்.

அடிநிலை மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் எழுத்தில் வடிக்கும் முயற்சியில், தமிழ் மக்களிடையே அடக்குமுறையின் வடிவமாக இருக்கும் சாதிப் பிரச்சினையும் நாவல்களில் இடம் பெற்றன. குறிப்பாக அறுபதுகளில் யாழ்ப்பாணப் பகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், ஆலயப் பிரவேச இயக்கங்கள் ஆகியவை இலக்கியத்திற்கும் உந்துதலை அளித்தன. இத்தொடர்பில் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், போர்க்கோலம் ஆகியவை பற்றி மேலே கூறப்பட்டது. கே. டானியலின் பஞ்சமர் நாவலும் (1972) இப் போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் எழுந்ததாகும்.

"இந்த நாவலுக்கான மூலக்கருவை வலிந்து தேட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கேற்படவில்லை. இதில் நடமாடும் பாத்திரங்களும் நான் சிருட்டித்தவையல்ல. இதில் வரும் சம்பவங்களும் கற்பனா லோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவையல்ல. எல்லாம் யதார்த்த உலகில் அன்றாட வாழ்வில் எளிய மக்கள் எனக் கூறப்படும் பஞ்சப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள நுகத்தடியைச் சுழற்றியெறிந்து, தம்மீது சுமத்தப்பட்டுள்ள வாழ்வை நிமிர்த்த எடுத்த முயற்சிகள், நடவடிக்கைகள், போராட்டங்களிலிருந்து பெற்ற அனுபவங்களே."

மேற்கண்டவாறு தமது பஞ்சமர் நாவலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார் கே.டானியல். கதை சொல்லும் கலை நன்கு கைவரப்பெற்ற டானியல் தனது அனுபவங்களின் பின்னணியில் இந் நாவலை எழுதினார். டானியலின் இன்னோர் நாவலான போராளிகள் காத்திருக்கிறார்கள் பஞ்சமர் அளவு முக்கியத்துவம் பெறவில்லை.

அடிநிலை மக்களைச் சார்ந்து இலக்கியம் படைத்தோாில் பெனடிக்ற் பாலனும் இடம் பெறுகிறார். அவரது சொந்தக்காரன் மலைநாட்டுத் தோட்டத் தொழிலாளாின் அவலமிக்க வாழ்க்கையையும், போராட்டத்தையும் சித்தாிப்பதாகும். இந் நாவலுக்குச் சில ஆண்டுகள் முன்னர் வௌிவந்த நந்தியின் மலைக்கொழுந்தும் (1964) இதே பிரச்சினையைத் தொட்டதெனினும் நந்தியின் அணுகுமுறை மனிதாபிமானக் கண்ணோட்டம் கொண்டதாகும். கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை (1964) நாவலும் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றியது. இந்தியாவிலிருந்து தொழிலாளர் இலங்கைக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து அடுத்த மூன்று தலைமுறை காலத்தைப் பின்னணியாக்கி இயற்பண்புடன் தொழிலாளாின் அவலநிலையைச் சித்தாித்தது இது. இத் தொடர்பில் தௌிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை என்ற நாவலையும சேர்த்துக் கொள்ளலாம்.

சி. சுதந்திரராஜா, செ. யோகநாதன், எஸ். அகஸ்தியர் ஆகியோரும் இடதுசாாி அரசியல் சித்தாந்தத்தால் கவரப்பட்ட எழுத்தாளர்களாவர். இவ்வகையில் சுதந்திரராசாவின் 'மழைக்குறி'யும் யோகநாதனின் சில குறுநாவல்களும் குறிப்பிடத்தக்கன.

ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தில் ஏற்பட்ட மாறுதலும் புதிய போக்கும் இதுவரை சுட்டப்பட்டது. அடிநிலை மக்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது மட்டுமல்லாது அவர்களது வாழ்க்கையையும் போராட்டத்தையும் மார்க்சீய அரசியல் கண்கொண்டு நோக்கிய இப்புதிய பண்பானது எழுபதின் முற்பாதியிலும் கூட நாவலிலக்கியத்தின் பிரதான போக்காகவேயிருந்தது.

இதே காலப்பகதியில் இப் போக்குக்குப் புறம்பான சில நாவல்களும் வௌிவந்துள்ளன. எஸ். பொன்னுத்துரையின் தீ (1961) சடங்கு (1971) ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கன. எழுத்தாற்றல் கைவரப்பெற்ற எஸ்.பொ.வின் தீ பொருளிலும் வடிவிலும் ஏனைய ஈழத்து நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் பாலியலை துணிச்சலுடன் வௌிப்படையாகக் கையாண்டது என்பதைத் தவிர இந்நாவல் எவ்வகையிலும் இலக்கிய முதிர்ச்சியை வௌிக்காட்டவில்லை. அவரது சடங்கு யாழ்ப்பாணத்துக் கீழ்மத்தியதர மாந்தரின்மனோ விகாரங்களை இயற்பண்புடன் அணுகியதாகும். அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயதுவந்துவிட்டது (1973) பலரது பாராட்டுதல்களையும பெற்ற நாவல். எழுபதுக்குப் பின் நாவலிலக்கியத் துறையில் புகுந்தவரான அருள் சுப்பிரமணியம், சிங்களப் பெண்ணைக் கலப்பு மணம் புாிந்த பாத்திரமொன்றைக் கதாநாயகனாகக் கொண்டு அதன் பின்னணியையும் பிரச்சினைகளையும் நேர்த்தியாகச் சித்திாித்துள்ளார். சமீபத்தில் வௌிவந்த அக்கரைகள் பச்சையில்லை அன்னிய நாட்டுக் கப்பல்களில் வேலை செய்யும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டது என்ற வகையில் முற்றிலும் புதியதோர் பொருளை அறிமுகப்படுத்தினும் நடைமுறைக்கு ஒத்துவராத நிகழ்ச்சிகள் நாவலின் யதார்த்தத்திற்கு ஊறு விளிவிக்கின்றன. இவரது இன்னொரு நாவலான நான் கெடமாட்டேன் இவருக்குத் தோல்வியையே தந்தது. முதல் நாவல் சிறந்த படைப்பாயிருக்க அதற்குப் பிந்தியவை தரமிழந்து போவது கவனிக்கத்தக்கது.

எழுபதில் பிரபலம் பெற்ற இன்னோர் நாவலாசிாியர் செங்கை ஆழியானாவர். ஆக்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, நந்திக்கடல், பிரளயம், இரவின் முடிவு முதலானவற்றை அவர் எழுதியிருப்பினும் 1977-ல் வௌியான காட்டாறு என்ற நாவலே இலக்கிய உலகில் அவரைத் தகுதிபெற வைத்தது. வன்னிப் பிரதேசக் குடியேற்றப் பகுதிகளில் அரசாங்க அதிகாாிகள், முதலாளிகள் ஆகியோர் சாதாரண விவசாயிகளைச் சுரண்டுவதையும், குடியேற்றப் பகுதி வாழ்க்கையின் உள்முரண்பாடுகளையும் அவற்றின் இயல்பு குன்றாத வகையில் தமது நாவலில் காட்ட முனைந்துள்ளார் செங்கையாழியான். அ.பாலமனோகரனும் வன்னிப் பகுதிக் கிராமப் பின்னணியில் நிலக்கிளி, குமாரபுரம் ஆகிய நாவல்களை எழுதியுள்ளர். எஸ். ஜோன்ராஜன் மட்டக்களப்புப் பகுதிக் கிராமமொன்றினை பின்னணியாகக் கொண்டு போடியார் மாப்பிள்ளையை எழுதியுள்ளார். வை. அகமதின் புதிய தலைமுறை, சாந்தனின் ஒட்டுமா ஆகியவையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இதுவரை யாழ்ப்பாணம், கொழும்பு, மலைநாடு ஆகிய பகுதிகளைப் பகைப்புலங்களாகக் கொண்டு மட்டும் நாவல் எழுதப்பட்ட நிலையிலிருந்து மாறி வவனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளையும் பின்னணியாகக் கொள்ளும் நிலை எழுபதுகளில் வௌியான நாவல்களின் சிறப்பம்சம் எனலாம். மேலே காட்டிய சில நாவல்கள் இதற்கு உதாரணங்களாகும்.

3


நாவலின் பொருளைப் பொறுத்தும் அணுகு முறையைப் பொறுத்தும் மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதெனினும் உருவத்திலோ கதை கூறும் முறையிலோ அடிப்படையில் பாாிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையெனலாம். சுருக்கமாகச் சொன்னால் நாவல் இலக்கியத்தில் இங்கு பாிசோதனை முயற்சிகள் இடம்பெறவில்லை. மார்க்ஸீய நாவலாசிாியர்களின் நாவல்களில் கலைச் செழுமை குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு ; அதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனால் அதற்குப் புறம்பான நாவலாசிாியர்களின் படைப்புகளில் ஆழமான தேடலும் கலைச்செழுமையும் உடைய சிறந்த நாவல்கள் ஒன்றுகூட இல்லை. தமிழக நாவல் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பிரதான காரணிகளில் முதன்மையானது பிரசுர வசதிக் குறைவாகும். பிரசுர நிறுவனங்கள் வளர்ச்சி பெறாத நிலையிலும், புத்தக வௌியீட்டுச் செலவு உயர்ந்திருக்கும் நிலையிலும் இலக்கிய ஆர்வம் கொண்ட எழுத்தாளர் சிலர் சொந்தப் பணத்திலேயே நாவல்களை வௌியிட்டுள்ளனர். தரமான நாவல்களை வௌியிட முன்வந்த நிறுவனங்கள் கூட நிதிப்பலம் அற்றவையாகவிருந்தன. இன்றுள்ள நிலையில் வீரசேகாி நிறுவனம் ஒன்றே வெற்றிகரமாகப் பல நாவல்களை வௌியிட்டு விற்பனை செய்து வருகின்றது. 1971-ம் ஆண்டு தென்னிந்திய சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றின் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின் விளைவாக இந் நூல்வௌியீட்டு நிறுவனம் 72 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை வௌியிட்டுள்ளது. அண்மைக்காலத்தில் எழுத்துலகிற்கு அறிமுகமாகிய பாலமனோகரன், கே. விஜயன், ஞானசேகரன், ஞானரதன், கே. ஆர். டேவிட், வை. அஹமத் முதலியோரது நாவல்களை இந் நிறுவனமே வௌியிட்டது. எனினும் வியாபாரத்தையே முதல் நோக்கமாகக் கொண்ட நிறுவனம் இலக்கியத் தரத்திலோ பொருளிலோ எத்தகைய அக்கறை செலுத்தும் என்பது ஐயப்பாட்டிற்குாியது. தூரத்துப்பச்சை, காட்டாறு, நான்சாகமாட்டேன், போராளிகள் காத்திருக்கின்றனர் முதலிய குறிப்பிடத்தக்க நூல்களை இந் நிறுவனம் வௌியிட்டிருப்பினும் அதன் சாய்வு சுவைமிகுந்த கதையம்சம் கொண்ட நாவல்கள் பக்கமே என்பது தௌிவு. இந் நிறுவனம் வெயிட்ட நா. பாலேஸ்வாி, கமலா தம்பிராசா, அன்னலட்சுமி இராசதுரை, இந்துமகேஸ், உதயணன் முதலியோரது நாவல்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். வாசக ரசனையை குறிப்பிட்ட ாீதியில் உருவாக்குவனவாகவும். எழுத்தாளரைக் கட்டுப்படுத்துவனவாகவும் இத்தகைய நிறுவனங்கள் அமைந்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு. இதுமட்டுமன்றி நூல் வௌியீட்டுச் செலவுகள் மேன்மேலும் உயரும் நிலையிலும், இறக்குமதிக்கட்டுப்பாடு சமீபகாலத்தில் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்திய சஞ்சிதைகள் நூல்கள் ஆகியவற்றின் போட்டியை எதிர்நோக்க வேண்டிய நிலையிலும் நாவலிலக்கிய வளர்ச்சி மட்டுமன்றி ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சியே தேக்கடையும் அபாயம் ஏற்படக்கூடும். எழுத்தாளர் பரந்த கொள்கை அடிப்படையில் இணைந்து செயல்படுவதற்கான அவசியத்தை இந்நிலமை வற்புறுத்துகிறது.


5. சிறுகதை

சிறுகதை, கைத்தொழில் நாகாீகத்தில் நவீனப்பட்டுவரும் சமூகத்துக்குாிய ஒரு புதிய இலக்கிய வடிவமாகும். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் மேலைத் தேசங்களில் தோன்றி வளர்ந்த இவ்விலக்கிய வடிவம், ஆங்கிலேயர்களின் தொடர்பினாலும் அவர்களின் ஆதிக்கத்தினாலும் நவீன மாற்றங்களுக்குள்ளாகி வந்த தமிழர் சமூகத்தில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றியது. 1920ஆம் ஆண்டுகளில் பாரதியார் மொழிபெயர்த்த தாகூாின் சிறுகதைகளும், மாதவையா, வா.வே.சு.ஐயர் ஆகியோாின் சிறுகதைகளுமே தமிழில் இவ்விலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்தன. 1930 ஆம் ஆண்டுகளில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன். பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, மௌனி முதலிய எழுத்தாளர்கள் தமிழில் சிறுகதைக்கு ஒரு பூரண வடிவத்தைக் கொடுத்தனர்.

இலங்கையைப் பொறுத்தவரை 1930 ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியிலேயே சிறுகதை தோன்றி வளரத் தொடங்கியது. சுமார் ஒன்றரை நூற்றாண்டுகால ஆங்கில ஆட்சியின் பயனாக நமது சமூகத்தில் எற்பட்டுவந்த மாற்றங்களின் விளைவே இது எனலாம்.

"பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பண்பாட்டுத்துறை விழிப்பின் காரணமாக, மதத்துறை இலக்கியமே தமிழ், சிங்கள மொழிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுவந்தது. ஆனால், குடியேற்ற நாட்டாட்சி இலங்கையின் அரசியல், பொருளியல் வாழ்க்கையை நன்கு பீடித்திருந்தமையால், ஆங்கில மொழி மூலம் மேனாட்டு நாகாீகம் பரவிக்கொண்டே வந்தது. விவசாயப் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு, ஆங்கிலக் கல்வியே ஊதியமூலமாக அமைந்த யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இம்மாற்றம் மற்றத் தமிழ்ப் பகுதியாம் மட்டக்களப்பிலும் பார்க்க வேகமாகப் பரவிற்று. ஆங்கிலக் கல்வியுடன் புனைகதையும் பரவிற்று" என, கலாநிதி கா. சிவத்தம்பி இது தொடர்பாக தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

புதிய சமுதாய மாற்றமும் ஆங்கிலக் கல்வியும் மட்டுமன்றி, தமிழக சஞ்சிகைகளினதும் சிறுகதை எழுத்தாளர்களினதும் செல்வாக்கும் இலங்கையில் சிறுகதை தோன்றுவதற்கான முக்கிய காரணியாக இருந்துள்ளது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரான சி. வைத்தியலிங்கம் தனது சகாவான இலங்கையர்கோனை நினைவுகூர்ந்து எழுதிய, "இலங்கையர்கோனும் நானும்" என்னும் கட்டுரையில் குறிப்பிடும் பின்வரும் செய்திகள் இவ்வுண்மையை நன்கு தௌிவு படுத்துகின்றன.

"உன்னதமான இலட்சியங்களும் கனவுகளும் எங்கள் வாழ்க்கையில் நிரம்பி இருந்த நாட்கள் இவை. இலக்கியத்தைப் படிப்பதிலும், நாடகங்களைப் பார்ப்பதிலும், சங்கீத இரசனையிலும் எங்கள் இருவருக்கும் எப்பொழுதுமே பொிய ஆர்வம். எழுதவேண்டும் ஏதாவது சிருஷ்டிக்க வேண்டும் என்ற உணர்ச்சி என்றும் சிறகடித்துக்கொண்டிருக்கும் சோ. சிவபாதசுந்தரம், சோ. நடராஜா, திருநீலகண்டன், இலங்கையர்கோன், நான் எல்லோருமே சேர்ந்து இலக்கியங்களை விமர்சனம் செய்வதிலும் அக்காலத்தில் எழுத்துலகில் பிரபலமாகி இருந்த சிறுகதையாசிாியர்களின் சிருஷ்டிகளைப் பற்றி ஆராய்வதிலும் கவனம் செலுத்தி வந்தோம். மணிக்கொடி பத்திாிகையின் புதிய பாணி இலங்கையர்கோனை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டது. சினிமாவுக்கு வசனம் எழுதி இப்போது பிரபல்யம் அடைந்திருக்கும் இளங்கோவனின் எழுத்துக்களை அவர் எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய வசனங்களையும் வர்ணனைகளையும் மனனம் செய்து எங்களுக்கு ஆவேசத்துடன் அடிக்கடி சொல்லி வருவார். அவ்வளவு தூரம் இளங்கோவனின் எழுத்து அவரைக் கவர்ந்திருந்தது. இந்த வெறியுடன் தான் இலங்கையர் கோன் எழுத்தில் மும்முரமாக ஈடுபட்டார் என்று நினைக்கின்றேன்." இலங்கையர்கோன் மட்டுமன்றி அவரது சமகாலத்தவர் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தமிழகப் பத்திாிகைகளாலும் எழுத்தாளர்களாலும் தூண்டுதல் பெற்றவர்களே எனலாம்.

இத்தகைய பின்னணியிலே 1930களின் பிற்பாதியில், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், க.தி. சம்பந்தர், சோ. சிவபாதசுந்தரம் முதலியோர் இலங்கையில் பிரக்ஞை பூர்வமாக சிறுகதைத்துறையில் ஈடுபட்டார்கள். இவர்களுள் முதல் மூவரும் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களே ஈழத்துச் சிறுகதையின் முன்னோடிகள், அல்லது முதல்வர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். 'இலட்சியக் கனவுகளும் எதையாவது எழுத வேண்டும் என்ற ஆர்வமும்' இவர்களது படைப்பு முயற்சிகளுக்கு உட்தூண்டுதலாக அமைந்தன. கலைமகள், கிராம ஊழியன், சூறாவளி, மணிக்கொடி, ஆனந்த விகடன் முதலிய தென் இந்தியச் சஞ்சிகளில் இவர்களது சிறுகதைகள் வௌிவந்தன. ஈழகேசாியும் இவர்களது எழுத்து முயற்சிக்குக் களமாக அமைந்தது.

வைத்தியலிங்கம், சம்பந்தர், இலங்கையர்கோன் ஆகியோர் சமகாலத்தவர்கள் எனினும் முதல் இருவரும் 1940ம் ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகம் எழுதியதாகத் தொிய வில்லை. இலங்கையர்கோன் சிறுகதைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் தனது மரணத்துக்கு முந்திய சில ஆண்டுகளில் குறிப்பாக 1960-1961ம் ஆண்டுகளில் சிறுகதைப் படைப்பில் முழுமூச்சாக ஈடுபட்டவர். அந்த வகையில் சுமார் முப்பது ஆண்டு கால இலங்கைச் சிறுகதை வரலாற்றோடு அவருக்கு உறவு உண்டு என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.

சி. வைத்தியலிங்கம் சுமார் இருபத்தைந்து கதைகள் வரை எழுதினார் என்று தொிய வருகின்றது, அவரது தொகுப்பு நூல்கள் எவையும் இதுவரை வௌிவராதிருப்பது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை துரதிஷ்ட வசமானதே. ஆயினும் மூன்றாம் பிறை, கங்கா கீதம், பாற் கஞ்சி ஆகிய கதைகள் சில தொகுப்பு நூல்களில் வௌிவந்துள்ளன. நெடுவழி, பிச்சைக்காரர், அழியாப் பொருள், உள்ளப் பெருக்கு, இப்படிப் பல நாள், விதவையின் இருதயம், தியாகம், பைத்தியக்காாி, களனி கங்கைக் கரையில், மின்னி மறைந்த வாழ்வு, என் காதலி, நந்த குமாரன், டிங்கிாி மெனிக்கா, பூதத்தம்பி கோட்டை முதலியன அவர் எழுதிய வேறு சில கதைகள்.

க.தி. சம்பந்தரும் சுமார் இருபது கதைகள் வரை எழுதியுள்ளார் என்று தொிய வருகின்றது. அவரது கதைகள் எதுவும் தொகுப்பு நூலாக இதுவரை வௌிவரவில்லை. எனினும் 1967ல் இவரது ஐந்து சிறுகதைகள் விவேகி சஞ்சிகையில் ஒன்றாக வௌியிடப்பட்டன. விதி, மனிதன், புத்தாின் கண்கள், தாராபாய், துறவு, கூண்டுக்கிளி, தூமகேது, மனித வாழ்க்கை, சபலம், சலனம், அவள், இரண்டு ஊர்வலங்கள், கலாஷேத்திரம், மகாலட்சுமி முதலியன இவர் எழுதிய சில கதைகள்.

இலங்கையர்கோனின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று வெள்ளிப்பாதசரம் என்ற பெயாில் 1962ம் ஆண்டு அவாின் மனைவியின் முயற்சியால் வௌியிடப்பட்டது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவாின் படைப்புக்களை மொத்தமாகத் திரட்டித்தரும் ஒரே நூல் இதுவே. இத் தொகுப்பில் இடம்பெறாத இவாின் வேறு சில கதைகளும் உள்ளன. வஞ்சம், சமாதானம், கடற்கரைக் கிளிஞ்சல், தேவலோகக் காதல், கடலிலே ஒரு மீன், அந்தத் தந்தி, தேவியும் தவமிருந்து, செங்காந்தள் முதலியன அவற்றுள் சில.

ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இம் மூவாின் கதைகளிலே அவர்களுக்கே உாிய தனித் தன்மைகளும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன எனினும் சில பொதுப் பண்புகளும் உள்ளன.

வரலாற்று இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் புனைதல் இக்காலப் பகுதிக்குரிய ஒரு பொதுப்போக்காகக் காணப்படுகின்றது. இலங்கையர்கோனே இத்தகைய கதைகளில் அதிக ஈடுபாடு காட்டினார் எனினும் ஏனையவர்களும் இதற்குப் புறம்பானவர்களல்லர். இலங்கையர்கோனின் அனுலா, மரியா மதலேனா, மேனகை, தாய், யாழ்பாடி, சிகிரியா, தேவலோகக் காதல், மணப்பரிசு, கடற்கோட்டை முதலிய கதைகள் வரலாற்று, இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையே. வைத்தியலிங்கத்தின் நந்தகுமாரன், தியாகம், பூதத்தம்பி கோட்டை, சம்பந்தரின் புத்தரின் கண்கள் முதலியனவும் இத்தகைய படைப்புக்களே, சில வேளைகளில் இவர்களது வரலாற்றுக்கதைகள் சிறுகதை உருவத்துக்குள் பிடிபடாத வரலாற்றுச் செய்திகளாகவே அமைந்து விடுகின்றன. இலங்கையர்கோனின் சிகிரியா, அனுலா, மரியா மதலேனா முதலியவை இவ்வாறு சிறுகதை வடிவ அமைப்புக்குப் புறம்பானவை.

தனி மனித இன்னல்களை அல்லது உணர்வு நிலைகளை சமுதாயப் பின்னணியில் வைத்து நோக்கும் யதார்த்தப் பண்பு பொதுவாக இவர்களது கதைகளில் காணப்படுவதில்லை. இலங்கையர்கோன், வைத்தியலிங்கம் ஆகியோாின் சில கதைகளிலே நடப்பியல் வாழ்வுடன் ஒட்டிய யதார்த்தப் பண்பு ஓரளவு காணப்படுகின்றது எனினும் பொதுவாக இவர்கள் ஒரு கற்பனையான கனவுச் சூழலிலேயே தங்கள் பாத்திரங்களை உலாவ விடுகின்றனர். சம்பந்தர் யதார்த்தப் பண்பை கொள்கை ாீதியாகவே நிராகாிப்பவராகவும் காணப்படுகின்றார்.

"யதார்த்தச் சித்திாிப்பால் நமது மனம் தூய்மையடைவதற்குப் பதிலாக மேலும் மோசம் அடைகின்றது. யதார்த்தம் என்பது பைத்தியக்காரத்தனம். இத்தகைய யதார்த்தப் பண்பில் எழும் தேசிய இலக்கியங்கள் சர்வதேசிய இலக்கியங்களுக்கு ஒவ்வாதது-தேவை இல்லாதது." என்ற சம்பந்தாின் கூற்றுக்கு ஏற்பவே

அவரது கதைகளும் யதார்த்தத்துக்குப் புறம்பான அழகிய கற்பனைச் சித்திரங்களாக உள்ளன. வைத்தியலிங்கத்தின் மூன்றாம் பிறை, உள்ளப் பெருக்கு, புல்லுமலையில் முதலிய கதைகளும் கற்பனையான உணர்வுப் பின்னல்களே. இலங்கையர்கோனின் வரலாற்று இதிகாசக் கதைகளும், நாடோடி, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல் போன்றவையும் இத்தகையனவேயாகும். ஆயினும் மற்ற இவருடனும் ஒப்பு நோக்குகையில் நடப்பியலோடு ஒட்டிய யதார்த்தப் பண்பு, இலங்கையர்கோனிடம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது எனலாம். ஆரம்பகாலக் கதைகளான முதற்சம்பளம்,வெள்ளிப்பாதரசம், தந்தைமனம் முதலியவையும் பிற்காலத் கதைகளான மச்சாள், அனாதை, தாழைநிழலிலே போன்றவையும் இத்தகையன. இவற்றுள் பிந்திய மூன்றும் 1960ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை என்பதையும் மனம்கொள்ள வேண்டும்.

ஆண்பெண் உறவு அல்லது பால் உறவையே இவர்கள் பொிதும் தங்களின் கதைப்பெருளாகக் கொண்டனர். சம்பவங்களை அல்லது பாத்திரங்களின் இயக்கங்களை விபாிப்பதைவிட உணர்வுநிலைக்கே அதிக அழுத்தம் கொடுத்தனர். அந்த வகையில் உணர்ச்சி மிகைப்பு இக்காலக் கதைகளில் ஒரு பொதுப் பண்பாகவும் உள்ளது. உணர்ச்சி மிகைப்பை வௌிப்படுத்துவதற்கு காவியப்பாங்கான அலங்கார மொழி நடை அவசியமாகும். இக்காலக் கதைகள் பொிதும் இத்தகைய மொழி நடையிலேயே அமைந்துள்ளன. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோாின் சில கதைகளிலே வழக்குத்தமிழ் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது எனினும் அது அவர்களின் பிரக்ஞைபூர்வமான இலக்கியக் கொள்கையின் வௌிப்பாடு என்று கருதுவதற்கில்லை. இக்காலத்தில் எழுந்த பெரும்பாலான கதைகளில் விபரணத்திலும் உரையாடலிலும் காவியப்பாங்கான மொழிநடையே பயன்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியலிங்கத்தின் புல்லுமலையில் என்ற கதையில் வரும் பின்வரும் உரையாடலை இதற்கு ஒரு உதாரணமாகத் தரலாம்.

"குமு, அதோபார்! முழுநிலா, புல்லுமலையைத் தழுவி முத்தமிட வந்தது. எங்களைக் கண்டதும் நாணத்தால் முகம் சிவந்து தயங்கிநிற்கிறது....."

"என்ன, நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்களா அல்லது புல்லுமலையையும் சந்திரனையும் பார்க்க வந்தீர்களா?"

"குமு இந்த நிலாவும், புல்லுமலையும், இளந் தென்றலும் இல்லாவிடில் நீ ஏது? நான் எப்படி இங்கு வந்திருப்பேன்? இந்தப் புல்லுமலையல்லவா உன்னைப் பெற்று வளர்த்த தாய்?"

இந்த உரையாடல் பகுதியிலே உணர்ச்சி மிகைப்பும். அலங்கார நடையும் ஒன்றிணைந்து இருப்பதை நாம் காணலாம்.

2

ஈழத்து சிறுகதையின் இரண்டாவது தலைமுறை 1940ஆம் ஆண்டுகளில் உருவாகியது. இக்காலத்தில் இலக்கிய ஆர்வம் உடைய ஓர் இளைஞர் குழு யாழ்ப்பாணப் பகுதியில் தோன்றியது. ஈழகேசாி இவர்களின் பிரதான வௌியீட்டுக் களமாகவும் அமைந்தது. இவர்களுள் சிலர் ஒன்றிணைந்து, 'மறுமலர்ச்சி' என்ற ஒரு சஞ்சிகையையும் வௌியிட்டனர். அதைச் சுற்றி ஓர் இலக்கியக் குழுவாகவும் உருவாகினர், ஈழத்து முன்னோடி எழுத்தாளர்கள் இவர்களுக்கு ஆதர்சமாக அமைந்தனர். தமிழகச் சஞ்சிகைகளும் அவற்றில் வௌிவந்த படைப்புக்களும் இவர்களின் எழுத்தார்வத்துக்கு தூண்டு கோலாக அமைந்தன.

இக்காலப்பகுதியில் சிறுகதை உலகில் புகுந்த எழுத்தாளர்களுள், அ.செ.முருகானந்தம், தி.ச. வரதராசன், அ.ந. கந்தசாமி, கனக செந்திநாதன், தாழையடி சபாரத்தினம், சொக்கன், சு.வேலுப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் பலர் 50, 60 களிலும் தொடர்ந்து எழுதினர். சிலர் இன்னும் எழுதுகின்றனர். சிலர் 50, 60 களில் தான் குறிப்பிடத்தக்க கதைகளையும் எழுதினர். ஆயினும் இவர்கள் இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்தில் இவர்களிடம் உருவாகி அமைந்த பண்புகள் தொடர்ந்தும் நீடித்து வந்திருப்பதை நாம் காணலாம். இதே காலப்பகுதியில் இலங்கையர்கோன் வைத்தியலிங்கம் சம்பந்தன் முதலியோரும் தொடர்ந்து எழுதி வந்தனர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.

இக்காலப்பகுதியில் தோன்றிய எழுத்தாளர்களுள் அ.செ. முருகானந்தம் படைப்புகளின் எண்ணிக்கையாலும் தரத்தினாலும் முதல் இடம் பெறுகின்றார். சுமார் நூறு கதைகள் இவரால் எழுதப்பட்டன என்று தொியவருகின்றது. இவரது வண்டிச் சவாாி. மனிதமாடு, எச்சில் இலை வாழ்க்கை முதலிய கதைகள் ஈழத்து விமர்சகர்களால் கிலாசித்துப் பேசப்படுகின்றன. இவ்வளவு கதைகளை எழுதிய இவரது தொகுப்பு நூல் ஒன்று கூட வௌிவராதிருப்பது வருந்தத்தக்கதாகும்.

1940இல் ஈழகேசாியில் வௌியான கல்யாணியின் காதல் என்ற கதையுடன் சிறுகதை உலகில் பிரவேசித்தவர் தி.ச. வரதராசன். வரதர் என்ற புனைபெயாில் தொடர்ந்து கதைகள் எழுதி வந்துள்ளார். அவரது பன்னிரெண்டு கதைகள் கொண்ட கயமை மயக்கம் என்ற தொகுப்புநூல் ஒன்றும் வௌிவந்துள்ளது.

ஈழத்து இலக்கியத்தில் இடதுசாாிச் சிந்தனையை அறிமுகப் படுத்திய அ.ந. கந்தசாமி சுமார் அறுபது கதைகள் வரை எழுதி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆயினும் இவரது கதைகளும் தொகுப்புநூலாக வௌிவரவில்லை. இரத்த உறவு, நாயிலும் கடையர் போன்ற இவரது கதைகளை ஈழத்து விமர்சகர்கள் புகழ்ந்து பேசுவர். இக்காலப்பகுதியில் எழுதத் தொடங்கிய கனக செந்திநாதனின் வெண்சங்கு, சொக்கனின் கடல், சு. வேலுப்பிள்ளையின் மண்வாசனை, தாழையடி சபாரத்தினத்தின் புதுவாழ்வு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் 1960, 70 களில் வௌி வந்துள்ளன. கனக செந்திநாதன், சொக்கன், சு.வே. ஆகியோாின் தொகுப்புகளில் உள்ள கதைகள் பெரும்பாலும் 1950, 60 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பண்பு அடிப்படையில் இக்காலப் பகுதியில் தோன்றிய எழுத்தாளர்கள் முந்திய தலைமுறை எழுத்தாளர்களில் இருந்து அதிகம் வேறுபட்டவர்கள் அல்லர். 1930ஆம் 40 ஆம் ஆண்டுகளில் ஈழத்துச் சமுதாய அரசியல் போக்குகளில் அதிக மாற்றங்கள் இன்மையே இவர்களில் காணப்படும் ஒற்றுமைக்கான அடிப்படை எனலாம். அவ்வகையில் 30ஆம் 40 ஆம் ஆண்டுச் சிறுகதைகளை ஒருசேர நோக்குவதும் பொருந்தும். ஆயினும் கிராமிய பண்பாட்டுப் பிரக்ஞை முந்திய தலைமுறை எழுத்தாளர்களைக் காட்டிலும் இவர்களிடம் முனைப்பாகக் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அ.செ.மு., கனக செந்திநாதன், சொக்கன், சு.வெ. போன்றோாின் பலகதைகளிலே யாழ்ப்பாணக் கலாச்சாரக் கூறுகள் பலவற்றை நாம் காணலாம். இவர்கள் மூலமே யாழ்ப்பாணக் கிராமியப் பண்பாடு பரவலாகக் சிறுகதைகளில் இடம்பெறத் தொடங்கியது. எனினும் முந்திய தலை முறையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சமூக நடைமுறைகளை ஆழமாக நோக்கும் பார்வை விசாலம் இவர்களிடமும் காணப்படவில்லை. வழிவழி வந்த பண்பாட்டுணர்வும், மனிதாபிமானமும் இவர்களின் பொதுப்பண்பு எனலாம். அதற்கேற்றவகையில் சீர்திருத்த நாட்டமும் இவர்களின் கதைகயில் இழையோடக்காணலாம். புதிய மாற்றங்களை அங்கீகாிக்காது, பழமைக் கனவுகளில் ஆழும் மனோபாவமும் இவர்களுட் சிலாின் கதைகளில் காணப்படுகிறது. கனக செந்திநாதன், குறிப்பாக இப்போக்கின் சிறந்த பிரதிநிதி எனலாம். தனது வெண்சங்கு தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில்,

"அன்பு, முயற்சி, கலை, போலித்தன்மையில் வெறுப்பு, விதியின்பிடி, பணஆசை என்ற நிலைத்துநிற்கும் பொருள்களை வைத்து ஓரளவு பழமையுடனும் சமயச் சூழலுடனும் சித்திாிக்க முயன்றிருக்கின்றேன். பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரம் இப்புதிய சிறுகதைகளுக்கு வலுவான பகைப்புலமாக அமைந்திருக்கின்றது...... யாழ்ப்பாணப் பழமை, சமயச் சூழல். பழமையான கதை சொல்லும் உத்தி என்ற என் தனித்துவத்தை நான் இழந்துவிடத் தயாராக இல்லை." என்று கூறுகின்றார். அவரது தொகுப்பில் உள்ள பல கதைகள் இப்போக்கை நன்கு பிரதிபலிக்கின்றன.

மொழி நடையைப் பொறுத்தவரை முந்திய தலைமுறையினரைப் போல் கவித்துமான அலங்கார நடையை இவர்கள் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பேச்சுவழக்கு மொழியை பிரக்ஞை பூர்வமாகக் கையாண்டதாகத் தொியவில்லை. இவர்களது கதாபத்திரங்கள் பல 'இலக்கணசுத்தமான' இலக்கிய நடையிலேயே உரையாடுகின்றன. உதாரணமாக வரதாின் கற்பு என்ற கதையில் வரும் வின்வரும் உரையாடலைக் காட்டலாம்.

"மாஸ்டர், நீங்கள் கலைச்செல்வியைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?" என்று கேட்டார் ஐயர்.

"ஓமோம், ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படித்திருக்கிறேன் என்று சொல்லமுடியாது. ஏன் என்ன விஷேசம்?"

"கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை......."

"யார் எழுதியது?"

"எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவம் தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கின்றது."

"சொல்லுங்கள் நினைவு வருகிறதா பார்க்கலாம்."

1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்திலே வரதர் எழுதிய இக் கதையில் கூட உரையாடலில் இலக்கிய வழக்கு நடையின் செல்வாக்கையே காண முடிகிறது. இது 40 ஆம் ஆண்டுகளில் உருவான எழுத்தாளர்களிடம் பரவலாகக் காணப்படும் ஒரு பொதுப் பண்பாகும். அ.செ.மு., கனக செந்திநாதன், அ.ந. கந்தசாமி முதலியோாின் பல கதைகளில் இத்தகைய மொழி நடையைக் காணலாம். யதார்த்தப் பண்பு இவர்களது கதைகளிலும் பூரண வடிவம் பெறவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

3

1950 ஆம் ஆண்டுகள் ஈழத்துச் சமுதாய, அரசியல் வரலாற்றில் முக்கியமான காலகட்டமாகும். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதாயினும் தேசிய நலனை முன்வைத்த உண்மையான போராட்டம் 1950 ஆம் ஆண்டுகளில் தான் ஆரம்பித்தது. சமுதாய முரண்பாடுகளும், போராட்டங்களும் கூர்மையடைந்து அரசியல் வடிவம் பெறத் தொடங்கின. 1953 இல் நிகழ்ந்த ஹர்த்தால் கஷ்டப்பட்ட மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்தது. 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்துக்கும் அது வழி கோலியது. தேசிய சக்திகள் அரசியல் அரங்கில் ஆதிக்கம் பெற்றன. தேசிய பண்பாட்டுணர்வு, சோஷலிச சிந்தனை என்பன பொதுமக்கள் மயமாகத் தொடங்கின. அதேவேளை சிங்கள தேசியவாதிகளின் தீர்க்கதாிசனமற்ற, சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளால் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாகியது. தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத பெரும் சிக்கலாக இது மாற்றியது. 1958 இல் நாடு பரந்த இனக்கலவரத்துக்கு இது வழியமைத்தது. ஒருபுறம் பொதுவுடைமை, தேசிய ஐக்கியம் முதலிய கருத்துக்கள் வளர்ச்சியடைய மறுபுறம் இன உணர்வு, இனவிடுதலைக் கொள்கை என்பன வலுப்பெறத் தொடங்கின.

இத்தகைய சமுதாய அரசியல் பின்னணியிலேயே ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் உருவாகினர். வ.அ. இராசரத்தினம், செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, கே.டானியல், எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையன், என்.கே. ரகுநாதன்,பித்தன், அ.ஸ.அப்துஸ்ஸமது, என்.எஸ்.எம். ராமையா, நந்தி, மு.தளையசிங்கம், கே.வி.நடராசன், அ. முத்துலிங்கம், இ.நாகராஜன், அகஸ்தியர், தௌிவத்தை ஜோசப் முதலியோர் இக் காலப் பகுதியில் சிறுகதை உலகில் பிரவேசித்தவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர். 60, 70 களில் இவர்களது சிறு கதைகள், பல தொகுப்பு நூல்களாகவும் வௌிவந்துள்ளன.

1950 ஆம் ஆண்டுகளில் தான் அரசியல் சார்பான இலக்கியப் பிாிவுகள் இலங்கையில் தோன்றின. இக்கால எழுத்தாளர்களை அவர்களின் அரசியல், இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் இரண்டு பிாிவுக்குள் அடக்கலாம். சமுதாய அரசியல் போராட்டங்களுடன் இலக்கியம் பிாிக்கமுடியாத உறவுடையது என்று கருதுவோர் ஒரு சாரார். இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உறவினை மறுப்பவர்கள் அல்லது அது பற்றிய பிரக்ஞையற்றோர் மறுசாரார்.

செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, டானியல், ரகுநாதன், காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையன், அகஸ்தியர் முதலியோர் முதலாவது பிாிவுள் அடங்குவர். இவர்கள் மார்க்ஸீய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற வகையில் சமுதாய அரசியல் பிரக்ஞை இவர்களின் கதைகளில் முனைப்பாகக் காணப்படுகின்றது. சமுதாய ஏற்றத் தாழ்வு, தொழிலாளர் போராட்டம், சாதி அடக்குமுறை, தீண்டாமை, வறுமை, சுரண்டல் ஆகியன இவர்களின் சிறு கதைகளில் காணப்படும் பொதுப் பொருள்களாகும். சுருக்கமாகச் சொல்வதானால் சமுதாய வர்க்கங்களுக்கிடையே நடக்கும் போராட்டமே இவர்களது கதைப் பொருளாக உள்ளது.

அடிநிலை மக்களின் துயர் நிறைந்த வாழ்வும் ஆளும் வர்க்கம் அவர்களைச் சுரண்டும் விதங்களும், புதுவாழ்வு ஒன்றினைப் போராடி வென்றெடுக்கும் வகையில் அவர்கள் விழிப்படைந்து வருவதும் இவர்கள் கதைகளில் சித்திாிக்கப்பட்டுள்ளன. இவர்களது கதைகளில் சமுதாய சீர்திருத்த நோக்குக்குப் பதிலாக சமுதாய அமைப்பை முற்றாக மாற்றி அமைக்கும் புரட்சிகர உணர்வே பொதுவாக வௌிப்பாடு பெற்றுள்ளது எனலாம். செ. கணேசலிங்கனின், சங்கமம், ஒரே இனம், நல்லவன்; டொமினிக் ஜீவாவின் பாதுகை, தண்ணீரும் கண்ணீரும், சாலையின் திருப்பம்; கே. டானியலின் டானியல் கதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன; ரகுநாதனின் நிலவிலே பேசுவோம்; நீர்வை பொன்னையனின் மேடும் பள்ளமும், உதயம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளிலே உள்ள பெரும்பாலான கதைகள் இதற்கு உதாரணங்களாகும். ஆயினும் சில வேளைகளில் இவர்களது அரசியல் உணர்வு கலாபூர்வமான வடிவ அமைதி பெறத் தவறி விடுவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகக் கணேசலிங்கனின் பிற்காலக் கதைகளிலே இதை வௌிப்படையாகக் காணலாம். அவரது கொடுமைகள் தாமே அழிவதில்லை என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உருவச் சிதைவு அடைந்த பிரச்சாரமாகவே அமைந்துள்ளன.

காவலூர் ராசதுரை முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர் எனினும் அவரது கதைகள் ஏனைய முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகளில் இருந்து ஒரு வகையில் வேறுபட்டவை எனலாம். இவரது பெரும்பாலான கதைகள் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டவை. அவர்களது மனப் போக்குகளையும் நடத்தைகளையும் துல்லியமாகச் சித்திாிப்பவை. இரு கூறுபட்ட வர்க்க முரண்பாடுகள் இவரது கதைகளில் அதிகம் இடம் பெறுவதில்லை. அந்த வகையில் ஏனையோர் கதைகளில் காணப்படுவது போல் இவரது கதைகளில் அரசியல் அம்சம் வௌிப்படையாகத் தொிவதில்லை. இவருடைய குழந்தை ஒரு தெய்வம், ஒருவகை உறவு ஆகிய தொகுதிகளில் குறிப்பிடத் தகுந்த பல கதைகள் உள்ளன.

இரண்டாவது பிாிவைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் பல்வேறு சிந்தனைப்போக்கு உடையவர்கள் உள்ளனர். வ.அ. இராசரத்தினம், நந்தி, முத்துலிங்கம், கே. வி. நடராசன் முதலியோர் திட்டவட்டமான அரசியல் சிந்தனைப் போக்குகளைத் தங்கள் சிறுகதைகளில் வௌிக்காட்டாத போதிலும் சமுதாயவாழ்வின் பல்வேறு உள் முரண்பாடுகளையும் கலாசார அம்சங்களையும் மனிதாபிமான உணர்வுடன் அவற்றில் பிரதிபலித்துள்ளனர். வ.அ.வின் தோணி, நந்தியின் ஊர் நம்புமா, முத்துலிங்கத்தின் அக்கா, கே.வி. நடராசனின் யாழ்ப்பாணக் கதைகள் முதலிய சிறுகதைத் தொகுதிகள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

50ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய எஸ்.பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் ஆகியோர் 60, 70களில் முற்போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகர்காளகவும் வளர்ச்சியடைந்தனர். எஸ்.பொ. ஈழத்துச் சிறந்த சிறுகதையாசிாியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். உள்ளடக்கத்தைவிட உருவ பாிசோதனைக்கே இவர் முதல் இடம் கொடுப்பவர். பால் உணர்வின் வக்காிப்பினையே (Sexual Pervertion) இவர் தன் கதைகளில் அதிகம் சித்திாித்துள்ளர். வீ என்ற பெயாில் வௌிவந்துள்ள இவரது சிறுகதைத் தொகுப்பில் புனைகதை எழுதுவதில் இவரது பல்வேறுவகையான ஆற்றல்களை வௌிக்காட்டும் நோக்கில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தளையசிங்கத்தின் கதைகளில் பால் உணர்வும் ஆன்மீகத் தேடலும் பிரதான இடம் பெறுகின்றன. உருவச் செழுமை மிகுந்த பல கதைகளை இவர் படைத்துள்ளார். கஃப்கா, ஹெமிங்வே போன்ற மேலைத்தேச எழுத்தாளர்களின் செல்வாக்கு இவாிடம் உண்டு என இவரே குறிப்பிட்டுள்ளார். இவரது புதுயுகம் பிறக்கிறது ஈழத்தில் வௌிவந்த நல்ல சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்றாகும். 1960-65 காலப்பகுதிகளில் இவர் எழுதிய கதைகளே இத்தொகுதியில் உள்ளன.

பித்தன், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோர் கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கைப் பின்னணியில் பல கதைகள் எழுதியுள்ளனர். பித்தன் குறைவாக எழுதி பிற்காலத்தில் எழுத்துலகில் இருந்து முற்றாக ஒதுங்கியபோதிலும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகக் கருதப்படுகின்றார். மதவாதிகளின் ஆசாடபூதித்தனத்தைக் குத்திக்காட்டும் இவரது பாதிக்குழந்தை ஒரு நல்ல சிறுகதையாகும். அப்துஸ்ஸமதின் எனக்கு வயது பதின்மூன்று என்ற சிறுகதைத் தொகுதி வௌிவந்துள்ளது. என்.எஸ்.எம். ராமையா, தௌிவத்தை ஜோசப் ஆகியோர் மலைநாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டு பல நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளனர். 30 ஆம் 40 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பிரதேசத்தவர்களால் மட்டும் எழுதப்பட்ட சிறு கதை 50 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு நாடுபரந்த ஒர் இலக்கிய வடிவாக வளர்ச்சியடைந்தது.

50 ஆம் ஆண்டுகளில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்த இன உணர்வு கவிதைத் துறையில் செல்வாக்குச் செலுத்தியதுபோல் வசன இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறமுடியாது. இனக்கலவரகால நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன எனினும் அவை இன உணர்வைத் தூண்டும் விதத்தில் அன்றி மனிதாபிமான உணர்வைக் கிளறும் முறையிலேயே எழுதப்பட்டுள்ளன என்பது குடிப்பிடத்தக்கது. பொதுவாகக் கூறுவதானால் தேசியாீதியிலான சமுதாய அரசியல் இயக்கத்தின் இலக்கிய வௌிப்பாடாகவே இக்காலச் சிறுகதைகள் அமைந்தன எனலாம். தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு இக்காலப்பகுதியிலேயே வளர்ச்சியடைந்தது. வைத்தியலிங்கம், சம்பந்தன் முதலிய ஆரம்பகால எழுத்தாளர்கள் கால இடப் பிரக்ஞை அற்றும் இந்தியச் சூழலில் இந்தியக் கதாபாத்திரங்களைக் கொண்டும் கதைகள் எழுதியுள்ளார்கள். மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களும் பிரக்ஞைபூர்வமான தேசிய உணர்ச்சிகொண்டவர்கள் அல்லர். ஆனால் 50 களிலேதான் நமது மக்கள், நமது பிரச்சினைகள், நமது கலாச்சாரம், நமது மொழி என்பன இலக்கியத்தில் இடம் பெறவேண்டும் என்ற எண்ணம் கோட்பாட்டு ாீதியான வடிவம் பெற்றது. தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்ற கொள்கைகள் ஆதிக்கம் பெறத் தொடங்கின. இதுவே 50க்கு பிற்பட்ட ஈழத்து இலக்கியத்தின் பிரதான பொதுப் போக்காகவும் அமைந்தது. இவ்வாறு 1950 ஆம் ஆண்டுகளில் தோன்றிய எழுத்தாளர்களால் தான் ஈழத்துச் சிறுகதைகளில் யதார்த்தம் பூரண வடிவம் பெற்றது. பேச்சு மொழி பிரக்ஞைபூர்வமாகக் கையாளப்பட்டது. உருவஉத்திப் பாிசோதனைகள் இடம் பெற்றன. சிறுகதையின் உள்ளடக்கமும் உருவமும் வளம்பெற்றன.

4

1950 ஆம் ஆண்டுகளின் சிறுகதைப் போக்குகள் 60 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதைக் காணலாம். உண்மையில் 50 களில் அரும்பிய போக்குகள் 60 களில் முதிர்ச்சி அடைந்தன என்று கொள்வதே பொருத்தம். 50 களில் தோன்றிய எழுத்தாளர்கள் பலர் 60 களிலேயே அதிக ஆற்றலுடன் எழுதத் தொடங்கினர். புதிய எழுத்தாளர்கள் பலர் எழுத்துலகில் புகுந்தனர்.

1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து இடதுசாாிச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு 60 ஆம் ஆண்டுகளில் ஆழமாகவும் பரவலாகவும் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் இடம் பெறத் தொடங்கிற்று. இதேகாலப் பகுதியில் சர்வதேச ாீதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஏற்பட்ட சித்தாந்தப் பிளவு இலங்கையையும் பாதித்தது. 'சமாதானம் மூலம் சமூகமாற்றம்' என்ற திாிபுவாதக் கருத்தை எதிர்த்து 'புரட்சியின் மூலம் சமூகமாற்றம்' என்ற புரட்சிகரக் கருத்தை முன்வைத்தவர்கள் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தனியாகப் பிாிந்து சென்றனர். முற்போக்கு எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் அவர்களுடன் சேர்ந்தனர். பல்கலைக் கழகங்களில் சோஷலிசப் படிப்பு வட்டங்கள் உருவாகின. 1956க்குப் பின் நடைமுறைக்கு வந்த சுயமொழிக் கல்வியினால் உருவாகிய பட்டதாரி மாணவர்கள் பலர் இவ்வியக்கங்களால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுள் சிலர் சிறுகதை ஆசிாியர்களாகவும் உருவாகினர். செ. யோகநாதன், யோ.பெனடிக்ற்பாலன், செ.கதிர்காமநாதன், முத்து சிவஞானம் போன்றோர் இவ்வாறு பல்கலைக் கழகத்தில் இருந்து புரட்சிகர இடதுசாாிச் சிந்தனைப்போக்கின் செல்வாக்குடன் வளர்ச்சியடைந்த சிறுகதையாசிாியர்களாவர். செம்பியன் செல்வன், செங்கையாழியான் பவானி ஆழ்வாப்பிள்ளை முதலியோரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இக்காலப் பகுதியில் உருவாகியவர்களே.மருதூர்க் கொத்தன், மருதூர்க் கனி, சண்முகம் சிவலிங்கம், புலோலியூர் சதாசிவம் போன்ற வேறு சிலரும் 60 களில் சிறுகதைத் துறையை வளப்படுத்தினர்.

ஆரம்பத்தில் சிறுகதைகளே எழுதிய யோகநாதன் பிற்காலத்தில் குறுநாவல்களில் அதிக அக்கறை காட்டியுள்ளார். இவரது யோகநாதன் கதைகள் என்ற நூல் குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்பு ஆகும். காவியத்தின் மறுபக்கம், ஒளி நமக்கு வேண்டும் ஆகிய குறுநாவல் தொகுப்புகளும் வௌியிட்டுள்ளார். உண்மையில் இவற்றுள் சில சிறுகதைகளாகவே கருதப்பட வேண்டியன. அண்மையில் கண்ணீர் விட்டே வளர்த்தோம் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் வௌிவந்துள்ளது. யோ.பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள் நூல் உருவம் பெறவில்லை. ஓரே லயக் காம்பராவில் என்ற இவரது கதை மலையகத் தோட்டத் தொழிலாளாின் வாழ்க்கை நொிசலைத் தாக்கமான முறையில் சித்திாிக்கின்றது. இக் கதையே இவரது சொந்தக்காரன் நாவலின் வித்து எனலாம். கருத்துக்களை அழுத்திச் சொல்வதற்குச் சிறுகதையை விட குட்டிக்கதை சிறந்த வடிவம் என்று கருதுவதால் போலும் இவர் பிற்காலத்தில் அதிகமாகக் குட்டிக் கதைகளே எழுதியுள்ளார். இவரது குட்டிக் கதைகள் தனிச்சொத்து என்ற தொகுப்பாக வௌிவந்துள்ளன.

செ. கதிர்காமநாதன் சுயமாக எழுதியது மட்டுமன்றி பிரபல இந்திய முற்போக்கு எழுத்தாளர் கிஷன்-சந்தாின் சில சிறுகதைகளை மொழி பெயர்த்தும் உள்ளார். ஆற்றல் உள்ள சிறுகதைப் படைப்பாளியான இவர் இளம் வயதிலேயே இறந்து போனது இலங்கைச் சிறுகதைத் துறைக்கு ஒரு நஷ்டமேயாகும். இவரது கொட்டும் பனி சிறந்த சிறுகதைத் தொகுப்பு. கிஷன்-சந்தாின் மொழி பெயர்ப்புக் கதையை உள்ளடக்கிய நான் சாக மாட்டேன் என்பதும் குறிப்பிடத் தகுந்த ஒரு நூல் ஆகும்.

செம்பியன் செல்வன், செங்கையாழியான், புலோலியூர் சதாசிவம் ஆகியோர் யாழ்ப்பாணக் கிராமிய மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்ட பல கதைகளைப் படைத்துள்ளனர். செங்கையாழியான் பிற்காலத்தில் நாவல்களிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார். இவரது கதைகள் செங்கையாழியான் கதைகள் என்ற பெயாில் நூல் உருப் பெற்றுள்ளன. செம்பியன் செல்வனின் அமைதியின் இறகுகள், சதாசிவத்தின் யுகப்பிரவேசம், பவானியின் கடவுளருளும் மனிதரும் ஆகிய நூல்களும் வௌிவந்துள்ளன. மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி ஆகியோர் மருதமுனைக் கிராமத்து முஸ்லீம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் படைத்துள்ளனர். மருதூர்க் கொத்தன் இக்காலப்பகுதியில் தோன்றிய சிறந்த சிறுகதையாசிாியர்களுள் ஒருவராவர். இவரது கதைகள் இன்னும் நூல்உருப் பெறவில்லை. சண்முகம் சிவலிங்கம் மிகக் குறைவாக எழுதி அதிக கவனத்தைக் கவர்ந்த ஒரு படைப்பாளி. இவரது கதைகள் பெரும்பாலும் சுயதாிசன வௌிப்பாடாக உள்ளன. ஈழத்துச் சிறுகதையுலகில் இத்தகைய படைப்புக்கள் மிக அபூர்வமாகும். இவ்வகையில் இவரது மழை, நீக்கம் முதலிய கதைகள் குறிப்பிடத் தக்கன.

5

1970 ஆம் ஆண்டுகளில் மேலும் ஒரு புதிய இளம் தலைமுறையினர் சிறுகதை உலகில் புகுந்தனர். அ. யேசுராசா, குப்ளான் சண்முகம், ஐ.சாந்தன், அ.லெ.முருகபூபதி, திக்வல்லை கமால், எம்.எல்.எம். மன்சூர், டானியல் அன்ரனி, நந்தினி சேவியர், முத்துராசரத்தினம், எஸ்.எல்.எம். ஹனிபா, மண்டூர் அசோகா, சிறிதரன், சட்டநாதன் தெணியான், உமா வரதராசன் முதலியோர் குறிப்பிடத்தகுந்த சமகாலச் சிறுகதையாசிாியர்களாவர். இவர்களிற் சிலாின் படைப்புக்கள் மூலம் இலங்கைத் தமிழ்ச் சிறுகதையின் உருவம், உள்ளடக்கம், மொழி நடை ஆகியவற்றில் சில புதிய போக்குகள் வௌிப்படத் தொடங்கியுள்ளன.

நகரமயமாதலின் அல்லது முதலாளித்துவ சமுதாய முதிர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் தனிமனித அக உளைச்சல்களும், அன்னிய மாதலும் (alienation) இக்காலப் பகுதியில் தோன்றிய சில சிறுகதைகளில் சிறப்பாக வௌிப்பாடு பெற்றுள்ளன. யேசுராசாவின் ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது. குப்ளான் சண்முகனின் எல்லைகள், இலுப்பமரமும் இளம்சந்ததியும்; மன்சூாின் முரண்பாடுகள், சிறிதரனின் நிர்வாணம் முதலிய கதைகள் இப்பண்புக்குச் சிறந்த உதாரணங்களாகும். இக்கதைகளில் சமூகத்தோடு, அல்லது வீட்டோடு ஒட்டமுடியாது அன்னியப்பட்டுச் செல்லும் இளைஞர்களைக் காண்கிறோம். இது ஈழத்துச் சிறுகதையின் ஒரு புதிய பாிமாணம் எனலாம்.

மரபுாீதியான சிறுகதை வடிவத்தில் இருந்து வேறுபட்ட கதைகளையும் இவர்களில் சிலர் புனைந்துள்ளனர். சாந்தன் யேசுராசா ஆகியோாின் பல கதைகள் இத்தகையன. அவை பெரும்பாலும் அளவில் சிறிய நினைவுச் சித்திரங்களாக அல்லது அனுபவ வௌிப்பாடாக அமைந்துவிடுகின்றன. தென் இலங்கை முஸ்லீம்களின் வாழ்வும் பேச்சு வழக்கும் இக்காலப் பகுதியிலேயே சிறுகதைகயில் இடம் பெறத் தொடங்கின. திக்வல்லைக் கமால் போன்றோாின் சிறுகதைகள் மூலம் ஒரு புதிய வாழ்க்கைப்புலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகியது. இக்கால எழுத்தாளர்களின் படைப்புக்கள் சில தொகுப்புக்களாகவும் வௌிவந்துள்ளன. யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும், சாந்தனின் ஓரே ஒரு ஊாிலே, சண்முகனின் கோடுகளும் கோலங்களும், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள், மண்டூர் அசோகாவின் கொன்றைப் பூக்கள் முத்துஇராசரத்தினத்தின் சிலந்தி வயல் என்பன அவற்றுட் சில.

1930 ஆண்டுகளில் தோன்றிய ஈழத்து சிறுகதை சுமார் ஐம்பது ஆண்டுகளாக இங்கு பன்முகப்பட்ட வளர்ச்சி பெற்று வந்திருப்பதை இதுவரை பார்த்தோம். ஆரம்ப காலத்தில் ஈழத்து உணர்வு குறைவாகக் காணப்படினும் 1950 க்குப் பின் பூரணமான தேசியப் பண்பைப் பெற்று இங்கு சிறுகதை இலக்கியம் வளர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான சிறுகதைத் தொகுதிகள் வௌிவந்துள்ளன. அவற்றுள் பதினைந்து இருபது நல்ல தொகுதிகளையேனும் நாம் இனம்காண முடியும். ஜனரஞ்சகமான வியாபாரப் பத்திாிகைகள் இங்கு தோன்றாததாலும், சமூகப்பிரக்ஞை இங்கு ஓர் இலக்கிய இயக்கமாகவே வலுப்பெற்றதனாலும் மலினமான பத்திாிகைக் கதைகளுக்குப் பதிலாக, காத்திரமான விஷய கனமுள்ள கதைகள் இங்கு அதிகம் எழுதப்பட்டன. இது ஈழத்துச் சிறுகதையின் ஒரு சிறப்பம்சம் எனலாம்.


6. நாடகம் ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும்.

மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிாியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.

போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தாி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓாிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.

பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அாிச்சந்திர விலாசம் மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.

நவீன நாடக மரபு உருவாகியதைத் தொடர்ந்தும், தென்னிந்திய சினிமாக்களின் வருகையினாலும் இம் மரபுவழி நாடகங்கள் நகரப்புறங்களிற் செல்வாக்கு இழந்து, கிராமங்களைச் சென்றடைந்தன. இந் நாடக மரபு மீண்டும் ஈழத்து நாடக உலகில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் பிரகாசம் பெறத்தொடங்குகிறது.

ஆங்கிலேயர் வருகையுடன் இலங்கை வரலாற்றில் புது அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இன்று வரை எமது நாட்டின் பொருளாதாரத் தலைவிதியாக இருந்து வந்துள்ள காலனித்துவப் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே. இப்பொருளாதார அமைப்புமுறை ஈழத்திற் பல அடிப்படையான மாறுதல்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் தமது அரசியற் தளத்தை ஸ்திரப் படுத்துவதற்காகப் பலவகைக் கலாசார ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டனர். ஆங்கில மொழி, கிறித்தவ மதம் ஆகியவற்றின் மூலம் சுதேசிகளை ஐரோப்பிய மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில அறிவு முக்கியமானதாக மாத்திரமன்றி வருமானம் தருவதாகவும் மாறியது. பிாிட்டிசாாின் நிர்வாக சேவையில் வேலை செய்ய ஆங்கிலம் கற்ற லிகிதர்கள் கூட்டம் ஒன்றும், அவர்களுக்குத் தேவையாக இருந்தது. ஸ்தாபிக்கப்பட்ட புதிய பாடசாலைகளில் இவர்களும், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிாியர்களும் உற்பத்தி செய்யப்பட்டார்கள். இவர்களே ஈழத்து அரசியல் அரங்கில் புதிதாகத் தோன்றிய மத்தியதர வர்க்கத்தினராவர்.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தில் இவ் வகுப்பினாிலிருந்து வந்தோாின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களே நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் ஆகியவற்றை ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகம் செய்து வைத்தனர். நாடகத்துறையிலும் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்துக் கூத்து மரபிலிருந்து விடுபட்டு நவீன நெறியில் நாடகம் செல்லக் காலாயிருந்தோர் இவர்களே.

மேனாட்டு இலக்கியப் பயிற்சி காரணமாக இவர்கள் நாடகத்தைப் புதிய திசைக்கு எடுத்துச் சென்றார்கள். தமிழ் நாட்டில் சுந்தரம்பிள்ளை போன்ற பேராசிாியர்களும், பம்மல் சம்பந்த முதுலியார் போன்ற நியாயவாதிகளும் நாடகத் துறையுட் புகுந்தனர். ஈழத்திலும் இதுவே நடந்தது. நாடகத்தினைத் தொழிலாகக் கொள்ளாமல் சபாக்கள் அமைத்தும், மன்றங்கள் தொடங்கியும் இவர்கள் நாடகத்தினை வளர்த்தனர். 1913 ஜுலையில் கொழும்பில் லங்கா சுபோதசபை ஸ்தாபிக்கப்பட்டது. 1914 இல் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி விலாச சபை அமைக்கப்பட்டது. 1920 இல் மட்டக்களப்பில் சுகிர்த விலாச சபை தோன்றியது. 1933 இல் The Tamil Amatevr Dramatic Society என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட நாடக சபை கொழும்பில் அமைந்தது.

இச் சபைகளில் ஆங்கிலம் கற்ற மத்தியதர வகுப்பினரே பெரும்பங்கு கொண்டனர். 1913 ஜுலையில் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா சுபோத சபைக்குத் தலைவராயிருந்தவர் பிரபல அப்புக்காத்தும் சட்டசபை அங்கத்தவருமான சேர் அம்பலவாணர் கனகசபை ஆவர். உபதலைவர் கோபாலசிங்கமும் இத்தகைய தகுதிகள் வாய்ந்தவரே. காாியதாிசியான ஏ.தளையசிங்கம் அப்புக்காத்தாக இருந்தவர். தனாதிகாாி நெஷனல் வங்கிச் சிறாப்பராவர். இத் தகவல்களிலிருந்து நாடக உலகில் மத்தியதர வர்க்கத்தினாின் வருகை துல்லியமாகப் புலனாகின்றது.

இம் மத்தியதர வகப்பினாின் வருகையுடன் அவர்களின் இரசனைக்கும், ஓய்வு நேரத்திற்கும், கல்வித் தரத்திற்கும் ஏற்ப புதிய நாடக மரபு உருவாயிற்று. பாடல்கள் குறைந்து வசனம் பெருமிடத்தைப் பிடித்தது. நாடகம் இறுக்கமான ஒரு வடிவத்தைப் பெறலாயிற்று. நாடக இலக்கியம் என்ற பேச்சும் எழலாயிற்று. ஆங்கில நாடகப் பண்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் மதங்க சூளாமணி, விபுலானந்த அடிகளால் எழுதப்பட்டு இக் காலகட்டத்தில் (1926 இல்) மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வௌியிடப்பட்டது.

இந் நவீன நாடக மரபில் கலையரசு சொர்ணலிங்கம் முக்கிய இடம் பெறுகிறார். கலையரசு அவர்கள் இலங்கையில் அக் காலத்திற் பெருமதிப்புப் பெற்றிருந்த ஆங்கில நாடகக் கோட்பாடுகளுக்கியைய குறைந்த நேரத்தில் பொருத்தமான அரங்க அமைப்பும், வேடப் புைைவும், நடிப்புத் துாிதமும் கொண்ட நாடகங்களை மேடையேற்றினார்.

வளர்ந்து வந்த நகர்ப்புற மக்களுக்கு இத்தகைய நாடகங்கள் சிறந்த பொழுதுபோக்காயின. கலையரசின் நாடகங்கள் அதிகமாகக் கொழும்பு நகாிலேயே மேடையேறின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிலமானிய அமைப்பு முற்றாகச் சிதையாமல் இருந்தமையினால் கூத்துக்களின் செல்வாக்கினின்றும் நவீன நாடகம் தன்னை முற்றாக விடுவித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. உருவத்தைப் பொறுத்தவரை சிறிது மாறுபாடிருப்பினம் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இந் நவீன நாடகங்கள் பழைய புராண இதிகாசக் கதைகளையே கொண்டனவாகவும். ஆங்கில - சமஸ்கிருத மொழிபெயர்ப்புகளாகவும் இருந்தன. சேக்ஸ்பியாின் செல்வாக்கினை இக்காலத்தெழுந்த பல நாடகங்களிற் கண்டு கொள்ள முடிகின்றது.

இக்காலத்தெழுந்த கதிர்காமர் கனகசபையின் நற்குணனில் (1927) ஆங்கில நாடக முறையைத் தழுவி Blank Verse இனை ஒத்த அகவல் யாப்பில் நாடகப் பாத்திரங்களின் உரையாடல் அமைந்துள்ளது. ஆங்கில நாடக மரபைப் பின்பற்றி தமிழில் தான் செய்த முயற்சியே இது என நூலின் ஆசிாியர் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தில் அச்சு வடிவில் வந்த முதற் கவிதை நாடகம் இது என்பர். பேராசிாியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியம் போன்று இது நடிப்பதற்கன்றி படிப்பதற்கேயுகந்தது. ஆங்கில சமஸ்கிருத நாடக முறைகளைப் பின்பற்றி எழுந்த இப் புதிய மரபு நாடகங்களுக்கு உதாரணமாகப் பிரான்ஸ் கிங்ஸ்பொியின் சந்திரகாசம் (1940) மனோன்மணியம் (1941) வெள்ளவத்தை மு.இராமலிங்கத்தின் அசோகமாலா (1943) பேராசிாியர் கணபதிப்பிள்ளையின் மாணிக்கமாலை (1943) ஆகியவற்றைக் கூறலாம்.

கிறித்தவ மதத்திற்கு எதிராக எழுந்த இந்துசமய மறுமலச்சியின் மரபில் வந்த படித்தவர்கள் நாடகத்தைத் தம் கொள்கை பரப்பும் ஊடகமாகவும் கொண்டனர். கிறித்தவம் தமது மரபுகளையும் ஒழுக்கங்களையும் விழுமியங்களையும் சிதைப்பதாகக் கருதிய இவர்கள் அப் பாரம்பாியத்தை மீண்டும் நிலைநாட்டக் கருதி நாடகத்தில் அறநெறிப் பண்புகளைப் போதித்தனர். க.சிதம்பரநாதனின் சாவித்திாிதேவி சாிதம் (1917), க. இராமலிங்கத்தின் நமசிவாயம் அல்லது நான் யார் (1929), சோமசுந்தரப் புலவாின் உயிாிளங்குமரன் (1936), சு. செல்வநாயகத்தின் சாமளா அல்லது இன்பத்தில் துன்பம் (1937) சாரா எழுதிய சத்தியேஸ்வாி (1938) என்பவற்றை இந்நாடகங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

ஐரோப்பிய, வடமொழி நாடக மரபையொட்டி எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட நாடகங்களில் பெரும்பாலானவை வடமொழி மரபைப் பின்பற்றித் தலைமைப் பாத்திரங்களும் உயர்வான பாத்திரங்களும் செந்தமிழ் நடையில் உரையாடுவதாகவும் வேலைக்காரன் போன்ற சமூக மதிப்பற்ற பாத்திரங்கள் பேச்சுத்தமிழைக் கையாள்வதாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. இக் காலகட்டத்தில் பேச்சுத் தமிழ் நகைச்சுவைக்கே பயன்படுத்தப்பட்டது. எனினும் பேச்சுமொழி நாடகத்தில் இடம்பெறத் தொடங்கியமை ஒரு சிறப்பு அம்சமே. படிமுறை வளர்ச்சிப் போக்கில் பார்க்கையில், ஆரம்பத்தில் பாடல் வடிவில் அமைந்த கூத்து முறையில் இருந்து விலகி வசன அமைப்பில் உருவாகிய நவீன நாடக மரபு, பேச்சு மொழியினைத் தன்னுட் சேர்த்துக் கொள்ளும் பண்பினைக் காண்கின்றோம். சமூக அரசியல் வளர்ச்சி காரணமாக சாதாரண மனிதர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெற அவர்கள் நாடகத்திலும் இடம் பெறத் தொடங்கினர். நாடகத்தில் இடம்பெறும் சகல பாத்திரங்களும் பேச்சு மொழியிலேயே பேசுவதனை நவீன நாடக வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற் காணுகிறோம்.

2
ஆங்கிலக் கல்வி சிருட்டித்துவிட்ட மத்தியதர வர்க்கத்தின் ஒரு பிாிவினர் மேனாட்டு மொழிபெயர்ப்பு நாடகங்களையும் புராண இதிகாசக் கதைகளையும் கையாண்டு நாடகத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாகக் கொள்ள இன்னொரு பிாிவினர் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வளம் ததும்பிய சமூகநாடகங்களை நாடக உலகுக்கு அளித்தனர். இவர்களே ஈழத் தமிழ் நாடக உலகில் இயற் பண்பு வாய்ந்த நாடக நெறி ஒன்றினை உருவாக்கினர். இவர்கள் கையில் நாடகம் வெறும் பொழுதுபோக்குச் சாதனமாகவன்றி சமூகமாற்றச் சாதனமாயிற்று. இப்போக்கின் முன்னோடி பேராசிாியர் கணபதிப்பிள்ளை ஆவார். அவருடைய நாடகங்கள் 1936 முதல் மேடையேற்றப்பட்டன. இலங்கைப் பல்கலைக்கழகம் பேராசிாியர் நாடகங்களுக்குக் களமாக அமைந்தது. பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவரும் மாணவியரும் பேராசிாியர் நாடகங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.

பேராசிாியாின் நாடகங்கள் பெரும்பாலும் சமூகப்பண்புடையனவாகக் காணப்பட்டன. யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்துக் குடும்ப, சமூகப் பிரச்சினைகளை பேராசிாியர் கணபதிப்பிள்ளை தமது நாடகங்களிற் கொணர்ந்தார். சாிந்து கொண்டு வந்த நிலமானிய உறவுகளையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் இவரது நாடகங்கள் எடுத்துக்காட்டின. ஈழத்துத் தமிழ் நாடக உலகில் முதன் முதலாக ஈழத்துக் கதா பாத்திரங்கள் - சிறப்பாக யாழ்ப்பாணத்துக் கதா பாத்திரங்கள் உலவத் தொடங்கின. பேராசிாியர் கணபதிப்பிள்ளையவர்கள் மொழியியல் துறையில் விற்பன்னராய் இருந்தமையினால் போலும் முன்னைய நாடக ஆசிாியர் போலன்றி பிரக்ஞை பூர்வமாகப் பேச்சு மொழியினைக் கையாண்டார். இவர் நாடகங்களிற் தோன்றிய பாத்திரங்கன் அன்றாடம் தாம் பேசும் மொழியிலேயே பேசின. தமது நாடக முன்னுரையில் பேராசிாியர் இது பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"......நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடியே காட்டுவது. ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவோர் பேச வேண்டும். இந் நான்கு நாடகத்திலும் வழங்கிய பாடை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பொதுவாகவும் பருத்தித்துறைப் பகுதிக்குச் சிறப்பாகவும் உள்ளது."

உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது என்ற அவர் கூற்றில் அவரது இயற்பண்பு வாத நெறிசார்ந்த போக்கும் புலப்படுகிறது. பிரச்சினைகளை இவை வௌிப்படுத்தினவே தவிர அதற்கான காரணங்களை ஆராய்ந்து வழிகாட்டவில்லை. எனவேதான் இவரை இயற்பண்பு நாடக நெறி ஆசிாியர் என்று விமர்சகர் கூறுவர்.

சுருங்கக் கூறின் கற்பனாலோகத்தில் வாழ்ந்த நாடக உலகை நடப்பியல் உலகுக்கு இழுத்து வந்த பெருமை இவருக்கேயுண்டு. ஈழத்தில் மாத்திரமன்றி முழுமையாகத் தமிழ் நாடக உலகிலேயே இம்மாற்றத்தை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கேயுண்டு, பேராசிாியாின் நாடகங்கள், நானாடகம் (1930), இருநாடகம் (1952), மாணிக்கமாலை (1952), சங்கிலி (1953) என்ற பெயர்களில் நூலுருப் பெற்றன. இவற்றுள் மாணிக்கமாலை சமஸ்கிருத நாடகமான ரத்னாவலியின் தழுவல் நாடகமாகும். சங்கிலி சாித்திர நாடகமாகும்.

இவ்வண்ணம் நவீன நாடக மரபு கலையரசு வழியில் ஒரு மரபாகவும். பேராசிாியர் கணபதிப்பிள்ளை வழியில் இன்னொரு மரபாகவும் இரு கிளைப்பட்டு வளர்ந்தது.

1950களில், தமிழ் நாட்டில் அரசியல் ாீதியில் வளர்ச்சியடைந்த திராவிடர் முன்னேற்றக் கழகம் இங்குள்ள இளைஞர்களுக்கு ஆதர்சமாயிற்று. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் நூல்களும், ஏடுகளும் ஈழத்துக்கு இறக்குமதியாயின. இவை ஈழத்து நாடக உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

திராவிட முன்னேற்றக் கழக நாடகங்கள் போலமைந்த சீர்த்திருத்தக் கருத்துக்கள் மலிந்த செயற்கைப் பாங்கான பல தமிழ் நாடகங்கள் இங்கு உருவாயின. நாட்டின் பல பாகங்களிலும் இத்தகைய நாடகங்கள் பெருவாாியாக மேடையேறினும் நூலுருவம் பெற்றவை குறைவே. அப்பாஸ் எழுதிய கள்ளத்தோணி (1960) அ.பொ. செல்லையா எழுதியார் கொலைகாரன் என்பன. இதற்கு உதாரணங்களாகும். இத்தகைய நாடகங்களிற் தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கையே பெருமளவு காணமுடிகிறது. பெரும்பாலான தமிழ்ப் பிரதேசங்களில் இன்றும் இம்மரபு நின்று நிலைக்கிறது.

1956ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையொட்டி தேசிய உணர்வும், தமது சொந்தப் பண்பாடு பற்றிய பிரக்ஞையும் ஈழத்தில் ஏற்பட்டது.

சுய பண்பாட்டுப் பிரக்ஞையின் வௌிப்பாடாகவே 1959 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஒரு தசாப்த காலம் வரை ஈழத்து நாடக உலகில் பாரம்பாியக் கூத்துக்களை பேணுகின்ற, அவற்றை நவீனப்படுத்துகின்ற தன்மைகளைக் காணுகின்றோம்.

1957க்குப் பின்னர் அரசாங்க ஆதரவில் இயங்கிய கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு, பேராசிாியர் சு. வித்தியானந்தன், பேராசிாியர் கா. சிவத்தம்பி ஆகியோாின் வழிகாட்டலின் கீழ் செயற்படத் தொடங்கியது. கலைக் கழகத் தலைவராயிருந்த பேராசிாியர் வித்தியானந்தன் அவர்களின் முயற்சியினால் மரபு வழி நாடக வளர்ச்சியில் பாாிய பாதிப்பினைக் கலைக் கழகத்தால் ஏற்படுத்த முடிந்தது. மரபு வழி நாடகங்கள் பலவற்றைக் கலைக் கழகத்தின் ஆதரவுடன் பேராசிாியர் வித்தியானந்தன் பதிப்பித்தார். மட்டக்களப்பு தென்மோடி நாடகமான அலங்கார ரூபன் (1962), என்றிக் எம்பரதோர் (1964), மூவிராசாக்கள் நாடகம் (1966), ஞானசௌந்தாி (1967) ஆகியவை இவரால் பதிப்பிக்கப்பட்டன, பேராசிாியர் கா. சிவத்தம்பி பல்கலைக் கழக இந்து மாணவ மன்றத்தின் ஆதரவில் மார்க்கண்டேயன் (1961) வாளபீமன் (1963) ஆகிய நாடகங்களைப் பதிப்பித்தார்.

ஏட்டுருவில் இருந்த பழைய மரபு வழி நாடகங்கள் அச்சுருவில் வந்தமை ஈழத்து நாடக உலகில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். கலைக் கழகம் தானே நூல்களைப் பதிப்பித்ததுடன் பிரதேச கலாமன்றங்களையும் இப்பணியில் ஊக்குவித்தது. இதன் காரணமாக அனுருத்திர நாடகம் (1969) இராம நாடகம் (1969) எஸ்தாக்கியார் நாடகம் (1967) மாியதாசன் நாட்டுக் கூத்து (1972) தேவசகாயம் பிள்ளை நாட்டுக் கூத்து (1974) விஜய மனோகரன் (1968) போன்ற நாட்டுக் கூத்து நூல்கள் அச்சில் வந்தன. அச்சிடப்பட்டவற்றுள் பல, பழைமையானவை. சில, புதிதாக ஆசிாியர்களால் இயற்றப்பட்டவை. தவிர, கலைக் கழகம் அண்ணாவிமார் மகாநாடுகள் நடத்தியும், அண்ணாவிமாரைக் கௌரவித்தும், பாடசாலைகளுக்கிடையே நாட்டுக் கூத்துப் போட்டிகள் நடத்தியும் நாட்டுக் கூத்து உணர்வு மக்களிடம் வளரக் காலாயமைந்தது.

நாட்டுக் கூத்துக்களைப் பேணுகின்ற முயற்சி மாத்திரமன்றி அவற்றை நவீனப்படுத்தும் முயற்சியும் இதேகால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பேராதனைப் பல்கலைக் கழத்தில் சிங்களத் துறையைச் சேர்ந்த பேராசிாியர் சரச்சந்திர போன்றோர் 1956 முதல் புகழ்பெற்ற மனமே, சிங்கபாகு போன்ற நவீனப்படுத்தப்பட்ட சிங்களக் கூத்துக்களைத் தயாாித்து மேடையேற்றினர். இதே பணியினை 1960களிலே பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் துறையைச் சார்ந்த பேராசிாியர் சு.வித்தியானந்தன் அவர்கள் செய்தார். 1962 தொடக்கம் 1968 வரை அவர் பல்கலைக் கழக மாணாக்கரைக் கொண்டு மட்டக்களப்புக் கூத்துக்களை நவீனப்படுத்தியளித்தார். யாழ்ப்பாண அண்ணாவி மரபு நாடகத்தைப் பிரபல்யப்படுத்தினார். கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை என்பன அவர் நவீனப்படுத்திய மட்டக்களப்புக் கூத்துக்களாகும். நவீன மேடை, ஒலி, ஒளி உத்திகளைக் கையாண்டு, கிராமங்களில் இரா முழுவதும் ஆடப்படும் கூத்துக்களின் கால அளவைச் சுருக்கி அவர் நகர்ப்புறப் பார்வையாளர்களும் இரசிக்கக்கூடியதாக்கினார். ஈழத் தமிழாின் மரபு வழி நாடக மரபு நகர்புற மேடைகளில் நகர்ப்புற மாந்தரால் வரவேற்கப்பட்டது.

நாட்டுக் கூத்தினை வளர்த்த கலைக்கழகம் நவீன நாடக எழுத்துப் பிரதிகட்குச் சன்மானம் வழங்குவதன் மூலமும், அவற்றை அச்சிடுவதன் மூலமும் நவீன நாடகத் துறையை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.

சொக்கனின் சிலம்பு பிறந்தது (1962), சிங்ககிாிக்காவலன் (1963), முத்து சிவஞானத்தின் சேரன் சமாதி (1968) ஆகிய கலைக்கழகப் பாிசு பெற்ற நாடக நூல்களைக் கலைக்கழகமே வௌியிட்டது. கலைக்கழகப் பாிசுபெற்ற ஏ.ாி. பொன்னுத்துரையின் நாடகம் என்னும் நாடகம் (1969), தேவனின் தென்னவன் பிரமராயன் (1963), முல்லைமணியின் பண்டாரவன்னியன் (1970), சண்முகசுந்தரத்தின் பூதத்தம்பி (1964) போன்ற நூல்கள் பின்னாளில் நூலுருவம் பெற்றன. கலைக்கழகப் பாிசுபெற்ற நாடகங்களில் பெரும்பாலானவை வரலாற்று நாடகங்களாகும். அத்தோடு சமய, இலக்கிய நாடகங்களும் இவற்றுட் காணப்பட்டன. இலக்கிய வரலாற்று நாடகங்கள் கலைக்கழகப் பாிசுபெற்று அச்சில் வந்தமையைத் தொடர்ந்து இதே தன்மை கொண்டதான பல நாடகங்கள் ஈழத் தமிழ் நாடக உலகில் எழ ஆரம்பித்தன. சண்முகசுந்தரத்தின் வாழ்வுபெற்ற வல்லி (1962), இறுதி மூச்சு (1965), சதா ஸரீனிவாசனின் இலங்கை கொண்ட இராஜேந்திரன் (1960), சி.ந. தேவராஜனின் விஜயன் விஜயை திருமணம் (1965), கங்கேஸ்வாி கந்தையாவின் அரசன் ஆணையும் ஆடக சவுந்தாியும் (1965), செம்பியன் செல்வனின் மூன்று முழு நிலவுகள் (1965), கரவை கிழானின் தணியாத தாகம் (1968), மு.கனகராஜனின் கைமுனுவின் காதலி, எஸ், பொன்னுத்துரையின் வலை (1972) ஆகியவற்றை இப்போக்கிற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.

இவற்றுட் சில நாடகங்கள் இன உணர்வும் பழமைச் சிறப்பும் பேசின. சில நாடகங்கள் இன ஒற்றுமையை மறைமுகமாகக் கூறின. சில இந்திய சாித்திர நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டன.

இக்கால கட்டத்தில் முன்னணியில் நின்ற நாடக ஆசிாியர்களாக தேவன். சொக்கன், ஏ.ாி, பொன்னுத்துரை ஆகியோரைக் குறிப்பிடலாம்.

1956 இன்பின் இலங்கைத் தமிழாிடையே தோன்றிய இன உணர்வும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடகத்துறைச் செல்வாக்கும் இத்தகைய நாடகங்கள் பெருவாாியாக எழக் காரணங்களாயின. புனைகதைகளிலும் பார்க்க நாடகம்மூலம் மொழி அபிமானத்தை எடுத்துணர்த்துவது சுலபமாகும். எனவேதான் மொழி அபிமானமும், இன உணர்வும் தமிழர் மத்தியில் அரசியல் வடிவம் பெற்ற காலத்தில் இத்தகைய பல நாடகங்கள் தோன்றத் தொடங்கின.

தம்மை எதிர் நோக்கிய சமூக மாறுதல்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்ல முடியாத தமிழர் சமூகம் தன்னுடைய பழமைக்குள் நிம்மதி தேடியது. யுசென்ற காலம் இனி மீளாதா?ரு என்று பழைய காலத்தை இந்நாடகங்களிற் சில மீண்டும் நினைவு கூர்ந்தன. பண்டைய மன்னர்களைத் தமிழ் உணர்வு பெற்றவர்களாகச் சித்தாித்துத் தமிழ் மக்களிடை தமிழ் உணர்வு ஊட்ட முயற்சித்தன. இத்தகைய நாடகங்கள் உருவ அமைப்பில் தமக்கு முன்னோடியாக விளங்கிய கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடக மரபினையே பின்பற்றின. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை இவற்றில் காணப்படவில்லை என்பது மனம் கொள்ளத் தக்கது.

இயற்பண்பு சார்ந்த நாடக நெறி பேராசிாியர் கணபதிப்பிள்ளைக்குப் பின் இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒரு பிாிவினர் பேராசிாியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்களைத் தயாாித்தனர். நூலுருவம் பெற்ற அசட்டு மாப்பிளை இதற்கு உதாரணமாகும். இது தவிர புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவன், கலாட்டா காதல், ஆச்சிக்குச் சொல்லாதே, லண்டன் கந்தையா, புளுகர் பொன்னையா ஆகியவையும் இத்தகைய நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.

வரலாற்று, சமய, இதிகாச, புராண நாடகங்களும் இத்தகைய நகைச்சுவை நாடகங்களுமே இன்று தமிழ் மக்களிடையே ஜனரஞ்சகப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுப் புராண நாடகங்களை விட இந்நகைச்சுவை நாடகங்களில் கையாளப்படும் மொழி பார்ப்போாிடையேயும் ஓர் அன்னியோன்ய உறவை ஏற்படுத்துகிறது. நடிகர்கள் சொல்ல ரசிகர்கள் சிாிப்பதே இதன் பயன்பாடாகும். பார்ப்போரை வாய்விட்டுச் சிாிக்கப்பண்ணுவதே இவற்றின் நோக்கமாகும். ஒருவகையில் இவை நாடகங்களே அல்ல. நாடக எழுத்துப் பிரதி, மேடை ஒழுங்கு, பாத்திர வார்ப்பு என்பன எவையுமின்றி சம்பாஷணையை மாத்திரமே கொண்டுள்ள இத்தகைய நாடகங்களே இன்று பெரும்பாலான தமிழ் மக்களால் நாடகம் என்று ஏற்கவும்படுகின்றன.

பேராசிாியர் கணபதிப்பிள்ளை அறிமுகம் செய்த பேச்சுத் தமிழையும், இயற்பண்பு நாடக நெறியையும் நன்கு புாிந்து கொண்டு நாடக நிலை நோக்குடனும், பிரக்ஞையுடனும் ஈழத்தில் தமிழ் நாடகத்தை வளர்த்தவர்கள் பல்கலைக்கழகத்தினரும் பல்கலைக்கழக வழிவந்தோருமே. அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கிருந்தன.

அ. முத்துலிங்கத்தின் சுவர்கள், பிாிவுப்பாதை, சொக்கனின் இரட்டை வேஷம், அ. ந. கந்தசாமியின் மதமாற்றம் என்பன பேராசிாியர் மரபில் பல்கலைக்கழகம் மேடையேற்றிய நாடகங்களாகும். இவற்றுள் அ.ந. கந்தசாமியின் மதமாற்றம் குறிப்பிடத்தக்கது.

இவ்வியற்பண்பு நாடகங்கள் பேராசிாியாின் நாடகங்கள் போன்று மத்தியதர வர்க்கத்து மக்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டன. அவர்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் அவர்கள் மொழியில் உரையாடின.

ஆரம்பத்தில் மத்தியதர வர்க்கத்தினரையும் அவர்தம் பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டிய இவ்வியற்பண்பு நாடக நெறி சமூக வளர்ச்சிப் போக்கினாலும் அரசியல் பொருளாதார மாற்றங்களினாலும் தொழிலாளர்களையும் அடிமட்டத்தில் வாழ்ந்த மக்களையும் அவர்தம் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும் வகையில் பாிணமித்தது. 1969, 70 களிலே சமகால அரசியல் சமூகப் பிரச்சினைகளைக் கூறும் பண்புடைய நாடகப் போக்கு உருவாகியது. ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இடதுசாாிச் சிந்தனை வளர்ச்சியுமே இப்போக்கினை உருவாக்கின. தொழிலாளர் தலைமை தாங்கும் சமூக மாற்றம் ஒன்றினாலேயே சமகால வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்பதை இந் நாடகங்கள் மறைமுகமாகவும் வௌிப்படையாகவும் வற்புறுத்தின. 1960 ஆம் ஆண்டுகளில் புனைகதைத் துறையில் இடம்பெற்ற இப்பண்பு 1970 களிலேதான் நாடகத் துறையில் இடம்பெறலாயிற்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இ. சிவானந்தனின் விடிவை நோக்கி, காலம் சிவக்கிறது ஆகிய நாடகங்களும், நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பும் மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்களும் இதற்கு உதாரணங்களாகும்.

இ.சிவானந்தனின் விடிவை நோக்கி என்ற நாடகம் தொழிலாள வர்க்கப் பெண்ணொருத்தி டொக்டராக வந்து தன் வர்க்க நிலையினின்று மாறுபட்டுச் செல்வத்தைச் சித்திாிக்கிறது. அவரது காலம் சிவக்கிறது என்ற நாடகம் தமிழ், சிங்களத் தொழிலாளர்கள் அனைவரும் தம்மைச் சுரண்டும் முதலாளிக்கு எதிராகத் திரள்வதைச் சித்தாிக்கிறது. நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பு வேலையில்லாப் பிரச்சினையால் தவிக்கின்ற இளைஞர், தொழிலாளர் நடத்தும் சமூக விடுதலைப் போாில் தம் விடுதலையும் இணைந்துள்ளது என்பதை உணர்வதைக் காட்டுகிறது. மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்கள் தமிழ் சிங்கள தொழிலாளர் தோட்ட முதலாளிக்கு எதிராகச் செங்கொடியின் கீழ் அணிதிரள்வதைச் சித்தாிக்கிறது.

இத்தகைய பண்பு கொண்ட சிறு நாடகங்களை இக் காலகட்டத்தில் மேடையேற்றிய மாவை நித்தியானந்தன், தில்லைக்கூத்தன் ஆகியோரும் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.

அரசியல் ாீதியில் தீர்வு காட்டாதுவிடினும் சமகாலப் பிரச்சினைகளைக் காட்டிய நாடகங்களாக இக் காலகட்டத்தில் மேடையேறிய கலைச் செல்வனின் சிறுக்கியும் பொறுக்கியும், பௌசுல் அமீாின் தோட்டத்து ராணி ஆகிய நாடகங்களைக் குறிப்பிடலாம்.

சமகால சமூக அரசியற் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் இப்பண்பு மரபு வழி நாடகங்களிலும் இக்கால கட்டத்தில் இடம்பெறுவதைக் காணகின்றோம். இப் பண்பினை மரபு வழி நாடகத்தில் புகுத்தியவர். சி. மௌனகுரு ஆவர். இவரது சங்காரம் பழைய கூத்து வடிவத்திற் சமகாலப் பிரச்சினையைப் பிரதிபலிக்கின்றது. காலம் காலமாகச் சமூகப் பிாிவுகளினாலும், ஏற்றத்தாழ்வுகளினாலும் பிளவுபட்டுக்கிடந்த சமூகத்தை பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விடுதலை செய்வதே சங்காரத்தின் உள்ளடக்கமாகும். மட்டக்களப்புக் கூத்து மரபு சங்காரத்தினால் புதிய பாிமாணம் பெற்றது என்பர். அண்மையில், எம்.ஏ.நுஃமானின் நெடுங்கவிதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட மௌனகுரு தயாாித்து மேடையேற்றிய அதிமானிடன் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது. மரபுவழி ஆட்டமுறைகளையும், அபிநயங்களையும் பயன்படுத்தி மனிதகுல வளர்ச்சிக் கட்டங்களையும் இன்றைய அதன் போராட்டத்தையும் இந் நாடகம் சித்தாித்தது.

3

ஈழத்துத் தமிழ் நாடகத்தில் சமகால அரசியற் பிரச்சினைகள் இடம்பெறத் தொடங்கிய இக்கால கட்டத்திலேதான் நாடகத்தின் உருவம் பற்றிய சிந்தனையும் நாடக எழுத்தாளர்களிடமும், தயாாிப்பாளர்களிடமும் உருவாவதைக் காணுகின்றோம். சிங்கள நாடக வளர்ச்சியினதும், உலக நாடகப்பரப்பினதும், மரபுவழி நாடக மரபினதும் தாக்கம் பெற்ற இவர்கள் புதுப்பாணி நாடக உரு ஒன்றினை ஈழத் தமிழ் நாடக உலகுக்கு அளிக்கின்றார்கள். ஈழத்துத் தமிழ் நாடக உலகில் நவீன நாடக அரங்கு (Modern Theatre) பற்றிய பிரக்ஞை வலுவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.

1970 களிலே தமிழ் நாடக உலகின் பிரதான பண்பாகக் காணப்பட்ட சமகால சமூக அரசியற் பிரச்சினைகளே இக்காலத்தெழுந்த பெரும்பாலான புதுப்பாணி நாடகங்களின் உள்ளடக்கமாகவும் அமைந்தன. இத்தகைய புதுப்பாணி நாடக நெறியின் முன்னோடியாக நா. சுந்தரலிங்கத்தைக் குறிப்பிடலாம். இவர் 1971 மார்ச்சில் முருகையனின் 'கடூழியம்' என்ற நாடகத்தை மேடையேற்றினார். கடூழியம் உலகளாவிய தொழிலாளர் பிரச்சினையையும் அவர்களின் விடுதலையையும் கருவாகக் கொண்டது. இவரது அபசுரம் அநர்த்த (absurd) நாடகத்தின் பாற்பட்டது. நா. சுந்தரலிங்கத்தின் பங்கு ஈழத்து நாடக உலகிற் குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து அ. தாசீயஸ், புதியதொரு வீடு, கோடை, காலம் சிவக்கிறது, பிச்சை வேண்டாம், கந்தன் கருணை ஆகியவற்றை புதுப்பாணியில் தயாாித்தார். இதே காலப் பகுதியில் சுஹைர் ஹமீட் தயாாித்த ஏணிப் படிகள், பிள்ளைப் பெத்த ராசா ஒரு நாயை வளர்த்தார், வேதாளம் சொன்ன கதை, பொம்மலாட்டம், நகரத்துக் கோமாளிகள் முதலியவையும், க. பாலேந்திராவின் தயாாிப்பான நட்சத்திரவாசி, மழை, பசி, கண்ணாடி வார்ப்புகள்,புதிய உலகம் பழைய இருவர் ஆகிய நாடகங்களும், மௌனகுருவின் அதி மானிடன், தலைவர் ஆகியவையும் ஈழத்தில் நவீன நாடக அரங்க வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளன. 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே கலாச்சாரப் பேரவை நடத்திய தமிழ் நாடகப் போட்டியில் பாிசு பெற்ற தமிழ் நாடகங்கள் புதுப்பாணியிலேயே அமைந்திருந்தன. இது நகர்ப்புற நாடக உலகில் இக்கால கட்டத்தில் இந்நாடக நெறி பெற்று வந்த செல்வாக்கினைக் காட்டுகின்றது.

1970 களிலே நாடக உருவ அமைப்பு பற்றிய பிரக்ஞை ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறந்த பல நாடகங்கள் அயல் மொழிகளினின்று மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்படும் ஒரு போக்கும் உருவாகின்றது.

ஈழத்தமிழ் நாடக உலகில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பும் நடைபெற்றுள்ளன. நவாலியூர் நடராஜன் வட மொழியிலிருந்து காளிதாசனின் சாகுந்தலத்தை (1962)யும், மிருச்ச கடிகத்தை பொம்மை வண்டி (1964) என்ற பெயாிலும் மொழிபெயர்த்தார். இ. இரத்தினம் சோபோக்கிளிசின் ஈடிப்பசை ஈடிப்பஸ் மன்னன் (1969) என்ற பெயாில் மொழி பெயர்த்தார். இவை மேடைக்காக அன்றி வாசிப்புக்காகவே செய்யப்பட்டன.

எனினும் உணர்வு பூர்வமாகவும், நாடக உருவ அமைப்பு பற்றிக் காத்திரமான சிந்தனையுடனும் பிறமொழியின் சிறந்த நாடகங்களைத் தமிழில் தழுவியும் மொழி பெயர்த்தும் மேடை ஏற்றும் போக்கினை 60 களிலும் குறிப்பாக 1970 களிலும் காணுகிறோம். இப்ஸனின் Dolls House, பெண்பாவை என்ற பெயாிலும், அன்ரன் செகாவின் The Bear, கரடி என்ற பெயாிலும், ஜே. எம்.சிஞ்ச் எழுதிய Riders to the Sea கடலின் அக்கரை போவோர் என்ற பெயாிலும், எல்மாறைசின் The Adding Machine பொம்மலாட்டம் என்ற பெயாிலும் தழுவலாக்கம் பெற்று மேடையேறின. அலெக்ஸி அர்புசோவின் It Happend In Irkutsk என்னும் நாடகம் ஞானம் லம்பேட்டினால் 1970 இல் பிச்சை வேண்டாம் என்ற பெயாில் மொழி பெயர்க்கப்பட்டது. நிர்மலா நித்தியானந்தன் இந்த நாடக ஆசிாியாின் Old World என்ற நாடகத்தை புதிய உலகம் பழைய இருவர் என்ற பெயாிலும், ரென்னஸி வில்லியத்தின் Glass Menagerie என்ற நாடகத்தை கண்ணாடி வார்ப்புகள் என்ற பெயாிலும் மொழி பெயர்த்தார். இந்நாடகங்கள் மிக வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டமை நவீன ஈழத்துத் தமிழ் நாடக மரபு உலக நாடக மரபுடன் சங்கமிப்பதையே காட்டுகின்றது.

4

ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாடகத்தைக் கவிதை வகைகளுள் ஒன்றாகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருகின்றனர் போலும். இதனால் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள் பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழியுண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என்று அழைப்பதன் மூலம் இக்குழப்பத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

1950ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியில் இருந்தே இங்கு பாநாடகங்கள் கணிசமான அளவில் தோன்றத் தொடங்கின. இலங்கையில் முதலாவது பாநாடகமாக கதிர்காமர் கனகசபையின் நற்குணனைச் சொல்வர். ஆரம்ப காலப் பாநாடகங்கள் பெரும்பாலும் நடிப்பதற்கன்றிப் படிப்பதற்கே எழுதப்பட்டன. மஹாகவி, முருகையன் ஆகியோரே இத்துறையில் அதிகம் உழைத்தவர்களாவர். மகாகவியின் அடிக்கரும்பு, சேனாபதி, திருவிழா ஆகியனவும், முருகையனின் தாிசனம், வந்து சேர்ந்தன போன்றவையும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.

60 ஆம் ஆண்டுகளில் மேடைப்பாநாடகங்கள் பல எழுந்தன. நீலாவணனின் மழைக்கை, மஹாகவியின் புதிய தொரு வீடு, கோடை முருகையனின் கடூழியம், கோபுர வாசல், அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலியன இக்காலப் பகுதியில் மேடையேறின. இலங்கையில் தோன்றிய பாநாடகங்களைப் பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கலாம். ஒன்று பழந்தமிழ் இலக்கியச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு நடைமுறைச் சமூக வாழ்வை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தப் போக்கானவை. மூன்று குறியீட்டுப் பாங்கானவை. வந்து சேர்ந்தன, கோபுரவாசல், மழைக்கை போன்றவை முதல் வகையின. கோடை, புதியதொரு வீடு, போன்றவை இரண்டாம் வகையின. கடூழியம் மூன்றாம் வகையைச் சேர்ந்தது. அண்மையில் பா. சத்தியசீலனின் பாட்டுக்கூத்து என்ற சிறுவர்க்கான பாநாடக நூல் ஒன்றும் வௌிவந்துள்ளது.

ஈழத்து வானொலி நாடகங்களையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம். வானொலி நாடகங்களிற் பெரும்பாலானவை நூலுருப் பெறவில்லை. இலங்கையர்கோனின் மிஸ்டர் குகதாசனும் (1957) மாதவிமடந்தையும் (1958) முருகையனின் தாிசனமும், எஸ்.பி.கே.யின் பொற்கிழியும் நூலுருப் பெற்ற வானொலி நாடகங்களாகும். பொதுவான ஈழத்து நாடகப் போக்கிற்கு வானொலியும் விதிவிலக்கில்லை. வானொலி ஒரு வெகுஜனத் தொடர்புச் சாதனமானமையினாலும் அரச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிறுவனமானமையினாலும் சில எல்லைகளை மீறி நாடகம் போட அதனால் முடியவில்லை. எனினும் இடையிடையே சில நல்ல நாடகங்களையும் வானொலி அளிக்காமலில்லை. சிவபாதசுந்தரம், சானா, வாசகர் போன்றோர் வானொலி நாடகத் துறையில் உழைத்தவர்கள். வாசகர் வசனம் எழுதிய தணியாததாகம் வானொலி விசிறிகளின் பாராட்டுதலைப் பெற்றது. முன்னையவர்களை விட வானொலி நாடக வளர்ச்சிக்கு வாசகர் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது. இயல்பான பேச்சு மொழியினை ஜனரஞ்சகப் படுத்தியமையை வானொலி நாடகங்களின் முக்கிய பணியாகக் குறிப்பிடலாம்.

பத்திாிகைகளும் அவ்வப்போது சில நாடகங்களை வௌியிட்டுள்ளன. குறிப்பாக 1967 ஆம் ஆண்டிலே தினகரன் பத்திாிகை நாடக விழா ஒன்றினை அகில இலங்கை ாீதியிலே நடத்தியது. ஈழநாடு பத்திாிகை ஓரங்க நாடகப் போட்டி ஒன்றினை நடத்தி முதன்மை பெற்ற நாடகங்களை விடிய இன்னும் நேரமிருக்கு (1971) என்ற தொகுதியாக வௌியிட்டது. ஈழகேசாி, வீரகேசாி முதலிய பத்திாிகைகளும், அஞ்சலி, கலைச்செல்வி முதலிய சஞ்சிகைகளும் ஓரங்க நாடகங்களை வௌியிட்டன. மல்லிகை நாடக விமர்சனங்களை வௌியிட்டது. இவ்வகையில் பத்திாிகை, வானொலி ஆகிய வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றின.

இவற்றைவிட ஈழத்து நாடகத்துறையில் ஈடுபட்டவர்கள் சிலர் தமது நாடக அனுபவங்களையும், விபரங்களையும் நூலாக வெயிட்டுள்ளனர். கலையரசு சொர்ணலிங்கத்தின் ஈழத்தில் நாடகமும் நானும், ஏ.ாி. பொன்னுத்துரையின் வெள்ளிவிழா மலர் ஆகியன இதற்கு உதாரணங்களாகும். 1917 தொடக்கம் 1973 வரை ஈழத்தில் வௌிவந்த நாடக நூல்களை ஆராய்ந்து முதுகலைமாணிப்பட்டம் பெற்ற சொக்கனின் ஆய்வுக் கட்டுரை விாிவாக எழுதப்பட்டு 1977 இல் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியவளர்ச்சி என்ற பெயாில் வௌிவந்துள்ளது. ஈழத்தமிழ் நாடக நூல் விபரங்களை அறிய விரும்புவோர்க்கு இது சிறந்த வழிகாட்டியாகும்.

நூல் முயற்சிகளை விட ஈழத்தமிழ் நாடக ஆராய்ச்சி, நாடக விமர்சனம், நாடகக் கணக்கெடுப்பு ஆகியனவும் ஓரளவு வளர்ச்சிபெற்று வருகின்றன. பேராசிாியர் கா. சிவத்தம்பி, பேராசிாியர் சு.வித்தியானந்தன், பேராசிாியர் க.கைலாசபதி, சி. மௌனகுரு, கே.எஸ்.சிவகுமாரன், சொக்கன், இ.சிவானந்தன் போன்றோர் இத்துறையிலீடுபட்டு உழைத்து வருகின்றனர்.

இதுவரை நோக்கியதில் இருந்து, ஈழத்தில் மரபுவழி நாடகம் அல்லது நாட்டுக்கூத்து மரபும், பேசி நடிக்கும் நவீன நாடகமும் சமாந்தரமாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதைக் காணலாம். இவ்விரு நாடக நெறிகளும் 1960களின் பிற்பகுதியில் இருந்து சர்வதேச நவீன நாடக அரங்க நெறிகளுக்கு ஏற்ப தம்மை இயைபுபடுத்திக் கொண்டுள்ளன என்பதையும் காணலாம். ஆயினும் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியம் இன்னும் எவ்வளவோ வளர்ச்சியடைய வேண்டி உள்ளது. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை வளர்ச்சி பெற்ற விகிதத்தில் நாடக எழுத்து இங்கு வளர்ச்சி பெறவில்லை. அதனாலேயே சமீப காலத்தில் மொழிபெயர்ப்பு நாடகங்களும், இந்திரா பார்த்தசாரதி, தருமுசிவராமு போன்றவர்களின் அபத்த நாடகங்களும் இங்கு மேடையேற்றப்பட்டன. இது எவ்வாறெனினும் சினிமாவினதும் சபாக்களினதும் இறுக்கமான பிடியில் இருந்து விடுபடத்தவிக்கும் தமிழக நாடக அரங்கைவிட ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு வெகுதூரம் முன்னேறி உள்ளது எனலாம். சிங்கள நாடக அரங்கச் செல்வாக்கு இதற்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ் நாட்டில் மிகச் சமீபத்தில்தான் பாீக்ஷா போன்ற பாிசோதனை நாடகக் குழுக்கள் தோன்றியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

___________

ஒரு திருத்தம் (பக்கம் 91)

'பிள்ளைப் பெத்த ராசா ஒரு நாயை வளர்த்தார்'
நாடகத்தை எழுதித் தயாாித்தவர் பௌசுல் அமீர்.


6. விமர்சனம்

இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம்.

இலக்கியப்படைப்புக்களை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உாிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோள்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத்துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குாிய இலக்கியப் படைப்பை நுணுக்கமாக ஆராய்ந்து, விளக்குவது, அல்லது மதிப்பிடுவதை செயல்முறை விமர்சனத்தின் பாற்படுத்துவர். எனினும் செயல்முறை விமர்சனம் வௌிப்படையாகவோ, மறைமுகமாகவோ விமர்சனக்கொள்கைகளாலேயே நிர்ணயிக்கப்படும் என்பது ஒரு பொதுவான உண்மையாகும். இப்பரந்த பொருளில், இலக்கிய விமர்சனம் 20 ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ஈழத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது. நவீன இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியே இத்தகைய விமர்சன முறையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர், இலக்கியம் பற்றிய சிந்தனை முனைப்பாக இல்லாவிடினும், இலக்கிய, இலக்கண, தத்துவ சாத்திர நூல்களுக்கு உரை எழுதும் மரபு இங்கு இருந்து வந்துள்ளது. உரையின் போது பல்வேறு சான்றுகளைக் காட்டித் தம்மதம் நிறுவும் தர்க்க முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் உரையோ, விளக்கமோ செய்யுள் நூல்களுக்கே எழுதப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரை எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னோடி எனக் கூறுதல் மரபு. சைவ மதம் சாராத இலக்கியங்களையும் அவர் பதிப்பிக்க எண்ணி இருந்தார் எனினும் சைவசித்தாந்த மரபில் வந்த இலக்கியங்களையே அவர் போற்றினார்.

'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டதே முதனூலாகும்,' அதை அடியொற்றியே வழிநூலும் சார்பு நூலும் தோன்றும்; அறம், பொருள், இன்பம், வீடு தருதலே நூற்பயன் என்பன போன்ற இலக்கியம் பற்றிய தீர்க்கமான கருத்துக்களை மரபு மரபாக எற்றுக்கொண்டிருந்த அக்கால உரையாசிாியர்களோ, அறிஞர்களோ முனைவன் கண்ட முதல் நூல்களையோ, அதை ஒட்டிய சார்புநூல், வழி நூல்களையோ உரைத்துப்பார்த்து மதிப்பீடு செய்திருப்பர் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும் தாம் சார்ந்த மத அளவுகோல் கொண்டு இலக்கியத்தினைப் பாகுபடுத்தும் தன்மையினை 20 ஆம் நூற்றாண்டின் முன்னர் காண்கின்றோம்.

அக்கால கட்டத்தில் சைவ சித்தாந்த கலாச்சாரத்தைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலக்கியங்களுள் கந்தபுராணம், பொியபுராணம் என்பவற்றுக்கே முதன்மை கொடுக்கப்பட்டது. சிலப்பதிகாரம் போன்றவை போற்றப்படவில்லை. பாடலுக்கு விளக்கம் தரும் போது தத்தம் கல்வி அறிவுகளுக்கு ஏற்ப பாடலில் உள்ள சொற்களுக்குப் புதுப்புது வியாக்கியானங்களைத் தந்தனர். சில இடங்களில் சொற்களுக்கு வலிந்து பொருள் காணும் முயற்சிகளாகவும் இவை மாறின.

இவ்வியாக்கியான முறையில் இலக்கிய இரசனையே முக்கியமானதாகக் கொள்ளப்பட்டது. இலக்கிய ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதனோடு ஒட்டி எழுந்ததே புராணபடனமாகும். கோயில்களில் மக்கள் முன்னிலையில் புராணங்களுக்கு உரை கூறுவதில் இம் மரபின் தாக்கத்தைக் காணலாம்.

இவ்வண்ணம் தத்துவங்களையும் இலக்கணங்களையும் ஆதாரம் காட்டி கற்பனையும் இரசனையும் கலந்து உரை செய்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ச. பொன்னம்பல பிள்ளையாவர் (1837-1897). இவர் பற்றிப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறுவர்.

"பொன்னம்பலப்பிள்ளை அழகுகள், நவரசங்கள் சொட்டச் சொட்ட பாடல்களுக்கு உரை விாித்தற்கென்றே பிறந்தவர் என்று சொல்லுவார்கள். அவரை மாணவர்களாகிய மதுகரங்கள் எப்போதும் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். உச்சியில் இருந்து உள்ளங்கால் பாியந்தம் பொன்னம்பலப்பிள்ளையினது உருவம் இலக்கிய இரசனையால் ஆனது. புதிது புதிதாகத் தனக்குத் தோன்றுகின்ற இலக்கிய இரசனையை யாருக்காவது வௌிப்படுத்தாமல் இருக்கமாட்டாமை பொன்னம்பலப்பிள்ளையின் நித்திய கலியாண குணங்களில் ஒன்று."

பொன்னம்பலப்பிள்ளை பற்றிப் பண்டிதமணி கூறும் இக்கருத்து ஏனைய உரையாசிாியர்களுக்கும் பொருந்தக்கூடியதே. பொன்னம்பலப்பிள்ளையுடன் கந்தபுராண உரையாசிாியர்களான உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். அண்மைக் காலம் வரை இம்மரபு ஆற்றல் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. தொல்காப்பிய உரையாசிாியர் கணேசையர் (1878-1958), திருவாசக உரையாசிாியர் நவநீதக் கிருஷ்ண பாரதியார் (1889-1954), பதிற்றுப்பத்து உரையாசிாியர் பண்டிதர் சு. அருளம்பலவனார், கந்தபுராண தக்ஷகாண்ட உரையாசிாியர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோர் இம்மரபினரே. இவர்களுள் பண்டிதமணி கணபதிப் பிள்ளையும் அவரது பரம்பரையினரும் தனியாக நோக்கப் படத் தக்கவர்கள். இவர்கள் பழைய உரையாசிாியர்கள் வழி வந்தவர்களாயினும் பல விடயங்களில் இவர்கள் பழையவர்களில் இருந்தும் வேறுபடுகின்றனர்.

முன்னைய உரையாசிாியர்களைப்போல இவர்கள் சித்தாந்தக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த இலக்கியங்களை மாத்திரம் போற்றவில்லை. இலக்கிய இன்பம் தரும் எந்த நூலையும் வரவேற்றனர். பண்டைய தமிழ்ப் புலவர்களை மட்டுமன்றி தமது சமகால ஈழத்துப் புலவர்களின் பாடல்களிலும் இலக்கிய நயம் கண்டனர். பாடல்களில் வரும் சொற்கள், அதன் அமைப்பு முறை, ஓசைநயம் ஆகியவற்றை இலக்கிய ரசனையின் மூலாதாரமாகக் கொண்டனர்.

பண்டிதமணி கணபதிப்பிள்ளை திருநெல்வேலி ஆசிாிய பயிற்சிக்கலாசாலையில் தமிழ் ஆசானாக இருந்தமையினாலும் கலாசாலையை மையமாகக் கொண்டு அவர் காவிய பாடசாலை ஒன்றை நடத்தியமையினாலும் தம்முடைய இலக்கியரசனை முறையினை மாணாக்கர் மத்தியில் அவரால் பரப்ப முடிந்தது. இக்கால கட்டத்தில் கோப்பாய் அரசினர் ஆசிாிய கலாசாலையில் கடமையாற்றிய குருகவி மகாலிங்கசிவமும் இத்தகைய இரசனை முறையினைத் தம் சொற்பொழிவுகளின் மூலம் வளர்த்தார்.

இம்மரபில் வந்தவர்களாக கனக. செந்திநாதன், க.ச. அருள்நந்தி. பொ.கிருஷ்ணபிள்ளை, கா.பொ. இரத்தினம், க.வேந்தனார் ஆகியோரைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் வௌிவந்த பத்திாிகைகளில் இவர்கள் எழுதிய கட்டுரைகளிலே இவர்களின் இலக்கிய நோக்கினைக் காண முடிகிறது. பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, கந்தப்புராண கலாச்சாரம், பாரத நவமணிகள்; பொ.கிருஷ்ண பிள்ளையின் இலக்கியச் சோலை, க.பொ. இரத்தினத்தின் இலக்கியம் கற்பித்தல் ஆகிய நூல்கள் இவர்களின் இலக்கிய ரசனை முறையை வௌிக்காட்டுவனவாய் உள்ளன.

பண்டிதமணி பரம்பரையில் கனக. செந்திநாதன் தனியாகக் குறிப்பிடத்தக்கவர். தனிப் புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வௌியிடும் மரபினை முதல்முதல் ஈழத்து விமர்சன உலகில் தொடக்கி வைத்தவர் இவரே. பண்டிதமணி பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய திறவாத படலை, கவிஞர் மு. செல்லையா பற்றிய கவிதைவானில் ஓர் இளம்பிறை ஆகிய நூல்கள் இதற்கு உதாரணங்களாகும். கனக. செந்திநாதன் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இரசனை மரபில் வளர்ந்தவராய் உள்ள அதேவேளையில், பண்டிதர் பரம்பரையினர் சிலரால் 'இழிசனர் இலக்கியம்' என அழைக்கப்பட்ட நவீன புனைகதைத் துறையினை இலக்கியம் என ஏற்று விமர்சனம் செய்தவராகவும் காணப்படுகின்றார். எனினும் இவரது நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளிலும் இரசனை முறையின் பாதிப்பை ஓரளவு காணக்கூடியதாக உள்ளது.

பண்டிதமணி பரம்பரையினரால் வளர்க்கப்பட்ட இலக்கிய இரசனை முறை, இன்றுவரை பாடசாலைகளிலும் ஆசிாிய பயிற்சிக் கலாசாலைகளிலும் செல்வாக்குச் செலுத்திவருகின்றது. அன்று கல்வி அதிகாாிகளாக இருந்த க.ச. அருள்நந்தி, அ.வி.மயில்வாகனம், சதாசிவ ஐயர் போன்றோர் இவ்விரசனை முறையினை ஏற்று அதற்கு அளித்த ஊக்கமும் இம்மரபில் வந்தோரே ஆசிாிய கலாசாலைகளிலும் பாடசாலைகளிலும் இலக்கியம் பயிற்றுவோராக இருந்தமையும் இவ்விரசனை முறை பாடசாலைகளில் செல்வாக்குப் பெறக் காரணமாயிற்று.

இரசனை அடிப்படையில் அமைந்த இலக்கிய விளக்கமே இவர்களது இலக்கிய விமர்சன முறையாக அமைந்தது. எனினும் ஆரம்பத்தில் காணப்பட்ட சைவ சித்தாந்தம் என்ற சமய எல்லையை மீறி 'இலக்கியம்' என்ற பரந்த தடத்தினில் இலக்கிய ரசனை செல்வதனையும் அது ஈழத்து இலக்கியத்தைப் போற்றும் தன்மை கொண்டதாக அமைவதனையும் இவர்களிடம் காணலாம். இரசனை முறையாளர்கள் மரபுவழிச் செய்யுள்களில் அமைந்த பிரபந்தங்களையும், தனிப்ப்பாடல்களையுமே ஆராய்ந்து சுவை கண்டனர். உரைநடையில் எழுந்த நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை. நாடகம் ஆகியவற்றை இவர்களிற் பெரும்பாலோர் இலக்கியங்களாக ஏற்கவில்லை. இலக்கியம் பற்றி இவர்கள் வைத்திருந்த கொள்கையே இதற்குக் காரணம் எனலாம்.

2

உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்கால கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடுபட்டோரே இவ்விமர்சனத் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனால் பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. தாம் படைத்த இலக்கியங்களின் புதுமையை நியாயப்படுத்தி எழுதவேண்டிய அவசியம் இக்கால எழுத்தாளர்களுக்கு இருந்தது.

இலக்கிய உலகிலே பழைய, வரட்டுத்தனமான பண்டித மனப்பான்மையின் செல்வாக்கை எதிர்த்த, உயிர் உணர்ச்சியுள்ள ஒரு கவிஞனை கதாபாத்திரமாகக் கொண்டு 1940 அளவில் இலங்கையர்கோன் எழுதிய 'நாடோடி' என்னும் கதையில், இலக்கியத்தில் இப்பண்டித மனப்பான்மைக்கு எதிரான கலகக் குரலையும் நவீன இலக்கிய விமர்சனக் கண்ணோட்டத்தின் தொடக்கத்தையும் காணலாம்.

"காளிதாசனுடைய ஒப்புயர்வற்ற தெய்வக் காவியமாகிய இரகு வம்சத்தைச் சுவை நைந்த உயிரற்ற வெறும் சொற் குவியலாகத் தமிழில் மொழிபெயர்த்த அரசகேசாியின் சகாக்களிடம் இருந்து நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்! பழமை பழமையென்று பிதற்றிக் கண்களை மூடிக்கொண்டு தம் அற்பத் திறமையில் இறுமாந்து உட்கார்ந்திருக்கும் இவர்களுக்குப் புதுமையும் முற்போக்கும் எங்கே பிடிக்கப்போகின்றது? திருக்கோவையாரைப் படித்துவிட்டு அதில் வெட்டவௌிச்சமாய் இருக்கும் அழகையும்,ஜீவனையும், ஓசையையும் தேனையும் அமுதத்தையும் சுவைத்து உணர முடியாது அதற்குள் ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்து கிடக்கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப்புலிகள்....."

"இனி வரப்போகும் தமிழின் மறுமலர்ச்சிக்கு வந்தனை செய்கின்றேன்."

இலங்கையர்கோனின் கதையில் வரும் மேற்காட்டிய கூற்றுக்கள் ஈழத்தில் நவீன இலக்கிய சிந்தனையின் தோற்றத்தைக் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. அரசகேசாி காலத்தில் அவர் கதையை அமைத்திருந்தாலும், அது அவரது சமகால இலக்கியப் பிரச்சினையின் வௌிப்பாடேயாகும். இவ்வாறு புதுமைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு 1940களில் இலக்கிய விமர்சனத் துறையில் ஈடுபட்ட எழுத்தாளர்கள் பற்றி பேராசிாியர் க. கைலாசபதி பின்வருமாறு கூறுகின்றார்.

"இவர்கள் பெரும்பாலும் சமகால இலக்கியங்களைப் படித்துச் சுவைத்து அவைபற்றித் தர்க்கித்துச் சொல்லாடி இலக்கியத்தில் ஆத்மார்த்த அனுபவத்தையும், நிறைவையும் தேடியவர்கள். திறனாய்வு அவர்களின் பிரதான அக்கறையாக இல்லாதுவிடினும் தமது தொழிலின் நுட்பங்களைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களிலும் சர்ச்சைகளிலும் இவர்கள் தயங்காது பங்கு பற்றினர்."

மேல்நாட்டு இலக்கியங்களை ஆங்கில மொழி மூலமாகவே அறிந்துகொண்ட இவர்களின் விமர்சன அளவுகோலும் ஆங்கில மொழி வழியாகப் பெறப்பட்டதேயாகும். 'ஈழகேசாி' இவர்களுக்கு வௌியீட்டுத் தளமாயிற்று. சோ.சிவபாதசுந்தரம், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோரும் ஈழகேசாியில் சமகாலப் புனைகதை இலக்கியம் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதினர். அத்தோடு நாடகம், பிறகலைகள் பற்றியும் அவர்களின் விமர்சனம் அமைந்தது. இவ்வகையில் அகிலனின் சிநேகிதி, க.நாராயணனின் லட்சியப்பாதை, சு.வித்தியானந்தனின் தமிழர் சால்பு ஆகிய நூல்கள் பற்றியும் பேராசிாியர் கணபதிப்பிள்ளையின் தவறான எண்ணம் நாடகம் பற்றியும், டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக விழா பற்றியும் இலங்கையர்கோனின் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கன. அகிலனின் 'சிநேகிதி' பற்றி இலங்கையர்கோன் ஈழகேசாியில் எழுதிய ஒரு விமர்சனக் குறிப்பை உதாரணமாகத் தரலாம்.

"......தமிழில் ஒரு துணிகரமான முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஐரோப்பிய நாவல்கள், நாடகங்கள் பலவற்றில் இப்பொருள் பல கோணங்களில் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. விரசமான விசயமாக இருந்தாலும் அதை அலசிப் பார்க்கும் முறை கொஞ்சமும் விரசம் இல்லாமலே கையாளப்பட்டிருக்கிறது...... கள்ளக் காதல் மனித வாழ்க்கைக்குப் புறம்பானதல்ல. ஆனால் நாராயணசாமி என்ற பாத்திரம் புறம்பானவராகவே காணப்படுகிறார். ஒரு கணவன் தான் விரும்பி மணந்துகொண்ட மனைவியை, அவன் எவ்வளவுதான் நாபுஞ்சகனாக இருந்த போதிலும், இன்னொருவனை வீட்டுக்கு அழைத்துத் தன் மனைவியுடன் பழகச் செய்து பிறகு அவளை அவனுடைய கையில் ஒப்படைப்பதென்றால்-அந்தக் கணவனை என்ன என்று சொல்வது?- நாவலின் போக்கும் தமிழ் நடையும் அகிலனுக்குாிய சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது."

இவை எல்லாம் செயல்முறை விமர்சனத்தின் பாற்படும் கட்டுரைகளேயாகும். இதே காலப்பகுதியில் இலக்கிய விமர்சனக் கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. இலக்கியத்தின் உருவம் உள்ளடக்கம், அதன் சமூகச் சார்பு முதலியவைபற்றி கொள்கைாீதியாக இக்கட்டுரைகள் அமைந்தன. இலங்கையர்கோன், அ.ந. கந்தசாமி, கே.கணேஷ், பேராசிாியர் கணபதிப்பிள்ளை, போன்றோர் இக்காலப் பிாிவில் இத்தகைய கட்டுரைகள் பலவற்றை எழுதினர். இலக்கியத்தின் நோக்கம், சமூகப்பணி ஆகியவை பற்றி அ.செ.முருகானந்தம் 1942-ல் வௌிவந்த ஈழகேசாியில் பின்வருமாறு எழுதினார்.

"தமிழின் கதை இலக்கியத்தின் காணப்படும் முக்கிய குறைபாடு இதுதான். அதாவது லக்ஷியக்கதைகள், சீர்திருத்தக்கதைகள் மிகவும் குறைவு. அத்தியாவசியமாக வேண்டப்படுவதும் அதுதான். பொழுதுபோக்குக்கதைகள் போதுமென்றபடி ஏராளமாகச் சேர்ந்துவிட்டன. இனி அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தமிழ் நாட்டை அப்படியே தூக்கி காட்டும், தேசத்தின் வறுமை, துன்பம். அரசியல் நிலைமை முதலியவற்றை உணர்ச்சி ஊட்டக் கூடிய கூடிய முறையில் சித்திாிக்கும் லக்ஷியக் கதைகள் பெருகவேண்டும், எழுத்தாளர் என்று பேனா தூக்கியவர்கள் இனி இத்துறையில் முயற்சிப்பார்களா?"

தேசத்தின் வறுமை, துன்பம், அரசியல் நிலைமை என்பனவே எமது இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற அ.செ. மு.வின் கூற்று புனைகதையின் உள்ளடக்கத்தை வலியுறுத்தியது. நமது தேசத்தின் அபிலாஷைகளை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும் என்ற தேசிய இலக்கிய நோக்கு விமர்சகர்களிடம் ஏற்படத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் மறுமலர்ச்சிப் பத்திாிகையில் இது சம்பந்தமான கட்டுரைகள் வௌிவந்தன. இப்பத்திாிகையில் இலங்கையர் கோன் எழுதிய 'தமிழின் மறுமலர்ச்சி' என்ற கட்டுரை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் கே. கணேஷ் நடத்திய 'பாரதி' இதழிலும் இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்திக் கட்டுரைகள் வௌியாயின.

3

இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து 60 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, ஈழத்தின் இலக்கிய மேடைகளிலும், பத்திாிகை சஞ்சிகை போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் நடைபெற்றன. ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியத்துக்கும் அமொிக்க இலக்கியத்துக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை உதாரணமாகக் கொண்டு தமிழக இலக்கியத்துக்கும் ஈழத்து இலக்கியத்துக்கும் இடையே அழுத்திக் கூறினர். தேசிய இலக்கியம் பற்றி எழுதிய அ.ந.கந்தசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.

"ஒரு மொழிக்கு ஒரு இலக்கியம் என்பது மொழிகள் கடந்து பரவி நிலைபெற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடந்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று நாம் வெறுமனே ஆங்கில இலக்கியம் என்று கூறினால் அது அமொிக்க இலக்கியத்தையோ ஆஸ்திரேலிய இலக்கியத்தையோ கனேடிய இலக்கியத்தையோ குறிக்காது.

தேசிய இலக்கியம் என்ற நமது இயக்கம் சர்வதேசியத்துக்கு முரண்பட்ட ஒன்றல்ல. உயிருள்ள இலக்கியத்துக்கு தேசிய சமுதாயப் பின்னணி அவசியம். இவ்விதப் பின்னணியில் உருவாகும் தேசிய இலக்கியமே காலத்தையும் கடலையும் தாண்டி சர்வ தேசங்களையும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும்."

இக்காலப் பகுதியிலே நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியத்துறையில் ஈழத்து வாழ்க்கை யதார்த்த பூர்வமான வடிவம் பெற்றது என்பதை முன் அத்தியாயங்களில் பார்த்தோம். அதைப் பலப்படுத்துகின்ற பிரக்ஞை பூர்வமான இலக்கிய சித்தாந்த வௌிப்பாடாகவே இத்தேசிய இலக்கியக் கோட்பாடு அமைந்தது.

தேசிய இலக்கியம் என்பது எவ்வித வேறுபாடும் காட்டாது முழு மொத்தமான தேசியப் பண்பாட்டையும் உள்ளடக்கும் ஓர் இலக்கியக் கோட்பாடாகும். ஆனால் அதற்குள்ளே வர்க்க முரண்பாடுகள் உள்ளன. வர்க்க முரண்பாடுகளுக்கு இலக்கியத்தில் முதன்மை கொடுக்கும்போது, தேசிய இலக்கியத்தின் அடியாக பிறிதொரு இலக்கியக் கோட்பாடு உதயமாகிறது. அதுவே முற்போக்கு வாதமாகும். பரந்துபட்ட வெகுஜனங்களின் நலனையும், அவர்களின் பிரச்சினைகளையும், அவர்களது விமோசனத்துக்கான வேட்கையையும் இலக்கியத்திற் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையே முற்போக்கு வாதத்தின் சாராம்சமாகும். காலத்துக்குக் காலம் முற்போக்கு என்ற சொல்லுக்கு உாிய பொருள் வேறுபடலாம். நமது காலத்திலே முதலாளித்துவ சமூக முறையில் இருந்து, சோசலிச சமூக முறைக்கு மாறிச் செல்லும் போக்கினையே இது குறிக்கும். ஆகவே முற்போக்கு வாதம் தவிர்க்க முடியாமல் மார்க்ஸீய சித்தாந்தத்துடன் பிணைந்துள்ளது. அவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைவிட முற்போக்கு இலக்கியக் கோட்பாடு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட அரசியல் சார்பு உடையதாகின்றது.

ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைப் பிரசாரப் படுத்துவதில் முன்னணியில் நின்ற விமர்சகர்களே 1950, 60 களில் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்கு வாதத்தை, அல்லது மார்க்ஸீய அணுகுமுறையைப் பிரயோகித்தனர். க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் இதில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவர்கள். அ.ந. கந்தசாமி, கே.கணேஷ் இளங்கீரன், ஏ.ஜே. கனகரத்தினா, பிரேம்ஜி. சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முகையதீன் முதலியோரும் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினர்.

முற்போக்கு விமர்சகர்கள் இயல்பாகவே இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கத்தில் அதிக அக்கறை காட்டினர். இலக்கியத்தை ஒரு கலை வடிவமாக மட்டுமின்றி அதை ஒரு சமூக சாதனமாகவும் இவர்கள் கண்டனர். ஒரு படைப்பு வௌிப்படுத்தும் தொனிப் பொருளைத் தங்கள் கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது மட்டுமின்றி, இலக்கியத்தின் நோக்கம், பணி, பயன்பாடு ஆகியவற்றை வரையறுத்துக் கூறுவது மட்டுமன்றி, பரந்த அர்த்தத்தில் இலக்கிய வடிவங்களின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை இயக்கும் சமுதாயக் காரணிகளை மார்க்ஸீய அடிப்படையில் விளக்குவதும் இவர்களின் நோக்கமாய் இருந்தது, 60-ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலேயே முற்போக்கு விமர்சனம் இதைச் சாதிக்கக் கூடிய முதிர்ச்சி பெற்றது. இதனால் 60க்குப் பிறகு இலக்கிய ஆய்வு, இலக்கியப் புலமை, இலக்கிய வரலாற்றுணர்வு ஆகியன ஈழத்தில் வளர்ச்சியுற்றன. கலாநிதி க. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், அடியும் முடியும், ஒப்பியல் இலக்கியம், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ஆகிய நூல்களும், கலாநிதி கா.சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், நாவலும் வாழ்க்கையும். ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆகிய நூல்களும் முல்லைசான்ற கற்பு, திணைக்கோட்பாட்டின் சமுதாய அடிப்படை முதலிய அவரது கட்டுரைகளும் இவ்வகையில் முக்கியமான ஆக்கங்களாகும். இவற்றிலே இலக்கிய ஆய்வுக்கு சமுதாய வரலாற்றை ஆராரமாகக் கொள்ளும் போக்கினையும் சமுதாய பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு இலக்கியத்தைச் சான்றாக கொள்ளும் போக்கினையும் சமுதாய பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு இலக்கியத்தைச் சான்றாக கொள்ளும் போக்கினையும் நாம் அவதானிக்கலாம்.

முற்போக்கு விமர்சகர்கள் பொதுவாகவே உள்ளடக்க ஆய்வுக்கே முதன்மை கொடுத்ததால், தனிப்பட்ட படைப்புக்களையும் படைப்பாளிகளையும் மதிப்பிடுவதில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சிலவேளை வௌிப்படையாக அரசியல் கோசங்களையும் கருத்துக்களையும் வௌிப்படுத்தும் படைப்புக்களும் படைப்பாளிகளும் விதந்துரைக்கப்பட்டும், உயர்ந்த சில கலைஞர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டும் உள்ளனர். இக்குறைபாடு 70 களில் முற்போக்கு விமர்சகர்களாலேயே பரவலாக உணரப்பட்டது.

உருவ உள்ளடக்கப் பிரச்சினை இலக்கிய விமர்சனத்தில் ஒரு சிக்கலான பிரச்சினையாகவே இருந்துவருகின்றது. இது பற்றிக் கொள்கையளவில் சாியான கருத்துக்கள் முன்வைக்கப் படினும், மதிப்பீட்டின் அகநிலைத்தன்மை காரணமாக செயல்முறையில் தவறுகள் ஏற்பட அதிய வாய்ப்புண்டு. எவ்வாறெனினும் 70 களில் இலக்கியத்தில் உருவ உள்ளடக்க இயைபினையும் இலக்கியத்தின் கலைப் பெறுமானத்தையும் அழுத்தும் விமர்சனக் குரல்கள் முற்போக்கு விமர்சன உலகில் ஒலிக்கத் தொடங்கின. எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.ஜே. கனகரத்தினா முதலியோர் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். ஏ.ஜே. கனகரத்தினா மாக்ஸீய அழகியல் பற்றிய சில கட்டுரைகளை பாடும்மீன், அலை, மல்லிகை முதலிய இதழ்களில் எழுதினார். சண்முகம் சிவலிங்கம், நுஃமான் ஆகியோாின் கருத்துக்கள் கவிஞன் இதழ்களிலும் ஏனைய சஞ்சிகைளிலும் வௌிவந்தன. சண்முகம் சிவலிங்கம் இது பற்றி எழுதுகையில்,

"......எங்களுடைய இலக்கியம் எங்கள் வாழ் நிலையை எங்களின் அனுபவம் ஆக்கித்தர வேண்டும். எங்களின் உண்மையான வாழ்நிலை பிரதிபலிக்கப் பட்டால் அந்தப் படைப்பு நிச்சயமாக இயக்க இயல் ாீதியான சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்த உண்மையை முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சில விமர்சகர்கள் புாிந்து கொண்டதாகத் தொியவில்லை. அவர்கள் முற்போக்கு இலக்கியம் பற்றிய சில வாய்ப்பாட்டு உருக்களைச் செபித்துக் கொண்டு எமது உழைப்பாளர் வர்க்கத்தின் கலைவளத்தை வறளச் செய்து விடுவார்களோ என்ற அச்சம் எம்மிற் பலருக்கு உண்டு" என்று குறிப்பிட்டார்.

பிரசாரப் பாங்கான கருத்து நிலையில் இருந்து அனுபவ நிலைக்கு முற்போக்கு இலக்கியம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே இவர்களின் பொதுக் கோட்பாடாக அமைந்தது.

4

தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லோராலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம்.

நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர் எஸ். பொன்னுத்துரையாவர். 1950 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நின்று 'மக்கள் இலக்கிய'த்தை ஆதாித்துப் புதுமை இலக்கியம் இதழில் கட்டுரை எழுதிய எஸ்.பொ. 60 களில் முற்போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகர்களுள் ஒருவராக மாறினார். முற்போக்கு என்ற சொல்லுக்கு எதிராக நற்போக்கு என்பதைப் பயன்படுத்தியரைத் தவிர திட்டமான கருத்துக்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை. ஆகவே ஈழத்தில் இவரால் மட்டுமே முன்வைக்கப்பட்ட ஒரு இலக்கியக் கோசமாக அது மறைந்தது. சிறந்த படைப்பாளியான எஸ்.பொ. சில நல்ல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியவர். எனினும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை விடக் கண்டனங்களிலேயே இவர் அதிக சக்தியைச் செலவிட்டுள்ளர். பந்தநூல் மூலமும் உரையும் என்ற இவரது நூல் இவரது விமர்சன ஆளுமை விரயமாக்கப்பட்டதற்குச் சிறந்த உதாரணமாகும்.

மு. தளையசிங்கம் பிரபஞ்ச யதார்த்த வாதம் என்ற கொள்கையை முன்வைத்தார். முற்போக்கு இலக்கியத்துக்கு எதிராக காத்திரமான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தவர் இவரே. முற்போக்கு இலக்கியத்தின் சித்தாந்த தளமான மார்க்ஸீய தத்துவத்தையே இவர் விமர்சனத்துக்கு உட்படுத்தினார். இந்தியாவில் மார்க்ஸீயம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆத்திரமுற்று அவஸ்தைப்படும் வெங்கட் சாமி நாதன் போல் அன்றி, மு. தளையசிங்கம் மார்க்ஸீயத்தை ஒரு தத்துவார்த்த சமயவழி நின்று விமர்சித்தார். மார்க்ஸீயத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே இவரது கருத்தாகும்.

"மார்க்ஸீயத்தை மறுக்கும் தௌிவற்ற கலைஞர்களும் சிந்தனையாளர்களும் முதலில் அதை உணர்ந்து ஒப்புக் கொண்டால்தான் அவர்களின் மறுப்பு வெறும் மறுப்பாகவே நின்றுவிடாமல் இன்று சாித்திரம் காட்டிநிற்கும் புதிய தருணத்தை இனம் கண்டு பயன்படுத்தி மார்க்ஸீயத்தையும் மீறி வளரும் வெற்றியாக மாறுவதற்கு வழிபிறக்கும். அதாவது அந்த உண்மையை ஒப்புக் கொண்டால்தான் அந்த உண்மையின் அடுத்த பக்கத்தையும் உணரலாம்" என்று தளையசிங்கம் எழுதியுள்ளார். மேலைத்தேய மார்க்ஸீய எதிர்ப்புச் சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் அரவிந்தர் போன்றவர்கள் பிரதிபலித்த இந்திய ஆன்மிக வாதத்தையும் ஒன்றிணைத்ததே இவரது கொள்கையாகும். அவர் தமது இலக்கியக் கோட்பாடு பற்றி எழுதுகையில் 'இனி வரவேண்டிய கோட்பாட்டை 'பிரஞ்ச யதார்த்தம்' என்று கூறலாம்; விஞ்ஞானமும் ஆன்மிக ஞானமும், வாழ்க்கை ஆகியவற்றுக் கிடையே பேதம் இருக்காது. வாழ்க்கையே கலையாகும். கலையை அழிக்கும் கலை இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம் இவையே இனித் தோன்றப் போகின்றன. அதுவே மெய்யுள் என்பது இவரது கலை இலக்கியம் பற்றிய கருத்துக்களின் சாரமாகும், அந்தவகையில் இவர் தர்க்க முரண் நிறைந்த ஆன்மிகக் கற்பனாவாதியேயாவார். மு.பொன்னம்பலம், என்.கே. மகாலிங்கம், இமையவன் முதலியோர் இவரது கருத்துக்களின் செல்வாக்கு உட்பட்டவர்களாவர், தளையசிங்கத்தின் போர்ப்பறை, மெய்யுள் ஆகியவை ஈழத்தின் ஒரு குறிப்பிட்ட இலக்கியச் சிந்தனையை வௌிக்காட்டும் மிக முக்கியமான நூல்களாகும். இவரது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - அவசரக் குறிப்புக்கள் என்ற கட்டுரைத் தொடரும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாம் நோக்கியதில் இருந்து 1960 ஆம் ஆண்டுகளில் இலக்கிய விமர்சனக் கொள்கைகள் ஈழத்தில் சித்தாந்த ாீதியில் வளர்ச்சியுற்றன என்பதைக் காணலாம். முற்போக்கு இலக்கியம், தேசிய இலக்கியம் என்ற கோட்பாடுகள் காத்திரமாக வளர்ச்சியுற்றதால் அரசியல் ாீதியில் அதை எதிர்த்தவர்களும் சாியாகவோ, பிழையாகவோ தவிர்க்க முடியாமல் புதிய கோட்பாடுகளையே முன்வைக்க வேண்டி இருந்தது. அதன் விளைவே நற்போக்கு வாதம், பிரபஞ்ச யதார்த்தம் வாதம் என்பனவாகும்.

5

இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகையனும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின் இலக்கியமும் தினாய்வும் என்னும் நூலும் இப்பிாிவில் அடங்கக்கூடியதே. புனைகதை வடிவம் பற்றிய சிவத்தம்பியின் புனைகதையும் கதைப்பின்னலும் என்னும் கட்டுரையும் கவிதை நாடகம் பற்றி எம்.ஏ. நுஃமான், மு. பொன்னம்பலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும், புதுக் கவிதையின் அமைப்பு பற்றி சிறிபதி, சபா ஜெயராசா ஆகியோர் எழுதிய சில கட்டுரைகளும் இலக்கிய வடிவங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும்

இலக்கிய விமர்சனம், இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு ஆகியவை தனித்தனித் துறைகள் எனினும் அவை முற்றிலும் வேறுபட்டவை அல்ல. ஒன்றை ஒன்று சார்ந்தும் உள்ளடக்கியும் செல்வன. அவ்வகையில் விமர்சன பூர்வமான இலக்கிய வரலாற்று நூல்கள் சிலவும் இங்கு தோன்றின. இவ்வகையில் பேராசிாியர் வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு பலருக்கு ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் அமைந்தது. கலாநிதி ஆ. வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தின் காலமும் இலக்கியத்தின் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள், கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி, சொக்கனின் ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சி, சுப்பிரமணிய ஐயாின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் முதலிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

தனிப்பட்ட படைப்புக்கள் படைப்பாளிகள் பற்றி விமர்சன பூர்வமான மதிப்பீடுகள் இங்கு பெருமளவு செய்யப்படவில்லை எனினும் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைலாசபதியின் இரு மகாகவிகள், சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தில்லைநாதனின் வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை, செம்பியன் செல்வனின் ஈழத்துத் தமிழ் சிறுகதை மணிகள் ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவற்றுள் செம்பியன் செல்வனின் நூலே முற்றிலும் ஈழத்துப் படைப்பாளிகள் பற்றியது. இவ்வகையில் மஹாகவி பற்றி சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ. நுஃமான் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத் தக்கன. தனிப்படைப்பு என்ற வகையில் மஹாகவியின் சாதாரண மனிதனது சாித்திரம் பற்றி சண்முகம் சிவலிங்கம் எழுதிய விாிவான விமர்சனம் ஈழத்து விமர்சன முயற்சிகளுள் மிக முக்கியமான கவனத்துக்குாிய ஒன்றாகும். இவைதவிர ஈழத்தில், இலக்கிய விமர்சனத்துறையில் ஆ. சிவநேசச்செல்வன், கலா பரமேஸ்வரன், சித்திரலேகா, மனோன்மணி சண்முகதாஸ், மு. நித்தியானந்தன், செ. யோகராசா, துரை மனோகரன், க.சண்முகலிங்கம், எஸ்.எம்.ஜே. பைஸ்தீன், கே.எஸ். சிவகுமாரன், எம்.எச்.எம். சம்ஸ், சி. மௌனகுரு முதலியோரும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் செய்துள்ளனர்.

சமீப காலமாக ஈழத்து இலக்கிய விமர்சன முயற்சிகளில் மொழியில் அறிவின் செல்வாக்கையும் காண முடிகின்றது, இலக்கியம் மொழியினால் ஆகும் ஒரு கலை என்ற வகையில் மொழியில் அறிவு இலக்கிய விமர்சனத்தில் நன்கு பயன்பட முடியும். மேலைத் தேயங்களில் இத்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் வௌிவந்த முத்துச்சண்முகனின் இலக்கியக் கோட்பாடு என்ற நூலில் மொழியில் அறிவு நன்கு பயன்பட்டுள்ளதைக் காணலாம். ஈழத்தில் கலாநிதி சண்முகதாஸ், எம்.ஏ.நுஃமான் ஆகியோர் இத்துறையில் சிறு முயற்சிகள் செய்துள்ளனர். சண்முகதாஸின் ஆக்க இலக்கியமும் மொழியியலும், கவிஞரும் மொழியும், எம்.ஏ. நுஃமானின் ஆக்க இலக்கியமும் நடையியலும், ஈழத்து நாவல்களின் மொழி முதலிய கட்டுரைகள் இத்துறையில் ஆரம்ப முயற்சிகளாகக் கருதத்தக்கன.


பின்னிணைப்பு

ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு உதவும் நூல்களும் சிறப்பிதழ்களும்

1. நூல்கள்
2. சிறப்பிதழ்கள்

** இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் ** முற்றும்.


This page was first put up on July 17, 2001
Please send your comments and corrections to the Webmaster(s) of this site