Works of Saiva Siddhantha Sastras Anthology - I :
irupA irupatu (aruNanti civAcAriyAr) &
uNmai viLakkam (manavAcakang kaTantAr)
in Tamil Script, Unicode/utf-8

சைவ சித்தாந்த சாத்திரங்கள் - I :
இருபா இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார் ) &
உண்மை விளக்கம் (ஆசிரியர் : திருவதிகை மனவாசகங் கடந்தார் )




Etext Preparation (input, proof-reading) : Dr. K. Loganathan , Penang, Malaysia
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

© Project Madurai 1999-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


irupA irupatu (aruNanti civAcAriyAr)
இருபா இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார் )

-------------------
அன்பர்களே,

மெய்கண்ட சாத்திரங்கள் 14-இல் தலை சிறந்தது மெய்கண்டாரின் சிவஞானபோதமாகும். தமிழ் தத்துவச் சிந்தனையின் சிகரமாய் தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் ஆழத்தை கொண்டுள்ளதாகத் திகழ்கின்றது. அதற்கு அடுத்தபடியாக எண்ணத் தருவது இருபா இருபது என்னும் சிறிய நூலாகும். மெய்கண்டார் மேற்பார்வையில் எழுந்தனவாக அருணந்தியின் சிவஞானசித்தியாரும் இந்நூலும் மனவாசகங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" எனும் நூலும் ஆகும்.

அன்பன் கி.லோகநாதன்
------------

1.
கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்

2.
கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!
காரா கிரகக் கலி ஆழ்வேனை நின்
பேரா இன்பத்து இருத்திய பெரும!
வினவல் ஆனாது உடையேன் எனது உளம்
நீங்கா நிலை ஊங்கும் உளையால்
அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின்
ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்
சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா
வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்
வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும!
இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின்
வேறோ உடனோ விளம்பல் வேண்டும்
சீறி அருளல் சிறுமை உடைத்தால்.
அறியாது கூறினை அபக்குவ பக்குவக்
குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின்
அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால்
பக்குவம் அதனால் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ
தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே
மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ
நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ
உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே
இணை இலி ஆயினை என்பதை அறியேன்
யானே நீக்கினும் தானே நீங்கினும்
கோனே வேண்டா கூறல் வேண்டும்
"காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும்
மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்
"ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே

3.
அறிவு அறியாமை இரண்டும் அடியேன்
செறிதலால் மெய்கண்ட தேவே -- அறிவோ
அறியேனோ யாது என்று கூறுகேன் ஆய்ந்து
குறிமாறு கொள்ளாமல் கூறு.

4.
கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கில் விகற்பம் கற்பம்
குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை
விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை
அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்
பைசால சூனியம் மாச்சரியம் பயம்
ஆயேழ் குணனும் மாயைக்கு அருளினை
இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவல் என்று எடுத்த
அறுவகைக் குணனும் கருமத்து அருளினை
ஆங்கு அவைதாமும் நீங்காது நின்று
தம்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி என்பது ஒன்று இன்றாம், மன்ன!
ஊரும் பேரும் உருவுங் கொண்டு என்
ஊரும் பேரும் உருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியில்
சைவ சிகாமணி! மெய்யர் மெய்ய!
மும்மலம் சடம் என மொழிந்தனை அம்ம
மாறுகோள் கூறல் போலும் தேறும்
சடம்செயல் அதனைச் சார்ந்திடும் எனினே
கடம்படம் அதனுள் கண்டிலம் விடப்படும்
ஊந்நிரள் போன்றது ஆயில் தோன்றி
அணைந்து ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும்
பன்மை இன்று ஆகும் எம்மைவந்து அணையத்
தானோ மாட்டாது யானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு
இயல்பு எனில் போகாது என்றும் மயல்கெடப்
பந்தம் வந்தவாறு இங்கு
அந்தம் ஆதி இல்லாய் ! அருளே.

5.
அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று
இருள்கொண்டவாறு என்கொல் எந்தாய்! -- மருள்கொண்ட
மாலையாய்! வெண்ணெய்வாழ் மன்னவா! என்னுடைய
மால் ஐயா மாற்ற மதி.

6.
மதிநுதல் பாகன் ஆகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நணி உள் புகுந்து என்
உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி
காட்டி என் காட்டினை எனினும் நாட்டிஎன்
உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
பாதாள சத்தி பரியந்தம் ஆக
ஓதி உணர்ந்த யானே ஏக
முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும்
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும்
செல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும்
ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும்
இல்லது இலதாய் உள்ளது உளது எனும்
சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச்
சிறுத்தலும் பெருத்தலும் இலவே நிறுத்தி
யானை எறும்பின் ஆனது போல் எனில்
ஞானம் அன்று அவை காய வாழ்க்கை
மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று
விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டு வந்தனன் என வேண்டும் நட்ட
பெரியதில் பெருமையும் சிறியதில் சிறுமையும்
உரியது நினக்கே உண்மை, பெரியோய்!
எனக்கு இன்று ஆகும் என்றும்
மனக்கு இனியாய்! இனி மற்றது மொழியே

7.
மொழிந்த அவத்தை முதல் அடியேன் நின்றாங்கு
ஒழிந்தன நான்கும் உணர -- இழிந்து அறிந்து
ஏறிற்று இங்கு இல்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே!
தேறிற்று என் கொண்டு தெரித்து.

8.
தெரித்தது என் கொண்டு எனை உருத்திர பசுபதி!
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவம் கொண்டு வடிவுகாட்டு இல்லாப்
பெண்ணை ஆளும் வெண்ணெய் மெய்ய!
அவத்தையில் தெரித்தனன் ஆயின் அவத்தை
தெரித்தாங்கு இருத்தலும் இலனே திருத்தும்
காலம் முதலிய கருவி ஆயின்
மாலும் பிரமனும் வந்து எனை அடையார்
ஓதும் காலை ஒன்றை ஒன்று உணரா
சேதனம் அன்று அவை பேதைச் செயலும் இச்
சேதன ஆனால் செயல் கொள வேண்டும்
போதம் அவற்றைப் புணர்வதை அறியேன்
கருவித் திரளினும் காண்பது ஓர் ஒன்றாய்
ஒருவுதல் அறியேன் உணர்வு இலன் ஆதலின்
நிற்கொடு கண்டனன் ஆயின் எற்குக்
கருவி ஆயினை பெருமையும் இலவே
யானே பிரமம் கோனே வேண்டா
இன்னும் கேண்மோ, மன்ன! நின்னின்
முன்னம் என்றன் உணர்வு இலன் ஆதலின்
என்னைக் காண்பினும் காண்பல உன்னோடு
ஒருங்கு காண்பினும் காண்பல அரும்துணை
கண்டவாறு ஏது எனது கண்ணே!
அண்டவாண! அருட்பெரும் கடலே!

9.
கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே!
உடலகத்து மூலத்து ஒடுங்கச் -- சடலக்
கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பதுதான் என்னை
மருவியது என்று உரைக்க மன்.

10.
மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அன்னியம் ஆக்கி அருள்வழி அதனால்
என்னுள் புகுந்தனை எனினே முன்னைத்
திரிமலம் தீர்த்த தேசிக! நின்னோடு
உருவுதல் இன்றி உடந்தையே ஆகும்
பெருநிலை ஆகல் வேண்டும் மருவிடும்
மும்மலம் அதனால் எம்முள் நின்றிலை எனில்
அம்மலத் திரிவும் செம்மலர்த் தாள்நிழல்
சேர்தலும் இலவாய்ச் சார்பவை பற்றிப்
பெயர்வு இலன் ஆகும், பெரும! தீர்வு இன்று
அமைந்த கருமத்து இயைந்ததை அல்லது
சமைந்தன இலஎனச் சாற்றில் அமைந்த
மாயேயம் கன்மம் மாமலம் மூன்றும்
மாயாது ஆகவே ஆர்ச்சன மாயையின்
உற்பவம் தீராது ஒழுகும் ஒன்று ஒன்று
நிற்சமம் ஆயின் அல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல் அறம் தனக்கும்
ஏயாது ஆகும் நாயேன் உளத்து
நின்றனை என்பனோ நின்றிலை என்பனோ
பொன்றிய பொன்றிற்றில மலம் என்பனோ
ஒன்றினை உரைத்து அருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க்கு அதிபதி!
கைகண் தலைவாய் கால்செவி மூக்கு உயர்
மெய்கொண்டு என்வினை வேர் அறப் பறித்த
மெய்கண்ட தேவ! வினையிலி!
மைகொண்ட கண்ட! வழுவிலென் மதியே!

11.
மதிநின்பால் இந்த மலத்தின்பால் நிற்க
விதிஎன்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய! -- பதிநின்பால்
வந்தால் இதில்வரத்தில் வந்து இரண்டும் பற்றுகிலேன்
எந்தாய் இரண்டு ஆமாறு என்

12.
எண்திசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டகம் மலர்த்தி மூதறிவு அருளும்
மேதினி உதய மெய்கண்ட தேவ!
கோதுஇல் அமுத! குணப்பெரும் குன்ற!
என்னின் ஆர்தலும் அகறலும் என்னைகொல்
உன்னில் துன்னி உனாவிடில் பெயர்குவம்
என்னும் அதுவே நின் இயல்பு எனினே
வியங்கோள் ஆளனும் ஆகி இயங்கலும்
உண்டு எனப்படுபவை எண்தாள் முக்கண்
யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின்
யான் வந்து அணைந்து மீள்குவன் ஆயின்
ஆற்றுத்துயர் உற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற்று இழிதர வேண்டலும் வெறுத்தலும்
இன்றிச் சாயைக்கு நன்றுமன் இயல்பே
அனையை ஆகுவை நினைவு அரும் காலை
இந்நிலை அதனில் ஏழையேற்கு இரங்கி
நின்னை வெளிப்படுத்து ஒளிப்பை நியேல்
அருள்மாறு ஆகும், பெரும! அ·து அன்றியும்
நிற்பெற்ற அவர்க்கும் உற்பவம் உண்டு எனும்
சொற்பெறும் அ·து இத் தொலுலகு இல்லை
அவ்வவை அமைவும் சோர்வும் மயர்வுஅறச்
சொல்லில் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல் இறந்தோயே!

13.
இறந்தோய் கரணங்கள் எல்லாம் எனக்குச்
சிறந்தோய் எனினும் மெய்த் தேவே! -- பிறந்து உடனாம்
காயம் கொளவும் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத்து அற்று

14.
அற்றதுஎன் பாசம் உற்றது உன் கழலே
அருள்துறை உறையும் பொருள்சுவை நாத!
வேறு என்று இருந்த என்னை யான் பெற
வேறு இன்மை கண்ட மெய்கண்ட தேவ!
இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை ஆயில்
கணத்திடை அழியும் தினைத்துணை ஆகா
காரணம் சடம் அதன் காரியம் அ·தால்
ஆரணங்கு ஆம் வழி அடியேற்கு என்னைகொல்
செயல் எனது ஆயினும் செயலே வாராது
இயமன் செய்தி இதற்கு எனில் அமைவும்
பின்னை இன்று ஆகும் அன்னதும் இங்குச்
செய்திக்கு உள்ள செயல் அவை அருத்தின்
மையல்தீர் இயமற்கு வழக்கு இல்லை, மன்ன!
ஒருவரே அமையும் ஒருவா ஒருவற்கு
இருவரும் வேண்டா இறைவனும் நின்றனை
நின்னது கருணை சொல் அளவு இன்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம்
உள்ளது போகாது இல்லது வாராது
உள்ளதே உள்ளது எனுமுரை அதனால்
கொள்ளும் வகையால் கொளுத்திடும் ஆயின்
வள்ளன்மை எலாம் உள்ளிட அமையும்
ஈய வேண்டும் எனும்விதி இன்றாம்
ஆயினும் என்னை அருந்துயர்ப் படுத்தல்
நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமும் கரும பந்தமும்
தெருள அருளும் சிவபெரு மானே!

15.
மான் அமரும் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன!
போனவினை தானே பொருந்துமோ -- யான் அதனில்
ஆவனோ ஆக்காய் அமலனாம் நின் அருள்தான்
தேவனே! யாதுக்கோ தேர்.

16.
தேராது உரைப்பன் தெருமரல் உள்ளத்தொடு
பேராது அருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்பது என் உண்மை எனில்
நினது நேர்மை சொல்மனத்து இன்றே
எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும்
பெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி
நீக்கி என்றனைப் போக்குஅற நிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பு அது நிற்க
வாக்கும் மனமும் போக்கு உள தனுவும்
சொல்லும் நினைவும் செய்யும் செயலும்
நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து
முறை பிறழாமல் குறைவு நிறைவு இன்றாய்க்
காலமும் தேசமும் மால் அற வகுத்து
நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே
சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே
சாலார் செயலே மால் ஆகுவதே
அத்துவா மெத்தி அடங்கா வினைகளும்
சுத்திசெய் தனையே ஒத்த கன்மத்திடை
நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும்
ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால்
கருமம் அருத்தும் கடன் அது இன்றாம்
தருமம் புரத்தல் பெருமையது அன்றே
கண்ணினுள் மணிய! கருத்தினுள் கருத்த!
வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ!
இடர்படு குரம்பையில் இருத்தித்
துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே.

17.
சொல்தொழும்பு கொள்ள நீ சூழ்ந்ததுவும் நின்செயல்கள்
மற்றவர்கள் நின்நோக்கில் மாய்ந்த உயிர்க் -- குற்றம்
ஒளித்தி யாங்கு, ஐய! உயர்வெண்ணெய் நல்லூர்க்
குளித்தமதுக் கொன்றை எம் கோ!

18.
கோலம் கொண்ட ஆறு உணராதே
ஞாலம் காவலன் யான் எனக் கொளீஇப்
பொய்யை மெய்யனப் புகன்று வையத்து
ஓடாப் பூட்கை நாடி நாடா
என்னுள் கரந்து என் பின் வந்து அருளி
என்னையும் தன்னையும் அறிவின்றி இயற்றி
என்னது யான் எனும் அகந்தையும் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணும் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
என்பணி ஆளாய் எனைப் பிரியாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை அன்னோ
அருள்மிக உடைமையின் அருள்துறை வந்து
பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை ஆதலும்
கைகண்டு கொள்ளெனக் கடல் உலகு அறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
தன்னுள் கரந்து தான்முன் ஆகித்
தன்னதும் தானுமாய் என்னை இன்றாக்கித்
தன்னையும் என்னையும் தந்து தனது
செய்யாமையும் என்செயல் இன்மையும்
எம்மான் காட்டி எய்தல்
அம்ம எனக்கே அதிசயம் தருமே.

19.
தருமா தருமத் தலைநின்று ஆழ்வேனைக்
கருமா கடல்விடம் உண் கண்டப் -- பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உரு என்ன வந்து எடுத்தான் உற்று.

20.
உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும்
அற்றவர்க்கு அற்றவன் அல்லவர்க்கு அல்லவன்
அந்தம் ஆதி இல்லவன் வந்து
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு
இருள்வெளி ஆகும் மருளினை அறுத்து
வந்து புகுதலும் சென்று நீங்கலும்
இன்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில்
ஒன்று ஆகாமல் இரண்டா காமல்
ஒன்றும் இரண்டும் இன்றா காமல்
தன்னது பெருமை தாக்கான் ஆயினும்
என்னது பெருமை எல்லாம் எய்தித்
தன்னை எனக்குத் தருவதை அன்றியும்
என்னையும் எனக்கே தந்து தன்னது
பேர் ஆனந்தப் பெரும் கடல் அதனுள்
ஆரா இன்பம் அளித்துத் தீரா
உள்ளும் புறம்பும் ஒழிவுஇன்றி நின்ற
வள்ளனமை காட்டி மலர் அடி அருளிய
மன்னன் எங்கோன் வார்புனல் பெண்ணை
வெண்ணெய் காவலன் மெய்கண்டதேவன்
அண்ணல் அருள் ஆலயத்தன் நண்ணிய
மலம் முதலாயின மாய்க்கும்
உலக உயிர்க் எல்லாம் ஒரு கண்ணே.

(முற்றும்)
----------

உண்மை விளக்கம்
ஆசிரியர் : திருவதிகை மனவாசகங் கடந்தார்

-----------------
அன்பர்களே,

மெய்கண்ட சாத்திரங்கள் பதினாங்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூற்கள் இரண்டு: அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" என்பதுவும் ஆகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக உண்மை விளக்கம் எனும் இந்நூல் விளங்குகிறது. இதனை அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அன்பன் கி.லோகநாதன்
----------------

நூலாசிரியர் சிறப்பு

மன் அதிகை வாழும் மனவாசகம் கடந்தான்
மின் அணையார் வாழ்வில் உறா மெய்கண்டான் -- பன்மறையின்
வண்மைதரும் ஆகமநூல் வைத்தபொருள் வழுவா
உண்மை விளக்கம் செய்தான் உற்று

பொருள் அடைவு

பொருள் செய்யுள் எண்
காப்பு 1
நூல் நுவலும் பொருள் 2-4
ஆன்ம தத்துவம் 5-18
வித்தியா தத்துவம் 19-20
சிவ தத்துவம் 21-22
ஆணவம், கன்மம் 23
ஆன்ம ரூபம் 24-27
சிவ ரூபம் 28-30
திருவைந்தெழுத்து திருக்கூத்து 31-39
திருவைந்தெழுத்து ஓதும் முறை 40-45
அத்துவித முத்தி 46- 51
குரு லிங்க சங்கம வழிபாடு 52-54


காப்பு

1
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா
உண்மைவிளக்கம் உரைசெய்யத் -- திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்
பந்தம் அறப் புந்தியுள் வைப்பாம்

நூல்

2.
பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம் -- பொய்காட்டா
மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்தவினா
ஐயாநீ தான் கேட்டு அருள்.

3.
ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? அன்றே தான்
மாறா வினை ஏது? மற்று இவற்றின் -- வேறு ஆகா
நான் ஏது? நீ ஏது? நடம் அஞ்செழுத்துத்
தான் ஏது? தேசிகனே! சாற்று

4.
உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உந்தனக்கு
வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து -- தெள்ளியசீர்
ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த
யோகம் நிகழ் புதல்வா! உற்று

5.
நாற்கோணம் பூமிபுனல் நண்ணும் மதியின்பாதி
ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் -- ஆக்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாயம் ஆம் இவற்றால் உற்று

6.
பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் -- என்பார்
எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது.

7.
குறிகுலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா
அறுபுள்ளி ஆர் அமுத விந்துப் -- பிறிவு இன்றி
மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேஎன்று
ஒண்புதல்வா! ஆகமம் ஓதும்.

8.
பார் ஆதி ஐந்தும் பன்னும் அதி தெய்வங்கள்
ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் -- ஓர் ஓர்
தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றம் முதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்

9.
படைப்பன் அயன் அளிப்பன் பங்கயக்கண் மாயன்
துடைப்பன் உருத்திரனும் சொல்லில் -- திடப்பெறவே
என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும்
அன்றே அநுக்கிரகர் ஆம்.

10.
மண்கடினமாய்த் தரிக்கும் வாரிகுளிர்ந்தே பதம் ஆம்
ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் -- வண்கால்
பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.

11.
உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளம்மிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் -- மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே ஆம்

12.
ஞானேந் திரியங்கள் நன்றாய்க் உரைக்கக்கேள்
ஊனம் மிகுபூதம் உற்றிடமா -- ஈனமாம்
சத்தாதியை அறியும் தானம் செவிதோல்கண்
அத்தாலு மூக்கு என்று அறி.

13.
வானிடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை
ஈனமிகும் தோல்கால் இடமாக -- ஊனப்
பரிசம் தனை அறியும் பார்வையில்கண் அங்கி
விரவி உருவம் காணுமே.

14.
நன்றாக நீர் இடமாக நாஇரதம் தான் அறியும்
பொன்றா மணம்மூக்கும் பூ இடமா -- நின்று அறியும்
என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை
வென்றார் சென்றார் இன்ப வீடு.

15.
கண்நுதல் நூல் ஓதியிடும் கன்மேந்திரியங்கள்
எண்ணும் வசனாதிக்கு இடமாக -- நண்ணியிடும்
வாக்குப் பாதம்பாணி மன்னு குதம் உபத்த
மாக்கருதும் நாளும் அது.

16.
வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்குக்கால்
போக்கு ஆரும் காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும்
இடும்பை குதம் நீர் இடமா மலாதி
விடும்பார் இடம் உபத்தம் விந்து.

17.
அந்தக் கரணம் அடைவே உரைக்ககேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் -- சிந்தை இவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு
உற்றது சிந்திக்கும் உணர்.

18.
ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று
ஆதி அருள்நூல் அறையும்காண் -- தீது அறவே
வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்ப்பக்கேள்
உத்தமனே! நன்றாய் உனக்கு.

19.
காலம்நியதி கருதும் கலைவித்தை
ஏல இராகம் புருடனே மாயை -- மால் அறவே
சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம் உண்மை
உன்னி உரைக்க நாம் உற்று

20.
எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்
அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு -- ஒல்லை
அறிவு ஆசை ஐம்புலனும் ஆரவரும் காலம்
குறியா மயக்கு என்று கொள்.

21.
வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் -- நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நல்
சத்திசிவம் காண் அவைகள் தாம்.

22.
சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம்தான்
அத்தன் தொழில் அதிகம் ஆக்கிடும் -- ஒத்த இவை
சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை
ஆதார ஞான உரு ஆம்.

23.
ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலம் இரண்டும் வாசொல்லக் - கூறில்
அறியாமை ஆணவம் நீ ஆன சுகம் துக்கம்
குறியா வினை என்று கொள்.

24.
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
மாறா அருளால் வகுத்துரைத்தீர் -- வேறு ஆகா
என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன்
உன்னரிய தேசிகரே! உற்று

25.
நன்றா உரைக்கக்கேள் நல்ல சித்தின் முன் அசித்து இங்கு
ஒன்றாது சித்து அசித்தை ஓராது -- நின்று இவற்றை
அன்றே பகுத்து அறிவது ஆன்மாவே என்றுமறை
குன்றாமல் ஓதும் குறித்து.

26.
தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்று அறியா
எத்தன்மை என்னில் இயம்பக்கேள் -- சுத்தமாம்
ஆறு சுவையும் அறியாவே தம்மைத்தாம்
கூறில் அவை இவை போல் கொள்.

27.
ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை
வேறு ஒருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும்
ஒன்று ஒன்றாய் நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய்
நின்ற பொருள் தானேகாண் நீ.

28.
குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு
பொன்றாத நும் உருவம் போதியீர் -- நின்று அருக்கன்
கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவில்
நண்ணி அறிவித்திடுவோம் நாம்.

29.
அன்றியும்கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள்
இன்றி அறியா இவை என்ன -- நின்றதுபோல்
ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில்
மேவாமல் மேவி நாமே.

30.
அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றால்போல்
மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் -- எக்கண்ணும்
நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவு என்று
நல் ஆகமம் ஓதும் நாடு.

31.
நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால்
உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி -- பெற்றிடநான்
விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே!
தண்ணார் அருளாலே சாற்று.

32.
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக் கேள் -- சிட்டன்
சிவாயநம எனும் திரு எழுத்து அஞ்சாலே
அவாயம் அற நின்று ஆடுவான்.

33.
ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் -- கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார்.

34.
சேர்க்கும் துடி சிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் -- பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரம் அதுதான்.

35.
ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் -- ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது
பெற்றார் பிறப்பு அற்றார் பின்.

36.
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -- ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

37.
மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான்.

38.
மோனந்த முனிவர் மும்மலத்தை மோசித்துத்
தான் மான் இடத்தே தங்கியிடும் -- ஆனந்தம்
மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் அருள் மூர்த்தியாக்
கொண்ட திரு அம்பலத்தான் கூத்து

39.
பரை இடமா நின்று மிகு பஞ்சாக்கரத்தால்
உரை உணர்வுக்கு எட்டா ஒருவன் -- வரைமகள்தான்
காணும்படியே கருணை உருக்கொண்டு ஆடல்
பேணு வார்க்கு உண்டோ பிறப்பு.

40.
நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்
ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி -- தீது அறவே
அஞ்சு எழுத்து ஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ
தஞ்ச அருள் குருவே சாற்று.

41.
உற்ற குறி அழியும் ஓதும்கால் பாடைகளில்
சற்றும் பொருள்தான் சலியாது -- மற்றது கேள்
ஈசன் அரூள் ஆவி எழில் ஆர் திரோதமலம்
ஆசு இல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம்.

42.
சிவன் அருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் -- இவன்நின்று
நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று.

43.
அண்ணல் முதலா அழகு ஆர் எழுத்து ஐந்தும்
எண்ணில் இராப்பகல் அற்று இன்பத்தே -- நண்ணி
அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை
இருளானது தீர இன்று.

44.
ஆதிமலம் இரண்டும் ஆதியாய் ஓதினால்
சேதியா மும்மலமும் தீர்வு ஆகா -- போதம்
மதிப்பு அரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி
விதிப்படி ஓது அஞ்செழுத்துமே.

45.
அஞ்சுஎழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்சுஎழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் -- அஞ்சுஎழுத்தே
ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம்
மோனந்த மாமுத்தி யும்.

46.
முத்திதனை அடைந்தோர் முந்துபழம் போது அங்கி
வித்தகமாம் வீணை இவையிற்றின் -- ஒத்த
இரதம்மணம் வெம்மை எழில்நாதம் போல
விரவுவர் என்று ஓதும் விதி.

47.
தத்துவங்கள் எல்லாம் சகசமாக ஆன்மாவில்
பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் - முத்திதனில்
சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்றுமறை
சத்தியமா ஓதியிடும் தான்.

48.
ஆதவன் தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி
பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் -- நாதாந்தத்து
அண்ணல் துரிவடியில் ஆன்மா அணைந்து இனபக்
கண்ணில் அழுந்தியிடும் காண்.

49.
சென்று இவன் தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும்
அன்றுஅவன் தான் ஒன்றுமெனில் அன்னியமாம் -- இன்றுஇரண்டும்
அற்ற நிலை ஏதுஎன்னில் ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றம் அற நின்றதுபோல் கொள்.

50.
வாக்கு மனம் இறந்த வான் கருணையாளன் உருத்
தாக்கு அறவே நிற்கும் தனிமுதல்வா! -- நீக்காப்
பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய்
கதியிடத்தும் மூன்றினையும் காட்டு.

51.
முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள்
சுத்த அனுபோகத்தைத் தூய்த்தல் அணு -- மெத்தவே
இன்பம் கொடுத்தல் இறை இத்தை விளைவித்தல் மலம்
அன்புடனே கண்டுகொள், அப்பா!

52.
அப்பா! இம்முத்திக்கு அழியாத காரணம்தான்
செப்பாய் அருளாலே செப்பக்கேள் -- ஒப்புஇல்
குருலிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார்
கரு ஒன்றி நில்லார்கள் காண்.

53.
கற்றா மனம்போல் கசிந்துகசிந்தே உருகி
உற்று ஆசான் லிங்கம் உயர்வேடம் -- பற்று ஆக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும்
பத்திதனில் நின்றிடுவர் பார்.

54.
வாழ்ந்தேன் அருட்கடலே! வற்றாப் பவக்கடலில்
வீழ்ந்தே அலையாமல் மேதினியில் -- சூழ்ந்துவிடா
வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே!
உண்மைத் தவப்பயனே உற்று.


முற்றிற்று
----------------------


This page was first put up on April 18, 2000
Please send your comments and corrections to the Webmaster of this site