Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972)
pATalkaL- part I I (98 -180)
in Tamil Script, unicode/utf-8 format

நாமக்கல் கவிஞர்
இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - இரண்டாம் பாகம்




Etext Preparation : Ms. Vijayalakshmi Alagarsamy, California, USA
Proof-reading: Prof. Swaminathan Sankaran, Regina, Canada
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

© Project Madurai 1999-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) pATalkaL- part II
(in Tamil Script, unicode format)

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - இரண்டாம் பாகம்


5. சமுதாய மலர்

98. புதிய சமுதாயம்

பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ;
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் ;
கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும் ;
குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும் ;
வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்
வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்
நாட்டோடு சேராத தனிபோக உரிமை
நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.

உடலத்தின் வடிவத்தில் பேதங்கள் உண்டு ;
உள்ளத்தின் எண்ணத்தில் வித்யாசம் உண்டு ;
சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்
சகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ!
கடலொத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும்
கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும்
மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால்
மனிதர்க்கிங் கறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ?

பசைமிக்க தொழில்செய்து பலன்முற்றும் யாரோ
பரிவற்ற முதலாளி பறிகொண்டு போக
பசிமிக்கு மிகநொந்த தொழிலாளர் எல்லாம்
பகையென்று நமையெண்ணிப் பழிகொள்ளு முன்னால்
வசைமிக்க நிலைமாற வழியன்று சூழ்வோம்
வறுமைக்கே இடமற்ற சமுதாய வாழ்வை
இசைமிக்க முறைகண்டு ஏற்பாடு செய்வோம்
எல்லாரும் குறைவற்ற நலமெய்தி உய்வோம்.

99. பூமிதான யாத்திரை

பூமி தானம் செய்வதே
புண்ணி யத்திற் புண்ணியம்,
புனித மான முறையில் நாட்டின்
வறுமை போகப் பண்ணிடும் ;
சாமி சாட்சி யாக எங்கும்
சண்டை கள்கு றைந்திடும் ;
சரிநி கர்ச மான வாழ்வு
சத்தி யம்நி றைந்திடும்.

ஏழை யென்றும் செல்வ னென்றும்
ஏற்றத் தாழ்வு போய்விடும் ;
எங்கும் யாரும் பகைமை யின்றிப்
பங்கு கொள்வ தாய்விடும் ;
கோழை யின்பொ றாமை தூண்டும்
குற்றம் யாவும் நீங்கிடும் ;
கொடுமை யான பஞ்சம் விட்டுக்
குணந லங்கள் ஓங்கிடும்.

உடலு ழைத்தே உணவு முற்றும்
உண்டு பண்ணும் உழவர்கள்
உரிமை சொல்ல நிலமி லாமல்
உள்ளம் வெந்திங் கழுவதா?
உடல் சுகித்திங் குலகி னுக்கே
உதவி யற்ற ஒருசிலர்
ஊரி லுள்ள பூமி முற்றும்
உரிமை கொண்டு திரிவதா?

உலகி லுள்ள நிலம னைத்தும்
உலக நாதன் உடைமையே ;
ஊரி லுள்ள விளைநி லங்கள்
ஊர்ப்பொ துவாம் கடமையே.
கலக மின்றிச் சட்ட திட்டக்
கட்டுப் பாடும் இன்றியே
கவலை யற்ற சமர சத்தின்
காட்சி காண நன்றிதே.

காந்தி தர்ம நெறியைக் காக்கக்
கடவு ளிட்ட கட்டளை
கருணை யோடு பூமி தானம்
செய்யக் கோரும் திட்டமே ;
ஆய்ந்து பார்க்கின் உலகி லெங்கும்
அமைதி யற்ற காரணம்
அவர வர்க்கு நிலமி லாத
ஆத்தி ரத்தின் பேரில்தான்.

தான தர்ம ஆசை யேநம்
தமிழ கத்தின் கல்வியாம் ;
தந்து வக்கும் இன்ப மேநம்
தலைசி றந்த செல்வமாம் ;
தீன ருக்குப் பூமி கொஞ்சம்
தான மாகத் தருவதால்
தேச மெங்கும் அமைதி பெற்றுத்
திருவி லாசம் பெருகுமே.

கும்பி வேகும் பசிமி குந்த
கோப தாபம் என்னவே
கொடுமை சேர்பு ரட்சி வந்து
கொள்ளை போகு முன்னமே
அன்பி னோடு பூமி தானம்
ஆன மட்டும் செய்வதே
அச்ச மின்றி நாட்டி லெங்கும்
அமைதி பெற்றே உய்வதாம்.

விளைவு முற்றும் சொந்த மாகும்
விளைநி லங்கள் தந்திடில்
வேலை யற்ற கோடி மக்கள்
விளைச்சல் செய்ய முந்துவார்.
களைவி ழுந்து தரிசு பட்ட
கோடி கோடி காணிகள்
களிசி றக்கச் செழுமை பெற்றுக்
கதிர்கள் முற்றும் காணலாம்.

காந்தி சொன்ன ராம ராஜ்யம்
காண வல்ல தலைவனாய்க்
கர்ம, பக்தி, ஞான யோகம்
கருதும் புத்தி நிலையனாய்ச்
சாந்த சத்தி யாக்ர கத்தின்
சாட்சி யாம்நம் வினோபா
சாற்று கின்ற பூமி தானம்
சோற்றுப் பஞ்சம் மாற்றுமே.

விரத மாகக் காந்தி யண்ணல்
விட்டுப் போன வேலையை
விட்டி டாமல் கட்டிக் காக்கும்
வீறு கொண்ட சீலனால்
பரத நாட்டின் தர்ம சக்தி
பாரி லெங்கும் சூழவே
பகையி லாமல் யுத்த மென்ற
பயமி லாமல் வாழலாம்.

தெய்வ ஜோதி காந்தி யண்ணல்
தேர்ந்தெ டுத்த சீடனாம்
திருவி னோபா பாவே நமது
தேச நன்மை நாடினார்
வைய மெங்கும் பெருமை பெற்ற
வண்மை மிக்க தமிழகம்
வந்து பூமி தானம் வாங்க
வரவு சொல்லி வாழ்த்துவோம்.

கருணை வாழ்வின் அருண னான
காந்தி சீடர் வருகிறார்
கால் நடந்தே ஊர்கள் தோறும்
கைகு விக்கப் பெறுகிறார்
தருண மீது தமிழ கத்தின்
தனிமை யாகும் வண்மையைத்
தாங்கிப் பூமி தான மீந்து
தர்ம வேள்வி பண்ணுவோம்.

வாழ்க வாழ்க காந்தி நாமம்
என்றும் நினறு வாழ்கவே!
வந்து தித்த நம்வி னோபா
வாய்மை யாளன் வாழ்கவே!
வாழ்க பூமி தானம் செய்யும்
வண்மை போற்றும் யாவரும்
வாழ்க சாந்த சத்தியத்தில்
வந்த நம்சு தந்தரம்.

100. தீண்டாமை ஒழிக!

தீண்டாமை என்கிற தீய வழக்கம்
தீரத் தொலைந்திட நல்லநா ளாச்சு!
ஆண்டவன் பொதுவென்று நம்பின யாரும்
அந்தப் பழியை அகற்றிட வாரும்.

இந்த வழக்கம் நாளுக்கு நாளாய்
இந்து மதத்தினை வெட்டுது வாளாய் ;
நிந்தை மிகுந்து அழிந்திடு முன்னே
நீங்கிட யாரும் எழுந்திடும் இன்னே!

வேதத்தி லில்லை கீதையில் இல்லை
வேறுள சாத்திரம் யாருக்கினி?
சாதித்து யாரையும் சண்டாள னென்றிடும்
சாத்திரம் சத்தியச் சம்மதமோ?

நால்வ ருரைத்ததே வாரத்தி லில்லை
நந்தன் குலத்துக்கு நிந்தைசொலல் ;
பால்வரும் ஆழ்வார் பாசுரத் தில்லை
பாணர் வளர்ந்ததைக் கோணலெனல்,

சங்கரர் காசியில் அங்கென்ன சொன்னார்?
சண்டாள பக்தனும் தம்குரு வென்றார் ;
எங்கள்ரா மானுஜர் தம்கல மென்றே
யாரையும் கொண்டுடன் கோயிலுட் சென்றார்.

காட்டொரு வேடனைத் தம்பியென் றெய்திக்
கழுகினைத் தந்தையெ னக்கடன் செய்து
சேட்டைக் குரங்கையும் தன்னுடன் சேர்த்துச்
சீதாபி ராமனும் செய்ததைப் பார்த்தோம்.

கண்ணப்ப னெச்சிலை முக்கண்ண னுண்டார் ;
கண்ணபி ரான்கடை நீரையுங் கொண்டார் ;
எண்ணிய பக்தருக் கெளியது தெய்வம்
என்பது வேநல்ல இந்துவின் தர்மம்.

101. ஓட்டடா!

ஓட்டடா! ஓட்டடா!
நாட்டைவிட்டே ஓட்டடா!
தீட்டடா மனிதருக்குள்
தீண்டலென்ற தீமையே.

தொத்து நோய்கள் மெத்தவும்
தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல்
தர்ம மென்று சொல்லுவார்.
சுத்த மேனும் ஜாதியால்
தொடப்ப படாதிங் கென்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும்
கொடிய ரென்று சொல்வதோ?

நாய்கு ரங்கு பூனையை
நத்தி முத்த மிடுகிறோம் ;
நரக லுண்ணும் பன்றியும்
நம்மைத் தீண்ட ஒப்புவோம் ;
ஆயும் நல்ல அறிவுடை
ஆன்ம ஞான மனிதனை
அருகி லேவ ரப்பொறாமை
அறிவி லேபொ ருந்துமோ?

செடிம ரங்கள் கொடிகளும்
ஜீவ ரென்ற உண்மையை
ஜெகம றிந்து கொள்ளமுன்பு
செய்த திந்த நாடடா!
முடிவ றிந்த உண்மைஞானம்
முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த
முறையி லாவ ழக்கமேன்?

உயிரி ருக்கும் புழுவையும்
ஈச னுக்காம் உறையுளாய்
உணரு கின்ற உண்மைஞானம்
உலகி னுக்கு ரைத்தநாம்
உயருகின்ற ஜீவருக்குள்
நம்மொ டொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற
தொத்துக் கொள்ள லாகுமோ?

அமல னாகி அங்குமிங்கும்
எங்கு மான கடவுளை
ஆல யத்துள் தெய்வமென்றே
அங்கி ருந்தே எண்ணுவோம் ;
விமல னான கடவுள்சக்தி
மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவன் யாவும்அந்த
விமல னென்ப தெப்படி?

ஞாய மல்ல ஞாயமல்ல
ஞாய மல்ல கொஞ்சமும்
நாடு கின்ற பேர்களை
நாமி டைத்த டுப்பது ;
பாயு மந்த ஆற்றிலே
பருகி வெப்பம் ஆறிடும்
பறவை யோடு மிருகமிந்தப்
பாரி லார்த டுக்கிறார்?

102. விட்டது சனியன்

விட்டது சனியன் விட்டது சனியன்
விட்டது நம்மை விட்டதடா!
கொட்டுக முரசு கொம்பெடுத் தூது
கொடும்பாவி கள்ளைக் கொளுத்திவிட்டோம்!

செத்தது கள்பேய் இத்தினம் ; இதையினி
தீபா வளிபோல் கொண்டாடு ;
பத்திரம் கள்மேல் சித்தம்வா ராவிதம்
பார்ப்பதும் காப்பதும் உன்பாரம்!

ஈஸ்வர வருஷம் புரட்டா சியிலே
இங்கிலீஷ் ஒன்றுபத்து முப்பத்தேழில்
சாஸ்வதம் போலவே நமைப்பிடித் தாட்டிய
சனியன் கள்கடை சாத்திவிட்டார்!

கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும்
கூசிட ஏசிடப் பேசுவதும்
சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்
சந்தி சிரிப்பதும் இனியில்லை!

அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
ஐயோ! பசியுடன் காத்திருக்க,
பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
போதையில் இழப்பதும் இனியில்லை!

பெற்றதன் குழந்தைகள் சுற்றி நடுங்கிப்
பேயெனும் உருவொடு வாய்குளற
உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி!

விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
கூண்டோ டொழிந்தன இனிமேலே!

எல்லா விதத்திலும் கள்ளால் வரும்பணம்
ஏளனத் துக்கே இடமாகும் ;
நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
நம்மர சடைந்திட்ட பழிநீங்கும்.

போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?
பேதைக ளாக்கிப்பின் பிழைபுரிந் தாயெனல்
பேச்சுக் காகிலும் ஏச்சன்றோ?

காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது ;
காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே ;
போந்தது புதுயுகம் ; தீர்ந்தது கலிபலம் ;
பூமிக் கேஒரு புதுமையிது!

சக்கர வர்த்திநம் ராஜா ஜீக்கொரு
சன்மா னம்நாம் தந்திடுவோம் ;
அக்கறை யோடவர் ஆணைப் படிகள்ளில்
ஆசை புகாவிதம் காத்திடுவோம்.

பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா!
வாழும் நாடினி ; ஏழைக ளில்லை ;
வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்!

103. எது வேண்டும்?

எதுஉனக்கு வேண்டு மென்று
எண்ணிப் பார்த்துச் சொல்லடா!
மதிமி குந்த மனிதஜன்ம
மகிமை காத்து நில்லடா!

ஞான முள்ள நாடிதென்று
பேர்நி லைத்தல் வேண்டுமா?
சேனை கொண்டு சென்றுகொன்று
சீர்கு லைத்தல் வேண்டுமா?

தந்தி ரத்தை வெல்லும்தூய்மை
தாங்கி நிற்க வேண்டுமா?
எந்தி ரத்தின் அடிமையாகி
ஏங்கி நிற்க வேண்டுமா?

அறிவு கொண்டு மக்களுக்கே
அன்பு செய்தல் வேண்டுமோ?
செறிவு கொண்ட சக்திபெற்றுச்
சேதம் செய்தல் வேண்டுமா?

வெள்ளை யாகத் தீமையை
எதிர்த்து வெல்ல வேண்டுமா?
கள்ளமாய் மறைந்து செய்யும்
காரி யங்கள் வேண்டுமா?

அன்பு சொல்லித் தீமையை
அடக்கி யாள வேண்டுமா?
வன்பு பேசித் தீமையை
வளர்த்து வைக்க வேண்டுமா?

சத்தி யத்தின் பற்றுக்கொண்ட
சாந்த வாழ்வு வேண்டுமா?
மற்ற செய்து மனிதமேன்மை
மாய்ந்து போக வேண்டுமா?

தீர மாகப் பொறுமைகாட்டும்
திறம டுக்க வேண்டுமா?
வீர மென்று கோபமூட்டும்
வெறிபி டிக்க வேண்டுமா?

ஆசை யற்ற சேவைசெய்யும்
நேச வேலை வேண்டுமா?
தேச பக்தி மாசுகொள்ளும்
நாசவேலை வேண்டுமா?

தெய்வம் உண்மை என்றுநம்பும்
தேச பக்தி வேண்டுமா?
பொய்யும் போரும் புனிதமென்று
பேசும் புத்தி வேண்டுமா?

வலியப் பூமி தானம்செய்து
வாழ்த்துக் கொள்ள வேண்டுமா?
வலிமை வந்து நம்மைத்தாக்கி
வீழ்த்திக் கொல்ல வேண்டுமா?

104. கூட்டுறவில் சேருங்கள்

கூட்டுறவில் சேருங்கள்
கூடி வாழப் பாருங்கள்
நாட்டில் மிக்க ஏழையும்
நன்மை பெற்று வாழலாம். .(கூட்)

சேர்ந்து வாழும் நிலைமையே
சீர்சி றந்த வலிமையாம்
சோர்ந்து போன மக்களும்
சுகங்கள் நாடத் தக்கது. . .(கூட்)

குடிசை வாழும் எளியரும்
குறைகள் தீர வழிஇது
கடிசி லாத கைத்தொழில்
கவலை நீக்கி வைத்திடும். .(கூட்)

பட்டிக் காடும் சீர்பெறும்
பண்டம் மாற்றல் நேர்பெறும்
குட்டிப் பண்ணைக் காரரும்
கூட்டு றவால் பேர்பெறும். .(கூட்)

கைத் தறிக்கு நூல்வரும்
கழனி ஏற்றச் சால்பெறும்
வைத்தி ருக்கும் விளைபொருள்
வாங்க நல்ல விலைவரும். .(கூட்)

தொழில் நடத்த வசதிகள்
துணை இலாத அசதியால்
பழுது பட்ட மாந்தரை
பாது காக்க வாய்ந்ததாம். .(கூட்)

105. கூட்டுறவு இல்லாத நாடு

கூட்டுற வில்லா ஒருநாடு
குறைவற வாழ்வது வெகுபாடு ;
மேட்டிமை பேசும் நாடெல்லாம்
மேன்மை பெற்றது கூட்டுறவால்.

கல்வி சிறந்திடும் கூட்டுறவால்
கலைகள் நிறைந்திடும் கூட்டுறவால்
செல்வம் வலுத்திடும் கூட்டுறவால்
சேமம் நிலைத்திடும் கூட்டுறவால்.

சோம்பலை ஒழித்திடும் கூட்டுறவு
சுறுசுறுப் பளித்திடும் கூட்டுறவு
தேம்பிடும் கைத்தறி நெசவாளர்
திடமுறச் செய்திடும் கூட்டுறவு.

வாணிபம் பெருகிடும் கூட்டுறவால்
வளப்பம் மிகுந்திடும் விவசாயம்
நாணய நடத்தைகள் அதிகரிக்கும்
நம்பிக்கை வளர்ந்திடும் கூட்டுறவால்.

பண்டக சாலைகள் நிறைவாகும் ;
பணமுடை என்பது குறைவாகும் ;
கொண்டுள காரியம் எதுவெனினும்
கூட்டுற விருந்தால் அதுமுடியும்.

அன்பு புலப்படும் கூட்டுறவால்
ஆட்சி பலப்படும் கூட்டுறவால்
தென்பு மிகுந்திடும் யாருக்கும்
தேசம் உயர்ந்திடும் பாருக்குள்.

கூட்டுற வென்னும் கொள்கையினைக்
குற்றமில் லாமல் மேற்கொண்டால்
நாட்டில் தரித்திரம் நீங்கிவிடும்
நம்முடை சுதந்தரம் ஓங்கிவிடும்.

106. யார் தொண்டன்?

தொண்டு செய்யக் கற்றவன்
துயரம் போக்கும் உற்றவன்
சண்டை போடும் மக்களைச்
சரச மாக்கி வைக்கவே . .(தொ)

தீர வாழ்வு சொல்லுவான்
தீமை யாவும் வெல்லுவான்
ஈர மற்ற செய்கைகள்
வீர மென்றல் பொய்யென .(தொ)

சேவை செய்யும் நல்லவன்
செம்மை கண்ட வல்லவன்
தேவை யுள்ள யாரையும்
தேடிச் சென்று சேருவான். .(தொ)

அன்பி னைப்பெ ருக்குவான்
ஆசை யைச்சு ருக்குவான்
துன்ப முற்ற எவரொடும்
துணையி ருக்கத் தவறிடான். .(தொ)

பணிவு மிக்க தொண்டனே
பரம ஞானம் கண்டவன்
தணிவு மிக்க சொல்லினால்
தரணி எங்கும் வெல்லுவான். .(தொ)

கூவி டாமல் ஓடுவான்
குறைகள் தீர்க்க நாடுவான்
ஏவி டாத தொண்டனே
எதிலும் வெற்றி கொண்டவன். .(தொ)

கடவு ளென்ற சக்தியைக்
கருதி டாத பித்தரின்
மடமை நீக்கும் சேவைதான்
மனிதர்க் கின்று தேவையாம். .(தொ)

பூமி தான போதகன்
பூஜி தன்வி நோபாவின்
புதுமை மிக்க தொண்டுதான்
போற்ற வேண்டும் இன்றுநாம். .(தொ)

107. குடிப்பதைத் தடுப்போம்

குடிப்பதைத் தடுப்பதே
கோடிகோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்துநாம்
அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

மக்களை வதைத்திடும்
மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

பித்தராகி ஏழைகள்
பேய்பிடித்த கோலமாய்ப்
புத்திகெட்டுச் சக்தியற்றுப்
போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

பாடுபட்ட கூலியைப்
பறிக்குமிந்தக் கள்ளினை
வீடுவீட்டு நாடுவிட்டு
வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

கஞ்சியின்றி மனைவிமக்கள்
காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலிமுற்றும்
வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
போனதிந்தக் கள்ளினால் ;
கைநடுக்கங் கால்நடுக்கங்
கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

தேசமெங்கும் தீமைகள்
மலிந்ததிந்தக் கள்ளினால் ;
நாசமுற்று நாட்டினார்
நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

குற்றமற்ற பேர்களும்
கொலைஞராவர் கள்ளினால் ;
கத்திகுத்துச் சண்டைவேண
கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை
விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)

108. கர்ப்பிணிக்குப் பூ முடித்தல்

கல்லி னுட்சிறு தேரை யோடு
கருவி லேவளர் யாவையும்
எல்லை யில்பல ஜீவ கோடியை
எங்கு மாய்நின்று காத்திடும்
வல்ல வெம்பெரு மான ருள்தனால்
வஞ்சி யேபிள்ளை யாண்டானை
நல்ல பூமுகை சூட்டு வோமந்த
நாத னுன்றனைக் காக்கவே.

மல்லி கைநல்ல முல்லை யாதிய
வெள்ளை யாமலர் சூட்டுவோம் ;
சொல்லு மன்னவை வெண்மை போலநீ
சுத்த மாயிரு நித்தமும் ;
பல்லு முன்றன்ப டுக்கை யோடின்னும்
பாவை யேஉன்றன் யாவையும்
நல்ல வெள்ளை யெனச்சொல் லும்படி
நாளும் வைத்திட வேண்டியே.

வாடி னாலும்வ தங்கி னாலும்தம்
வாடை வீசுதல் வாடிடா
நாடி யேமரு காம ருக்கொழுந்
தோடு நன்மகிழ் சூட்டுவோம் ;
பாடு நீமிகப் பட்ட போதிலும்
பக்தி யோடிரு நித்தமும் ;
தேடி யேஉனைத் தேவன் வந்தருள்
செய்கு வான்பய மில்லையே.

தொட்ட போதிலும் சற்று வாடிடும்
சொல்லொ ணாமிக மெல்லிது
இஷ்ட மாகவே யாரு மாசைகொள்
இன்ப ரோஜா இம்மலர்
கஷ்ட மாகிய வேலை யன்றையும்
கட்டி நீசெயல் விட்டிடு ;
நுட்ப மாகிய உன்றன் மேனியும்
நொந்தி டில்துயர் தந்திடும்.

நீளுமா மலர்த் தாழை யோடு
நிறைந்த மாமரச் சண்பகம்
சூழும் நல்ல மணமி குந்தவை
சுந்த ரிக்கிவை சூட்டுவோம்
வாழு மந்த வனமு ழுவதும்
வாடை யோடியு லாவல்போல்
நாளும் நீஉன்தன் வீடி தெங்கும்
நடந்து லாவுதல் வேண்டியே.

சேற்றில் நின்று வளர்ந்து நீரினிற்
சேர்ந்தி ருப்பினும் தாமரை
சாற்று மோரள வுக்கு மீறிடத்
தான ருந்துமோ நீரினை?
சோற்றின் மூழ்கி யிருந்த போதிலும்
சொற்ப மாகவே சுத்தமாய்ப்
போற்றி யுண்ணுதல் வேண்டு மென்றந்தப்
பூமு டித்தனள் பூவையே.

109. மக்கட் செல்வம்

பெற்றிடும் செல்வத் தெல்லாம்
பெரியது மக்கட் செல்வம் ;
உற்றிடும் இன்பத் தெல்லாம்
உயர்ந்தது மக்க ளின்பம் ;
மற்றிதை உலகி லெந்த
மனிதனும் மறுக்கொ ணாது ;
சற்றிதை மதித்து நாமும்
சரிவர நடப்போ மாக.

சிறந்திடும் இன்ப மான
சிசுவது நமக்கு வந்து
பிறந்திடு முன்னும் பின்னும்
நாம்செயும் பிழைக ளாலே
அருந்தவக் குழந்தை யின்பம்
அனுபவிப் பதற்கு முன்னால்
இறந்திடும் அதனைப் போல
இன்னொரு துன்ப முண்டோ?

உருவினிற் குறைந்த தென்றும்
உடல்மிக மெலிந்த தென்றும்
அறிவினிற் குறைந்த தென்றும்
அழகினை யிழந்ததென்றும்
பிறவியின் குறைக ளெல்லாம்
பெற்றவர் குற்றத் தாலே
கருவினில் அமைந்த தல்லாற்
கடவுளின் குற்ற முண்டோ?

விதிவிலக் கறிந்து வாழ்ந்து
விமலனை மனத்து ளெண்ணி
மதியினைக் கொண்டு சுத்த
மார்க்கத்தில் நின்று நாமும்
புதல்வரைப் பெற்று மற்றும்
புத்தியாய் வளர்ப்போ மானால்
இதமுற வந்த மக்கள்
இளமையில் இறப்ப துண்டோ?

வித்தினைப் போற்றித் தூவும்
விளைநிலம் பழுது பார்த்துச்
சுற்றிடும் மிருக வாசை
துடைத்திடா வேலி சுற்றிப்
பத்தியிற் காத்துப் பண்ணைப்
பயிரது செய்து விட்டால்
சொத்தையாய்ச் சோகை யாகத்
தோன்றுமோ செந்நெல் சொல்வாய்?

110. ஒரு மருந்து

தெய்வத் தனம்மிக்க மானிட ஜென்மம்
தீமை வளர்த்துத் திகைப்பதும் என்னே!
கையிற் கடுங்கொலைக் கருவிகள் கொண்டு
கண்ணில் வெறிகொண்ட பார்வை மருண்டு
வெய்யிற் புழுவென்ன வேதுடி துடிப்போம்
வேதனை பொங்கும் மனம்படும் பாடும்
வையத்தில் எங்கும் மனிதர்கள் யாரும்
வாழ்க்கையின் இன்பம் இழந்தனர் பாரும்.

அன்பிற்கென் றேவந்த மனிதப் பிறப்பே
ஆறறி வுள்ளதென் பார்கள் சிறப்பே.
'துன்பத்துக் கேமுற்றும் அறிவைச் செலுத்திச்
சுட்டு மடிக்கிறார் ஊரைக் கொளுத்தி.
இன்பம் அடைந்தவர் யாரையும் காணோம்.
ஏதுக்கு மக்களைக் கொல்லுவார் வீணே!'
என்பத்தை மாற்ற மருந்தென்ன வென்றே
ஏங்குவர் யாரும் அறிஞர்கள் இன்றே.

கொஞ்சிக் குலாவுதல் மக்கள்ம றந்தார்.
கூடிப் பழகுதல் கூடக்கு றைந்தார்.
அஞ்சிந டுங்கிஒ துங்குகின் றார்கள்.
ஆகாயம் பார்த்துப் பதுங்குகின் றார்கள்.
வஞ்சனை யற்ற வலிமையில் லாமல்
வானத்தில் வந்தே எதிர்க்கநில் லாமல்
குஞ்சுகு ழந்தைகள் பெண்களைக் கொல்வார்
கோரத்தை வீரத்தின் போரென்று சொல்வார்!

வாளுக்கு வாளாம், வில்லுக்கு வில்லாம்,
வகைமிக்க ஆயுதம் தீர்ந்திடில் மல்லாம்!
ஆளுக்கே ஆள்நின்று நேருக்கு நேராம்
ஆண்மையும் ஆற்றலும் செய்வது போராம்!
நாளுக்கு நாள்வந்து நள்ளிருள் தன்னில்
நரிபோலும் குறிதேடும் கள்ளர்கள் என்னப்
பாலுக்கு வாய்வைக்கும் பாலரைக் கொல்வார்
பாவத்தை நாகரீ கம்மெனச் சொல்வார்!

எந்திர வித்தைகள் வேணது கற்றோம்!
என்னென்ன மோபல புதுமைகள் பெற்றோம்!
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திலம் ஐயோ!
தரணியில் மக்கள் தவிப்பது பொய்யோ?

இத்தனை தீமைக்கும் ஏற்ற மருந்து
இந்திய ஞானிகள் கண்ட மருந்து ;
உத்தமர் யாரும் உவக்கும் மருந்து ;
உலகத்தில் துன்பம் ஒழிக்கும் மருந்து ;
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிடை அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்பொடும் உண்டால்
பாருக்குள் பேருக்கும் போரிலை கண்டாய்.

111. சுதந்தரம் யாது?

அச்சம் விட்டது சுதந்தரம் ;
அன்பு விடாதது சுதந்தரம் ;
இச்சைப் படிசெயல் சுதந்தரம் ;
இடர்செய் யாதது சுதந்தரம் ;
பிச்சை கொள்ள விரும்பாது
பிறருக் கீய வருந்தாது
கொச்சை மொழிகளைச் சொல்லாது
கோணல் வழிகளிற் செல்லாது.

மடமை விட்டது சுதந்தரம் ;
மானம் விடாதது சுதந்தரம் ;
கடமை கற்றது சுதந்தரம் ;
கபடம் அற்றது சுதந்தரம் ;
கொடுமை கண்டு பொறுக்காது
கொடியர் தமையும் வெறுக்காது
அடிமை செய்து சுகிக்காது
யாரையும் அடிமை வகிக்காது.

கொல்லக் கூசும் சுதந்தரம்
கொள்கைக் குயிர்தரும் சுதந்தரம்
எல்லை விட்டு நடக்காது
எதிரியை ஒண்டி மடக்காது
வெல்லற் கேனும் பொய்யாது
வேற்றுமைக் காரரை வையாது
பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது
பட்டதன் தோல்வி ஒளிக்காது.

தன்சோ றுண்பது சுதந்தரம்
தன்துணி யணிவது சுதந்தரம்
என்னே வறுமை வந்தாலும்
எத்தனை துன்பம் தந்தாலும்
தன்னேர் செம்மை பிரியாது
தன்குறை சொல்லித் திரியாது
பொன்சேர் போகம் மதிக்காது
பொய்ப்புகழ் பாடித் துதிக்காது.

தாழ உரைப்பது சுதந்தரம் ;
தன்மதிப் புள்ளது சுதந்தரம் ;
ஏழை செல்வனென் றெண்ணாது
எவருக் கும்குறை பண்ணாது
ஊழிய னாகப் பணிசெய்யும்
உலகுக் கெல்லாம் அணிசெய்யும்
வாழிய மக்கள் எல்லோரும்
வாழிய வென்றே அதுகோரும்.

112. கிளியும் வழியும்

ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.

இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.

காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.

தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?

சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?

பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?

ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.

காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.

சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?

உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.

எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.

நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.

கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.

சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.

ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.

கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.

கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.

கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.

வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.

சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.

இப்படி நீநடந்தாற் கிளியே எண்ணியெண் ணிப்பார்த்தே
ஒப்பி எஜமானன் கிளியே யோசனை செய்வாண்டி.

காரிய முன்னாலே கிளியே காசள வில்லையென்று
வீரியம் பேசாமல் கிளியே விட்டிடு வானுனையே.

கோதிச் சிறகுலர்த்திக் கிளியே கூசா மல்விரித்து
நாதன் புகழ்பாடிக் கிளியே நாற்றிசை யும்பறப்பாய்.

நீண்ட பெருவானம் கிளியே நீயதி லேபறந்து
ஆண்டவன் சன்னிதியைக் கிளியே அண்டிச் சுகமடைவாய்.

113. பெண் மனம்

ஏனைய நாடுகள் எப்படி யாயினும்
தமிழ்நா டதனில் தானமும் தருமமும்
புண்ணியம், விரதம், தெய்வம், பூசனை
ஆகிய இவற்றை ஆடவர் மறப்பினும்
பெண்களே இன்னமும் பெரிதும் காப்பவர்.
இன்றும் தினந்தினம் இத்தமிழ் நாட்டில்
பிச்சைக் காரர்கள் பிரியத் துடனே
குறைகளைச் சொல்லிக் கூவும் போது
'அம்மா' 'தாயே', 'ஆத்தா', 'ஆச்சி'
என்பன கூவி இரப்பதே சாட்சி,
ஐயா மறுப்பினும் அம்மா மறுத்திடாள்.
ஒருபிடி அன்னமோ உப்பிட்ட கஞ்சியோ
ஐயமிட் டுண்பதே அருந்தமிழ்ப் பெண்மை
அதனால் தானோ என்னமோ அறியோம்
தமிழன் இல்லறம் தனிச்சிறப் புடையதாய்
வறுமையும் அடிமையும் வருத்திடும் நாளிலும்
கொடுமைகள் குறைந்து குலவிடச் செய்வது.
வாழிய தமிழ்தரும் வண்மைசேர் பெண்மை!

114. பெண்மை

அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும் ;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும் ;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும் ;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும் ;
அயலார் தமக்கும் அன்பே செய்யும் ;
நாணம் கெடாமல் நட்புகொண் டாடும் ;
சினேகம் இன்றியும் சிரித்துப் பேசும் ;
காமமில் லாமலும் கொஞ்சிக் களிக்கும் ;
பெருமை மிக்கது பெண்ணியல் பாகும் ;
அந்தப் பெருமையை அறியா ஆடவர்
அன்புப் பேச்சை ஆசையென் றயிர்த்துச்
சிரித்து விட்டதில் சிற்றின்பம் எண்ணி,
களிப்பைக் காமமாய்க் கற்பனை செய்தே
அவமதிப் படைவதும் அடிக்கடி உண்டு.
இப்படிப் பலபேர் ஏமாந்து போவதால்
பெண்மனம் என்பதைப் பிழைபடப் பேசிப்
'புதிர்' என்று சொல்வது புரியாத் தனமே ;
'வஞ்சனை' என்பர் வஞ்சக முடையோர்.

115. குறத்தியர் பாட்டு

இமயம்முதல் குமரிவரை எங்களுடை நாடு
இடையிலுள்ள தேசமெல்லாம் எங்களுக்கு வாசம்
தமிழ்முனிவன் பொதிகைமலை தன்னிலெங்கள் வீடு
தரணியெல்லாம் சுற்றிடுவோம் தைரியம்தான் ஜோடு.

ஜாதியில்லை மதமுமில்லை சண்டையில்லை அதனால்
சாமியென்றும் நேமமென்றும் சடங்குகளும் இல்லை ;
நீதிஎன்ற ஒன்றுமட்டும் நெஞ்சிலுண்டு பின்னே
நீசரென்று எங்களையார் பேசினாலும் என்னே?

பட்டமில்லை பதவியில்லை பகையுமில்லை ஐயே!
பணமுமில்லை திருடரென்ற பயமுமில்லை மெய்யே!
கஷ்டமில்லை நஷ்டமில்லை கவலையில்லை அம்மா!
காணியில்லை பூமியில்லை கடனுமில்லை சும்மா!

மலையினிலே குடிசைகட்டி மரநிழலில் வாழ்வோம்
மான்மயிரும் தேன்முதலாய் மக்களுக்கு விற்போம் ;
தலையினிலே இடிவரினும் தைரியமாய் ஏற்போம்
தஞ்சமற்ற யாரையும் அஞ்சிடாமல் காப்போம்.

எந்தபாஷை எந்த நாட்டில் என்னபேச்சு எனினும்
எங்களுக்குப் பேதமில்லை எதையும்பேசத் துணிவோம்
சொந்தபாஷைப் பெருமைக்காகத் தூறு சொல்ல மாட்டோம்
சுற்றிச்சுற்றி எங்கும்சென்று சுகமுரைத்துக் கேட்போம்.

வீடுவாசல் மாடிகூடம் எங்களுக்கு வேண்டாம்
வீதிதிண்ணை சத்திரங்கள் வேணதுண்டு ஆண்டே!
பாடுபட்டு ஓடியாடிப் பசியெடுத்தே உண்போம்,
பயமுறுத்தும் நோய்களெங்கள் பக்கமில்லை என்போம்.

பச்சைகுத்தி குறிகள் சொல்லிப் பாடியாடித் திரிவோம் ;
பாசிஊசி பலவும் விற்றுக் காசுவாங்கி வருவோம் ;
இச்சையான உணவைநேர்ந்த இடத்திலாக்கித் தின்போம் ;
இங்கும்அங்கும் எங்கும்தூங்கி இன்பவாழ்க்கை என்போம்.

பச்சையென்றால் ஒருநிறமாம் பச்சைமட்டும் அல்ல ;
பலநிறமும் நேர்த்தியாகப் பதியவைப்போம் ; நல்ல
இச்சையான உருவமெல்லாம் எழுதிடுவோம் மெய்யே ;
இப்பொழுதே காட்டுகிறோம் என்னவேண்டும் ஐயே!

காதலனோ காதலியோ கண்காணாப் பொழுதில்
கண்டுகளி கொண்டுமனக் கவலை கொஞ்சம் ஒழிய
ஆதரவாய்க் கைதனிலே அவர்வடிவம் பேரும்
அழகாகப் பச்சைகுத்தி அமைந்திடுவோம் பாரும்.

குறிதவறாக் குறியுரைப்போம் குறைகளெல்லாம் தீர
குற்றமெல்லாம் நீங்கிவிடக் கோளாறும் கூறி
நெறிமுறையாய் நீங்களெல்லாம் நெடுநாளும் வாழ
நினைத்திடுவோம் எங்கள்குலத் தெய்வமெலாம் சூழ.

நாள்கிழமை நட்சத்திரம் பார்ப்பதில்லை நாங்கள்
நல்லநல்ல ஜோசியங்கள் சொல்லிவிடுவோம் பாங்கே ;
ஆள்வடிவம் பேச்சுநடை அவைகளையே கொண்டு
அத்தோடு கைரேகை அதையும்பார்ப்ப துண்டு.

காசுபணம் பேசிவரும் ஜோசியரைப் போலக்
காயிதமும் பென்சிலுமாய்க் கணக்குப்போட வேண்டாம்
ஆசையுடன் பகவதியின் அருள்வாக்கி னாலே
அச்சமற்றுக் குறியுரைப்போம் பச்சைக்குத்தல் போல.

[என்பன பாடி இருகரம் கூப்பி,
"எது வேணும் சாமி! என்ன வேணும் அம்மா?
பச்சை குத்தவா? பாசி ஊசி வேணுமா?
குறிகேட்க ஆசையா?" என்றனர் குறத்தியர்.
சந்தோஷ மடைந்த சங்கர லிங்கம்,
"குறிசொல்லு பார்ப்போம் பணமின்னும் கூட்டித்
தருகிறேன் என்றான்" தயங்கா(து) அவர்கள்:]

ராணியுடன் ராஜனைப்போல் நல்ல ஜோடி நீங்கள் ;
ராமனுடன் சீதையைப்போல் ரஞ்சிதமாய் வாழ்வீர்.
ஆணையிட்டுச் சொல்லுகிறோம் ஐயமில்லை ராஜா
அம்மாளும் நீங்களுமே ஆசைமிக்க நேசம்.

கண்மணிபோல் பெண்ணிவளைக் கலியாணம் பண்ணிக்
கப்பலேறி சீமைசென்று காசுபணம் சேர்ப்பீர்
பெண்மணியும் ஒருகணமும் பிரிந்திருக்க மாட்டாள்
பேசுவதேன் உங்களுக்கு ஈசன்முடி வேண்டாம்.

பொல்லாத வேளைகொஞ்சம் புலப்படுதே பின்னால்
பொன்னான வாழ்க்கையிலே சின்னதுன்பம் மன்னா
நில்லாது சீக்கிரமே நீங்கிவிடும் ஆண்டே
நெஞ்சமதில் கொஞ்சங்கூட அஞ்சிடுதல் வேண்டாம்.

அம்மாளைப் பெற்றவருக்(கு) அதிகபணம் இல்லை ;
ஐயாவின் வீட்டினிலே அளவில்லாச் செல்வம் ;
கொம்மாளம் போட்டே உங்கள் குடிவிளங்க வேணும்
குத்திவிளக் கேபோலப் புத்திரரும் தோணும்.

பாருக்குள் எத்தனையோ பாதகரும் உண்டு
பழிபேசித் தூற்றிடுவார் பயமில்லை ஒன்றும் ;
போருக்குள் ஆண்சிங்கம் போலஜயம் பெறுவீர்
பொன்னான பெண்ணிவளைப் போற்றிநலம் உறுவீர்.

கோபமில்லாக் குணமுடனே குடித்தனமே செய்வீர்
குறைச்சலில்லா யோகமெல்லாம் கூடிவரும் மெய்தான்
சோபனமே சோபனமே சோபனமே நீங்கள்
சுகமுடனே வாழ்ந்திடுவீர் குறியுரைத்தோம் நாங்கள்.

வயிரமதைத் தங்கத்தில் வைத்திழைத்தாற் போலே
வடிவழகா உன்றனுடன் சுந்தரியைக் கண்டே
துயரமெல்லாம் விட்டுவிட்டோம் துணிமணியும் சோறும்
துரைமகனே! எங்களுக்குத் துட்டுக்கூடத் தாரும்.

குள்ளநரிக் கொம்பிதுதான் கூடக்கொண்டு போனால்
கூட்டமாகப் பகைவரினும் ஓட்டமாகும் தானே ;
கள்ளமில்லை இதனுக் கொன்றும் காசுபணம் வேண்டாம்
கனவானே தந்திடுவோம் கைக்கொள்வீர் ஆண்டே!

116. அன்னையின் மகிழ்ச்சி

பெற்றிட விரும்பும் பேறுகள் யாவினும்
மக்களைப் பெறுவதே மாபெரும் பேறென
உலகம் மகிழ்வது கண்கண்ட உண்மை.
குறைகளி லெல்லாம் மிகப்பெரும் குறையென,
குழந்தை யில்லாததைக் குறிப்பதும் வழக்கம்.
உணவுப் பொருள்கள் உற்பத்தி குறைந்து,
பற்பல நாட்டிலும் பஞ்சம் மிகுந்திட
ஜனத்தொகை மிகுவது சங்கடம் தருமெனக்
குழந்தை பெறுவதைக் குறைத்திட வேண்டிக்
கருப்பத் தடைகளைக் கருதுமிந் நாளிலும்
குழந்தை யில்லாமல் குறைபடுவோர் பலர்.
கூனோ, மூடமோ, குருடோ, செவிடோ,
ஆணோ, பெண்ணோ, அழகோ, அசிங்கமோ
தான்பெற்ற மகவே தனிச்சிறப் புளதாய்
உணரச் செய்வதே உடம்பின் இயல்பு.
குணமிலாக் குரூபக் குழந்தை பெறினும்
அப்படி இன்பம் அடைகுவ ரென்றால்
அறிவுடன் அழகும் அமைந்த மக்களைப்
பெற்றவர் அடையும் பெருமித மகிழ்வை
எழுதவும் முடியுமா? ஏடுதான் அடங்குமா?
பெற்றோர் இருவருள் பெற்றவ ளாகிய
அன்னையின் மகிழ்ச்சி அளவுக் கடங்குமா?

117. அவனும் அவளும் விரும்பிய நாடு

மன்னவன் என்ற மனிதனில்லை--அங்கே
மந்திரி தந்திரி யாருமில்லை.
சின்னவர் என்றும் எவருமில்லை--பட்டம்
தேடி யலைந்திடும் மக்களில்லை.

ஊருக்குப் பத்துப்பேர் நல்லவர்கள்--பொது
யோசனை செய்திட வல்லவர்கள்
ஆருக்கும் எதிலும் ஓரங்கள் செய்யாமல்
அப்பப்போ தீர்ப்புகள் செப்பிடுவர்.

நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம்--அங்கே
ராஜாங்கம் பட்டம்ப தவியல்ல
சொல்லில் நடத்தையில் சூரத்தில் தீரத்தில்
சுத்தரென் றுபலர் நத்துவதே.

கச்சேரி என்றொரு கட்டிடமும்--அதைக்
கண்டு நடுங்குதல் அங்கிலையே
அச்சமில் லாமலே யாரும் பொறுப்புடன்
அங்கங்கே நீதிந டத்திடுவார்.

வீதிக்கு வீதியோர் நீதிஸ்தலம்--பத்து
வீட்டுக்கும் அங்கொரு பள்ளிக் கூடம்.
நீதிக்கே ஓடி யலைந்து செலவிட்டு
நிலைகெட்டுப் போகிற நிந்தையில்லை.

பள்ளிப் படிப்புக்குச் சம்பளம்--இன்னும்
பரீட்சைக்குக் கட்டப் பணமெனவும்
பிள்ளைகள் பந்தாடப் பின்னும் பணமென்று
பிச்சிப் பிடுங்குதல் அங்கில்லையே.

வேலையில் லாதவர் யாருமில்லை--முற்றும்
வீணருக் கங்கே வேலையில்லை.
கூலியில் லாதவர் யாருமில்லை--சும்மா
கும்பிட்டுத் தின்கின்ற கும்பலில்லை.

கூனும் குருடனும் நொண்டி முடங்களும்
கொஞ்சம் ; அவருக்கும் பஞ்சமில்லை.
தானங் கொடுப்பதென் றில்லாமல்--பொது
தர்ம மென்றே வைத்துத் தாங்கிடுவார்.

ஒப்பி மனங்களித் தெல்லோரும்--அங்கே
உண்டு உடுத்துக்க ளித்திடுவார்
தப்பிதம் செய்திடத் தோன்றாதே--அதன்
தண்டனை தந்திட வேண்டாது.

வாது வழக்குக்கு நேரமில்லை--அங்கே
வஞ்சித்து வாழமு டியாது
சூதுசெய் பந்தயம் ஏதுமில்லை முற்றும்
சோம்பிச் சுகிக்க வழியுமில்லை.

கள்ளைக் குடிப்பது கூடாது--அங்கே
காமக் கலகங்கள் கண்டதில்லை.
கொள்ளை யடித்திடத் தேவையில்லை--என்றும்
கொஞ்சமும் யாருக்கும் பஞ்சமில்லை.

காவிரி நீர்வற்றிப் போவதில்லை--ஒரு
கால்வாய் மேஸ்திரி எங்குமில்லை ;
காவலும் கட்டுகள் ஏதுக்கங் கெப்போதும்
கள்ளர் பயமென்ற சள்ளையில்லை.

பண்ணையக் காரர்கள் எல்லாரும்--எங்கும்
பட்டினி என்கிற சொல்லேது?
கண்ணியம் அற்றவர் யாருமில்லை--ஒரு
காலித்தனம் பண்ண ஏலாது.

கண்டதும் கேட்டதும் எப்படிப் போனாலும்
கச்சேரி வந்துபொய் சொன்னது மெய்
கண்டவர் உண்மையைச் சொல்லவும் வாய்பொத்திக்
கைகட்டி நின்றிடும் கஷ்டமில்லை.

கொடுத்த பணத்தையும் வாங்குதற்கு--நித்தம்
கோர்ட்டு வாசலில் காத்திருந்தும்
அடுத்த பிறவிக்குப் போகுமட்டும் நொந்தே
அல்லல் அடைகின்ற தொல்லையில்லை.

துக்கத்தைச் சொல்லி அழுவதற்கும்--வெகு
தூரம் நடந்துபி ராதுசொல்லிப்
பக்கத்தில் நின்றவர் ஏனென்று கேட்கவும்
பற்றற்றுப் போவதும் சற்று மில்லை.

தீண்டப் படாதென்று சொன்னாலும்--அங்கே
தீண்டுதல் வேண்டித் திரிவதில்லை.
வேண்டிய சுகங்கள் யாவும் பிறரைப்போல்
வேணமட்டும் உண்டு வேறெதற்கு?

கோயில் குளங்களும் வேணதுண்டு--ஆனால்
கும்பிடப் போவதில் சண்டையில்லை ;
வாயில் ஜெபதபம் வஞ்சனை நெஞ்சத்தில்
வைத்துப் பிழைத்திடத் தேவையில்லை.

வட்டிக்குப் போடப் பணமும் இல்லை--அங்கே
வட்டிக்கு வட்டிசெய் சட்டமில்லை.
பெட்டிக்குச் சாவியும் இல்லாமல்--வெறும்
பேச்சில் புரண்டிடும் நாணயங்கள்.

தானியம் தவசம் அல்லாமல்--அங்கே
தங்கமும் வெள்ளியும் செல்வமல்ல ;
நாணய மாற்றென்ற நாடக ஜாலங்கள்
நாகரி கப்பித்த லாட்டமில்லை.

சின்னக் குழந்தைக்குத் தாலிகட்டி--வெகு
சீக்கிரம் தாலி அறுத்தாலும்
வன்னம் கெடுத்தவள் வாழ்க்கைக் குலைத்திடும்
வண்ட வழக்கங்கள் கண்டதில்லை.

நாட்டுக்குப் பகைவர் யாருமில்லை--பிறர்
நாட்டின்மேல் ஆசையில் லாததனால்
சூட்டுக்குச் சூடும் கொடுத்திடுவார்--பகை
துஷ்டர் வந்தாலும்து ரத்திடுவார்.

118. தாலாட்டு

(காவேரியில் கிடைத்த குழந்தையை
ஒரு படகோட்டியின் மனைவி தாலாட்டுதல்)

ஆராரோ! ஆரிரரோ!
அம்மா! நீ கண்ணுறங்கு
பேரேதோ! ஊரெதுவோ!
பெற்றவர்கள் யாரெவரோ!
சீராரும் காவேரித்
தேவி திருவருளால்
வாராமல் வந்துதித்த
மாமணியே கண்ணுறங்கு. .(ஆரா)

ஆழக் கரைபுரளும்
காவேரி ஆற்றருகே
ஏழைப் படகோட்டி
என்கணவன், ஆனாலும்
கூழைக் குடித்துறங்கும்
குடித்தனந்தான் என்றாலும்
கோழைகள் அல்லவம்மா
குறைச்சல்உனக் கேதுமில்லை. .(ஆரா)

நாளைக் கணக்கெண்ணி
நல்லநல்ல சம்பளத்தில்
ஆளை மிரட்டுகின்ற
அதிகாரம் இல்லையம்மா!
வேளைப்பொழு தில்லாமல்
வேலைசெய்யும் ஜீவனந்தான்
காளி குலதெய்வம்
காத்திடுவாள் கண்ணுறங்காய். .(ஆரா)

அதிகாரம் என்றுசொல்லி
அநியாயம் செய்தறியோம்
சதிகாரத் தந்திரத்தால்
சம்பாதித் துண்பதில்லை
துதிபாடிப் பொய்பேசிச்
சுகித்திருக்கும் சூதறியோம்.
கதிகேடு வந்துவிடக்
காரணங்கள் இல்லையம்மா. .(ஆரா)

வாது வழக்கறியோம் ;
வம்புதும்பு செய்தறியோம் ;
சூது புரிந்தறியோம்
பொய்ச்சாட்சி சொன்னதில்லை ;
நீதி நெறிதவறி
நிந்தைசொல்ல நின்றதில்லை ;
ஏதும் ஒருகெடுதி
இங்குவர ஞாயமில்லை. .(ஆரா)

வேலையின்றிக் கூலிகொள்ளும்
வித்தைகளைக் கற்றறியோம்.
கூலியின்றி வேலைகொள்ளும்
கொடும்பாவம் செய்தறியோம்.
காலையென்றும் மாலையென்றும்
காலமின்றிப் பாடுபட்டு
நாலுபணம் வந்தாலும்
நல்லசுகம் செய்துவைப்போம். .(ஆரா)

தேடிப் புதைத்துவைத்து
வயிறாரத் தின்னாமல்
வாடிப் பசித்துநொந்து
வந்தவரை நிந்தைசொல்லி
ஓடி ஒளிந்துகொள்ளும்
உலுத்தரல்ல நாங்களம்மா!
நாடி ஒருதீம்புவர
ஞாயமில்லை இவ்விடத்தே. .(ஆரா)

கோவம் மிகுந்தாலும்
குத்துச்சண்டை வந்தாலும்
பாவம் பழிகளுக்குப்
பயந்தொதுங்கும் எங்களுக்குச்
சீவன் இருக்குமட்டும்
தேகம் உதவும்அம்மா.
தேவி துணையிருப்பாள்
தெள்ளமுதே! கண்ணுறங்கு. .(ஆரா)

பள்ளிப் படிப்பறியோம்
பட்டணத்துப் பேச்சறியோம்
வெள்ளைத் துணியறியோம்
வீண்பிலுக்குச் செய்தறியோம்.
கள்ளப் பிழைப்பறியோம்
காவேரி சாட்சியம்மா.
உள்ளபடி இங்குனக்கே
ஒருகுறையும் இல்லையம்மா! .(ஆரா)

119. சுதந்தர மக்களின் சமதர்மம்

வானவெளி ஆராய்ச்சி மிகுந்து மேலும்
வகைவகையாய் விஞ்ஞானம் வளர்ந்தே அந்தப்
பானுவையே தொட்டுவரும் பாணம் ஏவிப்
பயணத்தில் முழுவெற்றி பலித்திட் டாலும்
ஆனஉயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்
ஆகுமென்ற மெய்யுணர்வை அளிக்க வல்ல
ஞானஒளி காணாத மனித வாழ்க்கை
நரகமென்று சொல்லுவதே ஞாய மாகும்.

மற் றெவரும் கண்டறியாச் சன்மார்க் கத்தால்
மாறுபட்ட அன்னியரின் மனத்தை மாற்றிச்
சுற்றியுள்ள தேசமெல்லாம் வியந்து வாழ்த்தச்
சுதந்தரத்தை நாமடைந்த சூட்சு மத்தை
உற்றுணர்ந்தால் 'தெய்வ பக்தி' ஒன்றா லன்றோ
உயர்வுபெற்றோம் என்றமுழு உண்மை காண்போம்.
சற்றிதனை அனுதினமும் மனத்திற் கொண்டால்
சமதர்மம் மக்களிடை எங்கும் தங்கும்.

திட்டமிட்டே அரசாட்சி செய்திட் டாலும்
தீவிரமாய்ச் செல்வங்கள் திரண்டிட் டாலும்
கட்டுதிட்டம், காவல், படை கனத்திட் டாலும்
'கருணை' என்ற ஓருணர்ச்சி கலக்கா விட்டால்
சுட்டெரிக்கும் தீஉடலிற் பட்டா லென்னச்
சுதந்தரத்தின் இன்பமெல்லாம் சுருங்கிப் போகும் ;
அட்டியென்ன? கருணைஅன்பிங் கென்ப வெல்லாம்
ஆண்டவன்பால் 'பக்தி'என்ற அதுதான் நல்கும்.

அரும்புகின்ற தெய்வபக்தி அணுவா னாலும்
அகங்காரம் குறைவதற்கும் அதுவே வித்தாம் ;
தரும்பயனாம் அன்பறங்கள் தழைக்கும் என்றே
தவம்மிகுந்த தமிழ்நாட்டின் நமது முன்னோர்
திரும்புகின்ற பக்கமெல்லாம் தெய்வம் தோன்றத்
திருக்கோயில் கோபுரங்கள் திகழ்ச் செய்தார் ;
பரம்பரையாம் பக்தியைநாம் பாது காத்தால்
பழுதற்ற சமதர்மம் பரவி வாழ்வோம்.

120. தமிழ்ப் பண்பைக் காப்போம்!

இசைமலிந்த பலகலையும் உலகுக் கீந்தார்;
'இனிமை'எனும் தமிழ்மொழியின் உரிமைபூண்டார் ;
திசைமொழிகள் எங்கெங்கும் வணங்கி வாழ்த்தும்
திருக்குறளாம் அறிவளித்த தமிழர் முன்னாள்
பசைமிகுந்த ஊக்கமுடன் கடலும் தாண்டிப்
பலநாட்டில் நம்பெருமை பரவச் செய்தோம் ;
வசைகூறும் கட்சிகளாய்ப் பிரிந்தோம் இன்று
வறுமையுற்றுப் பெருமைகெட்டு வாழ்தல் காணீர்.

அறம்வளர்த்த தமிழ்த்தாயைப் பொதுவாய்க் கொண்டும்
அன்றிருந்த மூவேந்தர் அவர்கள் கூட
மறம்வளர்த்துச் சண்டையிட்ட மடமை யாலே
மாற்றார்கள் தமிழ்நாட்டை மடக்கி ஆண்டார் ;
உரம்இருந்தும் உறவிருந்தும் தமிழர் தம்முள்
ஒற்றுமைதான் இல்லாமல் ஒடுங்கிப் போனோம் ;
திறந்தெரிந்தோம் ஒன்றுபட்டே இனிமே லேனும்
தேசநலப் பொதுப்பணிகள் செய்வோம் வாரீர்!

அயல்நாட்டை அபகரிக்கும் ஆசைக் கல்ல ;
பிறமொழியை அவமதிக்கும் அகந்தைக் கல்ல ;
இயல்பான உரிமைகள் இழந்தி டாமல்
இனப்பெருமை நற்குணத்தை இகழ்ந்தி டாமல்
செயலாலும் சொல்லாலும் சிந்தை யாலும்
செய்யதமிழ்த் திருநாட்டின் நலமே பேணி
உயர்வான தமிழ்ப்பண்பைக் காப்போ மானால்
உலகநலம் காப்பதற்கும் உதவி யாகும்.

121. இடந்தடுமாற்றம்

அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ
படிப்புக் குகந்த காரியம் பார்ப்பதோ
விரும்பிய படிக்கொரு வேலையில் சேர்வதோ
தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய்
உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ
இந்திய நாட்டில் இப்போ தில்லை.
இலக்கிய ஞானம் இணையிலா ஒருவன்
கல்வியே வேண்டாக் காரியம் செய்வதும்
கணித சாத்திரம் கைதேர்ந்த ஒருவன்
எண்ணிக்கை வேண்டா வேலையில் இருப்பதும்,
ரஸாய னத்தில் ரஸனை மிகுந்தவன்
கச்சேரி மேசையில் கவிழ்ந்து கிடப்பதும்
சங்கீத வித்தையில் சமனிலாக் கலைஞன்
தபால் ஆபீஸ் தந்திய டிப்பதும்,
சித்திரக் கலையில் கைத்திறம் சிறந்து
பத்திரம், 'ரிஜிஸ்டர்' பதிவு செய்வதும்,
சத்தியம் தவறா உத்தம குணவான்
வக்கீல் தொழிலில் வருத்தப் படுவதும்,
கொல்லா விரதமே கொண்டுள ஒருவன்
பட்டாள வீரனாய்ப் பதிந்து கொள்வதும்,
விஞ்ஞா னங்களில் விருப்புள இளைஞன்
'டிக்கட் கலெக்டராய்'த் திண்டாட நேர்வதும்,
புத்தகம் படிப்பதில் பித்துள்ள புலவன்
'புக்கிங் கிளார்க்காய்'ப் புழுங்கு கின்றதும்,
உருட்டி மருட்டத் தெரியா ஒருவன்
போலீஸ் காரனாய்ப் பொழுதுபோக் குவதும்,
திட்டிப் பேசவும் தெரியா நல்லவன்
அமீனா வேலையில் அடிபட்டு வருவதும்,
கள்ளுச் சாராயம் கடிந்திடும் கருத்தன்
கலால் வேலையில் 'டிகிரி' கணிப்பதும்,
மாமிச உணவை மறுக்கும் மனத்தன்
ஆட்டுக் கறிவையும் மாட்டுக் கறியையும்,
சுத்தம் பார்த்தலில் முத்திரை குத்தலும்,
இப்படிப் பற்பலர் இடந்தடு மாறுவர்.

122. நோயற்ற வாழ்வு

உலகினிற் சிறந்த தென்றும்
உருவினிற் பரந்த தென்றும்
உயர்தவ யோக சித்தர்
ஒப்பிலார் இருந்த தென்றும்
பலவளம் நிறைந்த தென்றும்
பகுத்தறி வுயர்ந்த தென்றும்
படித்தனம் கேட்டோ மந்தப்
பாரத தேச மக்கள்
புலபுல வென்று நித்தம்
புதுப்புது நோய்க ளாலே
புழுக்கள்போல் விழுந்து மாண்டு
போவதைக் கண்டு மையோ
விலகிட வழிதே டாமல்
விலங்கினம் போல வாழ்ந்து
விதியென வாதம் பேசி
வீணரா யிருத்தல் நன்றோ?

கற்பமும் அறிந்து காய
சித்தியும் கற்க மேலோர்
பற்பலர் இருந்த யிந்தப்
பாரத தேச மக்கள்
அற்பமாய் ஆயுள் குன்றி
ஆழ்ந்திடல் ஏனோ வென்று
சொற்பனந் தன்னிற் கூட
எண்ணிடத் துணிந்தோ மில்லை.

உடல்வழி மிகுந்து நல்ல
ஊக்கமும் உறுதி பொங்க
உலகினில் இன்ப மெல்லாம்
உயர்வழி அனுப வித்த
திடமுள தீர வீரர்
திகழ்ந்தஇச் சிறந்த நாட்டில்
சிறியதோர் நோய்வந் தாலும்
தாங்கிடத் திறனில் லாமல்
நடைபிணம் போல நாமும்
நாள்கழித் திருந்தோ மையோ
நாடிலோம் இதனை மாற்ற
நல்வழி யென்ன வென்று
மடமையோ மதியோ அன்று
விதியெனும் மயக்கந் தானோ
மாற்றநாம் அல்ல தென்றால்
மதியினாற் பயந்தா னென்னே?

முற்றிய ஒழுக்கத் தாலும்
முறைதெரி வாழ்க்கை யாலும்
பெற்றவர் காண முன்னாள்
பிள்ளைகள் இறந்த தில்லை ;
கற்றவர் பெரியோர் நித்தம்
கதைகளிற் சொல்லக் கேட்டோம்
இற்றைநாள் கோடி கோடி
பிறக்குமுன் இறப்ப தேனோ?

மணத்தையே விரும்பி யோடி
மலரினைக் கசக்கு வார்போல்
பணத்தையே பெரிதென் றெண்ணிச்
சுகத்தினைப் பழித்து வாழ்ந்து
குணத்தையே விலைக்கு விற்றுக்
குரங்கினைக் கொண்டார் போல
இனத்தையே பிணிகள் வாட்ட
இருந்தனம் அறிவி ருந்தும்.

உண்டியில் ஆசை வைத்தோம்
ஒழுக்கமே மறந்து போனோம்
பெண்டுகள் மக்கள் தம்மை
வளர்த்திடும் முறைமை பேணார்
மண்டையி லெழுத்தி தென்று
மயங்கினோம் கர்மந் தன்னை
மண்டின நோய்கள் ‡¡மம்
மலிந்திட நலிந்தோ மையோ!

பிணியிலே பிறந்து நித்தம்
பிணியையே அருந்திப் பொல்லாப்
பிணியிலே வளர்ந்தும் அந்தப்
பிணியினாற் சாகக் கண்டும்
அணியிலே ஆடை யாலே
அலங்கரித் தோமே யன்றி
அறிவிலே ஆசா ரத்தால்
அழகெதும் செய்தோ மில்லை.
பணியிலும் பணத்தி லேயும்
சுகமெலாம் இருந்தாற் போலப்
பழகினோம் நாமே யன்றிப்
பழக்கினோம் மக்கள் தம்மை.
துணிவிலோம் தூய்மை யில்லோம்
சுசிகர நடத்தை யில்லோம்
துவக்குவோம் இனிமே லேனும்
நோய்களைத் துடைக்கும் வாழ்க்கை.

123. தமிழ்க் கலை


வியப்புற இன்பம் விருப்புற விளைக்கும்
காரியத் திறமையே 'கலை'எனப் படுவது ;
இன்பம் தருகிற எல்லாச் செய்கையும்
கலையின் இனமாய்க் கருதத் தக்கதே ;
இன்பம் என்பதில் இரண்டு விதங்கள் ;
இயற்கை இன்பமும் செயற்கை இன்பமும்.
இயற்கை இன்பம் ஈடற்ற தெனினும்
செயற்கை இன்பமே சிறப்பென எண்ணி
மகிழ்வது மாநில மக்களின் இயல்பு.
கண்ணிற் காணும் இயற்கைக் காட்சியைச்
சித்திரம் வரைந்து சிறப்பென எண்ணுவர்.
உயிருடன் பார்க்கும் ஒருவரின் உருவைச்
சிற்பச் சிலையில் சீராட்டு வார்கள்.
ஊக்கமும் உணர்ச்சியும் ஊட்டும் சொற்களைப்
பாட்டாய்க் கேட்கவே பலரும் விரும்புவர்.
மணமிக்க மலர்கள் மடியில் இருப்பினும்
அவற்றின் அத்தரின் ஆசையே அதிகம் ;
எலுமிச் சம்பழம், இளநீர், கரும்பைத்
தனித்தனி அவற்றின் தன்மை கெடினும்
மூன்றும் கலந்தால் முதிர்சுவை என்பர்.
இன்பம் தருகிற இயற்கை நிகழ்ச்சிகள்
அநேகம் உள்ளன. ஆயினும், அவைதாம்
வேண்டிய போதுநாம் விரும்பும் விதத்தில்
அகப்பட மாட்டா, அதற்கோர் உதாரணம் ;
காதில் விழுந்ததும் களிக்கச் செய்கிற
ஓசைகள் அநேகம் இயற்கையில் உண்டு ;
ஆனால் அவைகள் நேர்வது அருமை.
அதனால் அல்லவா அப்படி ஓசையை
வாய்பாட் டென்றும் வாத்திய மாகவும்,
சமைத்துக் கொடுக்கும் சங்கீ தத்தைஓர்
உயர்ந்த கலையென உலகம் கொள்வது?
இப்படி யேபிற எல்லா இன்பமும்
செய்யத் தெரிந்த திறமையே 'கலை'யாம்.
கலைகளின் இன்பம் புலன்களைக் கவரும் ;
ஒழுக்கக் கேட்டையும் உண்டாக்கும். அதனால்
தமிழன் கலையெனத் தந்தன யாவும்
அறங்களைப் போற்றும் அறிவையே நாடும்.
வேடிக்கை என்றும், விநோதம் என்றும்
அநேகக் கலைகளைத் தமிழன் அறிவான் ;
ஆயினும், அவைகளும் அறத்தையே அடுக்கும் ;
நூல்களை எழுதும் கலையின் நோக்கமும்,
கற்பனைக் கதையின் கலையும் அறமே,
தருமம் பேசாத் தமிழ்நூல் கலையை
இலக்கிய மாகவே எண்ணான் தமிழன்.
கலைகளின் வழியே கருணையைப் புகட்டல்
எளிதாம் எனநம் முன்னோர் எண்ணிய
கண்ணுங் கருத்துமாய்க் கலைகளைக் காத்தனர்.
இயலென எழுதியும், இசையெனப் பாடியும்,
கற்பனை நிறைந்த கவிதைகள் செய்தும்,
நாட்டியம் பயின்றும், நாடகம் நடித்தும்,
குளங்களை வெட்டியும், கோபுரம் கட்டியும்,
சிலைகளைச் செதுக்கிச் சித்திரம் வரைந்தும்,
மலைகளைக் குடைந்து மண்டபம் ஆக்கியும்,
கலைகளை வளர்த்த காரணம் எல்லாம்,
செயற்கை இன்பமும் இயற்கையில் சேர்ந்துடன்
அறிவைத் துலக்கி, அன்பைப் பெருக்கிச்
சச்சர வில்லாச் சமுதாய வாழ்வை
உண்டாக்கி வைத்தல் ஒன்றே நோக்கம்.
புலன்களுக் கெட்டாப் பொருளாம் இறைவனைப்
புலன்களுக் கின்பம் புகட்டவே புரியும்
கலைகளின் மூலமாய்க் கருதலாம் என்றே
கடவுளின் நினைப்பே கலைகளில் கலந்திடப்
பழகிய பெருமையே தமிழ்க்கலைப் பண்பு.

-----
6. பெரியோர் புகழ் மலர்

124. இளங்கோ அடிகள்

முத்தமிழும் தித் திக்க முழங்கும் காதை,
மூவேந்தர் ஆட்சிமுறை அளக்கும் செங்கோல்
'பத்தினி'யென் றொருசொல்லைப் பகரும்போதே
பாரெங்கும் வேறெவரும் அல்ல வென்னும்
உத்தமிஅக் கண்ணகியின் ஒளிஉண் டாக்கி
உள்ளத்தில் தெள்ளறிவை ஊற்றும் செஞ்சொல்,
இத்தகைய காவியத்தை எமக்குத் தந்த
இளங்கோவை உளங்குளிர எண்ண வேண்டும்.

'நெடுங்காலம் அறம்வழுவாப் பாண்டி நாட்டில்
நீதிகொன்ற நீதானோ மன்னன்?' என்று
கடுங்கோபக் கனல்பறக்கக் கடிந்து சொல்லிக்
கற்பரசி தன்பிழையக் காட்டக் கண்டான் ;
அடங்காத மானம்வந்(து) அழுத்திக் கொள்ள
அக்கணமே அரியணையில் உயிரை நீத்த
இடங்கொணும் தமிழரசின் இயல்பைக் காட்டும்
இளங்கோவை மறப்போமோ எந்த நாளும்.

பண்டிருந்த தமிழர்களின் பரந்த வாழ்வில்
பலகலையும் பரிமளித்த உண்மை பாடிக்
கொண்டிருந்த அறநெறியின் சிறப்பும் கூறி,
'கொடுங்கோலை எதிர்த்தகற்றும் திறமும் கொண்ட
பெண்டினத்தின் வழிவந்தோம் நாங்கள்' என்னும்
பெருமையையும் தமிழ்மக்கள் பெறுவ தாக்கி
எண்டிசையும் புகழ்ஒழிக்கும் சிலம்பைச் சொன்ன
இளங்கோவின் திருநாமம் என்றும் வாழும்.

125. கம்பன்

எண்ணிஎண்ணித் திட்டம்போட் டெழுதி னானோ!
எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டி னானோ!
புண்ணியத்தால் உடன்பிறந்த புலமை தானோ!
போந்தபின்னர் ஆய்ந்தறிந்து புகன்ற தாமோ?
தண்ணியல்சேர் தமிழணங்கின் தவமே தானோ!
தயரதனும் சனகனுமே தரித்த நோன்போ!
விண்ணமுதின் சுவைகெடுத்த கம்பன் பாடல்
விரிந்தவிதம் என்றென்றும் வியப்பே ஆகும்!

சாதிமத விலங்கினம்வாழ் காட்டை மாற்றிச்
சமனாக்கிச் சமரசமாம் தளத்தின் மேலே
நீதிநெறி கருணையெனும் நிலைகள் நாட்டி
நித்தியமாம் சத்தியத்தின் சிகரம் நீட்டிக்
காதல்அறம் வீரம்எனும் கொடியைத் தூக்கிக்
கம்பனென்பான் கட்டிவைத்த கனக மாடம்
ஆதிமுதற் பரம்பொருளின் சக்தி யாகும்
அன்னையெங்கள் தமிழ்த்தெய்வம் அமரும் கோயில்.

ஏழையென்று செல்வனென்று பேதம் எண்ணார்
எல்லோரும் எச்சுகமும் எளிதே பெற்றுக்
கோழையென்ற குடிசனங்கள் எவரும் இன்றிக்
கொடுங்கோலும் கடுங்காவல் இல்லா நாட்டில்
வாழுவதற்கு வேண்டும்எல்லா வளமும் தாங்கி
வந்தபகை நொந்துவிடும் பொறிகள் வைத்தே
ஆழியுடன் தமிழ்த்தாயார் அரசு காக்கும்
அற்புதமாம் கோட்டையன்றோ கம்பன் பாட்டு?

வேந்தருக்கும் குடிகளுக்கும் பொருத்தம் சொல்லி
வேற்றரசர் படையெடுக்கா வீரம் கூறித்
தேர்ந்தபல கலையறிவின் இன்பம் தேக்கித்
தெய்வபக்தி நட்பிவற்றின் திறமும் சேர்த்துக்
காந்தனுக்கும் காதலிக்கும் கற்பைக் காட்டிக்
கட்டாயப் படுத்தாமல் கடமை பேசிச்
சாந்தமுள்ள சமுதாய அமைப்புக் காகும்
சாத்திரமாம் கம்பனென்பான் தந்த பாட்டு.

கம்பனென்ற பெரும்பெயரை நினைக்கும் போதே
கவிதையென்ற கன்னிகைதான் வருவாள் அங்கே ;
அம்புவியில் கண்டறியா அழகி னோடும்
அமரருக்கும் தெரியாத அன்பி னோடும்
இன்பமென்று சொல்லுகின்ற எல்லாம் ஏந்தி
இன்னிசையும் நன்னயமும் இணைத்துக் காட்டித்
துன்பமென்ற மனத்துயரைத் துடைத்து விட்டுத்
தூங்காமல் தூங்குகின்ற சுகத்தை ஊட்டும்.

126. கம்பனும் வான்மீகியும்

கரையறியாக் காட்டாற்று வெள்ளம் போலக்
கவிபொழிந்து வான்மீகி உலகுக் கீந்த
திரையறியா ஓட்டத்தைத் தேக்கிக் கட்டித்
திறமிகுந்த கால்வாய்கள் செய்து பாய்ச்சித்
தரையறியா இலக்கியக்கா வணத்தைத் தந்தான்
தனிப்புலமைக் கம்பனெனும் கவிதைத் தச்சன்
உரையறியாப் பயனளிக்க உதவும் பாட்டை
உலகமெலாம் அனுபவிக்க உழைப்போம் வாரீர்.

வனத்திலுள்ள மலர்வகைகள் எல்லாம் கொய்து
வாசனைவேர் பச்சிலைகள், பலவும் சேர்த்துக்
கனத்தஒரு பூப்பொதியாம் ராமன் காதை
வான்மீகி யெனும்தவசி கட்டோ டீந்தான்
இனத்தையெல்லாம் ஆய்ந்தறிந்தான் இணைத்துக் கோத்தான்
இடைகிடந்த மாசுமறு யாவும் நீக்கித்
தனித்தமணம் அறந்திகழும் மாலை யாக்கித்
தரணிக்கே சூட்டிவைத்தான் கம்பன்தானே.

மால்கடிந்த தவமுனிவான் மீகிஎன்பான்
வனத்திடையே தான்கண்டு கொண்டு வந்த
பால்படிந்து, முள்ளடர்ந்து, பருந்து, நீண்டு
பரிமளிக்கும் பலவின்கனி பாருக் கீந்தான்
மேல்படிந்த பிசினகற்றி, மெள்ளக் கீறி
மெதுவாகச் சுளைஎடுத்துத் தேனும் வார்த்து
நூல்படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான்
கம்பனென்ற தமிழ்த்தாயார் நோற்ற மைந்தான்.


127. இராமகிருஷ்ண தேவர்

முன்னையோர் நமது நாட்டின்
முனிவரர் தேடி வைத்த
முழுமுதல் ஞான மெல்லாம்
மூடநம் பிக்கை யென்றும்,
பொன்னையே தெய்வ மென்றும்,
போகமே வாழ்க்கை யென்றும்,
புனிதரைக் கொன்று வீழ்த்தும்
போரையே வீர மென்றும்
தன்னையே பெரிதா யெண்ணித்
தனக்குமேல் இருக்கும் வேறோர்
சக்தியின் நினைப்பே யின்றித்
தருக்கியே பிறப்பின் மாண்பைத்
தின்னுமோர் மயக்கம் நீங்கித்
தெளிந்திட எழுந்த ஞானத்
தீபமே! ராம கிருஷ்ண
தேவனே! போற்றி போற்றி!

மனிதரின் பாவம் போக்க
மகிழ்ச்சியோ டுயிரைத் தந்த
மாபெரும் த்யாக மூர்த்தி
ஏசுவின் அன்பாம் நெய்யைத்
தனிவரும் துறவி யென்று
தரணியோர் யாரும் போற்றும்
சாந்தனாம் புத்த தேவன்
தவமெனும் தட்டில் ஊற்றி,
'இனியரு மனிதர்க் கில்லை
இத்தனைப் பொறுமை' என்னும்
எம்பிரான் மஹமத் நீட்டும்
சமரசக் கைகள் ஏந்த,
சினமெனும் அரக்கர் கூட்டம்
திரியென எரியும் ஞான
தீபமே! ராம கிருஷ்ண
தேவனே! போற்றி போற்றி!

பேயென்றும் மாயை யென்றும்
பெண்களை இகழ்ந்து பேசிப்
பெருந்துற வடைந்த பேரும்
பிழைபுரிந் தவரே யன்றோ!
தாயென்றும் துணைவி யென்றும்
தன்னுடை நோக்கம் காக்கும்
சகதர்ம சக்தி யென்றும்
சாரதா தேவி தன்னை
நீயென்றும் மகிழ்ந்து கொண்ட
நிர்மல வாழ்க்கை தன்னை
நினைத்திடுந் தோறும் நெஞ்சம்
நெக்குநெக் குருகும் ஐயா!
தீயென்னப் புலனைக் காய்ந்த
தீரனே! ஞான வாழ்வின்
தீபமே! ராம கிருஷ்ண
தேவனே! போற்றி போற்றி!

'ஜாதியில் உயர்ந்தோம்' என்னும்
சனியனாம் அகந்தை நீங்கித்
தாழ்ந்தவர் குடிசை தோறும்
தலையினால் பெருக்கி வாரும்
சேதியைத் தெரிந்த அன்னார்
திகைத்துனைத் தடுத்த தாலே
தெரியாமல் இரவிற் சென்று
தினந்தினம் அதனைச் செய்தாய்
ஆதியின் அருளைத் தேடும்
அந்தணர்க் கரசே! ஐயா!
ஆணவம் அழிந்தா லன்றி
ஆண்டவன் அணுகான் என்றாய்
தீதுகள் உலகில் நீங்கித்
திக்கெலாம் ஒளிரும் ஞான
தீபமே! ராம கிருஷ்ண
தேவனே! போற்றி போற்றி!

'இரும்பினாற் சதையும் நல்ல
எகினால் நரம்பும் கொண்ட
இந்திய இளைஞர் தோன்றி
உழைத்திட வேண்டும்' என்று
விரும்பினோன் மதன ரூப
விவேகஆ னந்த ஞானி
வேடிக்கை யாக வந்து
'கடவுளைக் காட்டும்' என்ன,
அரும்பினாய் முறுவல் அங்கே
அதன்பொருள் அறிவார் யாரோ
அன்றேஉன் அடிமை யாகி
அதுமுதல் உன்னை விட்டுத்
திரும்பிடான் விட்டில் போலத்
திளைத்தவன் விழுந்த ஞான
தீபமே! ராம கிருஷ்ண
தேவனே! போற்றி போற்றி!

'காவியை உடுத்தி டாமல்
கமண்டலம் எடுத்தி டாமல்
காட்டிடை அலைந்தி டாமல்
கனலிடை நலிந்தி டாமல்
பூவுல கதனைச் சுத்தப்
பொய்யென்றும் புகன்றி டாமல்
புறத்தொரு மதத்தி னோரைப்
புண்படப் பேசி டாமல்
சேவைகளை செய்தாற் போதும் ;
தெய்வத்தைத் தெரிவோம்', என்று
தெளிவுறக் காட்டி னாய்உன்
தினசரி வாழ்க்கை தன்னால் ;
தீவினை இருட்டைப் போக்கிச்
செகமெலாம் விளங்கும் ஞான
தீபமே! ராம கிருஷ்ண
தேவனே! போற்றி போற்றி!

128. சமரச சன்மார்க்கத் தந்தை

எல்லா மதத்தினரும் கூடுவோமே
ஏகம் கடவுளென்று பாடுவோமே ;
நல்லார் உலகிலெங்கும் சொன்னதொன்றே
ராமகிருஷ்ணர் வாழ்க்கையால் கண்டோ மின்றே.

இற்றைக்கு நூறாண்டு முன்னம்ஒருநாள்
இந்நாட்டில் தெய்வீகத் தன்மைகளெல்லாம்
புத்தம் புதுஉருவில் தேவையறிந்தே
போந்ததென ராமகிருஷ்ண தேவர்பிறந்தார்.

பள்ளிப் படிப்பெதுவும் இல்லாமலும்
பாடமும் வேறொருவர் சொல்லாமலும்
வெள்ளம் பலநிறைந்த கடலேபோல்
வெவ்வேறு மதங்களுக் கிடமானார்.

தானே நினைத்தறியும் படிப்பன்றோ
தன்னைத் தேற்றுவிக்க முடிப்பாகும்?
ஊனோ டுயிர்கலந்த ஒழுக்கமன்றோ
உண்மை ராமகிருஷ்ணர் வழக்கமெல்லாம்?

ஏட்டுப் படிப்பைமட்டும் கற்றோமே!
ஏழைக் கிரங்குமன்பைப் பெற்றோமா?
நாட்டில் நலிந்தவர்க்காய் அழுதுருகும்
ராமகிருஷ்ணர் தம்கருணை தொழுதிடுவோம்!

சோறும் துணியும்மட்டும் தேடினோமே!
துன்பம் குறைக்குமருள் கூடினோமா?
கூறும் ராமகிருஷ்ணர் கதைபடிப்போம்
கூடும் கவலைகளின் முனைஒடிப்போம்.


வீடும் மனையும்மட்டும் கட்டினோமே!
விமலன் அருளைக்கொஞ்சம் கிட்டினோமா?
பாடும் ராமகிருஷ்ணர் சரித்திரத்தைப்
படித்து ஜெயித்திடுவோம் தரித்திரத்தை!

மக்கள் மனைவிபொருள் நல்லதேதான்
மற்றும் பெரியசுகம் இல்லையோதான்?
மிக்க பெரியஇன்பம் கொண்டபெரியார்
மேலோர் ராமகிருஷ்ணர் கண்டுதெரிவோம்.

உடலுக் கணிகள்பல பூண்டோமே!
உயிருக் கழகுசெய்ய வேண்டாமோ?
கடனுக் கழுதுசெய்யும் பூசனையெல்லாம்
கட்டாது ராமகிருஷ்ணர் பேசினதுகேள்.

129. இசிறீ ரமணரிஷி

சித்தர்களும் முத்தர்களும் செறிந்து வாழ்ந்து
சேர்த்துவைத்த தவப்பயனின் சிறப்பே யாகும்.
எத்திசையும் இவ்வுலகில் எங்கும் காணா
எழில்மிகுந்த தமிழ்நாட்டின் அமைதி என்றும்
அத்தகைய மரபினுக்கிங் காக்கம் தந்தே
அருணகிரி நாதனுடை அருளைத் தேக்கி
முத்திநெறி காட்டுகின்ற மோன ஞான
முழுமதியாம் ரமணமகா முனிவன் ஜோதி.

வெற்றியென்றும் வீரமென்றும் வெறிகள் மூட்டி
வேற்றுமையே மக்களிடை விரியச் செய்து
கற்றுணர்ந்த பெரியவரைக் கசக்கப் பேசும்
கசட்டறிவின் தலையெடுப்பைக் காணும் இந்நாள்
பற்றொழித்த மெய்ஞ்ஞானி இவரே யென்று
பலகோடி பக்தர்மனம் பரவச் செய்த
நற்றவசி ரமணரிஷி வாழ்ந்த வாழ்வே
நம்நாட்டின் பெரும்புகழின் ஜீவ நாடி.

அணுவினுடன் அணுமோதி அழியச் செய்தே
ஆருயிர்கள் பதைபதைக்க அவதி மூட்டப்
பணவெறியும் பார்வெறியும் பற்றித் தூண்டும்
பாதகமே சாதனையாய்ப் படிக்கும் இந்நாள்
அணுவினுடன் அணுசேர அணைத்து நிற்கும்
ஆண்டவனின் திருவருளை அறியச் செய்த
குணமலையாம் ரமணரிஷி மோன வாழ்வே
கொடுமைகளை நம்மிடையே குறைக்கும் போதம்.

இன்றிருந்து நாளைக்குள் மறைந்து போகும்
இச்சிறிய உடலினுக்குள் புகுந்து கொண்டு
நன்றிருந்து பேசுகின்ற 'நான்யார்?' என்று
நாளில்ஒரு தரமேனும் நாடிப் பார்த்தால்
'என்றிருந்தோம்? எங்குவந்தோம்? எதுநாம்?' எல்லாம்
எளிதாகக் கண்டுகொள்வாய் என்றே சொல்லிக்
குன்றிருந்த விளக்கேபோல் திசையைக் காட்டும்
குறிக்கோளாம் ரமணமகா குருவின் வாழ்க்கை.

இந்திரியச் சுகங்களுக்கே ஓடி யாடி
இழிவடைந்து துறவடைந்தோர் பலபே ருண்டு
வந்தகடன் தீர்ப்பதற்கு வழியில் லாமல்
வைராக்யம் பூண்டவர்கள் வகையும் உண்டு
கந்தையற்றுத் தரித்திரத்தின் கவலை மாற்றக்
காவியுடை அணிந்தவரைக் காண்ப துண்டு
வந்துதித்த நாள்முதலாய்ப் பரத்தை நாடும்
வைராக்யம் ரமணரிஷி வாழ்வாய் நிற்கும்.

சக்திகளில் மிகச்சிறந்த சக்தி யாகும்
துன்பங்கள் சகிப்பதையே சாதித் திட்டான்.
வித்தைகளில் மிகப்பெரிய வித்தை யாகும்
விருப்புவெறுப் பில்லாத வேள்வி செய்தான்.
உத்திகளில் உச்சநிலை உள்ள தாகும்
உள்ளத்தில் பொய்யாமை உடைய னானான்
சித்திகண்ட ரமணரைநாம் சிந்தித் திட்டால்
சித்தசுத்தி பெற்றுமிகச் சிறந்து வாழ்வோம்.

130. வீரத் துறவி

ஆண்மை உருக்கொண்ட அந்தணன்--எங்கள்
அண்ணல் விவேகா னந்தனின்
மாண்பை அளந்திட எண்ணிணால்--இந்த
மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்.

காமனைப் போன்ற அழகினான்--பொல்லாக்
காமத்தை வென்று பழகினான் ;
சோமனைப் போலக் குளிர்ந்தவன்--ஞான
சூரியன் போலக் கிளர்ந்தவன்.

வீரத் துறவறம் நாட்டினான்--திண்ணை
வீணர்வே தாந்தத்தை ஓட்டினான்;
தீரச் செயல்களை நாடினான்--இந்தத்
தேச நிலைகண்டு வாடினான்.

கர்மத் தவநெறி காட்டினான்--நல்ல
காரியம் வீரியம் ஊட்டினான் ;
மர்மம், பலிதரும் பூசைகள்--ஹிந்து
மதமல்ல என்றுண்மை பேசினான்.

'உலகை வெறுத்துத் துறந்தவர்--தெய்வ
உள்ளக் கருத்தை மறந்தவர்
கலக நடுவிலும் தங்குவேன்'--என்று
கர்ஜனை செய்திட்ட சிங்கமாம்.

பெண்ணின் பெருமையைப் போற்றினான்--ஆண்கள்
பேடித் தனங்களைத் தூற்றினான்
மண்ணின் சுகங்களை விட்டவன்--ஏழை
மக்களுக் காய்க்கண்ணீர் கொட்டினான்.

ஏழையின் துன்பங்கள் போக்கவும்--அவற்(கு)
எண்ணும் எழுத்தறி வாக்கவும்
ஊழியம் செய்வதே ஒன்றுதான்--தேவை
உண்மைத் துறவறம் என்றுளான்.

தேசத் திருப்பணி ஒன்றையே--உண்மை
தெய்வத் திருப்பணி என்றவன் ;
மோசத் துறவுகள் போக்கினான்--பல
மூடப் பழக்கத்தைத் தாக்கினான்.

அடிமை மனத்தை அகற்றினான்--உயர்
அன்பின் உறுதி புகட்டினான்
கொடுமை அகற்றிட முந்திடும்--தவக்
கூட்டத்தை நாட்டுக்குத் தந்தவன்.

ஐம்பது வருடங்கள் முன்னமே--செல்வ
அமெரிக்கச் சிக்காக்கோ தன்னிலே
நம்பெரும் இந்திய நாட்டவர்--கண்ட
ஞானப் பெருமையைக் காட்டினான்.

வெள்ளையர் பாதிரி மாரெல்லாம்--கேட்டு
வெட்கித் தலைகுனிந் தார்களே!
தெள்ளிய ஞானத்தைப் போதித்தான்--அவர்
திடுக்கிட உண்மைகள் சாதித்தான்.

சத்திய வாழ்க்கையைப் பேசினான்--அருள்
சாந்தத் தவக்கனல் வீசினான் ;
யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம்--அந்த
உத்தமன் சொன்னதை வந்திப்போம்.

131. இயேசு கிறிஸ்து

தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

132. திலகர்
[திலகர் இறந்த சேதியைக் கேட்ட தினம் பாடியவை]

இடியது விழுந்த தோதான் இரும்பினைப் பழுக்க காய்ச்சி
இருசெவி நுழைத்த தோதான்!
தடியது கொண்டே எங்கள் தலையினில் அடித்த தோதான்
தைரியம் பறந்த தோதான்!
கொடியது சாய்ந்த தோதான் கொடுவிஷம் உச்சிக்கேறிக்
குறைந்திடுங் கொள்கை தானோ,
திடமுள தீர வீரர் திலகனார் மாண்டா ரென்ற
தீயசொற் கேட்ட போது!

'என்னுடைய பிறப்புரிமை சுயராஜ்யம்' என்னுமொரு
மந்திரத்தை எங்கட் கீந்த
மன்னவனே! திலகமுனி மஹாராஜா எம்முடைய
மராட்டியர்தம் மடங்க லேறே!
உன்னுடைய பெருஞ்சேனை யுத்தத்தி லணிவகுத்தே
உத்தரவை எதிர்பார்த் திங்கே
இன்னவழி போவதெனத் தெரியாமல் திகைக்கின்ற
இச்சமயம் இறக்க லாமோ!

அன்னியர்கள் தொட்டிழுக்க அவமானம்
நேர்ந்ததென அழுது நின்றாள்
அன்னை யுன்றான் பாரதத்தாய்; அவள்மானம்
காப்பதற்கே அவத ரித்தாய்;
சின்னஉன்றன் வயதுமுதல் இதுகாறும்
அப்பிடியைத் தளர்த்து விட்டாய்
இன்னுமவள் சிறைநீங்கி வருவதற்குள்
எம்மைவிட்டே ஏகி னாயே!

பகையென நினைத்த பேரும்
பக்தியோ டஞ்சி நிற்பார்;
மிகையெனச் சொல்லு வோரும்
மெய்சிலிர்த் திடுவர் கண்டால்;
நகைமுகங் கண்ட போதும்
நடுங்குவார் வெள்ளைக் காரர்;
தகையவன் பிரிந்து போகத்
தரிக்குமோ இந்த நாடு?

வசைகூறி உனையிகழ்ந்த வாலண்டைன் சிர்ரலெனும்
வகையி லோனை
வழிகூற அவன்மேலே நீதொடுத்த
வழக்கிற்பல வஞ்ச மாற்றி,
அசைகூறி ஆங்கிலர்கள் அவன்பக்கம் தீர்ப்பளித்த
அவதி நோக்கி,
அங்கவர்கள் நீதிதனில் வைத்திருந்த நம்பிக்கை
அறவே நீங்கி.
இசைகூற உலகமெலாம் இருந்தாலும்
பெருங்கடவுள் இருமன் றத்தில்
எடுத்துரைப்போம் இக்குறையும் இந்தியர்கள்
பலகுறையும்; என்றுசொல்லிப்
பசைகூறித் தேவரிடம் பண்ணினையோ
விண்ணப்பம் பரிவு கூறிப்
பாங்குடனே அவர்விடுத்த ஓலைக்குப்
பதிலுரைக்கப் போயி னாயோ!

நிலையிழந்து பரிதவிக்கும் நீபிறந்த
இந்நாட்டின் நிலைமை நோக்கி,
நீபட்ட கொடுந்துயரம் இன்னொருவர்
படுவரென நினைக்கப் போமோ?
கலையிழந்த மதியானோம்! கண்ணிழந்த
முகமெனவே கலங்கி நின்றோம்!
காரிழந்த பயிரெனவே சோறிழந்த
வயிறெனவே சோர்ந்து விட்டோம்?
தலையிழந்த உடலமெனத் தவிக்கின்றோம்
இதுஉனக்குத் தருமந் தானோ?
தஞ்சமென முன்னின்று தைரியத்தோ
டுழைக்குமுன்றன் சத்த மோய
அலையிழந்த கடலேபோல் ஆட்டிழந்த
பம்பரம்போல் அடங்கி வீழ்ந்தோம்!
ஆரினிமேல் எங்களையிங் கன்னையென
முகந்துடைத்தே அறிவு சொல்வார்!

'இருப்பாய்நீ சிறைவாசம் இருமூன்று
வரு‡ம்' என இசைந்து கூறி,
'இதுபோதா துன்றனக்கு; மிகக்குறைத்தேன்
நானிதனை' என்ற, உன்றன்
சிறப்பறியப் போதாத தேவாரென்
றொருஜட்ஜூ செப்புங் காலை,
சிரித்தமுகம் கோணாமல் சினத்தஅகம்
காட்டாமல் செப்ப லுற்று
மறுப்பதுண்டு; குற்றமிலேன், மகிதலத்தை
ஆளுகின்ற சக்தி வேறே
மறைத்திருந்து நானடையும் கஷ்டத்தின்
பயனான மர்ம மாகச்
சிறப்பென்றன் தேசமென்று தெய்வத்தின்
திருவுள்ளத் தீர்ப்போ? என்று
செப்பினசொல் அழியாமல் எம்மனத்தில்
பச்செனவே திகழு மென்றும்.

அஞ்சாத நெஞ்சம் வேண்டின்
அசையாத ஞானம் வேண்டின்
ஆடாத கொள்கை வேண்டின்
ஓடாத உறுதி வேண்டின்
கெஞ்சாத வாழ்க்கை வேண்டின்
கேடிலா எண்ணம் வேண்டின்
கேளாத கலைகள் வேண்டின்
மாளாத உழைப்பு வேண்டின்
நஞ்சான பேர்கள் யாரும்
நடுங்குமோர் நடத்தை வேண்டின்
நாணாத செயல்கள் வேண்டின்
கோணாத குணங்கள் வேண்டின்
செஞ்சாறு வார்த்தை வேண்டின்
திலகனார் சரிதை தன்னில்
தெரியாத நீதி யெல்லாம்
தெரியலாம் தெளிவா யங்கே.

கருத்ததெல்லாம் நீராமோ? வெளுத்ததெல்லாம்
பாலாமோ? கண்ணிற் கண்ட
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லே யாமோ?
பருத்ததெல்லாம் கரியாமோ? பாய்ந்ததெல்லாம்
சிங்கமாமோ? பளப ளப்பாய்ப்
பளுவிருந்தால் தங்கமெனப் பகர லாமோ?
விரித்தநிலாக் கதிர்பரப்பி வெள்ளியோடு
பலமீன்கள் விளங்கி னாலும்
வெங்கதிரோன் வந்ததென விளம்ப லாமோ?
தெருத்தெருவாய் மேடையிட்டுத் திசைமுழங்கப்
பலபேசித் திரிந்திட் டாலும்
திலகர்பிரா னாவரெனச் செப்ப லாமோ?

கருமமது செய்தல் வேண்டும்
கலங்காமல் உழைத்தல் வேண்டும்
கண்ணபிரான் கீதையிலே
சொன்னமொழி கடைப்பி டித்த
பெருமையுள்ள திலக ரைநீ
பிரித்தாயே யெம்மை விட்டு!
பெம்மானே! ஒருவ ரம்நீ
பிழையாது தருதல் வேண்டும் ;
தருமமது குறையும் போதும்
தப்பிதங்கள் நிறையும் போதும்
தப்பாம லவத ரிப்பேன்
தரணி யில்நா னென்றபடி
அருமறைகள் அறிய மாட்டா
அரும்பொருளே வருதல் வேண்டும்,
அன்பு டன்நீ அப்போதும்
திலககுரு அடைதல் வேண்டும்.

133. தாதாபாய் நவரோஜி

நேற்றுதித்த தேசமெல்லாம் நினைத்தபடி
பலபேசி நிந்தை கூறி
நின்றிடவே குன்றிடநாம் நெஞ்சுருகிப்
பஞ்சையராய் நித்த மேங்க
வேற்றரசர் நேசரெல்லாம் வேடிக்கை
பார்த்தவராய் விந்தை பேச
வெட்கமதால் தலைகுனிந்து வெருண்டுமன
மருண்டஎமை வெருளே லென்றும்
'ஆற்றலுள்ள முன்னோர்கள் அவர்வழியில்
பிறந்தநமக் கவதி யுண்டோ?
அடைந்திடுவோம் சுயராஜ்யம்; அஞ்சாதீர்!'
எனமொழிந்தும் அன்பினாலே
தேற்றிடவே முன்னின்றாய் தெளிவுடையாய்
தாதாபாய் நவரோ ஜீயே!
தேவருடன் கலந்தனையோ எங்குறையை
அங்கவர்க்குச் செப்ப வேண்டி?

'இருங்கிழவி பெருந்தேவி இந்தியநா
டெம்மையெலாம் ஈன்ற தாயின்
உறுங்கிழமை சுதந்தரங்கள் ஒன்றேனும்
குறையாமல் வந்தா லன்றி
நெருங்கியநோய் பஞ்சங்கள் ஒருபோதும்
நீங்கா'வென்றுறுதி சொன்ன
பெருங்கிழவா! தாதாபாய் நவரோஜி!
உன்பெருமை பெரிதே யாகும்.

'பேசுவதால் பெறுவதில்லை பிதற்றுவதால்
பெருமையில்லை பிறரை நொந்தே
ஏசுவதால் நேசமில்லை இழித்ததனால்
களித்ததில்லை என்று சொல்லித்
தாசனென உழைத்திடவே வேண்டுமென்று
தளராமல் உழைத்துக் காட்டி
ஆசையுடன் நீயுரைத்த அம்மொழியை
எக்காலும் மறவோம் ஐயா!

உடலமது தளர்ந்தாலும் உன்னுறுதி
தளராமல் உழைத்து நின்றாய்;
சடலமது மானிடராய்ப் பிறந்தவர்கள்
இதைவிடவும் சாதித் தாரோ?
கடலுலகில் பிறந்தவர்கள் கணக்கற்றா
ரென்றாலும் கருதில் நீயே
அடைவரிய ஜென்மத்தின் அரும்பயனை
அறிந்தவரை அடைந்தாய் ஐயா!

பணமிருந்தும் பெருமையில்லை; பந்துஜன
மித்திரர்கள் பரந்து சூழும்
கணமிருந்தும் கண்டதில்லை ; காடிருந்தும்
வீடிருந்தும் கனதை யுண்டோ?
குணமிருந்து பொறுமையுடன் குறையிரந்தார்
ஏழைகளைக் குறித்து வாடும்
மனமிருந்தார் அடைந்திடுமோர் மாட்சிமைக்கு
நீயுமொரு சாட்சி யானாய்.

134. கோபாலகிருஷ்ண கோகலே

படிப்பெனும் கடலை நீந்திப்
பணமெனும் ஆசை போக்கிக்
கடிப்புடன் மமதை யென்னும்
களையிலா தொழுகி நின்று
துடிப்புடன் இந்து தேசத்
தொண்டனாம் தலைமை பூண்டு
கொடிப்படை யில்லா தாண்டான்
கோகலே என்னும் வேந்தன்.

ஜாதிமத பேதமெல்லாம் கடந்து நின்றான்
தனிப்பெரிய குலத்துதித்த தகைமை யுள்ளோன்
'மேதினியில் உடன்பிறந்த உயிர்க ளெல்லாம்
மெலிவின்றிப் பசிநீங்கிக் களிப்ப தொன்றே
ஊதியமாம்', எனக்கருதி உழைப்ப தற்கே
உடலோடு பொருளாவி உதவி நின்றான்
கோதிலனாம் கோபால கிருஷ்ண னெங்கள்
கோகலே யவன்பெருமை கூறப் போமே!

தன்சுகமாம் தன்னாட்டார் சுகமே யென்றும்
தன்னறிவாம் தன்னாட்டார் அறிவே யென்றும்
தன்பெருமை தன்னாட்டார் பெருமை யென்றும்
தன்சிறுமை தன்னாட்டார் சிறுமை யென்றும்
மன்பெரிய சபைதனிலும் மறவா னாகி
மலைபோல நிலையாகப் பாடு பட்டான்
என்சொலுவோம் கோகலே பெருமை தன்னை
இறந்தாலும் இறவாதான் இவனே யாவான்.

தருமமும் கரும மெல்லாம்
தனித்தனி மறந்து மிக்க
தரித்திரம் பிணிக ளெல்லாம்
தங்கியே இங்கு நிற்கப்
பெருநிலக் கிழவி யிந்தப்
பேதையாம் இந்து தேசம்
பலபல துன்ப முற்றுப்
பஞ்சையாய் வாடி நிற்க
வெறுமனே யிருந்து நாங்கள்
வீணரா யலைந்து கெட்டோம்
வேண்டினோம் தேச பக்தி
விமலனார் எமக்குத் தந்த
பெருமனே! கோக லேநீ
பின்னையும் பிறந்து வந்து
பெற்றதாய் இந்துமாதின்
பிணியெலாம் அறுத்து வைப்பாய்.

135. வ. வே. சு. ஐயர்

தமிழ்மொழியின் பெருமைதன்னை உலகறிய எடுத்தறைந்த
தனிப்பறையின் பேரோசை தணிந்த தேயோ!
துமியுரைத்த கவியரசன் சுவைவிளக்கக் கம்பனுக்காய்த்
தூதுவந்த பாதமவை துவண்ட வேயோ!

அமிழ்ந்துறங்கும் தமிழர்களை அடிமைஇருள் அகன்றதென
அழைத்தெழுப்பும் கோழிகுரல் அடைத்த தேயோ!
குமிழ்நுரையின் மலையருவிச் சுழல்விழுந்து குருகுலத்துச்
சுப்ரமண்ய ஐயருடல் மறைந்த கொள்கை.

சுழிந்தோடி மடுக்கள்மிகும் உலகநடைச்
சுழல்கள்பல நீந்தி ஏறி
வழிந்தோடும் மலையருவிச் சுழல்விழுந்து
கரையேற மாட்டாய் ஏனோ!
கொழுந்தோடிப் படர்கலையின் குளிர்ஞானக்
குன்றே! ஓர் குன்றி னின்றும்
ஒழிந்தோடி மறைந்தனையே! உடன்போந்த
சிறுவர்களின் உணர்ச்சி ஓட.

தேனாட்டும் தென்மொழியும் தெருளூட்டும்
வடமொழியும் தெளியத் தேர்ந்து
மேனாட்டுப் பலமொழியும் மிகக்கூட்டிக்
கடைந்தெடுத்த அறிவை யெல்லாம்
தாய்நாட்டின் விடுதலைக்கே தனிநாட்டித்
தவம்புரிந்த தகைமை யாளா!
வானாட்டிற் சிறந்ததென்பாய் தமிழ்நாட்டை
விட்டுப்போய் வாழ்வ தெங்கே?


'ஐயரெனில் அந்தணராய் அனைத்துயிர்க்கும்
செந்தண்மை அருள்வோர்', என்று
செய்யதிரு வள்ளுவனார் செய்தமொழித்
திருக்குறளின் சீல னாகி
மெய்யறிவைப் பெறநாடி மெய்வருத்திப்
பொய்வெறுத்த மேன்மை யாலோ
'ஐயர்' என்று தனியுரைத்தால் உனையன்றித்
தமிழுலகம் அறியா தையா!

முழுமதி மயிர்த்தா லன்ன
முகந்திகழ் கருணை நோக்கும்
மூர்க்கரும் நேரிற் கண்டால்
முகந்திடும் சாந்த வீச்சும்
குழலினும் இனிய தான
குழந்தையின் மழலைப் பேச்சும்
குவிந்திடும் உதட்டிற் கூடக்
கூத்திடும் சிரிப்பின் கூட்டும்
தழலினும் தூய வாழவும்
தாயினும் பெரிய அன்பும்
சத்திய நிலையும் முன்னாள்
தவமுனி இவனே என்னப்
பழகிய பேயும் போற்றும்
படித்தொரு வடிவம் தன்னைப்
பாரிடை இனிமேல் வேறு
யாரிடைப் பார்ப்போம் ஐயா!

136. கவி தாகூர்

கலைமகள் கண்ணீர் சோரக்
கவிமகள் கலங்கி வீழத்
தலைமகன் இறந்தா னென்றே
இந்தியத் தாய்த விக்க
அலைகடற் கப்பா லுள்ள
அறிஞர்கள் யாரும் ஏங்க
மலைவிளக் கவிந்த தென்ன
மறைந்தனன் கவிதா கூரே.

சந்திரன் கிரணத் தோடு
சூரியன் ஒளிசேர்ந் தென்ன
செந்தணல் நெருப்பில் நல்ல
சிலுசிலுப் பிணைந்த தென்ன
அந்தணர் அமைதி யோடே
அரசரின் ஆண்மை கூட்டும்
சுந்தரக் கவிகள் பாடும்
சொல்வள முடையோன் தாகூர்.

கருணையின் உருவு காட்டும்
கவிரவீந் திரநாத் தாகூர்
அருணனாய் உலகுக் கெல்லாம்
அறிவொளி பரப்பி வாழ்ந்தான்
மருணெறி மாற்ற இந்த
மாநில மக்கட் கெல்லாம்
பொருணெறி சாந்தி சொல்லும்
புத்தக மாக நிற்பான்.

அரசியல் போராட் டத்தில்
ஆழ்ந்திலன் என்றிட் டாலும்
புரைசெயும் அடிமை வாழ்வின்
புண்ணையே எண்ணி எண்ணிக்
கரைசெய முடிந்தி டாத
கவலையால் கண்ணீர் பொங்க
உரைசொலி அடிமைக் கட்டை
உடைத்திடத் துடித்தோன் தாகூர்.

'ஒத்துழை யாமை' என்று
காந்தியார் உரைக்கும் முன்னால்
இத்துரைத் தனத்தார் தம்மோ
டிணங்கிடப் பிணக்கி விட்டோன்
பற்றுகள் அவர்முன் தந்த
பட்டமும் பரிசும் வீசிச்
சுத்தியை முதலிற் செய்த
சுதந்தர தீரன் தாகூர்.

காந்தியும் 'குருதேவ்' என்று
கைகுவித் திறைஞ்சும் தாகூர்
மாந்தருள் பலநாட் டாரும்
மதங்களும் மருவி வாழ்ந்து
தேர்ந்தநல் லறிவை அன்பைச்
செகமெலாம் பரப்ப வென்றே
'சாந்திநி கேதன்' என்ற
சமரச சங்கம் தந்தோன்.

கலைகளின் வழியே தெய்வக்
கருணையைக் காண்ப தென்னும்
நிலையினைப் படிக்க வென்றும்
நிறுவிய நிலையம் ஈதாம்
சிலைதரல் ஆடல் பாடல்
சித்திரம் நடிப்ப ரங்கம்
பலவித வித்தை எல்லாம்
பயிலுதற் கிடமாய் நிற்கும்.

தாய்மொழிப் பற்றும் தங்கள்
கலைகளைத் தாங்கி நிற்கும்
ஆய்மையும் வங்கா ளிக்கே
அதிகமாம்; அதனால் எல்லாச்
சீமையும் தாகூர்ப் பாட்டைச்
சிறப்புறப் பரப்பி னார்கள் ;
வாய்மையைத் தமிழர் போற்றி
ளர்ப்பரோ தமிழின் மாண்பை?

137. தேசிகவிநாயகம் பிள்ளை

தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பதென்றன் செவிப்பெருமை ;
ஆசிய ஜோதியெனும் புத்தர்போதம்
அழகுத் தமிழில்சொன்னான் அதுபோதும்.

கோழி குலவிவரும் ; கிளிகொஞ்சும் ;
குழந்தை எழுந்துதுள்ளிக் களிமிஞ்சும் ;
ஏழை எளியவர்கள் யாவருக்கும்
இன்பம் கொடுக்கஅவன் பாவிருக்கும்.

உழுது தொழில்புரியும் பாட்டாளி
உழைப்பில் ஓய்வுதரும் பாட்டாகும் ;
தொழுதே அடிமைப்படும் துயரமெல்லாம்
தூரத் தள்ளமனம் உயருமடா!

படித்துப் பழகாத பாமரருக்கும்
பாடிப் பருகஅதில் சேமமிருக்கும் ;
ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை ;
ஊன்றிப் பதம்கூட்டும் பந்தனமல்ல.

காடும் மலையும்அதில் கலைபேசும் ;
கடலும் ஞானம்தர அலைவீசும் ;
பாடும் தேசிகவி நாயகத்தின்
பழமை பாடிடஎன் நாஉவக்கும்.

நோய்நொடி யாவையும் விட்டோடி
நூறு வயதும்சுகக் கட்டோடு
தாய்மொழி வளர்த்தவன் கவிகாணும்
தனிவரம் தெய்வம் தரவேணும்.

138. வ. உ. சிதம்பரம் பிள்ளை

சிதம்பரம் பிள்ளையென்று பெயர்சொன்னால்--அங்கே
சுதந்தர தீரம்நிற்கும் கண்முன்னால் ;
விதம்பல கோடிதுன்பம் அடைந்திடினும்--நாட்டின்
விடுதலைக் கேயுழைக்கத் திடந்தருமே.

அடிமை விலங்கையெல்லாம் அறுத்தெறியும்--நல்ல
ஆற்றல் கொடுக்கும்அவன் சரித்திரமே ;
கொடுமை பலசகிக்கும் குணம்வருமே--நாம்
கோரும் சுதந்தரத்தை மணந்திடுவோம்.

திலக மகரிஷியின் கதைபாடும்--போது
சிதம்பரம் பிள்ளைவந்து சுதிபோடும் ;
வலது புயமெனவே அவர்க்குதவி--மிக்க
வாழ்த்துக் குரிமைபெற்றான் பெரும்பதவி.

திருக்குறள் படித்திட ஆசைவரின்--புதுச்
சிதம்பரம் பிள்ளைஉரை பேசவரும் ;
தருக்கிடத் தக்கபெருந் தமிழ்ப்புலமை--கற்றார்
தலைவணங் கிப்புகழும் தனிநிலைமை.

சுதேசிக் கப்பல்விட்ட துணிகரத்தான்--அதில்
துன்பம் பலசகித்த அணிமனத்தான் ;
விதேச மோகமெல்லாம் விட்டவனாம்--இங்கே
வீரசு தந்தரத்தை நட்டவனாம்.

நாட்டின் சுதந்தரமே குறியாக--அதை
நாடி உழைப்பதுவே வெறியாக
வாட்டும் அடக்குமுறை வருந்துயரை--வெல்ல
வாழும் சிதம்பரத்தின் பெரும்பெயராம்.

139. சிதம்பரம் பிள்ளை நினைவு

மடமையதோ பிறநாட்டார் மயக்கந் தானோ
மக்களெல்லாம் சுதந்தரத்தை மறந்தா ராகி
அடிமைஇருள் நள்ளிரவாய் அனைத்தும் மூடி
யாரும்தலை நீட்டவொண்ணா அந்த நாளில்
திடமனத்துச் சிதம்பரப்பேர் பிள்ளை யாவான்
செய்திருக்கும் அச்சமற்ற சேவை சொன்னால்
உடல்சிலிர்க்கும் உயிர்நிமிர்ந்தே உணர்ச்சி பொங்கும்
உள்ளமெல்லாம் நெக்குநெக்காய் உருகு மன்றோ?

எல்லாரும் தேசபக்தர் இந்த நாளில் ;
எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்பார் ;
சொல்லாலும் எழுத்தாலும் விளக்க வொண்ணாத்
துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில் ;
வல்லாளர் சிதம்பரனார் சிறையிற் பட்ட
வருத்தமெலாம் விரித்துரைத்தால் வாய்விட் டேங்கிக்
கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டிக்
கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்.

சாதிகுலச் சமயமெலாம் கடந்த தக்கோர்
சமரசமும் சன்மார்க்கம் தழுவும் சான்றோர்
நீதிநெறி மிகப்பயின்ற பலபேர் சேர்ந்து
நிறுவியநம் காங்கிரசை நிதமும் போற்றிப்
பேதமுற்றுப் பிணங்கிவிட நேர்ந்த போதும்
பெரியசபை அதைஇகழ்ந்து பேசா நேசன்
ஓதிஅதன் வளர்ச்சியையே விரும்பி வாழ்த்தி
உள்ளளவும் சிதம்பரந்தான் உவப்பான் உள்ளம்.

பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று
பெரியபல தீர்மானக் கோவை செய்து
காசுபணப் பெருமையினால் தலைவ ராகிக்
காங்கிரஸை நடத்தியதைக் கண்டு நொந்து
'தேசநலம் தியாகமின்றி வருமோ?' என்று
திலகர்பிரான் செய்தபெருங் கிளர்ச்சி சேர்ந்தே
ஓசைபடா துழைத்தசில பெரியோர் தம்முள்
உண்மைமிக்க சிதம்பரனும் ஒருவ னாகும்.

'உழுதுபல தொழில்செய்தே உழைப்போ ரெல்லாம்
உணவும்உடை வீடின்றி உருகி வாடப்
பழுதுமிக அன்னியர்க்குத் தரக ராகிப்
பசப்புகின்ற வீணருக்கோ சுகங்கள்!' என்றே
அழுதுருகித் தொழிலாளர் இயக்கம் கண்டே
அந்நாளில் சிதம்பரன்முன் நட்ட வித்தாம்
விழுதுபல விட்டபெரு மரமாய் இன்று
வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம்.

கள்ளமற்றுக் கலகலத்த பேச்சுக் கேட்கும் ;
கறுப்பெனினும் சிரிப்புமுகம் கருணை காட்டும் ;
குள்ளமென்னும் ஓர்உருவம் இருகை கூப்பிக்
குண்டெடுத்துக் கடைந்ததெனக் குலுங்க நிற்கும் ;
வெள்ளையன்றி வேறுநிறம் அறியா ஆடை
வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும் ;
கொள்ளைகொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும்
குலவுபிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால்.

140. பாரதி ஓர் ஆசான்

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப்
பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க
உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்' என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.

அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே
அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்
விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி
நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த
வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.

சாதிமதச் சழக்குகளைப் பற்றிக் கொண்டு
சமுதாயம் சீரழியும் தன்மை போக்க
நீதிநெறி நிறைந்தகுண ஒழுக்க வாழ்க்கை
நீங்காது நிற்பவரே மேலோர் என்னும்
போதனையே மூச்சாகப் பொழுதும் பாடிப்
புதுயுகத்தை நம்முளத்தில் புகுத்தி வைத்த
சாதனையால் எப்போதும் எல்லா ருக்கும்
சத்தியமாய்ப் பாரதிஓர் ஆசான் தானே!

கண்ணிரண்டில் ஒருகண்ணைக் கரித்தாற் போலும்
கைகால்கள் இரண்டிலொன்றைக் கழித்தாற் போலும்
பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்
பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்
பாவையரைச் சரிநிகராய்ப் பாராட் டும்நல்
எண்ணமதை நம்மனத்தில் இருக்கச் செய்த
ஏற்றத்தால் பாரதிஓர் ஆசான் என்போம்.

'மனைவிமக்கள் சுற்றத்தார் மற்றும் இந்த
மாநிலத்தில் காணுகின்ற எல்லாம் மாயை'
எனவுரைக்கும் கொள்கைகளின் இழிவைக் காட்டி
இல்லறத்தில் தெய்வஒளி இருக்கச் செய்தால்
நினைவிலுறும் முத்தியின்பம் தானே வந்து
நிச்சய்மாய் நம்மிடத்தில் நிற்கும் என்ற
புனிதமுள்ள தமிழறிவைப் புதுக்கிச் சொன்ன
புலவன்அந்த பாரதிநாம் போற்றும் ஆசான்.

உழைப்பின்றி உண்டுடுத்துச் சுகித்து வாழும்
ஊதாரி வீண்வாழ்க்கை மிகுந்த தாலே
பிழைப்பின்றி வாடுகின்ற ஏழை மக்கள்
பெருகிவிட்டார் நாட்டிலெனும் உண்மை பேசித்
தழைப்பின்றிப் பலதொழிலும் தடைப்பட் டேங்கத்
தானியங்கள் தருகின்ற உழவும் கெட்டுச்
செழிப்பின்றி வாழ்கின்றோம் இதனை மாற்றும்
செய்கைசொன்ன பாரதிஓர் சிறந்த ஆசான்.

கொலைமேவும் போர்வழியை இகழ்ந்து கூறிக்
கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
கலைவாணர் மெய்த்தொண்டர் கருதிப் போற்றும்
காந்திஎம்மான் அருள்நெறியைக் கனிந்து வாழ்த்தும்
நிலையான பஞ்சகத்தைப் பாடித் தந்து
நித்தநித்தம் சன்மார்க்க நினைப்பைக் காட்டும்
தலையாய தமிழறிவை நமக்குத் தந்த
தவப்புதல்வன் பாரதிஓர் ஆசான் தானே!

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்
தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி
அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்
ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

141. பாரதிக்கு வெற்றி மாலை

சுப்ரமண்ய பாரதிக்கு வெற்றிமாலை சூட்டுவோம்
சொன்னவாக்குப் பின்னமின்றிச் சொந்தஆட்சி நாட்டினோம்
இப்ரபஞ்ச மக்கள்யாரும் இனியவாழ்த்துக் கூறவே
இன்றுநந்தம் பரததேவி ஏற்றபீடம் ஏறினாள்.

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்
சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி
சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை
அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்
பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்
அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்
கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.

அமைதிமிக்க தமிழ்மொழிக்கிங் காற்றல்கூட்ட நாடினான்
அறிவுமிக்க தமிழர்தங்கள் அச்சம்போக்கப் பாடினான்
சமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான்
சமயபேதம் இல்லையென்ற சத்தியத்தைப் பேசினான்.

142. பாரதி நினைவு

சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்
சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;
'
இந்தியன்நான்' என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;
எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரிய 'தமிழன்'எனும் உவகை ஊறும் ;
உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

அச்சமெனும் பெரும்பேயை அடித்துப் போக்கும் ;
அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும் ;
துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச்
சுதந்தரத்தை விட்டுவிடாத துணிவு தோன்றும் ;
கொச்சைமிகும் பிறநாட்டு மயக்க மெல்லாம்
கூண்டோடு விட்டொழிக்கத் தெளிவு கூட்டும் ;
மெச்சிடுநம் தாய்நாட்டின் நாக ரீகம்
மேன்மையெல்லாம் பாரதியார் பாட்டால் மேவும்.

தரித்திரத்தின் கொடுமையெல்லாம் சேர்ந்து வாட்டத்
தன்வீட்டில் உணவின்றித் தவித்த நாளும்
சிரித்தமுகம் மாறாமல் செம்மை காத்துத்
தேசத்தின் விடுதலையே சிறப்பா யெண்ணித்
தெருத்தெருவாய்த் தேசீய பஜனை பாடிச்
சென்னையிலும் உணர்ச்சிவரச் செய்த தீரன்
உருத்தெரியா திப்போதும் இங்கே நம்மை
ஊக்குவதும் பாரதியின் உரைக ளேயாம்.

பெண்ணுலகம் புதுமைபெறப் பழமை பேசிப்
பெருமையவர் உரிமைகளைப் பெரிதும் போற்றி
மண்ணிலவர் இழிவுபெறச் செய்து வைத்தோர்
மடமைமிகும் கொடுமைகளை மறுத்துப் பாடிக்
கண்ணியத்தைப் பிற்காலக் கவிஞர் தம்முள்
காத்ததுநம் பாரதியின் கவியே யாகும் ;
எண்ணஎண்ணத் தமிழ்மொழிக்கோர் ஏற்ற மாகும் ;
பாரதியின் திருநாமம் என்றும் வாழ்க!

எங்கேயோ எட்டாத உலகம் தன்னில்
இருப்பரென நாம்படித்த தெய்வம் எல்லாம்
இங்கேயே எம்முடனே எவரும் காண
ஏழைமக்கள் குடிசையிலும் இருப்ப தாக்கும்
சிங்காரப் புதுக்கவிகள் பாடி பலம்முத்
தேவரெல்லாம் தமிழ்நாட்டின் திரியச் செய்தோன்
மங்காதாம் பாரதியின் நினைவைப் போற்றி
மறவாமல் தமிழ்நாட்டார் வாழ்த்த வேண்டும்.

143. பாரதி எனும் பெயர்

பாரதி எனும்பெயரைச் சொல்லு--கெட்ட
பயமெனும் பகைவனை வெல்லு.
நேரினி உனக்குநிகர் இல்லை--உடன்
நீங்கும் அடிமைமனத் தொல்லை.

சுப்ரமண்ய பாரதியின் பாட்டு--பாடிச்
சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.
ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும்--அதுவே
உன்பலத்தை நீஉணரக் காட்டும்.

துள்ளிக் குதித்துவரும் சந்தம்--செயல்
தூண்டித் துணைபுரியச் சொந்தம்.
அள்ளிக் கொடுத்தபெரும் உறவோன்--நம்
அருமைப் பாரதியை மறவோம்.

அன்பு நிறைந்ததமிழ் மொழியில்--செயல்
ஆண்மை குறைந்ததெனும் வழியின்
தென்பு மறைந்துழன்ற போதில்--நல்ல
தீரம் கொடுக்கவந்த தூதன்.

அமைதி குலவும்தமிழ்ச் சொல்லில்--பல
ஆற்றல் புகுத்திவிட்ட வல்லன்
நமது பாரதியின் பாட்டே--தமிழ்
நலத்தைக் காக்கும்ஒரு கோட்டை.

இனிமை யான தமிழ்ப் பா¨‡--அதில்
'இல்லை வேகம்' எனும் ஓசை.
முணகிப் பேசும்ஒரு வகையை--வென்று
முழங்கும் பாரதியின் இசையே.

முன்னோர் பெருமைமட்டும் பேசிப்--புது
முயற்சி ஒன்றுமின்றிக் கூசிச்
சின்னா பின்னமுற்று வாடும்--நாம்
சீர்திருந்தக்கவி பாடும்.

அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம்--வெறும்
அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம்.
கொடுமை கண்டுமனம் கொதித்தான்--கவி
கொட்டி வீரியத்தை விதைத்தான்.

ஊனைப் பெரியதெனக் கொண்டோம்--ஆன்ம
உணர்வை விற்றுருசி கண்டோம்.
மானம் போகும்என்ற நிலமை--தனை
மாற்றும் பாரதியின் புலமை.

பண்டைச் சிறப்புகளைப் பாடிக்--கிழப்
பாட்டிகள் கூட்டமெனக் கூடி
அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில்--நவ
ஆர்வம் வளர்த்தவன் பாட்டே.

தீரன் அறிவுரையை இகழ்ந்து--வெறும்
திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து,
பேரைக் கெடுத்துவிட மாட்டோம்--எனும்
பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம்.

கவிஞன் வாக்குறுதி பலிக்கும்--நம்
கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும்
புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம்--வெகு
புதுமை யாகஅர சாள்வோம்.

வாழ்க பாரதியின் அருமை--அதில்
வளர்க தாய்மொழியின் பெருமை.
வாழ்க வையகத்தில் யாரும்--பிணி
வறுமை அச்சமற்று வாழ்க.

144. வல்லபாய் பட்டேல்

இல்லாத காந்திமகான் இருந்தாற் போல
எப்பொழுதும் காந்திவழி எடுத்துக் காட்டிக்
கொல்லாத விரதமதே குறியாய்க் கொண்டு
குற்றமற்ற சத்தியமே நெறியாய்க் கூடிக்
கல்லான மனமுடையோர் எதிர்த்த போதும்
கலங்காத தெளிவுடைய கர்ம வீரன்
வல்லாளன் வல்லபாய் பட்டேல் மாண்ட
வருத்தமதை விரித்துரைக்க வார்த்தை யுண்டோ?

காந்தியென்ற தவநெருப்பில் காய்ச்சிக் காய்ச்சிக்
கசடொழிய மாற்றுயர்ந்த கனக மாகும்.
சாந்தியென்ற குளிர்மதியின் தன்மை யோடும்
சத்தியத்தின் வாளேந்தும் சர்தா ராகும்.
மாந்தருக்குள் தீயவரை அடக்கி யாளும்
மந்திரியின் தந்திரத்தின் மார்க்க மெல்லாம்
வாய்ந்திருந்த வல்லபாய் பட்டேல் மாண்ட
வருத்தமதைப் பொறுத்திருக்க வலிமை வேண்டும்.

அன்புமுறை தவறாத அமைச்ச னாகும் ;
அரசுநிறை குறையாத ஆற்ற லுள்ளோன் ;
துன்பநிலை பலகோடி சூழ்ந்திட் டாலும்
துளங்காமல் துணிவுரைக்கும் துணைவ னாகும்
இன்பசுகம் தனக்கெதுவும் வேண்டா னாகி
இந்தியத்தாய்த் திருப்பணிக்கே எல்லா மீந்தான் ;
நம்பகத்தின் வடிவெடுத்த வல்ல பாயை
நாமிழந்த பெருந்துயரில் நாதன் காக்கும்.

காந்தியண்ணல் மறைந்திடித்த கலக்கம் தீர்ந்து
கண்திறந்து புண்மறையக் காணு முன்னால்
சாந்தனவன் நமக்களித்த காவ லாளன்
சர்தார்நம் வல்லபாய் பட்டேல் சாக
நேர்ந்துவிட்ட இத்துயரால் நமது நெஞ்சம்
நெக்குவிடத் தக்கதுதான் என்றிட் டாலும்
சோர்ந்துவிடக் கூடாது பட்டேல் போலச்
சுதந்தரத்தைக் காந்திவழி தொடர்ந்து காப்போம்.

பிறந்தவர்கள் எல்லோரும் இறந்தே போவார்
பின்னிருக்கும் தலைமுறையர் பெருமை கொள்ளும்
அறந்தெரிந்து வாழ்ந்தவரே அறிஞ ராவர்
அன்னவர்க்கே மக்களெல்லாம் அருமை செய்வார்
திறந்தெரிந்து காந்திமகான் ஜோதி யான
திருவிளக்கு மங்காமல் தினமுங் காத்து
மறைந்துவிட்ட வல்லபாய் நமக்குத் தந்த
மணிவிளக்கை நாம்காத்து வாழ வேண்டும்.

145. உ. வே. சாமிநாத ஐயர்

பேச்செல்லாம் தமிழ்மொழியின் பெருமை பேசிப்
பெற்றதெல்லாம் தமிழ்த்தாயின் பெற்றி யென்று
மூச்செல்லாம் தமிழ்வளர்க்கும் மூச்சே வாங்கி
முற்றும்அவள் திருப்பணிக்கே மூச்சை விட்டான்.
தீச்சொல்லும் சினமறியாச் செம்மை காத்தோன்
திகழ்சாமி நாதஐயன் சிறப்பை யெல்லாம்
வாய்ச்சொல்லால் புகழ்ந்துவிடப் போகா துண்மை ;
மனமாரத் தமிழ்நாட்டார் வணங்கத் தக்கோன்.

அல்லுபகல் நினைவெல்லாம் அதுவே யாக
அலைந்தலைந்தே ஊருராய்த் திரிந்து நாடிச்
செல்லரித்த ஏடுகளைத் தேடித் தேடிச்
சேகரித்துச் செருகலின்றிச் செப்பம் செய்து
சொல்லரிய துன்பங்கள் பலவும் தாங்கிச்
சோர்வறியா துழைத்தஒரு சாமி நாதன்
இல்லையெனில் அவன்பதித்த தமிழ்நூ லெல்லாம்
இருந்தஇடம் இந்நேரம் தெரிந்தி டாதே.

சாதிகுலம் பிறப்புகளாற் பெருமை யில்லை ;
சமரசமாம் சன்மார்க்க உணர்ச்சி யோடே
ஓதிஉணர்ந் தொழுக்கமுள்ளோர் உயர்ந்தோர் என்னும்
உண்மைக்கோர் இலக்கியமாய் உலகம் போற்ற
ஜோதிமிகும் கவிமழைபோல் பொழிமீ னாட்சி
சுந்தரனாம் தன்குருவைத் தொழுது வாழ்த்தி
வேதியருள் நெறிபிசகாச் சாமி நாதன்
விரித்துரைக்கும் சரித்திரமே விளங்கி நிற்கும்.

மால்கொடுத்த பிறமொழிகள் மோகத் தாலே
மக்களெல்லாம் பெற்றவளை மறந்தார்; ஞானப்
பால்கொடுத்த தமிழ்த்தாயார் மிகவும் நொந்து
பலமிழந்து நிலைதளர்ந்த பான்மை பார்த்துக்
கோல்கொடுத்து மீட்டுமவள் கோயில் சேர்த்துக்
குற்றமற்ற திருப்பணிகள் பலவும்செய்து
நூல்கொடுத்த பெருமைபல தேடித் தந்த
நோன்பிழைத்த தமிழ்த்தவசி சாமி நாதன்.

146. வாழ்க முதலியார்

சலியாத சேவையும் தளராத ஊக்கமும்
தணியாத ஆர்வ முள்ளோன் ;
நலியாத சொற்களால் நவசக்தி யூட்டிடும்
நயமிக்க தேச பக்தன் ;
நிலையான கல்வியின் நெளியாத கொள்கையின்
நேரான நெறியில் நிற்போன் ;
கலியாண சுந்தர முதலியார் தமிழன்பர்
கண்ணான ஒருவ னாகும்.

பாடெலாம் தான்பட்டுப் பலனெலாம் பிறர்கொள்ளப்
பங்கின்றி உதவு பண்பன் ;
ஏடெலாம் மேல்எனும் 'என்கடன் பணிசெய்தல்'
என்பதே எண்ணி யெண்ணி
நாடெலாம் வாழவே நாளெலாம் தன்சுகம்
நாடாது பாடு படுவோன் ;
வீடெலாம் தமிழ்மக்கள் கலியாண சுந்தரன்
வெற்றிகொண் டாட வேண்டும்.

கொல்லாமை பொய்யுரை கூறாமை என்பதே
குறியாகக் கொண்ட தமிழைக்
கல்லாத பேர்களும் களிகொள்ளத் தந்திடும்
கலியாண சுந்த ரத்தின்
செல்லான அறுபதாம் ஆண்டுதிரு நாளிலே
தெய்வத்தைச் சிந்தை செய்து
வல்லாண்மை குறையாமல் நூறாண்டும் அவன்வாழ
மனமார வாழ்த்து கின்றோம்!

147. உள்ளங் கவர்ந்த பண்டிதர்

'பண்டிதர்' என்றால் பள்ளிக் கூடப்
பையன் களுக்குப் பரிகா சச்சொல்.
ஆங்கிலப் பாடத்(து) ஆசான் மாரும்
கணக்குப் போடக் கற்பிப் பவரும்
பூகோள சாத்திரம் புகட்டு வோரும்
விஞ்ஞான அறிவை விளக்கு பவரும்
சரித்திரம் சொல்லித் தருகிற பேரும்
சித்திரம் வரையச் செய்கிற வாத்தியும்
தேகப் பயிற்சி 'ட்ரில்மாஸ்டர்' கூட
ஓட்டமும் நடையும் உருட்டும் மிரட்டுமாய்க்
கண்டிப்பு தண்டிப்புக் கடுபிடி காட்டி
வருவார் போவார் வார்த்தைகள் பேசுவார்
பார்த்த உடனே பயபக்தியோடு
மாணாக்கர் அவர்களை மதித்து வணங்குவார்.
ஆனால்,
பண்டித ரிடத்தில் மாத்திரம் பயப்படார்.
வடமொழிப் பண்டிதர் வைதீக மானவர் ;
அநித்திய உலகில் அசட்டை போலத்
தம்முடைக் கடமையைத் தாம்முடித் திட்டே
எவரென்ன செய்யினும் ஏனென்றும் கேளார் ;
அவரைப் பற்றிநான் அதற்குமேல் அறியேன்.
தமிழ்மொழிப் பண்டிதர் தண்மையே உருவாய்
'அடக்கம்' என்பதன் அறிகுறி யாமென
'அமைதி' என்னும் சொல்லின் அர்த்தமாய்ச்
சாந்த மயமாய்ச் சந்தடி யின்றி
இருக்கிற இடமே தெரியா திருப்பார்.
சிறியோர் பெரும்பிழை செய்திட் டாலும்
அடிக்கவோ பிடிக்கவோ அவர்கை கூசும்.
வழுக்கியும் அவருடை வாயி லிருந்தோர்
இழுக்குடை வார்த்தை எதுவும் வராது.
சொற்பொழி வென்று சொல்லவந் தாலும்
'பண்டிதர்' பேச்சுப் பழங்கதை யாகவே
பக்தியைக் குறித்தும் முக்தியைப் பற்றியும்
ஞானம் என்றும் மோனம் என்றும்
அன்பைப் பற்றியும் அருளைப் பற்றியும்
சத்தியம் என்றும் சாந்தம் என்றும்
இளைஞர் காதுக் கின்பம் தராது.
அதனால் தானோ, என்னவோ அறியேன்.
பண்டிதர் என்றால் பயமற்றுப் போனது!
நான் படித்திட்ட நாளில்நான் அறிந்த
பண்டிதர் அனைவர்க்கும் பான்மை இன்னதே.
இப்போது பண்டிதர் எப்படி என்றிட
அவர்களைப் பற்றிநான் சிறிதும் அறியேன்.
மற்ற மாணவர் மரியாதை குறையினும்
பண்டித ருக்குநான் பணிந்தே பயின்றேன்.
எனினும்; பண்டித ரென்றால் இளக்கமாய்
ஏளனம் செய்பவர் இடையே வளர்ந்தவன்.
ஆகையி னாலே, தீயஅப் பழக்கம்
எனக்கும் தெரியாமல் இருந்தது போலும்!
அப்படி யிருக்க,
உலகுக் கெல்லாம் உணவு கொடுத்து
வந்தவர்க் கெல்லாம் வடித்துக் கொட்டி
ஞானமும் ஊட்டி நல்வழி காட்டிக்
கல்வியும் கலைகளும் கற்கச் செய்து
வீரமும் தீரமும் வெற்றியும் கண்டே
அன்பின் முறைகளில் அரசு புரிந்து
சாந்தி மிகுந்த தனிச்சிறப் புள்ளதாய்,
வந்து பார்த்தவர் வாழ்த்தி வணங்கும்
நாடா வளந்திகழ் நாடா யிருந்தும்
பேரும் புகழும் பெருமையும் கெட்டுத்
தன்னர சிழந்து தரித்திரம் மிஞ்ச
அன்னிய நாட்டுக் கடிமைப் பட்டும்,
அறிவும் ஆற்றலும் ஆண்மையும் மறைந்து
நொந்து கிடக்கும் இந்தியத் தாயின்
சுதந்தரப் போரைத் தொடங்கிய தூயோன்.
தெய்வத் திருக்குறள் திருவாய் மலர்ந்த
வள்ளுவ முனிவனே வந்துவிட் டதுபோல்
உழவும் உழைப்புமே உயர்ந்த தொழிலாய்
வாழ்ந்து காட்டும் நவீன வள்ளுவன்.
'ஏழையின் துயரம் என்துயர்' என்போன்
நல்லற மாகிய இல்லறத் தவசி
பக்தருக் கெல்லாம் பக்த சிகாமணி
ஐம்புலன் வென்ற அருந்தவ சித்தன்.
ஞாலத் துக்கொரு ஞான ஜோதியாய்
அறந்தரு வாழ்க்கை அந்த ணாளனாம்
காந்தி அடிகள்எம் கருணா மூர்த்தி--
சத்தியமே சாந்தமே கத்திகே டயமாய்க்
கொல்லா விரதமே வில்லாய் வளைத்திட்(டு)
அன்பே அதற்கோர் அம்பாய்ப் பூட்டி
அறப்போர் தொடுத்தஅவ் வாரம்ப நாளில்,
அன்னவன்,
சேனையில் ஒருவனாய் யானும் சேர்ந்தேன்.
காந்தி மகானின் கருத்தைச் சொல்லிப்
பாமர மக்களின் படைப்பலம் திரட்ட
ஒவ்வோர் ஊராய் ஓடித் திரிந்து
வீடு வாசல் வேலைகள் விட்டு
அதுவே பணியாய் அலைந்த நாட்களில்--
"அயலூர் ஒன்றில் அரசியற் கூட்டம்,
பெருத்த கூட்டம் பெரியகொண் டாட்டம் ;
பட்டண மிருந்தொரு பண்டிதர் வருகிறார் ;
செந்தமிழ் நடையில் தித்திக்கப் பேசுவார் ;
போவோம் அதற்குப் புறப்படுங் கள்" என
என்னையும் சிலரையும் எனக்கொரு நண்பர்
கந்த சாமியார் கனிவுடன் அழைத்தார்.
இதனைக் கேட்டார் இன்னொரு நண்பர் ;
"பண்டிதர் பேச்சா? பழைய சோறுதான்.
சளசள சளவென்று சப்பிட் டிருக்கும்.
வெண்டைக் காயும் விளக்கெண் ணெயுமாய்
வழவழ வென்றுதான் பேச்சு வளரும்.
நேற்றொரு பண்டிதர் நீளமாய்ப் பேசினார்
போதும் போதும் போதுமென் றாச்சு"
என்று சொல்லி ஏளனம் செய்தார்.
என்னுடன் இருந்த ஏழெட்டுப் பேரும்
ஆங்கிலப் பள்ளியின் அனுபவ முள்ளோர்
பண்டிதர் பேச்சைப் பரிகாசம் பண்ணிய
அந்தக் கேலியை ஆமோ தித்தனர்.
கூடச் சேர்ந்து குறைசொலா விடினும்
பண்டிதர் என்பதைப் பரிகாசம் செய்ததைக்
கண்டிக் காமல்நான் கம்மென் றிருந்தேன்.
சேர்ந்து கொஞ்சம் சிரித்தும் விட்டேன்.
அதனால், என்னிடம் அதிக மதிப்புடன்
கூவி யழைத்தவர் கோபங் கொண்டார்.
அதன்மேல் எனக்கும் அறிவு பிறந்தது.
பண்டிதர் என்றால் பரிகாசம் செய்வதைக்
கண்டனம் செய்து கனிந்து பேசிக்
கந்த சாமியின் கருத்தின் படிக்கே
எல்லோரும் சேர்ந்து போய்வர இசைந்தோம்.
போனோம்,
பண்டிதர் அவர்களைப் பார்த்தேன் ; பார்த்தால்
தாட்டிகம் இல்லை; தடபுடல் காணோம்!
உயரமும் இல்லை; உருவமும் ஒல்லி ;
மாநிற மென்ன மதிக்கத் தகுந்தவர்
கல்வித் தெய்வம் கலைமகள் வண்ணமாய்
வெள்ளை வெளேரென வெளுத்த வேட்டியும்
அதனிலும் வெளுத்த அங்கச் சட்டையும்
அங்கியின் மேலோரு அங்கவஸ் திரமும்,
தலையில் துல்லிய வெள்ளைத் தலைப்பா
கண்ணாடி மூடிய கனற்பொறி போன்று
குளிர்ச்சியும் கூடிய கூர்ந்த கண்கள்.
மகிழ்ச்சி ஊட்டும் மலர்ந்த முகத்துடன்
'பண்டித' ராகவே பண்டிதர் இருந்தார்.
இடக்கை விரல்கள் இரண்டை நீட்டி
கருத்துக் கேற்பக் கையை ஆட்டி
வலக்கைத் தலத்தில் அடித்து வைத்துச்
சங்கீத மத்தியில் சாப்புப் போல
அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச்
சுளைகளை யாகச் சொற்களைச் சொல்லிப்
பதம்பத மாகப் பதியும் படிக்கே
அணிஅணி யாக அடுக்கிய கருத்தொடும்
இயக்கி விட்டதோர் எந்திரம் போலத்
தங்கு தடையெனல் எங்குமில் லாமல்
எத்தனை தூரம் எட்டநின் றாலும்
கணீர்க ணீரெனக் காதிலே விழும்படி
செவிவழி இனிக்கும் செந்தேன் போலக்
கற்பனை மிகுந்த கவினுடைக் கவிதையாய்க்
காதாற் காணும் கனவே போலத்
தொல்காப் பியத்தின் சூத்திரம் தொடரச்
சங்க நூல்களின் சாறு வடித்துச்
சிலப்பதி கார ஒலிப்பும் சேர்த்துத்
திருக்குறள் ஞானப் பெருக்கம் திகழத்
திருமந் திரத்தின் பெருமை திரட்டிக்
கம்பன் பாட்டின் செம்பொருள் பெய்து
தேவா ரத்தின் திருவருள் கூட்டித்
திருவா சகத்தின் தேன்சுவை நிறைத்துத்
திருவாய் மொழியின் தெளிவையும் ஊட்டி
எம்மத மாயினும் சம்மதம் என்னும்
சமரச சுத்தசன் மார்க்கம் தழுவிப்
பண்டைய அறிவைப் புதுமையிற் பதித்துப்
பண்டிதர் பிறரிடம் பார்த்தறி யாத
அரசியல் சரித்திர அறிவுகள் பொருத்திக்
கள்ளமில் லாத உள்ளத் தெளிவுடன்
அன்பு ததும்பிட ஆர்வம் பொங்கக்
கற்றவர் மனத்தை முற்றிலும் கவர்ந்து
பாமர மக்களைப் பரவசப் படுத்தி,
'காந்தீ யத்தின் கருத்துகள் எல்லாம்
தமிழன் இதயம் தழுவிய வாழ்வே'
என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டிய
அற்புதம் மிகுந்த சொற்பொழி வதனைக்
கேட்டேன் ; இன்பக் கிறுகிறுப் புற்றேன்.
இரண்டரை மணியும் இப்படிப் பேசிக்
கடைசியில் பேச்சின் கருத்துரை யாக,
முறைபிற ழாமல் உரைதள ராமல்
சொன்னதை யெல்லாம் சுருக்கிச் சொல்லி
இறைத்த முத்தை எடுத்துச் சேர்த்துத்
தொடுத்த மாலைபோல் தொகுத்துக் கூறிக்
கேட்டவர் நெஞ்சில் கிடந்து புரளக்
கூப்பிய கையுடன் குனிந்து கொடுத்து
உரையை முடித்து உட்கார்ந்து விட்டார்.
சொப்பன இன்பத் தொடர்ச்சி நிற்கவே,
திடுக்குற விழித்துத் திகைப்பவன் போலும்,
சங்கீதம் மத்தியில் தடைப்பட் டதுபோல்,
ஓடின சினிமா ஒளிப்படம் கேடுற்(று)
இடையில் அறுந்தே இருட்டடித் ததுபோல்
என்னுடை உணர்ச்சிகள் இடைமுறிந் தேங்கினேன்.
இன்னான் எனவெனை ஏதும் அறியாப்
பண்டிதர் அவரையே பார்த்துப் பார்த்துப்
புருடனைக் கண்ட புதுப்பெண் போல--
அன்போ ஆசையோ அடக்கமோ ஒடுக்கமோ
அச்சமோ நாணமோ மடமையோ அறியேன்--
என்னையும் மறந்து என்னுடை மனது
பண்டிதர் இடத்தில் படிந்து விட்டது.
இன்பத் தமிழ்மொழி இலக்கியம் சொல்வதே
காந்தீ யத்தின் கருத்துகள் என்பதை
என்னைப் போலவே எண்ணிய பண்டிதர்
என்னிலும் அழகாய் இணைத்துச் சொன்னதை
எண்ணிக் கொண்டே தலைகுனிந் திருந்தேன்.
சிறிது நேரம் சிந்தனை செய்தபின்,
பண்டிதர் அவர்களைப் பார்க்கும் ஆசையால்
மீண்டும் நிமிர்ந்து மேடையைப் பார்த்தேன்.
அந்தப் பண்டிதர் அங்கே இல்லை.
எவரோ பேசுதற்(கு) எழுந்து நின்றார்.
"எங்கே? பண்டிதர் எங்கே?" என்றுநான்
பக்கத்தி லிருந்த பலரையும் கேட்டேன்.
"பிரிதோர் ஊரிற் பேசுதற் கருதி
அவசர மாக அவர்போய் விட்டார்"
என்றொரு நண்பர் என்னிடம் சொன்னார்.
கூட்டம் முடிந்தபின் கொஞ்சிக் குலவிக்
கலந்து பேசிக் களிப்பெலாம் சொல்லிப்
பண்டித ரோடு பழக நினைத்தஎன்
ஆசை கெட்டதால், அவதி மிகுந்தது.
மற்றவர் பேச்சில் மனங்கொள் ளாமல்
உடனே புறப்பட்(டு) ஊருக்கு வந்தேன்.
கண்ட பண்டிதர் கண்ணி லிருந்தார்.
கேட்ட பேச்சும் நெஞ்சில் கிளர்ந்தது.
அந்தப் பண்டிதர் அவரே அவர்தாம்
கலியாண சுந்தர முதலியார் காண்க.
அவரை முதல்முதல் பார்த்த(து) அப்படி.
அந்நாள் தொடங்கி இந்நாள் அளவும்
என்னுடை நினைவில் என்றும் நின்றுளார்.
எண்ணும் போதெலாம் இன்பம் ஊறும்.
நினைக்கும் பொழுதெலாம் நெஞ்சம் குளிரும்.
..................................................................
பத்தாண் டுகள் தாம் பறந்தபிற் பாடு
பட்டணம் சென்றுநான் நேரிற் பழகினேன்,
அதன்மத் தியிலே அவரும் நானும்
கடிதத் திலேதான் கலந்து மகிழ்ந்தோம்.
என்னுடைப் பாட்டென எதுபோ னாலும்
'தேச பக்தன்' தினசரி அதனிலும்
'நவசக்தி' தன்னிலும் நன்றாய் அமைத்துச்
சிறப்புடன் வெளிவரச் செய்வரச் செம்மல்.
பக்கத்தில் அவருடன் பழகிய போதுதான்
சீலம் நிறைந்த செம்மனக் குன்றாம்
ஒழுக்கம் உயர்ந்த உத்தம சீலர்
முதலியார் பெருமையை முற்றிலும் அறிந்தேன்.
தமிழ்நாடு தந்த தலைவர்கள் தம்முள்
காந்தீ யத்தின் உட்பொருள் கண்ட
சிலருள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்
முதலியார் என்பது முற்றிலும் உண்மை.
'தேசபக் த'னில் அவர் செய்த சேவையும்
'நவசக்தி' மூலமாய் நாட்டிற் குழைத்ததும்
புகழ்ந்தால் அதுபெரும் புத்தக மாகும்.
தமிழிலே எண்ணித் தமிழிலே பேசித்
தமிழருக் காகவும் தனித்தொண் டாற்றுவார்.
சந்தி விகாரச் சந்திடைச் சிக்கிய
வழக்கற்றுப் போன வார்த்தைகள் மலியப்
'பழந்தமிழ்' என்று பலபேர் பேசின
அந்தத் தமிழையும் அழகுறச் செய்து
புத்தம் புதுப்பல சொற்றொடர் புகுத்திக்
கேட்கக் கேட்கக் கிளர்ச்சி யுண்டாகும்
தனியரு தமிழ்நடை தந்தவர் சுந்தரர்.
இந்தியத் தாயின் விடுதலை எண்ணமே
நிறைந்த அவருடை நெஞ்சம் குமுற,
காந்தீ யத்தையே கடைப்பிடித் தவராய்ச்
சாது வாகவே தம்கடன் தாங்கி
அச்சுத் தொழிலும் அச்சாணி போலவே
கண்ணிற் படாமல் கடமையைச் செய்து
பழமையும் புதுமையும் படியும் சந்தியாய்ப்
பாட்டாளி மக்களின் பக்கத் துணையாய்ப்
பெண்குலப் பெருமைக்குப் பெருத்த காவலாய்ச்
சைவ நெறிக்கொரு சமரசத் தூதனாய்ப்
பட்டணத் திருந்தும் பகட்டில் லாமல்
ஓசையில் லாமல் ஓய்வற உழைக்கிறார்.
முத்தமிழ்க் கலியாண சுந்தர முதலியார்
அவருடை அறுபதாம் ஆண்டு நிறைவைப்
பரவிப் புகழ்ந்து பல்லாண்டு பாடி
நலம்குறை யாமல் இன்னமும் நாற்ப(து)
ஆண்டுக ளேனும் அவர்வாழந் திருக்கச்
சிவத்தைக் கோரித் தவத்தைச் செய்வோம்.
நந்தமிழ் மக்கள் நல்வாழ்வு பெற்வே.
வாழி கல்யாண சுந்தரன் வாழி!
வாழிபல் லூழி வாழிவா ழியவே!

148. சத்தியமூர்த்திக்கு வரவேற்பு

நித்திய அறங்கள் நாட்டில் நிலைத்திட உலகம் வாழ
உத்தமன் காந்தி காட்டும் ஒருவழி ஒன்றே உண்டு ;
சத்திய சாந்த நோன்பின் தவச்சிறை யிருந்து வந்தாய்
சத்திய மூர்த்தி எங்கள் தலைவனே! வருக! ஐயா!

உடல்நலம் குறைந்தி ருந்தும் ஒருசிறு தயக்க மின்றிக்
கடன்என ஓடி அண்ணல் காந்தியின் ஆணை தாங்கித்
திடமுடன் தேச சேவை தீரர்கள் இனத்தைச் சேர்ந்தே
இடரிடைக் காத்தாய் பெற்ற இந்தியத் தாயின் மானம்.

ஏழைகள் துயரம் போக எளியவர் களைப்பு நீங்கப்
பாழ்பட உலகை வாட்டும் பகைமைகள் குறைய வென்றே
வாழிய காந்தி சாந்த வாய்மையின் வழியில் நின்று
ஊழியம் செய்யு முங்கள் உதவியை உலகம் போற்றும்.

தீனரை வதைத்து வாட்டித் தின்றுடல் சுகித்து வாழும்
மானமில் லாத வாழ்க்கை மலிந்த(து) உலகில்; மற்ற
ஞானநல் வழியில்செல்ல நடத்திடும் காந்தி சாந்தச்
சேனையில் சேர்ந்த பேரைச் செகமெலாம் சிறப்புச் செய்யும்.

தஞ்சம்வந் தவரை நம்பித் தன்னர சிழந்து நொந்துப்
பஞ்சமும் பிணியும் வாட்டப் பலதுயர் பட்டா ளேனும்
எஞ்சிய 'சாந்தி' ஞானம் இன்னமும் குறைவி லாத
வஞ்சியாம் பார தத்தாய் வாழ்த்துவள் வாரித் தூக்கி.

பணத்தினை இழந்திட் டாலும் பலத்தினிற் குறைந்திட் டாலும்
குணத்தினிற் குறையக் கூசும் குலத்தினிற் பிறந்தோ மன்றோ?
கணத்தொடும் சிறையில்நொந்தும் கண்ணியம் குறைந்தி டாத
மணத்தொடும் வருவீர் தம்மை மாநிலம் மறவா தென்றும்.

வள்ளுவன் குறளும் வேத வடமொழி வகுத்த யாவும்
தள்ளரும் 'சாந்தி' என்ற தனிப்பதக் கருத்தே யாகும்
கள்ளமில் லாமலெண்ணின் காந்திசொல் அதுவே; காண்போம்
எள்ளரும் அதுவே யாகும் இந்திய நாக ரீகம்.

வருகவே சத்யமூர்த்தி! வாழ்கஉன் இனத்தோ ரெல்லாம்
பெருகிநம் சாந்தி சேனை பெற்றதாய் நாட்டை மீட்கும்
அருகிலே அடையும் சொந்த அரசினை அழைத்துக் கொள்ளத்
தருகஉன் திறமை முற்றும் தமிழகம் பெருமை கொள்ளும்.

149. யோக சமாஜ குரு

பள்ளியில் மாணவனாய்ப் படிக்கும் போதே
பரமார்த்த சிந்தனைகள் பற்றிக் கொள்ளத்
துள்ளிவரும் வாலிபத்தின் துடிப்ப டக்கித்
துறவறமே மேற்கொள்ளத் துணிவு கொண்டோன்
தள்ளரிய ஆசைகளைத் தணிப்ப தற்காய்த்
தமோரஜத்தாம் உணவுகளைத் தள்ளக் கற்றோன்
உள்ளமதை ஒருநிலையில் ஒடுங்கச் செய்ய
உப்பின்றி உண்டவனாம் சுத்தா னந்தன்.

தென்மொழியும் வடமொழியும் தெளியக் கற்றான்
திசைமொழியும் ஆங்கிலத்தில் திறமை மிக்கான்
மென்மைமிகும் பிரஞ்சுமொழி விரும்பிக் கொண்டான்
மேதினியில் இலக்கியத்தின் மேன்மை யுள்ள
பன்மொழிகள் பரிந்தொளிரும் சுத்தா னந்த
பாரதியார் மெய்ஞ்ஞானப் பண்பில் மிக்க
தன்மொழியே தலைசிறந்த மொழியா மென்று
தமிழுக்கே பணிபுரியும் தவசி யானான்.

கானகத்தே மறைந்துவிடத் துறந்தா னல்லன்
கண்மூடிக் கருத்தடக்கும் மெளனி யல்லன்
ஞானமொழி மக்களுக்கு நாளும் சொல்லி
நாட்டிற்குச் சேவைசெய்யும் நாட்டம் ஒன்றே
ஊனெடுத்த பயன்என்னும் உறுதி கொண்டான்
ஓயாமல் உழைத்துவரும் சுத்தா னந்தன்
தேனிருக்கும் தமிழுக்கோர் கவிஞ னாகித்
திகழ்கின்ற இலக்கியங்கள் பலவும் செய்தான்.

இல்லறமோ துறவறமோ எதற்கா னாலும்
எல்லார்க்கும் யோகமுறை இருக்க வேண்டும்
அல்லல்தரும் பிணியேதும் அணுகா வண்ணம்
ஆரோக்ய வாழ்க்கைபெறும் அறிவை யூட்டும்
நல்லதொரு யோகநெறி சமாஜம் தன்னை
நடத்திடவே நாடிநிற்கும் சுத்தா னந்தன்
வல்லமைகள் மிகச்சிறந்து மெய்ஞ்ஞா னத்தின்
வழிகாட்ட நீடுழி வாழ்க மாதோ.

150. வாழ்க ராஜாஜி

சாதிமதச் சழக்குகளைக் கடந்து நிற்போன்
சமதர்ம சன்மார்க்க சாந்த சீலன்
நீதிநெறி முறைதெரிந்த நேர்மை யாளன்
நிந்தையற்ற வாழ்க்கைதரும் நியம முள்ளோன்
ஓதிஉணர்ந் தச்சமற்ற உண்மை கூறி
உலகநலம் காப்பதற்கே உழைக்கும் யோகி
மேதினியில் அறிவறிந்த மக்கள் யாரும்
மெச்சுமெங்கள் ராஜாஜி மேதை வாழ்க!

கூரிய அறிவால் கொண்ட
கொள்கையின் உயர்வால் கூறும்
சீரிய ஒழுக்கம் காத்த
சிறப்பினால் எதையும் செய்யக்
காரியத் திறமை வாய்ந்து
கடனறி கார ணத்தால்
யாரினும் ராஜா ஜீயை
அறிஞர்கள் போற்று வார்கள்.

நஞ்சினில் மிகவும் தோய்த்து
நாசமே கருதிப் பாய்ச்சி
வெஞ்சின வசைகள் கோத்து
விட்டன பாணம் எல்லாம்
பஞ்சினிற் பட்ட வேல்போல்
பயனற, ராஜா ஜீயோ
கொஞ்சமும் கோப தாபக்
குறியிலாக் குணக்குன் றானான்.

பொதுநலம் ஒன்றே யன்றிப்
புகழ்ச்சியில் மயங்க மாட்டான் ;
எதுநலம் என்ற பேச்சில்
எதிர்ப்புகள் எதற்கும் அஞ்சான் ;
மதிநலத் தெளிவு கொண்ட
மாபெரும் கர்ம யோகி
துதிபெறத் தமிழர் மேன்மை
துலக்கினோன் ராஜா ஜீயே.

வேங்கைகள் சூழ்ந்த மான்போல்
விடுபட வழியில் லாமல்
தீங்குகள் சுற்றி நின்று
திடுக்கிடச் செய்த போதும்
ஆங்குமான் கல்லோ! என்ன
அசைவிலா உறுதி காட்டும்
பாங்குளான் ராஜா ஜீயே ;
பகைவரே பணியும் பண்பன்.

தாழ்ந்தவர் உயர்ந்தோர் என்று
ஜாதியால் குறித்தல் பாபம்
மாந்தருள் தீண்டல் என்றல்
மடமையுள் மடமை என்று
காந்தியை நாமெல் லாரும்
காண்பதன் வெகுநாள் முன்பே
சாந்தமாய் வாழ்க்கை தன்னில்
சாதித்தோன் ராஜா ஜீயே.

பழுதிலா வாழ்க்கை தந்த
பயமிலா நெஞ்சத் தாலே
எழுபது வயதின் மேலே
இன்னமும் இளைஞ னேபோல்
எழுதரும் மேலோன் காந்தி
இடையறாப் பக்த னாக
வழுவிலா அரசு காட்டும்
ராஜாஜி வாழ்க வாழ்க!

151. காமராஜர் வாழ்க

ஒருவருக்கும் பொல்லாங்கு நினையா நெஞ்சன்
உரிமையுள்ள யாவருக்கும் உதவும் பண்பன்
அருவருக்கும் வாதுகளில் அலையாச் சொல்லன்
அமைதியுடன் பணிபுரியும் அன்புத் தொண்டன்
திருவிருக்கும் காந்திமகான் கொள்கை தாங்கும்
தேசபக்தன் உழைப்பதனால் உயர்ந்த செம்மல்
மறுவிருக்கும் ஆசைகளால் மனம்கெ டாத
முதலமைச்சர் காமராஜர் மகிழ்ந்து வாழ்க.

152. ஜவஹர்லால் மன்னன்.

மன்னுயிரைப் போர்க்களத்தில் கொன்று வீழ்த்தி
மலைமலையாய்ப் பிணக்குவியல் குவித்த தாலே
மன்னரெனப் பலர்வணங்கத் தருக்கி வாழ்ந்தோர்
மாநிலத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம் ;
தன்னுயிரை மன்னுயிர்க்காத் தத்தம் செய்து
தருமநெறி தவறாத தன்மைக் காக
இன்னுயிர்கள் மனங்குளிர இளங்கோ என்றே
எதிர்கொள்ளும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

பணம்படைத்த சிலபேர்கள் தனியே கூடிப்
பட்டாளம் சுற்றிநின்று பாரா செய்ய
மணம்படைத்தாம் வரவளிக்க மகிழ்ந்து போகும்
மன்னரென்பார் எத்தனையோ பேர்கள் உண்டு ;
குணம்படைத்துக் கருணைமிகும் கொள்கைக் காகக்
கோடானு கோடிமக்கள் எங்கும் கூடிக்
'கணம்பொறுங்கள்! கண்டாலும் போதும்' என்று
களிசிறக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

எச்சிலுண்ணும் சிறுமனத்தார் பலபேர் கூடி
இல்லாத பெருமைகளை இசைத்துக் கூறும்
இச்சகத்தால் மதிமயங்கி இறுமாப் புற்ற
இருள்மனத்தார் எத்தனையோ அரசர் கண்டோம் ;
மெச்சுகின்ற பிறர்மொழியை மிகைசெய் யாமல்
மெய்யறிவும் பொய்வெறுப்பும் துணையாய் மேவ
அச்சமற்ற நல்லொழுக்கம் அதற்கே மக்கள்
ஆசைசெய்யும் அரசனெங்கள் ஜவஹர் லாலே.

சேனைகளை முன்செலுத்திப் பின்னால் நின்று
'ஜெயித்துவிட்டேன்!' என்றுசொல்லிச் செருக்கி லாழும்
ஊனமுள்ள பெருமையினால் அரச ரென்போர்
உலகத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம் ;
தீனர்களின் துயர்துடைக்க முன்னால் நின்று
தீரமுடன் பிறர்க்குழைக்கும் சிறப்புக் காக
மானமிகும் வீரரென எவரும் வாழ்த்த
மன்னனென விளங்கிடுவான் ஜவஹர் லாலே.

கஞ்சியின்றி உயிர்தளர்ந்த ஏழை மக்கள்
காலில்வந்து விழுவதையே களிப்பாய் எண்ணிப்
பஞ்சணையில் படுத்திருந்த படியே இந்தப்
பாரளிக்கும் மன்னவர்கள் பலரைப் பார்த்தோம் ;
தஞ்சமின்றித் தரித்திரத்தின் கொடுமை வாட்டத்
தவித்துழலும் பலகோடி மக்கட் கெல்லாம்
அஞ்சலென்ற மொழிகூறி ஆண்மை யூட்டும்
அன்புருவாம் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

ஆயுதத்தின் அதிகாரம் அதற்கே அஞ்சி
அடிபரவும் பலபேர்கள் அருகே சூழப்
பேயுதித்துக் கொலுவிருக்கும் பெற்றி யேபோல்
பிறர்நடுங்க அரசாண்டார் பலபேர் உண்டு ;
போயுதித்த இடங்களெல்லாம் புதுமை பூட்டிப்
புதையல்வந்து கிடைத்ததுபோல் பூரிப் பெய்தித்
தாயெதிர்ந்த குழந்தைகள்போல் ஜனங்கள் பார்க்கத்
தாவிவரும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

ஏழைகளின் குடிமுழுக வரிகள் வாங்கி
இந்திரியச் சொந்தசுகங் களுக்கே வீசிக்
கோழையராய்ப் பிறர்உழைப்பில் கோலங் கொள்ளும்
கோமான்கள் குவலயத்தில் பலபேர் உண்டு ;
வாழையைப்போல் பிறர்க்குதவி வருத்தம் தாங்கி
வறியவர்க்கே கனிந்துருகும் வரிசைக் காக
வாழிஜவார் வாழிஜவார் வாழி யென்று
வாழ்த்திசைக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.


153. ஜவஹர் நினைவு

நேருவை நினைத்தவுடன்
நேர்மைக்குணம் என்னும்
மேருவை நிகர்த்தஒளி
மின்னிவரும் முன்னால்
பாரிலுள்ள யாவரும்நம்
பந்துஜன மென்றே
கோரும்ஒரு மெய்யுணர்வின்
கொள்கைவரும் அன்றோ?

ஜவஹரை நினைத்தவுடன்
ஜாதிநிற பேதம்
அவனியில் அழிந்தொழிய
ஆர்வம்நம தாகும்.
நவநவ உணர்ச்சிகளின்
நன்னெறியை ஊட்டும்
நல்லதுணை வல்லனென
நம்மறிவு காட்டும்.

தீமையை எதிர்க்கும்ஒரு
தீரனுளன் என்றும்
வாய்மையை வளர்க்குமொரு
வள்ளலிவன் என்றும்
தூய்மைதவ றாத முறை
சொல்வளவன் என்றும்
சீமைதொறும் வாழ்த்துஜவ
ஹர்அரிய சீலன்.

சொந்தமுள தன்னுடைய
சொத்துசுக மெல்லாம்
வந்தநில மக்கள்சுக
வாழ்வுபெற வென்றே
தந்தைதர மைந்தனிவன்
தானமெனத் தந்தான்
எந்தமொழி எந்தக்கதை
ஈடுசொல உண்டு?

தன்னல மறுப்பினுயிர்
தன்மையிது வென்ன
இன்னல்களை இன்பமென
ஏற்க ஒளிமின்னும்
பொன்னில்மணி வைக்கஉயிர்
பெற்றசிலை போலும்
என்னசொலிப் போற்றிடுவோம்
எம்ஜவஹர் லாலை!

ஏழையின் மனக்குறைகள்
இன்னவெனக் காட்டிக்
கோழைகளைக் கண்டுகொதி
கொண்டதுயர் கூட்டி
ஊழ்வினையை வெல்லுமொரு
ஓவியமும் ஆகும்
வாழிஜவ ஹர்மகிபன்
வாழிநெடுங் காலம்!

7. திருநாள் மலர்

154. புத்தாண்டு வணக்கம்

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தமிழ்த்
தெய்வம் திகழும் திருநாட்டில்,
இத்தினம் அந்தத் திருநாள் ஆதலின்
ஈசனைப் போற்றி வரம்கேட்போம்.

கொல்லா நோன்புடன் பொய்யா விரதம்
கொண்ட தமிழ்க்குணம் குன்றாமல்
எல்லா மக்களும் இன்புறக் கோரிடும்
எண்ணம் வளர்த்திடப் பண்ணிடுவோம்.

வீரப் படைகளின் தோள்வலியும் முன்னே
வெற்றிகள் கண்டிட்ட வாள்வலியும்
போரில் பயன்பட மாட்டா என்கிற
புத்தியை எங்கும் புகட்டிடுவோம்.

கோபத்தை மூட்டிடும் பேச்சுகளும் வெறும்
குற்றங்கள் சாட்டிடும் ஏச்சுகளும்
தாபத்தை நீடிக்கச் செய்யுமல் லால்வேறு
தந்திடும் நன்மைகள் ஒன்றுமில்லை.

வள்ளல் மகாத்மா காந்தியின் வாழ்வே
வள்ளுவன் தந்த திருக்குறளாம்.
தெள்ளிய உண்மையைத் தேர்ந்து நடத்திடத்
தெய்வத் திருவருள் நாடிடுவோம்.

உலகத்தில் போர்ப்பயம் நீங்கிடவும் மக்கள்
உள்ளத்தில் அன்பறம் ஓங்கிடவும்
சுலபத்தில் கண்டு சுகம்பெறக் காந்தியைச்
சுதினத்தில் வாழ்த்தித் தொழுதிடுவோம்.

155. புத்தாண்டு சபதம்

நாக ரீக மென்று சொல்லி
எந்தி ரத்தை நம்பியே
வேக மாக யுத்த மென்றே
குழியில் வீழ்ந்து வெம்பினார்
போக வாழ்வை எண்ணி எண்ணிப்
போட்டி யிட்டு முண்டியே
சோக முற்றே உலக மெங்கும்
வறுமை மிஞ்சத் தண்டினோம்.

உண்டு டுத்துக் குடிவெ றித்திங்
குலகை ஆளும் ஆசையே
கண்டு விட்ட இன்ப மாகக்
கால முற்றும் பேசியே
சண்டை யிட்டுக் கொன்று வீழ்த்தச்
சக்தி தேடும் ஒன்றையே
கொண்டு விட்ட கொள்கை யாக்கிக்
கொடுமை சூழ நின்றுளோம்.

ஒருவர் நாட்டை ஒருவர் பற்றி
உரிமை பேசி ஆள்வதும்
இருவர் மூவர் சேர்ந்து கொண்டும்
இம்சை காட்டி வாழ்வதும்
பெருமை என்று எண்ணி வந்த
பித்துக் கொண்ட கொள்கையால்
தரும மற்று மனித வர்க்கம்
தலைகு னிந்து வெள்கினோம்.

எந்த வேளை என்ன வென்று
ஏது சண்டை கூடுமோ!
எந்த நாட்டில் எந்தத் தேசம்
எந்தக் குண்டைப் போடுமோ!
வந்த தீமை தப்பி வாழ
வழியைத் தேடி மாநிலம்
சிந்தை நொந்து மனித வாழ்வு
சீர்கு லைந்து போனதே.

உலகில் உள்ள மக்கள் யாரும்
ஒருகு டும்ப மாகவே
கலக மற்று யுத்த மென்றே
கவலை விட்டுப் போகவே
குலவி வாழ இந்த நாட்டின்
கொள்கை யாகும் சாந்தியே
சுலப மான மார்க்க மென்று
சுத்த மாக ஏந்துவோம்.

உயிரி ருக்கும் உடல னைத்தும்
ஈசன் வாழும் உறையுளாம்
அயர்வி லாத ஞான மூட்டும்
அருள றிந்த அறிவுளோம்
பெயர்ப டைத்த நமது நாட்டின்
பெருமை யாகும் மந்திரம்
துயர றுக்கும் 'சாந்தி' சொல்லித்
தொண்டு செய்ய முந்துவோம்.

156. புத்தாண்டு வாழ்த்துகள்

புகுந்தது நமது வாழ்வில்
புதியதோர் ஆண்டிந் நாளே
பூசனை புரிந்து போற்றி
ஈசனை வணங்கி நிற்போம்.
உகுந்திடும் தீமை யாவும்
ஒழிந்திடும் துன்ப மெல்லாம்
உயர்ந்திடும் நிலைமை; கீர்த்தி
ஓங்கிடும்; காரி யத்தில்
மிகுந்திடும் இன்பம்; நெஞ்சில்
மிகுந்திடும் அன்பும் பண்பும் ;
மேவிடும் தருமம் தானம் ;
மேவிய சுற்றம் சூழ
மகிழ்ந்திடும் உள்ளத்தோடு
மனையறம் சிறக்க நீங்கள்
மங்களம் பெருகி வாழ
மனமார வாழ்த்து கின்றேன்.

சத்தியமும் சாந்தமுமே துணைக ளாகச்
சன்மார்க்க வழிநடக்கும் கொள்கை தந்த
உத்தமனாம் காந்தியரை உள்ளத் தெண்ணி
உலகாளும் பரம்பொருளை வணங்கி நின்று
சித்திரையாம் புத்தாண்டுத் திருநாள் காணும்
சீர்மிகுந்த தமிழ்த்தாயின் புகழைப் பாடி
மெத்தநலம் பெருகிஉங்கள் குடும்ப வாழ்க்கை
மேன்மேலும் சிறப்படைய வாழ்த்து கின்றோம்.

157. தனிப்பெருந் திருநாள்

தமிழ்த்திரு நாட்டின் தனிப்பெருந் திருநாள்
'பொங்கல்' என்னுமிப் புனிதநன் னாள்முதல்
வையகம் முழுவதும் மெய்யறம் ஓங்கி
வறுமையும் பகைமையும் வஞ்சமும் நீங்கி
உங்கள் குடித்தனச் சிறப்புகள் உயர்ந்து
பண்டம் பலவும் பணமும் நிறைந்து
மக்களும் மனைவியும் மற்றுள சுற்றமும்
இன்பம் பெருகிட இல்லறம் நடத்திப்
பல்லாண்டு வாழ்ந்திடப் பரமனார் அருளும்
வாழிய உங்கள் வளமனைப் பொங்கல்.

158. இன்பப் பொங்கல்

பொங்கல் எனும்பொழுதில்--இன்பம்
பொங்குது துன்பங்கள் மங்கி மறைந்திடும்
மங்களச் சொல்அதிலோர்--தெய்வ
மந்திரம் உண்டெனச் சிந்தை களித்திட
எங்கள் தமிழ்நாட்டில்--மிக்க
ஏழையும் செல்வரும் தோழமை எய்திடும்
இங்கிதம் கண்டிடும்நாள்!--பலர்
எங்கும் புகழ்ந்திட உங்கள் குடித்தனம்
பொங்குக பொங்குக பால்!

வெள்ளை அடித்திடுவோம்--எங்கள்
வீடுகள் வாசலில் கூடிய மாசுகள்
அள்ளி எறிந்துவிட்டு--மிக
அற்புதச் சித்திரம் பற்பல வாணங்கள்
புள்ளிகள் கோலமிட்டுத்--தெய்வ
பூசனைத் தீபங்கள் வாசனைத் தூபங்கள்
உள்ளத்தி லும்புகுந்தும்--அங்கே
ஊறிய தீமைகள் மாறுதல் செய்திடும்
சீருடைப் பொங்க லிதாம்!

மாடுகள் நாய்குதிரை--ஆடும்
மக்களைப் போலவே ஒக்கும் உயிரென்று
நாடும் நினைவுவந்து--பொங்கல்
நாளில் அவைகளின் தாளில் தளையின்றித்
தேடும் உரிமைதந்து--முற்றும்
தேய்த்துக் குளிப்பாட்டி நேர்த்தி யுறமலர்
சூடின தாகச்செய்வோம்--அதில்
தோன்றும் கருணையை ஊன்றி நினைத்திட
ஏன்றது இந்தப் பொங்கல்!

அஞ்சும் மனத்தவரும்--கொஞ்சம்
ஆண்மை தருமனப் பான்மை யடைந்திட
மஞ்சு விரட்டிடுவோம்--துஷ்ட
மாட்டையும் அடக்கும் தாட்டிகம் காட்டுவம்
வஞ்சனை மோசங்களும்--தங்கள்
வாடிக்கை விட்டந்த வேடிக்கை பார்த்துடன்
கொஞ்சி மகிழ்ந்திடும்நாள்!--மைந்தர்
கூட்டமும் பந்தய ஓட்டமும் மங்களப்
பாட்டும் மிகுந்த பொங்கல்!

மங்கள வாழ்வுபெற்று--மக்கள்
மாச்ச ரியம்தரும் ஏச்சுக ளைவிட்டு
எங்கள் திருநாட்டில்--இனி
ஏழ்மையும் யாருக்கும் தாழ்மையும் நீங்கிடச்
செங்கை சிரங்கூப்பித்--தெய்வ
சிந்தனை யிற்பல வந்தனை பாடிஇப்
பொங்கலை வாழ்த்திடுவோம்--இந்தப்
பூதலம் யுத்தத்தின் வேதனையாற் படும்
தீதறப் பொங்குக பால்!


159. சுதந்தரப் பொங்கல்

அடிமை விலங்குகள் அகன்றன இனிமேல்
கொடுமை பிறர்பால் கூறுதற் கில்லை
திடமுடன் சத்தியத் தீயினை வீட்டி
மடமை மதவெறி மமதையை எரித்துப்
பொய்யும் மோசமும் புலையும் பொசுங்க
வையம் முழுவதும் வாழ்ந்திடத் துணிந்திங்
கன்பெனும் பாலை அடுப்பகத் தேற்றித்
துன்பெனும் துர்நீர் சுண்டித் தொலைந்திடக்
காய்ச்சித் திரட்டிய கருணைப் பொங்கல்
பாய்ச்சும் சுதந்தரப் பரிமளம் கமழ
அமிழ்தம் இதுவென அழியா வரந்தரும்
தமிழன் தெய்விகத் தனிரசம் சேர்த்துப்
புத்தம் புதியதோர் சுவைதரப் புசித்து
நித்தமும் மகிழ்வுடன் நெடுநாள் வாழ்வீர்!

160. பொங்குக புதுவளம்

பொங்குக பொங்கல் பொங்குகவே
பொங்குக புதுவளம் பொங்குகவே
திங்களில் மும்முறை மழைபொழியத்
தினம்இது முதல்நம் குறைஒழிய
மங்குக போர்வெறி மாச்சரியம்
மதவெறி நிறவெறி தீச்செயல்கள்
தங்குக சத்திய சன்மார்க்கம்
தரணியில் மாந்தர்கள் எல்லார்க்கும்.

மாநில உயிர்கள் நலமுறவும்
மக்கள் உடல்வளம் பலமுறவும்
ஞானமும் கல்வியும் சிறந்திடவும்
நல்லன உணர்ச்சிகள் நிறைந்திடவும்
தானியக் கதிர்வளம் உயர்ந்திடவே
தக்கன உழவுகள் முயன்றிடுவோம்
போனதிங் குணவுப் பஞ்சமெனப்
புதுவளம் எங்கணும் மிஞ்சிடவே. (பொங்)

இயற்கையின் வளம்பல இருந்தாலும்
இன்பம் யாவையும் பொருந்தாவாம்
செயற்கைப் பொருள்கள் சேராமல்
சிறப்புள வாழ்வெனும் பேராமோ?
வியக்கும் பொருள்களைச் செய்திடுவோம்
வேண்டிய திறமைகள் எய்திடுவோம்
நயக்கும் தொழில்பல பெருகவென
நமக்கதில் ஊக்கம் வருகவென. (பொங்)

உழவும் தொழிலும் மலிந்துவிடில்
ஊரில் செல்வம் பொலிந்துவிடும்
விழவும் தினந்தினம் விருந்துகளும்
வீட்டிலும் நாட்டிலும் இருந்துவரும்
பழகும் அன்னிய நாடுகளும்
பரிவுடன் எதையும் ஈடுதரும்
செழுமை பெற்றிடும் வாணிபங்கள்
சேமித் திடுவோம் நாணயங்கள். (பொங்)

பொலிவுறச் செல்வம் சேர்ந்தஉடன்
புதுப்புது உணர்ச்சிகள் ஊர்ந்துவரும்
இலக்கிய வாழ்க்கையில் இச்சைதரும்
இன்பச் செயல்களை மெச்சவரும்
நலிதரும் ஆசையை ஓட்டுவதாய்
நன்னெறி இன்பம் ஊட்டுவதாய்க்
கலைகள் யாவையும் திகழ்ந்திடவும்
கண்டவர் கேட்டவர் புகழ்ந்திடவும். (பொங்)

கொள்ளை கொள்ளை தானியமும்
கோரும் பலதொழில் மானியமும்
வெள்ளிபொன் செல்வம் மிகுந்திடினும்
வேண்டிய கலைத்திறம் திகழ்ந்திடினும்
கள்ளமும் பொய்யும் அமிழ்ந்திடவும்
கருணை நறுமணம் கமழ்ந்திடவும்
உள்ளம் மலர்ந்திடல் இல்லாமல்
உண்மை வளமெதும் நில்லாது. (பொங்)

தனிநா யகன்ஒரு பரம்பொருளாம்
தரணியை ஆள்வதும் அவன்அருளாம்
மனநா யகம்இதில் மலர்ந்துவிடில்
மற்றுள வேற்றுமை உலர்ந்துவிடும்
ஜனநா யகமுறை ஓங்கிவிடும்
சச்சர வென்பன நீங்கிவிடும்
இனமாய் யாவரும் வாழ்ந்திடலாம்
இன்பப் புதுவளம் சூழ்ந்திடவே! (பொங்)

161. தமிழர் கண்ட பொங்கல்

ஏர்தரும் விளைபொருள் யாவையும் நிறைந்தே
ஏழைகள் படுந்துயர் எங்கணும் குறைந்து
போர்வெறிக் கொடுமைகள் புரிவதை மறந்து
பொய்ந்நெறி விடுத்தறம் மெய்ந்நெறி சிறந்து
சீர்தரும் கல்வியும் கலைகளும் செழிக்கச்
செம்மையும் இன்பமும் நாட்டினிற் கொழிக்கப்
பார்புகழ் உழவினைப் பணிந்திட என்றே
பண்டைய தமிழர்கள் கண்டதிப் பொங்கல்.

(வேறு)

பொங்குக பொங்கல் பொங்கிட இன்பம்
ஏரைத் தொழுதால் சீரைப் பெறலாம்
என்பதைப் புகட்டும் இங்கிதப் பொங்கல்
நன்னாள் ஆகிய இந்நாள் தொடங்கிக்
கோழை படாத மேழிச் செல்வம்
வேண்டிய மட்டிலும் வீட்டில் நிறைந்தே
இன்பம் குறையா இல்லறம் நடத்தி
மனைவியும் மக்களும் மற்றுள சுற்றமும்
குலவிட உங்கள் குடித்தனம் சிறந்து
காந்தியை எண்ணிக் கடவுளை நம்பிச்
சத்திய சாந்த சன்மார்க்க நெறியில்
பல்லாண்டு வாழ்வீர் பரமன் அருளும்.

(வேறு)

பொங்கி வழிந்திடும் அன்போடு
பொங்கல் திருநாள் கொண்டாடி
திங்கள் மும்மாரி பொழிந்திடவும்
தீமைகள் யாவும் ஒழிந்திடவும்
எங்கும் மாந்தவர்கள் எல்லாரும்
ஏதொரு குறையும் இல்லாமல்
இங்கித முற்றிட வேண்டுமென
ஈசன் மலரடி பூண்டிடுவோம்.

ஏரைத் தொழுதால் சீராகும்
என்கிற அறிவே நேராகும்
பாரில் இதனை மறந்ததனால்
பஞ்சம் என்பது நிறைந்ததுவே.
ஊரும் நாடும் உயிர்வாழ்தல்
உழவன் காக்கிற பயிர்வாழ்வால்
தேரும் படிவரும் ஒருநாளே
தெய்வீகப் பொங்கல் திருநாளாம்.

வேலும் போரும் வெற்றிகளும்
வேறுள எவ்வித பெற்றிகளும்
சீலம் மிக்குள உழவேபோல்
சேமம் தருகிற தொழிலாமோ?
பாலும் நெய்யும் பசுவாலே
பகடுகள் எருதின் இசைவாலே
சாலும் உழவும் சரியானால்
சங்கடப் பஞ்சம் வருமோதான்?

ஏற்றத் தாழ்வுகள் எண்ணாமல்
எவ்விதப் பிசகும் பண்ணாமல்
போற்றும் அன்பே நெறியாகப்
பொதுநல வாழ்வே குறியாகச்
சாற்றும் படிவரும் பொன்னாளே
சமரசப் பொங்கல் நன்னாளாம்
ஆற்றல் பற்பல எய்திடினும்
அறமே எதிலும் செய்திடுவோம்.

மைந்தரும் உங்கள் மனைவியுடன்
மற்றுள சுற்றம் அனைவருமே
சுந்தரப் பொலிவுடன் களிகொண்டு
சுவைமிகும் பொங்கல் தங்கிடவும்
சிந்தையில் தெய்வம் தங்கிடவும்
சிறப்புடன் மங்களம் பொங்கிடவும்
வந்தனை பொங்கும் மனத்தோடு
வணங்கி உங்களை வாழ்த்துகிறோம்.


162. உழவுப் பொங்கல்

பொங்குக பொங்கல் பொங்குகவே
புதுவளம் நிறைந்தறம் தங்குகவே!
எங்கணும் யாவரும் இன்பமுற
ஏர்த்தொழில் ஒன்றே தென்புதரும்.

உணவுப் பொருள்கள் இல்லாமல்
உயிரோ டிருப்பது செல்லாது;
பணமும் அதுதரும் நலனெல்லாம்
பயிர்கள் விளைப்பதன் பலனேயாம்.

உழவுத் தொழில்தான் உணவுதரும்
உடையும் அதனால் அணியவரும்
பழகும் மற்றுள தொழில் யாவும்
பயிர்த்தொழில் இன்றேல் விழலாகும்.

தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்
தானியம் ஒன்றே விருந்தாகும்
இங்கிதன் உண்மையை உணர்ந்திடுவோம்
ஏர்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம்.

உழவே செல்வம் உண்டுபண்ணும்
உழைப்பே இன்பம் கொண்டுவரும்
உழவைத் தொழுதிட வருநாளே
உற்றஇப் பொங்கல் திருநாளாம்.

ஏழையும் செல்வரும் இங்கிதமாய்
இசைந்துளம் களித்திடும் பொங்கல்இது
வாழிய பயிர்த்தொழில் வளம்பெருகி
வையகம் முழுவதும் வாழியவே.

163. சமரசப் பொங்கல்

மனிதர் யாவரும் ஒருஜாதி
மாநிலம் எங்கணும் ஒருநீதி
இனிதிவ் வெண்ணம் செழித்திடவே
இம்சையும் பொய்யும் ஒழித்திடவே
தனிவழி அறமுறை தமிழேபோல்
தளர்விலன் சத்திய அமுதூட்டும்
புனிதன்அக் காந்தியின் பொய்யறியாப்
பொக்கைச் சிரிப்புகள் பொங்குதல்போல்
பொங்குக! பொங்கல்! பொங்குகவே!!
புதிதொரு சுவைதரப் பொங்குகவே!


164. பொங்கல் படைப்பு

முத்தமிழ்ப் பண்பெனும் முதுபெருங் கற்கள்
மூன்றையும் அடுப்பென முன்றிலில் கூட்டி
அத்தமிழ் விளைத்துள அறம்பொருள் இன்பம்
அடங்கிய பானையை அடுப்பினில் ஏற்றி
மெய்த்தவ நெறியெனும் நெருப்பினைப் பொருத்தி
மேவிய துயர்களை விறகென எரித்துச்
சத்திய சாந்தநற் பொங்கலைச் சமைத்துச்
சன்னதி ஆண்டவன் முன்அதைப் படைத்து,

தீமைகள் யாவையும் தீர்ந்திட நாட்டில்
திங்கள்மும் மாரிக்குத் திருவருள் கூட்ட
வாய்மையும் தூய்மையும் வளர்ந்திடும் படிக்கோர்
வரந்தர வேண்டுமென் றிறைஞ்சிடு வோமே ;
நோய்மையும் பஞ்சமும் நொடியினில் விலகும்
நுண்ணிய நலந்தரும் புண்ணியம் பெருகும்
தாய்மையின் அன்புடன் தழைத்திடும் தருமம்
தமிழ்ப்பெரும் பொங்கலில் தாரணி மகிழும்.

165. பொங்கல் பிரார்த்தனை

சக்திதரும் சூரியனைத் தொழுது நின்று
சர்வேசன் திருவருளை மனத்தில் எண்ணிப்
புத்தரிசிப் பொங்கலுண்ட பூரிப்போடும்
புத்தாடை புனைந்தொளிரும் பொலிவி னோடும்
எத்துணையும் எவர்க்கேனும் இடைஞ்ச லின்றி
எவ்வெவரும் அவ்வவர்தம் மனம்போல் வாழ
ஒத்துதவும் சமுதாயம் உலகில் ஓங்கும்
ஒருவரத்தைத் திருவருள்பால் உவக்கக் கேட்போம்.

பொங்கிவரும் விஞ்ஞானப் புதுமை கண்டு
புத்திகெட்டு மெய்ஞ்ஞானம் போய்வி டாமல்
எங்கள்திருத் தமிழ்நாட்டின் தெய்வ பக்தி
என்றென்றும் குன்றாமல் இருக்கு மாறும்
எங்குமிந்த உலகிலுள்ள மக்க ளெல்லாம்
இன்பமுற அன்புடனே குலவு மாறும்
பொங்கலென்று போற்றுமிந்தப் புனித நாளில்
புண்ணியத்தை நாடுகின்ற எண்ணம் கொள்வோம்.

மேதினியில் வேற்றுமைகள் இருந்தே தீரும்
மெய்இதனை ஐயமறத் தெளியச் செய்து
சாதிமத வேற்றுமையை மிகைப் படுத்திச்
சண்டைகளை மூட்டுவதைத் தவிர்க்கு மாறும்
ஓதிஉணர்ந் தறிவறிந்த முன்னோர் கண்ட
ஒற்றுமையை வேற்றுமையில் உணரு மாறும்
ஆதிபரம் பொருளிடத்தில் வரங்கள் கேட்போம்
அதுவேநாம் பொங்கலிலே அடையும் நன்மை.

166. வாழிய பொங்கல்

பழையன கழியப் புதியன மலியத்
தழைத்துப் பூத்துத் தருமம் கனிந்து
விழவுகள் பாடி விருந்தொடும் உண்டு
முழவொலி மனைதொறும் முழங்கிடும் பொங்கல்!

சத்தியம் நிலவச் சாந்தமே குலவ
உத்தம போதனை ஒப்பிலாச் சமரசம்
இத்தரை முழுதும் எங்கணும் பரவப்
பக்தியில் பரமனைத் தொழுதிடப் பொங்கல்!

யுத்தமே என்னும் ஒருபெரும் பேச்சால்
இத்தினம் எங்கும் யாவரும் ஏங்கிப்
பித்தரே யாகிப் பேதுறும் நிலையைச்
சற்றுநாம் மறக்கச் சாந்தியாம் பொங்கல்!

நினைவுகள் சிறந்து நிதிபல நிறைந்து
சினவகை சேர்ந்த சிறுமைகள் தீர்ந்து
மனைதொறும் மனைதொறும் மங்களம் தங்க
அனைவரும் இன்புறும் அன்பே பொங்கல்!

ஏழையென் றெவரும் ஏங்குதல் நீங்கி
மேழியின் சிறப்பில் செங்கோல் மின்னும்
வாழ்வினைக் காட்ட வருவதே பொங்கல்
வாழிய பொங்கல்! வாழிய உலகம்.

167. கண்ணன் தந்த தீபாவளி

தீபா வளிப்பெரிய திருநாள்--நாம்
தெய்வப் பணிபுரிய வருநாள்
பாபாதி தீவினைகள் ஒழியத்--திடம்
பண்ணித் தொலைத்துதலை முழுகித்
தூபாதி கற்பூரம் ஏற்றி--மலர்
தூவித் தோத்திரங்கள் சாற்றி
மாபாவி நரகனை வென்றோன்--கண்ணன்
மலரடி யைத்தொழுது நின்றால்.

கன்னங் கருநீலக் கண்ணன்--நம்
காட்சிக் கழகுமிகும் வண்ணம்
மின்னும் பலஅணிகள் பூண்டு--புவி
மெச்சும் கட்டழகில் நீண்டு
சின்னஞ் சிறியவர்கள் உள்ளம்--அந்தச்
சிங்காரம் கண்டுகளி கொள்ள
முன்னம் நம்மிடத்தில் வருவான்--குறை
முற்றும் நீக்கிநலம் தருவான்.

புத்தம் புதியஉடை தரித்தே--எழில்
பொங்கும் மலர்மணங்கள் விரித்தே
சித்தம் வியக்கஒளி வீசிப்--பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மெத்தப் படித்துவரும் கேட்டுப்--பயன்
மேவும் மெய்யறிவு கூட்டும்
தித்திக்கும் கீதங்கள் பாடி--வந்த
தெய்வக் கண்ணனிடம் ஓடி,

கண்ணன் அறிவுரைகள் கேட்போம்--ஒருக்
காலும் சோர்ந்திருக்க மாட்டோம்
பண்ணும் எந்தஒரு செயலும்--சுய
பாசம் அற்றிருக்க முயலும்
எண்ணம் மிகத்தெளிவு கொண்டோம்--அவன்
என்றும் பணிபுரியக் கண்டோம்
திண்ணம் கண்ணனுடை உறவால்--நாம்
தீரச் சிறப்புகளைப் பெறுவோம்.

168. தீபாவளி எனும் திருநாள்

தீபாவளிஎனும் திருநாளே
தெய்வம் அன்பென வருநாளாம்.
கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.
கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள்.

தனித்தனி வீட்டின் தரைமெழுகி
தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
மனத்துயர் யாவையும் மறந்திடுவோம் ;
மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.

உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.

கட்சிச் சண்டைகள் பட்டாசைக்
கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
பட்சம் வந்த மனத்துடனே
பழகுவம் எல்லாம் இனத்துடனும்.

ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ;
ஒருவருக் கொருவர் உபகாரம் ;
இவ்வித வாழ்வே தினந்தோறும்
இருந்திட வேண்டிநம் மனம்கோரும்.

ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
ஏங்கிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
நோயால் நொந்தே இளைத்தவரும்
நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார்.

'ஐயா பசி'யென் பாரில்லை
'அப்புறம் வா'யென் பாரில்லை.
மெய்யே அன்பு மிகுந்திடும்நாள்
வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும்நாள்.

மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
ஆச்சரி யம்போல் எல்லோரும்
ஆடலும் பாடலும் சல்லாபம்.

169. சுதந்தரத் திருநாள்

இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள்
இன்பம் யாவையும் இனிமேல் தருநாள் ;
செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித்
தெய்வம் தொழுவோம் யாவரும் கூடி.

அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம் ;
'அடிமை' என்னும் சொல்லையும் அழித்தோம் ;
பொன்னையும் சுகத்தையும் செலவழித் தேனும்
பூரண சுதந்தரம் அடைந்திட வேணும்.

அன்பின் ஆண்மையும் ஆற்றலும் வளரும் ;
அன்னை பாரதத் தாய்மனம் குளிரும் ;
துன்பம் யாவையும் தொலைத்திட முடியும் ;
சோற்றுத் தரித்திர மாவது விடியும்.

முச்சுடர் ஒளிதரும் நம்கொடி நிழலில்
முற்றிலும் சத்திய சாந்தநல் வழியில்
மெச்சிடும் நன்மைகள் மிகமிகக் கொடுப்போம் ;
மேதினி எங்கணும் கொடுங்கோல் தடுப்போம்.

எல்லாத் தேசமும் எமக்கினி உறவாம் ;
எவரும் செய்திடும் நன்றியை மறவோம் ;
நல்லோர் யாரையும் நலமுறக் காப்போம் ;
நலிப்பவர் எவரும் நடுங்கிடப் பார்ப்போம்.

சுதந்தரம் சுதந்தரம் சுதந்தரம் ஒன்றே
சுகந்தரும் சுகந்தரும் சுகந்தரும் என்றும் ;
பதந்தரும் பலந்தரும் ; பரமனைக் காணும்
பக்தியென் பவருக்கும் சுதந்தரம் வேணும்.

170. குடியரசு தினப் பிரார்த்தனை

இந்தியத்தாய் குடியரசுத் திருநாள் இந்நாள்
இந்நாட்டின் அயலுறவு சிறப்புற் றோங்கி
வந்திடுமோ எனநடுங்கும் அணுகுண் டுப்போர்
வாராமல் தடுத்துலகை வாழ வைக்கும்
மந்திரமாம் காந்திமகான் மார்க்கம் தன்னை
மற்றெல்லா நாடுகளும் மதிக்கச் செய்யத்
துணைபுரியத் திருவருளைத் தொழுவோம் வாரீர்.

அமிழ்தமெனும் தமிழ்வளர்த்த அறிவிற் கேற்ப
அன்புமுறை தவறாத ஆற்றல் கூட்டித்
தமிழரெனும் தனிப்பெருமை தாங்கி நின்று
தனிமுறையில் செயல்புரியத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
இந்தியத்தாய் சொந்தமதை இகழ்ந்தி டாமல்
அமைதியுடன் ஒற்றுமையை உறுதி யாக்கும்
அதுதான்நம் குடியரசின் ஆக்கம் காக்கும்.

சாதிமத பேதமெல்லாம் மறந்து விட்டுச்
சமமாகப் பலதுன்பம் சகித்துக் கொண்ட
சாதனையின் பயனன்றோ இன்று நம்மைச்
சார்ந்திருக்கும் சுதந்தரத்தின் சக்தி யெல்லாம்?
ஆதலினால் வேற்றுமையை வளர்த்தி டாமல்
அன்புருவாம் காந்திஅண்ணல் நமக்குத் தந்த
போதனையைத் தொடர்ந்துசெயல் புரிவோ மானால்
புகழோடு குடியரசில் இன்பம் பொங்கும்.

ஆண்டானுக் கடிமையெனும் அவலம் நீக்கி
அரசாட்சி நமதுடைமை ஆக்கிக் கொண்டோம் ;
பூண்டோடு வறுமையறப் பொருளா தாரப்
புதுமுறைகள் திட்டமிட்டுப் பூர்த்தி செய்வோம் ;
தீண்டாமை ஒன்றைமட்டும் ஒழித்து விட்டால்
சாதிமதக் கொடுமையெல்லாம் தீர்த்த தாகும் ;
தூண்டாத மணிவிளக்காய் நமது நாட்டின்
குடியரசில் காந்திஒளி துலங்க வாழ்வோம்!

எந்திரத்தால் சந்திரன்போல் பொம்மை செய்தே
எட்டாத பெருவெளியில் சுற்றச் செய்தே
வித்தைமிகும் விஞ்ஞான வித்தை தன்னை
விதவிதமாய்ப் பாராட்டி வியந்திட் டாலும்
சிந்தனையில் தெய்வபயம் இருக்க வேண்டும்
செய்வதெல்லாம் கருணையுடன் செய்ய வேண்டும்
மந்திரமாம் காந்திமகான் உபதே சத்தை
மறவாமல் குடியரசில் வளர்க்க வேண்டும்.

171. காந்தி பிறந்த நாள்

கத்திய வார்தன்னில்--காந்தி
கதைதரும் போர்பந்தர்
புத்திலி பாய்அன்னை--செய்த
புண்ணிய மேஎன்ன
உத்தமன் பிறந்ததினம்--அறிஞர்
உவந்திடும் சிறந்ததினம்
இத்தினம் மகிழ்வோடு--காந்தி
எம்மான் புகழ்பாடு.

ஆர்வம் குன்றாமல்--காந்திய
அறவழி நின்றோமேல்
போர்ப்பயம் மறைந்துவிடும்--உலகில்
புலைகொலை குறைந்துவிடும்
பார்தனில் எல்லோரும்--மனிதப்
பண்புள நல்லோராய்ச்
சீர்பெற வாழ்ந்திடலாம்--தெய்வச்
சிறப்புகள் சூழ்ந்திடலாம்.

(வேறு)

காந்தி மகானைப் பணிந்திடுவோம்
காட்டிய அஹிம்சை அணிந்துடுவோம்
சாந்தியின் இன்பம் நிறைந்திடுவோம்
சண்டைகள் மிகவும் குறைந்திருப்போம்
மாந்தர் பிறப்பின் சிறப்படைவோம்
மதவெறி இனவெறி அறப்பெறுவோம்
தாழ்ந்தவர் யாரையும் தாங்கிடுவோம்
தன்னலக் கொடுமைகள் நீங்கிடுவோம்.

தன்னுயிர் இழந்திட நேர்ந்திடினும்
தான்பிற உடலோடு சேர்ந்திருக்கும்
இன்னுயிர் நீக்கும் வினைபுரியா
திருப்பவ ரேதாம் மிகப்பெரியார்
பொன்னுரை இதன்படி வாழ்ந்தவனாம்
புண்ணிய மூர்த்திநம் காந்திமகான்
அன்னவன் புகழே பாடிடுவோம்
அஹிம்சா வழியே நாடிடுவோம்.

ஒன்றாய் நல்லது கொல்லாமை
ஒத்தது பொய்யுரை சொல்லாமை
என்றான் வள்ளுவன் திருக்குறளில்
எம்மான் காந்திதன் உருக்குறளில்
நின்றான் அம்மொழி நிலைநாட்ட
நீங்காப் பெரும்புகழ் மலைகாட்டி
நன்றாய் நாமிதை உணர்ந்துவிடின்
நானிலம் போர்வெறி தணிந்துவிடும்.

172. கம்பன் திருநாள்

கம்பன் திருநாள் கொண்டாடிக்
கவிதா தேவியின் அருள்கூடி
அன்பின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்போம்
அனைவரும் இன்புறும் படிநடப்போம்.

கற்றவர்க் கெல்லாம் பொதுவாகும்
கம்பன் திருநாள் இதுவாகும்
மற்றுள பற்பல நாட்டாரும்
மதித்துளம் மகிழ்ந்திடும் பாட்டாகும்.

தமிழ்மொழி தனக்கொரு தவச்சிறப்பைத்
தந்தது கம்பனின் கவிச்சிறப்பே.
'அமிழ்தம் தமிழ்மொழி' என்பதுவும்
அழியா திருப்பதும் கம்பனதாம்.

கம்பனை மறந்தால் தமிழ்ஏது?
கவிதை என்பதும் கமழாது!
அம்புவிக் கவிஞருள் அரசாகும்
அவனே தமிழ்மொழிப் பரிசாகும்.

கற்பனை சிறந்தது கம்பன்சொல்
கலைத்திறம் நிறைந்தது கம்பன்சொல்
அற்புதச் சித்திரம் அவன்பாட்டு
அறிவுக் கினிப்பதிங் கவன்பாட்டு.

சத்தியம் மிளிர்வது கம்பன்சொல்
சாந்தியைத் தருவது கம்பன்சொல்
நித்தியம் பெற்றதும் அவன்வாக்கு
நிந்தனை அற்றதும் அவன்வாக்கு.

இயல்பாம் வழிகளில் கதைபேசி
இசைமிகும் மொழிகளில் கவிவீசி
நயமிகும் நாடகம் நடப்பதுபோல்
நாவலர் வியந்திடத் தொடுப்பவனாம்.

கலைமொழி நயங்களைக் காட்டிடவும்
கல்வியின் தெளிவினை ஊட்டிடவும்
நிலைதரும் ஊற்றெனத் தமிழ்நாட்டில்
நின்றிடும் கம்பன் அரும்பாட்டு.

கன்னித் தமிழெனும் பெருமையெலாம்
கம்பன் கவிதையின் அருமையினால்
இன்னொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ!

துயரம் நேர்ந்திடில் துணையாகும்
துன்பம் நீந்திடப் புணையாகும்
அயர்வுறும் வேளையில் அலுப்பகற்றும்
அச்சம் நீங்கிட வலுப்படுத்தும்.

குணங்களில் உயர்ந்திட நலங்கொடுக்கும்
கொடுமையை எதிர்த்திடப் பலங்கொடுக்கும்
வணங்கிய வாயுரை மொழிகூட்டும்
வாழ்க்கையின் பயன்பெற வழிகாட்டும்.

சாதியை மதங்களை மறந்திடவும்
சமரச உணர்ச்சிகள் நிறைந்திடவும்
நீதியை அறங்கள் நினைப்பூட்ட
நிரந்தரக் களஞ்சியம் அவன்பாட்டு.

பண்டிதர் புகழ்ந்திடல் போதாது
பாமரர் மகிழ்ந்திடத் தோதாகப்
பெண்டிரும் பிள்ளையும் அதைப்பிடித்துப்
பெருமைக ளடைந்திடும்விதம்கொடுப்போம்.

ஆராய்ச் சிகளால் மயங்காமல்
அவைதரும் சண்டையில் தயங்காமல்
நேராய் கம்பனைப் படிப்பவரே
நிச்சயம் கவிரசம் குடிப்பவராம்.

திருநாள் நட்புடன் நில்லாமல்
தினந்தினம் படித்திட எல்லோரும்
வருநாள் கண்டு களித்திடவே
வாழிய தமிழுக் குழைத்திடுவோம்.

173. கம்பன் விழா

செம்பொருளும் சொற்பெருக்கும் தெளிந்த ஞானம்
தேடுகின்ற இலக்கியமும் செறிந்த தாகும்
நம்பெரிய தமிழ்மொழிக்குப் பெருமை நாட்டி
நானிலத்தில் கவிஞருக்குள் தலைவன் என்றே
அப்புவியின் பலமொழிகள் படித்தா ராய்ந்த
அறிஞர்களில் பெரும்பாலார் ஆமோ திக்கும்
கம்பனுடைத் திருநாளில் கலந்தோர்க் கெல்லாம்
கைகூப்பி வரவேற்போம் ; கடவுள் காக்கும்!

அன்னியர்கள் தமிழ்மொழியை அறிந்தோர் பார்த்தே
அதிசயித்திங் காசைகொள்ளும் கவியாம் கம்பன்
தன்னையிந்தத் தமிழுலகம் மறக்க லாமோ?
சரியாகப் போற்றாத தவறே போலும்!
என்னவிதம் எங்கிருந்தான் என்றும் கூட
ஏற்பதற்காம் சரித்திரங்கள் ஏனோ காணோம்!
இன்னமும்நாம் இப்படியே இருக்க லாமோ?
இழிவன்றோ தமிழரேனும் இனத்துக் கெல்லாம்?

நிதிபடைத்தோர் கலைவளர்க்கும் நெறியைக் காட்டி
நீங்காத புகழினுக்கோர் நிலைய மாகி
மதிபடைத்த புலமையுள்ளோர் எவரும் வாழ்த்த
மங்காத பெருவாழ்வு தமிழுக் கீந்து
துதிபடைத்த ராமகதை தோன்றச் செய்த
சோழவள வெண்ணெய்நல்லூர் சடையன் சேரும்
கதிபடைத்த சொல்வலவன் கம்பன் பேரும்
கடல்கடந்த நாடெல்லாம் பரவக் காண்போம்.

174. வன மகோத்ஸவம்

வனம கோத்ஸவ வைப வத்தினை
வான்ம கிழ்ந்திட வாழ்த்துவோம்
ஜனம கோத்ஸவ மாக வேயிதைத்
தமிழ கத்தினில் எங்கணும்
மனம கோத்ஸவ மங்க ளத்துடன்
மக்கள் யாவரும் செய்திடில்
தினம ஹோத்ஸவ இன்ப மெய்திடத்
திங்கள் மும்மழை பெய்திடும்.

மரம டர்ந்துள வனமி ருப்பதன்
மகிமை சொல்லவும் கூடுமோ?
வரம டைந்தென வளமை யாவையும்
வலிய நம்மிடை நாடுமே
திறம றிந்திதன் தெய்வ சக்தியைத்
தேசம் முற்றிலும் ஓதினால்
உரம்மி குந்திடும் பயிர்செ ழித்திடும்
உணவி லாக்குறை ஏதினி?

கடவுள் ஆணையைமீறு கின்றநம்
கபட நாடக வாழ்வினால்
அடவி தந்திடும் பசுமை முற்றிலும்
அழிவு செய்துள தாழ்வினால்
கடுமை யாகிய பஞ்சம் மிஞ்சிடக்
காலம் மாறின பருவமும்
மடமை விட்டிடக் கடமை கண்டினி
மரம் வளர்ப்பது கருதுவோம்.

நிழல்கொ டுத்திடும் மரம னைத்தையும்
விறகெ ரித்துள நிந்தையால்
தழல்பு குந்துநம் சமையல் செய்திடச்
சாண முற்றிலும் வெந்ததால்
தழையி லாமலும் எருவி லாமலும்
தகுதி யற்றுள மண்ணிலே
விழல்மு ளைக்கவும் சார மில்லைபின்
விளைவு எப்படி எண்ணலாம்?

வனமி ருந்திடில் மழைபொ ழிந்திடும்
வான நீதியின் சத்தியம்
வனம ழிந்தது மழைகு றைந்தது
வாய்மை கண்டனம் இத்தினம்
மனமு வந்தினி நாட்டி லெங்கணும்
மரம டர்ந்திடச் செய்குவோம்.
தினமி ருந்திடும் தானி யக்குறை
தீர்ந்தி டும்படி உய்குவோம்.

பசும ரங்களில் தெய்வ முண்டெனப்
பழைய முன்னவர் போற்றினார்
இசைமி குந்திட ஆயுள் நீண்டிட
இன்ப இல்லறம் ஆற்றினார்
வசைய ழிந்திட நாமும் அப்படி
வனம ரங்களை எண்ணுவோம்
திசைய னைத்திலும் புகழ்சி றந்திடத்
தீர வாழ்க்கையும் பண்ணுவோம்.

வாழ்க இத்திரு வாரம் முழுவதும்
மரம்வ ளர்ந்திட நட்டவர்
வாழ்க அம்மரம் வேர்வ லுக்கிற
வரையில் நீர்தினம் விட்டவர்
வாழ்க நம்முடை நாட்டி லெங்கணும்
வான ளாவிடும் சோலைகள்
வாழ்க சத்திய சாந்த நல்வழி
வந்த இந்தச் சுதந்தரம்.


8. சிறுகாப்பிய மலர்

175. சங்கராச்சாரியர் அருளிச்செய்த பஜகோவிந்தம்

167. கண்ணன் தந்த தீபாவளி

தீபா வளிப்பெரிய திருநாள்--நாம்
தெய்வப் பணிபுரிய வருநாள்
பாபாதி தீவினைகள் ஒழியத்--திடம்
பண்ணித் தொலைத்துதலை முழுகித்
தூபாதி கற்பூரம் ஏற்றி--மலர்
தூவித் தோத்திரங்கள் சாற்றி
மாபாவி நரகனை வென்றோன்--கண்ணன்
மலரடி யைத்தொழுது நின்றால்.

கன்னங் கருநீலக் கண்ணன்--நம்
காட்சிக் கழகுமிகும் வண்ணம்
மின்னும் பலஅணிகள் பூண்டு--புவி
மெச்சும் கட்டழகில் நீண்டு
சின்னஞ் சிறியவர்கள் உள்ளம்--அந்தச்
சிங்காரம் கண்டுகளி கொள்ள
முன்னம் நம்மிடத்தில் வருவான்--குறை
முற்றும் நீக்கிநலம் தருவான்.

புத்தம் புதியஉடை தரித்தே--எழில்
பொங்கும் மலர்மணங்கள் விரித்தே
சித்தம் வியக்கஒளி வீசிப்--பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மெத்தப் படித்துவரும் கேட்டுப்--பயன்
மேவும் மெய்யறிவு கூட்டும்
தித்திக்கும் கீதங்கள் பாடி--வந்த
தெய்வக் கண்ணனிடம் ஓடி,

கண்ணன் அறிவுரைகள் கேட்போம்--ஒருக்
காலும் சோர்ந்திருக்க மாட்டோம்
பண்ணும் எந்தஒரு செயலும்--சுய
பாசம் அற்றிருக்க முயலும்
எண்ணம் மிகத்தெளிவு கொண்டோம்--அவன்
என்றும் பணிபுரியக் கண்டோம்
திண்ணம் கண்ணனுடை உறவால்--நாம்
தீரச் சிறப்புகளைப் பெறுவோம்.

168. தீபாவளி எனும் திருநாள்

தீபாவளிஎனும் திருநாளே
தெய்வம் அன்பென வருநாளாம்.
கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.
கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள்.

தனித்தனி வீட்டின் தரைமெழுகி
தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
மனத்துயர் யாவையும் மறந்திடுவோம் ;
மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.

உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.

கட்சிச் சண்டைகள் பட்டாசைக்
கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
பட்சம் வந்த மனத்துடனே
பழகுவம் எல்லாம் இனத்துடனும்.

ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ;
ஒருவருக் கொருவர் உபகாரம் ;
இவ்வித வாழ்வே தினந்தோறும்
இருந்திட வேண்டிநம் மனம்கோரும்.

ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
ஏங்கிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
நோயால் நொந்தே இளைத்தவரும்
நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார்.

'ஐயா பசி'யென் பாரில்லை
'அப்புறம் வா'யென் பாரில்லை.
மெய்யே அன்பு மிகுந்திடும்நாள்
வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும்நாள்.

மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
ஆச்சரி யம்போல் எல்லோரும்
ஆடலும் பாடலும் சல்லாபம்.

169. சுதந்தரத் திருநாள்

இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள்
இன்பம் யாவையும் இனிமேல் தருநாள் ;
செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித்
தெய்வம் தொழுவோம் யாவரும் கூடி.

அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம் ;
'அடிமை' என்னும் சொல்லையும் அழித்தோம் ;
பொன்னையும் சுகத்தையும் செலவழித் தேனும்
பூரண சுதந்தரம் அடைந்திட வேணும்.

அன்பின் ஆண்மையும் ஆற்றலும் வளரும் ;
அன்னை பாரதத் தாய்மனம் குளிரும் ;
துன்பம் யாவையும் தொலைத்திட முடியும் ;
சோற்றுத் தரித்திர மாவது விடியும்.

முச்சுடர் ஒளிதரும் நம்கொடி நிழலில்
முற்றிலும் சத்திய சாந்தநல் வழியில்
மெச்சிடும் நன்மைகள் மிகமிகக் கொடுப்போம் ;
மேதினி எங்கணும் கொடுங்கோல் தடுப்போம்.

எல்லாத் தேசமும் எமக்கினி உறவாம் ;
எவரும் செய்திடும் நன்றியை மறவோம் ;
நல்லோர் யாரையும் நலமுறக் காப்போம் ;
நலிப்பவர் எவரும் நடுங்கிடப் பார்ப்போம்.

சுதந்தரம் சுதந்தரம் சுதந்தரம் ஒன்றே
சுகந்தரும் சுகந்தரும் சுகந்தரும் என்றும் ;
பதந்தரும் பலந்தரும் ; பரமனைக் காணும்
பக்தியென் பவருக்கும் சுதந்தரம் வேணும்.

170. குடியரசு தினப் பிரார்த்தனை

இந்தியத்தாய் குடியரசுத் திருநாள் இந்நாள்
இந்நாட்டின் அயலுறவு சிறப்புற் றோங்கி
வந்திடுமோ எனநடுங்கும் அணுகுண் டுப்போர்
வாராமல் தடுத்துலகை வாழ வைக்கும்
மந்திரமாம் காந்திமகான் மார்க்கம் தன்னை
மற்றெல்லா நாடுகளும் மதிக்கச் செய்யத்
துணைபுரியத் திருவருளைத் தொழுவோம் வாரீர்.

அமிழ்தமெனும் தமிழ்வளர்த்த அறிவிற் கேற்ப
அன்புமுறை தவறாத ஆற்றல் கூட்டித்
தமிழரெனும் தனிப்பெருமை தாங்கி நின்று
தனிமுறையில் செயல்புரியத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
இந்தியத்தாய் சொந்தமதை இகழ்ந்தி டாமல்
அமைதியுடன் ஒற்றுமையை உறுதி யாக்கும்
அதுதான்நம் குடியரசின் ஆக்கம் காக்கும்.

சாதிமத பேதமெல்லாம் மறந்து விட்டுச்
சமமாகப் பலதுன்பம் சகித்துக் கொண்ட
சாதனையின் பயனன்றோ இன்று நம்மைச்
சார்ந்திருக்கும் சுதந்தரத்தின் சக்தி யெல்லாம்?
ஆதலினால் வேற்றுமையை வளர்த்தி டாமல்
அன்புருவாம் காந்திஅண்ணல் நமக்குத் தந்த
போதனையைத் தொடர்ந்துசெயல் புரிவோ மானால்
புகழோடு குடியரசில் இன்பம் பொங்கும்.

ஆண்டானுக் கடிமையெனும் அவலம் நீக்கி
அரசாட்சி நமதுடைமை ஆக்கிக் கொண்டோம் ;
பூண்டோடு வறுமையறப் பொருளா தாரப்
புதுமுறைகள் திட்டமிட்டுப் பூர்த்தி செய்வோம் ;
தீண்டாமை ஒன்றைமட்டும் ஒழித்து விட்டால்
சாதிமதக் கொடுமையெல்லாம் தீர்த்த தாகும் ;
தூண்டாத மணிவிளக்காய் நமது நாட்டின்
குடியரசில் காந்திஒளி துலங்க வாழ்வோம்!

எந்திரத்தால் சந்திரன்போல் பொம்மை செய்தே
எட்டாத பெருவெளியில் சுற்றச் செய்தே
வித்தைமிகும் விஞ்ஞான வித்தை தன்னை
விதவிதமாய்ப் பாராட்டி வியந்திட் டாலும்
சிந்தனையில் தெய்வபயம் இருக்க வேண்டும்
செய்வதெல்லாம் கருணையுடன் செய்ய வேண்டும்
மந்திரமாம் காந்திமகான் உபதே சத்தை
மறவாமல் குடியரசில் வளர்க்க வேண்டும்.

171. காந்தி பிறந்த நாள்

கத்திய வார்தன்னில்--காந்தி
கதைதரும் போர்பந்தர்
புத்திலி பாய்அன்னை--செய்த
புண்ணிய மேஎன்ன
உத்தமன் பிறந்ததினம்--அறிஞர்
உவந்திடும் சிறந்ததினம்
இத்தினம் மகிழ்வோடு--காந்தி
எம்மான் புகழ்பாடு.

ஆர்வம் குன்றாமல்--காந்திய
அறவழி நின்றோமேல்
போர்ப்பயம் மறைந்துவிடும்--உலகில்
புலைகொலை குறைந்துவிடும்
பார்தனில் எல்லோரும்--மனிதப்
பண்புள நல்லோராய்ச்
சீர்பெற வாழ்ந்திடலாம்--தெய்வச்
சிறப்புகள் சூழ்ந்திடலாம்.

(வேறு)

காந்தி மகானைப் பணிந்திடுவோம்
காட்டிய அஹிம்சை அணிந்துடுவோம்
சாந்தியின் இன்பம் நிறைந்திடுவோம்
சண்டைகள் மிகவும் குறைந்திருப்போம்
மாந்தர் பிறப்பின் சிறப்படைவோம்
மதவெறி இனவெறி அறப்பெறுவோம்
தாழ்ந்தவர் யாரையும் தாங்கிடுவோம்
தன்னலக் கொடுமைகள் நீங்கிடுவோம்.

தன்னுயிர் இழந்திட நேர்ந்திடினும்
தான்பிற உடலோடு சேர்ந்திருக்கும்
இன்னுயிர் நீக்கும் வினைபுரியா
திருப்பவ ரேதாம் மிகப்பெரியார்
பொன்னுரை இதன்படி வாழ்ந்தவனாம்
புண்ணிய மூர்த்திநம் காந்திமகான்
அன்னவன் புகழே பாடிடுவோம்
அஹிம்சா வழியே நாடிடுவோம்.

ஒன்றாய் நல்லது கொல்லாமை
ஒத்தது பொய்யுரை சொல்லாமை
என்றான் வள்ளுவன் திருக்குறளில்
எம்மான் காந்திதன் உருக்குறளில்
நின்றான் அம்மொழி நிலைநாட்ட
நீங்காப் பெரும்புகழ் மலைகாட்டி
நன்றாய் நாமிதை உணர்ந்துவிடின்
நானிலம் போர்வெறி தணிந்துவிடும்.

172. கம்பன் திருநாள்

கம்பன் திருநாள் கொண்டாடிக்
கவிதா தேவியின் அருள்கூடி
அன்பின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்போம்
அனைவரும் இன்புறும் படிநடப்போம்.

கற்றவர்க் கெல்லாம் பொதுவாகும்
கம்பன் திருநாள் இதுவாகும்
மற்றுள பற்பல நாட்டாரும்
மதித்துளம் மகிழ்ந்திடும் பாட்டாகும்.

தமிழ்மொழி தனக்கொரு தவச்சிறப்பைத்
தந்தது கம்பனின் கவிச்சிறப்பே.
'அமிழ்தம் தமிழ்மொழி' என்பதுவும்
அழியா திருப்பதும் கம்பனதாம்.

கம்பனை மறந்தால் தமிழ்ஏது?
கவிதை என்பதும் கமழாது!
அம்புவிக் கவிஞருள் அரசாகும்
அவனே தமிழ்மொழிப் பரிசாகும்.

கற்பனை சிறந்தது கம்பன்சொல்
கலைத்திறம் நிறைந்தது கம்பன்சொல்
அற்புதச் சித்திரம் அவன்பாட்டு
அறிவுக் கினிப்பதிங் கவன்பாட்டு.

சத்தியம் மிளிர்வது கம்பன்சொல்
சாந்தியைத் தருவது கம்பன்சொல்
நித்தியம் பெற்றதும் அவன்வாக்கு
நிந்தனை அற்றதும் அவன்வாக்கு.

இயல்பாம் வழிகளில் கதைபேசி
இசைமிகும் மொழிகளில் கவிவீசி
நயமிகும் நாடகம் நடப்பதுபோல்
நாவலர் வியந்திடத் தொடுப்பவனாம்.

கலைமொழி நயங்களைக் காட்டிடவும்
கல்வியின் தெளிவினை ஊட்டிடவும்
நிலைதரும் ஊற்றெனத் தமிழ்நாட்டில்
நின்றிடும் கம்பன் அரும்பாட்டு.

கன்னித் தமிழெனும் பெருமையெலாம்
கம்பன் கவிதையின் அருமையினால்
இன்னொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ!

துயரம் நேர்ந்திடில் துணையாகும்
துன்பம் நீந்திடப் புணையாகும்
அயர்வுறும் வேளையில் அலுப்பகற்றும்
அச்சம் நீங்கிட வலுப்படுத்தும்.

குணங்களில் உயர்ந்திட நலங்கொடுக்கும்
கொடுமையை எதிர்த்திடப் பலங்கொடுக்கும்
வணங்கிய வாயுரை மொழிகூட்டும்
வாழ்க்கையின் பயன்பெற வழிகாட்டும்.

சாதியை மதங்களை மறந்திடவும்
சமரச உணர்ச்சிகள் நிறைந்திடவும்
நீதியை அறங்கள் நினைப்பூட்ட
நிரந்தரக் களஞ்சியம் அவன்பாட்டு.

பண்டிதர் புகழ்ந்திடல் போதாது
பாமரர் மகிழ்ந்திடத் தோதாகப்
பெண்டிரும் பிள்ளையும் அதைப்பிடித்துப்
பெருமைக ளடைந்திடும்விதம்கொடுப்போம்.

ஆராய்ச் சிகளால் மயங்காமல்
அவைதரும் சண்டையில் தயங்காமல்
நேராய் கம்பனைப் படிப்பவரே
நிச்சயம் கவிரசம் குடிப்பவராம்.

திருநாள் நட்புடன் நில்லாமல்
தினந்தினம் படித்திட எல்லோரும்
வருநாள் கண்டு களித்திடவே
வாழிய தமிழுக் குழைத்திடுவோம்.

173. கம்பன் விழா

செம்பொருளும் சொற்பெருக்கும் தெளிந்த ஞானம்
தேடுகின்ற இலக்கியமும் செறிந்த தாகும்
நம்பெரிய தமிழ்மொழிக்குப் பெருமை நாட்டி
நானிலத்தில் கவிஞருக்குள் தலைவன் என்றே
அப்புவியின் பலமொழிகள் படித்தா ராய்ந்த
அறிஞர்களில் பெரும்பாலார் ஆமோ திக்கும்
கம்பனுடைத் திருநாளில் கலந்தோர்க் கெல்லாம்
கைகூப்பி வரவேற்போம் ; கடவுள் காக்கும்!

அன்னியர்கள் தமிழ்மொழியை அறிந்தோர் பார்த்தே
அதிசயித்திங் காசைகொள்ளும் கவியாம் கம்பன்
தன்னையிந்தத் தமிழுலகம் மறக்க லாமோ?
சரியாகப் போற்றாத தவறே போலும்!
என்னவிதம் எங்கிருந்தான் என்றும் கூட
ஏற்பதற்காம் சரித்திரங்கள் ஏனோ காணோம்!
இன்னமும்நாம் இப்படியே இருக்க லாமோ?
இழிவன்றோ தமிழரேனும் இனத்துக் கெல்லாம்?

நிதிபடைத்தோர் கலைவளர்க்கும் நெறியைக் காட்டி
நீங்காத புகழினுக்கோர் நிலைய மாகி
மதிபடைத்த புலமையுள்ளோர் எவரும் வாழ்த்த
மங்காத பெருவாழ்வு தமிழுக் கீந்து
துதிபடைத்த ராமகதை தோன்றச் செய்த
சோழவள வெண்ணெய்நல்லூர் சடையன் சேரும்
கதிபடைத்த சொல்வலவன் கம்பன் பேரும்
கடல்கடந்த நாடெல்லாம் பரவக் காண்போம்.

174. வன மகோத்ஸவம்

வனம கோத்ஸவ வைப வத்தினை
வான்ம கிழ்ந்திட வாழ்த்துவோம்
ஜனம கோத்ஸவ மாக வேயிதைத்
தமிழ கத்தினில் எங்கணும்
மனம கோத்ஸவ மங்க ளத்துடன்
மக்கள் யாவரும் செய்திடில்
தினம ஹோத்ஸவ இன்ப மெய்திடத்
திங்கள் மும்மழை பெய்திடும்.

மரம டர்ந்துள வனமி ருப்பதன்
மகிமை சொல்லவும் கூடுமோ?
வரம டைந்தென வளமை யாவையும்
வலிய நம்மிடை நாடுமே
திறம றிந்திதன் தெய்வ சக்தியைத்
தேசம் முற்றிலும் ஓதினால்
உரம்மி குந்திடும் பயிர்செ ழித்திடும்
உணவி லாக்குறை ஏதினி?

கடவுள் ஆணையைமீறு கின்றநம்
கபட நாடக வாழ்வினால்
அடவி தந்திடும் பசுமை முற்றிலும்
அழிவு செய்துள தாழ்வினால்
கடுமை யாகிய பஞ்சம் மிஞ்சிடக்
காலம் மாறின பருவமும்
மடமை விட்டிடக் கடமை கண்டினி
மரம் வளர்ப்பது கருதுவோம்.

நிழல்கொ டுத்திடும் மரம னைத்தையும்
விறகெ ரித்துள நிந்தையால்
தழல்பு குந்துநம் சமையல் செய்திடச்
சாண முற்றிலும் வெந்ததால்
தழையி லாமலும் எருவி லாமலும்
தகுதி யற்றுள மண்ணிலே
விழல்மு ளைக்கவும் சார மில்லைபின்
விளைவு எப்படி எண்ணலாம்?

வனமி ருந்திடில் மழைபொ ழிந்திடும்
வான நீதியின் சத்தியம்
வனம ழிந்தது மழைகு றைந்தது
வாய்மை கண்டனம் இத்தினம்
மனமு வந்தினி நாட்டி லெங்கணும்
மரம டர்ந்திடச் செய்குவோம்.
தினமி ருந்திடும் தானி யக்குறை
தீர்ந்தி டும்படி உய்குவோம்.

பசும ரங்களில் தெய்வ முண்டெனப்
பழைய முன்னவர் போற்றினார்
இசைமி குந்திட ஆயுள் நீண்டிட
இன்ப இல்லறம் ஆற்றினார்
வசைய ழிந்திட நாமும் அப்படி
வனம ரங்களை எண்ணுவோம்
திசைய னைத்திலும் புகழ்சி றந்திடத்
தீர வாழ்க்கையும் பண்ணுவோம்.

வாழ்க இத்திரு வாரம் முழுவதும்
மரம்வ ளர்ந்திட நட்டவர்
வாழ்க அம்மரம் வேர்வ லுக்கிற
வரையில் நீர்தினம் விட்டவர்
வாழ்க நம்முடை நாட்டி லெங்கணும்
வான ளாவிடும் சோலைகள்
வாழ்க சத்திய சாந்த நல்வழி
வந்த இந்தச் சுதந்தரம்.


176. பகவத் கீதை : ஸாங்க்ய யோகம்
இரண்டாம் அத்தியாயம்

அர்ச்சுனன் கேட்கிறான் :
கேசவா விளங்கச் சொல்வாய்
கெட்டியாம் அறிவு பெற்றோன்
பேசுமா றெவ்வா(று)? அன்னான்
பிறரிடம் என்ன சொல்வான்?
ஆசிலா அவனுக் குள்ள
அடையாளம் யாது? அந்தத்
தேசுளான் எதனைச் செய்வான்?
தேர்ந்திடும் பலன்தான் என்ன?

பகவான் சொல்லுகிறார்:
பார்த்த!கேள் சொல்லு கின்றேன்
பலமுள்ள அறிஞன் தன்மை ;
ஆர்த்தெழு மனத்தில் தோன்றும்
ஆசைகள் அனைத்தும் நீக்கித்
தீர்த்தபின் ஆத்மா தோன்றும்
தெரிந்துளே மகிழ்வா னாயின்
நீத்தவன் அவனே என்ப
நிச்சய புத்தி பெற்றோன்.

துன்பங்கள் வந்திட் டாலும்
துணுக்குற மாட்டான்; மற்றும்
இன்பங்கள் எய்தி னாலும்
இச்சித்து மயங்க மாட்டான்;
பின்பவன் ஆசை, அச்சம்
பிணைந்துள்ள சினமும் நீங்கும் ;
தென்புள்ள முனிவ னாகித்
திடமுற்ற அறிஞன் ஆவான்.

நல்லது வந்த போதும்
நசைதரும் மகிழ்ச்சி கொள்ளான் ;
அல்லது கெடுதி வந்தால்
அருவருப் படைய மாட்டான் ;
தொல்லைய விருப்பி னோடு
வெறுப்பையும் துறந்தோன் என்னும்
வல்லவன் அவனே யாகும்
வலிவுள்ள அறிவு வந்தோன்.

தலைஒன்று, கால்கள் நான்கு,
ஐந்தையும் தனக்குள் ளேயே
நிலைபெற இழுத்துக் கொள்ளும்
ஆமைபோல் நினைத்த வாறே
அலைதரும் புலன்கள் ஐந்தும்
தன்னுளே அடக்கி ஆளும்
கலைதெரிந் தவனே யாகும்
கலங்கிடா அறிவு கண்டோன்.

தம்மிடம் மோகம் கொள்ளா
ஜீவரை விட்டுத் தாமே
வெம்மைய விஷய மெல்லாம்
விலகிடும் எனினும் முன்னே
அம்மனம் சுவைத்த இன்ப
ஆசையின் சபலம் தங்கும் ;
மெய்ம்மையன் பரமாத் மாவை
மேவினால் அதுவும் நீங்கும்.

குந்தியின் மகனே! கேளாய் ;
குறைவற முயலும் யோக
சிந்தனை யுடைய நல்ல
தவசியின் திடத்தைக் கூட
இந்திரி யங்கள் வேகம்
தம்முடன் இழுத்துச் செல்லும் ;
நிந்தனை சேரப் புத்தி
நிலைதடு மாற நேரும்.

அப்படிப் பட்ட அந்தப்
பொறிகளை அடக்கி வைத்துத்
தப்பற யோகம் தன்னில்
தன்மனம் ஊன்றி நிற்பாய் ;
எப்பொருள் எதையும் விட்டிங்
கென்னையே பரனாய்க் கொண்டு
வெப்புறும் புலனை வேன்றோன்
மேவுவன் நிலைத்த ஞானம்.

மனிதர்கள் விஷயம் தம்மை
மனத்தினில் மருவும் போது
பனிதரும் ஆசை தோன்றிப்
பற்றுகள் பற்றிக் கொள்ளும்.
வினைதரும் பற்றுண் டாகி
விளைந்திடும் மோகத் தாலே
சினமெனும் தீமை தோன்றிச்
சிந்தனை கெட்டுப் போகும்.

சினமது வந்த பின்னர்ச்
சிந்தனை மயக்கம் கொள்ளும்
மனமது மயங்கும் போதில்
எண்ணத்தில் மாசுண் டாகும் ;
நினைவது மாசு பட்டால்
நிச்சயம் புத்தி நாசம் ;
அனையதாய் அறிவு கெட்டால்
அதன்பின்பு அழிவே திண்ணம்.

அருப்புடைப் புலன்கள் தம்மை
அடக்கிய அறிஞன் என்போன்
இருப்புள உலகத் தோடே
இணங்கிஊ டாடி னாலும்
விருப்பொடு வெறுப்பு மின்றி
விஷயங்கள் நுகர்வோ னாகத்
திரிப்பிலன் ஆகி உள்ளத்
தெளிவுடன் அமைதி சேர்வான்.

தெளிவுடன் அமைதி சேர்ந்த
சித்தத்தில் ஒளிஉண் டாகும் ;
ஒளிபெறும் போது புத்தி
விரைவினில் உறுதி கொள்ளும் ;
அளிதரும் சாந்தி பெற்ற
அறிவுதான் நிலைப்ப தாகும் ;
இளிதரும் துன்பம் என்ப
திவனுக்கிங் கில்லை யாகும்.

யோகமில் லாத பேர்க்கே
உறுதியாம் புத்தி யில்லை ;
ஆகவே அவர்கள் ஆத்ம
சிந்தனை அடைய மாட்டார்.
சேகெனும் அந்த ஆத்ம
சிந்தனை இல்லை யானால்
பாகெனும் சாந்தம் இல்லை;
பகர்ந்திட இன்பம் ஏது?

இந்திரி யத்தின் வேக
இழுப்பினில் சிக்கிக் கொண்டு
சிந்தனை விஷயத் தோடு
பின்பற்றிச் செல்லு மாயின்
அந்தரக் கடலில், காற்றில்
அலைபடும் படகே போல
மைந்தரின் அறிவு மங்கி
மலைத்திடும் ஆசை மோத.

ஆதலால் வலிய தோளாய்!
அத்தகை விஷயம் தம்மைக்
காதலால் தொடரா வண்ணம்
பொறிகளைக் கட்டிக் காத்து
வாதனைக் கிடமில் லாமல்
வசமாக்கி வைக்கத் தக்க
சாதனை உடையோன் புத்தி
சலனமில் லாத தாகும்.

மற்றுள உயிர்கள் தூங்கும்
மடமையின் இரவே யாகும்
கற்றுள யோகி ஞானக்
கண்ணுறங் காத நேரம் ;
உற்றுள உலகத் தோர்கள்
உழல்கின்ற பகற்கா லத்தை
நற்றவ யோகி சாந்த
நள்ளிர வாகக் கொள்வான்.

ஆறுகள் பாய்ந்து தண்ணீர்
அடிக்கடிப் புகுந்திட் டாலும்
மாறுகொள் ளாது நிற்கும்
மாபெரும் கடலே போல
வீறுகொள் காமம் பாய்ந்தும்
விருப்புறா நிலையே சாந்தி ;
சாறுற விருப்ப முற்றோன்
சாந்தியை அடைய மாட்டான்.

இச்சையை ஒழித்தே எல்லா
இன்பமும் துறந்தோ னாகி
எச்சரிப் போடு காத்திங்
கிடைதடு மாறி டாமல்
நச்சிடும் மமதை கூட்டும்
'நான்என' தென்ப தற்றோன்
நிச்சயம் பரம் சாந்த
நிலையினை அடைந்தோ னாவான்.

அந்நிலை அதுவே ப்ரம்ம
ஆனந்த நிலைமை யாகும் ;
இந்நிலை பெற்றோன் பின்னர்
எதிலுமே மயங்க மாட்டான் ;
பொய்நிலை யான தேகம்
போய்விடும் போது கூடச்
செந்நிலை மாறி டாமல்
முத்தியைச் சேர்வான் திண்ணம்.

177. வாக்குமூலம்
[மகாத்மா காந்தி, விசாரணையின்போது
நீதி மன்றத்தில் கூறியதின் சாரம்]

'ஆங்கில அரசியல் அதுமிக நல்லது
ஈங்கதற் கொன்றும் இணையிலை' யென்றே
எண்ணியே இருந்த என்மன முடைந்து
மண்ணிலே அதுமிக மயக்குடைத் தென்று
கண்ணிய முடையோர் கலந்திடார் அதிலெனத்

திண்ணமாய் நம்பித் திரும்பிய காரணம்
ஈங்குள யாவரும் இந்திய ரனைவரும்
ஆங்கில மக்களும் அரசியல் அதிபதி
தாங்களும் அறியச் சத்தியம் தெரிய
ஓங்கிய கடமையில் உரைத்திட நின்றேன்.

ஆதிநாள் தென்னாப் பிரிக்கா தன்னிவில்
நீதியும் எங்கள் நிலைமையும் கண்டேன்
இந்திய னாகவே இருந்தத னாலே
சொந்தமென் றுரிமை சொல்லுதற் கொன்றும்
இந்தமா உலகில் எமக்கிலை யென்பதை

அங்கே முதலில் அறிந்திட லானேன்
என்கிற போதும் ஏகாதி பத்யம்
போய்விடும் போலப் போரில் எதிர்த்த
போயர் சமரிலும் ஜூலுவர் போரிலும்
அந்தநா டாளும் ஆங்கிலே யருக்கே

என்னா லான உதவிகள் புரிந்தேன்
சொற்பொரு ளுடலும் சோர்விலா துதவி
பற்பல விதமாய்ப் பட்டமும் பரிசும்
ஏட்டினிற் கூட என்னைப் புகழ்ந்து
காட்டியே எழுதும் கனதையும் பெற்றேன்.

ஜெர்மனி சண்டை செய்திடும் போதும்
தர்மம் இதுவெனத் தளரா துழைத்தேன்.
ஆனஎன் தேகம் அசதியுற் றிருந்தும்
சேனையும் பணமும் சேர்த்துக் கொடுத்தேன்.
சண்டையின் பின்பு தருமம் தழைக்கும்

அண்டிய எங்கள் ஆரிய நாடும்
மாநிலத் துள்ள மற்றநா டுகளெனத்
தானிமிர்ந் துயரத் தயவுசெய் வாரென
நம்பியே நானும் நாளும் உழைத்து
வெம்பினேன் எண்ணமும் வீணாய்ப் போனதே!

அடிமேல் அடியென அஞ்சியே பதைத்திட
இடிமேல் இடிவிழ இற்றது நெஞ்சமும்
முதலடி 'ரெளலட்' சட்ட மூலமாய்
முதுகினில் விழுந்தது சுதந்தரம் முறியப்
பதைத்துநா னெழுந்து பலவிதத் தாலும்

அதைத்தடுப் பதற்கே அலைந்திடும் நாளில்
தயங்கிய என்மனம் தைரிய மடையுமுன்
பயங்கர மாகிய பஞ்சாப் படுகொலை!
கூர்மையாம் இடியது மானமுங் குறைய
மார்பினில் விழவே மயங்கினன் ஐயோ!

இந்திய முசல்மான் மக்களுக் கென்று
மந்திரி யுரைத்த உறுதியை மறந்தும்
அன்னவர் குருவின் ஆதி பீடமாம்
மன்னிய கிலாபத் மதவிஷயத்திலும்
சொன்னதம் வாக்கினைச் சோரவிட் டார்கள் ;

எண்ணமும் இல்லை யென்பதை யுணர்ந்தேன்.
இத்தனைக் கொடுமைகள் இழைத்தனர் தெரிந்தும.
சித்தமும் அவர்க்குச் சீக்கிரம் திரும்புமென்
றாசையே கொண்டு அடக்கினேன் துக்கமே.
ஏசிய என்னை எதிர்த்தவ ராகி

எச்சரித் திட்ட என்னுடைய நண்பர்கள்
உச்சரித் திட்ட உரைகளை விடுத்தே
இந்தியர் குறைகளை எடுத்துரைத் திடவென
வந்திடும் பெரிய வாக்குடை காங்கிஸில்
அத்தினம் நானும் அமிர்த சரசினில்

ஒத்துழைப் பதையே உறுதியாய்க் கொண்டு
தாங்கியே நின்றேன் தருமந் தானென
ஏங்கினேன் ஐயோ ஏமாந் தவனாய்!
மகம்மதி யர்க்குரை வார்த்தையும் பொய்த்தது.
தகுமெனப் பஞ்சாப் தருக ணாளரை

அடிப்பது போலும் அழுவது போலும்
நடிப்பினைச் செய்து ஞாயமும் மழுப்பித்
தீங்கிழைத் தவர்க்கே உதவிசம் பளமும்
பாங்குடன் கொடுத்துப் பரிசுகள் அளித்தார்.
இதையெலாங் கண்டபின் இந்தியர்க் களித்த

உதவாக் கரையாம் சீர்திருத் தங்களும்
என்னுடை நாடு இன்னமுங் குறைந்து
குன்றிட வென்றே கொடுத்தனர் என்று
கண்டனன் நானும் கருத்திழந் தவனாய்ப்
பண்டைய இந்தப் பாரத நாட்டிடம்

அரசியல் செய்பவர்க் கன்பிலை யென்றும்
உரிமையெம் பணத்தை உறிஞ்சிட வென்றே
அறிந்திட நின்றேன் ஆங்கில ஆட்சியில்
சிறந்தஎன் தேசம் சீர்குலைந் ததுவே!
அன்றியும் இந்த ஆட்சியின் முன்னால்

மாசிலா அவனுடைச் சன்னதி மன்றினில்
ஆங்கில தேசமும் அதனுடன் எண்ணிய
பாங்கின ராகிய இந்தியர் பலரும்
உத்தரம் சொல்ல ஒதுங்கிடும் காலம்
சத்தியம் ஒருநாள் வந்திடும் சத்தியம்.

பற்பல விதமாய்ப் பார்த்துப் பார்த்தே
அற்புத உண்மையை அறிந்தனன் நானும்
அறிந்தோ அன்றோ அன்னியர் தமக்கே
பரிந்தே நிற்கும் பகருமிவ் வாட்சியை
நல்லதே யென்று நம்பினராகி

நல்லதோர் துரைகளும் நாட்டினர் பலரும்
மயங்கியே நிற்கும் மகிமையே மகிமை!
முயங்கியே அவர்கள் செய்திடும் முறையில்
ஆண்மையை யிழந்திங் கழுந்திடும் தேசம்
பான்மையை உணரார் பாவமும் அறியார்.

ஆதலா லிந்த அரசியல் மாறத்
தீதிலா வழியில் திரும்பினேன் உழைக்க.
அரசியல் செலுத்தும் அதிகா ரிகளாம்
ஒருவ ரிடத்தும்நான் உள்ளம் கசந்திலன்
மன்னவ னிடத்துள் மதிப்பிலும் குறையேன்.

என்னினும் இந்த இயல்பிலா முறைமை
இதுவரை கண்ட எல்லா முறையிலும்
இதுமிகக் கெடுதிகள் இழைத்துள தென்று
நம்பியே அதனுடன் நான்பிணக் குற்றேன்
அன்புகாட் டுவதே அக்ரம மென்றேன்.

இந்தியா விற்கும் இங்கிலாந் திற்கும்
சந்ததம் நன்மையை நாடியே நானும்
ஒத்துழை யாமையே உயர்ந்த வழியென
ஒன்றிய சுகங்கள் உயர்ந்தஇந் நாட்டில்
மனைதொறும் இருந்து மானங் காத்ததாம்

நினைவரி தாகிய ராட்டினத் தொழிலை
அழித்தனர் முற்றும் அறிந்தே யென்றிங்
கெழுதினர் தெரிந்த இங்லீஷ் காரரே.
காரண மிதனால் கணக்கிலா ஜனங்கள்
சோறுண வழியும் துணியுமில் லாமல்

நடைப்பிணம் போல நாள்கழிப் பதனைத்
தடைசொல யார்க்கும் தைரியம் வருமோ?
பட்டணக் கரையில் பகட்டியே யலைந்து
சட்டவட் டம்பல ஜம்பமாய்ப் பேசி
வீடுகள் கட்டியே விளக்குகள் ஏற்றிப்

பாடுப டாமலே பசப்பியே வாழ்ந்து
நாட்டுப் புறங்களில் நலித்திடும் ஏழைகள்
பாட்டைப் பிடுங்கியோ பிறருடன் கூடிப்
பங்குகொண் டுண்ணும் பாவமாம் வாழ்க்கையைத்
தகர்த்திட் எண்ணார் தரகராய் வாழ்வார்.

ஏழையின் பணத்தை எளிதினிற் பறிக்கவே
ஆளுமிந் நாட்டின் ஆட்சியின் முறைமை
உதவியாய் நிற்பதென் றுணரார் அவரும்
உதவியாய் நிற்பதால் உண்மையை அறியார்.
வித்தைகள் ஜாலமும் வேணது செய்தே

எத்தனைக் கணக்குகள் எடுத்துரைத் தாலும்
உண்மையாம் இதனை ஒளித்திட முடியுமோ?
திண்மையாய் நானும் செப்புவ துண்டாம்.
உலகக் கதைகளில் உவமையன் றில்லாப்
பலமிகு மிகப்பெரும் பாவத் திற்கே

ஈசனென் றொருவன் இருப்பதும் உண்மையேல்
இத்தரை யெல்லாம் இயம்பினேன் அறிய,
கடமையை யுணரும் ஒவ்வொரு குடியும்
திடமுடன் கொண்டு செய்திட வென்றும்
சட்டப் படிக்குத் தவறெனத் தெரிந்தும்

திட்டமாய் நானும் தெரிந்தே செய்தேன்.
ஆகையால் துரையே! அறைகுவன் முடிவாய்
ஆகிய இந்த அரசியல் முறைமை
சரியல வென்றும் சத்தியத் தில்நான்
நிரப ராதியே என்பதும் நினைத்தால்

ஒருவழி ஒன்றே உங்களுக் குண்டு.
மருமிகும் இந்த மார்க்கத் திருப்பது
சாலவும் தவறெனத் தகுதியி லுணர்ந்தால்
வேலையை விட்டு விலகிடல் வேண்டும்.
அன்றேல் இந்த அரசியல் முறைமை

நன்றே நானும் நாட்டிற் கிடைஞ்சல்
செய்தவ னென்றே தெளிந்திடு வீரேல்
நொய்தில் விடாமல் நூலில் இதற்குள
தண்டனை முழுவதும் தந்திடல் வேணும்
கொண்டஇந் நாட்டின் குறைதவிர்ந் திடவே.


178. நாட்டுக் கும்மி

கும்மியடி பெண்கள் கும்மியடி யுங்கள்
கொத்துச் சரப்பளி சத்தமிட
நம்மையெ லாம்பெற்ற இந்திய நாட்டின்
நன்மையைக் கோரி யடியுங்கடி!

கடவுள் வணக்கம்

புத்தனென் றும்மஹ மத்தனென் றும்ஏசு
நாதனென் றும்மது சூதனென்றும்
நித்த முதித்தருள் நீதி யளித்திடும்
நிர்மல ஜோதியைப் போற்றுங்கடி!

பிரமன் துதி

நீதி நிலைக்க நினைந்தவ னாம்அருள்
ஜோதி யுருக்கொண்ட மேனியனாம்
ஆதி யறத்தை அளித்திடு வான்எங்கள்
அரவிந்த நாதனைப் போற்றுங்கடி!

சிவபிரான் துதி

ஆலமுண் டாலும் அசையா தான்பர
கால னடிகுண சீலனடி
பாலை முனிந்த பனிமொழி யாள்பதி
பாலகங் காதரன் பாடுங்கடி.

கோபாலன் துதி

தீதுசெய் வேந்தரைச் சீர்திருத் தம்செய்யத்
தூதுந டந்திடும் தூயனடி
கோதில் குணத்தவன் கோகுலத் தில்வந்த
கோபால கிருஷ்ணனைப் பாடுங்கடி.

வழிபடு கந்தன் துதி

கந்தம லரொடு மேலவர்க்கும் ஞானக்
கைப்பலம் காட்டிய கந்தனடி
கந்தம ணக்கின்ற ஜோதிய டிபுகழ்
காந்திய டிவெகு சாந்தனடி.

தற்கால நிலமை

கிட்டுங்க டிமலர் கொட்டுங்க டிகையைத்
தட்டுங்கடி கண்ணீர் சொட்டுங்கடி
மட்டில் புகழ்கொண்ட இந்திய தேவியின்
மாட்சிமை கெட்டதைக் கேளுங்கடி!

கெட்டோம் டிகுடி கெட்டோம டிநாம்
பட்டோம டிவெகு கஷ்டமடி
முட்டத் தரித்திரம் கிட்டி முறைக்குது
மூதேவி நம்மை முறைமை கொண்டாள்.

கஞ்சியற் றோம்பழங் கந்தையற் றோம்குல
வஞ்சிய ரேஎன்ன வஞ்சமடி
கெஞ்சுகின் றோம்மிக அஞ்சுகின் றோமென்ன
காலம டிவந்த கோலமடி.

மானமி ழந்தும தியிழந் துபுகழ்
தானமி ழந்துத வமிழந்து
ஞானமி ழந்துந லமிழந் துநாமும்
போன கதியினைப் பாருங்கடி!

காசு பணத்தைக்கை விட்டா லுங்கதிர்
வீசும் புகழை விடலாமோ?
வீசும் புகழையும் விட்டுவிட் டோம்சற்றும்
வெட்கமு மின்றி வெளியில்வந்தோம்!

நல்ல குடியிற் பிறந்தோமடி நாமும்
நல்ல நிலையி லிருந்தோமடி
தொல்லைப் பிறப்பும் புகழும் மறந்துநாம்
தொண்டுசெய் தொண்டரின் தொண்டரானோம்!

பேரும் புகழும் பெருமையுங் கொண்டவர்
பேரரின் பேரரின் பேரரடி
சீரும் சிறப்பையும் விற்றுவிட் டுநாமும்
சின்னத் தனத்தினைத் தேடிக்கொண்டோம்!

உத்தம ஜாதி மனிதர டிநாமும்
உத்தம மான குலத்தரடி!
பத்தினி ஜாதியின் பாவையே நாமிப்போ
பஞ்சப் பனாதிக ளானோமடி!

வீரர் குடித்தன வீரர டிநாமும்
வீரருள் வீரரின் பேரரடி!
சூரர் குடித்தனச் சூரர டியிப்போ
சோற்றுக்கும் நீருக்கும் சோருதடி!

வேந்தர் குடிவந்த மாந்தர டிவெகு
வெற்றி யடிநாம் பெற்றதடி!
சோர்ந்து சுழன்று சுழித்துத் திரிகின்றோம்
சொக்கு தடிமனம் வெட்குதடி!

அன்னிய ரெத்தினை வந்தா லும்மிக்க
அன்புடன் கொண்டு விருந்த ளிக்கும்
கண்ணிய மான குடியிற் பிறந்துநாம்
கஞ்சியு மற்றுக் கதறுகின்றோம்!

அன்னக் கொடிகள் பறந்து விருந்திடும்
ஆசார வாசலின் வீதியடி!
பின்னக் கழுதையும் பேயும் குடிகொள்ளப்
பெண்மணி யேஎன்ன காலமடி!

வெண்ணெயும் பாலும் பெருகி வழிந்திடும்
பண்ணைய மெங்களின் பண்ணையடி!
தண்ணீரு மின்றித் தயங்கத் தரித்திரம்
தங்குத டிமனம் பொங்குதடி!

நெல்லுங் குலமணிக் கல்லு முதிர்ந்திடும்
கொல்லைய டியெங்கள் கொல்லையடி!
கல்லுங் கரட்டொடு காடுமே டாயிப்போ
காணுத டிமனம் நாணுதடி!

கோடானு கோடி குடித்தனக் காரரின்
கூட்டமடி யெங்கள் கூட்டமடி!
நாடோடி யாகி நடுத்தெரு வில்நின்று
நாமும் புலம்பிடும் ஞாய மென்ன?

கண்ணும் மனமும் கருத்துங்கொண் டமட்டும்
காணும டியெங்கள் காணியடி!
கண்ணும் மனமும் கருத்துஞ் சுழன்றிடக்
கஞ்சியற் றோமடி வஞ்சியரே!

மன்னருள் மன்னரும் வந்து வணங்கிடும்
மன்னவர் மன்னரின் மைந்தரடி!
சின்னஞ்சி றுவரும் நின்று சிரித்திடச்
செய்வினை என்னடி சேடியரே!

நீதியும் நல்ல நெறிமுறை யுங்கொண்ட
ஜாதியடி எங்கள் ஜாதியடி!
நீதியும் நின்ற நெறிமுறை யுங்கெட்ட
நிந்தனை யென்னடி சுந்தரியே!

மானம் பெரிதென்று பிராணனை விட்டுயர்
மாட்சிமை கொண்டவர் மைந்தரடி!
மானத்தை விற்று வயிற்றை வளர்த்திடும்
மாயமு மென்னடி சேயிழையே!

வெள்ளியும் பொன்னும் விரிந்து
வீசுமடி எங்கள் வாசலிலே!
கள்ளியும் முள்ளும் கலந்து முளைத்திப்போ
காட்டுத டிமனம் வாட்டுதடி!

முத்தும் பவளமும் சிந்திக் கிடந்திட்ட
முற்றமடி யெங்கள் முற்றமடி!
சொத்தைப் பணத்திற்கும் செல்லாத காசுக்கும்
சோருதடி மனங் கோருதடி!

போரொடு நின்று புகழோ டிறந்திட்ட
தீரர் வழிவந்த தீரரடி!
தேரொடு நின்று தெருவோ டலைந்திடத்
தேற்றமு மென்னடிக் கோற்றொடியே!

இல்லையென் றோர்களுக்(கு) அள்ளிக் கொடுத்திட்ட
வள்ளல் வழிவந்த வள்ளலடி!
இல்லையில் லையில்லை யில்லையில் லையென்று
பல்லை இளிக்கிறோம் பாருங்கடி!

பார்த்த திசையெங்கும் பச்சைப்ப சேலேன்று
பார்க்கும டியெங்கள் பாளையத்தில்
பார்த்த திசையெங்கும் நீத்துக் கிடக்குது
பாவமு மென்னடி பூவையரே!

பட்டும்பட் டாடையும் கட்டிக் கழித்திட்ட
பட்டையக் காரனின் பந்தலிலே
கட்டக்கை யகலக் கந்தையு மின்றிநாம்
கத்துவ தென்னடி சித்திரமே!

மிஞ்சுவ ளங்கள் நிறைந்து சுகங்கள்
மிதந்து கிடந்திட்ட தேசத்திலே
பஞ்சமும் கொள்ளைப் பலவகை நோய்களும்
மிஞ்சுவ தென்னடி ரஞ்சிதமே!

பாலுந் தினுசுப் பழவகை யும்மூன்று
வேளையும் தின்று வெறுத்தவர்நாம்
பாழும் வயிற்றுக்குக் கூழுமின் றியிப்போ
பற்றுத டிவயிறு வற்றுதடி!

வேதமொ டுகுறள் நீதி முறைகளும்
ஓது மடியெங்கள் வீதியிலே
வாது வழக்கொடு வஞ்சனை மோசமும்
வஞ்சிய ரேயிப்போ மிஞ்சுதடி!

புத்தம் புதியவ ரானா லும்உயிர்
தத்தம் அவருக்குத் தந்தவர்கள்
ஒத்துப் பிறந்தவர் செத்துக் கிடந்தாலும்
ஒத்தி நடந்திடக் க்ற்றோமடி!

கட்டுக் கடங்காத கஷ்டங்கள் வந்தாலும்
விட்டுப் பிரியாத கட்டுடையோம்
விட்டுத் தனித்தனி எட்டிய தாலிந்த
வேதனை வந்தது மாதரசே!

கூடப் பிறந்த சகோதரர் கள்மிக
வாடி யிருந்து வருந்துகையில்
மோடி யிருந்து தனித்துச் சுகித்ததால்
மோசம் போனோமடி மொய்குழலே!

வாசம டிபுகழ் வீசுமடி எங்கள்
தேசம டிவந்த மோசமடி!
நாசம டிவெகு நாசம டிமனங்
கூசுத டிபழி யேசுதடி!

பொங்குத டிமனம் பொங்குத டிஉடல்
பொங்குத டிதுயர் தங்குதடி!
மங்குத டிமதி மங்குத டிமட
மங்கைய ரேயன்ன பங்கமடி!

எண்ணவெண் ணமனங் குன்றுத டிவினை
என்னென்று சொல்லுவேன் கன்னியரே!
பண்ணிய தொல்லைப் பழவினை யோவென்ன
பாவம டிஎவர் சாபமடி!

ஏன் இக்கதி யடைந்தோம்?

பாவமல் லவருஞ் சாபமல் லமுனி
கோபமுஞ் சாமியின் குற்றமல்ல ;
தாபம டிபெற்ற தாயைம றந்ததால்!
தாழ்வடைந் தோமடி தையலரே!

மாதாவின் பெற்ற வயிறெரிய நாமும்
மஹேச்வர பூஜையைச் செய்தமடி
ஆதலி னாலிந்த வேதனை வந்ததும்
ஆச்சரி யமல்ல ஆச்சியரே!

அந்தத் தாய் யார்?

தேசம டிஇந்து தேசம டிநம்மைப்
பாசமு டன்பெற்றுப் பாலித்தவள்
தேசம டிஇந்து தேசம டிஎங்கள்
தேவிய டிஎங்கள் ஆவியடி!

தேவிய டிஇந்து தேவிய டியெங்கள்
ஆவிய டிஉங்கள் ஆவியடி!
பாவிய டிவெகு பாவிய டிபடு
பாதக ரெங்களைப் பெற்றதனால்!

பெற்றவ ளிந்தியத் தேவிய டிபெயர்
இட்டவ ளிந்தியத் தேவியடி!
உற்றவ ளிந்தியத் தேவிய டிபால்
ஊட்டி வளர்த்தவ ளும்அவளே.

மாதமும் மாரி பொழிந்து செழித்திட்ட
மாநிலத் துயர்ந்த தேவியடி!
போதமும் வேதமும் முந்தி யுரைத்திட்ட
புண்ணிய ஞானக் கிழவியடி!

முப்பத்து முக்கோடி மக்கள டிஇந்த
மூப்புடை இந்தியத் தேவிபெற்றாள்
முப்பத்து முக்கோடி மக்களுந் தானுமாய்
முச்சந்தி வீதியில் கத்துகின்றாள்.

மூப்புடை இந்தியத் தேவியடி நம்மை
முன்னம் பயந்து வளர்த்தெடுத்தாள்
மூப்புடை இந்தியத் தேவிய டிநம்மை
இன்னும் புரந்து முகம்துடைப்பாள்.

இந்தியத் தேவிநம் மைப்பயந் தாள்கலை
இந்தியத் தேவிந மக்களித்தாள்
இந்தியத் தேவிந மைப்புரந் தாள்அந்த
இந்தியத் தேவியை நாம்மறந்தோம்.

எத்தனை காலஞ் சுமந்திருந் தாள்நமக்
கெத்தனை கஷ்ட மனுபவித்தாள்!
அத்தனை கஷ்டமும் நாமறந் தோமவள்
அத்தனை குற்றமு மேபொறுத்தாள்!

கோடானு கோடி பகைவர டிமுன்னம்
கொள்ளை யடித்திட வந்தவர்கள்
கோடானு கோடியும் தான்சகித் துத்தன்
குஞ்சு குழந்தையை ஆதரித்தாள்.

எண்ணிக்கை யற்ற அரசர டிஇந்த
ஏந்திழை செல்வத்தில் ஆசைகொண்டார்
எண்ணிக்கை யற்ற பகைவரடி அந்த
ஏந்திழை வென்று நமைப்புரந்தாள்.

அத்தனை கஷ்டமும் தான்சகித் துநம்மை
ஆதரித் திருந்த தேவியினை
மத்தரைப் போல மறந்தத னாலிந்த
மாநிலத் தேமிக ஈனமுற்றோம்.

அற்புத மான பொறுமையை டிஅவள்
அற்புத ஞானப் பெருமையடி!
அற்புதமான சிறுமைய டிஇப்போ
அற்பத் தனத்தினால் தேடிவைத்தோம்.

பெற்ற வயிறுமெ ரியாதோ? அவள்
பேதை மனமும் வருந்தாதோ?
பெற்ற குழந்தைகள் தன்னை மறந்ததைப்
பெண்ணு மொருத்தி சகிப்பாளோ?

பெற்ற மனமுங் கசிந்தழு தேஅந்த
பேதை யுகுத்திடுங் கண்ணீரால்
பெற்ற தனமும் புகழு மிழந்துநாம்
பேதை களானது பெண்ணரசே!

தாயை மறந்த குழந்தைக ளெப்படித்
தாரணி தன்னில் செழிக்குமடி?
தாயை யிகழ்ந்த குழந்தைக ளையிந்தத்
தாரணி நின்று பழிக்குமடி!

அன்னையும் தந்தையும் தெய்வமென்று முன்னம்
சொன்ன கிழவியின் வார்த்தையைப்போல்
அன்னையும் தந்தையும் அத்தையும் மாமனும்
அத்தனை யும்இந்து தேசமடி!

அந்தத் தேசத்தின் எல்லையும் சிறப்பும்

வெள்ளி மலையும் வடக்கா கவிரி
வெற்புடைச் சிங்களம் தெற்காகப்
பள்ளக் கடலடி வங்கா ளம்குண
பாரிச மேற்கி லரப்பிக்கடல்.

பரந்து கிடக்கின்ற தேசமடி எம்மைப்
பாலிக்கும் இந்தியத் தேவியடி!
சிறந்து விளங்கிய தேசம டிஅவள்
சீரும் சிறப்பையும் கேளுங்கடி.

வேத முதித்தது மிந்நாடே அருள்
வேதிகை நின்றது மிந்நாடே.
போத முதித்தது மிந்நாடே மிக்க
புண்ணிய பூமியென றாடுங்கடி!

ஞான முதித்தது மிந்நா டேஅருள்
ஞானிகள் நின்றது மிந்நாடே.
மோன மறிந்த முதல்நா டேவெகு
முத்த ரிருந்தது மிந்நாடே.

புத்தர் பிறந்தது மிந்நா டேஅவர்
போதம் வளர்த்தது மிந்நாடே.
சித்த ரிருந்தது மிந்நா டேவெகு
சித்திகள் பெற்றது மிந்நாடே.

சீதை பிறந்தது மிந்நா டேஅவள்
சீர்த்தி விளங்கிய திந்நாடே.
கீதை பிறந்தது மிந்நா டேவெகு
கீர்த்திகள் பெற்றது மிந்நாடே.

சீருடை யத்தம யந்தியோ டுபுகழ்
சிலம்புடைக் கண்ணகி தேவியையும்
பேருடை யாள்சா வித்திரி தேவியைப்
பெற்று வளர்த்தது மிந்நாடே.

ராம னிருந்தது மிந்நா டேஅந்த
பீம னிருந்தது மிந்நாடே
சோம னொடுபுகழ் சூரியன் மரபும்
ஜோதி பொழிந்தது மிந்நாடே.

கண்ணன் பிறந்தது மிந்நா டேகொடை
கர்ண னிருந்தது மிந்நாடே
அண்ண லடியரிச் சந்திர னும்மவன்
அன்புடைத் தேவியு மிந்நாடே.

முன்னுமில் லைஇனிப் பின்னுமில் லையென
முந்திய நீதியின் மூவேந்தர்
மன்ன ரடிசேர சோழரும் பாண்டியர்
மாட்சிமை கொண்டது மிந்நாடே.

ஏட்டி லடக்க முடியா துமனம்
எண்ணி எழுதவும் போதாது ;
பாட்டி லடக்க முடியா தபுகழ்ப்
பாவையும் மிந்தக் கதியானாள்.

இனி நாம் செய்யவேண்டுவதென்ன?

போனது போகட்டும் கண்மணி யே!இனி
யாகிலும் புத்தியு டனிருப்போம்.
மாநிலத் தாயை வணங்கிநின் றாலினி
மாநிலத் தேமிக நாமுயர்வோம்.

இந்தியத் தேவியைப் பூஜைசெய் யுமந்த
இந்திய ரெல்லோரும் ஒன்றடியே
எந்த மதத்திற்கும் எந்தக் குலத்திற்கும்
சொந்தம டிஅவள் தொந்தமடி!

ஏழையு மெங்களுக் கண்ணனடி செல்வப்
பேழையு மெங்களின் தம்பியடி
கோழையு மெங்கள் குலத்த னடிகுடி
காரனுங் கூடப் பிறந்தவனே.

நல்லவர் கெட்டவ ரென்பதன்றி மற்றும்
நாலு வருணமு மொன்றடியே
தொல்லைச் சுருதியின் சொல்லடி யேஇதைத்
தோகையே நீயும் மறக்காதே.

பறையரு மெங்கள் குலத்தர டிசுத்தப்
பார்ப்பன ருமெங்கள் பந்துவடி!
அரையனு மெங்களுக் கானவ னேயன்றி
அல்லவ னும்வெகு நல்லவனே.

அன்னிய ரானாலும் இந்திய நாட்டை
அடைந்தவர் எங்களுக் கண்ணரடி!
மன்னவ ரானாலும் இந்திய நாட்டை
மறந்தவர் தங்களை நாமறப்போம்.

எந்தக் குலத்தில் பிறந்தா லும்அவர்
எந்த நிலையி லிருந்தாலும்
இந்து நிலத்தில் பிறந்தவ ரெல்லோரும்
இந்தியத் தேவியின் மக்களடி!

முப்பத்து முக்கோடி மக்களடி நாங்கள்
முப்பத்து முக்கோடி சோதரர்கள்.
முப்பத்து முக்கோடி பேரு மொருமிக்க
முப்பொழு தும்அவள் பூஜைசெய்வோம்.

பூஜையென் றால்வெறும் பூஜையல்ல செல்வப்
புண்ணிய பூமியின் பிள்ளைகளே
ஆசையு டனவள் கைத்தொழில் வித்தையை
ஆதரஞ் செய்யுங் கடமையடி.

எண்ணிக்கை யற்ற தொழிலடி யேஇந்தப்
புண்ணிய பூமியுங் கண்டதடி.
எண்ணிக்கை யற்றவர் இந்தியர் தொழிலை
அந்நிய தேசங்கள் ஆளுதடி.

கைத்தொழில் கெட்டுக்க லங்குத டிதேசம்
கைத்தொழி லின்றிப் புலம்புதடி!
கைத்தொழில் தம்மை விருத்திசெய் தாலந்தக்
கண்ணுடைத் தேவியும் கண்விழிப்பாள்.

ஆயிரம் ஆயிரம் வித்தையடி இங்கே
ஆதரிப் பாரின்றிச் செத்ததடி
ஆயிரம் ஆயிரம் கைத்தொழி லாளிகள்
ஆதர வின்றி உயிர்துறந்தார்.

இந்தியத் தேவியின் கைத்தொழில் நாமும்
ஏற்றுப் புகழக் கடமைப்பட்டோம்
இந்தியத் தேவியின் வித்தைகளை நாமும்
எந்த விதத்திலும் ஆதரிப்போம்!

இந்திய தேசத்தில் உண்டா னபொருள்
எந்த விதத்திலு முத்தமமே!
இந்திய தேசத்தொ ழிலாளிநமக்
கெந்த விதத்திலும் சொந்தமதால்.

அன்னியர் சரக்கைத் தீண்டோமே நாமும்
அன்னியர் தயவை வேண்டோமே
அன்னியர் பொருளைத் தீண்டுந்தோ றும்அந்த
அன்னை வயிற்றி லடிப்பதுபோல்.

பயன்

என்று நினைந்து மனங்கசந் துநாமும்
இந்தியத் தேவியைப் போற்றிசெய்தால்
நின்ற துயரம் மறையுமடி இங்கே
நீடிய பஞ்சம் பறக்குமடி.

கண்டுகொண் டோமடி கண்மணி யேஇனி
காரண மின்னதெ னத்தெரிந்தோம்.
பண்டைச் சிறப்பினை நாமடை யஇந்துப்
பாவை பதத்தினைப் பூஜைசெய்வோம்.

கேளுங்க டிஇனிக் கேளுங்க டிவந்து
வீழுங்க டிஅவள் பாதத்தினில்
வாழுங்க டிஇனி வாழுங்க டிஅவள்
வாழ்த்தி யிருந்து வரங்கொடுப்பாள்.

கிட்டுங்க டிகையைத் தட்டுங்க டிமலர்
கொட்டுங்க டிஅவள் பாதத்தினில்
விட்டத டிசனி விட்டத டிபழி
விட்டத டிதுயர் விட்டதடி.

பஞ்சமும் நோயும் பறக்குமடி அந்தப்
பத்தினி தேவியை நாம்நினைந்தால்
பஞ்சமும் நோயும் பற்றுமடி அந்தப்
பத்தினி தேவியை நாம்மறந்தால்.

இல்லையில் லையென்று பல்லை யிளிப்பதும்
இல்லைய டிஇனி இல்லையடி!
இல்லைய டிபசி இல்லைய டிநோயும்
இந்தியத் தேவியை நாம்நினைந்தால்.

உத்தம மாகிய ராஜாங் கம்இனி
ஒப்பில தாகி உயருமடி
நித்திய மாக நிலைக்கும டிநல்ல
நீதியும் வேத நெறிமுறையும்.

பொங்கும டிபால் பொங்கும டியினி
புண்ணிய பூமி மனைதோறும்
மங்கும டிவினை மங்கும டீஇந்த
மங்கையை நாமும் மனதில்வைத்தால்.

ராச்சியம் பொங்கித் தழைத்தோங் கநாமும்
ராச்சியம் வேண்டி உழைத்திடுவோம்
ஓச்சிய கோலு முயிர்த்தோங் கநாமும்
ஒற்றுமை யோடும் உழைத்திடுவோம்.

நீதி நிலைக்க நினைத்து வருகின்ற
நிர்மல மாகிய ராஜாங்கம்
ஆதி அரசின் வழிமுறை யேநின்றிங்
காதித்தன் போல விளங்குமடி!

வாழி

வாழி மழைபொழி வானமொடு வரு
மேழி யுழவர் வழிவாழி!
வாழிய கைத்தொழில் வாணிபம் தம்மொடு
வாழ்விக்க நின்றிடும் ராஜாங்கம்!

வாழி முனிவர்கள் தேடி யளித்திட்ட
வேத வழிவரும் நீதியெல்லாம்!
வாழியர் ஞான முணர்ந்தோர் கள்வழி!
வாழிய இந்த உலகமெலாம்!

இந்தியத் தேவி தனக்கா கத்தங்கள்
சொந்த சுகத்தைத் துறந்தவர்கள்
எந்த மதத்திலும் எந்தக் குலத்திலும்
வந்தவர் வந்த வழிவாழி!

179. விடுதலைக்கு விதை விதைத்த வீரர் கூட்டம்

இப்போது நூறாண்டு களுக்கு முன்னால்
இந்தியத்தாய் சுதந்தரமே எண்ண மாக
அப்போதே இந்நாட்டை அடக்கி யாண்ட
ஆங்கிலரை அகற்றநின்ற ஆர்வம் தன்னைச்
சிப்பாய்கள் கலகமென்ற நாமம் சூட்டிச்
சிந்தித்துப் புத்தகத்தில் எழுதி னாலும்
தப்பாமல் அதன்பெருமை நினைவு கூர்ந்து
தலைவணங்கித் தாய்நாட்டைத் தாங்கி நிற்போம்.

எங்கிருந்தோ எப்போதிங் கெவர்வந் தாலும்
எதிர்கொண்டு வரவேற்று இனிதே பேசிப்
பங்கிருந்தே உண்டுடுக்கப் பலவும் செய்யும்
பரிவுடைய தமிழ்நாட்டுப் பண்பிற் கேற்பத்
தங்குதற்கிங் கிடம்கேட்ட ஆங்கி லர்க்குத்
தயவாகச் சென்னையிலே இடம்தந் தார்கள்
அங்கிருந்து மெள்ளமெள்ள இந்த நாட்டின்
ஆட்சிதனை அபகரித்தார் சூழ்ச்சி யாலே.

சமயமுற்ற போதெல்லாம் சதிகள் செய்தார் ;
இந்நாட்டு மன்னரிடை சண்டை மூட்டித்
தமையடுத்த அரசருக்கும் உதவி போலத்
தந்திரமாய் அவர்களைத்தம் அடிமை யாக்கி
இமயமுதல் குமரிமுனை இறுதி யாக
இப்பெரிய திருநாட்டைப் பற்றிக் கொண்டார் ;
சுமைசுமையாய் இங்கிருந்த செல்வம் தன்னைச்
சூரைகொண்டு சீமைக்குத் தூக்கிச் சென்றார்.

நாகரிக அரசாட்சி நடத்தி இங்கே
நன்மைசெய்ய வந்தவர்போல் தோன்றி னாலும்
போகமிகும் பதவியெல்லாம் வெள்ளை யர்க்கே ;
புழுக்கைகளின் வேலைகளே இந்தி யர்க்காம் ;
சோகமுற்று இதைக்கண்ட சுதேச மக்கள்
சுதந்தரத்தின் சிறப்புணரத் தொடங்கி னார்கள் ;
வேகமுடன் எண்ணிமனம் வெந்து நொந்து
வீறுகொண்டு விடுதலைக்கே துணிந்திட் டார்கள்.

'இந்துமதக் கொள்கைகளில் தலையிட் டார்கள்'
இஸ்லாம்கள் மதத்தினையும் இகழ்ந்திட் டார்கள் ;
சொந்தமதம் கிறிஸ்தவத்தைப் பரப்பு தற்கே
சூழ்ச்சியுடன் ஆட்சிசெய்யத் தொடங்கி யுள்ளார் ;
இந்தவிதம் மதத்தினைநாம் இழக்க லாமா?'
என்றுபல காரணங்கள் இணைத்துக் கூறிப்
பந்தமற வெள்ளையரை வெறுக்கும் பேச்சே
பட்டாளத் தார்களிடைப் பரப்பி னார்கள்.

சுதந்தரத்தில் பேரார்வம்

சுதந்தரத்தில் பேரார்வம் உச்சிக் கேறிச்
சூழ்நிலைக்கே காத்திருந்த மக்க ளுக்குள்
மதங்கெடுக்க வெள்ளையர்கள் வந்தார் என்ற
மாற்றமது மந்திரம்போல் சீற்ற மூட்ட
முதன்முதலாய்ச் சிப்பாய்கள் பர்ஹம் பூரில்
வெள்ளையர்க்குக் கீழ்ப்படிய முடியா தென்றார் ;
அதன்பயனாய் அவர்களுக்கு விலங்கு பூட்டி
அடைத்திட்டார் சிறைக்குள்ளே ஆங்கிலேயர்.

அதிலிருந்தே சுதந்தரப்போர் ஆரம் பந்தான் ;
ஆயிரத்தெண் ணூற்றைம்பத் தேழா மாண்டில்
மதிகணக்கில் மேமாதம் பத்தாம் தேதி
மருவியநாள் ஞாயிற்றுக் கிழமை மாலை
பதிசிறந்த மீரத்துப் பட்டி னத்தின்
பாங்கிருந்த சிப்பாய்கள் படைகள் மூன்றும்
கொதிமிகுந்து வெள்ளையரைச் சுட்டுக் கொன்று
கொடிதூக்கிச் சுதந்தரப்போர்க் கோலங்கொண்டார்.

உடைத்தார்கள் சிறைச்சாலைக் கதவை யெல்லாம்
உள்ளிருந்த யாவரையும் விடுவித் தார்கள் ;
படையெடுத்துத் தில்லியைப்போய்ப் பற்றிக் கொண்டு
பஹதூர்ஷா மன்னனெனப் பறைசாற் றிட்டார் ;
அடைவாக அங்கிருந்த பட்டா ளங்கள்
அவைமூன்றும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு
தடையிலராய்த் தம்முடைய பட்டா ளத்தின்
தலைவர்களாம் வெள்ளையரைச் சுட்டுக் கொன்றார்.

அன்னியர்கள் கொட்டத்தை அடக்கி விட்டோம்
ஆங்கிலயர்கள் இனிநம்மை ஆள வொட்டோம்
என்னுமொரு நம்பிக்கை எழுந்து பொங்க
எங்கெங்கும் வெள்ளையருக்(கு) எதிர்ப்புண் டாகி
மன்னுமந்த வடமேற்கு மாகா ணத்தில்
மத்தியமா காணத்தில், அயோத்தி தன்னில்
மின்னனைய வேகத்தில் சிப்பாய் மார்கள்
மிடுக்காக விடுதலைப்போர் தொடுக்க லானார்.

எழுச்சிகொண்ட புரட்சி

முடியிழந்த மன்னர்பலர் முகம்ம லர்ந்தார்;
முன்னிருந்த பெருமைவர முடியும் என்றே
துடிதுடித்துச் சிப்பாய்க்குத் துணைவ ரானார் ;
துணைபுரிய மக்களையும் தூண்டி விட்டார் ;
வடிவமைந்த வீரப்பெண் ஜான்ஸி ராணி,
வல்லமைசேர் தாண்டியா தோப்பி யோடும்.
படியிழந்த பேஷ்வாவாம் நானா சாஹிப்
பந்துவாம் ராவ்சாஹிப், அஸிமுல் லாகான்,

குடும்பத்தின் சொத்திழந்த குன்வார் சிங்கும்,
குலமுறையில் மொகலாயன் பிரோஸ் ஷாவும்,
கடும்பக்தன் வெள்ளையர்பால் 'பென்ஷன்' வாங்கும்
கதியடைந்த கான்பஹதூர் கான்என் பானும்,
இடம்போன இப்படிப்பேர் பலரும் சேர்ந்தே
எழுச்சிகொண்ட புரட்சிதனை இயக்க லானார் ;
படம்கொண்ட நாகம்போல் சீறிப் பாய்ந்து
பாமரரும் வெள்ளையரைப் பலியிட் டார்கள்.

முட்டமுட்ட மூவைந்து மாத காலம்
மும்முரமாய்ச் சுதந்தரப்போர் முழங்கிற் றப்பால்
திட்டமிட்ட போர்முறைகள் வகுத்தி டாமல்
திடமிருந்தும் ஒத்துழைக்கச் சேர்ந்தி டாமல்,
கிட்டிவிட்ட வெற்றிகளைக் கட்டிக் காத்துக்
கெட்டிபண்ணும் கிரியைகளைச் செய்தி டாமல்
தொட்டெடுத்த சிப்பாய்கள் தோற்றிட் டாலும்
சுதந்தரத்தின் உதயமதைத் தோன்றச் செய்தார்.

எப்படியோ வெள்ளையர்கள் எதிர்த்து நின்றார்
இந்தியரின் துணைகொண்டே இதனை வென்றார்.
அப்படியாய் எழுச்சிகளை அடக்கும் போதும்
ஆங்கிலயர்கள் செய்திட்ட அநியா யங்கள்
எப்பொழுதும் அவரினத்தை நாணச் செய்யும் ;
எங்கெங்கும் நாகரிகம் ஏசிக் கூசும் ;
தப்பறியாப் பெண்களையும் தூக்கி லிட்டார் ;
தாயோடு சிசுக்களையும் தகித்துக் கொன்றார்.

குடுகுடுத்த கிழவரையும் குத்திக் கொன்றார் ;
குற்றமற்ற பேர்களையும் சுட்டுத் தள்ளிப்
பிடிகிடைத்த வீரர்களைப் பிணைத்துக் கட்டிப்
பீரங்கி வாயில்வைத்துப் பிளந்திட் டார்கள் ;
கடுகடுத்திங் கிதற்கீடாய்க் கான்பூர் தன்னில்
காப்பளிக்க பட்டவெள்ளைக் காரப் பெண்கள்
நடுநடுங்கச் சிசுக்களுடன் நசுக்கப் பட்டார்
நானாவின் ஆட்களினால் நாணம் எஞ்ச.

அதன்பிறகும் ஆங்கிலர்கள் வெறிகொண் டார்கள் ;
அரக்கரினும் கொடுமைகளை அதிகம் செய்தார் ;
மதங்கொண்ட யானையைப்போல் சுற்றிச் சுற்றி
மக்கள்தமைக் கண்டபடி வதைத்திட் டார்கள் ;
அதம்செய்தும் ஊர்களுக்கு அனலிட் டார்கள் ;
அபயமென்ற பேர்களையும் அழித்திட் டார்கள் ;
இதம்கண்டார் துரைத்தனத்தார் இங்கி லாந்தில்
எப்படிச்செய் தாலும்சரி என்றிட் டார்கள்.

வித்தகி அப்பெண்ணரசி

வீரருக்குள் வீரர்களும் வியந்து போற்றும்
வித்தகிஅப் பெண்ணரசி ஜான்ஸி ராணி
போரகத்துக் குதிரையின்மேல் போகும் போது
புல்லியர்தம் குண்டுபட்டு மாண்டு போனாள் ;
ஆரணங்கு பதியிழந்த அயோத்தி பீகம்;
அவளுடனே பிரோஸ்ஷாவும், நானா சாஹிப்,
ஊரிலுள்ள ஒருவருக்கும் தெரியா வண்ணம்
ஓடிவிட்டார் நாட்டைவிட்டே உயிருக் காக.

போனசொத்து மறுபடியும் தருவா ரென்றும்,
புரட்சிகளில் சேர்ந்ததனைப் பொறுப்பா ரென்றும்,
மானமற்ற துரோகிஒரு மான்சிங் கென்பான்
மனமாரத் தன்னைநம்பி மறைந்து வாழத்
தானணைத்த தாண்டியா தோப்பி தன்னைத்
தந்திரமாய் வெள்ளையர்க்குக் காட்டித் தந்தான் ;
ஈனமிக்க உதவிசெய்த இவனைக் கூட
இரக்கமின்றித் தூக்கிலிட்டார் இங்கி லீஷார்.

அப்படியவ் விடுதலைப்போர் அடங்கி னாலும்
அதிலுதித்த சுதந்தரத்தின் ஆர்வந் தானே
எப்பொழுதும் குறையாமல் இருந்தே வந்திங்
கிந்தியரின் தேசபக்தி இறுகச் செய்தும்
ஒப்பரிய காந்திமகான் சாந்தப் போரில்
உறுதியுடன் ஒத்துழைக்க ஊக்கம் தந்தும்
இப்பொழுதும் இங்கிருக்கும் சுதந்த ரத்தின்
இன்பத்தை நாமடையச் செய்த தென்போம்.

ஆகையினால் சுதந்தரத்தில் ஆர்வம் பொங்கி
ஆயிரத்தெண் நூற்றைம்பத் தேழா மாண்டில்
வேகமுடன் வெள்ளையரை எதிர்த்தெ ழுந்து
விடுதலைக்கு விதைவிதைத்த வீரர்க் கெல்லாம்
வாகையுடன் புகழ்மாலை வணங்கிச் சூட்டி,
வாயார இந்தியத்தாய் வாழ்த்துப் பாடி
ஓகையுடன் இந்நாட்டு மக்க ளுக்குள்
ஒற்றுமையே உறுதிபெற உழைப்போம் வாரீர்.

அப்பெரிய மகிழ்ச்சியிடை மறந்தி டாமல்
அதற்குமுன்னால் ஆயிரத்தெண் ணூற்றா றாண்டில்
வெப்பமுடன் வெள்ளையரை விரட்ட வென்றே
வேலூரில் விரைத்தெழுந்து புரட்சி செய்து,
செப்பரிய துணிவுடைய செயல்க ளாற்றித்
தியாகத்தில் உயிர்துறந்த சிப்பாய் கட்கும்
இப்பெரிய திருநாளில் வணக்கம் செய்வோம்
இந்தவிழாச் சிறப்பினுக்குத் தகுந்த தாகும்.

பதினான்கு வருடங்கள் அதற்கும் முன்னால்
பாஞ்சாலங் குறிச்சி, தமிழ்ப் பாளையத்தில்
அதிவீரப் போர்புரிந்த அஞ்சா நெஞ்சன்
ஆங்கிலரை ஆட்டிவைத்த கட்ட பொம்மன்
சதிகார வெள்ளையரால் தூக்கில் மாண்ட
சரித்திரமே விடுதலைக்குத் தலைப்போ ராகும் ;
அதனோடு மருதிருவர் ஊமைத் துரையாம்
அவர்களுக்கே அஞ்சலிமுன் செலுத்த வேண்டும்.

பொன்னனைய சுதந்தரத்தை இழந்து விட்டுப்
பொழுதெல்லாம் நொந்துமனம் புழுங்கி நின்றாள்
அன்னியர்க்கிங் கடிமையென அவதி யுற்றாள்
அன்னையிந்த பாரதத்தாய் அவலம் நீங்கிப்
பின்னுமவள் தன்னரசைப் பெறுமா றெண்ணிப்
பேராண்மை யோடுபல தியாகம் செய்து
முன்னமிங்கே உயிர்துறந்த யாரானாலும்
முடிவணங்கி அவர்பெருமை முழங்கச் செய்வோம்.

இச்சைபோல் சுதந்தரமாய் இயங்கும் ஆசை
ஈ எறும்பு புழுக்களுக்கும் இருப்ப துண்மை ;
பிச்சைகேட் டுடல்வளர்க்கும் ஏழை கூடப்
பிறர்க்கடிமை என்றிருக்கப் பிணங்கு மன்றோ
அச்சத்தால் அடிமை செய்யும் கோழைகூட
அந்நிலையை அகற்றிடவே ஆசை கொள்வான் ;
மெச்சத்தான் தக்கதிந்த சுதந்த ரத்தின்
மேன்மைதனை நன்குணந்து மிகவும் காப்போம்.

முந்தியிந்த உலகத்தில் எவருங் காணா
முற்றுமொரு சன்மார்க்க முறையைத் தந்த
தந்தையெங்கள் காந்தியண்ணல் தலைமை யின்கீழ்
தரணிமெச்சும் சாந்தநெறி நின்ற தாலே
வந்தஇந்த சுதந்தரத்தை வணங்கிக் காத்து,
வையமெங்கும் அமைதிவரும் வழியே நாடி,
எந்தஒரு நாட்டோடும் பகையில் லாமல்
எவ்வெவர்க்கும் நலங்கருதி இனிது வாழ்வோம்.

180. காந்தி சரித்திர நொண்டிச் சிந்து

காந்தியின் சரிதம்சொல்வேன்--நல்லோர்
காதுக் கினிப்ப(து) அதைக் காட்டிலு முண்டோ?
மாந்தர்க்குயர் தர்மமெல்லாம்--காந்தி
மகாத்மாவின் வாழ்க்கையிலே மலிந்திருக்கும்.
புண்ணியக் கதைஇதுவே--கேட்டால்
பூதலத்தில் மூர்க்கருக்கும் பொறுமைவரும்.
கண்ணியம் கனதையென்று--பழைய
கதைகளில் முன்புநாம் கேட்டனவெல்லாம்
சத்தியம் வடிவெடுத்து--வேதம்
சாந்தி சாந்தியென்ற சாந்தத்துடனே
இக்கரையிற் கண்டுகளிக்க--இன்னும்
இருந்தே அறந்தருமோர் பெருந்தகையார்
கூர்ஜர வடநாட்டில்--நல்ல
குணமிகும் போர்பந்தர் சமஸ்தானம்
தார்முடி மன்னர்க்கு--ராஜ
தந்திர முரைக்குந்திறல் மந்திரிகளாய்
வாழ்ந்தவர் பரம்பறையில்--குஜராத்
வாணிய குலத்துக்கோர் ஆணியெனலாம்
கரம்சந்த் என்பவரின்--மனைவி
கற்பில்அருந் ததியென்னும் பொற்புடையவர்,
புத்திர வதியாரின்--மூன்றாம்
புத்திரரா கப்பிறந்தார் உத்தமர் காந்தி
அன்னையுந் தந்தையுமே--தாம்
அறிந்த கடவுளென்று நடந்திடுவார்.
பள்ளிப் பருவத்திலும்--சிறு
பையன்களின் துடுக்குகள் செய்யமாட்டார்.
எள்ளளவும் பொய்பேசார்--மற்ற
எவரொடும் தவறுகள் எதுவும் செய்யார்.
ஆசான் மார்களுங்கூடக்--கண்டே
ஆச்சரியப் படும்படி நடந்துகொள்வார்
பன்னிரண்டு வயதினிலே--கஸ்தூரி
பாயென்னும் உத்தமியை மணமுடித்தார்.
தாயார் பெருங்குணமும்--கொண்ட
தாரந்தனக் கேற்றபடி வாய்த்த நலமும்
ஓயாப் புகழுடனே--காந்தி
உலகினுக் குழைப்பதற் குதவியென்பார்.
பெண்ணின் பெருமையன்றோ--நாட்டின்
பெருமைகள் யாவினுக்கும் பிறப்பிடமாம்?
பத்தொன் பதுவயதில்--சீமை
பாரிஸ்டர் பரி¨‡க்குப் போய்ப்படிக்க
ஆசைகொண் டார்காந்தி--கேட்ட
அறிந்தவர் பந்துமித்ரர் அனைவருமாய்ச்
சீமைக்குப் போனாலே--ஒழுக்கம்
சீர்கெட்டு நம்ஆசாரம் போய்விடுமென்று
தடுத்தார் பலபேர்கள்--பெற்ற
தாயாரும் சம்மதிக்கத் தயங்கிநின்றார்.
காந்தியின் பிடிவாதம்--கண்டு
கடைசியில் அன்னையரு விதந்தேறி
"மூன்றுவிதச் சபதங்கள்--செய்து
முற்றுமவை காப்பேனேன்று சத்தியஞ்செய்தால்
தருவேன் விடை" யென்று--பெற்ற
தாயுரைத்த வாசகத்தைத் தலைவணங்கி
"அருள்வீர் என்னசபதம்?"--என்றார்
அன்னையவள் தன்மகனை யணைத்துச்சொல்வாள் :
"மாமிசம் மதுவுண்ணல்--பர
மாதர்களைக் காமுறுதல் இவைமூன்றும்
செய்யேன் என்றெனக்கே--சத்தியம்
செய்தபின்னர்ச் சீமைக்குச் செல்லுக" என்றாள்.
"செய்வேன் அப்படியே--அந்தச்
சீமையிலே மட்டுமல்ல சென்மமுழுதும்
செய்வேன்" என்று சொல்லி--ஒரு
சிறந்த சமணசந் யாசியின் முன்னால்
சத்தியம் செய்து கொடுத்தார்--தாய்
சந்தோஷ மாகவிடை கொடுத்தனுப்பச்
சீமைக்குச் சென்றங்கே--தாய்க்குச்
செய்துவந்த சத்தியங்கள் பிசகாமல்
பாரிஸ்டர் பட்டம் பெற்றுத்--திரும்பப்
பம்பாய் நகரில்தொழில் செய்யும்போது
தென்னாப்பி ரிக்காவிலே--சில
தெரிந்த மஹம்மதிய வியாபாரிகள்
வக்கீல் தொழிலாக--ஒரு
வழக்கை நடத்த அங்கு வரக்கேட்டார்.
போனார் காந்தியங்கே--முன்னால்
போயிருக்கும் இந்தியர்கள் படும்பாட்டைப்
பார்த்தார் பரிதவித்தார்--மீண்டும்
பம்பாய் திரும்பமனம் படியாமல்
இந்தியரின் உரிமைக்காக--அங்கே
இருபது வருஷங்கள் இருந்துழைத்தார்.
விண்ணப்பம் செய்துபார்த்தார்--லண்டனில்
வேண்டிய துரைகளைக் கெஞ்சிக்கேட்டார்.
கண்டபலன் ஒன்றுமின்றிக்--கடைசியில்
தன்கையே தனக்குதவி என்றுதுணிந்தார்.
அநியாயச் சட்டங்களைச்--சிறுதும்
அஞ்சாமல் சாந்தமுடன் எதிர்ப்பதென்றே
இந்தியரை ஒன்று திரட்டிக்--கேட்க
எல்லாரும் சரியென்றே ஒப்புக்கொள்ளவே
தொடுத்தார் அறப்போரை--இந்தத்
தொல்லுலகம் முன்னறிந்த தில்லையெனலாம்.
சாந்தமும் சத்தியமும்--நம்பும்
சர்வேசன் கருணையும் படையாகக்
காந்தியும் போர்த்தெடுத்தார்--தாமே
கைவிரற் பதிவுசெய்யும் சட்ட மறுத்தார்.
தண்டனை யிரண்டுமாதம்--பெற்றுச்
சந்தோஷ மாகச்சிறை முதலில் சென்றார்.
ஆயிரக் கணக்காக--இந்தியரும்
அங்கிருந்த சீனர்களும் சிறைக்குவந்தார்.
இந்தவிதம் எட்டுவருஷம்--அங்கே
இடைவிடாம லேயுழைத்தார் இடர்பொறுத்தார்.
பலமுறை சிறைபுகுந்தார்--மக்கள்
பத்தினியுங் கூடச்சிறைப் பயத்தைவிட்டார்.
கல்லுடைத்துச் செக்குமிழுத்தார்--சிறையின்
கக்கூசில் மலஜலம் வாரியெடுத்தார்.
வீதியில் விலங்குடனே--சர்க்கார்
வேண்டுமென்று நடத்தவும் சகித்திருந்தார்.
இத்தனை துயரும் சகித்தே--அங்கே
இந்தியரின் கண்ணியத்தைக் காத்து வைத்தார்.
கைரேகைப் பதிவு செய்தல்--இந்தியரைக்
கட்டாயக் கூலி செய்யக் கப்பலேற்றல்
தலைவரி கொடுப்பதிவை--சர்க்கார்
தள்ளிவிடச் சம்மதிக்க வெற்றியடைந்தார்.
இந்தியா திரும்பி வந்தார்--சொந்த
இந்நாட்டின் விடுதலைக் குழைத்திடவே
சபர்மதி ஆச்சிரமத்தை--ஏற்படுத்தி
ஸத்யாக்ர ஹப்பியரை வளர்த்துவந்தார்.
சம்பரான் ஜில்லாவினிலே--அவுரிச்
சாகுபடி கூலிகளைத் தாங்கி யுழைத்தார்.
கெய்ரா ஜில்லாவினிலே--விளைவு
கெட்டவர்க்கு நிலவரி விட்டிடச் செய்தார்.
ஜெர்மன் சண்டைவரக்--காந்தி
சேனையும்பண மும்மிகச் சேர்த்துக் கொடுத்தார்.
நன்றியை நினைப்பார்கள்--இந்த
நாட்டுக்கொரு நல்வழி பிறக்கு மென்றே
நம்பியிருந் தார்காந்தி--ரெளலட்
சட்டங்களால் இந்தியரை நசுக்க எண்ணம்
கொண்டதைக் கண்டபின்னர்--இதுவரை
கொண்டிருந்த நம்பிக்கை முற்றுந் துறந்தார்.
சாத்வீகப் போர்தொடுக்க--ஜனங்களைச்
சத்திய மெடுத்துக்கொள்ளப் புத்தி புகன்றார்.
பற்பல இடங்களிலே--வெகு
பரபரப் புடன்மக்கள் பதைத்தெழுத்தார்.
நாடெங்கும் கூக்குரலும்--பஞ்சாப்
நாட்டிற்சில பேர்புரிந்த பதட்டங்களும்
'டய'ரென் றொருபாவி--அன்று
ஜலியன்வா லாவிற்சுட்ட சங்கதியும்
ராணுவச் சட்ட அமுலும்--இந்த
நாட்டிற் பிறந்தவர்கள் மறப்பாரோ?
கிலாபத் விஷயத்திலும்--ஆங்கிலரால்
கிடைத்திருந்த வாக்குறுதி தவறியதால்
ஒத்துழைப் பினிமேலே--சிறுதும்
உதவா தென்றுமனம் உறுதிகொண்டார்.
கல்கத்தா விற்கூடிய--விசேஷக்
காங்கிரஸின் ஒத்துழையாத் தீர்மானம்
நாட்டுக்கொரு புத்துணர்ச்சி--தந்து
நல்லபல வேலைகளும் நடக்கையிலே
சௌரிசாரா வென்னுமிடத்தில்--வெறிகொண்ட
ஜனம்சிலர் போலீசுக் கச்சேரிக்குத்
தீயிட்டுக் கொளுத்தியதில்--உள்ளே
சிக்கிய இருபத்தொரு பேரும்மாண்டார்.
கேட்டார் இதைக் காந்தி--இயக்கம்
கெட்டுவிட்ட தென்றுகண்டு சட்டமறுப்பைத்
தாமே நிறுத்தி விட்டார்--அந்தத்
தகைமையை உலகென்றும் புகழுமன்றோ?
சிலநாள் சென்றதன்பின்--காந்தியைச்
சிறைபிடித்தார் குற்றப் பொறுப்பையெல்லாம்
தம்மேல் ஒப்புக்கொண்டே--அதற்குத்
தண்டனையா றுவருஷம் கொண்டுசிறையில்
இரண்டு வருஷமிருந்தார்--குடலில்
ஏற்பட்ட நோயினுக்குச் சிகிச்சை செய்து
விடுதலை செய்தார்கள்--பிறகு
வெகுநாள் நிர்மாண வேலைகள் செய்தே
காங்கிர¨ஸைப் பலப்படுத்திக்--குடிசைக்
கைராட்டைத் தொழிலெங்கும் பரவச் செய்தார்.
முஹம்ம தலியின் வீட்டில்--ஹிந்து
முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பட்டினிகொண்டார்.
ஆறு வருஷம் பொறுத்தார்--நாட்டின்
அடிமைத் தனங்குறைய ஆள்வோர்க்கே
எண்ணமில்லை யென்று கண்டு--வைஸிராய்
இர்வினுக்குத் தம்முடைய எண்ணமெழுதிச்
சத்தியப் போர்தொடுத்தார்--உப்புச்
சட்டத்தை மறுத்திருவ தென்று 'டாண்டி'க்குப்
புறப்பட் டார்காந்தி--அந்தப்
போதெழுந்த உணர்ச்சியை ஏதுசொல்லுவோம்!
ஆச்சரியம்! ஆச்சரியம்!--அதை
ஆராலும் முடியச் சொல்ல முடியாது.
டாண்டியில் சட்ட மறுத்தார்--ஒருநாள்
ஜாமத்தில் வந்து சர்க்கார் கைதுசெய்தார்.
நாட்டிலெந்த மூலைமுடுக்கும்--சண்டை
நடந்ததில் ல‡ம்பேர் சிறைபுகுந்தார்.
ஸாத்வீகம் தவறாமல்--ஜனங்கள்
சந்தோஷ மாகப்பல ஹிம்சை சகித்தார்.
இந்தவிதம் பத்துமாதம்--சண்டை
இடைவிடா மலெங்கும் நடந்திடவே
காந்தியை வெளியில் விட்டுச்--சர்க்கார்
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இரண்டாம் வட்டமே¨ஜைக்--கூட்டத்
திந்தியக் காங்கிரஸின் பிரதிநிதியாய்
வீரமொழி கள்புகன்றார்--ஏழைகள்
விடுதலை விட்டெதுவும் வேண்டாமென்றே
இந்தியா வருமுன்னால்--சர்க்கார்
இர்வின் உடன்படிக்கை மீறிவிட்டதால்
வில்லிங்டன் வைஸிராயைப்--பார்க்க
விடைவர வேணுமென்று சேதிவிடுத்தார்.
வைஸிராய் மறுத்துவிட்டார்--வேறு
வழியின்றிக் காந்தியும் கைதியானார்.
சிறையில் இருக்கும்போதே--அங்கே
சீமையின் மந்திரி திட்டமொன்றினால்
தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களைத்--தேர்தல்
தனித்தனித் தொகுதியிற் பிரித்து வைத்தார்.
காதில் விழுந்த உடனே--காந்தி
கட்டாயம் பட்டினியிற் சாவேனென்றார்.
எங்கும் பரபரப்பாய்ப்--பூனா
எரவாடா ஒப்பந்தமும் நிறைவேறி,
சிறையில் இருந்தபடியே--ஹரிஜன
சேவை செய்ய வசதிகள் செய்துகொடுத்தார்.
சிலநாள் சென்றதன்பின்--ஹிந்துக்கள்
தீண்டாமை விஷயத்தில் மனமிரங்கத்
தாம்ஒரு மூன்றுவாரம்--பட்டினித்
தவஞ்செய்யக் கடவுளின் ஆணையெவரும்
தடை சொல்லக் கூடாதென்றும்--காந்தி
தாமெடுத்த விரதத்தைச் சர்க்கா ரஞ்சி
விடுதலை செய்து விட்டார்-உடனே
சட்டமறுப் பைச்சிறிது நிறுத்தச் சொல்லிப்
பட்டினியை வென்று முடித்தார்-கிழவர்
பயந்தவர் யாவரும் வியந்திடவே
தலைவர்க ளோடுகலந்து-முடித்தால்
சண்டையை முடித்தேஒரு ராஜிசெய்யவே
வைஸிராய் வில்லிங்டனைத்-தாம்
வந்துகாணச் சம்மதிக்கத் தந்திகொடுத்தார்.
பதில்தந்தி மறுத்திடவே-முதலில்
பாடுபட்டுத் தாம்வளர்த்த பயிரான
சபர்மதி ஆச்சிரமத்தை-மூடித்
தாமும்சில சீடர்களும் சிறைபுகுந்தார்,
சிறையினில் முன்போல-ஹரிஜன
சேவைக்கு வசதி சர்க்கார் குறைத்ததனால்
வசதிகள் அவைபோனல்-இனித்தாம்
வாழ்வதன் ல‡¢யம் போனதென்றே
பட்டினியிற் சாகத் துணிந்தார்-உலகம்
பயந்து நடுநடுங்கிப் பரதவிக்கத்
தெய்வச்செய லேபோலே-காந்தியைத்
திரும்பவும் சர்க்கார் விட்டுவிடவே
செய்வதுதான் இன்னதென்று-தமக்குத்
தெளிய விளங்கவில்லை அதனாலே
'கிச்சிக் கிச்சிக் தம்பளம்' போல்-சர்க்கார்
பிடிக்கவும் விடுக்கவும் செய்ய நடத்தல்
கண்ணியக் குறைவென்று-தண்டனைக்
காலம் ஒருவருஷம் கழியுமட்டும்
ஹரிஜன சேவை ஒன்றே-அதன்பின்
ஆண்டவன் விட்டவழி விடட்டுமென்றே
ஏழைகளுக் குழைப்பதற்கே-தவம்
ஏந்தும் காந்திபுகழ் என்றும் வாழ்கவே!