Kalevala - A Finland Epic -part II / verses 11-18
(in tamil script, unicode-utf-8 format)

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 11-18



தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)
Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்

Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.



பாடல் 11 - லெம்மின்கைனனின் விவாகம்  *



அடிகள் 1-110 : லெம்மின்கைனன் தீவின் உயர் குலப் பெண்களில் ஒரு மனைவியைப் பெறப் புறப்பட்டுப் போகிறான்.

அடிகள் 111-156 : அந்தத் தீவின் பெண்கள் முதலில் அவனை ஏளனம் செய்கிறார்கள்; பின்னர் நட்பாகப் பழகுகிறார்கள்.

அடிகள் 157-222 : அவன் தேடி வந்த குயிலிக்கி அவனுடைய எண்ணத்துக்கு இணங்கவில்லை; அதனால் அவன் குயிலிக்கியைப் பலவந்தமாக வண்டியில் ஏற்றிக் கடத்திச் செல்கிறான்.

அடிகள் 223-314 : குயிலிக்கி அழுகிறாள்; குறிப்பாக லெம்மின்கைனன் போருக்குச் செல்வதை அவள் விரும்பவில்லை. அதனால் லெம்மின்கைனன் தான் இனிமேல் போருக்குச் செல்வதில்லை என்றும் குயிலிக்கி இனிமேல் கிராமத்துக்கு நடனம் ஆடச் செல்வதில்லை என்றும் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொடுக்கிறார்கள்.

அடிகள் 315-402 : லெம்மின்கைனனின் தாய் தனது மருமகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள்.



*அஹ்தியைப் பற்றியிஃ தறிந்துசொல் தருணம்
போக்கிரி அவன்நிலை புகன்றிடும் நேரம்
தீவினில் வசித்துத் திகழுமிவ் வஹ்தி
*லெம்பியின் குறும்புடை அம்புவி மைந்தன்
வானுயர் இல்லில் வளர்ந்தவன் அவனே
அன்புமிக் கன்னையின் அருகினில் வளர்ந்தோன்
படர்ந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
காண்தொலைக் குடாவதன் கைவளைப் பரப்பில்.

*தூரநெஞ் சினனவன் மீனயின் றுயர்ந்தான்
ஒருவகை **மீனயின் றுயர்ந்தனன் அஹ்தி   10
மனிதரில் சிறந்தவோர் வல்லவ னானான்
சிவந்தநற் குருதிபோல் திகழ்ந்தவா லிபனாம்
தரமுடன் அமைந்தது தலைஅவ னுக்கே
தீரமும் திறமையும் திகழ்ந்தன துணையாய்;
ஆயினும் சிறுகுறை அவனில் இருந்தது
தனித்தவன் நடத்தையில் தரம்குறைந் திருந்தது:
பூவைய ரோடுதன் பொழுதெலாம் கழிப்பான்
அலைந்திரா முழுவதும் அவன்திரிந் திடுவான்
மங்கையர் தம்மையே மகிழவைத் திடுவான்
குழலியர் தம்முடன் குலவிக் களிப்பான்.   20

தீவக மடந்தையாய்த் திகழ்பவள் *குயிலி
தீவக மடந்தை தீவின் மலரவள்
வானுயர் வீட்டில் வளர்ந்தாள் அவளே
எழிலாய் அழகாய் இனிதாய் வளர்ந்தாள்
தந்தையின் இல்லில் சதாஅமர்ந் திருப்பவள்
அழகுயர் சாய்மணை ஆசனப் பலகையில்.

நெடிதாய் வளர்ந்தவள் நீள்பெரும் சீர்த்தியள்
தூரதே சத்தால் துணைவர்கள் வந்தனர்
மிகமிகப் புகழுடை மெல்லியள் இல்லம்
சிறந்ததோட் டத்துச் சீர்சால் பகுதி.   30

அவளைத் தன்மகற் கருக்கன் கேட்டனன்
அவள்புக வில்லை அருக்கனின் நாடு,
அருக்கனின் அருகே அவள்ஒளி வீசி
கோடையிற் காயக் கொண்டிலள் விருப்பே.

சந்திரன் கேட்டான் தன்மகற் கவளை
சந்திர நாடு தான்புக் கிலளாம்,
சந்திர னருகில் தண்ணொளி வீசி
வானம் சுற்றி வரும்விருப் பிலளே.

தாரகை கேட்டது தன்மகற் கவளை
தாரகை நாடு தான்புக் கிலளாம்,    40
நீண்ட இரவுகள் நேத்திரம் சிமிட்டி
குளிர்வான் இருக்கக் கொண்டிலள் விருப்பே.

*எஸ்த்தோனி யாவிருந் தேகினர் வரன்மார்
*இங்கிரி யாவிருந் தெழுந்தனர் பிறசிலர்
அங்கெலாம் பாவை அவள்புக் கிலளாம்
அவளே அளித்தாள் அதற்கோர் மறுமொழி:
"விரயமா கிறது வீணாய் நும்பொன்
வெள்ளியும் வீணாய் விரைந்தழி கிறது
நாடுஎஸ்த் தோனியா நான்புக மாட்டேன்
போவதே யில்லைநான் போகவே மாட்டேன்   50
எஸ்த்தோனி(ய) நீரில் எழிற்பட கோட்டேன்
தீவினில் பகடையாய் தினந்தொறும் மாறேன்
எஸ்த்தோனி யாமீன் எடுத்துண மாட்டேன்
எஸ்த்தோனி யா**ரசம் எடுத்துநான் குடியேன்.

இங்கிரி யாவும் ஏகநான் மாட்டேன்
அதன்நீர்க் கரைக்கும் அயல்மேல் நிலத்தும்
பசியுள தாங்கு பலதும் குறைவு
மரக்**குச் சியொடு மரங்களும் பஞ்சம்
குடிநீர்ப் பஞ்சம் கோதுமைப் பஞ்சம்
உறுதா னியத்து ரொட்டியும் பஞ்சம்."   60

குறும்பன் லெம்மின் கைனனப் போது
அழகிய தூர நெஞ்சினன் அவன்தான்
செய்தான் முடிவு செய்திடப் பயணம்
தீவதன் மலரைத் திருமணம் செய்ய
தனித்துவம் வாய்ந்த மணப்பெண் அவளை
அழகிய கூந்தல் அமைந்த பாவையை.

ஆயினும் சொன்னாள் அன்னையோர் தடையே
வயோதிப மாது வந்தெச் சரித்தாள்:
"செல்வஎன் மகனே சென்றிட வேண்டாம்
உன்னிலும் பார்க்க உயர்விடம் நோக்கி   70
அங்கே உன்னை அவர்கள் ஏற்றிடார்
உயரிய தீவின் உறவினர் மத்தியில்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"என்இல் சிறந்ததே இல்லையா யிடினும்
என்னினம் சிறந்ததே இல்லையா யிடினும்
காரியம் என்உடற் கவினால் ஆகும்
நேர்பிற சிறப்பால் நினைத்தது நடக்கும்."

அன்னை தடையாய் இன்னும் நின்றாள்
லெம்மின் கைனன் செய்பய ணத்து    80
தீவில் வாழ்ந்த சிறப்பினத் துக்கு
உயர்வாய் வாழ்ந்த உறுகுடி யினரிடம்:
"ஏளனம் செய்வராங் கிருக்கும் மகளிர்
பாவையர் உன்னைப் பார்த்துச் சிரிப்பர்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அரிவையர் சிரிப்பைநான் அடக்குவேன், ஆமாம்,
நிறுத்துவேன் மகளிர் நிகழ்த்தும் சிரிப்பை
வழங்குவேன் பையனை மார்பினில் சுமக்க
தருவேன் குழந்தையைத் தளிர்க்கர மணைக்க   90
அப்போ தேளனம் அவர்கள் செய்திடார்
இகழ்ச்சியாய் என்னை எதுவுமே சொல்லார்."

இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை:
"அடடா, பேதைநான் ஆகினேன் வாழ்வில்,
தீவின் மகளிரைச் செய்தால் கேவலம்
அவமானம் தூய மகளிர்க் களித்தால்
அதனால் நீயோ அடைவது கலகம்
பெரும்போர் தொடர்வது பிறிதொரு உண்மை
அனைத்துத் தீவின் அருமண வாளரும்
வாளொடு நூறென வந்திடு வார்கள்   100
பேதை மகனே பெரிதுனைத் தாக்குவர்
சுற்றித் தனியாய்ச் சூழ்ந்து வளைப்பர்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
தாயினெச் சரிக்கை தனையும் இகழ்ந்தான்
எடுத்தான் சிறந்த எழிற்பொலிப் புரவி
ஏர்க்காற் பூட்டினன் இகல்தெரி புரவி
புறப்பட் டெழுந்து போனான் பயணம்
தீவின் போர்பெறும் திருவூ ரதற்கு
தீவதன் மலரைத் திருமணம் செய்ய
தீவின் தனித்துவச் செல்வியாம் மகளை.   110

நங்கையர் லெம்மின் கைனனை நகைத்தனர்
மங்கையர் கேலி வலுவாய்ச் செய்தனர்
பாதையில் வினோதமாய்ப் படர்ந்தபோ தினிலே
தோட்டத்து வினோதத் தொடர்பய ணத்திலே,
வண்டியை அதுகவிழ் வரையும் ஓட்டினன்
உருட்டி வாயிலில் உடனதை வீழ்த்தினன்.

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:   120
"இதுபோல் கண்டதே இல்லைமுன் னாளில்
இல்லையே கண்டதும் இல்லையே கேட்டதும்
என்னைப் பார்த்தொரு பெண்சிரிப் பதனை
ஏளனம் மகளிர் என்னைச் செய்வதை."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"விரும்புமித் தீவில் வெற்றிடம் உண்டா
இடமெது முண்டா இந்நில மேட்டில்
என்விளை யாட்டை இனிவிளை யாட
நிலமெதும் உண்டா நிகழ்த்துவதற் காடல்   130
தீவக மகளிரைச் செறிகளிப் பூட்ட
கூந்தலார் பெண்களைக் கூடிநன் காட?"

தீவுப் பெண்கள் செப்பினர் இப்படி
கடல்முனைக் கன்னியர் கள்விடை கூறினர்:
"ஆமாம், தீவிலே அகல்வெற் றிடமுள
தீவின் மேட்டிலே திகழிட முளது
உன்விளை யாட்டை உயர்வாய் நிகழ்த்த
ஆடலைச் செய்ய அகல்நில முண்டு
ஆயனுக் கேற்ற அமைவெறும் பூமி
எரித்த காடு இடையனுக் குண்டு    140
தீவுப் பிள்ளைகள் தேகம் மெலிந்தவர்
ஆயினும் கொழுத்தவை அணிபரிக் குட்டிகள்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
தொழிலொன் றிடையனாய்த் துணிவுடன் பெற்றான்
மந்தை மேய்த்தலை வளர்பகல் செய்தான்
இரவில் மகளிரின் இனிமையில் களித்தான்
அங்குள பெண்களோ டாடி மகிழ்ந்தான்
**கூந்தலார் பெண்களைக் கூடிநன் காடினான்.

குறும்பன் லெம்மின் கைனனிவ் வாறு
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்    150
அரிவையர் நகைப்புக் கமைத்தான் முடிவு
ஏளனப் பேச்சை இல்லா தொழித்தான்;
அந்த இடத்திலோர் அரிவையும் இல்லை
தூய்மையா னவளும் சொல்லவாங் கில்லை
அவன்தொடாப் பெண்ணென அறுதியிட் டுரைக்க
அவன்அரு கேதுயில் அயராப் பெண்ணென.

எல்லோர் நடுவிலும் இருந்தாள் ஒருகுமர்
தீவின் உயர்ந்த செழுங்குடி மரபாள்
ஏற்கா திருந்தாள் எம்மண மகனையும்
நினையா திருந்தாள் நேரிய கணவனை   160
குயிலிக்கி அழகிய குமரியே அவளாம்
தீவிலே மலர்ந்த செழும்எழில் மலரவள்.

குறும்பன் லெம்மின் கைன னப்போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
அணிந்து காலணி அழித்தான் நூறு
துடுப்புகள் வலித்துத் தொடர்ந்துநூ றழித்தான்
பெண்ணவள் தேடும் பெரும்வே லையிலே
அக்குயி லிக்கியை அடையுமெ ண்ணத்தில்.

குயிலிக்கி என்னும் கொழுமெழில் மங்கை
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:   170
"எளிய மனிதா எதற்கா யலைகிறாய்?
கரைநிலப் புள்போல் கடிதூர்ந் தலைகிறாய்?
இங்குள பெண்டிரை ஏன்கேட் டலைகிறாய்?
**ஈயநெஞ் சினரை ஏன்விசா ரிக்கிறாய்?
இங்கிதற் கெனக்கு இலையவ காசம்
திரிகைக் கல்லைச் சேர்த்தரைக் கும்வரை
உலக்கையை இடித்து உறத்தேய்க் கும்வரை
உரலை இடித்தணு உருவாக் கும்வரை.
மதியேன் நான்சிறு மதிபடைத் தோரை
சபலம் சிறுமதி தாம்உடை யோரை,   180
உரம்பெறும் தரமுடை உடல்தான் வேண்டும்
உரமும் தரமும் உடையஎன் உடற்கு,
அழகும் எழிலும் அமையுருத் தேவை
எழிலார் அழகுடை எனதுரு வதற்கு,
வடிவுடைக் கவினார் வதனமே தேவை
வடிவும் கவினும் வாய்ந்தஎன் முகத்துக்(கு)."

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
அரிதாய் மாதத் தரைக்கூ றழிந்தது
பலநாள் சென்று ஒருநாள் வந்தது
பலமாலை களிலே ஒருமாலை வேளை   190
விளையாட் டினிலே மின்னார் மூழ்கினர்
அழகுறும் அரிவையர் ஆடலில் ஆழ்ந்தனர்
இரகசிய மாக இருந்தவூர்த் தோப்பில்
புல்தரைப் பக்கமாய்ப் புணர்வெளி ஒன்றிலே
எல்லோர்க் கும்**மேல் இருந்தனள் குயிலி(க்கி)
தீவதன் சிறப்புடைச் செறிபுகழ் மலரவள்.

வந்தனன் போக்கிரி மன்னுசெங் கதுப்பினன்
குறும்பன் லெம்மின் கைனன் விரைந்தனன்
தனக்கே உரிய தனிப்பொலிப் புரவியில்
தேர்ந்தே எடுத்த சிறப்புறும் குதிரையில்   200
விளையாட் டயரும் வியன்நில மத்தியில்
அழகிய மாதர் ஆடிய இடத்தில்;
குயிலிக்கி அவளைக் குறுகியே பற்றினன்
ஏற்றினான் பெண்ணை இயைந்ததன் வண்டி
அமர்த்தினன் தனதுதோ லாசனத் தவளை
வண்டியின் அடியில் வைத்தனன் அவளை.
சவுக்கினால் பரியைச் சாடினான் ஓங்கி
சாட்டை சுழற்றிச் சாற்றிநன் கறைந்தான்
அவனது பயணம் அவ்வா றெழுந்தது
புறப்படும் போதே புகன்றனன் இவ்விதம்:   210
"ஒருக்கால்(உம்) வேண்டாம் ஓ,இள மடவீர்!
நடந்த கதையினை நவிலவும் வேண்டாம்
மற்றுநான் இங்கே வந்தது பற்றியும்
செல்வியைக் கடத்திச் சென்றது பற்றியும்.
பகருமிம் மொழிக்குப் பணியா விடிலே
கொடிய சம்பவம் கூடுமுங் களுக்கு
பாடுவேன் போர்க்களம் படரநும் துணைவர்
பாடுவேன் வாளிற் படநும் இளைஞர்
என்றுமே அவர்தம் செய்திகள் கேட்கீர்
வாழ்நாள் என்றுமே மற்றவர் காணீர்   220
பாதையில் அவர்கள் படர்ந்துசெல் வதையும்
வண்டியிற் செல்வதும் வயலிடைக் காணீர்."

மெய்குயி லிக்கி மேல்முறை யிட்டாள்
தீவின் மலரவள் தேம்பி அழுதாள்:
"இங்கிருந் தென்னை ஏகிட விடுவாய்
பிள்ளை சுதந்திரம் பெறவிடு விப்பாய்
திரும்பியே வீடு சென்றிட விடுவாய்
அழுது புலம்பும் அன்னையின் அருகில்,
எனைச்சுதந் திரமாய் ஏக விடாயேல்
வீட்டுக்குச் செல்ல விடாதுபோ னாலோ   230
இன்னும் சோதரர் இருக்கிறார் ஐவர்
எழுவர் மாமனின் மக்கள் இருக்கிறார்
முயலைத் தொடர்ந்து முன்னோடி வருவர்
கன்னியின் தலையைக் காத்திட வருவர்."

அவட்கு விடுதலை அமையா நிலையில்
கண்மடை திறந்து கண்ணீர் பெருக்கினள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"பேதைநான் வீணாய்ப் பிறந்தேன் உலகில்
வீணாய்ப் பிறந்தேன் வீணாய் வளர்ந்தேன்
வாழ்நாள் முழுக்க வாழ்ந்தேன் வீணாய்   240
பெறுமதி யற்ற பிறன்கைப் பட்டேன்
மதிப்பெது மில்லா மனிதனைச் சேர்ந்தேன்
போரிடும் ஒருவன் புறம்வந் தணைந்தேன்
ஓய்விலாப் போர்செயும் ஒருவனைச் சார்ந்தேன்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழில்மிகு தூர நெஞ்சினன் இயம்பினன்:
"கண்ணே, குயிலி(க்கி), கனிவன் புளமே!
எனது சிறிய இனியநற் பழமே!
எதற்கும் துன்பம் இவ்வா றுறாதே
உனைநான் வருத்தேன் ஒருபொழு தேனும்    250
அணைப்பினில் இருப்பாய் அடி,நான் உண்கையில்,
கரங்களில் இருப்பாய் கனி,நான் நடக்கையில்,
அருகினில் இருப்பாய் அயல்நான் நிற்கையில்,
பக்கத் திருப்பாய் படுக்கும் பொழுதே.

எனவே நீயும் எதற்கு வருந்தல்?
நெடுமூச் செறியும் நீள்துயர் எதற்கு?
இதற்கா வருந்தி இடர்நீ படுகிறாய்
இதற்கா நெடுமூச் செறிந்து அழுகிறாய்
பஞ்சம் பசுக்கள், பஞ்சம் ரொட்டி,
எல்லாம் குறைவு என்றே எண்ணமா?    260

எதற்கும் வருந்தல் இப்போ வேண்டாம்
பசுக்களும் என்னிடம் பலப்பல உண்டு
கறக்கும் பசுக்களும் கணக்கிலா துள்ளன
முதலில் சதுப்பு நிலத்து **'மூ ரிக்கி'
அடுத்துக் குன்றில் அலையு(ம்) **'மன் ஸிக்கி'
**'புவோலுக் கா'எரி காட்டின்மூன் றாவது
உண்ணா மலேஅவை உரமாய் உள்ளன
கவனிப் பின்றியே கனசிறப் புற்றன;
மாலையில் கட்டி வைப்பது மில்லை
காலையில் அவிழ்த்துக் கலைப்பது மில்லை   270
அவைக்கு வைக்கோல் அளிப்பது மில்லை
உப்பில் உணவில் பஞ்சமொன் றில்லை.

அல்லது இதற்கா உள்வருந் துகிறாய்?
நெடுமூச் சிதற்கா நீயெறி கின்றாய்?
உயர்உற வினர்எனக் குற்றிலர் என்றா?
எனக்குச் சிறந்தவீ டில்லையே என்றா?

உயருற வினரெனக் குற்றிலர் எனினும்
எனக்குச் சிறந்தவீ டில்லையே எனினும்
என்னிட முளதொரு இகல்மகத் துவவாள்
ஒளிவிடும் அலகொடு ஒருவாள் உண்டு   280
அதுவே எனக்கு அதியுயர் உறவு
அதுவே எனக்கு ஆம்சீர்க் குடும்பம்
அலகைகள் அமைத்து அருளிய வாளது
கடவுளர் தீட்டிக் கைத்தரும் வாளது
எனது உறவினை இவ்வா றுயர்த்தினேன்
என்குடும் பத்தை இயல்சிறப் பாக்கினேன்
கூர்மை மிக்கஅக் கொடுவாள் அதனால்
அலகுமின் எறிக்கும் அந்தவாள் அதனால்."

பேதைப் பெண்ணாள் பெருமூச் செறிந்தாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:   290
"ஓகோ, அஹ்தி, லெம்பியின் புதல்வா!
ஒருபெண் என்போல் உனக்குவேண் டுமெனின்
துணைவாழ் நாளெலாம் தொடரவேண் டுமெனின்
கோழிஉன் அணைப்பில் கொள்ளவேண் டுமெனின்
அகலா நிரந்தர ஆணையொன் றுரைப்பாய்
போருக்கு இனிமேல் போகேன் என்று
பொன்பெற நேரினும் போகேன் என்று
வெள்ளியின் ஆசையால் விலகேன் என்று."

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:   300
"அழியாச் சத்தியம் அளிக்கிறேன் நான்இதோ
போருக்கு இனிமேல் போகவே மாட்டேன்
பொன்தேவைப் படினும் போகவே மாட்டேன்
வெள்ளியை விரும்பியும் விலகவே மாட்டேன்;
நீயொரு சத்தியம் நிகழ்த்துவாய் இப்போ
போகாய் உன்ஊர்ப் புறம்நீ என்று
விருப்புடன் துள்ளி விளையாட் டயர
ஆசையாய் நடனம் ஆடிக் களித்திட."

அப்போ(து) இருவரும் அளித்தனர் சத்தியம்
ஒப்பந்தம் என்றும் உரைத்தனர் நிலைபெற   310
எனைவரும் உணர்ந்திடும் இறைவனின் முன்நிலை
சர்வவல் லோனது தண்முகத் தின்கீழ்
போகேன் அஹ்தி போருக்கு என்று
குயிலிக்கி ஊர்ப்புறம் குறுகேன் என்று.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
ஓங்கி அடித்தான் உறுபரி சவுக்கால்
பொலிப்பரி யதனைப் புடைத்தான் சவுக்கால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"தீவின்புற் றிடரே, செலவிடை பெறுகிறேன்,
ஊசிமர வேரே, உயர்தா ரடியே,    320
நற்கோ டையில்நான் நடந்த தடங்களில்
குளிர்கா லத்துயான் உலாவிய இடங்களில்
மேகமூ டிராநட மாடிய விடங்களில்
சீறிய காற்றிலே போயொதுங் கிடங்களில்
இக்கான் கோழியை இனிதுதே டுகையிலே
இந்தவாத் தினைத்துரத் திட்டநே ரத்திலே."

பயணம் தொடர்ந்து பாங்காய் நடந்தது
வீடு கண்ணில் விரைந்து தெரிந்தது
இந்தச் சொற்களில் இயம்பினள் அரிவை
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:   330
"அங்கோர் வசிப்பிடம் அதோ தெரிகிறது
சிறிதாய் வறிதாய்த் தெரிகின் றதது
அந்தக் குடிசை ஆருக் குரியது
உரியது யார்க்கப் பொலிவிலா இல்லம்?"

குறும்பன் லெம்மின் கைனன் அவனே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வசிப்பிடம் பற்றி வருந்தவும் வேண்டாம்
குடிசைக் காய்ப்பெரு மூச்சதும் வேண்டாம்
வேறு வசிப்பிடம் விரைந்துகட் டப்படும்
மிகவும் சிறந்தவை அவைநிறு வப்படும்   340
பலமிகச் சிறந்த பலகை யவற்றால்
சிறப்பு மிகுந்த மரங்கள் அவற்றினால்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
விரைந்து வந்து வீட்டை அடைந்தான்
அருமை அன்னை அருகை அடைந்தான்
மதிப்புடைப் பெற்றவர் வயமருங் கணைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"காணவே யிலையுனைக் கனநாள் மகனே,
வெகுநாள் அந்நிய நாட்டில்வே றிருந்தாய்."   350

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அவமா னம்அவ் வரிவையர்க் கமைத்தேன்
பதிலடி தூய பாவையர்க் களித்தேன்
பார்த்தெனை அவர்கள் பழித்ததற் காக
நன்கெனை அவர்கள் நகைத்ததற் காக;
வண்டியில் சிறந்ததோர் வனிதையைக் கொணர்ந்தேன்
அவள்தோ லிருக்கையில் அமரவைத் திட்டேன்
வண்டிப் பீடம் வைத்தேன் அவளை
தூயகம் பளியில் சுற்றி யெடுத்தேன்    360
கோதையர் நகைக்குக் கொடுத்தேன் பதிலடி
ஏந்திழை யாரின் ஏளன உரைக்கு.

அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே!
என்னுடை அம்மா, எனைவளர்த் தவளே!
எதற்கே கினனோ அதனைப் பெற்றேன்
தேடிய தெதுவோ நாடியஃ துற்றேன்;
சிறந்ததோர் மெத்தையைத் தெரிந்து விரிப்பாய்
தருவாய் மென்மைத் தலையணை யினிதே
சொந்தஎன் நாட்டில் சுகத்துடன் படுக்க
என்னுயிர்க் கினிய இளமைப் பெண்ணுடன்."   370

இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"இறைவனே, உனக்கு இயம்பினேன் நன்றி,
கர்த்தனே, நின்புகழ் கனிந்தே இசைத்தேன்,
எனக்கொரு மருமகள் ஈந்ததற் காக
நல்லதீ ஊத நல்லவள் ஒருத்தியை
துணிநெய்யச் சிறந்த துடியிடை ஒருத்தியை
நல்லுடை பின்ன வல்லவள் ஒருத்தியை
துணிமணி தோய்த்துப் பணிசெயு மொருத்தியை
துணிமணி வெளுக்கத் துணைதந் ததற்காய்.   380

நீபெற்ற பேற்றை நினைத்துநீ நன்றிசொல்
நல்லதே பெற்றாய் நல்லதே யடைந்தாய்
நல்லதைக் கர்த்தர் நயந்துதந் ததற்காய்
அருங்கரு ணைக் கடல் அளித்தநன் மைக்கு.
பனித்திண்மப் **பறவை பரிசுத்த மானது
அதனிலும் தூய்மை அரியஉன் துணைவி
நுவல்கடல் அலையும் நுரையே வெண்மை
அதனிலும் வெண்மைநீ அரிதுபெற் றவளாம்
கடலிடை வாத்து கவின்வனப் புடையது
அதனிலும் வனப்புநீ அரிதுகொணர்ந் தவள்   390
உயர்வான் தாரகை ஒளிமய மானது
அதனிலும் ஒளிர்பவள் அரியஉன் மணப்பெண்.

கூடத்தின் தரையைக் கூட்டி **அகற்று
பயன்மிகு பெரிய பலகணி கொணர்வாய்
பொற்சுவ ரெல்லாம் புதிதாய் நிறுத்து
வசிப்பிட மனைத்தையும் மாற்று சிறப்புற
கட்டு கூடங்கள் கடிமனைக் கெதிரே
பூட்டு கூடத்தில் புதிய கதவுகள்
இளம்பெண் ஒருத்தியை இன்றுநீ பெற்றதால்
நேர்எழில் பெண்ணை நீபார்த் ததனால்   400
உன்னிலும் மேலாம் உயர்சிறப் பொருத்தியை
உன்னினத் தோரிலும் உயர்ந்தவள் ஒருத்தியை."



பாடல் 12 - சத்தியம் தவறுதல்  *



அடிகள் 1 - 128 : குயிலிக்கி சத்தியத்தை மறந்து கிராமத்துக்குப் போகிறாள். அதனால் சினமடைந்த லெம்மின்கைனன் அவளை விலக்கிவிட்டு வடபகுதி மங்கையிடம் புறப்படுகிறான்.

அடிகள் 129 - 212 : லெம்மின்கைனனின் தாய் அவன் அங்கே கொல்லப்படலாம் என்று தடுக்கிறாள். தலை வாரிக் கொண்டிருந்த லெம்மின்கைனன் தனக்கு கெடுதி நேர்ந்தால் அந்தச் சீப்பில் இருந்து இரத்தம் பெருகும் என்று உரைக்கிறான்.

அடிகள் 213 - 504 : அவன் புறப்பட்டு வட நாட்டுக்கு வருகிறான். அங்கே மந்திரப் பாடலைப் பாடி எல்லா அறிஞர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறான், ஒரேயொரு கொடிய இடையனைத் தவிர.



அதன்பின் அஹ்தி லெம்மின் கைனன்
அவன்தான் அழகிய தூர நாட்டினன்
எல்லாக் காலமும் இனிதே வாழ்ந்தான்
இளமைப் பருவ ஏந்திழை தன்னுடன்;
போருக் கேயவன் போனதும் இல்லை
குயிலிக்கி கிராமம் குறுகவு மில்லை.

போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
காலைகள் கழிந்தொரு காலையும் வந்தது
அவன்தான் அஹ்தி லெம்மின் கைனன்
மீன்சினைக் கின்றதோர் வியனிட மடைந்தான்  10
மாலையில் வீடு வந்தனன் இல்லை
அடுத்தநாள் இரவும் அவன்இல் வந்திலன்
குயிலிக்கி அதனால் குறுகினள் கிராமம்
அங்குள மகளிரோ டாடிடப் போனாள்.

இந்தச் செய்தியை எவர்கொண் டேகுவர்
இப்புதி னத்தை எவர்போய்ச் சொல்வார்?
அஹ்தியின் சகோதரி அவள்*ஐ னிக்கி
செய்தியை அவளே தெரிந்தெடுத் தேகினள்.
செய்தியைச் சுமந்து சென்றாள் அவளே:
"அன்பே, அஹ்தி, அரியஎன் சோதரா,  20
குயிலிக்கி எழுந்து குறுகினள் கிராமம்
அந்நியர் வாயில்போய் அடைந்தனள் அவளே
சென்றனள் கிராமப் பெண்டிரோ டாட
நறுங்குழ லாருடன் நடமிடச் சென்றாள்."

அஹ்திப் பையன் அவன்நிக ரில்லான்
அவன்தான் குறும்பன் லெம்மின் கைனன்
கோபம் கொண்டான் குரோதம் கொண்டான்
நீண்ட நேரமாய் நெடுஞ்சினங் கொண்டான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
"ஓ,என் அன்னையே, உயர்வய தினளே!  30
என்மே லாடையை எடுத்துநீ கழுவினால்
கறுத்தப் பாம்பின் கடுங்கொடு நஞ்சிலே,
உடன்அதை விரைவாய் உலரப் பண்ணினால்,
போருக்கு நானும் புறப்பட் டிடுவேன்
வடபால் இளைஞர் வளர்தீத் தடத்தே
லாப்பு மைந்தர் இருப்பிடம் அதற்கு
குயிலிக்கி கிராமம் குறுகியே விட்டாள்
அந்நியர் வாயிலை அடைந்தே விட்டாள்
அந்தப் பெண்களோ டவள்விளை யாட
நறுங்குழ லாருடன் நடனமா டற்கு."  40

குயிலிக்கி இப்போ கூறினள் ஆமாம்
முதலில் பெண்ணவள் மொழியமுன் வந்தாள்:
"அன்பே, இனியஎன் அஹ்தியே, கேளாய்!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்
துயிலும் பொழுது தோன்றிய தோர்கனா
அமைதியாய் உறங்கும் அப்போ கண்டேன்:
உலைக்களம் போல ஒருநெருப் பெழுந்தது
சுவாலையாய் எழுந்து சுடர்விட் டெரிந்தது
சாளரத் தின்கீழ் சரியாய் வந்தது
பின்சுவர்ப் பக்கமாய்ப் பெரிதாய்ச் சென்றது  50
உடன்சுழன் றங்கிருந் துள்ளே நுழைந்தது
உக்கிரம் கொண்டது உயர்நீர் வீழ்ச்சிபோல்
தரையிலே இருந்து தாவிக் கூரை
பலகணி பலகணி பரவிச் சென்றது."

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பெண்களின் கனவைநான் நம்புவ தில்லை
மனைவியர் சத்திய வாக்கும்நான் நம்பேன்
அன்னையே, தாயே, எனைச் சுமந்தவளே!
எனதுபோ ராடையை இங்கே கொணர்க!   60
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!
உள்ளுணர் வென்னுள் ஓ,விழிக் கின்றது
போருக் கானதாம் **பானம் பருக
போருக் குரியநற் புதுநறை நுகர."

இவ்வா றப்போ தியம்பினள் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்!
பானம்எம் வீட்டில் பருகிடற் குளது
**மரப்பீப் பாக்களில் மதுமிக வுளது
சிந்துர மரத்தில் செய்தமூ டியின்பின்;   70
உனக்கு அருந்தயான் உடனே கொணர்வேன்
வரும்நாள் முழுக்க மனம்போல் அருந்தலாம்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வேண்டேன் வடித்த வீட்டுப் பானம்
அதற்குமுன் பாக ஆற்றுநீர் குடிப்பேன்
வலிக்கும் சுக்கான் வல்லல கேந்தி;
ஏந்துமந் நீரெனக் கினிமையா யிருக்கும்
இல்லிலே வடித்த இனியபா னத்திலும்,
எனதுபோ ராடையை இங்கே கொணர்வாய்!
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!  80
வடபால் நிலத்து வசிப்பிடம் போகிறேன்
லாப்பு மைந்தரின் இருப்பிடம் போகிறேன்
பெரும்பொன் கேட்டுப் பெறற்குப் போகிறேன்
வெள்ளி கோரிமிகப் பெறப் போகிறேன்."

கூறினள் லெம்மின் கைனன் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
இல்லிலே நிறைய நல்லபொன் உளது
வெள்ளியும் கூடம் மிகநிறைந் துளது
சரியாய் நேற்றுஇச் சம்பவம் நடந்தது
வைகறைப் பொழுதும் மலர்ந்திடும் நேரம்   90
விரியன் வயல்களை அடிமை உழுதனன்
இகல்அரா நிறைந்த இடத்தைப் புரட்டினன்
உழுமுனை பெட்டக மூடியொன் றுயர்த்த
உழுமுனைப் பின்புறம் ஒரு**கா சிருந்தது
நுழைந்துள் இருந்தவை நூறு நூறாகும்
அதிற்புக் கிருந்தவை ஆயிர மாயிரம்
பெட்டகம் களஞ்சியப் பெரும்அறைக் கொணர்ந்து
அறையின் மேல்தட் டதனைவைத் திட்டேன்.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வீட்டுச் செல்வம் வேண்டேன் எதுவும்   100
போருக்குச் சென்றொரு **மார்க்குப் பெறினும்
அதையே சிறந்ததாய் அகம்நான் கருதுவன்
இல்லிலே உள்ள எல்லாப் பொன்னிலும்
உழுமுனை தூக்கிய உயர்வெள் ளியிலும்;
எனதுபோ ராடையை இங்கே கொணர்வாய்!
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!
போகிறேன் வடபால் நிலம்போ ருக்கு
லாப்பின் மைந்தரோ டேகிறேன் போர்க்கு.
உள்ளுணர் வென்னுள் உடன்விழிக் கிறது
எண்ணம் உயிர்பெற் றெழுகின் றனஆம்   110
என்செவி தாமாய் இதமுறக் கேட்க
என்விழி தாமாய் இனிமையாய்ப் பார்க்க
ஒருபெண் வடக்கிலே உள்ளனள் என்பதை
இருண்ட பூமியில் ஏந்திழை உள்ளதை
மணாளர் தம்மையே வரித்திடா மங்கை
அரியநற் கணவரை அடைந்திலா நங்கை."

கூறினள் லெம்மின் கைனனின் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
இல்லில் குயிலி(க்கி) இருக்கிறாள் உனக்கு
உயர்குடிப் பிறந்த உத்தம மனையாள்;   120
இரண்டு பெண்கள் இருப்பது கொடுமை
மனிதன் ஒருவனின் மலர்மஞ் சத்தே."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"குயிலிக்கி என்பவள் குறுகுவோள் கிராமம்
ஆட்டம் அனைத்திலும் அவள்கலந் திடட்டும்
பலவீட் டினிலும் படுத்தெழுந் திடட்டும்
ஊர்ப்பெண் களையெலாம் உவகையூட் டட்டும்
நளிர்குழ லாருடன் நடனமா டட்டும்."

தாயும் அவனைத் தடுக்க முயன்றாள்
எச்சரித் தனளவ் வெழில்முது மாது :   130
"ஆயினும் வேண்டாம் அரியஎன் மகனே,
வடபால் நிலத்து வசிப்பிடம் போவது
மந்திர சக்தியின் வளரறி வின்றி
அறிவுடன் ஆழ்ந்த ஆற்றல்இல் லாமல்
வடபால் இளைஞரின் வளர்தீத் தடத்தில்
லாப்பு மைந்தரின் இருப்பிடம் நோக்கி!
லாப்பியர் மந்திரப் பாடலை இசைப்பர்
அங்கே *துர்யா ஆடவர் திணிப்பர்
உன்வாய் கரியிலும் உன்தலை சேற்றிலும்,
முன்கரம் புழுதியிலும் முழுதும் அமுக்குவர்   140
புதைப்பர் உன்முட்டியைப் புணர்சுடு சாம்பலில்
எரிந்தெழும் அடுப்பின் இயல்கல் நடுவில்."

லெம்மின் கைனன் அப்போ தியம்பினன்:
"மந்திர காரர்கள் மாயம்முன் செய்தனர்
மாயம் செய்தனர் **வல்அராச் சபித்தன
லாப்பியர் மூவர் என்னுடன் மோதினர்
கோடை காலக் குளிர்இர வொன்றில்
நிர்வாண மாயொரு நெடும்பா றையிலே
ஆடையும் இடுப்புப் பட்டியும் அகன்று
என்னுடல் சிறுதுணி இல்லா நிலையில்;   150
இதுதான் அவர்கள் என்னிடம் பெற்றது
இழிந்த மனிதர் இதுதான் பெற்றனர்
பாறையில் மோதிய கோடரி போல
குன்றிலே பாய்ந்த நுண்துளைக் **கோல்போல்
பனித்திடர் வழுக்கிய தனிமரக் கட்டைபோல்
வெற்று வீட்டில் விளைமர ணம்போல்.

ஒருவழி நிலைமை உறுமச் சுறுத்தலாய்
வேறு விதமதாய் மாறியே வந்தது,
எனைவென் றிடற்கே எலாம்முயன் றார்கள்
அமிழ்த்தி விடுவதாய் அச்சுறுத் திட்டனர்  160
சதுப்பு நிலமதன் தனிநடை பாதையாய்
அழுக்கு நிலத்திலே குறுக்குப் பலகையாய்
செய்யஎன் தாடையைச் சேற்றிலே தாழ்த்தி
அழுக்கிலே தாடியை அமிழ்த்தவும் நினைத்தனர்
ஆயினும் நானொரு அத்தகு மனிதனே
அஞ்சிட வில்லைநான் அதற்கெலாம் பெரிதாய்
மாறினேன் நானொரு மந்திர வாதியாய்
அறிந்தவன் ஆயினேன் அரியமந் திரங்கள்
கணையுடன் பாடினேன் சூனியக் காரரை
எய்யவந் தோரை எறிபடைக் கலத்தொடும்  170
எதிர்மா யாவிகள் இரும்புவா ளுடனும்
உயர்அறி வுடையரை உருக்குடன் சேர்த்தும்
வீழ்த்தினேன் பயங்கர வீழ்ச்சியாம் துவோனி
திரண்ட கொடிய திரைநுரை நடுவில்
உயரப் பாயும் உறுமரு விக்கீழ்
அனைத்திலும் கொடிய அடிநீர்ச் சுழியில்
மந்திர வாதிகள் அங்குதுஞ் சட்டும்
பொறாமைக் காரர்கள் போய்த் துயிலட்டும்
புற்கள் முளைத்து புறமெழும் வரைக்கும்
தொப்பியின் ஊடாய் தொடுந்தலை ஊடாய்  180
சூனியக் காரரின் தோள்மூட் டூடாய்
தோளின் தசையைத் துளைத்துக் கொண்டு,
சூனியக் காரர் தூங்கும் இடத்தில்
பொறாமை பிடித்தோர் போய்த்துயி லிடத்தில்."

இன்னமும் அவனின் அன்னை தடுத்தாள்
லெம்மின் கைனன் நிகழ்த்தும் பயணம்
தாயவள் தடுத்தாள் தன்னுடை மகனை
மாது அந்த மனிதனைத் தடுத்தாள்:
"அங்கே செல்வதை அடியொடே நிறுத்து
குளிருடைக் கிராமக் கொடும்பகு திக்கு   190
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே!
அழிவு நிச்சயம் அணுகிடும் உன்னை
எழுச்சிகொள் மகர்க்கு ஏற்படும் வீழ்ச்சி
துயரம் குறும்பன் லெ(ம்)மின்கை னற்கு;
நூறு வாயினால் நுவன்ற போதிலும்
நம்புதற் கில்லை நான்உனை இன்னும்
உனக்குள் மந்திரப் பாடகன் உறைந்திலன்
வடக்குமைந் தர்க்கு வருமீ டிணையாய்
நீஓர்ந்த தில்லை நெடிய*துர் யாமொழி
லாப்பியர் பாடலும் ஏதும்நீ அறிந்திலை."  200

குறும்பன் லெம்மின் கைனன் அப்போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
வாரத் தொடங்கினன் வாகாய்த் தன்தலை
சீவத் தொடங்கினன் சீராய்த் தலைமயிர்
எடுத்துச் சுவரில் எறிந்தனன் சீப்பை
தூணில் எறிந்தனன் தொடுமயிர்க் **கோதியை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"அப்போ லெ(ம்)மின்கை னனையழி வணுகும்
எழுச்சி மகற்கு வீழ்ச்சியேற் படுகையில்   210
மயிர்க்கோ தியினால் வழிந்திடும் குருதி
சீப்பினி லிருந்து செந்நீர் பெருகிடும்."

குறும்பன் லெம்மின் கைனன் சென்றனன்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
தாயார் அவனைத் தடுத்த போதிலும்
பெற்றவள் எச்சரித் திட்ட போதிலும்.

இடுப்பில் பட்டியை இட்டுப் பூட்டினான்
இருப்பு மேலாடை எடுத்தே அணிந்தான்
கொளுக்கியை உருக்குப் பட்டியில் கொளுவினான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:  220
"ஆயுதம் மனிதருக் கானதோர் காப்பு
இரும்பு மேலாடை இதனிலும் காப்பு
உருக்குப் பட்டி உயர்ந்தது சக்தியில்
மந்திர வாதிகள் மத்தியில் அவர்க்கு
தீயோர் பற்றிச் சிறிதி(ல்)லைக் கவலை
அஞ்சுதல் நல்லவர் ஆயினும் இல்லை."

கையிலே சொந்தக் கதிர்வாள் எடுத்தான்
தீயுமிழ் அலகைச் செங்கர மெடுத்தான்
அலகைகள் தட்டி அமைத்தநல் வாளது
தெய்வமே தீட்டித் திருத்திய வாளது   230
வாளைக் கட்டினான் வலியதன் பக்கம்
செருகினான் உறையுள் செருந்திறல் வாளை.

இருப்பது கவனமாய் எங்கே மனிதன்?
காப்பது எங்கே கருமவீ ரன்த(ன்)னை?
இங்கே கவனமாய் இருந்தனன் கொஞ்சம்
தன்னை இங்கே தற்காப் பாக்கினன்:
உத்தரத் தின்கீழ் உயர்கடை வாயிலில்
வசிப்பிடம் அதனின் வருகடை நிலையில்
முன்றிலின் நல்வழி முன்தொடக் கத்தில்
இறுதி வரைக்கும் எழில்வாய் அனைத்திலும்.  240

அங்ஙனம் மனிதன் அருங்காப் பியற்றினன்
பெண்கள் இனத்தின் பெரும்எதிர்ப் பெதிராய்
ஆயினம் காவல் அவைபலம் அல்ல
பயனுள தல்ல பாதுகாப் பணிகள்
தன்னை மீண்டும் தற்காப் பாக்கினன்
ஆண்கள் இனத்தின் அரும்எதிர்ப் பெதிராய்
இரண்டு வழிகள் இணைபிரி இடத்தில்
நீல மலையின் நீடுயர் உச்சியில்
நகர்ந்து திரிந்திடும் நளிர்சேற் றிடங்களில்
நீர்நிறைந் தோடும் நீரூற் றுக்களில்   250
வேகமாய்ப் பாயும் வியன்நீர் வீழ்ச்சியில்
பலமாய்ப் பெருகும் பல்நீர்ச் சுழிப்பினில்.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"எழுவீர், புவியிருந் தெதிர்வாள் மனிதர்காள்!
வியன்நில வயதுகொள் வீரர்கள், எழுவீர்!
எழுவீர், கிணற்றிருந் திகல்வல் மறவர்காள்!
எழுவீர், ஆற்றிருந் திகல்வில் வீரர்காள்!
அடவியே, எழுகநின் ஆட்களோ டிங்கே!
வனங்க ளெலாநும் மக்கள் தம்முடன்,   260
மலைகளின் முதல்வ,நின் வன்சக் தியுடன்,
நீரின் சக்தியே, நின்பயங் கரத்துடன்,
நீரின் தலைவியே, நினது பலத்துடன்,
நீர்முதி யோளே, நினது வலியுடன்,
பாவையீர், ஒவ்வொரு பள்ளத் திருந்தும்,
எழில்உடை அணிந்தோர் இருஞ்சேற் றிருந்தும்,
ஒப்பிலா மனிதனின் உதவிக்கு வருக!
நற்புகழ் மனிதனின் நட்புக்கு வருக!
சூனியக் காரரின் சுடுகணை தவிர்க்க,
மந்திர வாதிகள் வல்லுருக் காயுதம்   270
இகல்மா யாவிகள் இரும்புக் கத்திகள்
வில்லவர் படைக்கலம் வல்லியக் கொழிய!

இதுவும் போதா தின்னமு மென்றால்
இன்னும் ஒருவழி என்நினை வுள்ளது
நேர்மேற் பார்த்து மெடுமூச் செறிவேன்
அங்கே விண்ணுறை அருமுதல் வனுக்கு
எல்லா முகிலையும் இருந்தாள் வோற்கு
ஆவிநீ ரனைத்தின் அரசகா வலர்க்கு.

ஓ,மானுட முதல்வனே, உயர்மா தெய்வமே!
வானகம் வதியும் மாமுது தந்தையே!   280
முகில்களின் ஊடாய் மொழிந்திடு வோனே!
வாயுவின் வழியாய் வாக்குரைப் பவனே!
தீயுமிழ் ஒருவாள் தேர்ந்தெனக் கருள்வாய்!
உமிழ்தீ வாளுறை ஒன்றினில் வைத்து
அதனால் தடைகளை அடியேன் நொறுக்குவேன்
அதனால் நானும் அழிவை அகற்றுவேன்
தொல்புவிச் சூனியக் காரரைப் புரட்டுவேன்
நீர்மா யாவியை நெடிததால் வெல்வேன்
எனக்கு முன்வந் தெதிர்த்திடும் பகைவரை
எனக்குப் பின்னே இருந்தெழும் தெவ்வரை   290
தலைக்கு மேலும் தழுவென் பக்கமும்
என்விலாப் பக்கம் இரண்டிலு மாக
அழிப்பேன் மாய ஆவிகள் அம்புடன்
இரும்புக் கத்தியோ டிகல்சூ னியரை
உருக்கா யுதத்துடன் உறுமாந் திரிகரை
தீயவல் மாந்தரைச் செறுமவர் வாளுடன்!"

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
பற்றையில் நின்ற பரிதனை அழைத்தனன்
புல்லில் நின்றபொன் பிடர்மயிர்ப் புரவியை  300
அதன்பின் புரவிக் கணிகலன் பூட்டினன்
தீநிறக் குதிரையை ஏர்க்காற் பூட்டினன்
அவனே ஏறி அமர்ந்தனன் வண்டியில்
வண்டியில் ஏறி வசதியா யமர்ந்தனன்
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
சாட்டையால் குதிரையை சாடியே ஏவினன்;
பரியும் பறந்தது பயணம் தொடர்ந்தது
வண்டியும் உருண்டது வழித்தொலை குறைந்தது
வெள்ளிமண் சிதறி வேகமாய்ப் பரவின
பொன்னிறப் புதர்கள் புத்தொலி யெழுப்பின. 310

ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான்
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகினான்
மூன்றாவ தாக முகிழ்த்தஅந் நாளில்
அவன்ஒரு கிராமம் அடைந்திட லானான்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பாதையில் தனது பயணம் தொடர்ந்தான்
தொலையில் இருந்த தொடர்வழி ஒன்றின்
தூரத்தில் இருந்த வீடு ஒன்றுக்கு;
இல்லின் கூடத் திங்ஙனம் கேட்டனன்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்:   320
"இந்த வீட்டிலே எவரும் உளரோ
படியும்என் மார்புப் பட்டியை அவிழ்க்க
எனதேர்க் காலை இறக்கக் கீழே
கழுத்துப் பட்டியைக் கழற்றி விடற்கு?"

பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
பகுவாய்ப் புறத்தொரு பையன் இயம்பினன்:
"இந்தஇல் லத்தே எவருமே இல்லை
படியும்உன் மார்புப் பட்டியே அவிழ்க்க
உனதேர்க் காலை உடன்கீழ் இறக்க
கழுத்துப் பட்டியைக் கழற்றி விடற்கு."  330

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
மணிமுனைச் சவுக்கால் வாகாய் அறைந்தான்
பாதையில் தனது பயணம் தொடர்ந்தான்
மத்தியில் இருந்த வழியொன் றினிலே
வீதி மத்தியில் வீடொன் றுக்கு;
இல்லின் கூடத் திங்ஙனம் கேட்டான்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்:
"இந்த வீட்டில் எவரும் உளரோ
பரிக்கடி வாளம் பற்றிக் கழற்ற   340
படியும்என் மார்புப் பட்டியை அவிழ்க்க
கடிவாள வாரைக் கைப்பிடித் திழுக்க?"

அடுப்புக் கல்லின் அருகிலோர் முதுமகள்
அடுப்பா சனத்தில் அமர்ந்தவள் அரற்றினாள்:
"ஆமாம், இந்த அகத்திலே உள்ளனர்
பரிக்கடி வாளம் பற்றிக் கழற்ற
படியும்உன் மார்புப் பட்டியை அவிழ்க்க
எடுத்துன் ஏர்க்கால் இறக்கக் கீழே
உளரப் பாஇங் உயர்பல **பதின்மர்
நூற்றுக் கணக்கிலும் ஏற்கலாம் விரும்பின்   350
பயண வண்டியும் பார்த்துனக் கருளுவர்
சவாரிக் குதிரையும் தந்தே உதவுவர்
உனது வீடுபோய் உறற்குக் கள்வனே
உனது நாடுபோய் உறற்குத் தீயோய்
உனதுதெச மானனின் உறைவிடத் துக்கு
உனதெச மானி உற்றுவா ழிடத்து
நின்சகோ தரனின் நீள்நுழை வாயில்
நின்சகோ தரியின் நெடும்இற் கூடம்
இந்தப் பகற்பொழு திதுமுடி தற்குள்
சூரியன் கீழே சோர்ந்துசாய் வதற்குள்."  360

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"சுடப்பட வேண்டியோள், தொல்கிழ விநீ!
நொருக்கவேண் டியது வளைந்தநின் தாடை."
அதன்பின் குதிரையை அவன்விரைந் தோட்டினன்
தொடர்ந்து செய்தனன் துணிந்துதன் பயணம்
அனைத்து வழியிலும் அதிஉயர் பாதையின்
உள்ளவீ டனைத்திலும் உயர்ந்தவீட் டுக்கு.

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
அந்த வீட்டின் அருகிற் சென்றதும்   370
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"பிசாசே, குரைக்கும் பெருவாய் மூடு!
நாயின் அலகை மூடிடு பேயே!
வாயின் முன்னொரு வன்தடை போடு
பற்களின் இடையிலோர் நற்பூட் டையிடு
அதன்வாய்ச் சத்தம் அற்றே இருக்க
அவ்வழி மனிதன் அகன்றுபோம் வரையில்."

முற்றத் திவ்விதம் முன்வந் துற்றான்
சாட்டையால் நிலமிசைச் சாற்றினான் ஓங்கி  380
சாட்டையின் திசையிலோர் சார்புகார் எழுந்தது
புகாரின் நடுவொரு புதுச்சிறு மனிதன்
மார்புப் பட்டியை வந்தவிழ்த் தவனவன்
ஏர்க்கால் கீழே இறக்கியோன் அவனே.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது செவிகளால் தானே கேட்டான்
ஒருவரும் அவனை உடன்கவ னித்திலர்
அவதா னிப்போர் ஆங்கெவ ரும்மிலர்;
வெளியே இருந்தவன் வியன்கவி கேட்டனன்
**பாசியில் இருந்து பலசொல் கேட்டனன்  390
கனசுவர் வழியாய்க் கலைஞர் இசையையும்
பலகணி வழியாய்ப் பாடலும் கேட்டனன்.

அங்கிருந் தில்லுள் அவனும் பார்த்தனன்
இரகசிய மாக எட்டிப் பார்த்தனன்
அறையில் நிறைய அறிஞர் இருந்தனர்
பல்லா சனத்தும் பாடகர் இருந்தனர்
இருஞ்சுவர்ப் பக்கம் இசைவல் லார்கள்
கதவு வாயிலில் கனநுண் ஞானிகள்
வகுத்தபின் ஆசனம் மந்திர வாதிகள்
புகைபோக்கி மூலையில் சூனியக் காரர்கள்;  400
லாப்பின் பாடலை இசைத்தனர் அவர்கள்
பலபேய்க் கதைகளைப் பாடினர் அவர்கள்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
வாய்த்ததன் உருவை மாற்ற எண்ணினன்
இன்னொரு வேடமாய்த் தன்னை மாற்றினன்
மூலையில் இருந்து முனைந்தறை சென்றான்
சுவர்இடுக் கிருந்து துணிந்துட் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"முடிவிலே பாடல்கள் மூட்டும் இன்பமே
சிறப்பு வாய்நதவை சீர்க்குறுங் கவிகள்   410
நினைந்துதம் பாடலை நிறுத்துதல் நல்லது
நடுவில் புகுந்ததை நாம்தடுப் பதிலும்."

அவளே வடநிலத் தலைவியப் போது
எழுந்து நடந்து எழில்தரை நின்று
அறையின் மத்திய அமைவிடம் மடைந்து
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இங்கே முன்பு இருந்தது ஒருநாய்
இரும்புச் சடையோ டெதிர்கொளும் நீசநாய்
இறைச்சியை அயின்று எலும்பைக் கடிப்பது
புதிதாய் வருவோர் குருதி குடிப்பது.   420
எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்
இவ்வறை யுள்ளே எளிதாய் நுழைந்தாய்
இவ்வில் உட்புறம் இனிதே வந்தாய்
கிளர்ந்தெழு நாயுனைக் கேட்கவு மில்லை
குரைக்கும் நாயுனைக் குறிகொள்ள வில்லை."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"உண்மையாய் நானிங் குற்றிட வில்லை
திறமையும் அற்றுத் திகழ்அறி வற்று
வீரமும் அற்று ஞானமும் அற்று   430
தந்தையின் மந்திர சக்தியு மற்று
பயந்தபெற் றோரின் பாதுகாப் பற்று
உங்கள் நாய்கள் உண்பதற் காக
குரைக்கும் நாய்கள் கிழிப்பதற் காக.

எனது அன்னை என்னைக் கழுவினாள்
கழுவினள் சிறுவனாம் காலத் தினிலே
கோடை நிசியில் கூடுமுத் தடவை
இலையுதிர் காலத் திரவொன் பதுமுறை
அறிஞனாய் ஒவ்வொரு துறையிலும் ஆகென
சீர்த்தியோ டொவ்வொரு நாட்டிலும் திகழென  440
இருக்கஎன் வீட்டிலோர் இசைப்பா டகனாய்
சிறக்கநுண் அறிஞனாய்ச் சேர்பிற நாடெலாம்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
மாறினான் மந்திர வாதியே யாக
பாடுவோன் ஆயினான் மந்திரப் பாடல்கள்
தீப்பொறி மேலுடைத் திகழ்மடிப் பெழுந்தது
அவனது கண்கள் அனலைச் சிந்தின
லெம்மின் கைனன் நின்றுபா டுகையில்
மந்திரம் செபிக்கையில் வருபாட் டிசைக்கையில்.  450

வெகுதிறற் பாடகர் மீதே பாடினான்
படிமிகத் தாழ்ந்த பாடகர் ஆக்கினான்
அவர்களின் வாய்களில் அவன்கல் திணித்தான்
பக்கங் களிலெலாம் பாறையுண் டாக்கினான்
மிகுசிறப் புற்ற வியன்பா டகற்கு
தேர்ச்சிமிக் குயர்ந்து திகழ்கவி ஞர்க்கு.

இவ்விதம் பாடினான் இத்தகு மனிதரை
ஒருவரை இங்கும் ஒருவரை அங்குமாய்
மரம் செடியற்ற மலட்டு நிலத்தே
உழப் படாவெற்று உலர்நிலத் துக்கு   460
மீன்களே யற்ற வெறும்நீர் நிலைக்கு
நன்னீர் **மீனினம் நாடாப் புலத்து
பயங்கர *உறுத்தியாப் படர்நீர் வீழ்ச்சியில்
இரைந்து விரையும் இகல்நீர்ச் சுழிகளில்
நுரைத்தெழும் நதியின் அடிப்பா றைகளில்
நீர்வீழ்ச் சிகளின் நேர்நடுக் குன்றில்
நெருப்பென எரிந்து நீறா வதற்கு
தீப்பொறி யாகிச் சிந்தியே குதற்கு.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
பாடினான் வாளுடைப் பலமுறு மனிதரை   470
பாடினான் படைக்கல முடையபல் வீரரை
பாடினான் இளைஞரைப் பாடினான் முதியரை
பாடினான் நடுவய துடையபன் மக்களை
ஒருவனை மட்டுமே உருத்தவன் பாடிலன்
அவனொரு கொடியவன் ஆநிரை மேய்ப்பவன்
பார்வையே அற்றவன் படுகிழ வயோதிபன்.

*நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"லெம்பியின் மைந்தா நீ,ஓ, குறும்பா!
பாடினாய் இளைஞரைப் பாடினாய் முதியரை  480
பாடினாய் நடுவய துடையபன் மக்களை
என்னைச் சபித்து எதற்குப் பாடிலை?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"உன்னைத் தொடாமல் ஒதுக்கிய திதற்கே
பார்க்கநீ இழிந்த பண்பினன் ஆனதால்,
கிளர்ந்துநான் தொடாமலே கீழ்மகன் ஆனவன்;
இளைஞன் ஆகநீ இருந்தவந் நாட்களில்
இடையர்க ளிடையோர் இழிந்தவ னாகினை
மாசுறுத் தினைநின் மாதா பிள்ளையை
உடன்பிறந் தவளின் உயர்கற் பழித்தனை  490
திகழ்பரி அனைத்தையும் சேர்த்தே அழித்தனை
குதிரைக் குட்டிகள் கொன்றே ஒழித்தனை
திறந்த சதுப்பில் சேர்தரை நடுவில்
சேற்று நீரோடும் திணிநிலப் பரப்பில்."

நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
கோபம் கொண்டான் கொடுஞ்சின முற்றான்
கதவின் வாயில் கடந்தே சென்றான்
முற்றம் கடந்து முன்வய லடைந்தான்
துவோனலா நதியின் தொலைபார்த் தோடினான்
போனான் அருவியின் புனிதநீர்ச் சுழிக்கு  500
தூரநெஞ் சினனை தொடர்ந்தெதிர் பார்த்தான்
லெம்மின் கைனனை நெடிதுகாத் திருந்தான்
வடநா டிருந்து வழிதிரும் புகையில்
வீடு நோக்கி விரைந்தஅப் பாதையில்.



பாடல் 13 - பிசாசின் காட்டெருது  *



அடிகள் 1 - 30 : லெம்மின்கைனன் வடபகுதித் தலைவியிடம் அவளுடைய மகளைத் தனக்கு மனைவியாக்கும்படி கேட்கிறான். வடபகுதித் தலைவி, பனிக்கட்டிச் சறுக்கணிகளில் சென்று பிசாசின் காட்டெருதைப் பிடித்தால் தனது மகளைத் தருவதாகக் கூறுகிறாள்.

அடிகள் 31 - 270 : லெம்மின்கைனன் செருக்குடன் காட்டெருதைப் பிடிக்கப் புறப்படுகிறான். ஆனால் காட்டெருது தப்பிவிடுகிறது; அவனுடைய பனிக் காலணிகளும் ஈட்டியும் உடைகின்றன.



குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
முதிய வடபால் முதல்விக் குரைத்தான்:
"தகுமுதி யவளே தருகநின் மகளிர்
இங்கே கொணர்கநின் எழில்மங் கையரை
அனைத்து அணங்கிலும் அதிசிறந் தவளை
அரிவையர் குழாத்தில் அதிஉயர்ந் தவளை!"

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தருவதற் கில்லை தகுமென் பெண்கள்
அளிப்பதற் கில்லை அரியஎன் மகளிர்   10
சிறந்தவ ளாயினும் சிறப்பிலள் ஆயினும்
உயர்ந்தவ ளாயினும் உயர்விலள் ஆயினும்
உனக்கேற் கனவே உள்ளாள் இல்லாள்
நிலைபெறும் மனையாள் நினக்குமுன் உள்ளாள்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"பெயர்குயி லிக்கியைப் பிணைப்பேன் கிராமம்
படர்ஊர்க் கூடப் படிகளில் வைப்பேன்
வளர்வெளி அந்நிய வாயிலில் வைப்பேன்
இங்கே சிறந்தவோர் அணங்கினைப் பெறுவேன்
இப்பொழு துன்பெண் இங்கே கொணர்வாய்   20
எல்லாப் பெண்ணிலும் இயல்சிறப் பொருத்தியை
அனைத்து அணங்கிலும் அழகுறும் ஒருத்தியை!"

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"கொடுக்கவே மாட்டேன் கொணர்ந்தென் பெண்ணை
பெறுமதி யற்ற நரர்எவ ருக்கும்
வருபய னற்ற மானுடர் எவர்க்கும்.
ஆயினும் நீயென் அரிவையைக் கேட்கலாம்
தலையில்பூச் சூடிய தையலைக் கேட்கலாம்
பிசாசுகாட் டெருதைப் பிடித்தால் **சறுக்கி
பேயின் வயலின் பெருவெளிக் கப்பால்."   30

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது ஈட்டியில் முனைகள் பொருத்தினன்
குறுக்கு வில்லில் முறுக்குநாண் கட்டினன்
கணைகளின் தலைப்பில் கடுங்கூர் பூட்டினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இப்போ தீட்டியில் இகல்முனை பொருத்தினேன்
அம்புகள் அனைத்தும் ஆயத்த மாயின
குறுக்கு வில்லில் முறுக்குநாண் கட்டினேன்
உந்திச் சென்றிட இ(ல்)லைஇடச் **சறுக்கணி
வளமாய் முந்திட **வலதணி இலது."    40

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்கே பெறலாம் எழிற்பனி மழைஅணி
சறுக்கும் பாதணி பெறப்படல் எங்ஙனம்?

*கெளப்பியின் தோட்டக் கவின்இல் சென்றான்
*லூலிக்கி வேலைத் தளத்தினில் நின்றான்:
"வடநாட் டவரே, திடநுண் மதியரே!
எழிலுறும் கெளப்பியே, லாப்புலாந் தியரே!
பயனுள சறுக்கணி படைப்பீர் எனக்காய்,
அழகிய சறுக்கணி அமைப்பீர் சிறப்பாய்,   50
பேய்க் காட்டெருதைப் பிடித்திடச் செல்ல,
பிசாசின் வயலின் பெருவெளிக் கப்பால்."

லூலிக்கி என்பவன் உரைத்தான் ஒருசொல்
நாவினால் கெளப்பி நவின்றான் இப்படி:
"லெம்மின் கைனனே நீவீண் போகிறாய்
பேய்க்காட் டெருதின் பெருவேட் டைக்கு
உழுத்த மரத்துண் டொன்றுதான் பெறுவாய்
அதுவும் துன்பம் அதிகம் பெற்றபின்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:   60
"செய்வாய் உந்திச் செல்ல இடதணி
வலதையும் செய்வாய் வலிதே முன்செல
எருத்து வேட்டைக் கிதோபுறப் பட்டேன்
பேயின் வயலின் பெருவெளிக் கப்பால்."

திகழ்இடச் சறுக்கணி செ(ய்)யும்லூ லிக்கி
திடவலச் சறுக்கணி செய்யும் கெளப்பி
இலையுதிர் காலத் திடதணி செய்தான்
வளர்குளிர் காலம் வலதணி செய்தான்
**தண்டுகள் அணிக்குச் சமைத்தான் ஒருநாள்
தண்டுக்கு **வளையம் சமைத்தான் மறுநாள்.  70

இதமாய் உந்த இடதணி கிடைத்தது
வளமாய் முந்த வலதணி வந்தது
அணிகளின் தண்டுகள் ஆயத்த மாயின
பொருத்தப் பட்டன புதுஅணி வளையம்
ஈந்தான் தண்டுக் கீடுநீர் **நாய்த்தோல்
வளையத் தின்விலை பழுப்பு நரித்தோல்.

வெண்ணெய் சறுக்கணி மேலெலாம் பூசி
கலைமான் கொழுப்பையும் கலந்துடன் தேய்த்தான்
சிந்தனை பின்னர் செய்தான் அவனே
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:   80
"இளைஞர்கூட் டத்துள் எவருமிங் குளரோ
உண்டோ எவருமிங் குளவளர் வோர்களில்
எனதிடச் சறுக்கணி இதனைமுன் தள்ள
வலதணி உதைக்க வலியதன் குதியால்?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
சென்னிறக் கன்னப் போக்கிரி செப்பினன்:
"இளைஞர்கூட் டத்துள் எவரோ இங்குளர்
வளர்ந்திடு வோரில் மற்றெவ ரோஉளர்
எனதிடச் சறுக்கணி இதனைமுன் தள்ள
வலதணி உதைக்க வலியதன் குதியால்."   90

அம்புறைக் கூட்டை அவன்முது கிட்டனன்
தோளில் புதியதோர் தொடுவில் கட்டினன்
தண்டைக் கையிலே சரியாய்ப் பிடித்தனன்
இடச்சறுக் கணியை எடுத்துமுன் தள்ளினன்
உந்தி வலதணி உதைத்தான் குதியால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:  
"இல்லை இறைவனின் இந்தக் காற்றினில்
வானம் இதனின் வளைவதன் கீழே
எதுவுமே வனத்தில் இல்லைவேட் டைக்கு
நான்கு கால்களில் பாய்ந்திடும் பிராணி   100
வென்றிட முடியா வேறெதோ வொன்று
இலகுவாய்க் (கைப்)பற்ற இயலாத தொன்று
கலேவா மைந்தன் காற்சறுக் கணியால்
லெம்மின் கைனனின் நேர்ச்சறுக் கணிகளால்."

அலகைகள் இதனை அறிந்திட நேர்ந்தது
**தீய சக்திகள் தெரிந்திட நேர்ந்தது
பேய்கள்காட் டெருதை ஆக்கத் தொடங்கின
படைத்தன கலைமான் பலதீச் **சக்திகள்
தலையை உழுத்த கட்டையில் சமைத்தன
**சிறுமரக் கிளைகளில் சேர்கொம் பியற்றின    110
பாதம் சுள்ளிகள் கொண்டு படைத்தன
கால்களைச் சேற்றுக் கம்பினால் செய்தன
வேலித் தம்பத்தால் விரிமுது கியற்றின
வாடிய புற்களால் வைத்தன நரம்புகள்
நீராம்பல் முகைகளால் நேத்திரம் அமைத்தன
நீராம்பல் இதழ்களில் நெடுஞ்செவி நிமிர்த்தின
தேவதா ருரியிலே செய்தன தோலினை
பதன்கெடு மரங்களில் படைத்தன தசையினை.

எருத்துக் குயோசனை இருண்டபேய் சொன்னது
மானுக்கு இங்ஙனம் வாயினால் சொன்னது:   120
"இரும்பேய் எருதே, இப்போ தோடு!
தாவுநின் கால்களால் சாந்தப் பிறவியே!
ஓடிடு மானே, உன்சினைப் பிடத்தே!
லாப்பு மைந்தரின் எழில்புல் வெளிக்கு
சறுக்குணி மனிதரைக் களைப்புறச் செய்வாய்
குறிப்பாய் லெம்மின் கைனனைச் செய்வாய்!"

மிகுபேய் எருது விரைந்தோ டியது
காட்டுக் கலைமான் கடுகதி விரைந்தது
வடக்கினில் அமைந்த அடைப்புகள் வழியாய்
லாப்பு மைந்தரின் இளம்புல் வெளிகளில்   130
உதைத்தது சமையற் கூடத் தொட்டியை
உருட்டிற் றதுகீழ் நெருப்பெழு கலயம்
சாம்பரில் இறைச்சியைத் தள்ளிப் போட்டது
அடுப்படி இரசம் அதுசிந் திற்று.

அப்போ தெழுந்தது அங்கே கூச்சல்
லாப்பு மைந்தரின் இளம்புல் வெளியில்
லாப்பு நாட்டின் இகல்நாய் குரைத்தன
லாப்பு நாட்டின் இளஞ்சிறார் அழுதனர்
லாப்பு நாட்டின் ஏந்திழை சிரித்தனர்
மற்றும் சிலரோ சற்றே முனகினர்.    140

குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
எருதின் பின்னே சறுக்கிச் சென்றான்
சறுக்கிச் சேற்றிலும் தரையிலும் சறுக்கினன்
திறந்த வெளியிலும் சென்றான் சறுக்கி
சறுக்கணி தன்னில் தகிநெருப் பெழுந்தது
தண்டின் நுனியில் தழற்புகை பறந்தது
ஆயினும் எருதை அவனோ கண்டிலன்
இல்லைக் கண்டதும் இல்லைக் கேட்டதும்.

நாட்டிலும் சென்றான் நகரிலும் சென்றான்
தண்கடற் பின்னால் தரையிலும் சென்றான்   150
அலகையின் தோப்புகள் அனைத்திலும் சென்றான்
*இடுகாட் டாவியின் **ஏற்றமும் சென்றான்
மரண வாயில் வழிவரை சென்றான்
இடுகாட் டின்பின் இயல்கா டடைந்தான்;
மரணம் தனது வாயைத் திறந்தது
இடுகாட் டாவி எடுத்தது தலையை
மனிதனை உள்ளே வரவிடு தற்கு
லெம்மின் கைனனை நேராய் விழுங்க
ஆயினும் உண்மையில் அவனைப் பெற்றில(து)
கடுகதி கொண்டு கைக்கொண் டிலது.   160

அவன் சென்றிலனே அனைத்திடத் துக்கும்
தொடாத பகுதியோர் தொல்புற மிருந்தது
வடபால் நிலத்து மறுகோ டியிலே
லாப்பு நாட்டின் அகல்நிலை வெளிகளில்
அந்த இடத்துக் கவன்புறப் பட்டான்
அதனையும் தொட்டு அறிந்திட நினைத்தான்.

அந்த இடத்தை அவன்போ யடைந்ததும்
அங்கொரு கூச்சலை அவனும் கேட்டான்
வடபால் நிலத்து மறுகரை யதனில்
லாப்பு மைந்தரின் நிலப்புல் வெளிகளில்   170
லாப்பு நாய்களின் குரைப்புக் கேட்டது
லாப்புச் சிறாரின் அழுகுரல் கேட்டது
லாப்பு மகளிரின் சிரிப்பொலி கேட்டது
மற்றும் சிலரோ சற்றே முனகினர்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
சறுக்கினன் உடனே சார்ந்தப் பக்கமாய்
நாய்கள் குரைத்தஅந் நாட்டின் பக்கமாய்
லாப்பின் மைந்தரின் நிலப்புல் வெளிக்கு.

அங்ஙகவ னடைந்தது மிங்ஙனம் மொழிந்தான்
வந்து சேர்ந்ததும் வருமா றுசாவினன்:    180
"ஏந்திழை யர்இங் கெதற்காய்ச் சிரித்தனர்
பாவையர் சிரித்ததும் பிள்ளைகள் அழுததும்
முதிய மனிதர்கள் முனகலும் எதற்கு
நரைநிற நாய்கள் குரைத்ததும் எவரை?"

"ஏந்திழை யர்இங் கிதற்காய்ச் சிரித்தனர்
பாவையர் சிரித்தனர் பிள்ளைகள் அழுதனர்
முதிய மனிதர்கள் முனகிய திதற்கு
நரைநிற நாய்களும் குரைத்தது இதற்கு:
இருட்பேய் எருது இங்கிருந் தோடிய(து)
மென்மைக் குளம்பால் முன்பாய் தோடிய(து)   190
உதைத்தது சமையற் கூடத் தொட்டியை
உருட்டிற் றதுகீழ் நெருப்பெழு கலயம்
கஞ்சியை உதைத்துக் கவிழ்த்தது கீழ்மேல்
அடுப்படி இரசம் அதுசிந் திற்று."

சென்னிறக் கன்னப் போக்கிரி அதன்பின்
குறும்பன் லெம்மின் கைனனப் போது
பனியில் இடது பாதணி தள்ளினான்
செறிபுற் றரையின் விரியன் பாம்பென,
தேவதா ரணியைச் செலுத்தினான் முன்னே
உயிர்ப்பாம் பசைந்து ஊர்வது போலே,   200
செல்லும் போதினில் செப்பினன் இவ்விதம்
தண்டைக் கையில் கொண்டவ னிசைத்தான்:
"லாப்பிலே வாழும் எல்லா மனிதரும்
எருதைச் சுமந்து எடுத்துவந் திடட்டும்,
லாப்பிலே வாழும் ஏந்திழை யாரெலாம்
சட்டி கழுவத் தாம் தொடங் கட்டும்;
லாப்பிலே வாழும் இளம்சிறார் அனைவரும்
தீப்படும் சுள்ளிகள் சேர்த்து வரட்டும்;
லாப்பிலே இருக்கும் எல்லாக் கலயமும்
எருதைச் சமைக்க எழட்டும் தயாராய்!"   210

விரைவாய்ச் சென்றனன் மிகுபலம் கொண்டனன்
உதைத்துப் போயினன் உந்திச் சென்றனன்
முதல்முறை உந்தி முன்செல் கையிலே
ஒருவர் விழியிலும் தெரிபடா தேகினன்
அடுத்த தடவை அவன்போ கையிலே
ஒருவர் காதிலும் ஒலிவிழா தேகினன்
மூன்றாம் முறையவன் முன்பாய் கையிலே
தடிப்பேய் எருதின் தடத்தை அடைந்தனன்.

**'மாப்பிள்' மரத்தின் வன்கயி றெடுத்தான்
மிலாறுவின் முறுக்கிய வெங்கொடி எடுத்தான்  220
பேய்க்காட் டெருதைப் பிடித்துக் கட்டினான்
சிந்துர மரத்தாற் செறிஅடைப் புக்குள்:
"பேய்க்காட் டெருதே பிணைப்புண் டிங்குநில்
காட்டுக் கலையே கேட்டிங் குலவுக."

முயன்றவ் விலங்கின் முதுகைத் தடவினான்
தட்டினான் விலங்கின் தடித்ததோ லதனில்:
"எனக்குவப் பான இடமே இதுவே
இதுவே படுக்கைக் கேற்றநல் இடமாம்
ஒளிரிளம் பருவ ஒருத்தி தன்னுடன்
வளரும் பருவத் திளங்கோ ழியுடன்."    230

அப்போ பேய்எரு ததுசினந் தெழுந்தது
கலைமான் அதிர்ந்து கனன்றுதைத் தெழுந்தது
பின்னர் அதுவே பேசியது இங்ஙனம்:
"பேய்உனக் குதவி பெரிதுசெய் யட்டும்
இளம்பரு வத்து மகளிரோ டுறங்க
நாள்தொறும் நல்ல நங்கையோ டுலாவ!"

உரங்கொண் டெழுந்தது உடன்கிளர்ந் தெழுந்தது
மிலாறுவின் கொடியை வெகுண்டறுத் தெறிந்தது
**'மாப்பிளி'ன் கயிற்றை ஆர்த்தறுத் தெறிந்தது
சிந்துர அடைப்பை சினந்துடைத் தழித்தது;   240
ஓடத் தொடங்கிய துடன்முன் வேகமாய்
நழுவி விரைந்தது நவில்காட் டெருது
தரையையும் சேற்றுத் தலத்தையும் நோக்கி
கொழும்புதர் நிறைந்த குன்றுகள் நோக்கி
ஒருவர் விழியிலும் தெரிபடா தகன்றது
ஒருவர் காதிலும் விழாதுசென் றிட்டது.

சென்னிறக் கன்னப் போக்கிரி அதன்பின்
நிமிர்சினங் கொண்டான் நிதான மிழந்தான்
கொடுங்கோ பத்தோடு கொண்டான் சினமிக
சறுக்கிச் சென்றான் தாவும் கலைபின்;   250
அவ்வா றொருதரம் அவனுந் துகையில்
இடது சறுக்கணி வெடித்தது நுனியில்
சறுக்கணி பாதத் தட்டில் உடைந்தது
வலதணி உடைந்தது வருகுதிப் பக்கம்
விழுந்தது ஈட்டியின் மேல்முனை உடைந்து
தண்டு வளையத் தடியில் உடைந்தது
பேய்க்காட் டெருது போயிற் றோடி
தநலுதெரி யாமல் தாவி மறைந்தது.

குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்   260
வெறித்துப் பார்த்தான் உடைந்த பொருட்களை
இனிவரும் சொற்களில் இயம்பினன் அவனே:
"வேண்டாம் வாழ்நாள் என்றும் வேண்டாம்
இன்னொரு மனிதன் ஏகவே வேண்டாம்
வேட்டையை நாடிக் காட்டிடைப் போதல்
தேடிச் சறுக்கிச் செல்லல்காட் டெருதை
பாக்கியம் அற்றஇப் பாவியைப் போல
தரமிகு சறுக்கணி தம்மை அழித்தேன்
அழகிய தண்டுகள் அவற்றையு மிழந்தேன்
ஈட்டிக் கம்பில் இழந்தேன் உயரந்ததை."   270



பாடல் 14 - லெம்மின்கைனனின் மரணம்  *



அடிகள் 1 - 270 : லெம்மின்கைனன் வன தேவதைகளை வணங்கி, முடிவில் காட்டெருதைப் பிடித்து வடபகுதித் தோட்டத்துக்குக் கொண்டு வருகிறான்.

அடிகள் 271 - 372 : அவனுக்கு இன்னொரு வேலை தரப்படுகிறது; அதன்படி அவன் அனல் கக்கும் குதிரையைப் பிடித்துக் கொண்டு வருகிறான்.

அடிகள் 373 - 460 : துவோனலா ஆற்றில் ஓர் அன்னத்தைக் கொல்லும்படி அவனுக்கு மூன்றாவது வேலையும் தரப்படுகிறது. அவன் ஆற்றுக்கு வரும் வழியில் காத்திருந்த 'நனைந்த தொப்பியன்' என்ற இடையன், லெம்மின்கைனனைக் கொன்று துவோனியின் நீர்வீழ்ச்சியில் எறிகிறான்; துவோனியின் மைந்தன் அவனது உடலைத் துண்டுகளாக்கி ஆற்றில் எறிகிறான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எந்தப் பாதையில் ஏகலாம் என்று
எங்கே காலடி இடலாம் என்று:
பேய்க்காட் டெருது பிடிப்பதை விட்டு
வீட்டை நோக்கி விரைவதா தானாய்
அல்லது மேலும் அச்செயல் ஏற்று
மெதுவாய்ச் சறுக்கி மிகமுன் செல்வதா
செறிகான் தலைவியைத் திருப்தி செய்தற்கு
தோட்ட மகளிரைத் தோய்மகிழ் வுறுத்த.   10

இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"ஓ,மனு முதல்வனே, உயர்மா தெய்வமே!
விண்ணிலே உறையும் மேல்வகைத் தந்தையே!
நேராம் சறுக்கணி நீர்எமக் கமைப்பீர்
கனமே இல்லாக் காற்சறுக் கணிகள்
சுலபமாய் சறுக்கித் தொடர்ந்தவற் றேக
சதுப்பு நிலத்திலும் சமதரை மீதிலும்
பிசாசுகள் வாழும் பெருநில மீதும்
வடபால் நிலத்து வளர்புற் தரையிலும்    20
பேய்க்காட் டெருது பெரிதுலா விடத்து(க்கு)
காட்டுக் கலைமான் கலைதிரி தடத்து(க்கு).

மனிதரைப் பிரிந்து வனம்ஏ குகிறேன்
வீரரை விலகி வெளிக்களம் போகிறேன்
*தப்பியோ லாவின் தனிவழி யூடாய்
*தப்பியோ வாழும் தரிப்பகத் தூடாய்.
வாழ்க மலைகளே, வாழ்ககுன் றுகளே!
வாழிய எதிரொலி வருதா ருகளே!
வாழிய வெண்பசும் மரஅர சுகளே!
வாழிய ந