Kalevala - A Finland Epic -part II (songs 19-25)
(in tamil script, unicode/utf-8 format)

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 19-25



தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)
Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்

Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

பாடல் 19 - வடநில மங்கையை இல்மரினனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தல்  *



அடிகள் 1 - 32 : இல்மரினன் வடநாட்டின் வீட்டுக்கு வந்து வடநில மகளை மணம் செய்யக் கேட்கிறான். அவனுக்குச் சில பயங்கரமான வேலைகள் தரப்படுகின்றன.

அடிகள் 33 - 344 : வடநில மகளின் ஆலோசனைப்படி அவன் அந்த வேலைகளைச் செய்து முடிக்கிறான். முதலாவதாக பாம்புகள் நிறைந்த வயலை உழுகிறான்; இரண்டாவதாக துவோனியின் கரடியையும் மரண உலகின் ஓநாயையும் பிடிக்கிறான். மூன்றாவதாக துவோனலா ஆற்றில் ஒரு பெரிய பயங்கர மீனைப் பிடிக்கிறான்.

அடிகள் 345 - 498 : வடநாட்டுத் தலைவி தனது மகளை இல்மரினனுக்குத் தருவதாக வாக்களித்து விவாக நிச்சயம் செய்கிறாள்.

அடிகள் 499 - 518 : வைனாமொயினன் மனத்துயருடன் வடநாட்டை விட்டுத் திரும்புகிறான். எவரும் தன்னிலும் பார்க்க இளையவர்களுடன் விவாகத்தில் போட்டியிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறான்.



அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தானே வீட்டின் தனியுள் நுழைந்து
நற்கூ ரையின்கீழ் நடந்தே போனான்.

குடுவையில் தேனும் கொணரப் பட்டது
சாடி ஒன்றிலே தேன்வந் தடைந்தது
கொல்லன்இல் மரினனின் கொழுங்கரங் களிலே;
இந்தச் சொற்களில் இயம்பினன் கொல்லன்:
"இந்தவாழ் நாளில் என்றுமே யில்லை
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்   10
அருந்துவ தில்லை அளித்தஇப் பானம்
எனது**சொந் தத்தை இனிக்காண் பதன்முன்
அன்புக் குரியாள் ஆயத்த மாகுமுன்
நான்காத் திருந்தவள் நற்றயா ராகுமுன்."

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"உனது மணமகள் உளள்பெரும் சிக்கலில்
காத்திருந் தவட்கொரு கடுந்தொ(ல்)லை வந்தது
புனையுமோர் பாதணி பொருத்தம தாயிலை
அடுத்ததும் கூடவே அளவாய் இல்லையாம்;   20
ஆயத்த மானவள்நின் அன்புக்கு உரியவள்
உண்மையில் அவளைநீ உடையவன் ஆகலாம்
விரியன் பாம்பார் விளைவயல் உழுதிடில்
உறும்அரா வயலினை உழுதே புரட்டினால்
பயன்படுத் தாமலோர் பாய்ந்திடு கலப்பையும்
நகர்த்தப் படாமலோர் நனிதவழ் உழுமுனை;
அதனையே புதமொன் றந்தநாள் உழுதது
வாய்க்கால் பறித்தது வலியபேய் ஒன்றுதான்
செப்பினாற் செய்ததோர் செழும்உழு முனையினால்
கூரிய அலகினைக் கொள்கலப் பையினால்   30
அதிர்ஷ்ட மற்றவன் அன்புறும் என்மகன்
பாதியை உழுதனன் மீதியை விட்டனன்."

அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"வளர்இரா நங்கையே, வைகறைப் பெண்ணே!
உன்நினை வினிலே உளவோ அந்நாள்?
திகழ்புதுச் சம்போ செய்தஅந் நாட்களை?
அரும்ஒளிர் மூடியை அடித்தவந் நாட்களை?
அப்போது நீயொரு சத்தியம் செய்தனை   40
அனைவரும் அறிந்த ஆண்டவன் பேரிலே
சர்வ வல்லவன் தன்முகத் தின்கீழ்
என்னிடம் வருதற் கிசைவைக் காட்டினாய்
அரியநற் கணவன் ஆகிய என்னிடம்
திகழ்நாள் முழுவதும் சினேகிதி யாக
என்கை யணைப்பில் இருக்குமோர் கோழியாய்;
அன்னைஇப் போதுனை அளிக்கிறா ளில்லை
தன்பெ(ண்)ணை எனக்குத் தருகிறா ளில்லை
உறுவிரி யன்வயல் உழாதே போனால்
போயுழு தராவயல் புரட்டா விட்டால்."   50

மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞ!
செய்வாய் தங்கத் திலேயொரு கலப்பை
அதனை வெள்ளியால் அலங்கரித் திடுவாய்
உறுவிரி யன்வயல் உழலாம் அதனால்
பொறியரா வயலைப் புரட்டிப் போடலாம்."

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கொல்லுலை வைத்தான் கொழும்பொன் எடுத்தே   60
வெள்ளியும் வைத்தான் வியனுலைத் துருத்தியில்
அமைத்தான் கலப்பையொன் றதிலே யிருந்து;
இரும்பிலே பாதணி இயற்றினான் அடுத்து
அமைத்தான் உருக்கிலே அதன்பின் காலணி
அவற்றை அவனும் அணிந்தே கொண்டனன்
தன்கால் அணிகளைத் தரித்துக் கொண்டனன்
அணிந்தனன் இரும்பினால் ஆனமேற் சட்டை
உருக்கு வளையம் உறுத்தினான் பட்டியை
எடுத்தான் இரும்பில் இயைந்தகை யுறைகளை
கல்லினால் ஆன கையுறை கொண்டான்   70
கொடுங்கனல் கக்கும் குதிரையைப் பெற்றான்
அந்நற் புரவிக் கணிகலன் புட்டினான்
புறப்பட் டேகினான் போய்வயல் உழற்கு
புன்னிலம் உழுது புரட்டிப் போட்டிட.

போந்தாங்கு நோக்கினன் புரள்நெளி தலைகளை
சலசலத் திரையும் **தலையோடு கண்டான்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:
"ஏ,நெளி புழுவே, இறைவனின் படைப்பே!
உனது தலையினை உயர்த்தி யதுயார்?
எவர்தான் சொன்னார், எவரது கட்டளை?   80
உன்தலை உயர்த்தி உயரமாய் நிற்க
நேராய்க் கழுத்தை நிமிர்த்தியே நிற்க?
இப்போது பாதையில் இடம்விட் டகல்க!
புன்மைப் பிராணியே புல்லினுள் மறைக!
பற்றையின் உட்புறப் பால்நுழைந் திடுக!
புற்புத ருள்ளே புகுந்துசென் றிடுக!
நீஅங் கிருந்து நிமிர்த்தினால் தலையை
நொருக்குவார் உன்தலை நுவல்மனு முதல்வன்
உருக்கு முனையுடை ஒளிர்கணை களினால்
இரும்புக் குண்டாம் இகல்மழை பொழிவார்."   90

பின்னர்நச் சரவப் பெருவயல் உழுதான்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினான்
பார்த்துழும் நிலத்திலே பாம்புகள் எடுத்தான்
புரட்டிய மண்ணில் புகும்பாம் பெடுத்தான்
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"உழுதிப்போ(து) முடித்தேன் உறுவிரி யன்வயல்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினேன்
பாம்புகள் நிறைந்த பன்னிலம் கிளறினேன்,
இப்போது பெண்ணை எனக்கீய லாமா?
என்இணை யில்லா அன்புக் குரியளை?"    100

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அரிவை உனக்கு அளிக்கப் படுவாள்
பெண்ணிங் குனக்குப் பெறத்தரப் படுவாள்
இங்கு துவோனியின் கரடி கொணர்ந்தால்
மாய்வுல கோநாய் மடக்கி யடக்கினால்
அங்கே துவோனியின் அடர்கா டிருந்து
மரண உலகின் வதிவிடத் திருந்து;
சென்றனர் நூற்றுவர் திசைபிடித் தடக்க
மீண்டு திரும்பினோர் வியன்நிலத் தில்லை."   110

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வேலையொன் றெனக்கு விதித்திடப் பட்டது
மாய்வுல கோநாய் மடக்கிப் பிடிக்க
துவோனிக் கரடிகள் அவைகளைக் கொணர
அங்கே துவோனியின் அடர்கா டிருந்து
மரண உலகின் வதிவிடத் திருந்து."

மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:    120
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞ!
ஒருகடி வாளம் உருக்கிலே செய்வாய்
வாய்பிணை கருவியை வடிப்பாய் இரும்பிலே
நனைந்து கிடக்குமோர் நளிர்பா றையிலே
மூன்றுநீர் வீழ்ச்சியின் தோன்று நுரையினால்;
துவோனிக் கரடிகள் அவற்றால் கொணர்வாய்
மாய்வுல கோநாய் மடக்கி அடக்குவாய்."

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவினழி வில்லாத கைவினைக் கலைஞன்   130
ஒருகடி வாளம் உருக்கிலே செய்தான்
வாய்பிணை கருவியை வடித்தான் இரும்பில்
நனைந்து கிடந்ததோர் நளிர்பா றையிலே
மூன்றுநீர் வீழ்ச்சியின் தோன்று நுரையினால்.

பிடித்து அடக்கப் பின்புறப் பட்டான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பனிப்புகார் மகளே, பனிமறை பாவாய்!
மூடு பனியினை முன்சுள கால்தெளி!
பனிப்புகார் அதனை நனிமிதக் கச்செய்!
வேட்டை மிருகம் மிகஉலா விடத்தில்   140
கேளா திருக்கஎன் காலடி யைஅது
உறும்எனை முந்தியஃ தோடா திருக்க."

பிடித்தோ நாயைப் பொருத்தினன் கடிவளம்
கரடிக் கிரும்புச் சங்கிலி கட்டினன்
அங்கோர் துவோனியில் அமைபுற் புதரில்
நெடிதுட் புறமுள நீலக் காட்டினில்
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"வயோதிப மாதே வழங்குக நின்மமகள்
துவோனியின் கரடி கவனமாய்க் கொணர்ந்தேன்
மாய்வுல கோனாய் மடக்கி அடக்கினேன்."  150

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"வாத்து உனக்கு வழங்கப் படுவாள்
நீலவாத் துனக்கு நிசம்தரப் படுவாள்
**கோலாச்சி பெரும்செதிற் கொழுமீன் பிடித்தால்
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தால்
அந்தத் துவோனலா ஆற்றிலே அங்கே
பாதாள மாய்புவிப் படுகிடங் கினிலே
கரைவலை ஒன்றைக் கையெடுக் காமல்
திருப்பி யிடாமல் சேருமோர் கைவலை   160
சென்றோர் நூற்றுவர் சேர்ந்ததைப் பிடிக்க
திரும்பிவந் தோர்கள் செகத்திலே இல்லை."

இப்போ தவனுக் கெழுந்தது கவலை
தொல்லையாய்ப் பட்டன எல்லா அலுவலும்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வேலையொன் றெனக்கு விதிக்கப் பட்டது
தந்ததைக் காட்டிலும் தரமிகு வேலை
கோலாச்சி பெருஞ்செதிற் கொழுமீன் பிடிக்க
விரையும் கொழுத்த மீனதைப் பிடிக்க   170
அந்தத் துவோனியின் அகல்கறுப் பாற்றில்
மரண உலகின் **மாயா அருவியில்
கைவலை கரைவலை எவையுமில் லாமல்
எந்தப் பொறியும் எடுத்தல்இல் லாமல்."

மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
இதற்காய் வீணாய் வருத்தப் படாதே
அனல்உமிழ் கழுகொன் றமைப்பாய் இப்போ(து)
அனற்புள் படைப்பாய் அதிபிர மாண்டமாய்!  180
பிடிப்பாய் அதனால் பெருங்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனைப் பிடிப்பாய்
அந்தத் துவோனியின் அகல்கறுப் பாற்றில்
மாய்வுல கத்தின் பாத(஡)ளக் கிடங்கில்."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
அனல்உமிழ் கழுகொன் றமைத்திட லானான்
அனற்புள் படைத்தான் அதிபிர மாண்டமாய்
பறவையின் கால்களைப் படைத்தான் இரும்பால்
பாத நகங்களைப் படைத்தான் உருக்கால்   190
படகின் புறங்களால் படைத்தான் சிறகுகள்
தானே பறவையின் தவழ்சிற கேறினான்
அமர்ந்தனன் பறவையின் அகல்முது கினிலே
சிறகு எலும்பின் செறிமுனை அமர்ந்தான்.

இதன்பின் கழுகுக் கியம்பினான் வழிமுறை
பெரியதீப் பறவைக் கறிவுரை சொன்னான்:
"என்னுடைக் கழுகே, எனது பறவையே!
நான்சொல் இடத்தை நாடிப் பறந்துசெல்
துவோனியின் கறுப்புத் தொல்நிற நதிக்கு
மாய்வுல கத்தின் பாத(஡)ளக் கிடங்குக்(கு)  200
அறைவாய் பெருஞ்செதில் அக்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனை அடிப்பாய்!"

அந்தக் கழுகு அழகிய பறவை
எழுந்தது மேலே பறந்தே சென்றது
விரைந்துகோ லாச்சி வேட்டைக் ககன்றது
பல்லு(ள்)ள பயங்கரப் பருமீன் தேடி
அந்தத் துவோனலா ஆற்றுக் காங்கே
மாய்வுல கத்தின் பாதளக் கிடங்குக்(கு);
ஒற்றைச் சிறகு **அப்பைக் கலக்க
மற்றச் சிறகு வானைத் தொட்டது    210
நகங்கள் கடலில் இறங்கிப் பிறாண்ட
பாறையில் அலகு மோதிமுட் டியது.

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
வேட்டையைத் தேடி விரைந்தே சென்றான்
அந்தத் துவோனலா ஆற்றுக் காங்கே
கழுகவ னுக்குக் காவல் இருக்க.

நீரில் இருந்தொரு **நீர்விசை எழுந்தது
இல்மரி னனையே இறுகப் பிடித்தது
கழுகு அதனது கழுத்தில் குதித்தது
திருகிய துநீர்ச் சக்தியின் சென்னியை    220
இழுத்தது பிடித்து இரும்தலை கீழே
காலடிக் கிடந்த கறுப்புச் சேற்றினுள்.

வந்தது துவோனியின் வலுக்கோ லாச்சி
நீர்வாழ் நாயும் நேராய் வந்தது
சின்னஞ் சிறியகோ லாச்சியு மல்ல
பென்னம் பெரியகோ லாச்சியு மல்ல;
கோடரி இரண்டு கொள்கைப் **பிடிநா
குப்பைவா ரிகைப் பிடிநீள் பற்கள்
மூன்றுநீர் வீழ்ச்சிமுன் கடைவாய் அளவு
ஏழு தோணிகள் நீளம் முதுகு    230
வந்தது கொல்லனை வலிதுகைப் பற்ற
கொல்லன்இல் மரினனைக் கொன்று(ண்)ண வந்தது.

கழுகு எதிரே கடுகதி வந்தது
காற்றின் பறவை கடிததை அறைந்தது
அந்தக் கழுகு அதுசிறி தல்ல
ஆனால் உண்மையில் அதுபெரி தல்ல:
வாயின் அகல மதுவறு நூறடி
ஆறுநீர் வீழ்ச்சி அளவது கடைவாய்
நாக்கின் நீளம் ஈட்டிஆ றலகு
அதன்நகம் ஐந்து அரிவாள் நீளம்;    240
அதுபெரும் செதிற்கோ லாச்சியைக் கண்டது
கூடிய விசைசெலும் கொழுத்த மீனதனை
அந்தமீ னினையே அடித்தது பாய்ந்து
அந்தமீன் செதிலை அடித்தே கிழித்தது.

அப்போ தந்த அதிபெரும் செதில்மீன்
விரைந்தே செல்லுமம் மிகுகொழுப் புறுமீன்
கழுகின் நகங்களைக் கடிதுதொட் டிழுத்தது
தெளிந்தநீ ரதனின் திகழடி ஆழம்;
என்னினும் கழுகு எழுந்தே பறந்தது
வானதில் உயர வலுவுடன் சென்றது   250
கறுப்புச் சேற்றினைக் கலக்கிக் கிளப்பி
தெளிந்தநீர் மேலே சேரக் கொணர்ந்தது.

வட்டமிட் டுயர வந்தது முன்பின்
முயற்சித் ததுஒரு முறையது மீண்டும்
உள்திணித் ததுதன் ஒற்றை நகத்தை
பயங்கர மிகுந்த படர்கோ லாச்சிதோள்
நீர்நா யதனின் நீள்வளை வெலும்பில்;
அடுத்ததன் நகத்தை அதிஉள் திணித்தது
உருக்கில் அமைந்த உறும்மலை யுள்ளே
இரும்பினால் ஆன இருங்குன் றுள்ளே;    260
ஆயினும் பாறையில் அந்நகம் வழுக்கி
விலகிச் சென்றது விரிகுன் றிருந்து
கோலாச்சி வழுவிக் கொண்டது அதனால்
நழுவிச் சென்றது நளிர்நீர் விலங்கு
கழுகின் கால்நகங் களிலே யிருந்து
பிரம(஡)ண்டப் பறவைப் பிடிவிர லிருந்து
நெஞ்செலும் புகளில் நேர்நகக் கீறலும்
கிழித்த காயமும் கிடந்தன முதுகில்.

பின்னர் இரும்புப் பெருநகக் கழுகு
இன்னொரு தடவை எடுத்தது முயற்சி    270
அதன்சிற கினிலே அனல்வீ சியது
கனலும் நெருப்பாய்க் கனன்றன விழிகள்
பிடித்தது நகங்களால் பெருங்கோ லாச்சியை
தன்பிடிக் கொணர்ந்தது தனிநீர் நாயை
உறுசெதிற் கோலாச்சி(யை) உயர்த்தி எடுத்தது
இழுத்து வந்தது இரும்நீர் விலங்கை
ஆழத் தலைகளின் அடியிலே யிருந்து
தெளிந்த நீரதன் திகழ்மேற் பரப்பு.

இரும்பு நகக்கழு கிப்படி யாக
அதனுடை மூன்றாம் அருமுயற் சியினால்   280
பெற்றது துவோனியின் பெருங்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தது
அந்தத் துவோனலா ஆற்றிலே யிருந்து
படுமாய் வுலகின் பாதளத் திருந்து;
தண்ணீர் நீராய்த் தான்தெரிந் திலது
பெருங்கோ லாச்சிப் பிறழ்மீன் செதில்களால்
வருகால் காலாய் **மணக்கவு மில்லை
பருத்த கழுகின் பறப்பிற குகளால்.

இரும்புப் பாதத் திருங்கழு கதன்பின்
சென்றது சுமந்து செதிற்கோ லாச்சியை   290
பெரியசிந் தூரச் செறிமரக் கிளைக்கு
படர்தேவ தாருவின் தொடர்முடி யதற்கு;
சுவையை அங்கே சுவைத்துப் பார்த்தது
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தது
நெஞ்சு எலும்பை நேர்பிளந் தெடுத்தது
அடித்து நொருக்கி அதன்தலை போட்டது.

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"ஓ,நீ இழிந்த ஊனுண் கழுகே,
எந்த இனம்நீ இயைந்தபுட் குலத்தில்
எவ்வகைப் பிராணிநீ இருக்கும் வகையில்   300
சுவையை இவ்விடம் சுவைத்துப் பார்த்தாய்
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தாய்
பிளந்தே எடுத்தாய் பெரியநெஞ் செலும்பை
அடித்து நொருக்கி அதன்தலை போட்டாய்."

அப்போ(து) இரும்பால் ஆம்நகக் கழுகு
சினந்தே எழுந்து சென்றது பறந்து
படர்வான் உயரப் பறந்தே சென்றது
மேகமண் டலத்து வெளிபரப் புடே
மேகம் கலைந்தது விண்முழங் கிற்று
வான்அதன் மூடி வளைந்தே வந்தது    310
மானிட முதல்வனின் மாவில் தெறித்தது
திங்களின் கூரிய கொம்புகள் உடைந்தன.

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கொண்டே சென்றான் குறித்தமீன் தலையை
மாமியா ருக்கு வருமன் பளிப்பாய்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நாற்க(஡)லி ஒன்றிதோ நாளெலா மழியா(து)
வடபுல நல்ல வதிவிடத் துக்கு."

பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:   320
"விரியன் வயலை விரைந்துழு(து) முடித்தேன்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினேன்
உயர்மாய் வுலகின் ஓநாய் பிடித்தேன்
கடிதே துவோனியின் கரடிகள் கட்டினேன்
பெரிய செதிற்கோ லாச்சியைப் பெற்றேன்
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தேன்
துவோனலா வதனின் தொன்னதி யிருந்து
படர்மாய் வுலகின் பாதளத் திருந்து
அரிவையிப் போது அளிக்கப் படுவளா
தையலாள் இங்கே தரப்படு வாளா?"   330

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஆயினும் அதிலே ஆற்றினாய் ஓர்பிழை
அடித்துத் தலையை நொருக்கிப் போட்டாய்
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தாய்
நெஞ்சின் எலும்பை நேர்பிளந் தெடுத்தாய்
சுவையை ஆங்கே சுவைத்துப் பார்த்தாய்."

அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"விளைசே தமிலா வெற்றியொன் றில்லை
எம்மிகச் சிறந்த இடங்களிற் கூட     340
நதிதுவோ னலாவிது நனிபெறப் பட்டது
படுமாய் வுலகின் பாதளக் கிடங்கில்;
ஆயத்தம் தானா அணங்(கு)எதிர் பார்த்தோள்
தயார்நிலை யுள்ளளா தனிக்காத் திருந்தவள்?"

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"ஆயத்த மானாள் அணங்(கு)எதிர் பார்த்தோள்
தயாரா யுள்ளனள் தனிக்காத் திருந்தோள்
அளிக்கப் படுவள் அரியஉன் தாரா
தரப்படு வாள்உன் தனிவாத் துனக்கு    350
இல்மரி னன்எனும் இகல்கொல் லற்கு
என்றுமே அருகில் இருந்திட அமர்ந்து
முழங்கால் மனையளாய் அமர்ந்தே இருக்க
கொள்கரத் தணைப்பில் கோழியா யிருக்க!"

ஆங்கொரு பிள்ளை அகலத் திருந்தது
பெருநிலத் திருந்தொரு பிள்ளைபா டிற்று:
"இவ்வதி விடங்கட் கிப்போ(து) வந்தது
எங்கள்கோட் டைக்கு இன்னொரு பறவை
வடகிழக் கிருந்தே பறந்ததக் கழுகு
கவின்வான் குறுக்கே கருடன் பறந்தது   360
விரிசிற கொன்றுவான் விளிம்பைமுட் டிற்று
மற்றது அலைமேல் வந்துதட் டிற்று
வால்கடற் பரப்பை வலிதே தொட்டது
தலைவான் முகட்டில் தட்டுப் பட்டது;
பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
ஆண்களின் கோட்டை அதன்மேல் அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;
இரும்புக் கூரை **இயைந்த(து)ஆண் கோட்டை
அதனால் உட்புக லதுமுடிந் திலது.    370

பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
அரிவையர் கோட்டை அதன்மேல் அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;
செப்புக் கூரை செறிந்த(து)பெண் கோட்டை
அதனால் உட்புக லதுமுடிந் திலது.

பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
மடவார் கோட்டைமேல் வந்தே அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;    380
சணற்றுணிக் கூரையில் **தையலர் கோட்டை
அதனால் உட்புகல் அதற்கு முடிந்தது.

கோட்டை யதன்புகைக் கூண்டில்வந் தமர்ந்தது
கூரை விளிம்பைக் குறுகியங் கிருந்தது
திறந்தது கோட்டைக் கதவம் தட்டி
அமர்ந்தது கோட்டைச் சாளர மதன்மேல்
சுவரரு கணைந்தது தொடர்பசு மிறகுடன்
நூறிற குடன்சுவர் மூலையை யடைந்தது.

பின்னிய நறுங்குழற் பெண்களைப் பார்த்தது
நறுங்குழல் தலைகளை நன்கா ராய்ந்தது   390
மங்கையர் குழுவில் மாசிறப் பினளை
பின்னல் தலைகளில் பெரும்பே ரழகியை
முத்துத் தலைகளில் மிக்கொளி யுடையளை
மலர்தலை களில்மிகு மாபுகழ் உடையளை.

கழுகுபின் அவளைக் கடிதுபற் றியது
அவளைக் கருடன் அணைந்து பிடித்தது
குழுவில் மிகநலக் குமரிபற் றியது
வாத்துக் கணத்தில் வனப்புள் ளாளை
ஒளியும் மென்மையும் ஒருங்கிணைந் தாளை
செம்மையும் வெண்மையும் சேரவுள் ளாளை   400
அவளையே பிடித்தது அரியகாற் றின்புள்.

நீண்ட நகங்களில் தாங்கிய தவளை
எழில்தலை நிமிர்த்தி இருந்திடு மவளை
அருவடி வுகந்த அமைப்புடை யாளை
இறகினைப் போன்ற இனியமென் மையளை
தண்ணிய தோகைச் சாயலுயுள் ளாளை."

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அன்புக் குரியநீ எங்கிருந் தறிந்தாய்,
கேட்டது எவ்விதம் கிளர்பொன் அப்பிளே,   410
வனிதையாம் இவளும் வளர்வது பற்றி,
நற்சணற் குழலாள் நடமிடல் பற்றி?
அரிவையின் வெள்ளி அணிஒளிர்ந் ததுவா?
பாவையின் பொன்பிர சித்தமுற் றதுவா?
எங்கள்செம் பருதி அங்கெறித் ததுவா
எங்கள் திங்கள் அங்குதிகழ்ந் ததுவா?"

பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
வளர்ந்து வருமது வருபதில் சொன்னது:
"அன்புக்கு உரியது அறிந்தது இவ்விதம்
பாக்கியம் உள்ளவன் பாதையை அறிந்தான்   420
மகிமை பெற்ற மங்கைவீட் டுக்கு
அவளது அழகிய அகல்கா வெளிக்கு;
அவளது தந்தை அருமதிப் புள்ளவர்
கப்பல் பெரிதாய்க் கட்டி முடிப்பதால்,
அவளது அன்னையோ அதிலும் சிறந்தவள்
தடிப்பாய் ரொட்டிகள் தாம்சுட் டெடுப்பதால்,
ரொட்டி கோதுமையில் சுட்டுவைப் பதனால்,
வந்தோரை ஏற்று வைப்பதால் விருந்து.

அன்பபுக்கு உரியது அறிந்தது இவ்விதம்
சரியாம் அந்நியர் தாமும் அறிந்தது    430
இளமைப் பெண்ணாள் வளர்கிறாள் என்பதை
கன்னி நல்விருத்தி காண்கிறாள் என்பதை:
ஒருமுறை முற்றத் துலாவிய வேளையில்
களஞ்சியக் கூடம் காலிடும் வேளையில்
புலர்அதி காலைப் பொழுதுஅன் றொருநாள்
வளர்புலர் போதின் வைகறை வேளை
நுண்புகை கிளம்பி நுலாய் எழுந்தது
புகைதடித் தெழுந்தது புகாராய் வந்தது
சீர்த்திகொள் பாவையின் திருஇல் இருந்து
வளரும் வனிதையின் எழிற்கா விருந்து;   440
அரைத்துக் கொண்டு அவளே யிருந்தனள்
திரிகையின் பிடியில் செயற்பட் டிருந்தாள்;
திரிகையின் கைப்பிடி குயிலென ஒலித்தது
காட்டு வாத்தெனக் கைத்தண் டொலித்தது
திரிகையின் சக்கரம் குருவிபோன் றிசைத்தது
திரிகை அசைந்தது திகழ்முத் துப்போல்.

மீண்டும் ஒருமுறை விரைந்துசெல் வேளையில்
வயல்எல் லையிலடி வைத்திடு வேளையில்:
பசும்புல் தரையிலே பாவையும் இருந்தனள்
மஞ்சள்புல் தரையில் வழிநகர்ந் தேகினள்  450
கலயம் நிறைசெஞ் சாயம் காய்ச்சினள்
மஞ்சள்சா யத்தை வடித்தாள் கெண்டியில்.

மூன்றாம் முறையில் முனைந்துசெல் வேளை
பாவைபல் கணிக்கீழ் படர்ந்துசெல் வேளை
நங்கையின் நெசவு நன்றாய்க் கேட்டது;
தறியின் அச்சவள் தளிர்க்கைமோ திற்று;
சிறிய**நூ னாழி வழுவிச் சென்றது
குன்றதன் குழியில் துன்று**கீ ரியைப்போல்
தறியச் சுப்பல் செறிந்தொலி யெழுப்பின
மரத்தில் இருக்கும் மரங்கொத் தியைப்போல்   460
பாவோ(ட்)டு **சட்டம் படுவிசை சுழன்றது
மரத்துக் கிளையின் மரவணி லதுபோல்."

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அதுதான் அதுதான் அழகென் பெண்ணே!
உனக்கெப் போதும் உரைப்பேன் அல்லவா,
கூவிடேல் தேவ தாருக ளிடையென,
பள்ளத் தாக்கிலே பாடா தேயென,
கழுத்தின் வளைவைக் காட்டா தேயென,
கரங்களின் வெண்மையைக் காட்டா தேயென,   470
இளமை மார்பதன் எழுச்சியை என்று,
ஏனைய உறுப்பின் எழிலினை என்று!

இலையுதிர் காலம் முழுவதும் சொன்னேன்
பாடினேன் இந்தக் கோடைஎக் காலமும்
விரைந்து செல்லும் வசந்தத் தியம்பினேன்
அடுத்த விதைப்புப் பருவத் திசைத்தேன்:
இரகசிய மானதோர் இல்லம் கட்டுவோம்
இரகசியச் சாளரம் சிறிதாய் வைப்போம்
நேரிழை யார்துணி நெய்வதற் காக
இழைநான் **கூடுநூல் இரைச்சலி னோடு,   480
செவிகொடார் பின்லாந்(து) திகழ்மண வாளர்
பின்லாந்(து) மணவ(஡)ளர், பெருநாட்(டு) வரன்மார்."

பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
**ஒருபட்சக் குழவி உரைத்ததிவ் வாறு:
"மாபரி ஒன்றை மறைப்பது சுலபம்
முரட்டு மயிர்ப்பரி மறைப்பது எளிது
மங்கை ஒருத்தியை மறைப்பது சிரமம்
உயர்நெடுங் குழலியை ஒளிப்பது சிரமம்;
கல்லினால் கோட்டைநீ கட்டிய போதிலும்
உயர்ந்து கிளர்ந்த ஒலிகடல் நடுவில்    490
மகளிரைத் தடுத்து வைத்தற் காங்கே
நின்கோ ழிகளை நேர்வளர்த் தெடுக்க
மகளிரை அங்கே மறைத்தலு மரிது
அங்கே வளர்தலும் அரிதுகன் னியர்கள்
மாப்பி(ள்)ளை கைகளில் மாட்டப் படாமல்
நன்மண வாளர், நாட்டு வரன்மார்,
உயர்ந்த தொப்பிகள் அணிந்திடு மனிதர்
உருக்குக் குளம்பு உயர்பரி யுடையோர்."

முதிய வைனா மொயினன் அவனே
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்   500
வீடு நோக்கி விரைந்திடும் வேளை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நான்அபாக் கியவான் நவில்துர்க் கதியினன்
ஏனெனில் எனக்கு இதுதெரிந் திலது
திருமணம் இளமையில் செய்து களிக்க
வாழ்கா லத்தில் வழித்துணை தேட!
**தன்கரு மம்மெலாம் தனியே வருந்துவான்
இளமையில் திருமணம் இயைந்தே செய்பவன்
பிள்ளைப் பருவம் பிள்ளைப் பெறுபவன்
சிறுபரா யத்தில் பெறுபவன் குடும்பம்."   510

அப்போ(து) வைனா மொயினன் தடுத்தான்
அமைதிநீர் மனிதன் அவன்தடுத் துரைத்தான்
வயோதிபன் இளமை மங்கையை நாடலை
அழகிய பெண்ணை அடைய முயல்வதை
போட்டியில் சேர்ந்து நீந்திப் போவதை
போட்டிக் காகப் புனலில் விரைவதை
இளம்பெண் ஒருத்திக்கு இடுவதைப் போட்டி
இளம்பரு வத்தில் இருக்கையில் அடுத்தவன்.



பாடல் 20 - விவாக விருந்துக்குப் பெரிய எருது கொல்லப்படுதல்  *




அடிகள் 1 - 118 : திருமணக் கொண்டாட்டத்திற்கு மிகப் பெரிய எருது ஒன்று கொல்லப்படுதல்.

அடிகள் 119 - 516 : 'பீர்' என்னும் பானம் வடித்து உணவுகள் தயாரித்துத் திருமணக் கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெறுதல்.

அடிகள் 517 - 614 : நாயகர்களைத் திருமணத்திற்கு அழைக்கத் தூதுவர் அனுப்பப்படுதல்; ஆனால் லெம்மின்கைனன் மட்டும் அழைக்கப் படவில்லை.




என்ன பாடலை இப்போ(து) பாடுவோம்?
எந்தக் கதைகளை இப்போ(து) கூறுவோம்?
பாடுவோம் நாங்கள் பாடலை இவ்விதம்
இயம்புவோம் நாங்கள் இந்தக் கதைகளை:
வியன்வட பால்நில விழாக்களைப் பற்றியும்
தெய்வீகப் பானமே தேர்ந்து(ண்)ணல் பற்றியும்.

கடிமண ஒழுங்குகள் கனநாள் நடந்தன
ஆயத்த மாயின அனைத்துப் பொருட்களும்
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
சரியோலாப் பகுதியின் தகுவாழ் விடங்களில்.   10

அங்கே கொணர்ந்த அவைஎவை எவைகள்
வந்து சேர்ந்திட்ட வகைப்பொருள் எவைஎவை
வடபால் நிலத்துநீள் மணவிழா வுக்கு
குடித்து மகிழ்பெருங் குழுவத னுக்கு
உறுநாட்டு மக்களுக் குபசாரம் செய்ய
உயர்பெருங் குழுவுக் குணவு படைக்க.

*கரேலியா இடத்திலோர் காளை வளர்ந்தது
நின்றது கொழுத்துப் பின்லாந் தெருது
அதுவும் பெரியதோ சிறியதோ அல்ல
இளங்கன்று தானது இனிதாய் வளர்ந்தது;   20
*'ஹமே'யெனு மிடத்தில் அதன்வால் சுழன்றது
*'கெமி'யெனு மாற்றில் அதன்தலை அசைந்தது
அதன்கொம்பு நீளம் அறுநூ றடிகள்
தொ(ள்)ளாயிரம் அடிகளாம் தொடர்வாய்ப் புட்டு;
வாரமொன் றெடுக்கும் வலம்வரக் கீரி
நுவல்எரு தொருபுற நுகக்கட் டதன்மேல்;
**தூக்கணத் துக்கொரு நாட்பொழு தெடுக்கும்
பறந்து முடித்திடப் படிகொம் பிடையே
விரைந்து பபறந்து விறல்முனை யடையும்
இடையில் தங்கி எடுக்கா தோய்வு;   30
திங்களொன் றோடித் திரிந்ததோர் **கொடையணில்
கழுத்தி லிருந்துவால் கரைமுனை நோக்கி
அதுவால் முனையை அடையவே யில்லை
அடுத்த மாதமும் அடையவே யில்லை.

கட்டுக் கடங்காக் கன்றது இளையது
பின்லாந்து நாட்டின் பெரியதோர் காளை
கரேலியா விருந்து கொணரப் பட்டது
வடபால் நிலத்து வயல்களின் பக்கம்;
கொம்புகள் பக்கம் நின்றொரு நூறுபேர்
வாய்ப்புட் டுப்புறம் மற்றா யிரம்பேர்    40
அந்தக் காளையை அடுத்துப் பிடித்தனர்
வடநாட்டு கொண்டு வந்தபோ தினிலே.

வழியிலே நடந்து வந்தது எருது
நேர்சரி யோலா நீரிணை வாயிலில்
சேற்று நிலங்களில் செறிபுல் மேய்ந்தது
முதுகுமேற் புறமோ முகிலில் தோய்ந்தது;
அடித்ததை வீழ்த்த அங்கெவ ரும்மிலர்
நாட்டின் குரூரம் வீழ்த்துவோ ரங்கிலர்
வடக்கு மாந்தர் வரிசைத் தரத்தில்
உயர்ந்த பெரிய உறவின ரிடையே   50
எழுச்சிகொண் டுயரும் இளைஞரி னிடையே
அல்லது முதியோர் அவரிலும் இல்லை.

வயோதிபன் வெளிநாட் டொருவன் வந்தான்
*'விரோகன் னாஸ்'என்னும் கரேலியன் அவனே
இந்த சொற்களில் இயம்பினன் அவனே:
"பொறுப்பாய், ஏழை எருதே பொறுப்பாய்!
இதோநான் வருகிறேன் இகல்தண் டத்தொடே
தண்டா யுதத்தால் சார்ந்துனை அறைகிறேன்
அபாக்கியப் பிராணியே அடிப்பேன் மண்டையில்
உன்னால் முடிந்திடா தின்னொரு கோடையில்   60
முடியா துனது மூக்குவாய் திருப்ப
வாய்ப்புட்(டுத்) திருப்பிப் பார்க்கவொண் ணாது
இந்த வயல்களின் எல்லை வெளிகளில்
நேர்சரி யோலா நீரிணை வாயிலில்."

முதியவன் சென்றான் முன்விலங் கறைய
விரோக(ன்)னாஸ் அதைத்தொட விரைந்தே சென்றான்
போற்றுதற் குரியோன் போனான் பிடிக்க:
அங்கே எருது அசைத்தது தலையை
கறுத்த விழிகளைச் சுழற்றிப் பார்த்தது;
முதியோன் தாவித் தேவதா ரேறினான்   70
விரோகன்னாஸ் பாய்ந்தான் விரியும் புதருள்
போற்றுதற் குரியோன் புகுந்தான் செடிப்புதர்.

எருதினை அடிக்க ஒருவனைத் தேடினர்
ஒருவனைப் பெரிய எருதினை வீழ்த்திட
அழகிய கரேலியா அயற்புறத் திருந்து
பெரியதோட் டத்தில் பின்லாந் திருந்து
அமைதி ரஷ்யா அகல்நாட் டிருந்து
விறல்நிறை சுவீடன் வியன்நாட் டிருந்து
லாப்புவின் அகன்ற இரும்வெளி யிருந்து
மிகுவலித் *துர்யா வினிலுமே யிருந்து   80
துவோனலா நிலத்திலும் ஒருவனைத் தேடினர்
மரண உலகின் மண்ணின் அடியிலும்
தேடினர் ஆயினும் சேர்ந்திலர் எவரும்
நாடினர் ஆயினும் நண்ணிலர் எவரும்.

எருதினை அடிக்க ஒருவனைத் தேடினர்
அறைந்து வீழ்த்திட ஆளொன்று தேடினர்
தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில்
பரந்து விரிந்த படரலை களின்மேல்.

கறுத்த மனிதன் கடலிடை எழுந்தான்
வீரன் ஒருவன் விளங்கினான் அலையில்   90
சரியாய்த் தெளிந்த தண்ணீ ரிருந்து
விரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து);
உயர்ந்தோர் தம்மில் ஒருவனு மன்றவன்
சிறியவர் தம்மையும் சேர்ந்தவ னன்றவன்
ஒருகல யக்கீழ் உறங்கத் தக்கவன்
நேர்ஒரு முறம்கீழ் நிற்கத் தக்கவன்.

முதியோன் இரும்பு(க்)கை முட்டியை யுடையவன்
இரும்புரோ மமுளோன் எதிர்பார் வைக்கு
தொல்பா றையிலாம் தொப்பி தலையிலே
கற்களில் செய்த காலணி கால்களில்    100
கனகத் தியைந்த கத்தி கரத்திலே
கத்தியில் இருந்தது கைப்பிடி செப்பினால்.

எருதை அடிக்க ஒருவன் கிடைத்தனன்
கொன்று வீழ்த்தக் கண்டனர் ஒருவனை
பின்லாந் தெருதைப் பிடித்தடிப் பவனை
நாட்டின் குரூரம் வீழ்த்துவோன் தன்னை.

தன்னுடை இரையைத் தான்கண் டதுமே
தாவி விரைந்து தாக்கினான் கழுத்தில்
காளையை முழங்கால் களிற்பணித் திட்டான்
விலாவைப் பற்றி வீழ்த்தினான் நிலத்தில்.    110

அதிக இரையை அவன்பெற் றானா?
அதிக இரையை அவன்பெற வில்லை:
பேழைகள் நூறு பெய்த இறைச்சியும்
அறுநூறு அடியில் அமை**பதன் இறைச்சியும்
ஏழு தோணிகள் எலாம்நிறை இரத்தமும்
ஆறு சாடிகள் அவைநிறை கொழுப்பும்
அந்த வடநிலத் தமைவிழா வுக்கு
அச்சரி யோலா அதன்விருந் துக்கு.

கட்டப் பட்டதோர் கவின்இல் வடக்கே
ஒருபெரும் வீடு உயர்பெரும் கூடம்    120
ஐம்பத்து நாலடி அதன்நீள் பக்கம்
நாற்பத் திரண்டடி நனிஉயர் அகலம்
கூரையில் நின்றொரு சேவல் கூவினால்
அதன்குரல் தரையில் அறக்கேட் காது,
கொல்லையில் நின்றொரு குட்டிநாய் குரைத்தால்
அதன்கத வம்வரை அதுகேட் காது.

அந்த வடநிலத் தலைவியும் அங்கே
வந்தாள் நடந்து வளர்தரை கடந்து
வந்து சேர்ந்ததும் மத்தித் தரைக்கு
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்:   130
"'பீரை' எப்படிப் பெறலா மப்பா
மதுவைத் தரமாய் வடிப்ப தெப்படி
திருமண விழாவில் உபசா ரம்செய
விவாக வீட்டு விருந்தில் வழங்க?
மதுவினை வடிக்கும் வகைநான் அறியேன்
வியன்'பீர்' தோன்றிய விதமும் அறியேன்."

அங்கே இருந்தான் அடுப்பில் கிழவன்
இயம்பினன் அடுப்பினில் இருந்த கிழவனும்:
" 'பீர்'தான் பிறந்தது பார்லியி லிருந்து
**போதைச் செடியால் பொலிந்த நற்பானம்   140
ஆயினும் நீரிலா ததுபிறந் திலது
எரியும் நெருப்பு இலாமலு மல்ல."

**ஆரவா ரத்தின் அருமகன் அச்செடி
நன்னிலம் சிறிதாய் நாட்டப் பட்டது
உறுமராப் போல்நிலத் துழவும் பட்டது
**காஞ்சொறிச் செடியெனக் களைந்தெறி பட்டது
கலேவாப் பகுதியிற் காண்கிணற் றருகினில்
ஒஸ்மோ வயலின் உளகரை யோரம்;
ஓரிளம் நாற்று உடனங் கெழுந்தது
முளையொன்(று) பசுமையாய் முளைத்து வந்தது   150
ஒருசிறு மரத்தில் உயரப் படர்ந்தது
உச்சியை நோக்கி உயர்ந்தே சென்றது.

பார்லியை அதிர்ஷ்டத் தேவதை விதைத்தது
ஒஸ்மோப் புதிய உயர்வயல் திடலில்;
அழகாய் பார்லி அங்கே வளர்ந்தது
செழித்து உயர்ந்து சீராய் வந்தது
ஒஸ்மோப் புதிய உயர்வயல் திடலில்
கலேவா மைந்தனின் காட்டு வெளியினில்.

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
அழைத்தது மரத்திருந் தப்போ தைச்செடி   160
திடல்வயல் பார்லி செப்பிட லானது
கேட்டது கலேவாக் கிணற்றிநீ ரதுவும்:
'கூடுவ தெப்போ(து) குவிந்தொன் றாய்நாம்
எப்போ தொருவரை ஒருவர்சந் திப்பது
தனித்த வாழ்வு தருவது துயரம்
இருவர் மூவர் இணைவது இனிமை.'

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
பார்லித் தானியம் பைங்கரத் தெடுத்தாள்
ஆறு பார்லி அருமணி எடுத்தாள்    170
போதைச் செடிப்புக் குஞ்சமே ஏழு
எடுத்தாள் நீரை எட்டு அகப்பைகள்
பானையைப் பின்னர் தீயினில் வைத்தாள்
கொதிக்கச் செய்தாள் நெருப்பில் கலவை
பார்லி மணிகளில் 'பீரை'க் காய்ச்சினாள்
கரையும் கோடை காலத்து நாட்களில்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்
மரத்தில் குடைந்த வன்புதுச் சாடியில்
மிலாறு மரத்தின் வியனார் தொட்டியுள்   180

எடுத்தாள் 'பீரை' இதமாய் வடித்து
பெற முடிந்திலது உறுபுளித் தன்மை
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
வேறு எதனைத் தேடிப் பார்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப் 'பீர்'ப்பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '

கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்   190
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
கண்டனள் **சிராய்த்த துண்டினைத் தரையில்
தரையிலே யிருந்து சிராயை எடுத்தனள்.

அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்   200
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '

தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் விரல்களின் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
அங்கே வெள்ளை அணிலொன் றுதித்தது.   210

தன்மக னுக்குச் சாற்றினாள் வழிமுறை
அவ்வணி லுக்கு அறிவுரை புகன்றாள்:
'புல்மேட்(டுப்) பொன்னே, புதியஎன் அணிலே!
புல்மேட்டு மலரே, புமியின் எழிலே!
நான்புகல் இடத்தே நனிவிரைந் தேகு!
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்!
களிப்பு நிறைந்த கானகம் அதற்கு
தப்பியோ வாழும் முக்கிய வனத்தே
ஒருசிறு மரத்தில் ஓடிமே லேறு
தளைத்துச் சடைத்த தனிமர முடிக்கு    220
அதனால் கழுகு அதுபிடிக் காது
காற்றின் பறவை கண்டடிக் காது
கொணர்வாய் தேவ தாருவின் **கூம்பை
கொணர்வாய் தாருவின் கூம்பின் **செதிலை
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் உயர்'பீர்'ப் போடு!'

அணிலுக்(கு) ஓட அழகாய்த் தெரிந்தது
விரையத் தெரிந்தது **சடைவா லதற்கு
நீடிய பாதையை ஓடியே கடக்க
செறிதொலைப் பயணம் செய்தே முடிக்க   230
ஒருகா முடித்தது மறுகா **கடந்தது
கடந்தது குறுக்கே காவொரு மூன்றும்
களிப்பு நிறைந்த கானகம் சென்றது
தப்பியோ வாழும் முக்கிய வனத்தே.

கண்டது மூன்று கானகத் தருவை
சிறிய நான்கு தேவதா ருக்களை
தளர்சேற்று நின்ற தாரு(வில்)ஏ றிற்று
புற்றிடர் மரமேற் போயிட லானது
பெருங்கழு கதனைப் பிடிக்கவு மில்லை
அடர்காற் பறவை அடிக்கவும் இல்லை.   240

குலதேவ தாருவின் கூம்பைப் பறித்தது
தாரு மரத்தில் தழைகளை ஒடித்தது
நகங்களில் அவற்றை நன்கொளித் திட்டது
பாதத்தைச் சுற்றிப் பத்திரம் செய்தது
அரிவையின் கைகளில் அவற்றினை வைத்தது
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்.

பெண்ணவள் அவற்றை 'பீரி'ல் போட்டனள்
பகர்ஒஸ் மோமகள் பானத் திட்டனள்
ஆயினும் புளித்தெழ வில்லை யப்'பீர்'
இளமைப் பானம் எழவிலை நுரைத்து.    250

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
சிந்தனை பின்னர் செய்தனள் தொடர்ந்து:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப்'பீர்'ப் பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '

கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை    260
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
கண்டனள் **சீவற் துண்டினைத் தரையில்
தரையிலே யிருந்து சீவலை எடுத்தனள்.

அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்   270
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '

தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
கிளர்பொன் மார்புக் கீரியொன் றுதித்தது.

வந்தகீ ரிக்கு வழிமுறை சொன்னாள்
அனாதைப் பிள்ளைக் கறிவுரை சொன்னாள்:  280
'எனதுநற் கீரியே என்னிளம் பறவையை
அழகிய கம்பளி அருமைத் தோலே
நான்புகல் இடத்து நனிவிரைந் தேகு
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்
பழுப்புக் கரடியின் பாறைக் குகைக்கு
காட்டுக் கரடியின் தோட்ட வெளிக்கு
கரடிகள் பொருதும் காட்டகத் தாங்கே
கொடிய கரடிகள் கூடிவா ழிடத்தே;
**புரையைநின் காலில் போய்நீ எடுத்து
கால்களில் புளித்த மாவுறை சேர்த்து    290
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் ஒளிர்தோள் சேர்ப்பாய்.'

கீரிக்(கு) இப்போ(து) ஓடத் தெரிந்தது
பொன் மார்புக்குப் போகத் தெரிந்தது
விரைந்து கடந்தது விரிநீள் பாதை
செய்து முடித்தது சேர்தொலைப் பயணம்
ஒருநதி நீந்தி மறுநதி கடந்தது
கடந்தது குறுக்கே கவின்மூன் றாம்நதி
பழுப்புக் கரடியின் பாறைக் குகைக்கு
கரடிகள் இருக்கும் கற்குகை யதற்கு    300
கரடிகள் பொருதும் காட்டகத் தாங்கே
கொடிய கரடிகள் கூடிவா ழிடத்தே
இரும்பினா லான இருங்குன் றதற்கு
உருக்கினா லான உயர்மலை யதற்கு.

கரடியின் வாயில் கனநுரை வழிந்தது
கொடிய கரடிவாய்க் கனபுரை இருந்தது
கைகளில் சற்றே காண்நுரை யெடுத்தது
பாதத் **திலும்பின் படிபுரை சேர்த்தது
அரிவையின் கைகளில் அவற்றினை வைத்தது
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்.   310

ஒஸ்மோ மகளும் உடன்தன் 'பீரி'ல்
வடித்தபா னத்தில் வந்ததை யிட்டனள்
ஆயினும் புளித்தெழ வில்யை யப்'பீரே'
மனிதனின் பானம் வரவி(ல்)லை நுரைத்தே.

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
சிந்தனை பின்னர் செய்தனள் தொடர்ந்து:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப்'பீர்'ப் பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '    320

கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை 
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
பயற்றம் **நாற்றைப் படிதரைக் கண்டனள்
நாற்றை எடுத்தனள் நற்றரை யிருந்தே.   330

அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்  
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '

தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்    340
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
அதிலே பிறந்ததோர் அழகிய வண்டு.

தன்பற வைக்குச் சாற்றினள் வழிமுறை
தன்வண் டுக்குச் சாற்றினள் அறிவுரை:
'வண்டே, வண்டே, வான்விரை பறவையே!
புதுப்பசும் புல்நிலப் பூக்களின் அரசே!
நான்புகல் இடத்தே நனிவிரைந் தேகுக!
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்!
இகல்விரி கடலில் இருக்கும் தீவகம்
கிளர்கடல் நடுவே கிடக்கும் பாறை    350
ஒருபெண் ஆங்கே உறக்கத் திருப்பாள்
செப்பிடைப் பட்டி தெரியும் கழன்று
தேன்புல் அவளது செறிமருங் கிருக்கும்
திகழ்உடை ஓரம் தேன்புல் இருக்கும்
கொஞ்சத் தேனைக் கொணர்வாய் சிறகில்
ஆடையில் தேனை அள்ளி வருவாய்
ஒளிரும் புல்லின் உயர்நுனி யிருந்து
இனிய பொன்மலர் இதழினி லிருந்து
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் ஒளிர்தோள் சேர்ப்பாய்.'   360

அந்த வண்டு அதிவிரை பறவை
சென்றது பறந்து சென்றது விரைந்து
விரைந்து கடந்தது மிகுசிறு தூரம்
குறுகியே வந்தது கொண்டநீள் தூரம்
குறுக்கே ஒருகடல் குறுக்கே மறுகடல்
கடந்தது மூன்றாம் கடலநயும் குறுக்கே
எறிகடற் பரப்பில் இருந்ததீ வுக்கு
கிளர்கடல் நடுவே கிடந்தபா றைக்கு
நற்துயில் புரிந்த நாரியைக் கண்டது
ஈய மார்பினள் வாடிக் கிடந்தனள்    370
புனைபெய ரில்லா புல்மே டொன்றில்
வளர்நறை நிறைந்த வயலின் அருகில்
அம்பொற் புற்கள் அவளது இடையில்
வெள்ளிப் புற்கள் மிளிர்ந்தன பட்டியில்.

சிறகை வண்டு தேனில் தோய்த்தது
உருகும் நறையில் சிறகைத் தோய்த்தது
ஒளிரும் புல்நுனி ஒன்றின் மேலே
பைம்பொன் மலரின் படர்முனை ஒன்றில்
மங்கையின் கைகளில் வைத்தது கொணர்ந்து
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்.   380

ஒஸ்மோ வின்மகள் உடன்தன் 'பீரி'ல்
வடித்தபா னத்தில் மற்றதைப் போட்டனள்
புளித்து வந்தது புதுப்பீர் இப்போ(து)
நுரைத்து எழுந்தது நுவல்இளம் பானம்
குணப்புது மரத்தில் குடைந்த சாடியில்
தேவதா ருமரத் திகழ்நற் றொட்டியில்
பொங்கி எழுந்தது புனைகைப் பிடிவரை
நுரைத்து நின்றது நுரைவாய் விளிம்பில்
உயர்தரை வழிந்து ஓடிடப் பார்த்தது
படர்நிலம் சிந்திப் பாய்ந்திடப் பார்த்தது.    390

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
குடிக்க மனிதர்கள் கூட்டமாய் வந்தனர்
பெற்றனன் முதலிடம் பேர்லெ(ம்)மின் கைனனே
குடித்தனன் அஹ்தி, கொள்தூர நெஞ்சினன்,
குடித்தனன் செந்நிறக் கன்னத்துப் போக்கிரி
வளர்ஒஸ் மோமகள் வடித்தவப் 'பீரை'யே
கலேவா வின்மகள் காய்ச்சிய மதுவை.

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,    400
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
'ஓ,அபாக் கியள்எனக் குரியவிந் நாட்கள்
தீயஇப் 'பீர்'நான் தேர்ந்தே வடிக்கையில்
நான்செய்த போதுவிந் நனிகெடும் பானம்
தொட்டியின் வாய்வரை தொடர்துயர்ந் தெழும்பி
நுரைத்தே வழிந்து நிலத்திடைப் போனதே! '

பாடிற்று மரத்திலோர் பவளச்செங் குருவி
கூரையின் மரத்திலே கூறிற்றோர் குருவி:
'தீயதன் மையில்அது திகழ்'பீ ர'ல்ல
அதுநல் வகையாம் அருமந்த பானம்    410
பீப்பாவி லூற்றியே பிறிதுவைத் திடலாம்
களஞ்சிய அறைதம்மில் கனமாய்வைத் திடலாம்
சிந்துரக் கலயம் சேர்த்துவைத் திடலாம்
வைக்கலாம் செப்பான வளையச்சா டிக்குள்.'

'பீர்'தான் பிறப்புப் பெற்றதிவ் விதமாம்
கலேவாவின் வடிப்பின் கதையினா ரம்பமாம்
அவ்விதம் நல்லதோர் அரும்பெயர் பெற்றது
புகழொடு மதிப்பும் பொருந்திடப் பெற்றது
நல்லதாம் வகையென நற்பெயர் பெற்றது
உயர்ந்தநல் மனிதரின் உயர்பான மானது   420
நாரியர் களைமது நகைத்திட வைத்தது
நல்மன நிலையினை நல்கிய தாடவர்க்(கு)
உயர்ந்தநல் மானிடர்க் குவகையைத் தந்தது
மயங்கியே பிதற்றினர் மடையர்கள் போதையில்."

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
'பீரி'ன் பிறப்பைப் பெரிதும் கேட்டதும்
தூநீர் பெரிய தொட்டியில் நிறைத்து
வைத்ததன் அருகே மரப்புதுச் சாடி
போதிய பார்லியைப் போட்டதன் உள்ளே
சேர்த்துப் போதைச் செடித்தழை நிறைய   430
மதுப்'பீர்' காய்ச்சி வடிக்கத் தொடங்கினள்
கனபல நீரைக் கலக்கத் தொடங்கினள்
கவின்புது மரத்துக் கலயம் ஒன்றிலே
மிலாறு மரத்தொரு விரிசா டியிலே.

கற்கள்பல் திங்கள் கடுஞ்சூ டேற்றி
கோடை முழுவதும் கொள்நீர் காய்ச்சி
காடு காடாய்க் கனமர மெரித்து
கிணறு கிணறாய் கிளர்நீர் கொணர்ந்தாள்;
மரங்கள் குறைந்து வந்தன காட்டில்
அருவியில் நீரும் அருகியே வந்தது    440
வனப்'பீர்' வடித்து வந்தவே ளையிலே
மயக்கப் பானம் வடித்தவே ளையிலே
வடநிலப் பெரிய வருவிருந் துக்கு
மாந்தி மகிழநல் மானிடர் களுக்கு.

தீவு முழுவதும் செறிபுகை படிந்தது
மேட்டு நிலத்தில் செந்தீ எரிந்தது
தடித்த புகையும் சார்ந்துயர்ந் தெழுந்தது
நீராவி பரந்து நெடுங்கால் கலந்தது
கனன்று எரிந்த கனலினி லிருந்து
பெரிதாய் எரிந்த பெருநெருப் பிருந்து    450
வடநிலத் தையது மறைத்தது பாதி
இருளைக் கரேலியா முழுதும் நிறைத்தது.

முற்றும் பார்த்தனர் முழுமாந் தர்களும்
அறிய விரும்பினர் அதையெலாம் பார்த்தோர்:
"இப்புகை வருகிற தெங்கே யிருந்து
காற்றில்நீ ராவி கலந்தது எவ்விதம்?
இகல்போர்ப் புகையெனில் இதுமிகச் சிறிது
இடையரின் தீயெனில் இதுமிகப் பெரிது."

லெம்மின் கைனனின் அன்னையிப் போது
காலைப் பொழுததி காலைவே ளையிலே   460
புனல்பெற வேண்டிப் போனாள் அருவி
கண்டனள் எங்கணும் கனத்த புகையினை
வடக்கு நிலத்தின் வான்மீ தினிலே
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"போரினால் மூண்டு எழுந்த புகைஅது
அமரினால் மூண்டு அனலும் நெருப்பது."

அவனே அஹ்தி அத்தீ **வருமகன்
தோன்றுமவ் வழகுறு தூர நெஞ்சினன்
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்:   470
"நானே சென்று நனிநேர் பார்க்கலாம்
பக்கத்து நின்று பார்த்து அறியலாம்
எங்கிருந் தென்று இப்புகை வருவது
காற்றில்நீ ராவி கலந்ததெவ் விதமென
போரினால் மூண்ட புகையா என்பதை
அமரினால் எரியும் அனலா என்பதை."

தூர நெஞ்சினன் நேரிலே போனான்
எழும்புகை பிறந்த இடத்தினை அடைந்தான்
போரினால் மூண்ட புகையே யல்ல
அமரினால் எரியும் அனலுமே யல்ல    480
இனியபீர் வடிக்கும் இடத்தின் நெருப்பு
போதைப் பானம் காய்ச்சும் தீயது
நிமிர்சரி யொலாவின் நீரிணை வாயிலில்
மேட்டு நிலத்தின் மிகுவளை முனையில்.

தூர நெஞ்சினன் தொடர்தங்(கு) பார்த்தான்
ஒருவிழி சுழன்றது உயர்அவன் தலையில்
அவ்விழி சுழல அடுத்தது சாய்ந்தது
வாயும் சற்றே வளைந்தே நெளிந்தது
பார்த்தவன் பின்னர் பகர்ந்திட லானான்
நீரிணைக் கப்பால் நின்றே உசாவினன்:   490
"ஓ,என் அன்புக் குரியநல் மாமி!
வடபால் நிலத்தின் மாண்புறு தலைவி!
சிறந்த 'பீரை'ச் சீராய் வடித்தெடு!
போதைப் பானம் நேராய்க் காய்ச்சு!
மாபெரும் கூட்டம் மகிழக் குடித்து!
வாகாய் லெம்மின் கைனனும் மாந்திட!
திகழ்தன் சொந்தத் திருமண நாளில்,
வளருநின் இளமை மகளவ ளுடனே!"

தயாராய் வந்தது தக்க'பீர்'ப் பானம்
வந்தது முடிவு(க்கு) மனிதரின் இரசம்   500
வடிந்தே வந்தது மகிழ்செம் 'பீரே'
வந்தது போதை மதுநன் றாக
திணிநிலத் தடியில் சேர்த்தே வைக்கலாம்
கல்லில் அமைந்த களஞ்சிய அறையில்
வைக்கலாம் மிலாறு மரத்துச் சாடியில்
வைக்கலாம் செப்பு வன்முளைப் பீப்பா(வில்).

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
வெந்த உணவை வெப்பமா யாக்கி
கெண்டிகள் அனைத்திலும் கிளர்**குமிழ் எழுப்பி
சட்டிகள் அனைத்தையும் **சலசலப் பாக்கினள்   510
பின்னர் சுட்டனள் பெரிய ரொட்டிகள்
தட்டி எடுத்தனள் தகுபணி யாரம்
உறும்நல் மனிதரை உபசா ரம்செய
உயர்பெரும் குழுவிற் குணவு அளிக்க
வடக்கில் நிகழும் மாபெரும் விருந்தில்
சரியொலாப் பகுதி சார்குடிப் போர்க்கு!

ரொட்டிகள் நன்றே சுட்டு முடிந்தன
தட்டி முடிந்தன தகுபணி யாரம்
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநேர ரம்சில கடந்தே முடிந்தது    520
சாடியி லே'பீர்' தனிக்கொதித் தெழுந்தது
களஞ்சிய அறையில் கதித்து நுரைத்தது:
"இப்போ(து) குடிப்பவன் இங்கே வரலாம்
வருதலும் கூடும் மதுச்சுவை மனிதன்
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பதிதி
பகருமென் சரியாம் பாடகன் வருவான்."

பாடகன் ஒருவனைத் தேடித் திரிந்தனர்
பொருத்தம தானதோர் புகழ்ப்பா டகனை
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பிசைஞனை
நவஅழ குடைய நல்லபா டகனை;    530
பாட வஞ்சிர மீனை யழைத்தனர்
கோலாச்சி நீனைப் போட்டிக் கழைத்தனர்
ஆயினும் வஞ்சிரம் அதுபா டாது
கோலாச் சிக்கது கூடி வராது
வஞ்சிர மீனின் வாயோ கோணல்
பகர்கோ லாச்சிமீன் பற்களில் நீக்கல்.

பாடகன் ஒருவனைத் தேடித் திரிந்தனர்
பொருத்தம தானதோர் புகழ்பா டகனை
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பிசைஞனை
நவஅழ குடைய நல்ல பாடகனை;    540
பாலகன் ஒருவனைப் பாட அழைத்தனர்
பாடல் போட்டியில் பையனை அழைத்தனர்;
ஆயினும் பாலகன் அவன்பா டுகிலான்
கூவா(து) எச்சில் வழியும் குழந்தை
குழந்தையின் நாக்கோ கொண்டது கீச்சிடல்
அடிநாக் கதுவோ அமைந்தது விறைப்பாய்.

பொங்கி யெழுந்தது பொருசெம் 'பீரே'
தனியிளம் பானம் சபிக்க வந்தது
தகுசிந் துரமரச் சாடியி லிருந்து
செப்பினால் அமைந்த தொட்டியி லிருந்து:   550
"ஒருபா டகனை உடன்கொண ராவிடில்
பண்புறு முகந்த பாடகன் ஒருவனை
குயிற்குரற் சிறப்புக் கொண்டபா டகனை
நவஎழில் நிறைந்த நல்ல பாடகனை
உதைத்துத் தள்ளுவேன் உள்ளநல் வளையம்
விரைந்தடி உடைத்து வெளியே வருவேன்."

அந்த வடநிலத் தலைவியப் போது
அழைப்பை வெளியே அகல விட்டனள்
அனுப்பினள் வெளியே அவள்தூ துவரை
இந்தச் சொற்களில் இயம்பினன் அவளே:   560
"ஏய்,என் சிறிய இளமைப் பெண்களே!
அகலா நித்திய அடிமை யாளரே!
ஒன்றாய் அழைப்பீர் உடனெலாச் சனத்தையும்
குடிக்கும் மாந்தரைக் கூப்பிட்டு வாரீர்
இழிஞரை அழைப்பீர் எளியரை அழைப்பீர்
குருடரி னோடு குணக்கே டரையும்
வண்டி முடவர்கள் நொண்டிகள் தமையும்;
குருடரைத் தோணி கொண்டே(ற்றி) வருவீர்
நொண்டியைப் புரவி கொண்டே(ற்றி) வருவீர்
வண்டியில் இழுத்து வருவீர் முடவரை.    570

வடநிலத் தனைத்து மக்களை அழைப்பீர்
கலேவாச் சந்ததி கள்ளெலாம் வரட்டும்
முதிய வைனா மொயினனை அழைப்பீர்
சிறந்தபா டகனாய்த் திகழ்ந்தே யிருக்க,
ஆயினும் வேண்டாம் தூர நெஞ்சினன்
தீயஅஹ் தியெனும் தீவினன் வேண்டாம்."

அப்போ(து) சிறிய அந்தப் பெண்ணவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தூரநெஞ் சினற்குத் தொட(ர்)அழைப் பேனி(ல்)லை
அஹ்தி என்னும் அத்தீ வினற்கு?"    580

அந்த வடநிலத் தலைவியப் போது
மறுமொழி யாக வழங்கினள் ஒருசொல்:
"அத்து(஡)ர நெஞ்சற் கழைப்பிலை இதனால்
குறும்பன் லெம்மின் கைனன் தனக்கு
கொள்ளுமெவ் வழியிலும் குழப்பம் செய்பவன்
சண்டை என்றால் சடுதிமுன் நிற்பவன்
திருமண வீட்டில் செய்வோன் அவமதிப்(பு)
பெரிய குற்றம் புரிபவன் விழாவில்
கற்புமா தர்க்குக் களங்கம் விளைப்பவன்
அவர்கள் புனிதமாம் ஆடையி லிருப்பினும்."   590

அப்போ(து) அந்த அருஞ்சிறு பெண்ணவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"எவ்விதம் அறிவது இகல்து(஡)ர நெஞ்சனை
அவனை மட்டும் அழையா திருக்க
அஹ்தியின் இல்லம் அறியேன் நானே
தூர நெஞ்சினன் தோட்டமு மறியேன்."

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"தூர நெஞ்சினனைத் தீரநன் கறியலாம்
அஹ்தி என்னும் அகல்தீ வின்மகன்    600
அஹ்தி என்பவன் அத்தீ வுறைபவன்
பொருநீர்க் கரையிலப் போக்கிரி உள்ளான்
படர்ந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
காண்தொலைக் குடாவதன் கைவளைப் பரப்பில்."

அந்தச் சிறிய அரிவையும் அங்கே
குற்றே வல்செ(ய்)யக் கூலிக்கு வந்தவள்
ஆறு வழிகளில் அழைப்பு விடுத்தனள்
எட்டு வழிகளில் ஏகினள் அழைக்க
வடநில அனைத்து மக்கள் தம்மையும்
கலேவாச் சந்ததிக் குலமக் களையும்    610
குடில்வாழ் ஏழைக் குலநலிந் தோரையும்
இறுகிய ஆடை ஏவலர் தமையும்;
அஹ்தி என்னுமப் பையனைத் தவிர
அவனை மட்டுமே அழைக்கா திருந்தனள்.



பாடல் 21 - திருமணக் கொண்டாட்டம்  *




அடிகள் 1-226 : மணமகனையும் அவன் கூட்டத்தினரையும் வட நாட்டில்
வரவேற்றல்.

அடிகள் 227-252 : விருந்தாளிகளுக்கு நிறைய உணவும் பானமும்
கொடுத்து உபசரித்தல்.

அடிகள் 253-438 : வைனாமொயினன் அந்நாட்டு மக்களைப் பாடிப் புகழுதல்.




அந்த வடநிலத் தலைவியப் போது
சரியொ லாவின் முதுநல் மனைவி
வெளியிலே நின்றாள் மிகச்சிறு நேரம்
வீட்டு வேலையில் நாட்டமுற் றிருந்தாள்
சதுப்பு நிலத்தில் சாட்டையின் ஒலியும்
உறுகரை வண்டியின் ஓசையும் கேட்டது
செலுத்தினள் பார்வை திகழ்வட மேற்திசை
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினள்
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்:
"இங்கே எதற்காய் இவ்வள வாட்களும்    10
ஏழைஎன் னுடைய இகல்கடற் கரைகளில்
போருக்கு வந்த பொருபெரும் படைகளோ?"

வெளியே வந்தாள் விபரம் பார்த்திட
அண்மையில் சென்றாள் ஆராய்ந் தறிய
அதுபோர்க் கெழுந்த அதிபெரும் படைய(ல்)ல
விவாக வீட்டு விருந்தினர் கூட்டம்
மருமகன் அவர்களின் மத்தியில் இருப்பவர்
நாட்டு மக்களின் நடுவிலே உள்ளார்.
அவளே வடநிலத் தலைவியப் போது
சரியொ லாவின் முதுநல் மனைவி    20
தனது மருமகன் தான்வரல் உணர்ந்ததும்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"காற்றடிக் கிறதெனக் கடிதே நினைத்தேன்
காட்டிலோர் பகுதிக் கரைசரி கிறதென
கடலின் ஓரம் இரைகிற தோவென
கூழாங் கற்கள் குலைந்துருள் கிறதென;
வெளியே வந்தேன் விபரம் பார்த்திட
அண்மையில் சென்றேன் ஆராய்ந் தறிய
அங்கே காற்று அடிக்கவு மில்லை
காட்டிலோர் பகுதிக் கரைசரிந் திலது    30
கடலின் ஓரம் இரையவும் இல்லை
கூழாங் கற்கள் குலைந்துருண் டிலது:
மருமகன் குழுவினர் வந்தனர் அங்கே
இருநூறு மக்கள் இப்புறம் வந்தனர்.

அருமரு மகனைநான் அறிவது எங்ஙனம்
இம்மனுத் திரளில் என்மரு மகனை?
மருமகன் தனையே மக்களுள் அறியலாம்
சிறுபழச் செடிபோல் திகழ்மர மத்தியில்
சிறுசெடி மத்தியில் சிந்துர மரம்போல்
வானத்து மீன்களில் வண்ண நிலவுபோல்.   40

மருமகன் வருகிறார் வன்கரும் புரவியில்
இரைதேர் (ஓ)நாயில் இவர்வது போல
இலக்குதே **டண்டங் காக்கைமேல் வரல்போல்
வான்ஊர் **மாயக் கழுகுமேல் வரல்போல்;
ஆறு பொன்னிற அம்புள் ஆங்கே
இசைத்தன வண்டியின் ஏர்க்கால் மேலே,
ஏழு நீல இருங்குயில் போல்மணி
ஒலித்தன வண்டியின் உறுசட் டத்தே."

எழுந்தது சத்தம் எங்கும் பாதையில்
கிணற்று வழிமிசை ஒலித்தது ஏர்க்கால்   50
முன்றிலின் முன்னே வந்தார் மருமகன்
தோட்டம் சேர்த்தனர் தொடர்ந்துடன் வந்தோர்
மக்கள் மத்தியில் மருமகன் நின்றார்
நல்ல மக்களின் நடுவினில் நின்றார்
மக்கள் குழுமுன் வரிசையில் இல்லை
ஆயினும் பின்புறத் தப்புறத் தில்லை.

"வீரரே, இளைஞரே, வெளியே செல்வீர்!
உயரந்த மனிதர்காள், உறுகமுற் றத்தே!
நெஞ்சப் பட்டியை நேராய்க் கழற்ற
கடிவா ளத்தைப் பிடித்தே நிறுத்த    60
ஏர்க்கால் நுகத்தை இறக்கக் கீழே
மருமக னாரை வரஉள் அழைக்க!"

மருமகனின் குதிரை வந்தது ஓடி
அலங்கார வண்டி அதிகதி வந்தது
மாமனார் வீட்டின் வண்ணமுன் றில்முன்;
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஏய்,அடி மைகளே, ஏவுகூ லியரே!
கிராமத் தழகிய கிளர்தொழி லாளரே!
மருமக னாரின் மாபரி பிடிப்பீர்
நெற்றிச் சுட்டி நிமிர்பரி எடுப்பீர்    70
செப்பினால் இழைத்த திகழ்அணி யிருந்து
ஈயநெஞ் சத்து **இயைவார் இருந்து
தோலிலாம் நற்கடி வாளத் திருந்து
இளமை மரத்து ஏர்க்கா லிருந்து;
மருமகன் பரியை வழிநடத் துங்கள்
அதிமிகக் கவனமாய் அதைநடத் துங்கள்
பட்டிலாம் நற்கடி வாளம் பற்றி
தனிவெள் ளியிலாம் தலையணி தொட்டு
உருண்டு புரண்டிட உயர்மெது விடத்தே
சமதரை யுள்ள தகுசிறப் பிடத்தே    80
புதிதாய்ப் பனிமழை பொழிந்தநல் லிடத்தே
பால்போல் வெளுத்து படிவிளங் கிடத்தே!

மருமகன் பரிக்கு வளநீ ரூட்டுக
அண்மையில் இருக்கும் அருவியொன் றினிலே
உறைந்துபோ காது உறுநல் லருவியில்
நீர்நனி சொட்டுநல் நீரரு வியிலே
அழகிய தாருவின் அகல்வேர டியில்
தளிர்க்கும் தேவ தாருவின் அருகில்!
மருமகன் பரிக்கு மகிழ்ந்துண வூட்டுக
கொழும்பொன் னிழைத்த கூடையி லிருந்து   90
செப்பினால் செய்த பெட்டியி லிருந்து
கழுவிய பார்லியை, கனவெண் ரொட்டியை,
கோடைக் கோதுமை கொ(ண்)டுஅட்ட **உணவை,
கோடைத் **தானியக் கொழுநொருக் குணவை.

மருமகன் பரியை வழிநடத் துங்கள்
வளமிகு சிறந்த வைக்கோற் போரிடை
மிகவும் சிறந்து விளங்குமோ ரிடத்தே
தோட்டத் துள்ளே தொலைவிடத் துக்கு;
அருமரு மகன்பரி அங்கே கட்டுக
பொன்னினால் செய்த புதுவளை யத்தால்   100
இரும்பினால் செய்த எழில்வளை யத்தால்
வளைந்த மிலாறு மரத்தம் பத்தில்;
மருமகன் பரிக்கு வழங்குக இவ்விதம்
புதிதாய் ஒரு**படிப் **புல்லரி சிமணி
அடுத்தது மென்மையாய் அமைந்தநல் வைக்கோல்
மூன்றாவ தரிந்து முடித்தவைக் கோல்தீன்.

வாருவீர் பின்னர் மருகனின் பரியை
கடற்பரி எலும்பின் கவினார் சீப்பினால்
உரோமம் எதுவும் உதிரா திருக்க
நீண்ட உரோமம் நீங்கா திருக்க;    110
இவ்வாறு மருகனின் எழிற்பரி போர்ப்பீர்
வெள்ளி விளிம்பு விளங்குபோர் வையினால்
தங்கத் திழைத்த தனிப்பாய் அதனால்
செப்பினால் செய்த திகழ்துணி யதனால்.

கவின